செவ்வாய், 22 டிசம்பர், 2015

தமிழ்த்தேன் : கவிதை : கோ. பாலக்கிருட்டிணன்

தமிழ்த்தேன்

உன்னில் இருக்கும்
உயிர் உருக்கும் சுவை
உலகில் உனக்கு
இணை எவை?

பொங்கி வழியும் அமிழ்தத்தில்
பொங்கிய குமிழே!
பொங்கலுக்கே இனிக்கும்
பொன் தமிழே!

அறுசுவை என்றாலும் – அதில்
ஒரு சுவையாய் கசப்பிருக்கு.
முத்தமிழ் என்றால் – இதில்
முக்கனியின் சுவை இருக்கு.

நற்சுவை கசியும் கரும்பிருக்கு
நா நக்கும் தேனிருக்கு – தமிழே
நீ இருக்க இதெல்லாம் ஏனிருக்கு?
வேறெதற்கு?
உயிரிருக்கும் உன் சுவையைச்
சுட்டிக் காட்டுதற்கு.

பல மொழிக்கும் குரு மொழியாய்
திருவுக்கும் பொருள் தருவாய்.
தேனால் சொல்லும் மொழியாவாய்
தேனில் செல்லும் திரு நாவாய்!

கிளைமொழிகள் படைத்தத்
தலைமொழியே!
உன்னைக் கற்றால்
செழிக்கும் தலைமுறையே.

உலகில் உதித்த
முதல்மொழியே!
உன் இடத்தை நிரப்ப
வழி இல்லையே.

கலகலப்பும் பளபளப்பும்
உன்னைப் பார்த்துக்
கலகலக்கும்.

விண்ணைப் பார்த்து
தமிழென்றால்,
வெள்ளிக்கோளும்
துள்ளி ஆடும்.

தமிழே வாழ்க!
தமிழரால் வாழ்க!!
            
       கோ. பாலக்கிருட்டிணன்
        11ஆம் வகுப்பு
        அரசு மேல்நிலைப் பள்ளி
        செயமங்கலம்,தேனி மாவட்டம்.



வியாழன், 17 டிசம்பர், 2015

பூமித் தாய் - கவிதை : க. சரவணன்

     பூமித் தாய்                                
                         :       க. சரவணன்

அழகாய்ப் பிறப்பெடுத்து
அற்புத வளங்களைப் படைத்தளித்து
நுண்ணுயிர் வாழ்க்கைக்கும்
நூதனமாய் வழிவிட்ட
பூமகளே...

உன் விரல் பட்டும்
இனிய இதழ் பட்டும்
இனிமை வாழ்வைப்
பெறுகிறோம் நாங்கள்.

இருப்பினும்

அரவணைத்துக் காப்பவளை
அழிய வைக்கும் நிலை
ஏனோ தொடர்கிறது.

மனிதர்கள்
ஒரு கனம் யோசித்தால்கூட
உய்வு பெறுவாய்
பூமித் தாயே!

 க. சரவணன்
  இளம் அறிவியல்- வேதியியல்
  தேனி கலை அறிவியல் கல்லூரி
  வீரபாண்டி, தேனி.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

அஞ்ஞாடி : வரலாற்றின் புதுமொழி :- திருவிருப்போன்


அஞ்ஞாடி : வரலாற்றின் புதுமொழி 
                                                                      : திருவிருப்போன்
ஆண்டிக் குடும்பனுக்கும், மாரி வண்ணானுக்கும் இடையில் மலரும் நட்பில் தொடங்குகிறது வரலாறு. ‘வண்ணாரப் பயலுடன் சேருவதற்காக அடியும் உதையும் வாங்கும் ஆண்டியால் மாரியைப் பிரிந்திருக்க முடிவதில்லை. ‘ரெண்டுபேரும் ஒரு குண்டியிட்டுப் பேலுறவுகள்’ என்று ஊரே எளக்காரம் பேசுகிறது. ஓடைச் சேற்றுச் சகதியில் மாட்டிக் கொள்ளும் ஆண்டியைக் காப்பாற்றும் மாரி கடைசிவரை ஆண்டியின் மனதைவிட்டு அகலுவதில்லை. அவர்கள் போடும் பேச்சுப்பழக்கமும் விளையாடும் விளையாட்டுக்களும் உண்ணும் தின்பண்டங்களும் நம்மை கலிங்கலூருணிக்குள் இழுத்துவிடுகின்றன.
ஆண்டியும் மாரியும் வளர்ந்து கலியாணம் செய்துகொண்டு, குடும்பங்கள் வளர்ந்து பெருகி ஊர் தழைத்து – வரலாறு விரியத் தொடங்குகிறது. ரெண்டு குடும்பங்களுக்கிடையே விடாத தொந்தம் தொடர்கிறது. சம்சாரிக் குடும்பர்களின் வாழ்வும், வண்ணார்களின் பிழைப்பும் ஓவியமாகத் தீட்டப்படுகின்றன. மெதுவாக, பனையேறி சண்முகத்தின் பாடு கதைக்குள் நுழைகிறது. பனைமரத்தின்மேல் அண்ணன்கள் இருவரும் ஒருவரையொருவர் கொலைசெய்து வீழ்ந்து மாள்வதிலிருந்து அவனது பயணம் தொடங்குகிறது. ஆண்டியின் குடும்பத்துடன் வந்து இணைகிறது சண்முகத்தின் குடும்பம். இந்த பந்தமும் கடைசிவரை தொடர்கிறது.
தாது வருசப் பஞ்சம் தலைகாட்டி கலிங்கலைக் கலக்கி ஊரையே மயானமாக்குகிறது. மாரிக்கு தீர்க்க முடியாத வியாதி வந்து, பஞ்சத்திற்கு முன்னமேயே இறந்துபோகிறான். அவன் குடும்பம் பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு வெளியேறுகிறது. பஞ்சத்தில் ஆண்டியின் குடும்பத்திலும் சண்முகம் குடும்பத்திலும் உயிர்கள் பலியாகின்றன.
‘பனையேறி’கள் ‘நாடார்’களாகி வளர்ந்த வரலாறு துல்லியமாக எழுந்துவருகிறது. ‘வளர்ந்த’ பின் அவர்களால் ‘கீழ்ச்’சாதியாக வாழ முடியாமல் போகிறது. மேல் சாதிக்காரர்களின் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடத் தோன்றுகிறது. வரலாற்றின் பிரச்சினை இங்கே தொடங்குகிறது.
நாயன்மார் கதையும், அருகர்களின் கதையும் தலைகாட்டுகின்றன. எட்டப்ப வமிசம் பரவிய கதை, கட்டபொம்மு கதை, ஊமைத்துரை, மருது சகோதரர்கள் வெள்ளைக்காரர்களுடன் போரிட்ட கதை என நீண்டு, எட்டையபுரத்து சமீன் விவகாரங்கள், இந்துக்கள் வேதத்துக்கு மாறிய பின்னணி, நாடார்கள் கழுமலைக்கோயில் ரத வீதிகளில் பல்லாக்கில் போகப் போராடியது, மறவர்களும் பிறரும் சேர்ந்து நடத்திய சிவகாசிக் கொள்ளை எனப் பல சம்பவங்கள் தொடர்கின்றன. நாடு விடுதலை பெற்றபோது நடந்த அக்கிரமங்கள் முதல் இந்திரா காந்தி சுடப்பட்டது வரை .. ஸ்… அஞ்ஞாடி…. நிறைய தகவல்கள். அதிலும் நாடார்களின் ஆலய நுழைவுப் பிரச்சினை அநியாயத்துக்கு நீண்டுகொண்டே போகிறது – 300 பக்கங்களுக்கு மேலாக. சில இடங்களில் ‘போதுமே’ என்று அசர வைக்கிறது. நிறைய ஆவணங்களிலிருந்து மேற்கோள்கள் வேறு. பூமணி, நாவலுக்காக தான் செய்த ஆய்வில் கிடைத்தவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் வாசகனுக்குக் கடத்தியாக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார் போலும்.
ஒரு பெரிய சுற்றுச் சுற்றி வந்து கலிங்கலுக்குத் திரும்புகிறது. சண்முகத்தின் மகன் தங்கையாவை சிவகாசிக் கலகத்தில் பறிகொடுத்துவிட்டு மகனுடன் கலிங்கலுக்கு வருகிறாள் தங்கையாவின் மனைவி தெய்வானை. அவள் குடும்பம் வளரும் கதையாகத் தொடர்கிறது. சிவகாசி, முத்துநகர் என்று ஊர் ஊராகச் செல்கிறது. புதிது புதிதாக மனுசர்கள் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களது உறவுமுறைப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. (எப்படித்தான் இத்தனை மனுசப் பெயர்களை அடுக்க முடிந்ததோ! இதற்கே தனி ஆராய்ச்சி பண்ணியிருக்கணும் போல!) ஊரில் பிற குடும்பங்களின் கதைகள் ஒட்டிப் பிணைந்து தொடர்கின்றன. பின்னால் அறிமுகமாகும் மாடப்பன் எல்லாம் துறந்து ஏகாந்த மனுசனாய் மலைநோக்கி நடப்பதுடன் ‘அஞ்ஞாடி’ முற்றுப்பெறுகிறது.
குடும்பன் சேற்றில் மாட்டிக் கொள்வதில் தொடங்கும் கதை, பள்ளன் துறவு கொண்டு விடுதலையாகிச் செல்வதில் முடிகிறது. இடையில்தான் எத்தன லொம்பலப்பட்ட பெழப்பு! கும்மரிச்சம், குதியாளம், இழவு, பகை, கொலை, கொள்ளை. மனிதன் பேலுவது, மோளுவது, சோற்றுக்கலைவது எதையும் மறைத்துப் பேச முயலவில்லை இவ்வரலாறு. எந்த வேஷமும் போடத் தேவையில்லாத மனுஷ வாழ்வில் யதார்த்தமாய் நடக்கும் அனைத்தையும் எந்த ஒப்பனையுமில்லாமல் சொல்லிச் செல்கிறது. ‘ஆஹா இது உசந்தது’ என்றோ ‘சை இது அபத்தம்’ என்றோ எதையும் வகைப்படுத்துவதில்லை. வாசகன் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளட்டும் என்றுகூட எதிர்பார்ப்பதில்லை. அச்சு அசல் பூமணி முத்திரை!
பொதுவாக, பூமணியின் கதைகள் அவை நிகழும் இடங்களால், சூழல்களால் சொல்லப்படும் தோற்றத்தை அளிக்கும். கதைசொல்லியோ, கதாபாத்திரமோ பேசாமல், அந்த இடமே கதை சொல்வதாக ஒரு பிரமையை ஏற்படுத்தும். ‘அஞ்ஞாடி’ அப்படியில்லாமல் காலவெளியே தன்னுள் நிகழ்வதைச் சொல்லிச் செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் வரலாறு!
வரலாறும் புனைவும் ஒன்றையொன்று சொகமாகத் தழுவிச் செல்லும் கதையோட்டம். இதைச் சொல்ல பூமணி கையாண்டுள்ள மொழி கிறங்கச் செய்கிறது. ‘சின்னனந்தி விடியக்காலக் காளானாகப் பூத்து பெரியமனுசி’யாகிறாள். ‘ரெண்டுபேரும் பேச்சுப்போட்டால் லேசுக்குள்’ தீருவதில்லை. ‘கழுதையைக் கூட்டிப்போய் பின்புறமிருந்து சன்னஞ் சன்னமாகத் தள்ளி’ ஓடைக்குள் இறக்குகிறான். சம்பவங்களோடும், மனுசர்களோடும் நம்மை நெருக்கமாக உணரச்செய்கிறது இந்த மொழி.
பனையேறி சகோதரர்கள் ஒருவரையொருவர் மரத்திலேயே வெட்டிக்/குத்திக் கொல்லும் காட்சி, ஊமைத்துரை செயிலில் இருந்து தப்பித்த வைபவம், வெள்ளைக்காரன் ஊமைத்துரையுடன் போடும் சண்டை, கழுகுமலையில் நிகழும் கலவரம், திருவிழா/தேர்க் காட்சிகள், சிவகாசிக் கொள்ளை போன்றவை பதிவுசெய்யப்பட்டுள்ள நேர்த்தி பிரமிக்க வைக்கிறது. தேர்ந்த ஒளிப்பதிவாளனின் கைவரிசையை எழுத்தில் பார்க்க முடிகிறது.
கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் நடக்கும் மூல சிகிச்சை, மதுரை மீனாட்சி கோயிலில் நுழைந்ததற்காக அடிவாங்கும் இரு குடும்பர்களின் பழிவாங்கும் படலம், குளுவனின் சவுரி முடி ரகசியம் போல சில அதிரவைக்கும் இடங்களும் உண்டு. ஆனால், பூமணி பொதுவாகவே வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்குவதை எல்லாம் நம்புவதில்லை. ‘இன்னின்ன மாதிரி நடந்ததப்பா’ என்று கோடிக் காட்டிவிட்டு மறைந்துவிடுவார். கூறிச் செல்லும் சம்பவங்களும் மனுசர்களுமே நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அரித்தெடுப்பார்கள் – சிறிது சிறிதாக தன் வீரியத்தை வெளிப்படுத்தும் மருந்துபோல. அஞ்ஞாடியிலும் ரெம்ப விசயங்கள் அப்படித்தான். படித்துச் செல்லும்போது ‘இதும் இப்பிடியா’ என்று எங்கேயும் நாம் திகைத்து நிற்பதில்லை. ஆனால், அசைபோடும்போது ஒவ்வொன்றாய் நம்மைத் திகைப்பில் தள்ளும்.
நிசமாய் நடந்தது போல் சொல்லப்படும் புளுகுணிக் கற்பனைகள் (குறிப்பாக மாரியின் எல்லையில்லா கற்பனைகள்), கனவுகள் (மேரி மாதாவும் முருகப்பெருமானும் சந்திப்பது முக்கியமானது), கேள்விப்படாத புராணங்கள் (க்ருஷ்ணனுக்கும் சப்தகன்னிகைகளுக்கும் பிறக்கும் ஏழு பிள்ளைகள்), உலக நடப்புகளை திருமாலின் கருடனும், சிவனின் பாம்பும் சேர்ந்து பார்வையிட்டு விவாதிப்பது, நாடு விடுதலை பெற்றதை விலங்குகள் பேசிக் கொள்வது, சாமியாருடன் பேசும் நாய், ஆண்டி, கருப்பி, அவர்களது மகள் மூவரும் சவக்குழியிலிருந்து வெளியே வந்து பேச்சுப்பழக்கம் போடுவது – இவை கதைக்கு இன்னுமொரு பரிமாணத்தைக் கொடுக்கின்றன.
அஞ்ஞாடியை வெறும் தகவல் தொகுப்பு என்று சொல்லி சிலர் ஒதுக்கலாம். ஆமாம், இது ஒரு தகவல் களஞ்சியமே. இந்தக் களஞ்சியத்திலிருந்து என் தந்தைதந்தை தம் மூத்தப்பன் காலத்தில், என் நிலத்தில் வாழ்வு எப்படி இருந்தது என்பதை நான் கண்டுகொள்கிறேன். இன்றைய நிலையை நாம் எப்படி வந்தடைந்தோம் என்று தெளிகிறேன். என்றோ, விதிவசத்தால் அரசுரிமை பூண்டவர்களின் வாழ்வு பற்றிய வரலாற்றிலிருந்து நான் எதையும் பெற வாய்ப்பில்லை. என் பாட்டன் பூட்டனின் வாழ்வே என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. எதன் நீட்சி நான் என்று தெரிந்துகொள்ளும்போது பல திறப்புகள் உண்டாகின்றன. இதற்காகவே நான் ‘அஞ்ஞாடி’யைக் கொண்டாடுவேன்.
இத்தனை மனுசர்களும், இடங்களும், சம்பவங்களும் ஒரு நாவலில் தேவையா? நான் இப்படி எடுத்துக் கொள்கிறேன் – ஒரு தேன்கூட்டை எடுத்துக்கொண்டு அதை விளக்குவதற்கு முற்படுகிறார் பூமணி. அந்தக் கூட்டின் வாழ்வு என்பது அதில் உள்ள தேனீக்களின் கூட்டுச் செயல்பாடே. ஒவ்வொரு தேனீக்கும் பேர் சூட்டுகிறார். ஒவ்வொரு அறையையும் பெயர் சொல்லி அழைக்கிறார். கூட்டில் நிகழ்பவற்றை பட்டியலிட்டுக் கொண்டே செல்கிறார். தேனீக்கள் மூலம் கூட்டில் சேரும் தேனை வேண்டுவோர் எடுத்துக் கொள்ளலாம், சப்புக்கொட்டி சுவையை அசைபோடலாம்.
ஆண்டிக் குடும்பனை உயிர் நண்பனான மாரி வண்ணான் ‘நீங்க’ என்று மரியாதையுடன் அழைக்கிறான். ஆண்டியின் மனைவி கருப்பி ‘ஏ இவனே’ என்றுதான் விளிக்கிறாள். கதையில் ஆண்டி கடைசிவரை அவன் இவன் என்றுதான் சுட்டப்படுகிறான். ஆனால், ‘நாடான்’ பயல்களெல்லாம் வளர்ந்து ஒரு ‘மேனத்து’ வந்ததும் அவர் இவர் என்றாகிவிடுகிறார்கள்.
வெவ்வேறு சாதிகளுக்கிடையேயான உறவு, கீழ்ச்சாதிக்காரன் பொருளாதார ரீதியாக முன்னேறியபின் மேல் சாதிக்காரனுடன் தொடுக்கும் போராட்டம், எப்படியானாலும் கீழ்ச்சாதிக்காரனை மட்டந்தட்டியே வைத்திருக்கவேண்டும் என்ற மேல்சாதி மனப்பான்மை, இந்தக் கொடுமையெல்லாம் வேண்டாம் என்று வேதத்திற்கு மாறினால் அங்கேயும் துரத்தும் பகை – எல்லாம் சரடாக ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஆண்டியும் கருப்பியும் கழுகுமலைக்கு சாமிகும்பிடப் போகும் காட்சி அலாதியானது. விரதமிருந்து கஷ்டப்பட்டு நெடுந்தூரம் நடந்து போனால் கோயிலுக்குள் சென்று சாமியைப் பார்க்க முடியாதாம். வீதியில் பவனி வரும் சாமியைப் பார்த்துவிட்டுப் பரவசமாவதோடு சரி. அன்றைய மேல்சாதிக்காரனைப் போய் ‘செருப்புட்டு’ அடிக்கவேண்டும் என்ற ஆத்திரம் நம்மை பற்றிக்கொள்கிறது. உடனேயே, ஆண்டி சொல்லும் இரு குடும்பர்களின் கதையைக் கேட்டு ‘வக்காளி, நல்லா வாங்கினான்டா பழி’ என்று ஆறுதல் கொள்ள முடிகிறது.
சண்டீராகித் திரியும் கருத்தையன், அவன் சேக்காளி நொண்டியன், குஷ்டரோகத்தால் அவதிப்பட்டாலும் கர்த்தர் மீது கீர்த்தனங்கள் இயற்றி அவர் புகழ் பரப்பும் உபதேசியாராக அலைந்து திரியும் மரியான், கணவனை இழந்தபின் உடல்பசிக்காளாகி கருக்கலைத்துக் கொள்வதையே தொழிலாகக் கொள்ளும் ஆண்டாள், புத்திசாலிக் கிறுக்கன் கோயிந்தன், சாமியாராகியும் அல்லல்படும் சுந்தர நாயக்கர் – பல பேர் கொஞ்ச நேரம் தலைகாட்டினாலும் மறக்க முடியாதவர்கள்.
மாரியின் வண்ணான் பாட்டிலிருந்து, சுந்தர நாயக்கர் பாடும் பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல் வரை சுவையான பாடல்கள் அங்கங்கே அஞ்ஞாடிக்கு இசை சேர்க்கின்றன. வெள்ளாமையும் வியாபாரமும் தீப்பெட்டி ஆபிசுக்கும் வேட்டு யேவாரத்துக்கும் வழிவிட்ட கதைபோல, தெம்மாங்கும் ஒப்பாரியும் எம்சியார் படப்பாடல்களுக்கு இடம்கொடுத்து ஒதுங்கிக்கொண்டதும் பதிவாகியிருக்கிறது. குடுமியிலிருந்து கிராப்புக்கு வந்த கதையும், காட்டித்திரிந்த ‘அடுப்பி’லிருந்து அண்ட்ராயருக்கு வந்த வகையும்தான்.
‘அஞ்ஞாடி’யைப் படித்து முடித்தவுடன் தோன்றிய மனப்பதிவே இது. அசைபோட அசைபோட அஞ்ஞாடியின் பல கூறுகளும் மனதில் எழுந்தபடியேதான் இருக்கப்போகின்றன. கூளத்தைக் கொஞ்சமாகப் பிடுங்கிப்போட்டு படிப்பவனை ரெம்ப நாளைக்கு அசைபோட வைக்கும் பூமணி, அஞ்ஞாடி என்ற போரைத்தூக்கி நம் முன் போட்டு, அசைபோடும் மாடாக வாசகனை மாற்றும் கலையில் மீண்டும் வென்றிருக்கிறார்
நன்றி: திருவிருப்போன் வலைத்தளம்

