சனி, 18 ஏப்ரல், 2020

வீட்டு வைத்தியமும் நாட்டு வைத்தியமும் தமிழ் மருத்துவமே! : கவிஞர் குட்டி ரேவதி

நிறைய நண்பர்கள் சித்த மருத்துவதை நூல்கள் வழியாக எப்படிக்கற்றுக் கொள்வது என்று ஆர்வத்துடன் கேட்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நிறைய அரிய சித்தமருத்துவ நூல்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். சித்தமருத்துவத்தின் பாடத்திட்டம், அதன் தத்துவமும் தமிழ் இலக்கியமும் நம் சமூக வரலாறும் குழைந்த இடத்திலிருந்து தொடங்குகிறது. முதல் நூலே, ‘தோற்றக்கிரம ஆராய்ச்சியும் சித்தமருத்துவ வரலாறும்’. இந்த நூல் வாசிக்கக் கொஞ்சம் அலுப்பான நூல். நிறைய வைதீகக் கலப்பு உள்ள நூல். ஒரு வாய்ப்பு கிடைத்தால் இந்த நூல் திருத்தி எழுதப்படவேண்டும் என்று விரும்புவேன். அதற்கு ஓர் இயக்கமே தேவை. அரசு முன்வரவேண்டும். பெருங்கூட்டத்திற்கே பணிகள் தரப்படவேண்டும். சித்த மருத்துவத்தின் தத்துவத்திற்கும் இதில் அத்தத்துவத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சனாதன விடயங்களுக்கும்  எந்தப் பொருத்தமுமில்லை, பொருளுமில்லை.

நம் மருத்துவம் என்பது  வீட்டிலிருந்தே தொடங்கப்படவேண்டும். நாட்டுவைத்தியம், வீட்டு வைத்தியம் என்று சொல்லப்படுபவை, சித்த மருத்துவத்தின் தொடக்கநிலை கல்வி போல.  நன்கு ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு வீட்டிலும் பெண்களோ முதியவர்களோ ஒரு பத்து மருந்துகளேனும் அறிந்து வைத்திருப்பார்கள். சுக்கு, வெற்றிலை, மஞ்சள், கடுக்காய் என்று சொல்வார்கள். இவற்றை வழக்கத்தில் வைத்துக்கொள்வதும், நடைமுறையில் செயல்படுத்துவதுமே தமிழ்மருத்துவப் புரிதலின் தொடக்கம்.

சித்தமருத்துவக்கல்வியில் கற்றுக்கொடுக்கப்படும் மருந்துகள் எல்லாம் உயரிய, மிக நெடிய செய்முறை விதிகள் கொண்ட மருந்துகள், நெடுங்கால நோய்களுக்கான மருந்துகள் என்று சொல்லலாம். மூலிகைகளே நம் நாட்டின் செல்வங்கள். நம் நாட்டில் அங்கும் இங்கும் மலைகள் தோறும் ஆற்றுப்படுக்கைகள் தோறும் சமவெளிகளிலும் வயல்வெளிகளிலும் அவ்வளவு அரிய மூலிகைகள் வாழ்கின்றன. ஒரு மூலிகையை அறிவதும் அதை நம் வீட்டில் வைத்திருப்பதும் அதை நம் உணவாக்கிக்கொள்வதும், மருந்தாகப் பயன்படுத்த அறிந்திருப்பதும் நம் சிறந்த அறிவுப்புலத்தில் சேர்வன.  ஒரு சித்தமருத்துவர் நோயாளிக்கு என்ன மாதிரி மருந்துகளைக் கொடுக்கலாம் என்று முடிவெடுக்கும்போது ‘வேர் பாரு, தழை பாரு, மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரு’, என்ற தத்துவத்தைத் தான் கொள்ளவேண்டும். எளிய மருந்துகளில் தொடங்கி அவை செயல்படவில்லையென்றால் தான் கடினமான பற்ப செந்தூரங்களை நோக்கி நகரவேண்டும் என்பதே உத்தி. அதிலும், வேர் மருந்துகள் மருந்து மூலப்பொருட்களைச் சத்தாக மாற்றிவைத்திருப்பவை. அங்கிருந்து தொடங்கி மூலிகைத் தழை, சமூலம், பின்பே பற்ப, செந்தூரங்கள். மூலிகைகளை அறிந்துவைத்திருப்பது ஓர் அகராதியைத் தன்னிடத்தே கொண்டிருப்பது போல.

ஒவ்வொரு வீட்டிற்கும் பத்து சிறந்த மருத்துவ முறைகள் அறிந்துவைத்திருப்பதும், மூலிகைகளின் பயன்களை அறிந்து வைத்திருப்பதுமே தமிழ் மருத்துவத்தின் மீதான உண்மையான நாட்டதின் தொடக்கம். இன்னொரு முக்கியமான விடயமும் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் உடலை நுட்பமாக அறிந்து வைத்திருத்தலும் அவசியம். தன் அன்றாட வாழ்க்கை முறை, எந்த உணவு தன் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது, எந்த நடவடிக்கை தன் உடலுக்குப் பொருந்தாது போன்றவற்றைத  தனக்குத்தானே அறிந்து வைத்திருந்து ஒழுகுவது.  தன் உடலுக்கு மருத்துவர் என்பது அவசரங்களின் போதும், நீண்ட கால நோய்களின் போதும் தாம் தேவைப்படுவது. எடுத்ததற்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாமல், சளி, காய்ச்சல், வயிற்றுத் தொல்லைகள், சிறிய காயங்கள் போன்றவற்றிற்கெல்லாம் முதலுதவி மாதிரியான மருத்துவச் சேகரிப்பைத் தன் வசமே வைத்திருக்கவேண்டும். உடல் வளர்த்தோர், உயிரும் வளர்த்தோரே.

