வியாழன், 30 ஏப்ரல், 2020

தமிழீழ விடுதலைப் போராட்டம்: விடுதலைப்புலிகளும் இசுலாமியர்களும்:- பரணி கிருசுணரஜனி


  
01. புலிகள் குற்றவாளிகளா?

‘தமிழ் – முஸ்லிம் குரோதம் எங்கே முளைவிட்டது?’ என்பதை வரலாற்றின் போக்கில் ஆராய்ந்தால் புலிகள் மீது யாரும் குற்றம் சுமத்த முடியாது.

ஆயுதப் போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழ்க் கட்சிகள் முஸ்லிம்களை தாம் தேர்தலில் வெல்வதற்கான ஒரு வாக்கு வங்கியாகத்தான் பார்த்தார்கள். முஸ்லிம்களின் வாழ்வு தொடர்பான நலனில் அக்கறை காட்டவில்லை. இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து அவர்கள் சிங்கள கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட போது ‘தொப்பி பிரட்டிகள்’ என்று தூற்றப்பட்டார்கள்.
இப்படியாக முதல் விரிசலை தொடக்கி வைத்தவை தமிழ்க் கட்சிகள்தான். பிற்பாடு அதை ஊதி வளர்த்தவர்கள் தென்னிலங்கை முஸ்லிம் தலைமைகள்.


அடுத்து ஆயுதப் போராட்டம் வெடித்தவுடன் ஈசல் போல் முளைத்த இயக்கங்கள் புலிகள் போல் தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. அத்துடன் பணம் பறித்தல், கப்பம் அறவிடல் என்பவற்றை தமிழ் மக்களிடையே வன்முறையாக அணுகியது போல் முஸ்லிம்களிடமும் அந்த வழிமுறையைக் கையாண்டார்கள். இது அடுத்த விரிசலை உருவாக்கியது.

இதன் விளைவாக முஸ்லிம்கள் மீள வன்முறையைப் பிரயோகித்தார்கள்.

இதைச் சரியாகப் பயன்படுத்திய இன அழிப்பு அரசின் உளவுத்துறை ‘ஊர்க்காவற்படை’ என்னும் பெயரில் ஒரு வன்முறை அமைப்பை உருவாக்கி தமிழ் மக்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது.

அது மட்டுமல்ல 1985 களில் மாற்று இயக்கங்களிலிருந்து திசைமாறி அலைந்து திரிந்த போராளிகளையும் இந்த முஸ்லிம் ஆயுதக் குழுக்களையும் இணைத்து ‘ஜிகாத்’ என்னும் அமைப்பையும் உருவாக்கியது இன அழிப்பு அரசின் புலனாய்வுத்துறை.


இவ்வமைப்பு முழுக்க முழுக்க அரசக் கூலிப்படைகளாய் இயங்கியமையால் தமிழருக்கெதிரான வன்முறைகளை பிரயோகித்தது மட்டுமல்ல இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன.விளைவாக தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டது மட்டுமல்ல அவர்கள் நிலமும் முற்றாகப் பறிபோகத் தொடங்கின.

தமிழ்,  முஸ்லிம் விரோதப் போக்கை எண்ணெய் ஊற்றி வளர்த்த இந்த ஜிகாத் தமிழ்/ முஸ்லிம்களிடையே நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க முயன்ற மூதூர்மஜித், காத்தான்குடி அகமட்லெவ்வை போன்றோரைச் சுட்டுப் படுகொலைசெய்ததை இன்று பலரும் மறந்து போனது வேதனைக்குரியது.

இந்த வரலாறுதான் பிற்பாடு அனைத்து இயக்கங்களும் அழிந்து போன நிலையில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாய் போரிட்ட புலிகள் மீதான முஸ்லிம்களின் வன்மமாக உருமாறியது.

எந்த தவறும் செய்யாமலேயே புலிகள் பழி சுமந்த வரலாறு இது.

தென்தமிழீத்தில் இந்த ஜிகாத் மற்றும் ஊர்காவல் படைகளின் அட்டுழியங்களை நிறுத்த புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களும் பிற்பாடு தவிர்க்க முடியாத பல அரசியல் காரணங்களால் முஸ்லிம்களை வெளியேற்றியதும் இன்று வரை எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது.

இது விரிவாக இரு தரப்பும் பரஸ்பர புரிதலுடன் பேசி தீர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நந்திக்கடலின் இறுதிச் செய்தியும் அதுதான்.

அதை விடுத்து தமிழர் தரப்பிலிருந்தே ஏதோ நாம் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்களாக சித்தரிக்கப்படுவதும் அதையும் தாண்டி ‘இனச்சுத்திகரிப்பில்’ ஈடுபட்டோம் என்று வரலாற்று புரிதலின்றி பேசுவதும் ஆரோக்கியமானதல்ல.

02. முஸ்லிம்களை வெளியேற்றியது ‘இனச் சுத்திகரிப்பா?

இனஅழிப்பு என்பதை நிறுவ அல்லது அதை அந்த அர்த்தத்தில் ஏற்றுக்கொள்ள ஒரு முன் நிபந்தனை ஒன்றை இன அழிப்பு தொடர்பான சட்ட வரைபு அல்லது அதன் மீதான கோட்பாட்டுருவாக்கம் நம்மிடம் கோரி நிற்கிறது.

அதாவது ‘இன அழிப்பு’ என்று நாம் முன்வைக்கும் ஒரு நிகழ்வு அல்லது பல நிகழ்வுகள் எதிரிகளால் அதாவது அதில் ஈடுபட்ட அரசோ அல்லது ஒரு இனக்குழுவோ இன அழிப்பு ‘நோக்கங்களுடன்’ அதில் ஈடுபட்டனவா என்பதை நிறுவும் முன் நிபந்தனைதான் அது.


இந்த அடிப்படையில் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது இன அழிப்பு நோக்கங்களைக் கொண்டது அல்ல. எனவே அதை இனச் சுத்திகரிப்பு என்று வரையறுப்பது அடிப்படையில் தவறு.

புலிகளைப் பொருத்தவரை, புலிகள் தமது போராட்டத்தைத் தக்க வைப்பதற்காக தற்காலிகமாகச் செய்த ‘தவிர்க்கமுடியாத’
ஒரு பெரும் தவறு அது.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பொருத்தவரை மறக்க முடியாத – மன்னிக்க முடியாத ஒரு கூட்டு அவலம் அது.

ஆனால் அவர்கள் வெளியேற்றப்பட்டதனூடாக அவர்களது உயிர் மட்டுமல்ல அடையாளம், தனித்துவம் என்பது கூட்டாகப் பேணப்பட்டது. அது எந்த சிதைவுக்கும் உள்ளாகவில்லை.

ஆனால் தொடர்ந்து புலிகளின் ஆளுகைக்குள் இருக்க நேரிட்டிருந்தால் அவர்கள் பாரிய மனிதப் பேரவலத்தைச் சந்தித்திருப்பார்கள். அது புலிகளை ஒரு இனப்படுகொலைக் குற்றவாளிகளாக்குவதற்கான அனைத்து முகாந்திரங்களையும் கொண்டிருந்தன.

காரணம், ஒன்றல்ல பல நூறு. அது விரிவாக வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு இந்த இடைப்பட்ட காலத்தில் பல நூறு தமிழர்களே, உளவு பார்த்த குற்றம்
சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். பலருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த வழிமுறைகளை முஸ்லிம்களுக்கு பிரயோகிப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.


ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை போன்று அடைக்கப்பட்டு தினமும் கண்காணிக்கப்பட்டு அவர்கள் இயல்பு வாழ்வை குலைத்து
அவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நூற்றுக்கணக்கில் புலகளினால் கைது செய்ப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதென்பதும், அவர்களைக் கூட்டாகக் கொலை செய்வதென்பதும் முறையே மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இனப்படுகொலை உள்ளடக்கங்களை கொண்டதாக அறியப்பட்டிருக்கும்.

போதாததற்கு பாஸ் நடைமுறையை வேறு புலிகள் கடைப்பிடித்தார்கள். அது தம்மை ஒரு தனித்த இனக்குழுமமாக கருதும் முஸ்லிம்களைப் பொருத்தவரை அது புலிகளின் ‘கட்டமைக்கப்பட்ட’ இன அழிப்பு ஒன்றிற்கான உள்ளடக்கங்களையே அடையாளம் காட்டும்.

இது ஒரு கட்டத்தில் ஒரு இன அழிப்புக் குற்றமாக அனைத்துலக சமூகத்தால் கணிக்கப்பட்டு முஸ்லிம்களை சுதந்திரமாக வெளியேற்றுமாறு ஒரு கோரிக்கைகூட வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பை யாரும் மறுக்க முடியாது.

அது புலிகளை மேலும் சிக்கலுக்குள் தள்ளியிருக்கும்.

இப்படி தர்க்கரீதியாக பேச பல நூறு காரணங்கள் உண்டு.

ஆனால் அதற்காக யாரும் வெளியேற்றத்தை நியாயப்படுத்த முடியாது. அதற்காக ‘இனச் சுத்திகரிப்பு’ என்ற தவறான வார்த்தை பிரயோகங்கள் வருவதையும் அனுமதிக்க முடியாது.

