செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

திராவிடம் : கால்டுவெல்லின் கடுஞ்சறுக்கல்களும் வைரமுத்துவின் ஆற்றுப்படையும்:- பெ. மணியரசன்.


பாவலர் வைரமுத்து அவர்களின் படைப்பாற்றல் வலிமை நாடறிந்தது! சமகாலத் தமிழ் வளர்ச்சிக்கு வைர முத்துவின் பங்களிப்பு போற்றத்தக்கது. அவருடைய அரசியல் சார்பு என்பது அவருடைய உரிமை என்ற அளவில் அது குறித்து நான் விமர்சிக்கவில்லை. ஆனால் அவரது தமிழாற்றுப் படையின் 19 ஆவது கட்டுரையாக “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கால்டுவெல்” பற்றி திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் 25.08.2018 அன்று அவர் படித்த கட்டுரையின் சில பகுதிகள் விமர்சனத்திற்குரியவை.

சமற்கிருதத் துணையின்றி தமிழ் இயங்கும் என்று கண்டறிந்த கால்டுவெல் பாரட்டப்பட வேண்டியவர். அதே வேளை அவரின் பிழைகளை சுட்டிக்காட்டி திறனாயவும் வேண்டும்.

வைரமுத்து அவர்களின் கால்டுவெல் உரையில் ஒரு பகுதி 26.08.2018 “தினத்தந்தி” நாளேட்டில் வந்துள்ளது.

“தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும் திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல மறுக்க முடியாத மானுடக் கலாச்சாரம் என்றும் அறிவுலகத்துக்கு அறிவித்தவர் கால்டுவெல். கால்டுவெல் மட்டும் திராவிடம் என்ற இனக்குறியீட்டைக் கண்டறியாது இருந்திருந்தால் நமக்கு அடையாளமில்லை. வீழ்த்தப்பட்ட தமிழர்கள் இன்று அடைந்திருக்கும் வெற்றியும் இல்லை. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய திராவிடச் சிங்கங்கள் இல்லை.” (தினத்தந்தி)

“திராவிடம்” என்ற இனக் குறியீட்டைக் கால்டுவெல் கண்டறியாது இருந்தால் தமிழர்களுக்கு அடையாள மில்லை, ஆதாரமில்லை, கிரீடமில்லை, கீர்த்தியில்லை என்று வைரமுத்து வர்ணித்திருப்பது - அவருடைய பாணியில் கூறுவதென்றால் கவிதைக்குப் பொய்யழகு என்பது போல் கட்டுரைக்கும் பொய்யழகோ? கால்டு வெல்லைப் பெருமைபடுத்துவதற்காகத் தமிழையும் தமிழர் பெருமிதங்களையும் சிறுமைப்படுத்த வேண்டுமா?

கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதாமல் போயி ருந்தாலும், தமிழ் வளர்ச்சியும் தமிழர் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்காது; மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையும், மறைமலை அடிகளாரும் தமிழறிஞர்களாக சிறந்திருப்பார்கள். அண்ணா மக்கள் தலைவராக வளர்ந்திருப்பார். அவர் சங்கத்தமிழில் - திருக்குறளில் - காப்பியத் தமிழில் காலூன்றி நின்றவர்!

வைரமுத்து தமது கட்டுரையில் வரிசைப்படுத்தி யிருப்பது போல் கால்டுவெல் வருவதற்கு முன்பாக சமயப் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்த ஐரோப்பியச் சான்றோர்கள் இத்தாலியின் இராபர்ட் நொபிலி (1577 - 1656), இத்தாலியின் வீரமா முனிவர் என்ற கான்ஸ் டன்டின் ஜோசப் பெஸ்கி (1680 - 1742), செர்மனி யிலிருந்து வந்த சீகன் பால்கு (1682 -  1719) இங்கிலாந் திலிருந்து வந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு (1777 - 1819),  இங்கிலாந்திலிருந்து வந்த ஜி.யு. போப் (1820 - 1908) போன்றோர் தமிழின் சீர்மை, தூய்மை, ஆழம், அகலம் அனைத்தையும் கண்டு வியந்து போற்றினர். தங்கள் படைப்புகளையும் தமிழில் வழங்கினர்.

வீரமாமுனிவர் தமிழுக்குச் சதுர அகராதி தந்தார். எழுத்துச் சீர்திருத்தம் கொணர்ந்தார். ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். கிறித்தவ சமயம் பரப்ப வந்த சான்றோராக இருந்தும் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் மனம் பறிகொடுத் தார். “தமிழ் மாணவன்” என்று தம்மைச் சொல்லிக் கொள்வதில் பெருமை கண்டார் போப்!

தமிழின் தனித்தன்மையை ஐரோப்பியர் ஏற்றுக் கொண்டால்தான் தமிழ் வாழும்; தமிழர் வாழ்வர் என்று கருதுவது அடிமை மனப்பான்மையில்லையா?

கால்டுவெல்லுக்கு முன் ஒப்பிலக்கண ஆய்வு செய்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு. அவர் ஆங்கிலேயர்!  அதே வேளை சமற்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகள் கற்றவர். சென்னையில் நாணய அச்சடிப்பு நிலைய அதிகாரியாக இருந்தபோது திருவள்ளுவர் படம் பொறித்து நாணயம் வெளியிட்டார். திருக்குறளின் சில அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். சென்னை மாகாணத்தில் நிர்வாகப் பணிபுரிய வரும் இளம் வெள்ளை அதிகாரிகள் இம்மாகாணத்தில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளைக் கற்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1812இல் கல்லூரி நிறுவினார் எல்லீசு! தம் பெயரைத் தமிழ்மரபுப்படி “எல்லீசன்” என்று அழைக்கச் சொன்னார்.

மேற்படி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியில் கண்காணிப்புக் குழு செயலாளராகப் பணியாற்றிய அலெக்சாண்டர் டங்கன் காம்பெல் 1816இல் தெலுங்கு மொழி இலக்கணம் குறித்து எழுதிய நூலுக்கு எல்லீசு தந்த முன்னுரை சிறந்த மொழியியல் ஆய்வுரை என்று அறிஞர்களால் போற்றப்படுகிறது. அதில்தான் எல்லீசு அவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல; இவை தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றார். இவற்றைத் தென்னிந்திய மொழிகள் என்றாரே தவிர திராவிட மொழிகள் என்று கூறவில்லை! அப்போதும் “திராவிட” என்ற சொல்லாட்சி சமற்கிருத நூல்களில் இருந்தது. பிராமண அறிவாளிகள் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் எல்லீசன் “திராவிட மொழிக் குடும்பம்” என்ற திரிபு வேலையைச் செய்யவில்லை.

தென்னிந்திய மொழிகள் தனிக்குடும்பம் என்ற எல்லீசு இவற்றின் தாய் தமிழ் என்றார். இவ்வாறு எல்லீசு கூறியது 1816இல்! நாற்பது ஆண்டுகளுக்குப் பின் 1856 இல், இந்தத் தென்னிந்தியத் தனி மொழிக் குடும்பத்திற்கு “திராவிட மொழிக் குடும்பம்” என்று கால்டுவெல் புனைவுப் பட்டம் சூட்டினார். எது முந்திய ஆய்வு என்று இப்போது தெரிகிறதா?

கவிஞர் வைரமுத்து கூறுவது போல் கால்டுவெல் இல்லையென்றால் தமிழ் மொழிக்கு - தமிழர்களுக்கு அடையாளமில்லை; ஆதாரமில்லை; கிரீடமில்லை, கீர்த்தியில்லை என்ற அவலம் வரலாற்றில் என்றுமே இல்லை! கால்டுவெல்லே - வைரமுத்துவின் கூற்றை ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் தமது ஒப்பிலக்கண நூலில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

“இவ்வின மொழிகள் (தென்னிந்திய மொழிகள் - பெ.ம.) ஐரோப்பிய ஆசிரியர்களால், ஒரு காலத்தில் “தமுலியன்” அல்லது “தமுலிக்” என்று பெயரிடப் பட்டிருந்தன. ஆனால் இவ்வின மொழிகளுள் தமிழ் நனி மிகப் பழைமையுடைய, பெரிதும் நாகரிகமடைந்த மொழியாதலாலும், தன் இன (மொழி வகையினம்) உடைமைகளாய்ச் சொல்லுருவங்கள், சொல் மூலங்கள் ஆகியவற்றின் பெரும் பகுதியைப் பெற்றுள்ளதாலும், தமில், தமிலன் என்ற சொற்களை முறையே தமிழ் மொழியையும் அதை வழங்கும் மக்களையும் குறிக்க மேற்கொள்வதே விரும்பத்தக்கதாம்.”

- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், டாக்டர் கால்டுவெல் அய்யர், தமிழில் - புலவர்  கா. கோவிந்தன் எம்.ஏ., சு. ரத்னம் எம்.ஏ., பக்கம் - 7.

ஐரோப்பிய நூலாசிரியர்கள் தமிழ்மொழியையும் தமிழ் இனத்தையும் தமக்கு முன்பாகவே அறிந்து வைத்துள்ளார்கள் என்பதைக் கால்டுவெல்லே கூறுகிறார்.

ஆரியம் வெட்டிய திராவிடப்
படுகுழிக்குள் வீழ்ந்தார் கால்டுவெல்
----------------------------------------------------------

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்று கால்டுவெல் கூறியதாக வைரமுத்து எழுதியுள்ளார். அது உண்மையன்று; திராவிட மொழிக் குடும்பத்தில் மூத்த மொழி தமிழ் என்ற கால்டுவெல், திராவிடம் என்ற மூலமொழிதான் (Proto Language) தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி களுக்குத் தாய் என்கிறார்.

இந்தத் திராவிட மொழி இருந்ததற்கான மூலச் சான்றை தமிழ் மொழியிலிருந்தோ அல்லது தெலுங்கு மொழியிலிருந்தோ கால்டுவெல் எடுக்கவில்லை. ஏன் எனில் இவற்றில் பழங்காலத்தில் திராவிட மொழி என்ற பெயரில் ஒரு மொழி கூறப்படவில்லை. பிறகு எங்கிருந்து எடுத்தாராம் கால்டுவெல்? ஆரிய மொழியான சமற் கிருதத்திலிருந்து திராவிட மொழிக்கான - திராவிட இனத் திற்கான சான்றை எடுத்தேன் என்கிறார். அதிலும் மனு ஸ்மிருதியிலிருந்து எடுத்தேன் என்கிறார். இதோ கால்டுவெல் கூற்று :

“மனு கூறுகிறார் (x43, 44) : சத்திரியர்களைச் சேர்ந்த கீழ்வரும் பழங்குடிகள் மெல்ல மெல்ல விரிசாலா (புறச்சாதியினர் - Out caste) ஆனார்கள். அவ்வாறு கீழ்நிலை அடைந்ததற்கு அவர்கள் புனிதச்சடங்குகளைச் செய்யாததும், பிராமணர் தொடர்புகளைக் கைவிட்டதும் காரணம் ஆகும். அப்படி (புறச்சாதிகள்) ஆனவர்கள் பௌந்தரர்கள், ஒட்ரர்கள், திராவிடர்கள், கம்போ ஜர்கள், யவனர்கள், சாகர்கள், பரதாஸ், பகலவாஸ், சீனாஸ், கிராதஸ், தாததாஸ், கசாஸ்”.

“மனு குறிப்பிடும் இப்பழங்குடிகளுள் திராவிடர்கள் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். தென்னிந்தியப் பழங்குடிகள் அனைத்துமே திராவிடர்கள் என்று கருதலாம். இப்பழங்குடிகளுள் யாராவது  தாங்கள் திராவிடர்கள் அல்ல என்று கருதினால், அவர்கள் ஆந்தி ரர்கள் - உட்பகுதிகளில் உள்ள தெலுங்கர்கள்; அவர்கள் ஏற்கெனவே ஐத்தரேயா பிராமணாவில் பெயர் குறிக்கப் பட்டவர்கள்; விசுவாமித்தரர் வம்சத்திலிருந்து இழி வடைந்த புஞ்ரஸ், சபரஸ், புலிந்தஸ்.”

- இராபர்ட் கால்டுவெல், A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages, 2008, ஆங்கிலம் - Kavithasaran Pathipagam, Chennai - 600019, பக்கம் - 5,6.

மேற்படி மனுநூல் திராவிடர் என்பவர் விரிசாலா என்ற இழி பிறப்பாளர் என்று கூறுகிறது. விரிசாலா என்ற சொல் தான் பின்னர் சூத்திரர் என்று விளக்கப்பட்டது என்கிறார் பேராசிரியர் த. செயராமன் (இனவியல் : ஆரியர் - திராவிடம் - தமிழர் தொடர் கட்டுரை).

மனுதர்ம எதிர்ப்பு பேசும் பெரியாரியர்கள்  கொண்டாடும் ‘திராவிடரின்’ பிறப்பு இவ்வாறு உள்ளது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்குத் தாய்மொழி அல்லது மூலமொழி தமிழ்தான் என்பதை - மாற்றி அமைப்பதற்காகத்தான் ஆரியச் சான்றுகளைத் தேடி அலைகிறார் கால்டுவெல். அந்தத் தேடலில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரிலபட்டர் என்ற ஆரியர் எழுதிய சமற்கிருத நூலான தந்திர வார்த்திகாவில் வரும் “ஆந்திர - திராவிட பாஷா” என்பதைக் கண்டறிகிறார். இதில் உள்ள ஆந்திரம் தெலுங்கைக் குறிக்கிறது. “திராவிட பாஷா” என்பது மூலமொழியைக் குறிக்கிறது என்று  தன்விருப்பப்படி - சான்றேதும் இல்லாமல் முடிவுக்கு வருகிறார். அதே ஏழாம் நூற்றாண்டில், குமாரிலபட்டர் படித்த அதே காஞ்சிபுரத்தில் தர்க்கங்கள் பல நடத்திய திருநாவுக்கரசர் “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று தெளிவாக இரு இனங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதைக் கால்டு வெல் எடுத்துக்கொள்ளவில்லை!

கால்டுவெல் சமற்கிருதம் படித்து ஆரிய இலக்கியங்களில் ஆரியக்கதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

“பரதகண்ட புராதனம்” என்றொரு நூலைக் கால்டுவெல் தமிழில் எழுதியுள்ளார். இதன் மறுபதிப்பை  என்.சி.பி.எச். பதிப்பகம் 2012 மே மாதம் வெளியிட் டுள்ளது. இந்நூலின் பதிப்பாளர் திரு. பொ. வேல்சாமி அவர்கள்.

இந்தியா முழுமையையும் “பரதகண்டம்” - “பாரதம்” என்று சொல்லிக் கொள்ளும் ஆரியக் கருத்தியலை அடி யொற்றி, அந்த “பரத” கண்டத்தின் அடியொற்றி, அந்த பரத கண்டத்தின் புராதன வரலாற்றைத் திறனாய்வுடன் சொல்லும் பாங்கில் எழுதியுள்ளார் கால்டுவெல். சதுர்வேதங்கள் தொடங்கி இராமாயணம், மகாபாரதம், வாயுபுராணம் உள்ளிட்ட புராணங்கள் முதலியவை பற்றிய விளக்கங்கள்தாம் இந்நூலில் உள்ளன. பரதகண்ட புராதனம் என்பதற்கு ஆங்கிலத்தில் - “Indian Antiquities By the Late Bishop Caldwell”  என்று தாம் கண்ட மூலநூலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததாக திரு பொ. வேல்சாமி குறிப்பிடுகிறார். இந்நூல் 1893 இல் வெளி யிடப்பட்டதாகக் குறிப்பு இருந்தது என்கிறார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதப்பட்டது 1856இல்! சமற்கிருத இலக்கியங்களில் மூழ்கிப் போயிருந்த கால்டுவெல், தமது ஒப்பிலக்கண நூலில் தமிழர்களைப் பழங்குடியினர் (Tribe) என்றும் தமிழை - பழங்குடிகளின் கிளை மொழி (Dialect) என்றும் பல இடங்களில் குறிப்பி டுகிறார். சமற்கிருதத்தை ஒரு பழங்குடிக் கிளைமொழியாக(Dialect)ப் பார்க்கும் ஆய்வுமுறை அவரிடம் இல்லை. எனவே சமற்கிருத நூல்களான மனுதர்மம், மகாபாரதம், இராமாயணம், தந்திரவார்த்திகா மற்றும் புராணங்கள் போன்றவற்றில் கூறப்படும், ஆரியச் சத்திரியர்களில் இழிவடைந்து போன சூத்திரப் பிரிவினரான திராவிடர் களைத் தமிழர்களின் மூலவர்கள் - மூதாதையர் என்று குறிப்பிடுகிறார்.     

புறநானூறு, அகநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், தேவாரம், பூதத்தாழ்வார் பாடல், கம்பராமாயணம், பெரியபுராணம், இளம்பூரணரின் தொல்காப்பிய உரை  போன்ற தமிழ் நூல்கள் தமிழர் - தமிழகம் - தமிழ்நாடு ஆகியவற்றைக் கூறுகின்றன. இவற்றில் எதுவுமே கால்டுவெல்லுக்குக் கிடைக்கவில்லையா?

அதுமட்டுமன்று மானிடவியல் ஆய்வு, மரபு இனவியல் ஆய்வு போன்றவற்றில் எதையும் தமது இன ஆய்வுக்கு அடிப்படையாய் கால்டுவெல் எடுத்துக் கொள்ளவில்லை. ஆரிய சமற்கிருத வர்ணாசிரம தர்ம மனு நூல், இராமாயண, மகாபாரத இதிகாசங்கள்,  புராணங்கள் போன்றவை தான் தமிழர்களுக்கான இன அடையாளம் குறிக்க கால்டுவெல் கையாண்ட “சமூக அறிவியல்” நூல்கள்!

இப்படியாக வருவிக்கப்பட்ட ஆரிய அடையாள திராவிட இனத்தைத்தான் பகுத்தறிவுச் சிந்தனையாளர் பெரியார் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார். தமிழர்களின் தனித்த அடையாளத்தை - மறைத்து அல்லது அதை நீர்த்துப் போகச் செய்து கலப்பட இனப்பெயராகக் காணப்பட்ட “திராவிட இன” அடையாளத்தைத் திட்டமிட்டுத் திணித்தார் பெரியார். அதில் அவர்க்கான நோக்கம் இருந்தது. அதுபற்றி “திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா, வழி மாற்றியதா” என்ற எனது நூலில் எழுதியுள்ளேன்.

கவிப்பேரரசு வைரமுத்து கலப்படத் தயாரிப்பான திராவிட இனப்பெயரை ஏன் தூக்கிச் சுமந்து கொண் டாட்டம் போட வேண்டும்?

“திராவிடம் என்ற சொற்சுட்டு கால்டுவெல்லால் உண்டாக்கப்பட்டதன்று. அது ஓர் ஆதிச்சொல்” என்கிறார் வைரமுத்து. ஒரே ஒரு திருத்தம், ஆதிச்சொல் அன்று - ஆரியச்சொல்!

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியரும், சோழரும் தங்களுக்குள் சண்டையிட்டு வீழ்ந்த பின்னர் தமிழ் நாட்டில் அயலார் ஆதிக்கம் தொடங்கியது. நீண்டகாலம் தமிழர்கள் அடிமை வாழ்வு வாழ நேரிட்டது. அப்போது ஆரியர்கள் தமிழர்களுக்குச் சூட்டிய இழி பெயரான - “சூத்திரர்” என்ற சொல்லையே தாங்களும் தங்களைக் குறிக்க பயன்படுத்திய நிகழ்வுகள் உண்டு! தமிழர்களில் “உயர் சாதி” பிரிவைச் சேர்ந்தோரில் கற்றவர்கள் ஒரு சாரார், தங்களை “சற்சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொண்டது உண்டு! அதே அடிமை மனநிலையில்தான் தமிழர்கள் தங்களைக் குறிக்க இக்காலகட்டத்தில் ஆரியம் திணித்த “திராவிடர்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

சமற்கிருதத்தினின்றும் தனித்து இயக்கக் கூடிய மொழி தமிழ் என்பதை 1816-ஆம் ஆண்டே எல்லீசு நிறுவி விட்டார். அதை 1856இல் விளக்கமாக - விரிவாக மெய்ப் பித்துள்ளார் கால்டுவெல். அதற்காக அவரைப் பாராட்டு வோம்! அதே வேளை அவர் தென்னிந்திய மொழிகளின் மூலமொழி தமிழ் என்பதை மாற்றி, “திராவிடம் மூலமொழி” என்று திணித்த ஆய்வியல் அநீதியை வரலாறு மன்னிக்காது! தமக்கு முன்னோடியாய் தென்னிந்திய மொழிகள் ஆய்வில் விளங்கிய எல்லீசு பற்றி கால்டுவெல் தமது ஒப்பிலக்கண நூலில் எதுவும் குறிப்பிடாதது வியப்பாய் உள்ளது.

“மொழி ஞாயிறு” தேவநேயப் பாவாணர் - தமது தமிழ் மொழி வரலாறு நூலில் கால்டுவெல் பங்களிப்பைப் பாராட்டும் அதேவேளை - அவரது தவறுகளைப் பட்டியலிட்டுள்ளார். அப்பட்டியலின் தலைப்பு : “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள்”.

அதில் முதல் தவறு, “திராவிடம்” என்ற பெயரில் மூலமொழி இருந்ததாகக் குறித்தது. அந்த மூலமொழி தமிழே!

தமிழர்களை உயர் நாகரிகர்களாக மேம்படுத்திய வர்கள் ஆரியர்கள் என்று கால்டுவெல் கூறியிருப்பது தவறு. ஆரியர் தொடர்புக்கு முன் தமிழர்களுக்கு மோட்சம், நரகம், ஆன்மா, பாவம் முதலியவை பற்றி தெரிந்திருக்கவில்லை என்று கூறுவது அடுத்த தவறு.

அடுத்த தவறு, தமிழர்களுக்கு ஆயிரத்திற்கு மேல் எண்ணத் தெரியாது என்று கூறியிருப்பது.

தமிழ் நெடுங்கணக்கு (அகரவரிசை) சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியமைந்தது என்று கால்டுவெல் கூறுகிறார். ஆரிய எழுத்துகளுள் வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றைத் தமிழர்கள்  விட்டு விட்டனர் என்று கூறுகிறார். இது தவறு!

அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், பாண்டியன், திரு, நாழி, மனம், மாதம் என்பன வடசொற்கள் என்று கால்டுவெல் கூறுவது தவறு!

மேலும் இலக்கண அடிப்படையில் கால்டுவெல் செய்த தவறுகளையும் பாவாணர் சுட்டிக்காட்டியுள்ளார் (தமிழ் வரலாறு - பாவாணர், பக்கம் 26 - 28).

கால்டுவெல் இல்லையென்றால் - மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை இல்லை, மறைமலையடிகள் இல்லை, அண்ணா இல்லை என்று வைரமுத்து கூறுவது, உணர்ச்சி ஆரவாரம் தவிர உண்மையில்லை!

தொல்காப்பியம், புறம், அகம், காப்பியங்கள், ஆன் மிக இலக்கியங்கள் - தமிழர்களின் அறிவுத்துறை சாதனைகள்! இமயத்தில் வெற்றிக்கொடி ஏற்றி வாழ்ந்த இனம் - தமிழினம்! ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன், ஆரிய மன்னர்களான கனகன் விசயன் ஆகியோரை அடக்கி அவர்கள் தலையில் இமயக் கல்லை ஏற்றி வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் போன்றோர் தமிழ்ப் பேரரசர்கள்!

“பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் - போர் கொண்ட மன்னர்க்குப் பொல்லாத நோயாம் - பார் கொண்ட மக்களுக்குப் பஞ்சமும் பிணியு மாம்” என்று எச்சரித்தவர் திருமூலர். “வேத ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடாதீர்; சூதாகச் சொன்னதல்லால் உண்மை நிலை தோன்ற உரைக்கவில்லை” என்றார் வள்ளலார்.

தமிழர் மறுமலர்ச்சியின் தொடக்கப் புள்ளி - வள்ளலார்! அவர் தொடங்கிய சாதி, சமய வேறுபாடற்ற சமத்துவ சங்கம் ஒருவகை நிகரமை (சோசலிச)க் கொள்கைக்கு முன்னோடித் திட்டம்!

மறைமலை அடிகளார் 1916இல் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் - தமிழில் சமற்கிருத சொற்களை நீக்கி எழுத வேண்டும்; தமிழர் கோயில் மற்றும் குடும்பச் சடங்குகளை பிராமணப் புரோகிதர்களை நீக்கி தமிழ் அறவோரைக் கொண்டு செய்ய வேண்டும் என்ற இலட்சியங்களை முன்வைத்தது. 1930களில் எழுந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு எழுச்சி “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று முழக்கம் கொடுத்தது. தமிழர் என்பதைக் கைவிட்டு, பின்னர் திராவிடர் என்று மாற்றிக் கொண்டவர் பெரியார்.

திராவிடர் என்பதில் கால்டுவெல்லுக்கே கடைசி வரை ஐயுறவு இருந்ததால், தமது ஒப்பிலக்கண நூலுக்கு “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravidian or South Indian Languages) என்று இரு பெயர் சூட்டினார்.

திராவிடம் என்ற பெயரில் மொழியும் இல்லை; இனமும் இல்லை; நாடும் இல்லை! அப்பெயர் ஆரியம் சூட்டிய திரிபுப் பெயர்!

தமிழே நமக்கு மூலமொழி (Proto Language); தமிழே நமக்கு வளர்ந்த பொது மொழி (Standard Language). தமிழர் என்பதே நமது மரபு இனம் (Race), தமிழர் என்பதே நமது தேசிய இனம் (Nationality).

கவிப்பேரரசு அவர்களே, மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மார்பில்தான் விழும்; அருள்கூர்ந்து மறுவாசிப்பு செய்யுங்கள்!

கேரள வெள்ளம்: தமிழகத்துக்குப் பாடம் :- நக்கீரன், சூழலியல் அறிஞர்.

கடவுளின் சொந்த தேசமான கேரளா இப்போது சாத்தானின் கையில் இருக்கிறது என்றார் ஒரு கேரள நண்பர். உண்மையில் எல்லா மதங்களின் கடவுள்களும் மாநிலத்தைக் கைவிட்டனர். அவர்களால் தம் வழிப்பாட்டுத்தலங்களைக் கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. மொத்தத்தில் இயற்கையே பேராற்றல் மிக்கது என்பது மெய்யாகியுள்ளது. கேரளா நம்மை விட இயற்கையைப் பாதுகாத்து வரும் மாநிலம். அங்கேயே இப்படிப்பட்ட பேரிடர் எனில் நம்முடைய நிலை கவலைக்கிடமே. இப்பேரிடரை ‘மானுடரால் உருவாக்கப்பட்ட இயற்கை பேரிடர்’ என்பதே பொருந்தும். மனிதருடைய தவறுகளால் காட்டுயிர்களும் வளர்ப்பு விலங்களும் தம் உயிரை இழந்துள்ளன.

ஓரினப்பயிர்கள் :
மலைகள், காடுகள், ஆறுகள், ஓடைகள், காயல்கள் ஆகியவற்றால் கொடையளிக்கப்பட்ட மாநிலம் கேரளா. சோலைக்காடுகள் ஆறுகளின் தொட்டில். அவை மழைநீரை ஈர்த்து வைத்து கொஞ்ச கொஞ்சமாகக் கசியவிடும் தன்மை கொண்டவை. இதனால் வெள்ளம் கட்டுப்படும். ஆனால் ஓரினப்பயிர் தோட்டங்கள் தொட்டில் கயிற்றை அறுத்துவிட்டன. மண் அரிமானம் மழைநீரை துரிதமாக வெளியேற்றுகின்றன. காடுகளை விடத் தேயிலைத் தோட்டங்கள் வெளியேற்றும் நீரின் அளவு 45 மடங்கு அதிகம் என்கிறது கென்யாவில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு. விளைவு, பெய்யும் மழை 48 மணி நேரத்தில் மொத்தமுள்ள 44 ஆறுகளின் வழியாக விரைவாகக் கடலில் கலந்துவிடுகிறது.

பெருமழை கேரளாவுக்குப் புதிதல்ல. சிரபுஞ்சிக்கு அடுத்து உலகின் அதிக மழைப்பெறும் இரண்டாவது இடமாகப் பதியப்பட்டது வயநாட்டில் உள்ள ‘லக்கிடி’. .2005-ல் 4446.5 மி.மீட்டராகப் பதிவான இடம். நீலாம்பூரின் ஒரு இலட்சம் ஏக்கர் காட்டின் இருப்பு வயநாட்டின் சூழலை நெடுங்காலம் காத்து வந்தது. இன்று அதில் கிட்டதட்ட 90,000 ஏக்கர் தோட்டங்களாகிவிட்டன. தோட்டப்பயிர் ஒருபோதும் காடு ஆகாது. மேலும் சோலைக்காடுகள் இருந்த இடங்களில் முளைத்திருக்கும் யூகலிப்டஸ் மரங்களுக்கும் கோழிக்கோட்டில் இயங்கும் குவாலியர் ரேயான் தொழிற்சாலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று நம்புவோம்.