மேற்சொன்னதே வீட்டு வைத்தியம். நாட்டு வைத்தியம் என்று பரம்பரைப் பரம்பரையா சித்தமருத்துவப்பயிற்சியைச்  சொல்கிறோம். எலும்பு முறிவு, சுளுக்கு, குழந்தைகள் வைத்தியத்திற்கு எங்கள் ஊர்ப்பக்கம் வைத்தியரை வீட்டிற்கு அழைப்பார்கள். இதில் பெரும்பாலும் மருத்துவச்சிகளாக இருப்பார்கள். பச்சிளம் குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, உடலுக்கு எண்ணெய்த் தேய்த்துவிடுவது, பெண்களுக்கு மார்பகத்தில் பால் கட்டிக்கொண்டால் சரி செய்வது என்று பரம்பரை வைத்தியர்கள் நீண்ட நெடுங்காலமாக நம் மருத்துவ மரபை, மருத்துவப்பண்பைக் காப்பாற்றி வருகிறார்கள். செங்கல்பட்டில் ஒரு களஆய்விற்காகச் சென்றிருந்த போது, ஒரு மருத்துவச்சி அந்த ஊரில் இருக்கும் 90 பெண்களுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறாராம். எல்லாமே சுகப்பிரசவம். பிரசவ காலத்திலேயே என்னென்ன சாப்பிடவேண்டும், என்னென்ன ஒழுக்கங்களைப் பின்பற்றவேண்டும் என்ற ஆலோசனைகளை எல்லாம் வழங்குவாராம்.

என்றாலும், சித்தமருத்துவத்தைத் தொழில்முறை வடிவமாகவும் சீரிய கல்வித்திட்டமாகவும் மாற்றியதில் இந்த நாட்டுவைத்தியர்கள் தாம் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர். மைய நீரோட்டத் துறையையும் பாரம்பரியத்துறையையும் இணைத்து முறைப்படுத்துவதற்கு நாம் எல்லோருமே தமிழ் மருத்துவம் குறித்தப் பெரிய விழிப்புணர்வைப் பெறவேண்டும். ஒரு மூலிகையின் மருத்துவ அறிவைப் பெற்றிருப்பதைக் கூடப் போற்றிக் கொண்டாட வேண்டும். சிறிய சிறிய தொட்டிகளில் அழகிற்காகச் செடிகள் வளர்க்காமல், அரிய மூலிகைகளை அன்றாட மருத்துவப்பயன்பாட்டிற்கு ஏற்ற மூலிகைகளை வளர்க்கத் தொடங்கவேண்டும். அடிப்படையான விழிப்புணர்வு, நடைமுறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவரும்.

மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டாம் என்பது ஆங்கில மருத்துவத்திற்குத்தான் பொருந்தும். நம் பருவங்கள், கால நிலை மாற்றங்கள், திணைகளுக்கேற்ற மூலிகைகளைக் கொண்ட மருந்துகள், உணவுகள், வாழ்க்கை முறை என்று மிக கவனமாக தமிழ் மருத்துவர்கள் மருத்துவச் சிந்தனைகளைத் தொகுத்திருக்கின்றனர். மருத்துவம் மற்றும் உடல் நலன் குறித்த மிகுந்த அச்சமூட்டும் மன உளைச்சல்களோடும் வலிகளோடும் நோய்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்கால வாழ்க்கைமுறையிலிருந்து நாம் எல்லோரும் விடுபடவேண்டும்.

செங்கல்பட்டு திருமுக்கூடலில்  உள்ள விஷ்ணு கோவிலில் பதின்னொன்றாம் நூற்றாண்டின் மருத்துவக்கல்வெட்டு காணப்படுகின்றது. நெல் தானமாக வழங்கப்பட்ட ஒரு மருத்துவரையும் அவர் சிகிச்சை வழங்க ஏதுவான பதினைந்து மருத்துவப்படுக்கைகளையும் கொண்டதைச் சொல்கின்றது. தேவைப்படுகின்ற மூலிகைகளைச் சேகரித்து வந்து மருந்து தயாரித்தோருக்கும் நெல் வழங்கப்பட்டதையும் குறிப்பிடுகின்றது. ஆசிரியர்கள், மருத்துவப்பணியாளர்கள், மாணவர்கள் பற்றிய  விவரமான குறிப்புகளைத் தருகின்றது. எல்லா காலத்திலும் நம் மருத்துவம் என்பது தனிமனிதன், வீடு, அரசு, பொதுவாழ்வு என்று எல்லாவற்றோடும் நீக்கமறக் கலந்து தான் இருந்திருக்கிறது.

கவிஞர் குட்டி ரேவதி,
18.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 18.04.2020 /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக