சனி, 18 ஏப்ரல், 2020

மரு.உமேரா: சித்த மருத்துவப் பெண் ஆளுமை :- மரு.வி.விக்ரம் குமார்

சித்த மருத்துவத்திற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் பெண் சரவெடி இவர்! திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாபுதூர், சவ்வாது மலையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் அரசு சித்த மருத்துவராகப் பணி புரிகிறார்! மலைப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!

ஒரு ஆண் மருத்துவர் களத்தில் இறங்கி வேலை செய்வதெல்லாம் என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய விஷயமில்லை!. திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான பின்பும், தனது மகனையும் கவனித்துக் கொண்டு, குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு களத்தில் இறங்கி தீயாய் வேலை செய்கிறார் எனும் போது, இவரைப் பற்றி எழுதாமல் இருக்க முடியுமா, இல்லை பாராட்டாமல் இருப்பதுதான் முறையா!

மலைவாழ் மக்களின் உடல் நலனை மேம்படுத்த, அவர்களுக்கான சித்த மருந்துகளை அவ்வப்போது முகாம் வைத்து மருத்துவம் பார்த்து சேர்ப்பது... சித்த மருத்துவ உரை நிகழ்த்துவது... சில நேரங்களில் போக்குவரத்து இல்லாத மலையின் குக்கிராமப் பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்து அவர்களைக் கவனித்துக் கொள்வது... எனச் சிறப்பாய் செயல்படுகிறார் மரு.உமேரா!

இவரது கணவர் நவீன மருத்துவர். அவரின் துணையோடு ஒருங்கிணைத்த மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கனவோடு செயல்படும் இளம் சித்த மருத்துவர்! உங்கள் கனவு நிச்சயம் ஈடேறும் உமேரா!...

மலைப்பகுதிதானே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தினமும் தவறாமல் சித்த மருத்துவத்திற்குப் பங்களிக்கிறார்... மலைப்பகுதியில் இருக்கும் சிறுவர் சிறுமிகளுக்குப் புத்தகங்கள் வாங்கிப் பரிசளிப்பது, முடிந்த உதவிகளைச் செய்வது என விடாமல் செயல்படுகிறார்!

நானும் இவரும் சித்த மருத்துவம் குறித்து அவ்வப்போது நிறைய விவாதிப்பதுண்டு... இருவரின் எண்ண ஓட்டமும் ஒன்றாக இருப்பதால் கூடுதல் மகிழ்ச்சி! சகோதரனாகக் கூறுகிறேன்... உங்கள் எண்ணத்திற்கும் உழைப்பிற்கும் நிறைய சாதிப்பீர்கள் சகோதரி!

இவரோடு தொலைபேசியில் உரையாடும் போது, இவரது பேச்சின் வீரியமும் ஆக்கமும் நம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமையும்!

மூலிகைகள் குறித்து... சித்த மருத்துவம் குறித்து... சித்த மருத்துவ அரசியல் குறித்து விவாதிக்கும்போது இவரது எண்ணங்கள் நேர்த்தியாக இருப்பதை உணர முடியும்!...இப்போதைய சூழலில் சித்த மருத்துவத்திற்கான வாய்ப்பு குறித்து நாங்கள் விவாதித்ததில் நிறைய புதிய விஷயங்கள் தோன்றின... செயல்படுத்துவோம்!...

இவரது சேவை... அந்த மலைக்கிராம மக்களுக்குப் பேருதவி புரியும்... இவரது சேவையைப் பாராட்டி கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த மருத்துவர் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது!...

மரு.உமேரா... போற்றப்பட வேண்டிய பெண் சித்த மருத்துவர்!

-மரு.வி.விக்ரம் குமார், எம்.டி.,(சித்தா)
அரசு சித்த மருத்துவர்.
18.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 18.04.2020 /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக