சனி, 27 நவம்பர், 2021

சோசலிச தமிழீழம் : விடுதலைப் புலிகளின் வேலைத்திட்ட அறிக்கை.


சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்த, ஒடுக்கல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கிறோம். 


தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. அதே சமயம், எமது சமூகத்தை பிரபுத்துவ சமூக வடிவமாகவும் சித்தரிக்க முடி யாது. தமிழீழ சமுதாய அமைப்பானது தனக்கேயுரிய ஒரு தனித்துவமான பொருளுற்பத்தி வடிவமாகத் திகழ்கிறது. வளரும் முதலாளித்துவ அம்சங்களும். பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்றுகலந்த ஒரு சிக்கலான பொருளாதார அத்திவாரத்தில் எமது சமுதாயம் கட்டப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் எமது சமுதாயத்திற்கு அத்திவாரமாக விளங்கும் பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. 


எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும். இவ்விதம் ஒரு சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதாயின் பொருளாதார அமைப்பில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்; பொருளாதார உற்பத்தி உறவு புனரமைக்கப்படவேண்டும்; சமூக அதர்மத்தையும், மனிதனை மனிதன் சுரண்டும் அநீதியையும் கொண்ட உற்பத்தி உறவுகள் ஒழிக்கப்படவேண்டும். இப்படியான புரட்சிகர சமூக மாற்றத்தை ஏற்படுத்த எமது விடுதலை இயக்கம் உறுதிபூண்டுள்ளது. 


எமது சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு சாபக்கேடாகவும் சமூக சமத்துவத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாகவும் இருந்துவருவது சாதியக் கொடுமையாகும். சாதிய அமைப்பு எமது கிராமியப் பொருளாதார வாழ்வுடன் ஒன்றுகலந்திருக்கிறது. வர்க்க அமைப்புடன் இணையப்பெற்றிருக்கிறது. தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருள் உற்பத்தி உறவுகளுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. மத சித்தாந்த உலகிலிருந்து வேரூன்றி வளர்ந்திருக்கிறது. தொழிலின் மகத்துவத்தை இழிவுபடுத்தி, மனிதனை மனிதன் வேறுபடுத்தும் இந்த மூட வழக்குமுறையை முற்றாக ஒழித்துக்கட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திடசங்கற்பம் பூண்டிருக்கிறது. சாதியத்தின்பெயரால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து நசுக்கப்பட்டுவரும் தமிழீழப் பாட்டாளி வர்க்கத்தின் விடிவிற்காக எமது இயக்கம் அயராது உழைக்கும். உழைப்பின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச பொருளாதாரத் திட்டத்தை அமுலாக்குவதன் மூலமும், புரட்சிக ரமான கல்விமுறை வாயிலாகவும் இந்த சமூக தீமையை எமது இயக்கம் ஒழித்துக் கட்டும். 


தேசிய விடுதலைப் போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் ஒன்று சேர்த்ததாக, தேச சுதந்திரத்தையும் சமூகப் புரட்சியையும் ஒன்றிணைத்ததாக அமையப்பெற்றிருக்கும் எமது புரட்சிகர அரசியல் இலட்சியங்கள் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்பதோடு அல்லாமல் எமது சமூகத்தில் நிலவும் ஒடுக்கு முறைகளிலிருந்தும் எமது மக்களுக்கு சுபீட்சமளிப்பதை குறிக்கோளாகக் கொண்டி ருக்கின்றன. இந்த அரசியல் இலட்சியங்களை அடைவதற்காக எமது இயக்கம் கீழ்க் கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கிறது. 


* தேசீய, சமூக விடுதலை என்ற பொது இலட்சியத்தில் தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, அவர்களை ஒருங்கிணைந்த தேசிய மக்கள் சக்தியாக அணி திரட்டுவது. 


* தேசிய-சமூக விடுதலை என்ற இலட்சியத்தை முனைப்புறச்செய்து துரிதப்படுத்தும் நோக்குடன் மக்கள் மத்தியில் தேசியப் பற்றுணர்வையும் பாட்டாளி வர்க்கப் பிரக்ஞையையும் தட்டி எழுப்பிக் கட்டி வளர்ப்பது. 