இது நடந்த இனஅழிப்புக்கு நீதி வேண்டி நிற்கும் இனமாக நமக்கு நாமே குழி தோண்டுவதாகவே அமையும்.

முஸ்லிம்களுடன் மனம் திறந்த ஒரு உரையாடலை தொடங்கவும் இது தடை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

03. இனச் சுத்திகரிப்பில் முஸ்லிம்கள்.

இந்த இடைப்பட்ட போராட்ட காலத்தில் புலிகளினால் சிங்கள மற்றும் முஸ்லிம்களின் கிராமங்கள் ஆக்கிரமிக்கப்படவோ, அடையாள அழிப்புக்குள்ளாக்கப்படவோ இல்லை.

அவர்களது வணக்கத்தலங்கள், பண்பாட்டு அடையாளங்கள் அழித்தொழிப்புக்குள்ளாகவில்லை. அது மட்டுமல்ல அவை எந்தவொரு அடையாள மாற்றத்திற்கும் உட்படுத்தப்படவில்லை.

ஆனால் சிங்களவர்களினாலும் முஸ்லிம்களினாலும் தமிழர்களின் கிராமங்கள், பாரம்பரிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அடையாள சிதைவுக்குட்படுத்தப்பட்டது மட்டுமல்ல, வணக்கத் தலங்கள், பண்பாட்டு அடையாளங்கள் முற்றாக சிதைக்கப்பட்டு பவுத்த மற்றும் முஸ்லிம் அடையாளங்களாக மாற்றப்பட்டுள்ளன.


இது இனச்சுத்திகரிப்பு உள்ளடக்கங்களை கொண்டது என்பதை தனியாகக் கூறவும் வேண்டுமா?

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றும் போது கூறியது போலவே பின்பு சமாதான காலத்தில் அவர்களை அவர்களது தனித்துவ -பண்பாட்டு அடையாளங்களுடன் அவர்களது வாழ்விடங்களில் மீளக் குடியேற அனுமதித்தார்கள்.

சிங்களவர்களும் , முஸ்லிம்களும் தம்மால் அடையாள அழிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழர் தொன்ம நிலங்களை – கிராமங்களை மீளக் கையளிப்பார்களா?

அதுவரை அது ‘இனச் சுத்திகரிப்பாகவே’ இருக்கும்.

தமிழர் தரப்பு எந்த இனச் சுத்திகரிப்பிலும் ஈடுபடவில்லை என்பதே வரலாறு. இனியும் அதை செய்யப்போவதில்லை என்பதை ‘நந்திக்கடல்’ தெளிவாகவே வரையறுத்துள்ளது.

அத்துடன் ‘நந்திக்கடல்’ முஸ்லிம்களை தனித்துவ இனக்குழுமமாக அங்கீகரித்து அவர்கள் தமிழர் நிலத்தில் தமது தனித்துவ அடையாளத்துடன் வாழும் அவர்கள் உரிமையை ஏற்றுக் கொள்கிறது.

முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டிய அழுத்தமான செய்தி இது.

04. முஸ்லிம்களுக்கான ‘நந்திக்கடலின்’ செய்தி.

முஸ்லிம்கள் தம்மை ஒரு தனித்த இனக் குழுமமாகக் கருதினால், அவர்கள் தமது பண்பாட்டு அடையாளங்களுடன் தமிழர் நிலத்தில் வாழும் உரிமையை ‘நந்திக்கடல்’ முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

உலகெங்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் இனக் குழுமங்கள் எதிர் கொள்ளும் சிக்கலான நெருக்கடி இது.

போராடும் இனக் குழுமங்களிடையே தம்மை ஏதோ ஒரு வகையில் வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் உபரி குழுமங்களின் தனித்துவத்தை அரச பயங்கரவாதம் தமக்கு சார்பாக பயன்படுத்தி பிரித்தாளும் தந்திரங்களினூடாக சம்பந்தப்பட்ட இரு குழுமங்களையும் வேறு பிரித்து தனிமைப்படுத்தி அழித்தொழிக்கும் என்கிறது ‘நந்திக்கடல்’.

ஆனால் முஸ்லிம்கள் இந்த புரிதலின்றி சக தேசிய இனம் மீது இன அழிப்பு அரசுடன் சேர்ந்து இயற்கை வளங்களையும் அழித்து/ நில ஆக்கிரமிப்பு செய்வதென்பது தமிழீழத்தில் தனித்த அடையாளங்களுடன் ஒரு இனக் குழுமமாக வாழும் முஸ்லிம்களின் உரிமையையும் இருப்பையும் கேள்விக்குட்படுத்துகிறது.