வியாழன், 10 டிசம்பர், 2015

ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல் : - பிரபஞ்சன்

                 ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்
                                                                    பிரபஞ்சன்  
தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.
வரலாற்றுக் காலத்தில் இருந்து சாதி, மத மற்றும் பார்ப்பனியக் கட்டமைப்புகளால் ஒடுக்கப்பட்ட தலித்துகள் பெண்கள், சிறுபான்மையினர் மேலெழும் காலம் இது. அவர்கள் பற்றி அவர்களாலும் பிற சமூகத்தாலும் எடுக்கப்படும் கதையாடல்கள் மேலெழத் தொடங்கிவிட்டன. விளிம்பு நிலை மக்களினும் புறத்ததாக, வெளிச்சமே பரவாத இருட்டில் வைக்கப்பட்டவர்களாக அரவாணிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆகக்கடைசிப் படிகளில் வைக்கப்பட்டவர்கள் இவர்களே ஆவர். ஒரு சமூகமே மெலெழுந்து அவர்களை, மிகுந்த அருவருப்பு கொண்டு விலக்கியும், இழிவு படுத்தியும், கேலி கிண்டலுக்கும் வசை மொழிக்கும் உள்ளாக்கியும் தனித்து வைத்திருக்கும் ஒதுக்கலில் இருந்து மீறிச் சில ஒற்றைக் குரல்கள் வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. மிகுந்த ஆளுமையும் வன்மையும் கொண்ட குரலாகப் பிரியா பாபு வெளிப்பட்டிருக்கிறார். இயக்க பூர்வமாகவும், செயல்பாட்டு அளவிலும் ஏற்கனவே அரவாணிகளின் மனசாட்சியாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் வெகுசிலரில் குறிப்பிடத்தகுந்த பிரியாபாபு இப்போது நாவலுடன் சமூகத்தின் மனசாட்சியுடன் ஓர் உரையாடல் நிகழ்த்த வந்திருக்கிறார்.
ரமேஷ் என்கிற பதின்பருவச் (டீன்ஏஜ்) சிறுவன், எங்ஙனம் படிப்படியாகத் தான் பெண் என்பதை உணர்கிறான் என்பதிலிருந்து கதையைத் தொடங்குகிறார் ஆசிரியர். பார்வதி வெளியே சென்று திரும்புகிறபோது, வீட்டிலிருந்து ஒரு பெண் பாடும் சப்தம் கேட்கிறது. பெண் வீட்டில் இல்லாதபோது, எங்கிருந்து பெண்பாட்டு? அவள் ஜன்னல் வழி கவனிக்கிறாள். உள்ளே அவள் மகன் ரமேஷ், அம்மாவின் ஜாக்கெட்டையும் புடவையையும் அணிந்து, அழுத்தமான மேக்கப்போடு, கண்ணாடிமுன் நின்று பாடியும் ஆடியும் களிப்பதைக் கண்டு பார்வதி அதிர்ச்சியடைகிறாள். .  இது குடும்பத்துக்கு நேரும் அவமானம் என்று துவள்கிறாள். ரமேஷின் அண்ணனும் தம்பி 'இப்படி' இருப்பதை வெறுக்கிறான். வெறுப்புக்கும், தெரு, பள்ளியில் கேலிக்கும் இழிவுக்கும் உள்ளாகும் ரமேஷ், மூத்த அரவாணியான ஜானகியம்மாளிடம் அடைக்கலம் ஆகிறான். ஜானகி, அவனுக்குப் புத்தி சொல்லி அரவாணி வாழ்க்கையின் அவலத்தைச் சொல்லி எச்சரிக்கிறாள். பார்வதி, அரவாணிகள் சிலர் சைதைக் கடைத்தெருவில் பிச்சை எடுக்கும் காட்சியைக் கண்டு, தன் மகனுக்கும் அதுவே கதி என்று பதறுகிறாள். . . பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு அரவாணி, தன்முன் பிச்சை கேட்கும் ஒரு மூதாட்டிக்கு உதவுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள் பார்வதி. ஒரு ரயில் பயணத்தில் பார்வதி, அரவாணிகளுக்குப் பணி செய்கிற கண்மணி என்பவளைச் சந்திக்கிறாள். அவள் மூலம், பால்திரிபு அல்லது பால் மாற்றம் பற்றிய புரிந்துணர்வை அடைகிறாள். ரமேஷை அவளால் புரிந்து கொள்ள முடிகிறது. ரமேஷ், தான் அவாவும் பெண்பாலைத் தேர்வு செய்கிறான். பாரதி என்ற புதிய பெயரை ஏற்கிறான். தன் அரவாணி சமூகத்துக்காகப் பணி செய்ய உறுதி கொள்கிறாள் பாரதி.
மூன்றாம் பாலின் முகம் நாவலின் நிகழ்ச்சி அடுக்குகள் இவை. மிகச்சரியான இடத்தில் தொடங்குகிறது கதை. பொதுவாகச் சிறுவர்கள், வளர்ச்சிப் போக்கில் அம்மா, சகோதரிகள் என்கிற வளையங்களில் இருந்து விடுபட்டு, பையன்கள், பையன்கள் சார்ந்த வெளிகளில் புழங்கி, தாங்கள் ஆண்கள் என்கிற உணர்வை எய்தி, சமூகம் அவர்களுக்கென்று ஏற்படுத்தித் தந்த பிரதேசங்களில் தங்களைப் பொறுத்திக் கொள்கிறார்கள். ஆண் இடம், ஆண் செய்கைகள் என்று எவையும் இல்லை. இவையெல்லாம் சமூகக் கருத்தியல்களின் விளைவுகள். சிறுவன் ஒருவன், தன் பதின்பருவத்தில் பெண் சார்ந்து, அம்மா, அக்கா, தங்கை மற்றும் அருகிலிருக்கும் பெண்கள் சார்ந்து, பெண்களுக்கென்று விதிக்கப்பட்டுள்ள வீட்டுப் பணிகளைச் செய்து, மனத்தளவில் தான் பெண், தனக்குள் ஓங்கி வளர்வது பெண் உணர்வே என்று  அறியத் தலைப்பட்டபோது அவன் பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். ஆணாக அறியப்படும் ஒருவன், தான் தன்னைப் பெண்ணாய் உணர்வதும், அதற்குத் தக நிலவும் ஆடை அணிகளை அணிவதும், அந்த மனிதனின் சுதந்திரம் என்பதைச் சமூகம் ஏற்க மறுக்கிறது. ஆண் என்பவன், எங்ஙனம் பெண் ஆகலாம் என்பதே சமூகத்தின் கேள்வியாகிறது. ஆண், பெண்ணாவது என்பது, ஆணின் அதிகாரத்தை எதிர்க்கும் சவாலாக ஆண் சமூகம் உணர்ந்து, எதிர் நடவடிக்கையில் இறங்குகிறது. அரசுகள், அவை கைக்கொள்ளும் அதிகாரங்கள் எல்லாம் ஆண்மையம் கொண்டவை. எனவே, அரவாணிகளின் இருப்பை, அவர்களின் புழங்குவெளியைச் சட்டங்களாலும் நெறி முறைகளின் பெயராலும் ஒடுக்குகிறவைகளாக அரசுகள் மாறுகின்றன. அரசு அதிகாரம் ஆகியவைகளின் குறுவடிவமாக குடும்பங்கள், தன் அரவாணிக் குழந்தையைத் தம் பகை வடிவாகக் கொள்கின்றன. அவமானச் சின்னமாகவும் கருதி அரவாணிக் குழந்தைகளைப் புறக்கணிக்கின்றன. கடும் சிறை, தாக்குதலால், ஒரு கட்டத்தில் அச்சிறுவன் வெளியேறி, தன் இனம் என்று அவன் உணரும் அரவாணிகள் குழுவில் தன்னை இணைத்துக் கொள்கிறான். இதில் அவன் அடையும் சமூகப் பாதுகாப்பே மிக முக்கியம். அவன், தன்னைப் பெண்ணாக ஆக்கிக் கொள்கிறான். அவன் விருப்பம், ஆசை, வாழ்முறை அது என்று அதை ஏற்றுக் கொள்வதே அறிவுபூர்வமான சமூகத்தின் செயல்முறை. நம் சமூகம் மூடச் சமூகம். ஆகவே அர வாணிகள் இவ்வளவு இழிவுக்குள்ளாகிறார்கள்.
அரவாணிகளில் பலர் பள்ளி வகுப்புகளையும் முடிக்காதவர்கள். அந்தப் பதின் பருவத்திலேயே அவர்களின் அடையாளக் குழப்பம் தொடங்குவதன் காரணமாக அவர்கள் குடும்பங்களிலிருந்து வெளியேறுகிறார்கள் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். தொழில் அறிவும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. எனவே, வேறு வழி இன்றியே அவர்கள் பிச்சை ஏற்கவும், விபசாரம் செய்யவும் நேர்கிறது. இதில் அரவாணிகளின் தவறு எங்கிருக்கிறது? அந்த அரவாணிக் குழந்தையின் குழப்பம் தலைப்படும்போதே, அதைப் பரிந்து பேசி, அக்குழந்தையைப் புரிந்து கொள்ளும் கடமையை மேற்கொள்ளாத குடும்பங்களே/சமூகமே/அதிகாரக் கூடாரங்களே தவறு செய்தவர்கள்.
ஒரு அரவாணி உருவாவது என்பது பற்றிய விஞ்ஞானத் தகவல்கள் பல புதிர்களைக் கட்டவிழ்க்கின்றன. மகாராசன் தொகுத்த 'அரவாணிகள்' என்னும் மற்றும் ஒரு முக்கிய ஆவணமான நூலில் டாக்டர் ஷாலினி நமக்குப் புதிய பல தகவல்களைச் சொல்கிறார். இந்தப் பூலோகத்தில் பிறக்கும் எல்லா ஜீவராசியும் 'ஜனிக்கும்' அந்தக் கணத்தில் பெண் பாலாய்த்தான் ஜனிக்கிறது. அந்த உயிர்க்கரு பெண்ணாகவே இருக்கிறது. அந்தக் கருவின் உடம்பில் ஒற்றை Y குரோமோசோம் வீற்றிருந்தால், அது கரு உருவான ஆறாம் வாரத்தில் டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார் மோனை உற்பத்தி செய்கிறது. அந்த டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் அந்தக் கருவின் உடம்பு முழுக்கப் பரவி எல்லா செல்களையும் 'ஆண்மைப்படுத்தி' விடுகிறது. ஆறு வாரம் வளர முலைகள், மூளை நரம்புகள், கர்ப்பப்பையாகப் பிறகு வளரப் போகும் முலேரியன் குழாய்கள் என்று முழுவதுமாய் பெண்பாலாய் இருந்த அந்த சிசு, டெஸ்டோஸ்டீரோனின் உபயத்தால் மெல்ல மெல்ல மாறுகிறது. அதன் இனப்பெருக்க உறுப்புகள் ஆண்மைப்படுத்தப்படுவதால் விரைப்புறுப்பு, விந்தகம் மாதிரியான புதுப்புது உறுப்புகள் உருவாகின்றன. அதே போல, சிசுவின் மூளை நரம்புகளும் மாற்றி அமைக்கப்படுவதால் 'ஆண்' என்கிற உடல் உருவம் மூளையில் பதிகிறது. இதனை 'பாடி இமேஜ்' என்கிறோம். நம் எல்லோரின் மூளையிலும் நமது ஒவ்வொரு புற உறுப்பிற்கான உருவகமும் பதிந்திருக்கிறது.