* வெகுசன அரசியல் போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் வலுப்படுத்தி தீவிரப்படுத்துவதுடன் பரந்துபட்ட பொது மக்களை தேசிய விடுதலைப் போராட்டத்தில் நேரடிப் பங்குதாரர்களாக மாற்றுவது. 


சோசலிச தமிழீழம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்ட நூலின் இரண்டாம் பகுதி.

*

நூலின் முழுமையான பகுதியை மின் நூல் வடிவில் வாசித்திட

https://online.anyflip.com/shrf/lbll/mobile/index.html#p=2

வெள்ளி, 26 நவம்பர், 2021

ஒளி கொண்டு வருபவன் : சி.மோகன்

ஒளி கொண்டு வருபவன்

மீண்டும் வருவான்

மீண்டும் மீண்டும்

மீண்டு வருவான்.


நிலத்தில் பிறந்த அவன்

வளரிளம் பருவத்தில் 

நிலம் மீது கவிழ்ந்திருந்த 

இருள் கண்டான்.

நிலம் மூடிய இருள் நீங்க

ஒளி சேகரிக்கக் காடு சென்றான்.


காட்டின் பாதைகளெங்கும்

நீந்தி அலைந்தும்,

சமுத்திரப் பாதைகளெங்கும்

நடந்து கடந்தும்,

நிலத்தின் பாதைகளெங்கும்

பறந்து திரிந்தும்

ஒளி சேர்க்கும் வித்தை கற்றான்.


சேகர ஒளியோடு

அவ்வப்போது நிலத்தை

மின்னலென ஊடறுத்து

பறந்து மறைந்தான்.


கால கதியில் உள்ளும் புறமும்

சேகரமான ஒளிப் பிரவாகத்தில்

ஒளி ஊற்றென உருக்கொண்டான்,

நிலம் திரும்பினான்.


நிலமேகிய ஒளி ஊற்றில்

தகதகத்தது நிலம்.

வெளிச்சத்தின் பாதை விரிந்து படர்ந்தது.

களவாடப்பட்ட பாதைகள் கையகப்பட்டன

விபத்துகளற்ற மீட்சிப் பாதை.


எங்கும் இருந்ததில்லை

எப்போதும் இருந்ததில்லை

வெளிச்சத்தின் உக்கிரத்தில்

சில விபரீதங்களும் நிகழ்ந்தேறின.


கால மாறாட்டத்தில்

வஞ்சனையும் சூழ்ச்சியும் கவிந்த

நிலவெளி இருள் 

சக்திகளின் சதியாட்டத்தில்

அடர்திட்டுக் கருப்பு 

மீண்டும் நிலத்தில் 

அப்பிக் கொண்டுவிட்டது.


பேரிருள் கொண்டது நிலம்

பேரிடர் கண்டது இனம்

மீண்டும் காடேகினான் அவன்.


ஒளி கொண்டு வருபவன்

பேரொளி ஊற்றென

மீண்டும் வருவான்.

மீண்டும் மீண்டும்

மீண்டு வருவான்

சூரியக் குழந்தை அவன்.


- சி.மோகன்

திங்கள், 22 நவம்பர், 2021

திருவள்ளுவருக்குக் கிறித்துவ அடையாளம் தருவது, தமிழரின் சிந்தனை மரபை மறுக்கும் கருத்துத் திணிப்பாகும் : செ.தமிழ்நேயன்


தமிழின் தனித்தன்மையை உலகம் கொண்டாடும் வேளையில், தெய்வ நாயகம் போன்ற அற்பர்கள் திருவள்ளுவருக்குக் கிறித்தவச் சமயச்சாயம் பூசுவது காலத்தின் கொடுமை.

சமகாலத்தில் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேற்றுவதன் பின்னணி குறித்து ஆராய வேண்டியுள்ளது.

வள்ளுவர் தோற்றம் பற்றிய தோராயக் கருதுகோளைக் கொண்டுதான், தெய்வ நாயகம் போன்றவர்கள் தான்தோன்றித் தன்மையோடு வள்ளுவரின் படைப்புகளுக்குச் சமயச்சாயத்தை அள்ளி வீசுகின்றனர். 

பொதுவாக, ஆண்டுக் கணக்கீட்டைக் கிறித்துவுக்கு முன், பின் என்ற  மேற்கத்திய ஆய்வாளர்கள் வரையறை செய்ததன் விளைவால் இது போன்று அவர் பதிவு செய்கிறார். 

பறங்கி தோமா வந்து இறங்கியதாகக் கருதப்படும் காலத்தில், இந்நிலத்திற்கு இந்தியா என்ற பொதுப்பெயர் இல்லை. இந்து தேசம் என்ற அடையாளப்பெயரும் இல்லை.

நாவலம் பொழில் என்று அழைக்கப்படும் பகுதி  குமரிக்கண்டத்தின் நீட்சி என்று இலக்கியச் சான்றுகள் நிறுவுகின்றன.

மொழியின் தோற்றம் பற்றிய புரிதல் இல்லாமல் கிறித்தவ சமயத்திற்குத் தமிழ் அடையாளம் வேண்டி இது போன்ற ஒவ்வாமைக் கருத்துக்களைத் திணிக்கிறார். 

தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான திருக்குறளை, குறிப்பிட்ட சமயம் சார்ந்த நூலாக நிறுவுவதன் மூலம் தமிழர்களிடத்தில் தனித்த சிந்தனை மரபு  இல்லை என்பதாகக் கட்டமைப்பதற்கு   முயற்சிகள் செய்கிறார். 

இது போன்ற கருத்துத் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்காமல்  தமிழர்கள் கடந்து செல்கின்றனர்.

சாதி சார்ந்து இயங்குவதால்தான் தெய்வநாயகம் போன்ற இரண்டகர்கள் தமிழுக்குத் தொடர்ந்து தீங்கு விளைவிக்கின்றனர். 

தமிழருக்கு மதம் அடையாளமும் இல்லை; சாதி அடையாளமும் இல்லை!தமிழ் மட்டுமே தமிழருக்கு அடையாளம் என்பதே வரலாற்று உண்மை. 

செ.தமிழ்நேயன்.

சனி, 20 நவம்பர், 2021

வரலாறு புலிகளை விடுவிக்கும் : பரணி கிருஷ்ண ரஜனி


புலிகள் இயக்கம் குறித்து முழுமையாக அறிந்த ஒரு நபர் என்றால் அவர் தலைவர் மட்டும்தான். 

ஏனைய தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அவர்கள் போராட்டத்தில் இணைந்த காலப்பகுதி, வகித்த பதவி, இயக்கத்தில் நீடித்த காலப் பகுதியை பொறுத்து அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால் அது முழுமையானது கிடையாது.

இயக்கத்திலிருந்தவர்களின் நிலையே இது என்ற போது நம் போன்று வெளியிலிருந்தவர்களின் கதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

புலிகளின் பலம் என்பதே அவர்களின் இரகசியம் பேணும் இந்த முறைமைதான்.

துரதிர்ஷ்டவசமாக 2009 இற்குப் பிறகு அது எமக்குப் பலவீனமான ஒரு அம்சமாகப் போய் விட்டது.

காரணம், யாரிடமும் முழுமையான தரவு இல்லை. ஆவணம் இல்லை.

ஆவணப்படுத்தலில் புலிகள் போன்ற ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் இதுவரை தோன்றியதில்லை.

ஆனால் அவற்றை நாம் முள்ளிவாய்க்காலில் இழக்க வேண்டியதாயிற்று.

எமது நீதிக்கான பயணத்திற்கு மட்டுமல்ல தொடர்ந்து போராடவும், இன அழிப்பை எதிர்கொள்ளவும் புலிகளின் முழு வரலாறு நமக்குத் தேவைப்படுகிறது.