இன அழிப்பு அரசுடன் ஒத்தோடும் இந்த யுக்தி அடிப்படையில் முஸ்லிம்களின் தனித்துவத்தை கேள்விக்குட்படுத்தும் தூரநோக்கற்ற செயலாகவே கருத வேண்டியுள்ளது.

இத்தகைய உபரி தேசிய இனங்களின் உரிமைகள் குறித்து ‘நந்திக்கடல்’ நிறையவே அக்கறை கொள்கிறது.

கால நீரோட்டத்தில் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து தனித் தேசமாகும் போது சிங்களம் – தமிழ் என்று தேசங்கள் உடையும் போது முஸ்லிம்களின் இத்தகைய போக்கால் இரு தரப்பாலும் தனித் தீவாக அவர்கள் நட்டாற்றில் விடப்படுவார்கள் என்கிறது ‘நந்திக்கடல்’.

முஸ்லிம்களுக்கான ‘நந்திக்கடலின்’ அக்கறையுடன் கூடிய எச்சரிக்கை இது.

ஏனென்றால் ‘நந்திக்கடல்’ தமிழர்கள் விடுதலை குறித்து மட்டும் அக்கறை கொளள்வில்லை. அது உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து இனக் குழுமங்கள் குறித்தும் கரிசனை கொள்கிறது.

எனவே முஸ்லிம்கள் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்காமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் / புலிகளையும் - குறிப்பாகத் தலைவரை இத்தகைய புரிதலுடன் அணுக வேண்டும்.

மேலதிக இணைப்பு:

முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் காடையர்கள் இன அழிப்பு அரசின் படைகளுடன் இணைந்து நடத்திய வீரமுனைப் படுகொலைகள் என்பது ஒரு “மினி முள்ளிவாய்க்கால்”.

தென் தமிழீழ மண்ணிலிருந்து தமிழர்களை வாழ்ந்த சுவடுகளே தெரியாமல் அழித்தொழிப்பு செய்து அதை முஸ்லிம் குடியிருப்புக்களாக மாற்ற நடந்த பல அழித்தொழிப்புக்களின் உச்சமாக அது நடந்தேறியது.

1990 ஓகஸ்ட் மாதம் இது நடக்கிறது.
புலிகள் இந்த அழித்தொழிப்பு நடந்து மூன்று மாதங்களின் பின்பே ஒக்டோபர் 30 முஸ்லிம்களை வட தமிழீழத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற முடிவெடுக்கிறார்கள்.

இந்த வரலாற்று செய்தியை பலர் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கிறார்கள்.
இதன் வழி புலிகளுக்கு ஒரு இக்கட்டான நிலை திட்டமிட்டே இன அழிப்பு அரசின் புலனாய்வு வலையமைப்பால் உருவாக்கப்படுகிறது.

வட தமிழீழத்திலும் இன அழிப்பு அரசின் உதவியுடன் இப்படியான நில ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் அது போராட்டத்தின் போக்கையே மாற்றி விடும் அபாயாம் உணரப்படுகிறது.

விளைவு தற்காலிக வெளியேற்றம்.

இந்த வெளியேற்றத்தின் பல தர்க்க நியாயங்களை பல தடவை அடுக்கி விட்டேன். சொல்லப்படாமல் இன்னும் நிறைய இருக்கிறது.

அதில் குறிப்பான ஒன்று கீழே..

தென் தமிழீழத்தில் முஸ்லிம்கள் ஆதரவுடன் தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்கள் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட புலிகள் மவுனமாக இருப்பதென்பதும் வட தமிழீழத்தில் புலிகள் அவர்களுக்கு அரணாக இருப்பதென்பதும் ஒரு பிரதேச வாத பிரச்சினையாக தென் தமிழீழ மக்களால் பார்க்கப்படும் ஒரு போக்கு உருவாகியது.

அதை தலைமைக்கு அறிவித்ததே இதே ” பிரதேசவாத”பிரச்சினையை பின்னாளில் கையிலெடுத்து போராட்டத்தைக் கூறு போட்ட கருணாதான்.

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியிருக்காவிட்டால் ஒருவேளை அப்போதே பிரதேசவாத உடைப்பிற்கு புலிகள் முகம் கொடுத்து போராட்டம் நீர்த்துப் போயிருக்கலாம்.

இப்படி தவிர்க்க முடியாத பல நூறு காரணங்கள்.

ஆனால் எதையும் கணக்கில் எடுக்காமல் வரலாறு நெடுகிலும் புலிகளை குற்றவாளிகளாக்கும் போக்கு தொடர்வது வேதனை.

பரணி கிருசுணரஜனி
30.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 30.04.2020 /


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக