வெள்ளி, 9 டிசம்பர், 2022

தமிழகத்தில் வடவர் குடியேற்றமும் உள்நுழைவு அனுமதிச் சீட்டின் தேவையும்


வட இந்தியத் தொழிலாளர்களால் தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி வருவதாக நீண்ட காலமாகவே ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில்தான் இது உச்சத்தை எட்டியுள்ளது. மிகப் பெரிய சட்டம் ஒழுங்கு, வாழ்வாதார பிரச்சினையாக இது எதிர்காலத்தில் மாறக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்தும் வருகின்றன. இந்த நிலையில்தான் உள் நுழைவு அனுமதிச் சீட்டு முறையை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென் இந்தியா முழுவதிலும் வட இந்திய மற்றும் வட கிழக்கு இந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை பார்த்து வருகின்றனர். பெரும்பாலும் கூலி வேலைதான் பார்க்கின்றனர். இதில் வட கிழக்கு இந்தியர்கள் ஹோட்டல் துறையில் அதிகம் உள்ளனர். அதேசமயம், வட இந்தியத் தொழிலாளர்கள் கட்டுமானத் துறையிலும், பிற தனியார் தொழில் நிறுவனங்களிலும் அதிக அளவில் உள்ளனர்.

வட கிழக்கு இந்தியத் தொழிலாளர்கள் பெரும்பாலும் பிரச்சினை இல்லாதவர்கள். இவர்களால் பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் வட இந்தியத் தொழிலாளர்களால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக மக்களிடையே குமுறல் வெடித்து வருகிறது. பல இடங்களில் திருட்டுக்களில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். கொலை, கொள்ளைப் போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். பலர் இதுதொடர்பாக கைதாகியும் உள்ளனர். சென்னை வேளச்சேரியில் கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின்போது வட இந்தியக் கொள்ளையர்களை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற சம்பவத்தையும் தமிழ்நாடு பார்த்தது.

இந்த நிலையில் பல ஊர்களில் இந்த வட இந்தியத் தொழிலாளர்களால் பிரச்னைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இப்படித்தான் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வரும் எஸ் கே எம் எண்ணெய் ஆலையில் நேற்று முன்தினம் இரவு லாரி மோதி வடமாநில தொழிலாளி ஒருவர் பலியானார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொடக்குறிச்சி போலீஸார் அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தைக் கைவிட மறுத்த வட இந்திய தொழிலாளர்கள் திடீரென போலீஸார் மீது தாக்குதலில் குதித்தனர். பெருமளவில் வன்முறையில் குதித்தனர். போலீஸாரை கட்டையால் அடித்தும், கற்களை வீசித் தாக்கியும், கண்ணாடிகளை உடைத்து குத்தியும் வெறித்தனமாக நடக்க ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து அதிரடிப்படை போலீஸார் வரவழைக்கப்பட்டு வட இந்தியத் தொழிலாளர்கள் மீது சரமாரியான தடியடி நடந்தது. அதில் 40க்கும் மேற்பட்டோரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். கால்நடையாகவே தங்களது மாநிலங்களுக்கு நடந்து சென்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாநில மக்களும் தாயுள்ளத்தோடு உணவு உள்ளிட்டவற்றைக் கொடுத்து உதவி செய்து பரிவுடன் கவனித்தனர். ஆனால் அப்படிப்பட்ட மாநிலமக்கள் மீதே தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்த வட மாநிலத் தொழிலாளர்கள் சென்றிருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியத் தொழிலாளர்களால் பெரும் பிரச்சினை ஏற்படும் என்று ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அரசை வலியுறுத்தி வந்த நிலையில் அதேபோல நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த நிலையில்தான் வட இந்தியத் தொழிலாளர்களால் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில், உள் நுழைவு அனுமதிச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக வாழ்வுரிமை இயக்கத் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது என்ன உள் நுழைவு அனுமதிச் சீட்டு?

Inner liner permit என்பதைத்தான் தமிழில் உள் நுழைவு அனுமதிச் சீட்டு என்று சொல்கிறார்கள். அதாவது வெளி மாநிலத்தைச் சேர்ந்த நமது மாநிலத்திற்குள் வரும்போது அவர்கள் இந்த அனுமதிச் சீட்டை வாங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அவர்கள் தமிழ்நாட்டுக்குள் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். அந்தக் காலம் முடிவடைந்ததும் சொந்த மாநிலத்திற்கு திரும்பிப் போய் விட வேண்டும்.

இந்த அனுமதிச் சீட்டு முறை தற்போது வட கிழக்கு மாநிலங்களான மிஸோரம், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் லட்சத்தீவில் மட்டும் அமலில் உள்ளது. இங்கு இந்த முறை கொண்டு வரப்படக் காரணம், பாதுகாக்கப்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் அந்தப் பகுதியின் தனித் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில்தான். இந்த அனுமதிச் சீட்டானது 15 நாட்களுக்கு மட்டுமே செல்லும். 15 நாட்களுக்குப் பிறகு அவர்கள் ஒன்று அனுமதிச் சீட்டை புதுப்பிக்க வேண்டும் அல்லது இடத்தைக் காலி செய்து விட வேண்டும். மீறி தங்கினால் கைது செய்யப்படுவார்கள்.

இப்படிப்பட்ட அனுமதிச் சீட்டு முறையைத்தான் தமிழ்நாட்டுக்கு வந்து வேலை பார்க்கும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஒரு வேளை இந்த அனுமதிச் சீட்டு முறையைக் கொண்டு வர முடியாவிட்டாலும் கூட, வட இந்தியத் தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் கட்டாயம் தேவை. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ்நாடு மக்களுக்கு பாதுகாப்பு தேவை என்கிறார்கள்.

நன்றி: Tamil.samayam.com


தமிழக வேலை தமிழருக்கே

#தமிழ்நாட்டுவேலை_தமிழருக்கே 

#tamilnadujobsfortamils 

உள் நுழைவு அனுமதி சீட்டு 

தமிழத்திற்கு வேண்டும்.

#TN_Needs_lLP

வடஇந்தியத் தொழிலாளர்களை வெளியேறச் சொல்வது நியாயமா? - காளிங்கன்


பிழைப்பதற்காக வந்திறங்கும் வட இந்திய ஏழைத் தொழிலாளர்கள் வெளியேறச் சொல்வது நியாயமாகுமா? பாவம் இல்லையா அவர்கள்?

தமிழகம் போன்ற அந்நிய மண்ணுக்குச் செல்லாமல் தங்களது சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற்று கண்ணியம்மிக்க - கெளரவமான வாழ்வை உறுதிப்படுத்த மத்திய - மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என்ற எந்தக் கோரிக்கையும் போராட்டமும் வட இந்திய மாநிலங்களில் நடப்பதாகத் தெரியவில்லை. 

தொழிலாளர்கள் நலன் பற்றி ஓயாமல் பேசும் வட இந்திய - தமிழக இடதுசாரிகள் கூட அந்தந்த மாநில அரசுகள் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும் எனக்கோரிக்கை வைப்பதற்குப் பதிலாக தாய் மண்ணை விட்டு வெளியேறி தமிழகத்தில் குறைந்த கூலிக்கு சுரண்டப்படுவதை ஆதரித்து பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறார்கள். 

வட இந்தியத் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளைப் பேசினால் குழந்தை குட்டிகளுடனும் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்தபடி கண்களில் ஏக்கம் நிறைந்த முகங்களுடன் நிற்கும் அவர்களை நம் முன்னே நிறுத்தி நாம் ஏதும் சொல்ல முடியாதபடி இரக்கத்தை வரவழைத்து விடுகிறார்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் திரைகடலோடியும் திரவியம் தேடு என்றும் உலகுக்குச் சொன்ன தமிழகம் இதை எப்படி எதிர்கொள்வது?

எங்கு சென்றும் உழைத்து உயிரை உடம்பில் தேக்கி வைப்பதற்கு உள்ள உரிமையை யாரும் மறுத்துவிட முடியாது.

வட இந்தியத் தொழிலாளர்கள் வரட்டும். ஆனால் அரசமைப்பு சிறப்புச் சட்டம் 371 - ஐப் பெற்றுள்ள வட இந்திய, வட கிழக்கிந்திய மாநிலங்களில் அமலில் உள்ளதைப் போன்ற 'உள்ளக அனுமதி முறையினைப்' (Inner Line permit) பெற்று வரட்டும். ஒப்பந்தப் பணிக்காலம் முடிந்ததும் தம் மாநிலங்களுக்குத் திரும்பட்டும்.  

இந்திய அளவில் தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களைத் தவிர பிற அனைத்து மாநிலங்களும் கல்வி - வேலைவாய்ப்பில் மண்ணின் மக்களுக்கே (80%-90% வரை) முன்னுரிமை எனச் சட்டம் இயற்றியுள்ளன. பல மாநிலங்கள் 371 சிறப்புச் சட்டமும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதையே நாமும் கோருவதே நியாயம் !

புதன், 7 டிசம்பர், 2022

இந்திய அரசின் சித்த மருத்துவப் புறக்கணிப்பை, தமிழ்நாடு அரசு ஆதரிக்கலாமா? - வான்முகில்


கடந்த 25.11.2022 அன்று, திருச்சி வந்திருந்த தமிழ்நாடு நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரசு ஆயுர்வேதக் கல்லூரி ஒன்று திருச்சியில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஓர் அரசு ஆயுர்வேதக் கல்லூரி கன்னியாகுமரி மாவட்டம் - நாகர்கோவிலில் செயல்பட்டு வருகிறது. இப்போது அமைச்சர் அறிவித்துள்ளது இரண்டாவது ஆயுர்வேதக் கல்லூரி ஆகும்.

இப்போது திருச்சியில் இரண்டாவது அரசு ஆயுர் வேதக் கல்லூரி அமைக்கவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? யார் கோரிக்கை வைத்தார்கள் என்றும் தெரியவில்லை!

இந்திய ஒன்றிய பா.ச.க. அரசு, "ஒரே இந்தியா - ஒரே பாரம்பரிய மருத்துவம் - அது சமற்கிருத ஆயுர்வேதம் மட்டுமே" என்கிறது. அந்தச் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு அரசின் ஆயுர்வேதக் கல்லூரி அறிவிப்பைப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், இந்திய முறை பாரம்பரிய மருத்துவம் என்பது சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி ஆகிய 3 மட்டுமே என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைக்குப் பின் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்த அனைத்து வடக்கத்திய அரசுகளும் இந்தியா முழுவதும் ஆயுர்வேதத்திற்கு மட்டுமே பல ஆய்வு நிறுவனங்களையும், ஒன்றிய உயர் மருத்துவ மனைகளையும் நிறுவி வளர்த்தெடுத்தன.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் போராடி, கடந்த 2005இல் தான், அப்போது ஒன்றிய நலவாழ்வுத்துறை அமைச்சகப் பொறுப்பிலிருந்த தலித் எழில்மலை, அன்புமணி இராமதாசு மற்றும் மருத்துவர் தெய்வநாயகம் ஆகியோரின் பெருமுயற்சியால் சென்னை தாம்பரத்தில் "தேசிய சித்த மருத்துவ ஆய்வு நிறுவனம்" (National Institute of Siddha - NIS) அமைக்கப்பட்டது. இன்றைக்கும் நாள்தோறும் சற்றொப்ப இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புறநோயாளிகள் பகுதியில் (OP) மட்டும் சிகிச்சை பெறும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆளும் ஆரியத்துவ பா.ச.க. அரசானது எல்லாத் துறைகளிலும் சனாதனத்தையும், சமற்கிருதமயமாக்கலையும் வெறி கொண்டு செயல்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, இந்திய முறை மருத்துவத்துறை (Department of Indian Medicine) என்றிருந்த பெயரை மாற்றி "ஆயுஷ்" என்ற (Department of AYUSH) சமற்கிருதப் பெயரைச் சூட்டியது.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சமற்கிருத ஆயுர்வேதத்திற்கும், வடக்கத்திய சனாதன யோகத்திற்கும் பல கார்ப்பரேட் சாமியார்களுடன் கூட்டு சேர்ந்து பல ஆயிரம் கோடிகளைச் செலவு செய்துள்ளது ஆரியத்துவ பா.ச.க. அரசு!

இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், இதுவரை சற்றொப்ப இரண்டாயிரம் கோடிக்கு மேல் அதற்கு நிதி ஒதுக்கி உள்ளது. இதில் சித்த மருத்துவத்திற்கென்று வெறும் எட்டு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது!

இந்நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திருச்சியில் அமைய இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை அக்கட்சியின் உட்கட்சிச் சண்டையால் மதுரைக்கு மாற்றப்பட்டது.

சித்த மருத்துவ ஆர்வலர்கள், கடந்த 2017ஆம் ஆண்டு புதுதில்லியில நிறுவப்பட்டுள்ள பெரிய 'எய்ம்ஸ் - ஆயுர்வேதா' மருத்துவமனையைப் போல், தமிழ்நாட்டில் 'எய்ம்ஸ் - சித்தா' மருத்துவமனையைத் திருச்சியில் அமைக்க வேண்டும் எனக் கோரி, அதற்குப் போராடி வருகின்றனர். அதன் பயனாக, தமிழ்நாடு அரசு பெரிய அளவில் நிலம் ஒதுக்கித் தரும்போது, அதனைச் செயல்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் பதில் தெரிவித்தது.

அதனைச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அடையாளம் காணப்பட்ட இடத்தில் 'எய்ம்ஸ் - சித்தா' மருத்துவமனை அமைக்க வேண்டும் எனச் சித்த மருத்துவகள் தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசிற்கு எந்தவகை நிதிச் சுமையும் ஏற்படுத்தாத - ஒன்றிய அரசின் நிதியின் மூலமே இத்திட்டம் செயல்படுத்தப்படும். நிலத்தை ஒதுக்கித் தருவது மட்டுமே தமிழ்நாடு அரசின் பொறுப்பாகும்!

ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளை ஆயுஷ் துறைக்கு ஒதுக்கும் இந்திய ஒன்றிய அரசின் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கான பங்கினை கேட்டுப் பெற முடியாததற்கு, 'எய்ம்ஸ் - சித்தா' போன்ற திட்டங்களும் நிறுவனங்களும் நம்மிடம் இல்லாதது ஒரு காரணமாகும்.

கடந்த 2022 செப்டம்பர் மாதம் புதுதில்லி சென்றிருந்த தமிழ்நாடு நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் இந்திய ஒன்றிய நலவாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் ஆயுஷ் அமைச்சர்களைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கு 'எய்ம்ஸ்' போன்ற சித்த மருத்துவமனை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அது ஊடகங்களிலும், மக்களிடமும் போதுமான கவனம் பெறவில்லை.

'எய்ம்ஸ் - சித்தா' மருத்துவமனை என்பது, All India Institute of Medical Science - AIIMS, All India Institute of Ayurveda - AllA போன்றது. அதாவது, All India Institute of Siddha - AlIS என்ற நிறுவனத்தைக் குறிப்பதாகும்.

இந்தியாவின் முதல் தலைமையமைச்சர் நேரு அவர்களால் 1952இல் தில்லியில் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் மருத்துவக் கல்வியிலும், உயராய்வு மருத்துவப் படிப்புகளிலும், மருத்துவ ஆராய்ச்சிகளிலும் இந்தியா தன்னிறைவு அடைவதே! அதன்பின் இந்தியா முழுமைக்கும் 8 எய்ம்ஸ் மருத்துவமனைகள் பெரிய அளவில் நிதி ஒதுக்கி அமைக்கப்பட்டன. மதுரையில் ஒன்று விரைவில் அமைய உள்ளது என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்தால் எய்ம்ஸ் மருத்துவ நிறுவனம் போல, ஆயுர்வேதத்திற்கு All India Institute of Ayurveda (AIIA) புதுதில்லியில் அமைய, மோடி அரசு 500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி 2017இல் அது தொடங்கப்பட்டது. அதன்படி பல பணிகள் நடந்துள்ளன. அப்போது அனைத்து இந்திய முறை மருத்துவத்திற்கும் இதேபோல் மருத்துவமனை நிறுவப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

எய்ம்ஸ்-ஆயுர்வேதா (AllA) மருத்துவமனையானது ஆயுர்வேதத்தில் 22 துறைகளைக் கொண்ட PG\ Ph.d.\M.S. போன்ற உயர் படிப்புகளையும், மருத்துவ ஆய்வுகளையும் மிகச் சிறப்பாக முன்னெடுப்பதற்காக ஆண்டுக்கு சுமார் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, இதன் மூலம் அரியானா, உத்தரப்பிரதேச மக்களுக்கும் சிறப்பான ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவா போன்ற சிறிய மாநிலம் தொடர்ந்து ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்து அதில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, தற்பொழுது இரண்டாவது AIIA ஆயுர்வேத மருத்துவமனை கோவாவில் விரைவில் அமைய உள்ளது.

இதேபோன்று சித்த மருத்துவத்திற்கும் எய்ம்ஸ்-சித்தா எனும் வகையில் "அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனம்" (AIIS - All India Institute of Siddha) நிறுவனத்தை அமைப்பதற்கு ஒன்றிய ஆயுஸ் அமைச்சகத்திடம் திட்டம் உள்ளது. 

"அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனம் (எய்ம்ஸ்-சித்தா)" தமிழ்நாட்டில் அமையும் போது, மிகச் சிறப்பான சித்த மருத்துவச் சேவையைத் தமிழ்நாட்டு மக்கள் பெற முடியும். அது மட்டுமன்றி, சித்த மருத்துவ உயர் படிப்புகள், சித்த மருத்துவ ஆராய்ச்சிகளும் உலகத்தரத்துடன் மேற்கொள்ளப்படும்.

புற்றுநோய்க்கான சித்த மருத்துவ ஆய்வு, தோல் நோய்க்கான சித்த மருத்துவ ஆய்வு, சர்க்கரை நோய்க்கான சித்த மருத்துவ ஆய்வு, பல புதிய வைரஸ் காய்ச்சலுக்கான சித்த மருத்துவ ஆய்வு, பெண்கள் மற்றும் குழந்தைப் பேரின்மைக்கான சித்த மருத்துவ ஆய்வு, வர்ம மருத்துவம் மற்றும் ஒடிவு முறிவுக்கான சித்த மருத்துவ ஆய்வு, சிறுநீரக நோய்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு, வளரிளம் குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு, முதியோர் நோய்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு போன்ற பல சித்த மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றிற்கு உலகத் தரத்திலான சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் இந்த (எய்ம்ஸ்-சித்தா) AllS மருந்துவமனையால் முடியும்.

இதன் வழியே, உலகத் தமிழர்கள் தீராத பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவம் வேண்டி தமிழ்நாடு வருவார்கள். அதன்மூலம் தமிழ்நாட்டின் மருத்துவச் சுற்றுலா அதிகரிக்கும்.

தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் எய்ம்ஸ்-சித்தா - AIIS அமையும்போது, அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் சிறப்பாகப் பயன்படும். ஏற்கெனவே, திருச்சி - தஞ்சை இடையே அமைய வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனையானது மதுரைக்கு மாற்றப்பட்டது. அப்போது AIIMS மருத்துவமனை கட்ட திருச்சியில் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசின் வசம் உள்ளது. அதனை AIIS சித்த மருத்துவமனை கட்ட தமிழ்நாடு அரசு ஒதுக்கினாலே போதுமானது. மற்ற அனைத்துச் செலவுகளையும் இந்திய ஒன்றிய அரசே ஏற்றுக் கொள்கிறது.

தில்லியில் உள்ள AIIA ஆயுர்வேத மருத்துவமனைக்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் இந்திய ஒன்றிய அரசு ஒதுக்கி மருத்துவச் செலவு செய்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில், இந்த முன்னெடுப்புகளைச் சீர் குலைக்கும் வகையில், சில செயல்கள் சனாதனக் கும்பல்களால் செயல்படுத்தப்படுகிறது. வரும் திசம்பர் மாதம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மருத்துவத்தின் அனைத்திந்திய மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டை ஒட்டி, தமிழ்நட்டிலுள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் குழு, இம்காப்ஸ் இயக்குனராக உள்ள பெண் மருத்துவர் மீரா சுதிர் தலைமையில், கடந்த 14.11.22 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவியை சந்தித்து, தமிழ்நாட்டில் ஆயுர்வேதம் ஒடுக்கப்படுவதாகவும் ஓரங்கட்டப்படுவதாகவும், தமிழ்நாடு அரசு இரண்டாவது ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்றும் முறையிட்டது.

ஆரியத்துவ சனாதனக் காப்பாளரான ஆளுநர் இரவி அக்கோரிக்கையை அவசரமாக தமிழ்நாடு நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். இதே குழு கடந்த 25.11.22 அன்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்து அதே கோரிக்கையை நேரில் முன்வைக்கிறது. உடனடியாக அக்கோரிக்கையை ஏற்ற அமைச்சர், 'திருச்சியில் ஆயுர்வேத மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கிறார்.

இந்தக் குழுவில் இருந்த பெண் மருத்துவர் மீரா சுதீர அவர்கள், கடந்த 12.11.22 அன்று "துக்ளக்" இணைய இதழுக்கு "தமிழ்நாட்டில் இந்தியை எப்படிப் பரப்பலாம் என்பது குறித்து விரிவாக விவாதித்தவர்! தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரைச் சந்திக்காமல், ஆரியத்துவ சேவகராக உள்ள ஆளுநரை ஆயுர்வேத மருத்துவக் குழு சந்திப்பதிலிருந்தே அவர்களது உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா முழுவதிலும் 273 ஆயுர்வேதக் கல்லூரிகள் உள்ளன. இதில் 53 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள்! இக்கல்லூரிகளில் ஆண்டுதோறும் சற்றொப்ப 27300 மாணவர்கள் சேர்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் ஒன்பது சித்த மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இதில் இரண்டு மட்டும்தான் அரசுக் கல்லூரிகள். இதில் சேர்க்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் வெறும் 650 மட்டுமே!

தமிழ்நாட்டில் சித்த மருத்துவத்தின் நிலைமை இப்படி இருக்க, தமிழ்நாடு அரசால் ஆயுர்வேதம் புறக்கணிக்கப்படுகிறது என்று கூறுவது அப்பட்டமான பொய்க் கூற்றாகும்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை முடக்கி வைத்துள்ள ஆளுநரைக் கண்டிக்காமல், அவர் மனம் குளிர வேண்டி இரண்டாவது ஆயுர்வேதக் கல்லூரியை அமைச்சர் அறிவிப்பது வேதனையானது.

பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தும், அதனைப் பல ஆண்டுகளாகியும் செயல்படுத்தவில்லை. சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட, அதனை முடக்கி வைத்துள்ள ஆளுநரிடம் இருந்து, ஒப்புதலைப் போராடிப் பெற தமிழ்நாடு நல்வாழ்வுத் துறை அமைச்சர் எவ்வகை முயற்சியும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் சித்த மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அந்தந்த மாநில அரசுகளை தமிழ்நாடு அரசு நிர்பந்திக்க முடியுமா? முடியாது! இன்று வரை தமிழ்நாடு தவிர்த்த வெளி மாநிலங்களில் ஒரு அரசு சித்த மருத்துவக் கல்லூரி கூட இல்லை என்பதே உண்மை!

அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே ஒரு தனியார் சித்த மருத்துவக் கல்லூரி உள்ளது. இதைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஒரு தனியார் சித்த மருத்துவக் கல்லூரி கூட இல்லை!

அருகிலுள்ள கர்நாடக மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் முன்பு வரை சித்த மருத்துவம் பயின்ற எவரும் மருத்துவமனை வைத்து மருத்துவம் பார்க்க முடியாது. அங்கு சித்த மருத்துவம் பார்ப்பது சட்டத்திற்கு புறம்பானது. சித்த மருத்துவர் அருளமுதனின் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்பே அங்கு தகுதி வாய்ந்த சித்த மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பது சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது.

தமிழர் மருத்துவ முறை என்ற ஒரே காரணத்திற்காக வெளி மாநிலங்களில் சித்த மருத்துவத்தை, ஆயுர்வேத மருத்துவர்கள் அனுமதிப்பதில்லை என்பதே உண்மை! 

உண்மையில், சித்த மருத்துவத்திற்கு தமிழ்நாட்டிற்கு வெளியேயும் இடமில்லை - தமிழ்நாட்டிற்கு உள்ளும் இடமில்லை என்பதே வேதனையான நிலை!

ஆயுர்வேதா- யுனானி - ஓமியோபதி ஆகியவற்றின் தலைமையகம் தில்லியில் அமைத்து, அவற்றை அங்கீகரிக்கும் இந்திய ஒன்றிய அரசு, சித்த மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் தலைமையகத்தை மட்டும் சென்னையில் வைத்தது. இதன் மூலம் தில்லியில் சித்த மருத்துவத்திற்கான அங்கீகாரம் முற்றிலும் மறுக்கப்பட்டது. இதனால் கொள்கை ரீதியாகப் பல முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சித்த மருத்துவம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது!

உலக நலவாழ்வு நிறுவனத்தின் (WHO) பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தை குசராத்தில் கடந்த ஆண்டு நிறுவியபோது, சித்த மருத்துவம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது.

தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி சித்த மருத்துவம் வளர விடக்கூடாது; தெரிந்து விடக்கூடாது என்பதில் ஆரியத்துவ ஆட்சியாளர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, இந்திய அரசால் - ஆரியத்துவ ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்படும் தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்திற்காகத் தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தேவையுள்ளது.

நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் :

1.உலகத் தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மருத்துவ அறிவாக தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தைப் பேரறிவிப்பு செய்ய வேண்டும்.

2. திருச்சியில் ஒன்றிய எய்ம்ஸ் சித்த மருத்துவமனை அமைக்க வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நிலத்தை ஒதுக்கித் தர வேண்டும்.

3. ஒன்றியத்தில் ஆயுஷ் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் பெரும் பங்கை நாம் சித்த மருத்துவத்திற்காகக் கேட்டுப் பெற வேண்டும்.

4. தமிழ்நாடு ஆளுநரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். ஆளுநரை அதை முடக்கினால் வெளியேற்ற மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

5. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவக் கல்லூரிகளைப் புதிதாக தொடங்க வேண்டும்.

6. ஏற்கெனவே நாகர்கோயிலில் திறக்கப்பட்ட ஒரு ஆயுர்வேதக் கல்லூரியே தமிழ்நாட்டிற்குப் போதுமானதாகும். புதிதாக திறந்தால் அதற்கு எதிராகப் போராட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆரியத்துவ சனாதனமும், சமற்கிருத மேலாதிக்கமும் எந்த வகையில் வந்தாலும் நாம் அதனை ஒருங்கிணைந்து சமரசமின்றிப் போராடி தடுத்து நிறுத்த வேண்டும்!

கட்டுரையாளர்: திரு வான்முகில்

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ், டிசம்பர் 2022.

செவ்வாய், 6 டிசம்பர், 2022

தமிழ் என்னும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே திராவிடம் என்பதாகும்: பி.ஆர்.அம்பேத்கர்


இதுவரை நமக்குக் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, தென்னிந்தியாவின் திராவிடர்களும் வட இந்தியாவின் அசுரர்களும் அல்லது நாகர்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள்தான் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. 

நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், ‘திராவிடர்’ என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். ‘தமிழ்’ என்னும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல். 

‘தமிழ்’ என்னும் மூலச் சொல் முதன் முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்றபோது ‘தமிதா’ என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர், ‘தமில்லா’ ஆகி, முடிவில் ‘திராவிடா’ என்று உருத்திரிந்தது. ‘திராவிடா’ என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. 

நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயம், ‘தமிழ் அல்லது திராவிடம்’ என்பது, தென்னிந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக, அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது; காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழியாகவும் திகழ்ந்தது. 

ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வட இந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு, தென்னிந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவில் இருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். 

வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டு விட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால், தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை. தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக் காத்து வந்தனர். 

ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக் கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனதில் கொண்டால், திராவிடர் என்ற பெயர் தென்னிந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

திராவிடர் என்ற சொல்லை வட இந்தியர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனென்றால், திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டு விட்டனர். ஆனால், தென்னிந்தியாவின் நாகர்களைப் பொறுத்தவரையில், திராவிட மொழியைத் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு இருந்ததால், தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர். 

அதுமட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு விட்டதன் காரணமாக, திராவிட மொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக் கொள்வது மிக மிக அவசியம் ஆயிற்று. தென்னிந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.

பார்வை நூல்:

தீண்டப்படாதவர்கள், பி.ஆர்.அம்பேத்கார், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 14, எஸ்.பெருமாள் (ப.ஆ), மறு பதிப்பு, 2008, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் நல அமைச்சகம், புது டில்லி.


புதன், 16 நவம்பர், 2022

மாவீரர் நினைவேந்தும் நடுகல் :அ.ம.அங்கவை யாழிசை


என்னுடைய மனதுக்கு மிக நெருக்கமான புத்தகங்கள் உண்டென்றால், அதில் முதலாவதாக இடம்பெற்றிருப்பது தீபச்செல்வன் எழுதிய 'நடுகல்' என்னும் புத்தகம்தான். இது எம் தமிழ் மண்ணைப் பற்றியது; எம் மண்ணின் மைந்தர்களான தமிழர்களைப் பற்றியது என்பதால்கூட அப்படி இருக்கலாம்.

தமிழ் இனத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இளமைக்கால வாழ்க்கைப் பதிவாக, கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்பு வெளிவந்த திரைப்படம் மேதகு 1. மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்து பார்த்த படம் அது. ஏனெனில், எம் தலைவரைப் பற்றிய படம். ஒரு போராளி உருவான கதையைப் பேசியிருந்தது அப்படம். 

அந்தப் படத்தைப் பார்த்து முடித்த உடனே, 'ஈழத்தைப் பற்றியும் - ஈழப் போராட்டங்கள் பற்றியும் நம்மிடம் புத்தகங்கள் இருக்கிறதா?' என, அப்பாவிடம் கேட்டேன். 'ஈழம் குறித்து நிறையப் புத்தகங்கள் நம்மிடம் இருக்கின்றன. அதையெல்லாம் நீயும் தம்பியும் படிக்க வேண்டும்' எனக் கூறினார். 

எங்களது 'செம்பச்சை' நூலகத்தில் ஈழத்தைப் பற்றிய நிறைய நூல்கள் இருந்தாலும், ஈழத்தைப் பற்றியான வரலாற்றைக் காட்டிலும், ஈழத்து மக்களின் துயர்மிகுந்த வாழ்க்கைக் கதைகளை முதலில் படிக்க வேண்டும் எனக் கூறிய அப்பா, அடுத்த நாளே நான் படிப்பதற்காகப் பத்துப் புத்தகங்களைக் கொடுத்தார். அந்தப் பத்து நூல்களுள் இந்த 'நடுகல்' புத்தகமும் கைக்கு வந்தது. 'நடுகல்' எனும் தலைப்பைப் பார்த்தவுடனே, அதைப் படிக்க வேண்டும் எனும் தூண்டல் வந்துவிட்டது. 

ஓராண்டிற்கு முன்பு படித்த புத்தகம்தான் என்றாலும், இன்றும் அதன் கதைகளையும் வரிகளையும் அசைபோடும் போது ஈழத்தமிழர் மனத்தின் ஓலம் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

ஈழத்தைப் பற்றியும், எம் தலைவரைப் பற்றியும், அவர் முன்னெடுத்த போராட்டம் பற்றியும் சிறு வயதில் இருந்தே என் தந்தையாரின் வழியாக நிறைய அறிந்திருக்கிறேன். ஈழத் தமிழ் மக்களின் இன்னல்கள் பற்றியும் நிறையக் கேட்டிருக்கிறேன். ஆனாலும், இப்புதினம்தான் கண்கூடாகக் காண்பதைப் போல் காட்சிப்படுத்தியதை உணர்ந்தேன். 

இந்த நூலைப் படிக்கும்போது கதை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திப் பார்ப்பேன். நிகழ்வுகளை விவரிக்கும் வரிகளைக் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது, ஈழத் தமிழ் மக்களின் துயர்மிகு வாழ்வை வாசிக்க முடியாமல் புத்தகத்தை மூடி வைத்து விடுவேன். 

பல நேரம் நூலின் வரிகளை உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்தாலும், கண்கள் கசிந்து கொண்டே இருந்தன. வாசிப்பதற்கே இத்தனை துயரம் ஏற்படுகிறது என்றால், அந்தத் துயரங்களையெல்லாம் நேரில் அனுபவித்த தமிழர்களின் வலிகள் மிகக் கொடூரமானதாக இருந்திருக்கும் என்பதை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் மரணத்தோடு போரிட்ட தமிழ் மக்களின் போராட்டத்தையும், அவர்களின் போராட்ட வாழ்வியலையும் கதை சொல்லல் வழியாகக் கட்டமைத்திருந்தது நடுகல். 

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது, தந்தையின் ஆதரவு ஏதும் இல்லாமல் ஒரு குடும்பம் படும் பாட்டை விவரிக்கிறது நடுகல்.

போரில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகல் நடப்படும் வழக்கம் தமிழர்களின் தொன்மைப் பண்பாடுகளுள் ஒன்று. தீபச்செல்வனின் நடுகல்லானது, ஒரு போராளியைப் பற்றிய நினைவுகளைச் சுமந்திருக்கும் புதினமாய் வந்திருக்கிறது. 

அதாவது, ஈழப்போராட்டத்தில் தன் முதல் மகன் களப்போராளியாகி வீரச் சாவடைய, வீர மரணம் அடைந்த அவனை நினைவு கூற ஒரு புகைப்படம்கூட கைவசம் இல்லாத நிலையில், அவனைப் பற்றிய நினைவுகளையே நடு கல்லாய்ச் சுமந்து வருகிறாள் ஒரு தாய். மகனைப் பறிகொடுத்தவள், தன் மகனின் முகம் பார்க்க வைத்திருந்த புகைப்படங்களையும் தொலைத்த வலியோடு கதை முழுதும் பயணிக்கிறார் அந்தத் தாய்.

நேசித்தவனை இழப்பது துயரம் என்றால், அவனுடைய நிழற்படத்தையும்கூட இழப்பது மிகப்பெரும் துயரம்.

இதில், கதை சொல்லியாக வரும் இரண்டாவது மகன் வினோதன், தன் அப்பா வருவார் என்ற நம்பிக்கையில் இருந்து இருந்து ஏமாந்து விடுகிறான். அவன் அண்ணன் இல்லாமலும்,போரின் போது தங்கை மற்றும் அம்மாவுடன் சேர்ந்து ஒவ்வொரு இடமாக இடம்பெயரும் போதும் வழிநெடுகப் போரின்போது கொல்லப்பட்ட மனித உடல்களே எங்கும் கிடந்ததைப் பற்றி வினோதன் கூறும் பகுதிகள் இரத்த சாட்சிகளாய் இருக்கின்றன. வீதிகள் முழுக்க சருகுகள் கிடக்கும் காட்சிகள் போல சனங்கள் செத்துக் கிடக்கும் காட்சிகளை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது.

போரின் போது தமிழ் மக்கள் அடைந்த வேதனைகள் அனைத்தையும் மிக வேதனையோடு விவரித்திருக்கும் அந்தப் பகுதிகள் கண்ணீரும் வலியும் நிரம்பியவை.

பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் பதுங்கு குழியிலும், சாதிக்க வேண்டிய வயதில் சவப்பெட்டியிலும் இருந்த நிலைமைகள் இனி வேறு எந்த இனத்திற்கும் வரக்கூடாது.

சொந்த நாட்டில் அடிமையாகவும் அகதியாகவும் வாழும் அவல நிலையில் எம் உறவுகள் பட்ட சித்திரவதைகள்தான் என்னென்ன? அந்த மனிதமற்ற சிங்கள இராணுவ மிருகங்களின் அத்துமீறல்கள் மரணத்தைக்கூட பயமற்றதாக்கி விட்டிருந்த நிலையை என்னவென்பது?

போரில் வீரச் சாவடைந்தவர்களுக்கு மரியாதை செய்யவோ விளக்கேற்றவோ கூடாது என்று சிங்கள இராணுவம் தடை போட்டிருப்பதோடு, மாவீரர் துயிலும் இல்லங்களைச் சேதப்படுத்தியிருக்கும் சிங்கள இராணுவம் செய்த பயங்கரவாதங்களை விவரிக்கும் போது நெஞ்சம் பதை பதைக்கின்றது. மனம் குமுறுகிறது. ஓர் ஆற்றாமை உணர்வு மனதில் இருந்து கொண்டேயிருக்கிறது.

இயக்கத்தில் சேர்ந்திருந்த தனது மகன் வீரச் சாவடைந்த பிறகு, அவனது நினைவாக ஒரு கல்லை நட்டு, அந்தக் கல்லையே மகனாகப் பாவித்துக் கொண்டிருப்பார் அந்தத் தாய். மகனாகப் பாவித்துக் கொண்டிருந்த அந்தக் கல்லை சிங்கள இராணுவ வீரன் உடைத்து விடுவான். அப்போது அந்தத் தாய் கூறும்போது "எங்கட பிள்ளயளின்ரை நினைவுகளுக்கு நீங்கள் பயப்படுற வரைக்கும் உங்களாலை அவங்களை அழிக்கேலாது". அந்தத் தாயின் உணர்வுதான் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் உணர்வாக இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அந்த உணர்வின் வெளிப்பாடுதான் மாவீரர் நினைவேந்தல் வழிபாடாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நூலின் கதையை நகர்த்திப் போவது பிரசன்னா என்ற போராளி வெள்ளையனைப் பற்றிய நினைவுகள்தான். சொல்லப்போனால், இந்த நூல் முழுக்க போராளி பற்றிய நினைவுகளே நிரம்பிக் கிடக்கின்றன. மகனை இழந்த தாயின் தவிப்பு, அண்ணனை இழந்த தம்பி மற்றும் தங்கையின் சோகம் என, உறவுகளை இழந்தவர்களின் வலியை மிகுந்த வலியோடு படைத்திருக்கிறார் ஆசிரியர் தீபச்செல்வன்.

போராளி வெள்ளையனின் தம்பியாக வரும் வினோதன், தன் அண்ணன் படத்தைத் தேடி கதை முழுக்கத் தேடுவான். ஆனாலும் அது கிடைக்காத போது அவன் கலங்குவது வேதனை அளிக்கும்.

வீரச்சாவடைந்த போராளி அண்ணனின் ஒளிப்படத்தைத் தேடியலையும் தம்பியின் தவிப்பும் நடுகல்லில் பரவிக் கிடக்கிறது.

நடுகல் என்றாலே, போரில் பங்கேற்ற போராளிகளின் கதைகளே பெரும்பாலும் சொல்லப்படும். ஆனால், தீபச்செல்வனின் நடுகல் நூலானது, வீரச்சாவடைந்த போராளிகள் என்பதையும் தாண்டி, அந்தப் போராளிகளைப் பெற்றெடுத்த தாய்மார்களின் நினைவுகளையும் தவிப்பையும் பேசியிருக்கிறது. மேலும், வீரச் சாவடைந்த போராளிகள் - போரில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட உறவுகளையும் கனவுகளையும் தொலைத்த குடும்பங்களின் கண்ணோட்டத்தில் நடுகல் எழுப்பியிருக்கிறது. அதோடு, போரினால் நிராயுதபாணியான மக்களின் துயரப் பக்கங்களையும் நடுகல்லாய்ப் பேசுகிறது. 

இன்றும் கூட உலகில் பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு, நடுகல் புத்தகமானது அவர்களின் கடந்த கால இன்னல்களைப் பேசும் புத்தகமாகத்தான் இருக்கும். காலங்கள் எத்தனை கடந்தாலும் அவர்களுக்கு அது என்றும் மாறாத காயங்களாகத்தான் இருக்கும்.

நினைவுகள் வலிமையானவை. ஏனெனில், அந்நினைவுகள் ஒரு காலத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்பவை. அதே நினைவுகள்தான் கசப்பான காலத்தையும் இரத்தம் படிந்த வரலாற்றையும் மாற்றி எழுதுவதற்கான உந்துதல்களைத் திரும்பத் திரும்பத் தந்து கொண்டிருக்கும். அந்தவகையில், ஈழ விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள் பற்றிய நினைவேந்தல்கள் வழிபாடு மட்டுமல்ல; தமிழீழத் தாயக வேட்கையை அணையாமல் காந்து நிற்கும் பேருணர்வாகும். 

மாவீரர்களை நினைக்கும்போதெல்லாம், "எவன் ஒருவனைக் கண்டு உன் எதிரி அஞ்சுகிறானோ, அவனே உன் இனத்தின் உண்மையான தலைவன். என்றேனும் ஒரு நாள் பழி தீர்ப்போம்; துரோகம் களைவோம்" என்ற வாசகங்கள்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

அன்று என் தலைவரின் படையைக் கண்டு அஞ்சினார்கள். இன்று அவர் வாழ்ந்த நிலத்தின் செங்காந்தள் பூவும் மாவீரர் கல்லறைகள்கூட அவர்களை அஞ்ச வைக்கிறது எனில், மாவீரர்களைப் பற்றிய நினைவுகள் எவ்வளவு வலிமையானவை என்பதை அறியமுடியும். அந்த நினைவுகளும் இன்னொரு வகையில் நடுகற்கள்தான்.

நினைவுகளில் உறைந்து கிடக்கும் உணர்வுகளைச் சொற்களால் ஆன நடுகல்லாய் மிக நேர்த்தியான கதைசொல்லல்வழி கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர் தீபச்செல்வன். இப்படைப்புக்காக, தீபச்செல்வன் அவர்களுக்கு மிக்க நன்றி.

மாவீரர்களின் கனவும் ஈகமும் ஒருபோதும் வீண்போகாது. மாவீரர்களுக்கு எம் வீரவணக்கம்.

அ.ம.அங்கவை யாழிசை

15.11.2022


ஞாயிறு, 6 நவம்பர், 2022

அறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வாளர் மட்டுமல்ல; சமூகப் போராளியும்கூட : பேரா சே.கோச்சடை


பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அன்பில் படுகை கிராமத்தில் பிறந்தவர்.இவர் குடும்பம் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்துடன் நெருக்கமாக இருந்தது.பேராசிரியர்  இளமையிலிருந்தே பெரியார் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர்.பேராசிரியர் சக்குபாயைக் காதலித்துச் சாதிமறுப்புத் திருமணம் செய்து  கடைசிவரையில் கருத்தொருமித்து வாழ்ந்தவர். தமிழ் மொழி,இனம், பகுத்தறிவு ஆகியவற்றில் பிடிப்போடு பரப்புரை செய்தவர். சொல் ஒன்று செயல் வேறாக நினைக்காதவர். ஈழ விடுதலைப் போரில் புலிகளை ஆதரித்ததால் இந்திய ஒன்றிய அரசின் கடும் சித்திரவதைகளுக்கு ஆளானவர்.தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் பணியாற்றியபோது இராசீவ்காந்தி கொலையை ஒட்டி கர்நாடகத்தைப் பிடிக்கச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக்  கைது செய்யப்பட்டுக் கர்நாடக மாநிலச் சிறையில் அடைக்கப்பட்டார்

இரண்டரையாண்டுகள் அங்கே கழித்தார்.தமிழ்ப் பல்கலைக் கழக வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு வேலை செய்துவிட்டுத் தஞ்சையிலும் திருச்சியிலும் தங்கியிருந்தவரைக் கர்நாடகாவில் இருந்து, வேறு சிலருடன் சேர்ந்து சதி செய்ததாகப் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது அரசு.தக்க ஆவணங்களைக் காட்டி வாதாடியும்கூட, கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டிருக்கும்  நீதித்துறைக்கு அச் சான்றுகளைப் பார்க்க முடியவில்லை.

    ஒரு மகனும்  இரண்டு மகள்களும் பெற்ற அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காகப் போர் புரியப் பொறியியல் பட்டம் பெற்ற தன் மகனை அனுப்பினார்கள். அவர் அங்கே ஈகியானார்.

விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மற்ற தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட்டார்.தமிழகத்துக்கு வந்து பேராசிரியர் உதவியோடு பொருட்களை வாங்கிக்கொண்டு ஈழம் திரும்பிய பதினேழு புலிகள் இந்தியக் கடற்படையின் இரண்டகத்தால் நடுக்கடலில் சயனைடு  அருந்தித் தற்கொலை செய்துகொண்டதை அறிவோம். அவர்கள் தோழர் வீட்டுக்கு வந்து திரும்பியபோது நடந்த துன்பியல் நிகழ்வு அது.அஞ்சா நெஞ்சர் அவர்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் 

கழகத்தில் கெடுவாய்ப்பாக அவர் எங்களுக்கு எதிரான அணியில் இருந்தார். ஆனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரால் பதவி அடைந்தவர்கள் அவருக்குக் குரல் கொடுக்கவில்லை.மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் முனைவர்.சுரேஷ் வாயிலாக எங்கள் தலைவர் கே.ஜி.கண்ணபிரான் அவருக்காக வாதாட கண.குறிஞ்சி உள்ளிட்ட நாஙகள் முயன்றோம். அப்போது சேலத்தில்  மாநிலச் செய்குழுக் கூட்டம் நடந்தது.புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் தோழர் சங்கரசுப்பிரமணியன்ஆசிரியர் கழகப் பொதுச்செயலர். நாங்கள் செயற் குழுவில் பேசித் தீர்மானம் நிறைவேற்றித் தமிழ் நாடெங்கும் அவரை விடுதலை செய்யக் கோரிக் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். 

   ம.கோ.இரா.அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த பொன்னையன் ஆசிரியர்களுக்கு எதிரான போக்குள்ளவர்.திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் ஈழப் போராளிகளுக்கு ஆதரவாக மறியல் செய்ததற்காகப் பேராசிரியர் நெடுஞ்செழியனையும், நக்சலைட் என்று என்னையும் பொன்னையன் பழி வாங்கும் இடமாற்றம் செய்தார்.சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு 1987இல் மாற்றப்பட்ட நாங்கள் அங்கே ஒரு பண்ணையின் மாட்டுக் கொட்டகையை வாடகைக்குப் பிடித்துச் சமைத்து உண்டு, கல்லூரியில் இரவுக் காவலர்களுடன் படுத்து எழுந்தோம். வெள்ளிக் கிழமை மாலையில் ஊருக்கு வந்துவிட்டுத் திங்கட்கிழமை காலை ஆத்தூருக்கு வருவோம்.நான் காரைக்குடியில் இருந்து பேருந்து ஏறித் திருச்சியில் அவருடன் காலை ஆறரை மணிப் பேருந்தைப் பிடித்துச் செல்வோம்.எளிமையானவர்.

அப்போது ஆத்தூர் கல்லூரியில் உள்ளூர் ஆசிரியர்கள் ஆதிக்கம் செய்தனர்.மாணவர் நலனில் அக்கறை இல்லை.ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுக்காததால் எழுத்துத் தேர்விலும் செய்முறைத் தேர்விலும் பணம் விளையாடியது.நாங்கள் ஆசிரியர் கழகத்தில் பேசித் தீர்மானம் போட்டுக் கல்லூரிப் பாடங்களை ஆசிரியர்கள் ஒழுங்காக நடத்த வைத்தோம்.அவர் சிறைச்சாலையை அறச்சாலை ஆக்கிய மணிமேகலையைக் கற்பிப்பவர் அல்லவா? 

பல்கலைக் கழகத் தேர்வுகளில் நடக்கும் நேரத்தில் நாங்கள் ஊருக்கு வந்துவிட்டோம்.அப்போது முதன்மைத் தேர்வுக் கண்காணிப்பாளராக இருந்தவர் இவருடைய துறைத் தலைவர்.பகலில் தேர்வு நடந்த பிறகு நன்றாகத் தேர்வு எழுதாதவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு,அவர்களை இரவில் வரச் சொல்லி,பழைய தாள்களை உருவி எடுத்துவிட்டுப் புதிய தாள்களைக் கொடுத்துப் பார்த்து எழுதவைத்துச் சேர்த்திருக்கிறார்.இது கல்லூரி இருக்கும் வட சென்னிமலையில் பலருக்குத் தெரிந்திருந்தது.நாங்கள் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தைக் கூட்டிப் பேசிச்  சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு முறையீடு விடுத்தோம்.எங்கள் ஆசிரியர் தலைவர்கள் வாயிலாக விசாரணை ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. எங்களுடன் வேறு சில ஆசிரியர்களும் சென்னைக்கு வந்து சான்றளித்தனர் .1987 முதல்1989 வரை நாங்கள் அங்கே பணியாற்றிய இரண்டு ஆண்டுகளும் நல்ல தேர்ச்சி. 

அங்கே நாங்கள் இருந்தபோது பரிபாடலில் பெருவெடிப்புக் கொள்கைக்கான முற்கோள் (hypothesis).இருந்ததைக் கண்டார்.நான் இயற்பியலுடன் தமிழும் படித்தவன் என்பதால் அந்தப் பகுதியை நான் விளக்கினேன். அப்புறம் அதில் பரிணாம வளர்ச்சி பற்றியும் சொல்லப்பட்டுள்ளது என்று விளக்கியிருர்தார்.என் பங்கு இதில் சிறிதெனினும் என் பெயரையும் சேர்த்தே அக் கட்டுரையை வெளியிட்டார் .

பேராசிரியரின் ஆராய்ச்சி  எழுத்துப் பணி மிகவும் சிறப்பானது.ஆசீவகம் என்ற தமிழர் மெய்யியலை இலக்கியச் சான்றுகளுடன் களப்பணி ஆய்வும் செய்து நிலைநாட்டினார்.அதில் குறை காண்பார்கள் உண்டு.ஆனால் அவரது ஆய்வு புது வெள்ளம் போன்றது.நுங்கும் நுரையும் குப்பையும் கூளமுமாகத்தான் ஆறு தொடங்கும்.ஓட்டத்தில்தான் நீர் தெளியும். பேராசியரது முன்னெடுப்பை மேலும் பலர் தொடரும் நிலையில் கால ஓட்டத்தில் தமிழர் மெய்யியல் முழுமையாக நிறுவப்படும்.அவருக்கு

 வீர வணக்கம்.

சனி, 5 நவம்பர், 2022

க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி : இரா.மன்னர் மன்னன்


இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு. 

ஆதிநாதர் முதலான 23 தீர்த்தங்கரர்கள் ஜைனர்கள், ஆசீவகர்கள் - ஆகிய இருவருக்கும் பொது. இதனால்தான் இவர்கள் இருவருமே சமணர்கள்.

ஆனால் ஜைனருக்கு மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர், ஆசீவகர்களுக்கோ மர்கலி 24ஆவது தீர்த்தங்கரர். உண்மையில் ஆசீவகம் ஜைனத்தின் போட்டி மதம். ஆனால் பின்னர் நலிவடைந்த ஆசீவகத்தை, ஜைனம் கைப்பற்றி சுவடே தெரியாமல் போகுமாறு செய்தது. 

அப்படியாக அழிந்து போயிருந்த ஆசீவக வரலாற்றை அதன் கடைசி சல்லிவேரில் இருந்து மீட்டு எடுத்தவர் ஆய்வாளர் க.நெடுஞ்செழியன் அவர்கள். அவரது மறைவின் நாளில் அவரது ஆய்வைப் பற்றி தமிழர்களுக்குக் கூறுவதே அவருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும் என நினைக்கிறேன்.

தலைமுடியை தனது கைகளால் பிய்த்து (மயிர் பறித்து) மொட்டைத் தலையோடு துறவிகளாகும் ஜைனர்களும், நீண்ட தலைமுடியோடு உள்ள ஆசீவகர்களும் ’சமணர்’ - என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் வழிபாடுகள் கொள்கைகள் வேறுவேறு. ஜைனர்களும் பவுத்தர்களைப் போல ’வானத்தை பூதமாக ஏற்க இயலாது, மொத்தம் 4 பூதங்களே’ - என்ற போது, ’வானமே முக்கியமானது, மொத்தம் 5 பூதங்கள்’ - என்று சொன்னவர்கள் ஆசீவகர்கள். 

எதையும் விவாதித்து விளக்கும் மரபினர் ஆசீவகர்கள், இவர்கள் வசித்த இடங்களான ‘பள்ளி’கள் மக்களுக்குக் கல்வி கொடுத்ததன் தொடர்ச்சியாகவே பின்னர் கல்வி நிலையங்களுக்கு ‘பள்ளி’ என்ற பெயர் வந்தது. 

மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக ஆசீவகர்களைப் பல்வேறு இலக்கியங்கள் குறிக்கின்றன, குறிப்பாக மனநல மருத்துவத்தில் இவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர்.

ஆனால் ‘தீமை என்ற ஒன்று இல்லை, எல்லாம் ஊழ்’ - என்ற வினைக் கோட்பாடு இவர்களை வீழ்தியது. மக்கள் பரிகார லஞ்சங்களோடு வந்த பிற மதங்களின் பக்கம் ஈர்க்கப்பட, அறிவார்ந்த மதமான ஆசீவகம் அழிந்தது.

கி.மு.5-3ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவரை செல்வாக்கோடு இருந்த ஆசீவகம், 13-15ஆம் நூற்றாண்டுகளில் பெரும் தேய்வை சந்தித்தது. ஆசீவகம் கடைசி மூச்சை விட்ட இடமும் தமிழகம்தான்.

தமிழகத்தில் ‘சமணர் கழுவேற்றம்’ - என்று சொல்லப்படுவது பெரும்பாலும் ஆசீவகர் கழுவேற்றமாகவே இருந்துள்ளது, அதற்கு சடைமுடியோடு ஆசீவகர்கள் கழுவேறும் சிற்பங்களும் ஓவியங்களும் சான்றுகளாகின்றன.

அதுபோல சமணர் ஓவியம் என்று சொல்லப்படும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களிலும் முடிநீண்ட ஆசீவகர்களே உள்ளனர்.

தமிழகத்தில் ஆசீவகர்கள் சங்ககாலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர். கி.மு.5ஆம் நூற்றாண்டுவரை பழமையானது எனக் கருதப்படும் மாங்குளம் கல்வெட்டில் சமணர் என்ற பெயர் காணப்படுகின்றது. இவர்களின் சான்றுகளைத் திரித்துதான், ‘தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தே ஜைனர்கள் உள்ளனர், வடக்கில் இருந்து தமிழருக்கு எழுத்தை அறிமுகப்படுத்தியவர்களே ஜெயினர்கள்தான்’ - என்ற கூற்று முன்வைக்கப்பட்டது.

தங்களுக்கு மொழி இல்லாத காரணத்தால்தான் ஜைனர்கள் சமஸ்கிருதத்தையும் பிராமி எழுத்தையும் எடுத்துக் கொண்டனர் - என்பதுதான் வட இந்திய வரலாறு. ஆனால் எழுத்தே இல்லாதவர்கள் நமக்கு எழுத்து கொடுத்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர். நாமும் நம்பி வந்தோம்.

அதை உடைத்து, ’சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்தவர்கள் ஜைனர்கள் அல்ல ஆசீவகர்கள். ஆசீவகம் தமிழரின் அறிவை வடக்குக்கு கொண்டு சென்றது, வடக்கில் இருந்து எழுத்தோ, வானியலோ இங்கு வரவில்லை’ - என்று சான்றுகளோடு எழுதியவர் க.நெடுஞ்செழியன் அவர்கள். இதற்காகவே தமிழினம் ஐயா அவர்களுக்குக் கடமைப்பட்டு உள்ளது.

தமிழின் பெயரால் தமிழை அழித்துப் பிழைப்பவர்கள் மத்தியில், தமிழுக்காக வாழ்ந்து மறைந்திருக்கிறார் க.நெடுஞ்செழியன் அவர்கள். நினைவை ஏந்துவோம்!.

கனத்த மனதுடன்,

- இரா.மன்னர் மன்னன்.

வெள்ளி, 4 நவம்பர், 2022

அறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வுகளில் கலகக் குணமும் மாற்றுச் சிந்தனை மரபும் : பேரா டி.தருமராஜ்


பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அரிதானவர். அதனால், தமிழகத்தில் அறியப்படாதவர். அறிந்திருந்தவர்களும் நெடுஞ்செழியனை நமட்டுச் சிரிப்புடனே கடந்து போனார்கள்.  

இந்த நமட்டலுக்கு நம்மிடம் வரலாறு உண்டு. பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று பலரின் மீதும் செலுத்தப்பட்ட அசட்டு நமட்டல் இது.  

நெஞ்செழியன், திராவிட சித்தாந்தத்தில் பயின்று வந்தவர். அதன் பிரதானக் காரணிகளாக கடவுள் மறுப்பையும், சாதி எதிர்ப்பையும், தமிழ்ப் பற்றையும் அவர் உருவகித்திருந்தார். இது ஒரு வகையில், திராவிடப் பாரம்பரியத்திலிருந்து கிளைத்து வந்த மாற்று மரபு என்று கூட சொல்ல முடியும்.  

சைவ, வைணவ மதக் கட்டுமானங்களை கட்டுடைப்பது என்று மட்டுமல்லாமல், அதன் மாற்று வடிவங்களை யோசித்ததே நெடுஞ்செழியனின் ஆகப்பெரிய பங்களிப்பு. இத்தகைய மாற்று வடிவ யோசனைகள் இந்தியா முழுமைக்கும் பொதுவானவை என்பது நமக்குத் தெரியும். இந்த மாற்று யோசனைகள் மொத்தமும் பெளத்ததில் சென்று கலந்து விடுகிற காலத்தில், அதிலிருந்து விலகி ஆசீவகத்தை நோக்கி நகர்ந்தது எனக்கு அவர் மீது பெரும் மதிப்பையும் ஆச்சரியத்தையும் அளித்திருந்தது.

இதனால் அவர் மாற்று யோசனைகளின் மாற்றாகவும் விளங்கியிருந்தார். பெருஞ்சமயங்களுக்கு எதிரான இந்திய மாற்று - ‘பெளத்தம்’, என்ற நீரோடையிலிருந்து நெடுஞ்செழியன் விலகியதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன என்று நான் நினைக்கிறேன். ஒன்று, பூரண தமிழ்ச் சிந்தனை மரபொன்றை (பெளத்தமும் சமணமும் வேற்றுமொழிச் சிந்தனை மரபுகள்) வரலாற்றிலிருந்து வடிவமைக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்; இரண்டு, அது என்றென்றைக்கும் அதிகாரத்திலிருந்து விலகி இருந்திருக்க வேண்டும் என்றும் நம்பினார்.  

அந்த வகையில் ஆசீவகம், எல்லா வகையான மேலாதிக்கத்திலிருந்தும் விலகியே இருந்திருக்கிறது. வரலாற்றில் அதை எந்த அரசும் ஆதரித்ததற்கான சான்றுகள் இல்லை; அரசு மட்டுமல்ல, வெகுஜனத் தளத்திலிருந்தும் கூட ஆசீவகச் சிந்தனையாளர்கள் விலகியே நின்ற சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. பெருஞ்சமயங்களின் சாகரமாக விளங்கும் இந்தியச் சிந்தனை நீரோட்டத்தில் ஆசீவகத்திற்கான மரியாதை, கேலிக்கும் கண்டனத்திற்கும் அவதூறுகளுக்குமானது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், நேரடியான ஆசீவகப் பிரதிகள் எவையும் நமக்குக் கிடைப்பதில்லை. ஆசீவகத்திற்கு எதிராக எழுதப்பட்ட கண்டனங்களிலிருந்தும், வசைகளிலிருந்துமே நாம் அதனை ஒருவாறு யூகித்துக் கொள்கிறோம். இந்திய சிந்தனை மரபில் ஆசீவகத்திற்கு வழங்கப்படும் இடமும் அந்தஸ்தும், நவீன இந்தியாவில் தமிழகத்திற்கு வழங்கப்படும் இடத்தையும் அந்தஸ்தையும் ஒத்தது என்ற யோசனை நெடுஞ்செழியனின் பிரதியெங்கும் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.  

இச்சூழலில், ஆசீவக ஆய்வுகளில் நெடுஞ்செழியன் முன்வைக்கும் கருதுகோள்கள் மரபை மீறிய, சாகச குணம் கொண்டவை. உதாரணத்திற்கு, அவர் இந்தியா முழுமைக்கும் கிடைக்கப்பெறாத ஆசீவக நேரடிப் பிரதிகளை தமிழ் சங்க இலக்கியப் பாடல்களில் கண்டறியத் தொடங்குகிறார். ஏராளமான புறநானூற்றுப் பாடல்களுக்கு அவர் அளிக்கும் விளக்கங்கள் அவற்றை ஆசீவகச் சிந்தனைப் போக்கில் வாசிக்கத் தூண்டுகின்றன. உதாரணத்திற்கு, பகுத காச்சாயனர் என்ற ஆசீவகச் சிந்தனையாளரை புறநானூற்றுப் பாடலாசிரியர் பஃகுடுக்கை நன்கணியாராக அவர் சித்தரிக்கத் தொடங்குவது புதிய வெளிச்சத்தை அளிக்கக்கூடியது. அதன் தொடர்ச்சியாக, மற்கலி கோசரையும் புஷ்கரையும் பூரணரையும் மருகால்தலையில் வீற்றிருக்கும் அய்யனார் - பூர்ணா - புஷ்கலா தம்பதிகளிடம் கொண்டு வந்து நிறுத்தும் இடம் நம்மைச் சலனப்படுத்துவது.  

அந்த வகையில், இந்தியச் சிந்தனை மரபின் ஒடுக்கப்பட்ட அதே நேரம் கலகக் குணம் கொண்ட சிந்தனை மரபாக தமிழை யோசிக்கும் வகையில் அவர் ஆசீவகத்தைக் கையாண்டார் என்பதே உண்மை. அவருக்கு என் பூரண மரியாதையும், அஞ்சலியும்.

செவ்வாய், 1 நவம்பர், 2022

தமிழ் மகனின் படைவீடு: தமிழர் ஆட்சி வீழ்த்தப்பட்ட வரலாறு பேசும் நூல் :- அ.ம.அங்கவை யாழிசை



கி.பி14ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் தமிழகத்தின் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த ஒரே தமிழ்ப் பேரரசு, சம்புவராயர்களின் படை வீடு அரசாகும். தமிழகத்தின் மாபெரும் பேரரசுகளான சேர, சோழ, பாண்டிய அரசுகள் வீழ்த்தப்பட்ட பிறகு எஞ்சியிருந்த ஒரே தமிழ்ப் பேரரசும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது. 

இந்தச் சிறப்புமிக்க சம்புவராயப் பேரரசின் தோற்றம், அதன் வளர்ச்சி, தமிழ் மண்ணை அந்நியப் படையெடுப்பிலிருந்து காப்பாற்றுவதற்காகப் பொறுப்புடன் போராடியதன் பின்புலம், அந்தப் பொறுப்புணர்வை அவர்கள் எப்படிச் சிறப்புறச் செய்தார்கள், அந்நியப் படையெடுப்பாளர்களால் அவர்கள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதைப் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை விரிவாகப் பேசியிருக்கும் புதினம்தான் தமிழ் மகன் எழுதிய 'படைவீடு' நூலாகும்.

சம்புவராயப் பேரரசு வீழ்த்தப்பட்ட பிறகு, சாதிப் பிரிவினையின் விபரீத விளைவுகள், தமிழ் மண்ணில் அரங்கேறிய அயலவர் பண்பாட்டுத் திணிப்பு, தமிழ்ப் பண்பாட்டுத் திரிபு, தமிழ்ப் பண்பாட்டு அழிப்பு பற்றிய நிறைய தரவுகள் இந்நூலில் உள்ளன. மேலும், தமிழ் மண்ணில் - தமிழர் ஆட்சியில் தமிழ் தழைத்திருந்த பொற்காலத்தைப் பற்றி விவரிக்கும் ஆகச் சிறந்த படைப்பாகப் படைவீடு உருவாகி இருக்கிறது.

தொண்டை மண்டலத்தில் தமிழ்ப் பேரரசு ஆட்சி புரிந்து வந்த வீர சம்புவராயரின் மகன் ஏகாம்பரநாதன். தந்தைக்குப் பிறகு ஆட்சி செய்த ஏகாம்பரநாதன், தனது ஆட்சிக் காலத்தில் காஞ்சியை மீட்டு வென்று மண் கொண்டார் என்ற பட்டம் பெற்றவர். அவரது ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் மண்ணின் மீது தெலுங்கின விஜயநகரப் பேரரசின் முதல் படையெடுப்புத் தாக்குதல் புக்கர் தலைமையில் நடந்தது. ஆனால், தொண்டை மண்டல எல்லையைக் கூட அவர்களால் நெருங்க இயலாமல் திரும்பி விட்டனர். 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புக்கரின் மகனான குமாரகம்பணன் ஒரு லட்சம் வீரர்களுடன் தமிழ் மண்ணின் மீது படையெடுத்து வருகிறான். விரிஞ்சிபுரத்தையும் காஞ்சியையும் ஒரே சமயத்தில் தாக்கி, காஞ்சியைக் கைப்பற்றி, பிறகு அங்குள்ள பிராமணர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு படைவீடு மீது தாக்கினான். அப்போது சம்புவராயப் பேரரசின் ஆட்சியாளராக இருந்தவர் ஏகாம்பரநாதனின் மூத்த மகனான மல்லிநாதர் ராசநாராயணர் ஆவார். விஜயநகரப் பேரரசின் அந்தப் படையெடுப்பை ஓர் அன்னியப் படையெடுப்பாகவே அவர் கருதினார். அதற்குக் காரணம் மொழி மட்டுமல்லாது, அவர்களது சமயநெறிகளும் மிக முக்கிய காரணமாக இருந்தது. அதாவது, விஜயநகரப் பேரரசின் சமயநெறிகள் தமிழ் மரபிற்கு விரோதமாக இருப்பதைச் சம்புவராயர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர்.

சம்புவராயத் தமிழ் மன்னர் மல்லிநாதர், விஜயநகரப் படைகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்திற்கு முதல்நாளில் தமது படை வீரர்களுக்கு ஒரு கட்டளை இடுகிறார். அதன்படி, போரில் வீழ்ந்து போகும் தருணம் வருமாயின், எதிரியின் கைகளில் ஒருபோதும் சிக்கக் கூடாது என்றும், அவர்களிடம் சிக்கி அவமானப்படுத்தப்படும் நிலை நம் வீரர்களுக்கு வரக்கூடாது என்றும், ஆகையால், அவர்களைப் பள்ளத்தாக்கில் பாய்ந்து வீர மரணம் எய்தக் கட்டளை இடுவார். அதோடு, தானும் படை வீரர்களுடன் சேர்ந்து பள்ளத்தாக்கில் பாய்ந்து மறைந்து விடுவார். தமிழ் மண்ணை ஆண்ட கடைசித் தமிழ்ப் பேரரசு மறைந்ததாகப் படைவீடு முடிகிறது.

இப்புதினத்தில் குறிப்பிடப்படும் காலகட்டத்தில் போர்க் குடிகளான சம்புவராயர்கள் போரை விரும்பாதவர்கள். ஏனெனில், மக்களின் அமைதியைக் காக்க விரும்பியவர்கள். அந்த நூற்றாண்டில் நடந்தது மூன்றே போர்கள். காஞ்சியை மீட்டது, முதல் தெலுங்குப் படையெடுப்பில் புக்கரை விரட்டி அடித்தது, பிறகு அவருடைய மகனிடம் தமிழ் மண்ணை இழந்தது. இப்படியாகத் தமிழ் மண்ணில் நிறுவப்பட்ட தெலுங்கு ஆட்சி, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆட்சிக்கு வழிகோலியிருக்கிறது.

தெலுங்கு ஆட்சி, அதாவது விஜயநகரப் பேரரசு ஆட்சி தமிழ்மண்ணில் நிலைபெற்றதற்கு ஒரு முக்கியப் பங்கு வைப்பது 'சாதிக்கொரு புராணம்' என்னும் கோட்பாடு ஆகும். இது சாதி அல்லது மதத்திற்குள்ளும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது. காஞ்சியைக் கைப்பற்றிய விஜயநகர அரசர்களுக்கு அங்குள்ள பிராமணர்கள் போதித்த கோட்பாடு இது. இந்தக் கோட்பாடுதான் சாதியை மட்டுமல்லாது, சாதி ஏற்றத்தாழ்வையும் நிலைபெறச் செய்ததும், இன்னும் செய்து கொண்டிருப்பதற்குமான பின்புலமாகும்.

இப்படைப்பை உள்வாங்கும் வாய்ப்பு, பெரும் பேறு என்றுதான் கருத வேண்டும். ஏனெனில், கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற சம்புவராயர்கள், படைவீட்டில் இவ்வளவு பெரிய வரலாற்றுப் பின்புலத்தோடும் அறிமுகத்தோடும் என் மனக்கண் முன் வருவார்கள் என்று எண்ணியதில்லை. இந்தப் படைப்பை முழுமையாக வாசித்த போதுதான் சம்புவராயர்கள் பற்றிய முழுமையான படைப்பாக வியக்க வைத்தது. 

சம்புவராயர்கள் மாபெரும் பேரரசாக உருவெடுத்திருந்தது பெருமையாக இருந்தது. அதேசமயம், அவர்கள்தான் எம் தமிழ் மண்ணின் கடைசித் தமிழ் ஆட்சியாளர்கள் - அரசர்கள் என்பதறியும்போது மனது இறுக்கமாகிப் போனது.

தமிழக மன்னராட்சி வரலாற்றில் இதுவரை அறியப்படாத - மறைக்கப்பட்ட - மறுக்கப்பட்ட தரவுகள் இந்தப் புதினம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ஆட்சியாளர்களின் வாழ்வியல் மட்டுமல்லாது, மக்களின் வாழ்வியலையும் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பு இந்நூலில் நிறையவே கிடைத்தது.

சம்புவராயர்கள், தங்கள் ஆட்சியின் இறுதிவரை தமிழையும், தமிழர் பண்பாட்டையும், தமிழர் நெறிகளையும் காப்பதற்காகப் பெரும்பாடுபட்டுள்ளனர். அதுவும் பெரும் போராட்டம்தான். அது, இக்காலத் தமிழ்த் தேசியக் கொள்கை அரசியலை நினைவூட்டுகிறது. 

சாதிப் பிரிவுகளையும், சாதி வன்மங்களையும் இப்போது பிறந்த சிக்கல் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், இதுதான் தமிழர் ஆட்சியை - தமிழரை - தமிழை வீழ்த்த வல்லதாக இருந்திருக்கிறது. பிராமணர்கள் வகுத்த அந்தச் சாதி ஏற்றத்தாழ்வுக் கோட்பாடு எவ்வளவு பயங்கரமானது என்பதற்கு முழு சாட்சியாக இருக்கிறது இந்தப் படைப்பு. பிற்காலத்தில், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கைக்கும் இதுவே அடிப்படையாக இருந்திருக்கும் அல்லது இதே பிராமணர்கள்தான் அதைப் பரிந்துரை செய்திருப்பார்கள் என்ற எண்ணத்தை மறுக்க முடியவில்லை.

தமிழ் மண்ணில் விஜயநகர ஆட்சி அமைத்தால், கன்னிகாதானம் செய்யும் முறையைக் கட்டாயமாக்குவேன் எனப் பிராமணர்களிடம் சபதம் செய்கிறான் தெலுங்கு மன்னன். வரதட்சணை எனும் பெண்ணடிமைத்தனமும் இந்த ஆட்சியில்தான் தொடங்கியிருக்கிறது. 

கன்னியாதானம் என்பது, பெண் வீட்டார் செல்வத்தை ஆண் வீட்டாருக்குக் கொடுத்துத் திருமணம் செய்வது ஆகும். இது தமிழர் முறை அன்று. தமிழர்கள் முறைப்படி, ஆண் வீட்டார் தான் பெண்ணுக்குச் செல்வம் கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை இந்நூல் வழியேதான் அறிந்துகொண்டேன்.

'தமிழர்கள் வீழ்ந்தார்கள், வீரம் குறைந்ததால் அல்ல; துரோகம் நிறைந்ததால்' என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியது இந்நூல். 

"எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. தோல்வி ஒரு சம்புவராயனுக்கு அல்ல… தமிழ் மண்ணுக்கு என்பதை நினைவில் வையுங்கள்! தமிழ் மண்ணின் கடைசிச் தமிழரசாக நம்முடைய ஆட்சியே இருந்தது என்பதை உணரும்போது வருந்தப்போகும் தமிழர்களை எண்ணியே வருந்துகிறேன்…" இவை, கடைசித் தமிழ் மன்னனாக வரும் மல்லிநாத ராசநாராயணனார் பேசியதாக வரும் வரிகளாகும்.

இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயத்தைப் படிக்க மட்டும் எனக்கு ஒரு நாள் முழுவதும் தேவைப்பட்டது. அந்தளவுக்குப் பதைபதைப்பை அது தந்தது. அவர்கள் வெல்லவில்லை, தமிழர்கள் தோற்றுப் போவார்கள் என்று தெரிந்தும் மனம் அதை ஏற்கவில்லை. சேரர் ஆயினும், சோழராயினும், பாண்டியராயினும் சம்புவராயர் ஆயினும், இறுதியில் தோற்றது யார்? எனும்பொழுது, தமிழர்கள்தான் எனும்போது மனக்கவலை மறைய மறுக்கின்றது. அது, சம்புவராயர்களின் வீழ்ச்சி மட்டுமல்ல, தமிழர் பண்பாட்டின் பெரும் வீழ்ச்சியும் ஆகும்.

இப்புதினத்தில் காட்சிப்படுத்தப்படும் அரசியலுக்கும், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கும், காலத்தைத் தவிர வேறு ஒன்றும் வேறுபடவில்லை. அதே நிலைதான் இப்போதும். அது, தமிழை எப்பாடுபட்டாவது காக்க வேண்டிய நிலை.

படைவீடு புதினத்தின் மூலம் தமிழுக்குப் பெரும் பண்பாட்டுத் தரவு கிடைத்துள்ளதாக எண்ணுகிறேன். வேறு எவரும் செய்யாத பெரும் தொண்டை இப்புதினத்தின் ஆசிரியர் மேற்கொண்டுள்ளார். 

தமிழர் வரலாற்றில் கடைசித் தமிழராட்சியின் தோல்வியான பக்கங்கள் மிகுந்த வலியைத் தந்திருக்கிறது; கவலை அளிக்கிறது என்றாலும், அக்காலக் கட்டத்தை இருட்டிலிருந்து மீட்டுத்தந்த ஆசிரியர் தமிழ் மகன் அவர்களுக்கு எனது மரியாதைக்குரிய நன்றி. 

அ.ம.அங்கவை யாழிசை

01.11.2022



செவ்வாய், 13 செப்டம்பர், 2022

மனதை ஆற்றுப்படுத்தும் கையறுநதி : அங்கவை யாழிசை





வறீதையா அய்யா எழுதிய கையறுநதி எனும் இப்புத்தகத்தைக் கடந்த வாரம் என் தந்தையிடம் இருந்து படிப்பதற்காகப் பெற்றேன். இப்புத்தகம் எதைப் பற்றியது என்பதை, தந்தையிடம் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தேன். 

இப்புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய போது, மனப்பிறழ்வுக்கு உள்ளான ஒருவரைக் கவனித்துக் கொள்பவரின் வாழ்க்கைக் கதை என்ற சித்திரத்தையே வைத்திருந்தேன். ஆனால், படிக்கப் படிக்க என்னுடைய அந்தச் சித்திரம் பிறழ்வுக்குள்ளானது. அப்புத்தகம் மேற்கூறியவர்களைப் பற்றிய புத்தகமாக அல்லாமல், இந்தச் சமூகத்திற்கு அடிப்படைத் தேவையாக உள்ள படைப்பாகவே தோன்றியது. இச்சமூகம், மனப்பி பிறழ்வுக்கு உள்ளானவர்களைப் பார்க்கும் பலதரப்பட்ட பார்வைகளை இந்நூல் உணர்த்தியபோது மனம் கனத்துப்போனது.

மனப்பிறழ்வு என்றால் என்ன என்பதை இப்புத்தகத்தை வாசித்து முடிக்கும் வரை விளங்கிக் கொள்ளாமல்தான் இருந்தேன். நான் படித்த பள்ளியில் என்னோடு சகமாணவி இருந்தாள். அவளும் மனரீதியாகவோ அல்லது மூளை வளர்ச்சியிலோ பாதிப்பு உள்ள ஒருவள்தான். இரண்டு ஆண்டுகள் என் வகுப்பில் படித்தாள். அப்பொழுதெல்லாம் அவளுடைய அனைத்துப் பள்ளி வேலையிலும் உதவி செய்து வந்தேன். அவளைப் பற்றிய பரிதாபம், கவலை எல்லாம் இருந்தது. 


நான் நினைப்பேன், இந்த வயதில் கூட எதைப்பற்றியும் கவலைப்படாமல் குழந்தையைப்போல் இருப்பது வரமல்லவா? நான் அதற்குக் கொடுத்துவைக்கவிலலையே எனப் பொறாமைப்படுவதுண்டு. ஆனால், அவள் மற்றவரிடம் உள்ளதை நினைத்து எத்தனை நாள் பொறாமைப்பட்டிருப்பாள்; கவலைப்பட்டிருப்பாளோ நான் அறியவில்லை. கண்களுக்கு அகப்படாதவாறு இந்தச் சமூகம் அவர்களைப் புறக்கணிக்கிறதா? மறைக்கப்படுகிறார்களா? இல்லை மறைந்து கொள்ள விருப்புகிறார்களா?


இவ்வுலகில் உள்ள பெருவாரியானவற்றைப் பற்றிய படிப்பினை எனக்குண்டு என்று நினைத்துக்கொண்டிருந்தவள் நான். ஆனால் நான் வாழும் அதே சமூகத்தில் என்னோடு வாழும் ஒரு பகுதியினரைப் பற்றி அறியாமலிருந்தது வெட்கித் தலைகுனிய வைத்தது. 


இப்புத்தகம், என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய சில புத்தகங்களுள் ஒன்று. இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கையில் நான் ஒரு உளவியல் ஆற்றுப்படுத்துதல் அமர்வில் இருந்து வெளியில் வந்தது போல இருந்தது. ஏனோ தெரியவில்லை அந்த அமர்வு எனக்கு மிக அவசியமாகவும் இருந்தது.


இப்புத்தகம் பேசும் மொழியின் நடை மிக அருமையாகவும் பொருத்தமாகவும் இருந்தது. வறீதையா அய்யா அவர்களின் பேச்சு, அவர் என்னுடன் தொலைபேசியில் பேசும்போதும் அருமையாக இருந்தது.


வாழ்க்கை என்னும் தண்டவாளம் எவ்வளவு மோசமாகப் பிறழ்வுண்டாலும், அதன் மீது பயணித்தாக வேண்டும். எங்கு அழைத்துச் செல்கிறதோ, எதைக் காண்பிக்கிறதோ, அதை எப்படி நாம் காண்கிறோமோ, எப்படிப் புரிந்துகொள்கிறோமோ, பார்த்துக் களித்துச் செல்லவேண்டியது தான். எப்படியானாலும் பயணித்தே ஆக வேண்டும்.


உளவியல் சம்பந்தமான புரிதல், அதில் மாற்றம் உள்ளவர்கன் இன்னல், அவர்களைப் பராமரிப்பவரின் உளவியல், அவர்களைப் பற்றி இச்சமூகத்தின் புரிதல் எனப் பல வாயிலாக இப்புத்தகம் பேசியிருக்கிறது.


நல்ல நல்ல அனுபவங்களை இந்நூலில் கற்றுக்கொண்டேன். வறீதையா அய்யா அவர்களுக்கு நன்றி.


அ.ம.அங்கவை யாழிசை

13.09.2022

புதன், 27 ஏப்ரல், 2022

நம்மாழ்வாரும் சித்த மருத்துவமும்: கதிர்நம்பி



இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், சித்த மருத்துவம் குறித்துப் பேசவில்லையா ? சித்த மருத்துவத்தை முன்னெடுக்கவில்லையா ?

*

தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை/சூழலியல் செயல்பாடுகள் அரும்பிய காலத்தில் இருந்து செயல்பட்டு வந்தவர் நம்மாழ்வார். புழுதியில் உழல்கின்ற உழவர்களை ஒரு படி மேல் ஏற்றுவது தன் வாழ்நாள் இலட்சியம் என்று ஓடித் திரிந்தவர். 

வேளாண்மையை முழுமையாகக் (wholistic approach) காண வேண்டும் என்பார். மொத்தம் /எண்ணிக்கை (Total/count) என்பதை விட முழுமை (wholesome) என்பதனைக் கணக்கிட வேண்டும் என்பார். அந்த முழுமை என்பதற்குள் நுண்ணுயிர் முதல் பேருயிர் வரை அடங்குகிறது.  

உழவர்கள் கடனில்லாத வாழ்வு வாழ வேண்டும். நுகர்வோர் நஞ்சில்லாத உணவு உண்ண வேண்டும். மாசில்லா சூழல் அமைய வேண்டும். இவை அனைத்தும் இந்த முழுமைக்குள் அடக்கமாகும். இவ்வாறு முழுமையாக நோக்குகின்ற பார்வை பெற்றதனாலேயே உழவு, உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த சிந்தனையை மக்களிடம் எடுத்துச் சென்றார். 

"சுவரில்லா கல்வி, மருந்தில்லா வாழ்வு, நஞ்சில்லா உணவு" - இது தான் அவருடைய பிரச்சார முழக்கங்கள். மரபு வழி மருத்துவர் ஈரோடு வெள்ளிமலை அவர்களின் பணிகளை மக்களிடம் பேசியிருக்கிறார். திருக்குறள் கூறும் உடலியல் நெறிமுறைகளைப் பேசியிருக்கிறார். உடல் இயங்கியலை எளிய மக்கள் மொழியில் மேடைகளில் பேசியிருக்கிறார். நவீன மருத்துவத்தில் விரவி இருக்கும் வணிகத்தைச் சாடியிருக்கிறார். நவீன மருத்துவரான கொடுமுடி நடராசன் சித்த மருத்துவத்தில் பயன்படுத்திய "பஞ்ச கவிய"த்தைப் பயிர்களுக்குத் தெளிக்கின்ற போது நல்ல விளைச்சல் கிடைப்பதைக் கண்டறிந்தார். இது நம்மாழ்வாருக்குத் தெரியவர அது முதல் பஞ்ச கவியம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார். பஞ்ச கவியத்தை மக்களிடம் எடுத்துச் சொன்னதற்காகவே அண்மைக் காலத்தில் இணைய உலகில் திராவிட முற்போக்காளர்களால்(!) கேலி செய்யப்பட்டார். 

சித்த மருத்துவர் கு.சிவராமன் மரபு வழி அரிசிகளின் அருமையைப் பேசுவது நம்மாழ்வார் அவர்களினுடைய தாக்கத்தில் எனச் சொன்னால் மிகையாகாது.

நம்மாழ்வார் சித்த மருத்துவத்தை முன்னெடுத்ததை விட, இயற்கை வழி மருத்துவ முறைகளையே அதிகம் பேசினார். உண்மை தான். 

"ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, களக்காடு 'அமைதித் தீவில்' பணிபுரிந்த நேரம். இரண்டு பெரிய மனிதர்களை எதிர்கொண்டேன். அவர்கள் இயற்கை வாழ்வியலின் எல்லையைத் தொட்டவர்கள். ஒருவர் புலவர் இராமகிருட்டினன்; மற்றவர் அவரது குரு பாண்டுரங்கன்.

அன்றைக்கே இயற்கை மருத்துவம் என்ற தத்துவம் என் தலையில் விதிக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு மருத்துவர் வெள்ளிமலையைச் சந்தித்தபோது இயற்கை மருத்துவம் தலையில் வேரூன்றியது" என்று இயற்கை மருத்துவத்திற்குள் தான் வந்த பாதையைக் கூறுகிறார்.

மேலும், அவருடன் இருந்தவர்கள் மூலமும் அல்லது அவருக்குக் கிடைத்த அனுபவங்களில் இருந்தும் அது வெளிப்பட்டது. அதற்காக அவர் சித்த மருத்துவத்தை இன்றைக்கு முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களைப் போல கேலியோ/எள்ளலோ செய்யவில்லை. 

இந்த நிலத்தின் மீது அமையப்பெற்ற எது ஒன்றையும் ஊதாசீனப்படுத்தியவர் அல்ல நம்மாழ்வார். அவரின் சிந்தனை தற்சார்பானது. தற்சார்பே அவர் சிந்தனை வடிவம். உலகமயமாக்கலுக்கு எதிராக உள்ளூர்மயமாக்கலை முன்னிறுத்தினார். பண்பாட்டு விழுமியங்களில் அறிஞர் தொ.ப உலகமயமாக்கலை எதிர்த்து போல.

நம்மாழ்வார் தொண்டு நிறுவனங்களில் வேலை செய்தார். மறுப்பில்லை. ஆனால், சாகின்ற பொழுது ஓலைக் குடிசையில் தான் கிடந்தார். மீத்தேன் எரிவாயுப் போராட்டங்களில் தன் உடலை வருத்திக் கொண்டுதான் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 

பாமயன் ஐயா சொல்வதைப் போல, நம்மாழ்வார் ஓர் இயக்கம் கட்டி இருக்க வேண்டும். ஆனால், நம்மாழ்வார் எல்லா இயக்கப் போக்குகளோடும் இணைந்து வேலை செய்தார். ஓரிடத்தில் கூட அவர் நீர்த்துப் போகவில்லை. அவர் தனித்துவம் இழந்து நின்றுவிடவில்லை என்றே சொல்லலாம். 

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நம்மாழ்வார் முன்னெடுத்த இயற்கை வழி வேளாண்மை/ வாழ்வியலில் இருக்கும் ஏராளமானோர் சித்த மருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள். அதன் வளர்ச்சியிலும் விருப்பமாக இருக்கிறார்கள். மக்கள் நலன் விரும்பும் எந்த ஒரு சித்த மருத்துவருக்கும், பரம்பரைப் பண்டிதருக்கும் நம்மாழ்வாரின் இதயத்தில் இடம் உண்டு.

இன்னும் சொல்லப் போனால், நம்மாழ்வாரின் விருப்பத்தை இவர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். இயங்களும் இசங்களும் அதற்கு ஒரு போதும் தடையாக இருக்காது.

சமூகப் பண்பாட்டு ஆய்வாளர் கதிர்நம்பி அவர்களது கட்டுரையிலிருந்து...

*

இயற்கை வேளாண்மை என்பது, நிலத்தையும், நிலத்துவாழ் உயிரினங்களையும், உயிரினங்களுக்குத் தேவையான உணவையும் நஞ்சாக்குவதிலிருந்து மீட்டெடுத்துக் காக்கும் மருத்துவமுறைதான். 

சித்த மருத்துவம் காக்கப்படுவதும் இயற்கை வேளாண் அறங்களுள் ஒன்று. இயற்கை வேளாண்மையை முன்னிறுத்திய நம்மாழ்வாரே சித்த மருத்துவத்தையும் முன்னிறுத்திச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பது, மற்றவர்களின் எதிர்பார்ப்பாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், குற்றச்சாட்டாக முன்வைக்கக் கூடாது. அவரால் எதைச் செய்ய முடிந்ததோ அதைச் செய்திருக்கிறார். அதைச் செய்தவர் இதை ஏன் செய்யவில்லை என்று கேட்பதும் பகடி செய்வதும் அறமும் அல்ல; அறிவுப்பூர்வமானதும் அல்ல.

ஏர் மகாராசன் 

27.04.2022

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

கறுப்பு : அறிஞர் தொ.பரமசிவன்

இயற்கை பல்வேறு நிறங்களை உடையது. இயற்கையின் நிறங்களில் மனிதன் சுவை, அழகு, பயன் ஆகியவற்றைக் கண்டான். எனவே அவன் படைத்த செயற்கைப் பொருள்கள் பல நிறங்களில் அமைந்தன. இக்காலத்தில் நிறத்தையும் குறிக்கும் ‘வண்ணம்' என்ற சொல் அக்காலத்தில் அழகு, இசை, ஒழுங்கு ஆகிய பொருள்களை மட்டுமே தந்தது.

எல்லா இயற்கைப் பொருள்களிலும் நிறவேறுபாடு இருப்பது போல, மனித உடம்பிலும் அதாவது, தோலிலும் நிற வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகள் இன்றைய உலகில் வறுமைக்கு அல்லது வளமைக்கு, உயர்வுக்கு அல்லது தாழ்வுக்கு, அதிகாரத்திற்கு அல்லது அடிமைத்தனத்திற்கு, ஒடுக்குமுறைக்கு அல்லது அதற்கு எதிரான போராட்டத்திற்கு உரிய குறியீடுகளாக மாற்றப்பட்டு விட்டன. 

இட ஒதுக்கீட்டுக்கெதிராக ஒரு கருத்தைச் சொல்லும் திரைப் படத்தில் கறுத்த நிறமுடையவன் கல்லூரிக்குச் செல்லுகிறான். சிவந்த நிறமுடையவன் இடங்கிடைக்காமல் வெளியே நிற்கிறான். கருத்தைச் சொல்லுவதற்கு இங்கே தோலின் நிறம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கறுப்பு, சிவப்பு ஆகிய இரண்டு நிறங்கள் கீழ்ச் சாதிக்காரன், மேல்சாதிக்காரன் என்பதைக் குறியீடுகளாகச் சுட்டி நிற்கின்றன. சமூக முரண்பாடுகள் மனிதனின் தோலின் நிறத்தைக் கொண்டு வெளிப் படுகின்ற வழக்கம் எவ்வாறு உருவானது? மனிதத்தோலின் நிறத்தையும், அழகையும் இணைக்கும் கோட்பாடுகள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை விளக்க முயலுவோம்.

இன்றைய சமூக நிகழ்வுகளிலும் அசைவுகளிலும் கறுப்பு நிறம் கீழ்ச்சாதிக்காரன், வறுமைப்பட்டவன், கல்வியறிவு இல்லாதவன் அல்லது நாகரிகமறியாதவன், அழகற்றவன் என்ற பொருள்களிலேயே ஆளப்படுகிறது. திருமணச் சந்தையில் பணம் என்பதைப் போலவே, அதற்குக் குறையாத அழுத்தத்துடன் பெண்ணின் நிறமும் தீர்மானிக்கிற சக்தியாக விளங்குகிறது. அதாவது சாதாரண மனிதனின் அழகுணர்ச்சியைப் பொறுத்தமட்டில், கறுப்பு என்பது அழகற்ற நிறம் என்று அனைத்து மனிதர்களும் கருதுகிறார்கள். அழகுணர்ச்சியில் இந்தப் பாகுபாடு புகுந்த முறை ஆய்வுக்குரிய ஒன்றாகும்.