'நான் ஆம்பிளையாக்கும்' என்று மீசை முறுக்கும் சண்டியர்கள் எல்லோருமே முதல் ஆறு வாரங்கள் பெண்ணாக இருந்து, 'பெண்மயம்' கருணையினால் ஆண்களாகப் பிழைத்தவர்கள்தான் என்பதை அறியும்போது மகிழ்ச்சி தோன்றுகிறது. அதோடு, மரபணுக்கள் கர்ப்பப்பைக்குள் செய்த யுத்தமும் மூன்றாம் பால் தோன்றக் காரணமாகிறது என்பது விஞ்ஞானம். இதற்கு அப்பன்மார்களும் அண்ணன் மார்களும் குதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
தமிழ் இலக்கணங்களான தொல்காப்பியமும் நன்னூலும் அரவாணிகள் பற்றிப் பரிசீலிக்கின்றன. என்றாலும் அவர்களது மனோபாவம் பற்றிய ஆய்வாக அவை இல்லை. இன்னும் மேலாக, அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் அவை இல்லை. இந்த உலகம், மனிதர்களின் தொகுதியால் ஆனது என்பதையும், உலகத்தின் அடிப்படை அலகாகவும் மக்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவை ஒப்புகின்றன. அந்த வகையில் அவை முன்னேற்றகரமானவை என்றாலும், மக்கள், ஆண்கள், பெண்கள் என இருவகைத்தானவர் என்ற அளவுக்கு மட்டும் தான் இலக்கண ஆசிரியரின் பயணங்கள் நடந்திருக்கின்றன. 'உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே' என்கிறார் தொல்காப்பியர். அதாவது, 'மக்கள்' என்று சமூகம் சுட்டுகிற பொருள்களை உயர்திணை என்கிறார். மக்கள் என்று கருதப்படாத பிற பொருள்களை அஃறிணை என்கிறார். மண்ணின்மேல் உள்ள உயிர்ப் பொருள்களில் மக்கள் சிறந்தவர். ஆகவே அவர்கள் உயர்திணை. உரையாசிரியர்கள், மக்கள் பற்றிய ஆராய்ச்சியை மேலும் நீட்டித்தார்கள். 'மக்கள் என்றது மக்கள் எனும் உணர்வை' என்று ஆழப்பட்டார்கள். ஆனால் பால் திரிந்த மக்களிடம் வரும்போது இந்த ஆண்களின் ஆய்வுகள் இறுக்கம் அடைகின்றன. 'ஆண்மை திரிந்து பெண்மையை ஏற்கும் பெடியை உணர்த்துதற்கு, உயர்திணைக்குரிய ஈறுகளைச் (கடைசி எழுத்துகள்) சேர்த்துக்கொண்டு, உயர்திணையாகவே பாவியுங்கள் என்கிறார் தொல்காப்பியர். குறைந்தபட்சம், பெண்மையை விரும்புகிற மக்களை அஃறிணை என்று புறக்கணிக்கவில்லை தொல்காப்பியர். ஆனால் தொல்காப்பியருக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின்வந்த நன்னூல் ஆசிரியர், அரவாணிகள் மேல் கடுமை காட்டுகிறார்.
'பெண்போலப் பிறந்து, பெண் தன்மையை விட்டு ஆண்தன்மைகளை அவாவுகிறவர்களைப் பேடுகள் என்றழையுங்கள். அவர்களை ஆண் பாலாகவே அழைக்கலாம். எழுதலாம். அதுபோல, ஆண்போலப் பிறந்து, பெண்தன்மையை அவாவுகிறவர்களும் பேடுகளே ஆவார்கள். அவர்களைப் பெண்கள் (பெண்பால்) என அழையுங்கள். இவர்கள் பேடி என்றும் அறியப்பட்டார்கள். இவர்களை உயர்திணையாகவும், அஃறிணையாகவும் அழைக்கலாம். இது நன்னூல் இலக்கண ஆசிரியரின் திரண்ட கருத்து. நன்னூல் ஆசிரியர் ஒன்று-ஜனநாயக பூர்வமாகவும் இயங்குகிறார். இரண்டு -சமூக வழக்கையும் விமர்சனம் இன்றி ஏற்றுக் கொள்கிறார். ஜனநாயகம் என்றது, மக்கள் தாங்கள் எந்தப் பாலை அவாவுகிறார்களோ, அந்த விரும்பிய பாலாலேயே அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். இது நம் இலக்கண மரபில் மிகச் சிலாக்கியமானது. ஆனால், தன் காலத்து  (எட்டாம் நூற்றாண்டில்) சமூகம், அரவாணிகளுக்கு சமூக அந்தஸ்தை வழங்க மறுத்திருக்கிறது. ஆகவே பால் திரிந்தவர்களை அஃறிணை என்றும் அழைக்கலாம் என்கிறார். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத இழிவு, நன்னூல் ஆசிரியர் காலத்தில் ஏற்பட்டுவிட்டது. நம் காலத்துவரை, இந்த இழிவு நீடிக்கிறது.
காதல் வரலாறு-டயன் அக்கர் மென் (தமிழில்: ச.சரவணன்) எழுதிய உலகப் புகழ்பெற்ற புத்தகம். உலக இனங்கள் காதலை எப்படியெல்லாம் வண்ணம் பூசி, வாசனை தெளித்து வளர்த்து வந்திருக்கிறது என்பதையெல்லாம் மிகுந்த ஆராய்ச்சியோடு (ஆராய்ச்சியின் நெடியே இல்லாமல்) எழுதி இருக்கிறார். கிரேக்கர்கள் வளர்த்த காதல் பற்றி நிறைய நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை எழுதி இருக்கிறார். (நமக்கு ருஷ்டி மேல் வழக்கு போடத்தானே தெரியும்?) கிரேக்கம், வாக்கெடுப்பு எடுத்து ஜனநாயகத்தை ஓம்பிய நாடு என்பதை நாம் அறிவோம். வெறும் முப்பது ஆயிரம் மக்களைக் கொண்ட ஏதென்ஸ், ஒரு தனி உரிமை பெற்ற ராஜ்யம். இந்தியா போலவே, அதுவும் ஆண்மையம் கொண்ட நாடுதான். பெண்கள், வீட்டுப் பின் கட்டுகளில், இருள்படிந்த சமையல் அறைகளில் தான் இருந்தார்கள். பாட்டுக் கலையும் நாட்டியமும் விரும்பப்பட்டன. அவை மனைவிமார்களால் கற்று வெளிப் படுத்தப்படாதவரை. விலைமகளிர் மந்தைகளாக அலைந்தார்கள். சாக்ரட்டீஸ்கள் சாதாரணமாகத் தேநீர்க்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தியபடி தத்துவ உரையாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். பிளேட்டோக்கள்  விறகு வெட்டிக் கொண்டே மாணவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள் என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம்தான். ஏதேன்ஸ் தெருக்களில்  சாக்கடைகளே  இல்லை. அதற்குப் பதிலாக அறிவுத் தேடலே வழிந்து ஓடின என்பதுபோன்ற சித்திரங்களே நமக்குக் காட்டப்பட்டிருந்தன. அங்கே, கிறிஸ்து பிறக்கும் முன்னர் ஆண் பெண் காதல்களைக் காட்டிலும் ஆண் ஆண் காதல்கள் அங்கீகரிக்கப்பட்ட பெருவழக்காக இருந்தன என்பதைப் பற்றிய எந்தப் பதிவும் பொதுவாக வருவதில்லை. டயன் அக்கர்ரெமன் அவ்வழக்கங்களைப் பதிவு செய்கிறார்.
கிரேக்க இலக்கியங்கள் இந்த வகை உறவுகளைப் போற்றி இருக்கின்றன. உடற்பயிற்சிக் கூடமே, கிரேக்க இளைஞர்கள் காதலர்களைத் தேர்வு செய்யும் இடமாக இருந்துள்ளன. உடற் பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் நிர்வாணமாகவே பயிற்சி செய்தனர். ஆரோக்கியமான உடற்கட்டினை அழகு என்று அவர்கள் நம்பினார்கள். தங்கள் காதலர்களை அங்கே அவர்கள் தேர்வு கொண்டார்கள். அரிஸ் டோபேன்சுடைய 'மேகங்கள்' என்ற படைப்பில் ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறும் பகுதி இது:
'எப்படி அடக்கத்துடன் இருப்பது, விதைகளைக் காட்டாது அமர்வது, எழுந்திருக்கும்போது அவனது புட்டங்களினால் ஏற்பட்ட பதிவு தெரியாதவாறு மண்ணைச் சரி செய்தல், மேலும் எவ்வாறு வலுவாக இருப்பது. . . அழகு வலியுறுத்தப்பட்டது. ஒரு அழகிய இளைஞர் நல்ல இளைஞனாகக் கருதப்பட்டான். கல்வி என்பது ஆணின் காதலுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்ற இந்தக் கருத்து ஸ்பார்ட்டாவினுடைய கருத்தை ஒட்டியிருந்த ஏதென்சின் கருத்தியல் கோட்பாடாயிருந்தது. அவனைவிட மூத்த ஒரு ஆணைக் காதலிக்கும் இளைஞன் அவரைப் பின்பற்ற முயல்வான். அதுதான் அவன் கல்விப் பயிற்சியின் அனுபவ மையம். மூத்த அந்த ஆணும் இளைஞனின் அழகின் மேல் உள்ள விருப்பத்தினால் அவனை மேம்படுத்த தான் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வார்’
ஒரு சிறுவனின் கல்வியில் இவ்வகையான ஓரினச் சேர்க்கை ஒரு பண்பட்ட நிலை என்பது ஒரு கோட்பாடாகவே கிரேக்கப் பகுதியில் இருந்தது என்பது அக்கர்மென் குறிப்பிடும் வரலாற்றுச் செய்தி. ஆசிரியர், பழைய கிரேக்கத்தை வழிமொழிகிறார் என்பதல்ல இதன் பொருள். இன்றைய காதல் மற்றும் காமச் செயல்பாடுகள், அவைகளின் மேல் இன்றைய சமூகம் விதித்திருக்கும் அற மற்றும் சட்டக் கோட்பாடுகள் என்பவை இன்றைய அதிகாரமையங்களின் கருதுகோள்களே ஆகும். மனிதர்களின் காதல் உள்ளிட்ட அனைத்து வாழ்முறைகளும் இன்று அதிகாரம் கட்டமைக்கும் ‘பவித்திர’மாகவே எல்லாக்காலத்தும் இருந்ததாக  இல்லை,  மற்றும்  பல்வேறு  கட்டங்களைக் கடந்தே மனிதகுலம் இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது என்பதைச் சொல்வதே வரலாற்றாசிரியர்கள் நோக்கமாக இருந்தது. இது குற்றம் இது குற்றமற்றது என்கிற இருநிலைகளை, அதன் வழி குற்றமனோபாவங்களை அவ்வக் காலத்துச் சமூகமே கட்டமைக்கிறதே அன்றி, அச் செயல்கள் அல்ல.
தனி மனிதர்களின் படுக்கை  அறைக்குள் நுழைந்து சட்ட நகல்களை நீட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன அதிகாரச் சக்திகள். இது மனித உரிமை மீறல் என்பதையே அறிவுவர்க்கம் காலா காலமாகக் காட்டிக் கொண்டிருக்கிறது.
அரிஸ்டோ பேன்சின் ‘பறவைகள்’ கவிதை. ஒரு முதியவன். இன்னொருவனுக்குச் சொல்வது போல அமைந்தது.
‘நல்லது. துணிச்சல் மிக்கவனே! நடைமுறைக் காரியங்கள் நன்றாகவே உள்ளன. உடற்பயிற்சிக் கழகக் குளியல் அறையிலிருந்து புத்துணர்ச்சியுடன் வெளிவரும் என் மகனை நீ சந்தித்த போதும், நீ அவனை முத்தமிடவில்லை. நீ அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நீ அவனை அணைத்துக் கொள்ளவும் இல்லை. நீ அவனது விதைகளை உணர்ந்து பார்க்கவும் இல்லை. மேலும் நீ எங்களுடைய நண்பன் என்று கருதப்படுகிறாய்’
கிரேக்கப் பெண்கள் சாப்போவை நேசிப்பவர்களாக இருந்துள்ளார்கள். பெண் ஒடுக்குமுறையில் இந்தியாவுக்குச் சற்றும் குறையாதது கிரேக்கம். அங்கேயும் பல மநுக்களும் மநு புத்திரர்களும் சாக்ரட்டீசின் அங்கியைப் போர்த்திக் கொண்டு பிரசங்கம் செய்திருக்கிறார்கள். காலம் காலமாகப் பெண்களின் பிறப்புறுப்புகளுக்கு ஆக கனமான பூட்டுகளைப் போட்டு, சாவியைத் தம் இடுப்பில் செருகிக் கொண்டு அலைந்திருக்கிறார்கள் கிரேக்க ஆண்கள். உலக ஆண்களில் முக்கால் வாசிப்பேர்கள், தங்களின் மனைவிமார்களின் அந்தரங்கங்களில் அன்னிய ஆண்கள் பிரவேசித்து விடக் கூடாதே என்ற கவலையிலேயே வாழ்ந்து சாகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் 'கள்ளக்காதல்' என்ற வினோதமான வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். காதலில் கள்ளம் ஏது? காதலில் கறுப்பு வெள்ளை இருக்கிறதா என்ன? இந்திய எய்ட்சின் எண்ணிக்கை உலக மக்களைத் திடுக்கிடச் செய்திருக்கிறது என்பதை எவ்வளவு சுலபமாக மறந்து கண்ணகியைப் பற்றிக் கவலைப்படுகிறோம் நாம்?
பெண்கள் தன்பால் புணர்ச்சி குறித்து ஒரு மேற்கோளை ரியேடான் னாஹிலிருந்து எடுத்துக் காட்டுகிறார் அக்கர்மென்.
'சுய இன்பம், கிரேக்கர்களுக்கு ஒழுங்கீனமான செயலாக இல்லாமல் ஒரு பாதுகாப்புச் சாதனமாக இருந்தது. ஆசியா மைனரில் உள்ள மிலெட்டஸ் என்ற செல்வச் செழிப்பான நெய்தல் நில நகரம், கிரேக்கர்களால் 'ஒலிபாஸ்' என்று அழைக்கப்பட்ட 'டில்டோ' சாதனங்களைத் தயாரிப்பதிலும் ஏற்றுமதி செய்வதிலும் ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கியது. இது ஆண் குறியின் மாற்று உரு அமைப்பு. கிரேக்கர் காலத்தில் மரத்தினாலோ, தோல் அட்டைகளாலோ செய்யப்பட்டு, உபயோகிப்பதற்கு முன் ஆலிவ் எண்ணெய் கொண்டு வழுவழுப்பாக்கப்பட வேண்டியதாக இருந்தது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன இலக்கிய நாடகத்தில் ஒரு காட்சி. மெட்ரோ மற்றும் கோரிட்டோ எனும் இரண்டு பெண்கள் பேசிக் கொள்ளும் காட்சி. மெட்ரோ, கோரிட்டாவிடம் டில்டோவைக் கடனாகக் கேட்கிறாள். அவள் அதை வேறு ஒருத்திக்குக் கடன் கொடுத்திருக்கிறாள். கடன் வாங்கியவள், இன்னொருத்திக்குக் கொடுத்திருக்கிறாள். . .!
உலகம், இன்று வந்து சேர்ந்திருக்கும் இந்தப் புள்ளிக்கு வர நடந்து கடந்து வந்த காலம் பல யுகங்கள் என்பதையும், இன்று விபரீதம், வினோதம் என்றெல்லாம் கணிக்கத்தக்க பல விஷயங்கள் சாதாரண நடை முறைகள் என்பதையும், ஒழுக்கத் தராசைக் கையில் வைத்துக் கொண்டு அலையும் ஒழுக்கப் போலீஸ்காரர்கள் உணரவேண்டும். பெண்கள் கையில் துடைப்பத்தையும், செருப்பையும் கொடுத்துச் சக பெண்ணை எதிர்க்கத் தூண்டும் நாசகார சக்திகள் இதை உணர வேண்டும்.
பிரியாபாபுவின் வாழ்க்கையை அவரைப் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளில் இருந்தும், அவர் விழிப்புணர்வு இதழுக்குக் கொடுத்துள்ள (இப்பேட்டி 'அரவாணிகள்' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. பேட்டி கண்டவர்கள் இராஜீவ் காந்தி, ஆனந்தராஜ்) பேட்டியிலிருந்தும் தொகுத்து அறிந்து கொள்வது நல்லது. எந்தச் சூழலில் இருந்து, எப்படிப்பட்ட மனிதர் மூன்றாம் பாலின் முகம் நாவலைத் தந்திருக்கிறார் என்பதை வாசகர் அறிய வேண்டும்.
இலங்கையில் உள்ள கொழும்புவில் பிறந்த பிரியாவுக்குப் பூர்வீகம் முசிறி கிராமம். 1974-இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் அவரைத் தமிழ் மண்ணில் கொண்டு வந்து போட்டது. 12 வகுப்புவரை படித்தவர். பள்ளிப் பருவத்திலேயே தன் பால் வேறு பாட்டுப் பிரச்சினையால் சகல துன்பங்களுக்கும் ஆளானார். 1998இல் அறுவைச் சிகிச்சைமூலம் பெண்ணாக அடையாளம் கண்டார். அரவாணிகளுக்கான ஓட்டுரிமை வழக்கில் முக்கிய பங்காற்றியவர். 2007-இல் இவரது 'அரவாணிகள் சமூக வரைவியல்' நூலை வெளியிட்டார். கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் காவல்துறையினருக்கும் (இவர்களிடம் பேசுவதுதான் மிக முக்கியம்.  அரவாணிகளின் முதல் விரோதிகள் காவல்துறையே என்பதே அரவாணிகளின் கருத்து) அரவாணிகள் பற்றிய வகுப்புகள் நடத்துகிறார். பிரியாபாபு, தன்னைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர்கள் இரண்டு பேர் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்கிறார். (தெய்வங்களின் வரிசையில் மூன்றாவதாக வருபவர்கள். இவர்களுக்காகத்தான் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது) வெளிநாடுகளில் வாழும் அரவாணிகள் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை பிரியா பாபு நினைவுகூர்கிறார். பாலின மாற்று அறுவைச் சிகிச்சை சட்டபூர்வமாக்கப்பட்டு, பெண்ணாக மாறுவது எளிதானதாக டென்மார்க், ஹாலந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவுகிறது என்று கூறும் அவர், நார்வே நாடு அரவாணிகளின் சொர்க்கபூமி என்கிறார். அரவாணிகளின் இருத்தலுக்காகவும் மற்றவர்கள் அனுபவிக்கும் சகல மனித உரிமைகளையும் அரவாணிகளும் பெற வேண்டும் என்பதற்காக இயக்கபூர்வமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொதுப்பரப்பில் அரவாணிகள் மேல் திணிக்கப்பட்டிருக்கும் அவமானங்கள் கலைய ஊடகங்கள் மூலம், ஆஷாபாரதியுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த நாவலையும் அந்த எண்ணத்தின் நீட்சியாகவே அவர் காண்கிறார்.
அரவாணிகள், அரவாணிகளாக வாழ்வது என்பது அவர்கள் தேர்வு. அது அவர்களின் சுதந்திரம். இதில் ஏனைச் சமூகம் செய்யக்கூடியது, அவர்களுக்கு இசைவாகச் சூழலை உருவாக்கித் தருவதே ஆகும். சூழல், முன்பைவிடவும் மேம்பட்டதாக மாறிக்கொண்டிருக்கிறது. அரவாணிகள் சார்பாக ஓர் உரையாடல் தொடங்கி இருக்கிறது. தமிழக அரசு சில சாதகமான ஏற்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற பெரும்பாலும் சட்டபூர்வமற்ற தேசத்தில், சட்டபூர்வமாகவே மக்கள் மட்டும் வாழ வேண்டியிருக்கிறது. எனவே, அரவாணிகளுக்கு சட்டபூர்வமான பாலின அடையாளம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள். அப்படியே கருதி, வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பு போன்றவற்றில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு அவர்களுக்கு மிகவும் அவசியம் ஆகிறது. குடும்பம் என்கிற ஒரு ஒடுக்குமுறை அமைப்பில், பெற்றோர்களால் அவர்களின் கல்வி அழிக்கப்பட்டது. தொழில் அறிவும் அவர்கள் பெரும்பாலோர்க்கு இருக்க நியாயம் இல்லை. அதற்கான சிறப்புப் பள்ளிகளும் தொழிற்பள்ளிகளும் அவர்களுக்கென்றே தொடங்க வேண்டும். பொதுப் பள்ளிகள் அவர்களுக்குப் பயன்பட முடியாது. 'அரவாணிகள் கல்வி' தனிச் சட்ட வரையறைகளுக்குள் கொண்டு வரவேண்டும். அவர்களின் உயிர்த் தேவையாக இருப்பது-வீடும் சமூகமும் புறக்கணித்த பிறகு போக்கிடம் இல்லாமல் இருக்கும் அவர்களுக்கான தங்கும் இடங்கள், வாழ்வதற்கான கொஞ்சம் பணம் இவையே. அந்தப் பணத்தை அவர்களின் உழைப்புக்கான ஊதியமாகத் தரலாம்.
விளிம்பு நிலைக்கும் மேலாகச் சிக்கிச் சீரழிந்து கொண்டு வாழ்வதற்காகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவர்கள் செம்மை அடையும் வரை, சமூகம் தன்னை நாகரிகமானது என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறாது.

பயன் கொண்ட நூல்கள்

*மூன்றாம் பாலின்முகம்-நாவல் 
பிரியாபாபு, சந்தியா பதிப்பகம், அசோக் நகர்,சென்னை-83
தொலைபேசி : 24896979, 65855704

*காதல்வரலாறு 
டயன் அக்கர்மென்-தமிழில் ச.சரவணன். சந்தியா பதிப்பகம்

* அரவாணிகள் 
உடலியல் உளவியல் வாழ்வியல் 
தொகுப்பு : மகாராசன் 
தோழமை வெளியீடு, சென்னை-78
தொலைபேசி : 9444302967

நன்றி: உயிரோசை.காம்

திங்கள், 7 டிசம்பர், 2015

இலக்கை அறிந்த ஈட்டி : மகாராசனின் 'கீழிருந்து எழுகின்ற வரலாறு’ நூல் குறித்த மதிப்புரை.

இலக்கை அறிந்த ஈட்டி :
மகாராசனின் 'கீழிருந்து எழுகின்ற வரலாறு’ நூல் குறித்த மதிப்புரை.
பேராசிரியர் சே. கோச்சடை

வரலாற்று உணர்வு வெள்ளையர்களுக்கு இருப்பதைப் போல இந்தியர்களுக்கு, அதிலும் தமிழர்களுக்குக் கிடையாது. ''ஒவ்வொரு மனிதனும் பல பத்தாண்டுகள் வாழ்கிறான். அவன் தன்னைப் பற்றி - தன் குடும்பத்தைப் பற்றி - தன் முன்னோரைப் பற்றி - தான் அறிந்தவற்றைப் பற்றி செய்திகளை ஒரு வரலாறாக பதிவு செய்து வைக்க வேண்டும் என்கிற வரலாற்று உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்” என்பதை நாடோறும் வற்புறுத்திய நாடறிந்த நல்லறிஞர் சுரதா என்று வே. ஆனைமுத்து அவர்கள் (சிந்தனையாளன் சூலை 2006) குறிப்பிடுவார். இதை நன்கு புரிந்து கொண்ட 'கீழிருந்து எழுகின்ற வரலாறுஃ நூலின் ஆசிரியர் மகாராசன் 'தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சிகளுக்குத் தன் வரலாற்றைப் பதிவு செய்யாத மெத்தனப்போக்கும், வரலாற்றைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமையும் ஒரு காரணம்” என்கிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வரலாற்றை எழுதிப் பார்க்கும் முயற்சியாக இந்த நூல் வெளியாகியுள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்ட போதிலும் இவற்றை (1) தொல்காப்பிய ஆய்வு (2) எதிர்க் கதையாடல்கள் (3) நவீன கவிதையின் அரசியல் (4) இந்திய தேசியம் பற்றிய பார்வை என்று பிரிக்கலாம்.

ஏடறிந்த வரலாறு எல்லாம் வர்க்கப் போராட்ட வரலாறே என்று 'பொதுவுடைமைக் கட்சி அறிக்கை’ கூறினாலும்கூட, உலகெங்கிலும் எழுதப்பட்டுள்ள வரலாறு ஆளும் வர்க்க வரலாறாகவே உள்ளது. அந்த வரலாறுகூட தமிழ் நாட்டுக்கு இல்லை. கல்வெட்டுகளையும் இலக்கியங்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியையும் வைத்துக் கொண்டு தமிழக வரலாறு எழுதப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வரலாறு முதலில் தொல்காப்பியத்தில் தொடங்குகிறது. இரண்டு கட்டுரைகள் தொல்காப்பியத்தை ஆராய்கின்றன. தொல் காப்பியம் இலக்கண நூலாகும். அது வரையில் வழக்கில் இருந்தவற்றைத் தொகுத்து வகைப்படுத்தும் வேலையைத் தொல்காப்பியர் செய்திருக்கிறார். 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்” செய்தார். ஆனால் 'அர்த்த சாஸ்திரம்” எழுதிய கௌடில்யர் அப்படியல்லாமல் வாழ்க்கை நெறிக்கான சட்ட திட்டங்களை அவரே வகுத்தார். எனவே சாணக்கியரைப் பார்க்கிற கண்ணோட் டத்தில் தொல்காப்பியரைப் பார்க்க முடியாது.

'சமூகப் படி நிலைமைகளை’ சாணக்கியர் நியாயப்படுத்தினார்; தொல்காப்பியர் சுட்டிக் காட்டுகிறார்” எனலாம். நூலாசிரியர் குறிப்பிடுவதைப்போல நால் வருணத்திற்கான கருத்தியல்களைத் தொல்காப்பியம் 'உருவாக்கி வைக்கவில்லை. எப்பேர்பட்ட மெய்யியலாரும் எல்லாக் காலத்துக்குமான மெய்யியலைத் தரமுடியாது. அவர்தன் காலத்தை மிஞ்சி ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையிலேயே சிந்திக்க முடியும். அப்படிச் சிந்திக்கிறபோது, அக்காலத்திய சமூக முரண்பாடுகளில் முற்போக்கு சக்திகளின் பக்கம் அவர் நிற்கிறாரா என்று பார்த்து அவரை எடை போட வேண்டும். சேக்ஸ்பியரின் நாடகங்களை அப்படித்தான் மார்க்ஸ் கண்டு வரவேற்றார்.

தொல் பொதுவுடைமைச் சமூகத்தை விடவும் நில மாண்ய சமூகமும், இதைவிட முதலாளியியமும் முற்போக்கானது என்கிறபோது அந்தப் பொருளில் தான் நாம் கூறுகிறோம். அப்படிப் பார்க்கும்போது எழுத்து, சொல் அதிகாரங்களை அவர் இன்றைய மொழியியல் அடிப்படைகளுக்கும் பெரிதும் பொருந்துமாறு வரையறுத்திருப்பது பாராட்டத்தக்கது. பொருளதிகாரத்தில் அன்றைய சமூக வாழ்க்கையைத் தொகுத்துத் தந்துள்ளார். அதனால்தான் 'என்மனார் புலவர்” என்பதைப் போன்ற கூற்றுகள் சூத்திரங்களில் இடம் பெறுகின்றன. எனவே வரையறைகள் செய்து ஒழுங்கு படுத்துகிற சமுதாயக் கட்டுமானத்தின் மய்யமாகவும், அதிகார அமைப்பாகவும் இலக்கணப் பனுவல்கள் இருந்தன என்பது ஏற்கத்தக்கதன்று.

ஐவகை நில ஒழுக்கத்தைக் கைக்கொண்டு தமிழர் வாழ்ந்த அக்காலத்திலேயே ஆரியக் கலப்பால் நால் வருணப் பாகுபாடு நுழைந்துவிட்டது. இந்த மயக்கம் பொருளதிகாரம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. இந்த இயல்பை நூலாசிரியர் மிகுச் சிறப்பாக வெளிப்படுத்தி யுள்ளார்.

இருபெரும் வர்க்கங்களாகப் பிளவு பட்டிருந்த தமிழ்ச் சமூகத்தில், ஆளும் வர்க்கத்தின் வாழ்க்கையையும் சமூக மதிப்பீடுகளையும் மட்டுமே தொல்காப்பியம் பதிவு செய்துள்ளது என்பது குறைபாடுதான். 'உயர்ந்தோரையும், அவர்களுடைய வாழ்க்கையையும் வழக்கையும் ஆவணப் படுத்தியுள்ள தொல்காப்பியம் பெரும்பான்மையாக உள்ள உழுதுண்போரை, 'இழிஃசனர் என்று ஒதுக்கியே வைத்துள்ளது. சமணமும் பௌத்தமும் அப்போதே வளர்ச்சியடைந் திருந்தன. அந்தச் சமயங்களின் பகுத்தறிவுக் கண்ணோட் டத்தில், வெளியில் இருந்து செயல்படும் அறியவொண்ணாத ஆற்றலே சமூக இயக்கத்திற்கான காரணம் என்று கூறாமல், அகக் காரணங்களை அலசுகிறது எனலாம். அது போல தொல்காப்பியம் சமூக ஏற்றத் தாழ்விற்குப் பிறப்பை அடிப்படையாகக் கொள்ளவில்லை என்பதை ஆசிரியர் சரியாகக் காட்டுகிறார்.

தொல்காப்பியம் மேல்தள மக்களைப் பற்றிய சிந்தனைகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. தொல்காப்பியம் காட்டும் பெண்களும் மேல்தட்டு மக்களைச் சார்ந்தவர்களே!

தொல்காப்பியம் காட்டும் சமூகம் அரசுகள் உருவான நிலமானியச் சமூகமாகும். இச்சமூகத்தில் முந்தைய தொல் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்த தலைமை நிலையை இழந்த பெண்கள் 'மனையுறை மகளிர்” ஆகிவிடடனர். எனவே பெண்களும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் ஆகிவிட்டனர்.

'நிலம் ஆண்களின் உடைமையாக மாற்றும் மாறுகின்றபோது, பெண்ணும் ஆண்களின் உடைமையாக மாற்றப்பட்டாள்” என்று நூலாசிரியர் மகாராசன் சரியாகவே சுட்டிக் காட்டுகிறார். உற்பத்தி, மறு உற்பத்திக்கான கருவிகளை அடக்கியாளும் அதிகாரம் ஆண்களிடம் சேர்ந்தது. மேல்தட்டு பெண்களைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்திருந்த போதிலும், சனநாயக உரிமை உள்ள இக்காலத்தில் சமூகத்தின் அடித்தட்டு மக்களும் மேல்நோக்கி நகரும் போக்கில் இக்கருத்தியல்கள் அடித்தட்டு பெண்களுக்கானவையாகவும் மாற்றப்படுகின்றன. தம்மீதான ஒடுக்கு முறைக்கு எந்தப் பார்ப்பனியம் காரணமாக உள்ளதோ, அந்தப் பார்ப்பனிய சடங்குகளை முன்னிறுத்தித் தலித்துகள் உட்படப் பெரும்பான்மை ஒடுக்கப்படும் வர்க்கம் திருமணம் போன்றவற்றை நடத்துகிறது. இது விரும்பியே நடக்கிறது. இதைப் போலவே, பெண்களும் விரும்பு ஏற்கும் வண்ணம் அடிமைத்தனம் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் தனித்தனியே சில மீறல்கள் நடந்தன. எனினும் இப்போது உள்ளதைப் போன்ற பரவலான எதிர்ப்பு கிளம்பவில்லை. தொல்காப்பியம் பெண் மீதான அதிகாரத்தை விமர்சனமில்லாமல் பதிவு செய்துள்ளது. இதைச் சிறப்பாக மகாராசன் விளக்கியுள்ளார்.

ஒடுக்கப்பட்டவர்களின் நிலையிலிருந்து தொல்காப்பியத்தை நூலாசிரியர் நன்றாக ஆய்வு செய்துள்ளார். எனினும் அவர் மார்க்சிய, லெனினிய நோக்கில் ஆராய வேண்டுமே ஒழிய, இன்றைய முற்போக்கு சிந்தனைகளையும் பெண்ணிய சிந்தனைகளையும் அந்நூல் கொண்டிருக்கவில்லை என்று பார்க்கக்கூடாது. தொல்காப்பியம் என்பது நம் காலத்து நகையைப் போன்றது. அதிலுள்ள தங்கத்தை உருக்கி புதிய நகை செய்யலாம். அதிலுள்ள சிறந்த சிந்தனைகளுக்காக அதை மறுவார்ப்புச் செய்ய வேண்டுமே ஒழிய, அப்படியே ஏற்பதோ, அப்படியே புறக்கணிப்பதோ கூடாது. தொல்காப்பியம் போன்ற அறிவியலடிப்படையிலான இலக்கண நூல் அமைந்தது நம்மொழி, இனத் தனித் தன்மையைப் பேணக் காரணமாகிவிட்டது. இது நம் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் இடங்களைக் காண்பதும் மீறுவதும் நம் கடமை.

தமிழக வரலாற்றில் ஒடுக்கு முறைக்கு எதிரான மரபு செழுமையாகவே இருந்துவந்துள்ளது. பார்ப்பனிய வைதிக மரபுக்கு எதிரான சமண பௌத்தக் கருத்துக்கள் இங்கு ஆழமாக வேரோடி இருந்தன. அதை அயோத்திதாசப் பண்டிதரைப் போன்ற அறிஞர்கள் சிறப்பாகக் கொணர்ந் துள்ளனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் பார்ப்பனியம் வெற்றியடைந்து எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட்டது. விதிவாதம் பேசி சுரண்டப்படுகிறவர்களும் அதை ஏற்று அடங்கச் செய்துவிட்டது. இப்போது அந்த அடக்குமுறைக்கு எதிரான கலகக்குரல்கள் தலித்தியமாகவும், பெண்ணியமாகவும் பாட்டாளிவர்க்கக் குரலாகவும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. தொழில் வளர்ச்சி நகரங்களில் ஒருவகையிலும், சிற்றூர்களில் பழைய கொடூரமான வகையிலும் தலித்துகளை ஒடுக்குகிறது. இதைச் சிறந்த எடுத்துக்காட்டுகளின் மூலம் மூன்றாவது கட்டுரையில் விளக்குகிறார். எல்லாம் விதிப்பயன் என்று ஒடுங்கிப்போனது அந்தக்காலம்.

'எதையும் செய்யப் போவதில்லை நான்.....”

'எனக்கு பூட்டிய இழிமுகத்தை மட்டுமல்லாது

நீயணிந்து கொண்ட உயர் முகத்தையும்

கிழித்துக் கொண்டிருப்பது தவிர’


என்று இளைஞர்கள் எழுந்துவிட்டனர். ஒரு காலத்தில் óஇங்கிருந்த நிலமானிய உற்பத்திக்கு உதவிய சாதிப் பிரிவினையே இன்றைக்கு ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகிவிட்டது. அதைச் சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் சேர்ந்து நொருக்கியிருக்க வேண்டும். இங்கு இப்போது தலித் ஆண்களும் பெண்களும் ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுவது ஒட்டுமொத்த சமூகத் துக்குமே நல்லது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எல்லாவகையான சர்வாதிகாரங்களையும் அழித்தொழிப் பதைப்போல தலித்துக்களின் விடுதலை எல்லோருக்குமான விடுதலையாக மாறும் என்பதைச் சரியாகவே இனங்காட்டியிருக்கிறார்.

“'எதிர்க் கதையாடல்களின் தகர்ப்பில் உருவாகும் மாற்றுகள்” இன்றைக்கு ஆளும் வர்க்கங்களின் கதையாடல்களை எதிர்ப்பவர்களைச் சுட்டுகிறார். உண்மையில் நமது கதையாடல்கள்தான் நம் மண்ணுக்கே உரியவை. அலோபதி மருத்துவம் ஆளும் வர்க்க மருத்துவம் ஆன பிறகு நம் மண்ணுக்கே உரிய, சித்தம், ஆயுர்வேதம், யுனானி போன்றவை மாற்று மருத்துவமுறைகள் ஆகிவிட்டன. இதைப்போன்ற கொடுமைதான் எதிர்க்கதையாடல் என்பதும், ஒடுக்கப்பட்ட மக்களுடைய கதையாடல்களே நேர்க்கதையாடல்கள். பார்ப்பனிய கதையாடலே எதிர்க்கதையாடல். எதிரியின் வரையறையையும் அளவுகோலையும் கொண்டு நம்மை நாமே மதிப்பிடும் இழிநிலைக்கு உள்ளாகிவிட்டோம். ஒடுக்கப் பட்டோர் தங்களுடைய மூல வேர்களைத் தேடும் முயற்சிதான் தம் குலதெய்வங்களைக் காண்பது ஆகும்.

நிறுவன சமயங்கள் மற்றும் சடங்கு முறைகளுக்கு நேர் எதிரானவை இனக் குழுக்களின் மெய்யியலும் சடங்கு முறைகளும் ஆகும். இவர்களுக்கு தெய்வமும் உறவினர், நண்பரைப் போலத்தான் . என்ன நடந்தாலும் தெய்வச் செயல் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதில்லை. 'ஒனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சாஃ என்று தெய்வத்தையே கேள்வி கேட்கும் மக்கள் அவர்கள். ஏனென்றால் ஒடுக்கப்பட்டோரின் தெய்வங்கள் எல்லாம் 'செத்துச் சாமியாகிவிட்ட மூதாதையர்தாம்”. கிராமங்கள் நகர் மயமாவதையும் அதனால் விளைகிற பண்பாட்டு மாற்றங் களையும் பதிவு செய்கிற கவிதைகளை எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். படிமுறை அமைப்பிலான சாதி ஆதிக்கத்தை ஒழிக்க, ஒடுக்கப்பட்ட சாதிகள் தமக்குள் இருக்கிற வேற்றுமைகளை ஒழிக்க வேண்டும் என்கிறார் கவிஞர் அபிமானி.

ஆனால் நம் பிறந்த மண், நம் தொல் பண்பாடு ஆகியவற்றை உயர்வாகப் பார்க்கும் போக்கு, நம்மை மீண்டும் இருண்ட காலத்துக்கே இட்டுச் செல்லும். பழம் பெருமை பேசுதல் புதுப் பெருமைகளை உருவாக்கு வதற்காக அமைய வேண்டும். தொழில் வளர்ச்சி வரவேற்கத் தக்கது. ஆனால் தொழில் துறைக் கழிவுகளும் திட்டமிடாத நகர்மயமாதலும் மண்ணைக் கெடுப்பவை. கிராமத்தில் உள்ளவர்களின் அன்பும் பற்றும் பண்பாடும் உயர்வானவை. ஆனால் வளர்ந்துவரும் சமூகச் சிக்கல்களைத் தீர்க்க இயலாதவை. எனவே நகர்மய மாதலினூடே, தொழில் வளர்ச்சியினூடே இயற்கையைக் கெடுக்காத, உயிர்ம வேளாண்மைக்கு உறுதுணையான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது நம் கடமையாகும். அப்படிப்பட்ட கவிதைகள் சிலவற்றையும் சேர்த்துப் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வரலாறு எழுதும்போது வாய்மொழித் தரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது என்று நூலாசிரியர் நினைக்கிறார். ஆனால் தனிச் சாதியினரின் வாய்மொழி மரபுகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுபோல அமைந் திருப்பதைக் காணலாம். அவற்றில் மேல்நிலையாக்கக் கூறுகள் விரவி உள்ளன. எனவே, களஆய்வு, நாட்டார் வழக்காறுகள் தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுகள், பிற நாட்டாரின் குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் உற்பத்தி முறை சார்ந்த வரலாறு, - பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வரலாறு எழுதப்படவேண்டும்.

கிருத்தவ சபைகளில் சேருகிறவர்களின் குடும்பக் கொடிவழி பதிவுசெய்யப்பட்டுப் பேணப்படுகிறது. அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் பெயர்களை அரிய முடியும். இந்துக்களிடம் அந்த வழக்கமில்லை. இனியாவது ஒவ்வொரு வரும் தங்கள் கொடிவழியே (எங்ய்ங்ஹப்ர்ஞ்ஹ்) முடிந்தவரையில் தொகுக்க வேண்டும். இது தனிமனிதராகச் செய்யக் கூடியதில்லை. ஒருவர் தன் கால் வழியைத் தேடிப் பின்னோக்கிச் சென்றால் அது ஒரு சாதியின் வரலாறாகவும் சாதி கலந்த சமூக வரலாறாகவும் அமையும். இதைத் தனிமனிதர்கள் தொடங்கிச் செய்ய வேண்டும். இது உருப்பெறும்போது குடும்பங்களின் வரலாறு, ஒடுக்கப்பட்டோர் வரலாறு உருவாகும்.

நவீனக் கவிதைமொழி பற்றிய கட்டுரையில் கவிஞர் அபியின் நேர்காணலோடு நின்று, தன்னுணர்ச்சிப் பாடல்களை, அதுவும் அரசியலற்ற கவிதைகளை ஆராய்கிறார். நவீன கவிதை என்பது புறவயக் கவிதைகளை புறக்கணிக்க மாட்டாத சமூகம் சார்ந்த கவிதை என்பதே இதன் சிறப்பு. அத்தகைய கவிதைகளைப் பற்றியும் எழுதியிருக்க வேண்டும். பழைய மரபுகளைக் கடந்து புதியனவாக வரும் நவீனம் உற்பத்தி முறை சார்ந்தே உருவாகிறது. இதை இன்னமும் விரிவாகச் செய்திருக்கலாம்.

பெண்மொழி எழுத்துகள் பற்றி நிறையப் பேசப்படும் காலம் இது. ஆனால் ஊடகங்கள் ஒடுக்கும் வர்க்கத்திடம் உள்ளன. அங்கும் அதிகாரம் ஆண்களிடமே உள்ளது. எனவே பெண்கள் ஆண்களின் பார்வையில் விமர்சிக்கப் படுகிறார்கள். பெண்கள் தம் உடற்கூறு மாற்றங்களைப் பற்றியோ உணர்வுகளைப் பற்றியோ பேசவிடாமல் ஆண்களால் தடுக்கப்படுகின்றனர். அதை மீறுகிற போக்கில் பெண்கள் கூடக்குறைய எழுதிவிட்டுப் போகட்டுமே ஆண்கள் அப்படி எழுதும்போது பொறுத்துப் போக வில்லையா? பெண் தன் உடல் மீது தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது மட்டுமே பெண்ணியம் ஆகாது. பெண்ணுக்கு அக வாழ்க்கையைப் போலவே புற வாழ்க்கையும் உண்டு. அகவாழ்க்கையிலும் பாலியல் தவிர்த்த எத்தனையோ உண்டு. ஆனால் இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ள கவிதைகளைப் படிப்போர்க்கு பெண் எழுத்து என்பது 'பாலியல் எழுத்துகள்” என்ற கருத்து உருவாகும்.

பெண்ணியம் என்பது அனைத்துத் துறையிலும் ஆண்-பெண் சமத்துவம் கோருவது. ஆணோடு சேர்ந்து அனைத்துத் துறைகளிலும் முன்னிலையில் நிற்கும் புறவாழ்க்கையையும், அவளது அக வாழ்க்கையின் பிற கூறுகளையும் சுட்டிக்காட்டுவதாக உள்ள கவிதைகளையும் எடுத்துக்காட்டியிருக்கலாம். இக்குறை பாட்டை இனிவரும் கவிதைகளில் களைவார் என நம்பலாம். ஏனெனில் ஏற்கனவே பெண்ணைப் பாலியல் நுகர் பொருளாகக் கட்டமைத்துள்ள ஆண் ஆதிக்க வரையறைக்குள் பெண்தானே சென்று விழுவதைப் போல இக்கட்டுரைகள் உள்ளன. தமிழ்க் கவிதைகளைப் பற்றிய திறனாய்வு, சிறப்பாக அமைந்துள்ளன. எனினும் 'தமிழ்ப் புதுக்கவிதைகள்” சமூகத்தின் கடைநிலைகளைப் பற்றிப் பேசுகின்றனஃ என்ற கட்டுரையாசிரியரின் கூற்று முற்றிலும் ஏற்கத் தக்கதில்லை. தொடக்கத்தில் அப்படி இருந்தாலும், இப்போது வெளிவரும் கவிதைகள் பலதரப்பட்டவையாக உள்ளன.

இந்திய தேசம் பற்றிய கட்டுரை சில நூல்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளாமல் ஆழமாக எழுதப்பட்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். ஞான அலாய்சியஸின் தேசிய இனச் சிக்கலைப் பற்றிய நூல் சிறப்பாக உள்ளது. பழைய மார்க்சிய லெனினியக் கட்டுரைகளையும் உள்வாங்கிக் கொண்டு இன்னும் சிறப்பாக எழுத வேண்டும். பார்ப்பனியம் தன் தேவைக்காக இந்திய தேசம் என்ற கருத்தியலை முன்வைத்தபோதும், இங்குள்ள பெரும்பான்மை மக்கள் அதை ஏற்க வேண்டிய புரவயக் காரணங்கள் என்ன? ஒரு பரந்த நாடு இருப்பதன் நன்மைகள் என்ன? பல தேசிய இனங்கள் ஒன்று கலந்து அமெரிக்க தேசம் எப்படிக் கட்டியமைக்கப்பட்டது. என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மொத்தத்தில் 'கீழிருந்து எழுகின்ற வரலாறுஃ நல்ல முயற்சி. தோழர் குருசாமி மயில் வாகனன் சொல்லியிருப்பதைப் போல தன் உறையில் இருந்து வாளை உருவி வீசிய கன்னிப் போரிலேயே வெற்றி பெற்றிருக்கும் மகாராசன் மேலும் மேலும் வளர்ந்து பொழிவு பெறுவார் என்று நம்புகிறேன்.

       நன்றி: கவிதாசரண் இதழ், 2007
                       கீற்று.காம்

வெள்ளி, 4 டிசம்பர், 2015

மகாராசனின் கீழிருந்து எழுகின்ற வரலாறு

மகாராசனின்
     கீழிருந்து  எழுகின்ற வரலாறு : நூல் மதிப்புரை.
      _ சுந்தர்      
                                                                       
                                                         

      
வரலாற்று உணர்வு வெள்ளையர்களுக்கு இருப்பதைப் போல இந்தியர்களுக்கு, அதிலும் தமிழர்களுக்குக் கிடையாது. "ஒவ்வொரு மனிதனும் பல பத்தாண்டுகள் வாழ்கிறான். அவன் தன்னைப் பற்றி - தன் குடும்பத்தைப் பற்றி - தன் முன்னோரைப் பற்றி - தான் அறிந்தவற்றைப் பற்றி செய்திகளை ஒரு வரலாறாக பதிவு செய்து வைக்க வேண்டும் என்கிற வரலாற்று உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்" என்பதை நாடோறும் வற்புறுத்திய நாடறிந்த நல்லறிஞர் சுரதா என்று வே. ஆனைமுத்து அவர்கள் (சிந்தனையாளன் சூலை 2006) குறிப்பிடுவார். இதை நன்கு புரிந்து கொண்ட 'கீழிருந்து எழுகின்ற வரலாறுஃ நூலின் ஆசிரியர் மகாராசன் 'தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சிகளுக்குத் தன் வரலாற்றைப் பதிவு செய்யாத மெத்தனப்போக்கும், வரலாற்றைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமையும் ஒரு காரணம்என்கிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வரலாற்றை எழுதிப் பார்க்கும் முயற்சியாக இந்த நூல் வெளியாகியுள்ளது.
நூலாசிரியர் மகாராசன் அவர்கள் "இங்குள்ள கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, மொழிக்கூறுகள், அரசியல் பொருளாதாரம், ஊடகங்கள் யாவும் ஒடுக்குண்டவர்களுக்கு ஆனதாக இல்லை என்கிற போது... கீழிருந்து எழுகின்ற வரலாறு எனும் இந்நூல் அடித்தளம் குறித்த சில பதிவுளை முன்வைக்க முயலுகிறது" என்று தன் முன்னுரையில் கூறியிருப்பது மிகவும் சரியாக உள்ளது. அதற்காக அவர் "கல்விப்புல, பொது அரங்குகளில் முன் வைக்கப்பட்ட கட்டுரைகளையும், பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையும் விரிவாக்கிச் செப்பம் செய்த 9 கட்டுரைகள் மட்டுமே இந்நூலில் இடம் பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டிருக்கிறார். கடினமாக உழைத்து இந்நூலைப் படைத்துள்ளார்.
முதல் 2 கட்டுரைகளும் தொல்காப்பியத்தைப் பற்றி எழுதப்பட்டவை. சமுதாயத்தின் படிநிலையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனும் வேறுபாட்டினை அடையாளம் காட்டுவதோடல்லாமல், தொல்காப்பியம் காலந்தொட்டு உள்ள இலக்கண நூல்கள் உயர்ந்தோரைச் சார்ந்தே இயங்குகின்றன என்று முதல் கட்டுரையில் கூறுகிறார். 2-வது கட்டுரை "தொல்காப்பியத்தில் பெண்-ஆண் பற்றிய கருத்தாக்கம்." அதில் ஆணாதிக்கச் சிந்தனைகள் எவ்வளவு மோசமாக உளளன என்பதைக் குறிப்பிடுகிறார்.
"கீழிருந்து எழுகின்ற வரலாறு" கட்டுரையில "சமூகத்தின் வரலாறு மேல்தளத்திலிருந்து தொடங்காமல், கீழ்த்தளத்திலிருந்து தொடங்க வேண்டும்... அதுதான் உண்மையான வரலாறாக இருக்க முடியும்" என்று கூறும் ஆசிரியர் "மக்களின் சொலவடைகள் விடுகதைகள், சொல்லாடல்கள் முதலியவற்றையும், மக்களிடம் இருந்து கொண்டிருக்கும் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்வு முறைகள், அனுபவங்கள் என மக்களிடமிருக்கும் தரவுகளையும் சேகரித்துக் கொண்டு வரலாறு எழுதப்படவேண்டும்" என்று கூறுகிறார். "நிறுவன சமய மரபுகளைப் பொறுத்தவரையில், அவைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஒடுக்கப்பட்ட மக்களின் சமய மரபுகள் யதார்த்தமானவை. வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையவை. வாழ்க்கையை எதிரொலிப்பவை" என்பதுடன் "இந்துத்துவ எதிர்நிலைப் பண்பாட்டு மரபுக் கூறுகளைக் கொண்டிருப்பவை" என்று கூறுகிறார்.
"தனக்குச் சாதகமானவற்றைப் புனிதம் எனவும், பிறவற்றை எல்லாம் தீட்டு எனவும் வகைப்படுத்தி வைத்திருக்கிறது பார்ப்பனீயம். இத்தகைய மேலாதிக்கச் சிந்தனைதான் சமூகத்தின் அடிஆழம் வரை பரவியிருக்கிறது. "நாட்டார் மரபு" என்றழைக்கப்பெறும் வாய்மொழி மரபு ஒரு புறமும், செவ்வியல் என்றழைக்கப்பெறும் எழுத்து மரபு இன்னொரு புறமும் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வருகின்றன. சாதி ரீதியாக, பொருளாதார ரீதியாக, பாலின ரீதியாக ஒடுக்குண்டு கிடக்கும் உழைக்கும் பெரும்பான்மை மக்களின் பண்பாடுகள், நம்பிக்கைகள், கலை இலக்கிய வெளிப்பாடுகள், வாழ்வியல் நியதிகள், பட்டறிவு வெளிப்பாடுகள் போன்றன எல்லாம் இழிவானவை, தரம் குறைந்தவை, மதிப்பில்லாதவை, குறைவானவை, சிறப்பில்லாதவை எனக் கருத்தாக்கம் செய்யப்பட்டிருக்கிறது... அதே போல தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரைக்கும் விரவிக் கிடக்கும் பாடல்களுக்கும் அங்கீகாரம் கிடையா" என்று தமிழ்க் கவிதை எழுத்தின் அரசியல் என்ற கட்டுரையில் குறிப்பிடும் ஆசிரியர் "வினையே ஆடவர்க்கு உயிர் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" எனும் சங்ககாலக் காதல் கவிதையில் உள்ள பெண்ணடிமைத்தனத்தைச் சுட்டுகிறார். நிலவுடைமைச் சமூகத்திலிருந்து முதலாளித்துவம் வந்த பிறகு, மரபுக் கவிதைத் தளத்திலிருந்து, புதுக்கவிதைத் தளத்திற்கு மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டது என்கிறார்.
"இந்திய தேசம்: வேர்களும், கிளைகளும்" என்ற கட்டுரையில், ஆங்கிலேயர் மீதான பெருவாரி மக்களின் எதிர்ப்புணர்வை "இந்திய விடுதலைப் போராட்டம்" என்கிற பெயரில் திரட்டிக் கொண்டு, இந்துத்துவம் கோலோச்சும் பார்ப்பனிய தேசமாகக் கட்டமைத்து விடும் முயற்சியில் ஒரு பொய்யான தேசத்தைப் பல புனைவுகளைக் கொண்ட கற்பிதங்களால் உருவாக்கி நடைமுறைப்படுத்த முயல்கிறது பார்ப்பனீயம். அவர்களின் இந்திய தேசம் என்பது இந்துப் பார்ப்பனிய தேசம்தான் என்கிறார்.
திருவள்ளுவர் காலந்தொட்டு பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளதைச் சுட்டும் ஆசிரியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்ப்பனியம் இச்சமூகத்தில் தன் வேர்களைப் பரப்பியிருந்தாலும், அவ்வேர்களின் முனைகள் ஆபத்தானவை என்பதை அடையாளம் காட்டிய போக்குகள் பிற்காலத்தில்தான் வெளிப்படுகின்றன. பூலே, அயோத்திதாசர் (Ayothidasar), பெரியார் (Periyar), அம்பேத்கர் (Dr.Ambedkar) போன்றவர்கள் பார்ப்பனீயத்தைத் தோலுரித்துக் காட்டியவர்களில் முதன்மையானவர்கள் என்கிறார் ஆசிரியர். பெரியார் இந்திய தேசத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கான காரணம் பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கே ஒழிய, மொழி வழித் தேசிய இனங்கள் குறித்த பார்வையினால் அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.
மொத்தத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.
("கீழிருந்து எழுகிற வரலாறு" ஆசிரியர் - மகாராசன், வெளியீடு: பரிசல், எண்1. இந்தியன் வங்கி காலனி, வள்ளலார் தெரு, சூளை மேடு, சென்னை - 94. விலை ரூ.50

                                                நன்றி: தமிழ் கூடல்.காம்