குவாரிகள் :
வயநாடு மாவட்டத்தில் மட்டும் 160 கிரானைட் குவாரிகள் செயற்படுகின்றன. இவற்றில் வரலாற்றுப் புகழ்ப்பெற்ற இடக்கல் குகை அருகிலுள்ள அம்பலவயல் ஊராட்சியில் மட்டும் ஏறக்குறைய 40 குவாரிகள் உள்ளன. 1961 சுரங்கச்சட்டம் சிறிய வெடிகளின் வழி நிலமட்டத்துக்குக் கீழே 40 அடிகள் வரை தோண்ட அனுமதியளித்தது. இச்சட்டம் அறிமுகமானபோது பெரிய அளவிலான சுரங்கத்தொழிலோ மலையைப் பகுத்தறிவில்லாமல் வெடி வைத்து தகர்க்கும் முறைகளோ இல்லை. ஆனால் இன்று 400 அடிகள் வரை வெடிவைத்து தகர்ப்பதோடு, சமயத்தில் 900 அடிகள் ஆழத்துக்கும் செல்கின்றன.

பெரும்பாலான குவாரிகள் சுரங்கத் தொழிலுக்குரிய அனுமதி பெறாமல் பொதுக் கூட்டுறவு பணிக்கான வெடிப்பொருட்கள் அனுமதிப் பத்திரத்தை வைத்தே கொள்ளையடிக்கின்றன. குவாரிகளை ஒட்டி க்ரசர்கள், எம்-சாண்ட் தயாரிப்பு ஆலைகள் இயங்குகின்றன. கான்துறையால் 14 இடங்களை மட்டுமே தடை செய்ய முடிந்தது. மீதி அமோகமாக இயங்குகின்றன. மாதவ் காட்கில் கமிட்டி அறிக்கை இப்பகுதியை பொருளாதார நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மண்டலம் 1-ல் வைக்கப் பரிந்துரைச் செய்தும் பலனில்லை இதுபோல் கோட்டயம், இடுக்கி மாவட்ட எல்லைகளில் உள்ளாட்சி அமைப்புகளால் ஏறக்குறைய 3,000 ஏக்கர் அளவுக்குக் கிரானைட், லேட்டரைட் என்னும் செங்களிப்பாறை மற்றும் ஜல்லி தொழிலுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. பஞ்சாயத் ராஜ் சட்டங்கள் உறக்கத்தில் உள்ளன. புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் தன் ‘கண்ணன்தளி பூக்களுடே கால’த்தில் எழுதியது போல ‘மலைகள் லாரிகளில் ஏறத் தயாராக இருக்கிறது’.

ஆக்கிரமிப்புகள் :
மலைகளில் நிகழும் ஆக்கிரமிப்புகள், வளர்ச்சித் திட்டங்கள் பல கோடிகளை உள்ளடக்கிய அரசியல் செல்வாக்கைக் கொண்டவை. மலைகளைப் பின்புல காட்சியாகக் கொண்ட இடங்களில் கல்விக்கூடங்கள், ஓய்வில்லங்கள் எழும்பி, மலையிலிருந்து வழிந்திறங்கும் ஓடைகளைத் தடைச் செய்கின்றன. செல்வ நிலையைப் பறைச்சாற்ற மலைகளில் கட்டப்பட்ட ஆடம்பர இல்லங்களில் 30% ஆளில்லாமலேயே பூட்டிக் கிடக்கின்றன. சிலநாட்கள் மட்டுமே தங்க ஏறக்குறைய 10,000 சதுர அடி பரப்பளவுக்குக் கட்டப்படும் சொகுசு வீடுகள் பெரும்பாலானவை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள், மதத்தலைவர்களுக்குச் சொந்தமானவை. இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகியவை நில மாஃபியாக்களின் இறுக்கமான பிடியில் சிக்கியுள்ளன.

மலைப்பாதை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று மாடிகளுக்கு மேல் கட்ட தடையுள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் இவற்றைத் தடுக்கும் உரிமையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளித்துள்ளது. இருப்பினும் பயனில்லை. மீனாச்சில் ஆற்றின் முக்கிய ஊற்றே வழிக்கடவு புல்வெளிகளில்தான் இருந்தன. வாகமோனின் வரம்பற்ற சுற்றுலா கட்டிடங்கள் இந்தப் புல்வெளியைத் தின்றுவிட்டன. சுற்றுலாத் தலமான மூணாறு கசாப்புக் கடையாகக் காட்சியளிக்கிறது. மண் அரிமானம் என்பது மூணாரில் அன்றாடக் காட்சி. இதில் பெருமழை நிகழ்ந்தால் என்ன நிகழும்?.

மணல் :
கேரளாவிலும் சட்டவிரோத மணற்கொள்ளைகள் நிகழ்கின்றன. தெற்கில் உள்ள மீனாச்சில் ஆற்றுப்படுகைக் காணாமலேயே போய்விட்டது. வடக்கில் வயநாட்டிலுள்ள ஓடைகள் நெல்வயல்களில் மணல் அள்ளுதல் அன்றாடக் காட்சி. மணல் மாஃபியாக்கள் நெல்வயல்களில் பெரும் பள்ளங்களைத் தோண்டி வைத்துள்ளனர். இவை நீர்வரத்தைத் தடுத்துத் திசை மாற்றிவிடும். பெருமழையில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகிக்கலாம். அட்டப்பாடியின் சூழலியல் அழிவு பாரதப்புழா ஆற்றின் வெள்ளப்பெருக்காக மாறியது.

சதுப்பு நிலங்கள் :
கேரளாவில் 217 பெரிய சதுப்பு நிலங்கள் இருக்கின்றன. இவை மாநிலத்தின் மொத்த பரப்பளவில் ஐந்திலொரு பங்காகும். கேரளாவின் வெள்ளப்பெருக்கை நெடுங்காலம் தாங்கிவந்த இவை இன்று ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டன. சான்றாக 1834-ல் 36,329 எக்டேராக இருந்த வேம்பநாடு ஏரியின் இன்றைய பரப்பளவு மூன்றிலொரு பங்காகச் சுருங்கி 13,224 எக்டேராகக் குறைந்துவிட்டது. குட்டநாடுப் பகுதிகள், ஆலப்புழா, கோட்டயம், கொல்லம், எர்ணாக்குளம் வெள்ளத்தில் மூழ்கிய காரணம் புரிந்திருக்கும். தவிர ஏரியினுள் கொட்டப்பட்டுள்ள டன் கணக்கான குப்பைகள் நீர் உறிஞ்சும் தன்மையைக் குறைத்துள்ளன. ஏரியின் அடிப்பாகம் முழுக்க ஞெகிலிகளும் போத்தல்களுமாகக் கிடக்கின்றன.

பருவமழை:
மே மாத இறுதியில் நிகழும் தென்மேற்குப் பருவமழையைக் கேரளாவில் இடவப்பாதி மழை என்பர். பருவமழையின் அடையாளமே அது இடி மின்னல் இல்லாது தொடர்ந்து பெய்வதுதான். இடி மின்னல் இருந்தால் அதைப் புயல்மழை என்பர். ஆனால் இந்த ஆண்டுக் கேரளப் பருவமழை இடி மின்னலுடன் பெய்திருப்பது நல்ல அறிகுறியல்ல. இது மனிதர் உருவாக்கி வரும் புவிவெப்பமாதலின் துணை விளைவான பருவநிலை மாற்றத்தின் அறிகுறி. அண்மைக் காலமாகவே மழையளவில் பெரும் மாற்றம் இல்லையெனினும் மழைநாட்கள் குறைந்துவிட்டன. பல நாட்கள் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களிலேயே நீரிடியைப் போல் கொட்டித் தீர்த்துவிடுகின்றன.

சுருங்கச் சொன்னால் கேரள வெள்ளம் இரு பாடங்களை உணர்த்துகின்றன. ஒன்று சோலைக்காடுகளின் அழிவு, மற்றொன்று பருவநிலை மாற்றம். இதுதவிர மூன்றாவது காரணம் ஒன்றையும் அண்மையில் ஓர் அறிவியலாளர் கண்டறிந்தார். ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பதற்கும் வெள்ளத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்பதே அந்தக் கண்டுப்பிடிப்பு. சூழலியல் காரணங்களைத் திரிக்கும் இவ்வகை அபத்தங்களே  உண்மையில் அனைத்தையும் விடப் பெரிய பேரிடர்.

(ஒளிப்படம் - இணையம் வழிப் பெறப்பட்டது. நன்றி)

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

பெருங்கடல் வேட்டத்து: மீனவர்களின் ஆறாத வடுவைப் பேசுகிற படம் :- செல்வம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் கோரத்தைப்  பேசுகிறது இப்படம். மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அரசுகளின் மீட்பு நாடகத்தை ஆதாரத்தோடு தோலுரித்துக் காட்டுகிறது. 

மூன்று நாட்கள் இரவு பகலாகக் கடலில் நீந்திக் காப்பாற்றுவார்கள் என்று எண்ணித் தத்தளித்த தமிழர்களைப் பிணமாகக் கூட மீட்க முடியவில்லை.

 வல்லமை படைத்த ஆட்சியாளர்களால்.  "மகனை இழந்த தாய் மூச்சடக்கி அழும்போது பார்ப்பவர்களுக்கு நெஞ்சு  அடைத்துக் கொள்கிறது" . கணவனை இழந்த பெண்கள் கதறும் போது கண்கள் வறண்டு விடுகின்றன. ஆண்களே இல்லாத ஊராக எதிர்காலமே இல்லாத வாழ்வாக இருக்கும் மீனவர்களின்   அவல நிலையை எதார்த்தமாக  எடுத்துக் காட்டுகிறது இப்படம்.

தமிழ்நாட்டில் இவ்வளவு நவீனத்துவ காலத்தில் மீனவர்களைக் காப்பதற்கு எந்த வழியும் இல்லையா? அவர்கள் வாழ்வு ஏன் இவ்வளவு அவலப் போராட்டம் நிறைந்ததாக உள்ளது என்ற ஆதங்கம் எழுகின்ற அளவிற்கு  ஒரு சிறந்த படமாக  சிறப்பான முறையிலே படமாக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வியல் கஷ்டங்களை சாமானியனின் நெஞ்சத்தில் ஆறாத வடுவாய்ப் பதிவு செய்கிறது
             "பெருங்கடல் வேட்டத்து".

செல்வம்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக் குண்டு,
தேனி மாவட்டம்.

சனி, 25 ஆகஸ்ட், 2018

வரலாற்றுவழி தமிழ்த் தேசியமும் கற்பனையான இந்திய தேசியமும் :- த.செயராமன்




 தமிழினத்திற்கு ஒரு பெருமை உண்டு. உலகின் மிகப் பழமையானதும், இன்று வரைப் பயன்பாட்டில் உள்ளதும், செறிவான சொல்வளமும், இலக்கிய வளமும் கொண்ட ஒரு செவ்வியல் மொழிக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். மற்றவர்களுக்கெல்லாம் தான் பிறந்தது முதல் நாவில் தவழ்வது தாய்மொழி. தமிழைப் பொறுத்தவரை, 24 மொழிகளைப் பெற்றெடுத்ததுடன், 82 உலக மொழிகளுக்கு மூலமாக விளங்குவதால் மற்ற பல மொழிகளுக்குத் தாய்மொழி. மாந்த இனம் தோன்றிய பகுதியாகக் கருதப்படும் ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியிலிருந்து மடகாஸ்கர் மற்றும் இன்றையத் தென்னிந்தியப் பகுதியைத் தழுவி தெற்கில் கடலில் இருந்த பெருநிலப்பரப்பு கடலில் படிப்படியாக மூழ்கி மறைந்ததாலும், எஞ்சியுள்ள தொல்மாந்தர் தோன்றிய நிலப்பரப்பில் தொடர்ந்து வாழும் பேற்றினைக் கொண்டவர்கள் தமிழர்கள். உணவு சேகரிக்கும் நிலை, வேட்டையாடும் நிலை ஆகியவற்றைக் கடந்து, ஆற்றங்கரைகளில் நிலை கொண்டு, வேளாண் சமூகமாக மாறி, உபரி உற்பத்தியைப் பெருக்கி, உலக அளவில் வணிகம் செய்து, செல்வத்தைக் குவித்தவர்கள் தமிழர்கள்.
தமிழ்த் தேசத்தின் வரலாற்றுவழி இருப்பு

 தமிழர்களுக்குக் கூடுதலாகவும் ஒரு பெருமை உண்டு. ஐரோப்பாவில் முதலாளிய உற்பத்திமுறை தோன்றிய பிறகே மொழி அடிப்படையிலான தேசங்கள் தோன்றின. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் ஒன்றன்பின் ஒன்றாகத் தேசங்கள் எழுந்தன. 1789-இல் வெடித்த பிறகு ஜனநாயகக் குடியரசுகளாகத் தேசங்கள் மாறின.

 கிரேக்கத்தில் 'பொலிஸ்' என்று அழைக்கப்பட்ட ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, தீப்ஸ், கொரிந்து போன்ற ‘நகர நாடுகள்’ (City States) இருந்தன. தமிழர்களைப் போலவே கிரேக்கர்களும் பழம் பெருமை வாய்ந்தவர்கள். ஆனால், சங்க காலத்திலேயே, மூவேந்தர்களின் தமிழ் அரசுகள் ஒற்றை தேசமாக அறியப்பட்டது. ‘தேசம்’ என்ற சொல்லாலேயே பண்டைத் தமிழகம் அழைக்கப்பட்டது என்பது பலருக்கும் வியப்பளிக்கும். இதற்குக் கல்வெட்டுச் சான்றும் உள்ளது.

 வடஇந்தியாவில், இன்று பாட்னா எனப்படுகிற பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மௌரிய வம்சத்தின் மூன்றாவது பேரரசராகிய அசோகரின் (கி.மு.268-232) பேரரசில்  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி அடங்கியிருந்தாலும், தெற்கே தமிழர்களின் நிலப்பரப்பு அதில் அடங்கவில்லை. சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர மற்றும் தம்பபண்ணி (இலங்கை) ஆகியவை தம் எல்லைப் பகுதியில் சுதந்திர நாடுகளாகவும் நட்புறவோடும் உள்ளன என்று அசோகர் தம் 2 மற்றும் 13-வது பாறைச் சாசனங்களில் தெரிவிக்கிறார்.

ஹத்திக்கும்பா கல்வெட்டில் தமிழ்த்தேசம்!
 அசோகருடைய சமகாலத்திய கலிங்க (ஒடிசா) அரசராகக் கருதப்படும் காரவேலர் மிக முக்கியத் தகவலைத் தம் ஹத்திக்கும்பா கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார். கடந்த காலத்தில், தனது நாட்டுக்கே (கலிங்கம்) அச்சுறுத்தலாக, 113 ஆண்டுகளாக நிலவி வந்த, தமிழர் அரசுகளின் கூட்டமைப்பான ‘திரமிரதேச சங்கதா’ வை(தமிழ்த் தேச சங்கம் -Tramiradesa Sanghata) தான் தோற்கடித்துவிட்டதாகக்  காரவேலர் பெருமை பேசுகிறார்.  கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களை ஒரு தேசமாகக் கருதியமைக்கு இது ஒரு கல்வெட்டுச் சான்றாகும். தமிழ்த்தேசியம் என்பது இயல்பான வரலாற்றுவழித் தேசியம் ஆகும்.

தமிழ்த் தேசத்துக்கு மொழியே முகம்
 உலக வரையறுப்புகள் மற்றும் பிரகடனங்களின்படி, ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான இறையாண்மையுள்ள தேசத்தை நிறுவிக் கொள்ளலாம். அது அந்தத் தேசிய இனத்தின் பிறப்புரிமை. இத்தேசிய இனங்கள் அதன் பொதுமொழி மூலம் அடையாளம் காணப்படுகின்றன. மொழிதான் ஒரு தேசிய இனத்தின் முகம். மொழியின் அடிப்படையில்தான் நாடு -என்பது தொல்காப்பியர் காலத்திலேயே உணரப்பட்டது. மூவேந்தர்கள் ஆண்டாலும், தமிழ்மொழி எதுவரைப் பேசப்படுகிறதோ அதுவே தமிழ்த்தேசம் என்ற பார்வை சங்க காலத்திலேயே இருந்தது.
'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'
என்று தொல்காப்பிப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார்.
 ‘தமிழ் கெழு மூவர் காக்கும்,
 மொழி பெயர் தே எம்’- என்று தமிழ் வழங்காப் பகுதியை அகநானூறு குறிப்பிடுகிறது.

 தமிழ்த் தேசத்தை ‘தமிழ்நாடு’ என்று பதிவு செய்யும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம். தமிழ்வழக்கும் பகுதியை 'தமிழ்நாடு' (சிலப்.25-165) என்றும், 'தென் தமிழ்நாடு' (சிலப்.10-58) என்றும் அது குறிப்பிடுகிறது.

 அதுபோன்றே, ‘தமிழ்நாடு’ என்று தமிழகத்தைக் கம்பர் (கி.பி. 13-ம் நூற்றாண்டு) குறிப்பிடுகிறார். ‘அகன் தமிழ்நாடு’ (கிட்கிந்.749) ‘தென் தமிழ்நாடு’ (கிட்கிந். 750, 918), ‘செந்தமிழ்நாடு’ என்று கூறும் கம்பர், வட மொழி பரவிவிட்ட வடஇந்தியப் பகுதியையும், தமிழ் வழங்கும் பகுதியையும் வெவ்வேறாகப் பிரித்துக் காட்டுகிறார். ‘வடசொற்கும், தென் சொற்கும் வரம்பாகி நின்ற வேங்கடம் (கிட் கிந். 745) என்று வேங்கடமலையை தமிழகத்தின் எல்லை ஆக்குகிறார். மொழியின் அடிப்படையிலேயே தேசங்கள் என்பது தமிழ்ப் புலவர்களின் தெளிவான பார்வையாகும். பக்தி இலக்கியமாகிய பெரியபுராணம், 'அருந்தமிழ்நாடு', 'தண்டமிழ்நாடு', 'தென்றமிழ்நாடு', 'வண்டமிழ்நாடு', 'கன்னித்தமிழ்நாடு', 'தமிழ் வழங்குநாடு', 'தமிழ்த்திருநாடு', 'செந்தமிழ்நாடு' என்று மொழியையும், நாட்டையும் இணைத்துத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

 தமிழர்களுக்கான தேசம் எது? என்பதைத் தெளிவாக இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உயைாசிரியர் இளம் பூரணார், தொல்காப்பியம் நூற்பா-496 -க்கு பொருள் கூறும்போது,  ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் கூறும்போது,
 ‘நும் நாடு யாது என்றால்,
 தமிழ்நாடு என்றல்’ என்று கூறுகிறார்.
ஐரோப்பாவில் தேசம் அல்லது மொழிவழி நாடு பற்றிய பார்வை கி.பி. 15-ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது. ஆனால் தமிழர்கள் சங்ககாலம் முதலே தங்கள் தாயகம், மொழி அடிப்படையில் தேசம் பற்றியப் பார்வையில் தெளிவாக இருந்தார்கள்.

 சங்க காலத்தில், தமிழகத்தை
‘இமிழ் கடல் வேலித் தமிழகம்’
என்று பதிற்றுப்பத்தும்,
‘வையக வரைப்பில் தமிழகம்’ என்று புறநானூறும், இக்காலத்திற்குப் பின் எழுதப்பட்ட பரிபாடல் திரட்டு ‘தமிழ் நாட்டகம்’ என்றும் குறிப்பிடுகின்றன.

மொழியின் அடிப்படையில் தமிழர் என்ற இன அடையாளம்
 பக்தி இலக்கியக் காலத்தில் தமிழர்கள் தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினர். பூதத்தாழ்வார் ‘இருந்தமிழ் நன் மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது’ (நாலாயிர திவ்விய பிரபந்தம்) என்று தம்மை தமிழன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார். தமிழர்கள் தங்களையும், ஆரியர்களையும் வெவ்வேறாகப் பிரித்து அறிந்தனர். சிலப்பதிகாரம், வடமொழியாளர்களை 'வடவாரியர்' என்று குறிப்பிடுகிறது. அப்பர் திருமறைக்காட்டில் சிவபெருமானுக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வழிபாடு நடப்பதை ஆரியம் வேறு, தமிழ் வேறு என்று வேறுபடுத்திக் காட்டும் வகையில்
"ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்"
என்று குறிப்பிடுகிறார். தமிழர்களுடைய பண்பாடும், வடஇந்தியப் பண்பாடும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை.
 ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’,
‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’
என்ற ஆன்றோர் வாக்குகள், தமிழனத்தின் அறம் சார்ந்த விழுமியத்தின் வெளிப்பாடுகள். ஆரியரின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்தே இவ்விழுமியங்கள் (Values) முன்நிறுத்தப்பட்டன.

 தமிழ், தமிழகம், தமிழ்நாடு என்று தமிழ் இலக்கியங்கள் பேசினாலும் திருக்குறள் மாந்த இனம் முழுமைக்கும் நன்னெறி புகட்டும் பொதுமறையாக எழுதப்பட்டமையால், அதில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்த்தேசம் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. அதனால்தான் பாரதியார்
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என்று பாடினார்.

புராதன இந்தியா என்பது உண்டா?
 இந்தியா என்ற நாடு ஆங்கிலேயரின் வாளின் வலிமையால் உருவாக்கப்பட்டு, பிரிட்டிஷ் காலனியாதிக்கப் பகுதியாகிறது. அதற்கொரு நிர்வாகக் கட்டமைப்பையும் ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகள் சிறிதாயிருந்தபோதும், பின்னர் காலனியப் பேரரசாக உருவெடுத்தபோதும் 'இந்தியா' என்றே ஆங்கிலேயர் அழைத்தனர். இந்தியாவுக்கென ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு ஆங்கிலேயர்களால் 1773-இல் உருவாக்கப்பட்டு, வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு அதன் முதல் கவர்னர் ஜெனரல் ஆக்கப்பட்டார்.

 ஆங்கிலேயர் வரும்வரை இந்தியத்துணைக் கண்டம் ஒற்றை நிர்வாகத்தின் கீழ், ஒரு நாடாக இருந்ததே இல்லை. இன்று பலரும் கருதிக்கொள்வதுபோல இந்திய தேசம் அல்லது பாரத தேசம் என்ற ஒன்று வரலாற்றில் இருந்ததே இல்லை. புராணிகர்கள் குறிப்பிடுகிற 56 தேசங்களிலும் கூட இந்திய தேசம், பாரத தேசம் என்ற ஒன்று கிடையாது. ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ என்ற நூலை 1918-இல் பி.வி.ஜகதீச ஐயர் எழுதினார். இதில் சொல்லப்படும் 56 தேசங்களில் சீனம், பாரசீகம், காந்தாரம், காம்போஜம், நேபாளம் கூட இருக்கின்றன. ஆனால் பாரத தேசம் அதில் இல்லை. சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம், திராவிட தேசம் அதில் இருக்கின்றன.
பாரத தேசம் என்ற கருத்தியல் உருவாக்கம்

 அமாவாசை தர்ப்பணத்தின்போது சொல்லப்படும் மந்திரத்தில்
‘மன்வந்த்ரே அஷ்டா விம்ஸதி தாமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மோரோ’
என்று வருகிறது. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் விரிவாக நடத்தப்பட்ட  சமஸ்கிருதம் தொடர்பான மொழி ஆய்வுகளால் உயிரூட்டப்பட்ட ஆரிய இன உணர்வால் உந்தப்பட்டவர்கள் தங்களுக்கான தேசத்தை ‘பாரதம்’ என்று அழைக்கத் தொடங்கினர். இந்தியத் துணைக் கண்டத்தை பரதகண்டம் என்றும் பல அறிவாளர்கள் குறிப்பிடத் தொடங்கினர். இந்திய அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்படும் 22 மொழிகளில் சிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்குத் தாயகம் கிடையாது. சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்தவர்கள் இந்திய விடுதலைக்குப்பின் தாயகம் இல்லாத சமஸ்கிருதத்திற்கு தாயகம் வழங்கும் வகையில், இந்தியாவுக்குப் 'பாரதம்' என்று பெயர் சூட்ட விரும்பினார்கள். இந்திய அரசியல் சட்டம் 1946 முதல் 1949 வரை எழுதப்பட்டது. 1948 செப்டம்பர்  வரையிலும் இந்தியா என்ற பெயரே ஏற்கப்பட்டது. இந்தியா என்பது வரலாற்றில் அறியப்பட்ட பெயர் என்பதால்,  இந்தியாவுக்கு ‘பாரதவர்ஷம்’ என்று பெயர் வைக்க எழுப்பப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால், சேத் கோவிந்ததாஸ் போன்ற இந்து மதவாதிகள் அரசியல் சட்ட அவைக்குள்ளும் வெளியிலும் பாரதம் என்று பெயரிட வற்புறுத்தி வந்தனர். 1949 செப்டம்பர் 17-ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்ட திருத்தம் இந்தியாவின் பெயராக ‘இந்தியா அதாவது பாரத்’ என்று அறிவித்தது. அதன் பிறகு, தொடர் பிரச்சாரத்தின் மூலம் ‘பாரத தேசம்’ என்ற சொல்லாடல் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

 இவ்வாறு புராதன இந்தியாவில் இல்லாத, உலகறிந்த வரலாற்றிலும் இல்லாத பாரததேசம் என்ற சொல்லாடல் முன்னிலைப்படுத்தப்படுவதன் நோக்கமே இந்துத்துவத் திட்டமான இந்து இந்தியாவைப் படைப்பதே. தமிழ்மொழியில், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என எந்த நூலிலும், பாரததேசம் என்றோ, இந்திய தேசம் என்றோ எந்தக் குறிப்பும் கிடையாது. அதைப் போன்றே இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எந்த மொழியிலும் இந்தியா பாரதம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால் இந்தக் கருத்தியல்களும் சொல்லாடல்களும் சமீபத்தியவை.

இந்து தேசியம் சாத்தியமா?
 இந்தியத் தேசியத்தை உருவாக்கி அதை மெல்ல இந்து தேசியமாக அமைத்துவிடும் முயற்சிகள் தொடர்கின்றன. இந்த நோக்கத்தைக் கொண்ட அரசியலாளர்கள், தேசம், தேசியம், தேசியஇனம் போன்றவை குறித்த அரசியல் அறிவியல் அடிப்படையில் எவ்விதப் புரிதலுமின்றி குழப்பமான கருத்துகளை வெள்ளோட்டம் விடுகிறார்கள். இந்து தேசியம் என்ற ஒன்று உருவாகவே வாய்ப்பில்லை. இந்தியத்துணைக் கண்டத்தில் பல்வேறு சமயங்கள் காலாகாலமாக இருந்து வருகின்றன. இதில் பெரும்பான்மையினருடையதாகக் கருதப்படும் இந்து மதம் என்பது ஆங்கிலேயர்கள் வரும்வரை இருந்ததேயில்லை. ஆங்கிலேயர்கள்தாம் முன்பிருந்த பல மதங்களையும், வழிபாடுகளையும் ஒருங்கிணைத்து செயற்கையாக உருவாக்கி இந்து மதம் என்று பெயரிட்டார்கள். இந்தியாவில் அரசு நிர்வாகத்தை கைக்கொண்ட ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிர்வாகத்தை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் 1794-ஆம் ஆண்டு மானவ தர்மசாஸ்திரத்தை சர் வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ‘இந்து சட்டம்’ (Hindu Law) என்று பெயரிட்டார். இந்த மொழிபெயர்ப்பு நூலின் அடிப்படையில், எச்.டி.கோல்புரூக் ‘தி இந்து லா’ என்ற இந்து சட்டத் தொகுப்பை உருவாக்கினார்.

 இவ்வாறு பல்வேறு மதங்களை இணைத்துச் செயற்கையாக இந்து மதம் உருவாக்கப்பட்டதைக் காஞ்சி சங்கராச்சாரியார் தம் நூலில் குறிப்பிடுகிறார் :

 "நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும், வெள்ளைக்காரன் நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம்.... வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப்பெயர் தந்து, இன்று இந்திய தேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்! "
 (தெய்வத்தின்குரல், பாகம் 1, ஏழாம் பதிப்பு, வானதி பதிப்பகம், சென்னை, 1988, பக்.305-306)

 இந்து என்பது ஒரு இனமோ, ஒரு மதமோ அல்லது நாடோ அல்ல. அது குறிப்பிட்ட புவியியல் பகுதியைக் குறித்தது. அக்கேமீனட் பேரரசுக்கால கிரேக்க கல்வெட்டு சிந்துநதிக் கரையோரப் பகுதிகளை ‘ஹிந்துஷ்’ என்று குறிப்பிடுகிறது. பிற்கால அராபியர் சிந்துநதிக்கு அப்பால் இருந்த இந்திய துனைக்கண்ட மக்களை ‘அல்ஹிந்த்’ என்று குறிப்பிட்டனர். 19-ம் நூற்றாண்டில் அதிகாரத்திலும், பதிவியிலும் அதிக பங்கு கேட்க அவரவர் சமுகத்தினர் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட வேண்டிய தேவை எழுந்தது. ஆகவே, அதிகாரத்தை துய்க்க துடித்த மேல் தட்டு மக்களால் இந்து என்ற சமய உருவாக்கம்  வரவேற்கப்பட்டது. செயற்கையாக அனைத்து மதங்களையும் இனைத்து இந்த வரையறுக்குள் பௌத்தர், சமணர், பழங்குடிகள் கொண்டுவரப்பட்டனர். 1955-ஆம் ஆண்டு இந்து சட்டம் தொகுக்கப்பட்டபோதும், இந்து என்பது இலக்கணப்படுத்தப்படவில்லை ‘எவன் ஒருவன் மதத்தால், இஸ்லாமியனோ, கிறித்துவனோ, பார்ச்சியோ, யூதனோ அவனுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று அது குறிப்பிடுகிறது.

இந்தியா என்ற கட்டமைப்பு
 ஆங்கிலேயரின் வாளின் நுனியால் இணைக்கப்பட்ட இந்தியா; செயற்கையாக இணைக்கப்பட்ட இந்து மதம்; 200 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எழுந்த விடுதலைப் போராட்டம்; ஆங்கிலேயரே உருவாக்கிய மையப்படுத்தப்பட்ட ஓர் அரசதிகாரம்; ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னும் ஒரு நாடாகத் தொடரும் நிலை; அதைக் கட்டிக்காக்க ஓர் இறுக்கமான அரசியலமைப்பு இதுதான் இந்திய தேசியத்தின் இரகசியம். 1980-களில் தான் அனைத்து இந்திய தேசியம் உருவாகப் தொடங்கியது. ஆங்கிலம் அறிந்த மத்திய தர வர்க்க அறிவாளிகள், பிராமணர்கள் இந்திய அளவில் கைகோர்த்தனர். இந்திய உருவாக்கத்தில் பலன் இருப்பதாக உணர்ந்தனர். இவர்களே இந்திய தேசியம் என்ற செயற்கை தேசியத்தை உருவாக்கப் பங்களித்தவர்கள்.

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்தவர்கள் விபரம் அறிந்தவர்களாக இருந்தபடியால், இந்தியாவை ஒரு ‘தேசம்’ (Nation) என்று இந்திய அசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதைப் போலவே, பல்தேசிய இன மக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தங்கள் மரபு வழித் தாயகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்குக் குறைந்த பட்சம் உண்மையான கூட்டாட்சி முறையாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி வழங்க வேண்டும் என்றுதான் அரசியல் அமைப்பு அவையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அன்றைய இந்து-முஸ்லிம் கலவரச் சூழலில் அனைத்து அதிகாரங்களும் மைய அரசில் குவிக்கப்பட்டன. அரசியல் அறிவியலாளர் கே.சி.வியர் கூறுவதுபோல, இன்று நிலவுவது 'அரை-குறைக் கூட்டாட்சி’ (Quasi Federal) இந்திய அரசியல் சட்டத்தில் அதை எழுதியவர்கள் 'கூட்டாட்சி’ (Federal) என்ற சொல்லைத் தவிர்த்தார்கள்.

 இந்தியா என்ற நாடு எப்போதாவது ஒரு தேசமாகக் கருதப்படுமா? என்ற சந்தேகம் இந்தியத் தலைவர்களுக்கே இருந்தது.  இந்திய விடுதலை வீரரும், பிரம்மசமாஜ் உறுப்பினருமான பிபின் சந்திரபால், 1881-ஆம் ஆண்டில் ‘ஓர் இந்தியா’ என்பது கற்பனையான நிறைவேறாக் கனவு (Chimera), சாத்தியமில்லாதது, ஆனால் உருவாக்கப்பட்டால் நலம் தரும், என்று கருத்தறிவித்தார். பலகோடி செலவில் முன்னெடுக்கப்பட்ட தொடர் பிரச்சாரமும், கற்பிதமும், எதிர்க்கருத்துகள் தண்டனைக்குரிய குற்றமாக நடைமுறைப்படுத்தப்பட்டமையும் இந்தியாவை ஒரு தேசமாகக் காட்டுகின்றன.

 இரஷ்யாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஏ.எம். டயகாவ் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
 "இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியா இங்கிலாந்தின் காலனியாக இருந்த உண்மை காரணமாக வெளி உலகத்திற்கு இந்தியா ஏதோ ஒன்றிப்போன தன்மை கொண்டது போலவும், அதில் வசிக்கும் மக்கள் கூட்டம் அத்தனையும் ஒரே வகையைச் சேர்ந்தது போலவும் ஒரு தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது... சக்திவாய்ந்த தேச விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவில் வசிக்கிற அத்தனை மக்களும் ஓரளவு அதிகமாக அல்லது குறைவாகப் பங்கு பெற்றது இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிப்போய் இருக்கிறார்கள் என்ற பிரமையை மேலும் படைத்திருக்கிறது... இந்தியாவில் இங்லீஷ்காரர்களைப்போல, பிரெஞ்சு, இத்தாலிக்காரர்களைப்போல தொகையில் குறைவில்லாத மக்கள் வாழ்கிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் தனிப்பட்ட கலாச்சாரத்தாலும், மொழியாலும், இலக்கியத்தாலும், பழக்கவழக்கங்களாலும், தங்களது தனித் தேசிய குணாதிசயங்களாலும் பிரத்யேகத் தன்மை பெற்றிருப்பவர்கள் என்பதும், தங்களது வரலாற்று முறையான வளர்ச்சியில் ஒரு நீண்ட பாதையைக் கடந்து வந்திருப்பவர்கள் என்பதும் ஒரு சிலருக்குத்தான் தெரியும்."

இந்தியா நாடா? தேசமா?
 இந்தியா ஒரு நாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அது ஒரு தேசமல்ல. ‘நேஷன்’ (Nation) என்னும் ஆங்கிலச்சொல் ‘தேசம்’ ‘தேசிய இனம்’ இரண்டையும் குறிக்கும். இதற்கு அடிப்படையானவை நான்கு கூறுகள். அவை,
1. ஒரு பொதுமொழி,
2. ஒரு தொடர்ச்சியான வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு.
3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு.
4. பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல்   -இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கில் உருவான மக்கள் சமுதாயமே ஒரு தேசம் ஆகும்.

 இந்த அடிப்படைக் கூறுகளை இந்தியா நிறைவு செய்யவில்லை. ஆகவே, அது ஒரு நாடு, தேசமல்ல (a State and not a Nation). மார்க்சியரான பிரகாஷ் காரத் ‘சோஷியல் சைன்டிஸ்ட்’ (எண் 37)-இல் இவ்வாறு கூறுகிறார். அதுதான் உண்மை.

 "இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்பது முழுக்க முழுக்க வரலாற்றறிவியலற்ற வார்த்தையாகும். மொழியால், எல்லையால், பண்பாட்டால் தெளிவாகப் பிரிந்துள்ள பெரிய தேசியஇனங்கள் குறைந்தபட்சம் 12 இருக்கின்றன. தெலுங்கு, அஸ்ஸாமி, வங்காளி, ஒரியா, தமிழ், மலையாளி, கன்னடிகா, மகாராஷ்டிரியன், குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (ஹிந்துஸ்தானி) மற்றும் காஷ்மீரி, இவைகளுக்கப்பால் மணிப்புரி, திரிபுரி, நாகர்கள், கரோ மற்றும் சந்தால் போன்ற ஏராளமான சிறு தேசிய இனங்களும் இருக்கின்றன.

 உலகம் முழுவதும் ஒவ்வொரு தேசிய இனமும், அதன் மொழியாலேயே அறியப்படுகிறது. ஆங்கிலேய தேசிய இனம் ஆங்கில மொழியாலும், பிரெஞ்சு தேசிய இனம் பிரெஞ்சு மொழியாலும், ஜெர்மானிய தேசிய இனம் ஜெர்மன் மொழியால் அறியப்படுவதுபோலவே, தமிழ்த் தேசிய இனம் தமிழ்மொழியாலும், மராட்டிய தேசிய இனம் மராட்டிய மொழியாலும், வங்காள தேசிய இனம் வங்காள மொழியாலும் அறியப்படுகின்றன. இத்தகைய தேசிய இனங்கள் தனித்தனி சுதந்திர தேசங்களையும் அமைக்க உலக  சாசனங்களால் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.

 இந்திய தேசியம் என்பது ஒரு தேசியம் என்பதற்கான அடிப்படைத் தகுதிகளை நிறைவு செய்யவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் தேசிய இனங்களின் தனி அடையாளங்களை அழித்து ஓர் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துகிறது. இது நிலப்பரப்பு தேசியம் (Territorial Nationalism) ஆகும்.  இந்தியத் தேசியரான ம.பொ.சிவஞானம் ‘இந்திய தேசியத்தின் வயது 100’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் வயது அவ்வளவே.
ஒரு மதம் ஒரு தேசத்தை உருவாக்காது

 65 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவில் இறையாண்மையுள்ள 50 தேசங்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் பண்பாடுகள் வேறுபாடு காணமுடியாத அளவிற்கு ஒற்றுமை உடையன. கிறித்துவ மதம் ஐரோப்பா முழுவதையும் ஒரே உலகமாக இனைத்து இருந்தது. இடைக்காலத்தில், போப்பாண்டவருக்கு அத்தனை அரசுகளும் அடங்கிக் கிடந்தன. ஆனாலும் இந்தக் கிறித்தவ பண்பாட்டு ஓர்மை அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்திவிடவில்லை. மொழியையே அடையாளமாக கொண்டு தனித்தனி தேசங்கள் எழுந்தன. இஸ்லாமிய நாடுகள் 23 உள்ளன. அவற்றுள் பெரும்பாலனவை மேற்கு ஆசியாவில் இருக்கின்றன. ஒரே இறைவன் பற்றிய நம்பிக்கை, புனித குரான் ஆகியவை இஸ்லாமியர்களை ஒரு தேசமாக இணைத்துவிடவில்லை. பண்பாடு மற்றும் சமயம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு. அரசியல் தேசியஇனஅடிப்படையிலேயே அமையும்.

 ஏசு கிறித்துவின் புகழ்பாடுவதாலேயே ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒரே தேசம் என்று கூறுவது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறானது, இராமன் உள்ளிட்ட கடவுளர்களை இந்தியாவில் பல இலக்கியங்கள் குறிப்பிடுவதால் இந்தியா ஒரு தேசம் என்று வாதிடுவது. காப்பிய நாயகர்களை இந்திய எல்லை தாண்டியும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இயல்பான மொழிவழித் தெசியத்தை மறுக்கலாமா?

 இயல்பான மொழிவழி தேசிய இனங்களின் இருப்பையும், அடையாளத்தையும் முற்றிலுமாக அழித்து, இந்திய தேசியம் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடக்கி விடவும், அதை மெல்ல மெல்ல இந்து தேசியமாக மாற்றியமைக்கவும், சமயச்சார்பற்ற இந்தியா என்ற கருத்தியலைக் கைவிட்டு, ஆரிய, வேத, சமஸ்கிருத, இந்திச் சார்புடைய ‘பாரததேசம்’ என்பதை நிலைநிறுத்திவிடவும், விடாது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி' - ஆகிய தமிழ்க்குடி போன்றே, பல தேசிய இனங்கள் விட்டுக் கொடுத்துத்தான், இந்தியா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் மரபுவழி தேசியங்களையும், தேசங்களையும் அழித்து ஒரு மொழி, ஓர் இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் மதவாத தேசியத்தை முன்னிறுத்தினால், அது இந்தியாவின் இருப்புக்கே ஆபத்தாய் முடியும்.
 பேராசிரியர் த.செயராமன்.
 மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவர்,
     தமிழ்த் தேசிய ஆய்வாளர்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வெள்ளச் சேதம்: மழையினால் வந்ததல்ல; மனிதத் தவறுகளால் வந்திருப்பது - கேரளா நமக்குத் தரும் பாடங்கள் :- சுந்தரராசன், பூவுலகின் நண்பர்கள்



கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு கடும்மழை பொழிவு இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கருத்தில் கொண்டு கேரளாவிலுள்ள 39அணைகளில் 35அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கொச்சின் விமான நிலையம் இன்னும் ஒருவார காலத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உரியிழந்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டுகிறது, முகாம்களில் சில லட்சக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சரியாக எவ்வளவு மாதங்கள் என்பதை கணக்கிடமுடியாது என்றும் ஏற்பட்டுள்ள பொருட்ச்சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதைம்  புரிந்துகொள்ள முடிகிறது.

கேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால் இதற்கான எச்சரிக்கைகளை உலகம் வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரம் அடிக்கடி "திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது, 2017ஆம் ஆண்டு பெங்களூரு நகரமும், சென்னை 2015லும், ஸ்ரீநகர் 2014 ஆம் ஆண்டும் "திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வரக்கூடிய காலங்களில் "தீவிர காலநிலை நிகழ்வுகள்" (extreme climate events) இன்னும் அதிகமாகும் என்றும் 3 மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்துவந்தன. மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கையும் இதனை உறுதிப்படுத்தியது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் காந்திநகரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT, Gandhinagar) முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. புவியின் வெப்ப அளவு 1.5 முதல் 2 டிகிரி அளவிற்கு உயரும் போது இதைப்போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என்றும் அதுவும் குறிப்பாக "குறுகிய நேரத்தில் அதிகம் மழை பெய்யும்" (Short duration rainfall extremes) தீவிர நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும்  அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாதிரிகளை (Climate models) கொண்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர், மூன்று மணி நேரத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடிய தீவிர நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் 25% அதிகரிக்கும் என்றும் இவற்றை தாங்கக்கூடிய வகையில் நம்முடைய நகர வடிவைமைப்புகள் இருக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறது ஆய்வு.

கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீற்றம் எதிர்பார்த்ததுதான் என்கிறார் புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில். இவர்தான் மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்கான அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர். காட்கில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்திருந்தால் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

இப்போது கேரளாவிலுள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இது முழுமையாக மழையினால் ஏற்பட்டது அல்ல என்றும் அதிகமானது மனித தவறுகளால்தான் என்கிறார் காட்கில். அறிவியல்பூர்வமற்ற முறையில் நிலமும் மண்வளமும் பயனப்டுத்தப்பட்டதும், நீர்நிலைகளையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமித்து அந் நிலங்களின் பயன்பாட்டை மாற்றியதுதான் முக்கிய காரணம் என்கிறார். 

தமிழகத்திற்கு என்ன பாடம்?

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு சென்னை சந்தித்த வெள்ளத்திற்கு பிறகும் நாம் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை, இப்போது கேரளாவும் நமக்கு பாடங்கள் சொல்லித்தருகிறது. இனியும் தாமதிக்காமல் தமிழகத்திற்க்கென "காலநிலை குறித்த" கொள்கைகளை வகுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும். 1076கி.மீ நீள கடற்கரை கொண்ட தமிழகம் காலநிலை மாற்றத்தால், அதிக தீவிரமான காலநிலை நிகழ்வுகளை சந்திக்கும்/சந்தித்துக்கொண்டுமிருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வு, அதன் தாக்கத்தை எப்படி நாம் குறைக்கமுடியும்(mitigation), மற்றும் காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் (adaptability) என்பதை கணக்கில் கொண்டு நம்முடைய அனைத்து திட்டங்களும் தீட்டப்பட்ட வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது நகரங்கள்தான், ஏனென்றால் குறைந்தநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நம் நகரங்கள் கட்டமைக்கப்படவில்லை, குறிப்பாக நகரத்திலுள்ள வடிகால்கள் தினம் பெய்யக்கூடிய மழையின் அளவைக்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இனிமேல் குறைந்த நேரத்தில், குறிப்பாக மூன்று மணிநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நாம் தயாராக வேண்டும். மாதாந்திர அல்லது தினசரி சராசரிஅளவுகள் எல்லாம் பழங்கதை, இனிமேல் மூன்று மணி நேரத்தில் தீவிர மழைப்பொழிவு சராசரிகள்தான் நம்முடைய செயல்பாடுகளை தீர்மானிக்கும். "நகர்ப்புற வெப்ப தீவு விளைவுகளும்" (urban heat island effect) நகரங்களில் பெய்யும் மழையின் தன்மையை மாற்றக்கூடியது, தமிழகம் அதிகமாக நகர்மயமான மாநிலம் என்பதை இங்கே நாம் நினைவில்கொள்ளவேண்டும். காலநிலை நிகழ்வுகள் கொண்டுவரப்போகும் பொருளாதார இழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், சில செ.மீ. கடல்மட்டம் உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை புரட்டிபோட்டுவிடும் என்கிறார் ஸ்டெபானி ஹல்லேகட்டே, இவர் உலகவங்கியின் "பேரழிவு குறைப்பு மற்றும் மீட்பு" அமைப்பின் பொருளாதார நிபுணர். சென்னை தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல, தமிழக பொருளாதாரத்தின் அச்சாணி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் முகம் (face of employment).  சென்னை கடற்கரை நகரம் என்பதை நாம் குறித்துக்கொண்டு அதற்கென தனிப்பட்ட முறையில் "காலநிலை மாற்றத்தை "எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப உதவிகளின் மூலம் இன்னும் துல்லியமாக கணிக்கக்கூடிய காலநிலை மாதிரிகளை உருவாக்கவேண்டும். பொதுவாக விஞ்ஞானிகள் "பொது சுழற்சி மாதிரிகளை" வைத்துதான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தோராயமான தரவுகளை மட்டுமே தரக்கூடியவை, வெப்பசலனங்களால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுப்பது கிடையாது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் புவியின் வெப்பம் உயர உயர இந்த வெப்பசலனங்கள் மேல் எழுந்து, குளிர்ந்து, மழைப்பொழிவு அதிக அளவில் நடைபெறும். இவற்றை கணக்கிலெடுக்கும் வகையில் நம்முடைய ஆய்வு மாதிரிகள் உருவாக்கப்படவேண்டும், மற்றொரு ஆய்வு "இரு தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு" இடையே உள்ள இடைவெளியை பற்றியதாக இருக்கவேண்டும்.

சமீபத்தில் அமெரிக்காவின் "நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்" "காலநிலை மாற்றம்" குறித்து  வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மேலும் கவலைகொள்ளக்கூடிய விஷயங்களை கொண்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. தற்சமயம் ஐரோப்பிய நாடுகள் மிகக்கடுமையான வெப்பநிலையை சந்தித்துக்கொண்டிருப்பது இந்த ஆய்வுகளின் கூற்றுக்களை உண்மையாக்கிக்கொண்டிருக்கிறது.

"காலநிலை மாற்றம்" மிக முக்கியமான பிரச்சனையாகும், மானுடத்தின் இருத்தியல் (existence) குறித்ததாகும். அதன் தாக்கத்தை குறைப்பதும் எதிர்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்ளவது மட்டுமே நம்முடைய இருப்பை உறுதிப்படுத்தும். மேலும் இது நாளைய பிரச்சனை அல்ல இன்றைய பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.