ஒரு சமூகத்தின் வாழ்க்கை நெறிகளை வரலாற்றுப் போக்கில் அளவிட்டு அறிய உதவும் சான்றுகளில் இலக்கியம் முதன்மையானது. தமிழ்ச் சமூகம் மிக நீண்ட இலக்கிய மரபினை உடையதாக இருக்கிறது. எனவே மனிதத் தோலின் நிறமும் அழகுணர்ச்சியும் பற்றிய மதிப்பீடுகளை அறிய இலக்கியச் சான்றுகளைக் காண்போம். 

நிறங்கள் மனித உணர்வுகளைப் புலப்படுத்தும் என்னும் செய்தி தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. ஆனால் இரண்டு நிறங்களைப் பற்றியே தொல்காப்பியர் பேசுகிறார்.

கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள

நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப.

கறுப்பு, சிவப்பு என்பன சினத்தை உணர்த்தும் சொற்களாகவும் வரும் என்பது தொல்காப்பிய இலக்கணமாகும். இந்த இலக்கணம் பிற்கால இலக்கியங்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

கறுத்தின்னா செய்த அக்கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்

என்ற திருக்குறளில் 'கறுத்து' என்ற சொல் ‘சினந்து' என்ற பொருளைத் தருகிறது.

செருநரை நோக்கிய கண்தன்

சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவேன்

என்ற ஔவையாரின் புறப்பாடலில் சிவப்பு என்ற சொல் வெகுளி என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஆயினும் இந்தச் சொற்கள் தோலின் நிறம் பற்றிப் பேச வரவில்லை.

சங்க இலக்கியங்களிலும் அதற்குப்பின் வந்த நீதி இலக்கியங்களிலும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் ஆண், பெண் இருவரின் உடல் சார்ந்த வருணனைகள் ஏராளமாக இடம் பெறுகின்றன. ஆனால் அவையனைத்தும் மனித உறுப்புகளின் அளவும், வடிவும் சார்ந்தாகவே அமைந்துள்ளன. இந்த வருணனைகளும் அளவு மட்டுமன்றி உறுப்புக்களின் பயன் கருதியதாகவும் அமைந்துள்ளன. பெருத்த முலை என்பது வளமை அல்லது தாய்மையின் குறியீடாகவும் வீரரின் பெருத்த தோள் என்பது வலிமையின் சின்னமாகவும், பாதுகாப்பின் சின்னமாகவும் அமைந்துள்ளன. உயர்வு, தாழ்வு என்ற கருத்தோட்டங்கள் இந்த வருணனைகளில் காணப்படவில்லை. மாறாக, அழகு என்பது உடல் நலம் சார்ந்ததாகவே பேசப்பட்டிருக்கிறது. இவ்வருணனைகளில் ஓரிடம் தவிர ஏனைய இடங்களில் மனிதத் தோலின் நிறம் பேசப்படவே இல்லை. காதலன் அல்லது கணவனைப் பிரிந்த பெண்ணின் உடலில் பொன் நிறத்தில் பசலை பூக்கும், என்னும் ஓரிடத்தில் மட்டுமே "மனிதத் தோலின் நிறம்" பேசப்படுகிறது.

இவை ஒருபுறமாக, மற்றொரு புறத்தில் தெய்வங்களைப் பேசும் இடத்தில் அவற்றின் நிறங்கள் பேசப்படுகின்றன. மாயோன் மலை போன்று நீலநிறத்தில் இருக்கிறான்; பலராமன் (வாலியோன்) அருவி போல வெள்ளை நிறத்தில் இருக்கிறான் என்று ஒரு சங்கப் பாடல் கூறும். திருமாலுக்கும், பலராமனுக்கும் நிறம் சொல்லப் பட்டாலும், முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு நிறம் சொல்லப்படவில்லை. சிவபெருமானின் கழுத்து நஞ்சுண்ட காரணத்தால் கருமையும், நீலமும் கலந்த வண்ணத்தில் அமைந்திருப்பதாக மற்றொரு பாட்டு கூறும்.

பக்தி இலக்கியக் காலந்தொட்டுத் தெய்வங்களுக்கும், மனிதர்களுக்கும் பல்வேறு நிறங்கள் பேசப்படுகின்றன. கடவுள் எல்லாமாக இருக்கிறான் என்று குறிக்க வந்த மாணிக்கவாசகர், “நிறங்களோர் அய்ந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான்” என்கிறார். எனவே நிறங்கள் மொத்தம் அய்ந்து என்பது பழந்தமிழர் கருத்து என்று தெரிகிறது. வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, புகை நிறம் என அவற்றை உரையாசிரியர் விளக்குகின்றனர். தேவாரம் சிவபெருமானைப் 'பவள வண் ணத்தினர்' என்றும், உமையவளை ‘மரகதக் கொடி' எனப் பச்சை நிறமுடையவளாகவும் குறிக்கின்றது. இருளின் வண்ணமும் அந்தியின் வண்ணமும்கூடச் சிவபெருமானின் வண்ணமெனக் குறிக்கும் மற்றொரு தேவாரப் பாடல். வண்ணம் என்ற சொல் அழகு என்ற பொருளிலும் வழங்கப்பட்டிருப்பதனை ‘வண்ண மார்பில் தாரும் கொன்றை' என்ற சங்கப் பாடலாலும் அறிகின்றோம்.

பக்தி இலக்கியங்களில் நாம் காணும் மற்றொரு செய்தி கறுப்பு அழகுக்குரிய நிறம், அது ஒளி வீசும் என்பது. திருமாலை ஆண்டாள் 'கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேன்' என்கிறார். ஆழ்வார்கள் பலரும் திருமாலைக் 'கரிய மாணிக்கம்' என்று பாடியுள்ளனர். இராமனது கரிய உடம்பிலிருந்து ஒளி கிளர்ந்தது என்ற செய்தியை 'வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய' என்று கம்பர் பாடுகிறார். கண்ணப்பர் பிறந்தபோது அவரது கறுத்தமேனி ஒளியுடையதாக இருந்தது என்பதனைக் 'கருங்கதிர் விரிக்கும் மேனி காமருகுழவி' என்று பாடுகிறார் சேக்கிழார். தன் மீதுபட்ட ஒளியைப் பளபளப்புடைய கருப்புநிற மனிதத்தோல் 'எதிரொளி' செய்துகாட்டும் என்பது கம்பரும் சேக்கிழாரும் காட்டும் அழகுக் காட்சியாகும்.

நன்னூல் 301ஆம் சூத்திரத்துக்கான விருத்தியுரையில் அவ்வுரைகாரர் 'கண்' என்னும் வேற்றுமை உருபினை விளக்குகிறார். எடுத்துக்காட்டாகத் தரப்படும் சொற்றொடர் 'கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' என்பதாகும். நெருப்பின் உள்ளார்ந்த தன்மை தெறல் (சுடுதல்) என்பது போலக் கறுப்பின் உள்ளார்ந்த தன்மையே அழகுதான் என்பது அக்காலத்தில் நிலவிய கருத்து எனத் தெரிகிறது. அக்காலம் வரை அழகோடு சேர்த்து எண்ணப்பட்ட கறுப்பு நிறம் பின்னர் ஏன் தனது மதிப்பை இழந்தது? அழகின்மை என்பதற்கு எடுத்துக்காட்டாக அது எப்படி மாறிப் போனது?

தாழ்வுக்கும் இழிவுக்கும் உரியதாகக் கறுப்பு நிறம் கருதப்பட்டதன் சமூக வரலாற்றுக் காரணிகள் யாவை?

இக்கேள்விக்கான விடையை சமூக அமைப்பில் காண இயலாது. மாறாக அதிகாரம் சார்ந்த அரசியல் அமைப்புக்குள்ளே தேடவேண்டும். அதுவும் தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரே தேட வேண்டும்.

கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப்பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383ல் விஜய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விஜய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட்சியதிகாரம் விஜய நகரப் பேரரசின் தள்பதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ்நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது.

அதாவது வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சியாளர்களிடம் மாறியது. இந்த ஆட்சியாளரைத் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம் அமைந்தது. பிராமணர், பிராமணரை அடுத்த 'மேல் சாதியினரான' புலால் உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த நாயுடு (வெலமா, கம்மவார், கவர, காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள ஆசாரிகள், பெரும்பாலும் புன்செய் நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத் தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியர், தோட்டி வேலை செய்யும் சக்கிலியர் என இவர்களை வகைப்படுத்துக் காணலாம்.

இவர்களோடு செளராட்டிரப் பகுதியிலிருந்து ஏற்கனவே வெளியேறி ஆந்திரத்தில் இருந்த நெசவுத் தொழில் செய்யும் சாதியான செளராட்டிரர்களும் தமிழகத்தில் வந்து குடியேறினர். இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தனித்து வளர்ந்திருந்த சைவ, வைணவ மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. வைதிக நெறியே முன்னிறுத்தப்பட்டது. 'இந்து மதம்' அதிகாரத்தில் அமர்ந்தது. தமிழ் அக்காலத்தில் ஆட்சி மொழியாக இல்லை. ஆட்சியாளர்களின் மொழியாகிய தெலுங்கு பேணப்பட்டது. அரசியல் அதிகாரத்தில், வைதிக நெறியின் காவலர்களான பிராமணர்க்கும் சம்சுகிருதத்திற்கும் முன்னுரிமை தரப்பட்டது.

இவர்களின் ஆட்சி முடியும் தறுவாயில் கி.பி. 1700க்குப் பிறகு உருது பேசும் வடநாட்டு முசுலீம்கள் அங்காங்கே சில பகுதிகளில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். மிகச்சில பகுதிகளில் பிரஞ்சுக்காரரும் ஏனைய பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்களும் ஆட்சியைக் கைப்பற்றினர்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கையிலே வைத்திருந்த அனைத்து ஆட்சியாளர்களும், தமிழர்களின் சாரசரி நிறத்திலிருந்து வேறுபட்ட சிவந்த நிறமுடையவர்கள். அவர்களால் ஆதரிக்கப்பட்ட வடநாட்டில் இருந்து வந்த இசுலாமிய ஞானிகள், ஐரோப்பியத் பாதிரிமார்கள், பிராமணர்கள் ஆகிய அனைவரும் தமிழர்களைவிடச் சிவந்த நிறமுடையவர்கள். எனவே ஐந்து நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரமும், அரசியல் சித்தாந்தங்களையும் நடைமுறைகளையும் உயர்த்திப் பிடிக்கின்ற ஆன்மீக அதிகாரமும் சிவந்த நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே இந்த நிறம் அதிகாரத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, மேட்டிமையின் சின்னமாக, அழகு நிறைந்ததாகக் காட்டப்பட்டது. சுருக்கமாகச் சொல்வதானல், தமிழ் பேசும் பெருவாரியான மக்கள் கூட்டத்தாரின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்த மட்டில் திசைமாற்றம் பெற்றது.

எதிர்நிலையில் சொல்வதனால். கருப்பு நிறமுடைய மக்கள் அழகற்றவர்களாகவும், ஆளப்படுவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னமாகவும் கருதப்பட்டனர். இன்றளவும் இதுவே தொடர் கதையாகி வருகிறது.

எனவே தான் 'கறுப்பு - சிவப்பு' என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சனையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசை மாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவிவரும் ஒரு முரண்பாடு ஆகும்.

அறிஞர் தொ.பரமசிவன் அவர்கள் எழுதிய பண்பாட்டு அசைவுகள் நூலில் இருந்து...


வெள்ளி, 28 ஜனவரி, 2022

தமிழ் ஈழத் தாகத்தோடு தீக்குளித்துத் தன்னுயிர் நீத்த முத்துக்குமார் எழுதிய அறிக்கை மடல்


தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த துண்டுப்பிரசுரம் விபரம் வருமாறு :

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் 

என் தமிழ்ச் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம்.

வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை.

என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும்,இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும்,சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.

இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு,சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?

ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா?

பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ,தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும்சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள்,வழக்கறிஞர்களும்தான்.

இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது,தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.

சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!

போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!,

ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள்,ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால்,அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம்.

எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி,அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.

எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம்,அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க,தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்?

எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும்,ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்?

எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும்,பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது.

அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே,போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு,எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம்,தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும்என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம்,உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே,பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான்.

இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில்,அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா...

இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன்.

நீங்கள் நாம் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது,ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...

அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்.

1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்?இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.

இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக,இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மௌனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள்.

'அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை' என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில்,புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, தீவிரவாதிகள் அல்ல காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள்அதனால்தான் சண்டை என்கிறது.ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ,மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை.

ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா,தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தேஇந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை.

இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும்.

கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி !

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மௌனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும்,குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ,இலங்கைக்கோ கிடையாது !

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா,உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த,பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு,அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.


என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,

கு. முத்துக்குமார், 

கொளத்தூர்,

சென்னை-99.

29.01.2009

.....................................................

நன்றி

https://eelavizhi.blogspot.com/2017/01/blog-post_26.html