கூடவே இந்த மனித குலம் புலிகளிடம் இருந்து கற்க நிறையவே இருக்கிறது. 

அது ஒரு இயக்கம் அல்ல மனித குலத்திற்குக் கிடைத்த பொக்கிசம். இப்போது இது கேலிக்குரியதாக இருக்கலாம். ஆனால் இதற்கான தெளிவான பதிலை ஒரு நாள் வரலாறு எழுதும்.

நாம் புலிகளை கோட்பாட்டுருவாக்கம் செய்யும் பணியில் இருப்பதால் புலிகளைத் தொடர்ந்து கற்று வருகிறோம்.

தினமும் ஏதோ ஒரு விடயம் எம்மை வியப்பிலாழ்த்திக் கொண்டேயிருக்கிறது.

அதிலிருந்தே மேற்படி எதிர்வு கூறலை முன் வைக்கிறோம்.

அதில் ஒன்றுதான் இந்த 'சிங்கள மொழி, கலாச்சார கல்வி நிலையம்'.

இது குறித்து 2009 இற்கு முன்பே எமக்குத் தெரியும். ஆனால் எந்த வித ஆவணமும், ஆதாரமும் இல்லாமல் இதை வெளிப்படையாக எழுத முடியாத இக்கட்டு.

காரணம், எதிரிகளை விடுவோம். நம்மவர்களே வந்து ' யாருக்கு கதை விடுகிறீர்கள், ஆதாரம் இருக்கா? ஸ்கிரீன்சொட் இருக்கா?' என்று கிளம்பி விடுவார்கள்.

நடைமுறையில் இதைத் தினமும் அனுபவித்து வருகிறோம்.

இந்த சின்னத் துண்டுப் புகைப்படம் கூட நேற்று எதேச்சையாக முகநூலில் சிக்கியது

இது கூட புலனாய்வுத்துறையிடம் இந்தக் கட்டமைப்பு இருந்த போது எடுத்த படம்தான்.

இந்தக் கட்டமைப்பு குறித்து நிறைய எழுதலாம். அதற்கு இங்கு இடம் காணாது. மீதியை சம்பந்தப்பட்ட சாட்சிகள்தான் எழுத வேண்டும்.

நமக்குத் தேவையானதும் எதிரிகளுக்கும், இந்த உலகத்திற்கும் சொல்ல வேண்டிய செய்திதான் முக்கியம்.

தமது நிலத்தை ஆக்கிரமித்து மொழி, பண்பாடு, கலாச்சார அழிப்பை மேற்கொள்ளும் ஒரு இன அழிப்பு அரசின் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை கற்கவும் அதைப் பாதுகாக்கவும் ஒரு கட்டமைப்பை உலகில் யாராவது நிறுவுவார்களா? 

ஆனால் புலிகளால் அது முடிந்திருக்கிறது. இவர்களுக்குத்தான் இந்த உலகம் பயங்கரவாதப் பட்டம் சூட்டியுள்ளது.

அன்று மட்டுமல்ல இன்றும் மிகத் தீவிரமாகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினூடாகத் தமிழ் நிலத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசிற்கு யோக்கியன் பட்டத்தைக் கொடுத்திருக்கிறது இந்த கேடு கெட்ட உலக ஒழுங்கு.

ஆனால் அறத்துடனும், நேர்மையுடனும் மானுட குலத்திற்கே முன்னுதாரணமாக இப்படியான பன்மைத்துவ கட்டமைப்புக்களை உருவாக்கியதன் வழி இந்த உலக ஒழுங்கை நிர்மூலம் செய்ய புகுந்ததன் விளைவாகவே புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்பதுதானே இதன் மறுவளமான உண்மை.

எனவே இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

புலிகள் எமது மீட்பர்கள் மட்டுமல்ல இந்த இனத்தின் பெருமிதம், கர்வம், செருக்கு எல்லாமுமே அவர்கள்தான்.

வரலாறு புலிகளை விடுவிக்கும்.

Paranii Krishna Rajani அவர்களது முகநூல் பதிவிலிருந்து..