செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணக்கண்டம் முழுதும் வழங்கிய மொழி தமிழே! :- அறிஞர் நடன. காசிநாதன்.





அசோக மன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் தனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான்.
தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது" என்று கூறியுள்ளார் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய “தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும்” என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படி அவர் பேசினார்.

அவர்தான் திரு.நடன காசிநாதன்.

திரு. நடனகாசிநாதன் கூறுவது இதுதான்,

• ‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன”

• ‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன.

• அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

• கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழர் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கின்றனர் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

• கொடுமணல் என்னும் ஊரில், சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராசத்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன.

• மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரம் போன்றவை கிடைத்தன.

• தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், “கிழார்வெளி” என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

• அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம்.

• தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

• அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம்.

• அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம்.

• அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம்.
நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன” என்றவர், அடுத்ததாக...

 ‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள “ஆதிச்சநல்லூரை” ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது.

 கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது.

 அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் போன்ற உருவங்கள் வரையப்பட்டிருந்தன/

 அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன.

 அவை மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானவை.

 தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் “”டைமமாபாத்தில்”” கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

 எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன.

 அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார்.

அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார்

 ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது.

 கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள்.

 அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

 ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள்.

 ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார்.

 தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள்.

 அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை.

 இதையெல்லாம் நான் எழுதிய “”‘தமிழகம் - அரப்பன் நாகரிகத் தாயகம்”” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

 ‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு.

 ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் இன்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

 அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

 இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது.

 ‘தமிழன்அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.
இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள்.

ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்." என்கிறார் திரு. நடன. காசி நாதன்.

[ Studies on Tamils' Antiquity, Records, Culture and History (STARCH) குழுவிலிருந்து]

நன்றி:
மணி மணிவண்ணன் அவர்களது முகநூல் பதிவு.

வியாழன், 11 ஜூலை, 2019

தமிழ்த் தேசியத்தின் வரலாற்று வழித் தடம் : சில அறிமுகக் குறிப்புகள் :- தோழர் தியாகு


கருத்தரங்க விவாதப் பொருள் என்ற நிலையிலிருந்து இன்று களப் போரட்ட முழக்கமாகத் தமிழ்த் தேசியம் வளர்ந்துள்ளது. ஒவ்வொரு சிக்கலிலும், இது குறித்துத் தமிழ்த் தேசியத்தின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வாழ்க்கை என்னும் உரைகல்லில் தமிழ்த் தேசியம் அடிக்கடி உரசிப் பார்க்கப்படுகிறது. போற்றியோ தூற்றியோ தமிழ்த் தேசியம் குறித்துப் பேச வேண்டிய தேவை வலுப்பெற்றுள்ளது. புற நிலையிலும் அக நிலையிலும் தமிழ்த் தேசியத்தின் தேவை முனைப்புற்று வருகிறது.

உணர்வெனும் வகையிலும், கருத்தியலெனும் வகையிலும், இயக்கமெனும் வகையிலும் தமிழ்த் தேசியம் தமிழக அரசியலில் தவிர்க்கவொண்ணாத ஆற்றலாக எழுந்து வரும் இந்நிலையை அது திடீரென்று எட்டி விடவில்லை. அதற்கொரு வரலாறு உண்டு. இந்த ஆறு பல ஓடைகள் கொண்டது. அந்த ஓடைகள் சேர்ந்தும் பிரிந்தும் ஒட்டியும் வெட்டியும் பாய்ந்தோடித் தமிழ்த் தேசியத்தின் பல்கிளைத் தடமாகின்றன.

தமிழ்த் தேசியம் என்பது முதலாவதாக நாம் தமிழர்கள் என்ற உணர்வைக் குறிக்கும். இனவுணர்வு, ஓர்மை, தமிழ்ப் பண்பாடு என்று பலவாறு உரைக்கப்பெறும் தமிழ்த் தேசிய உணர்வு வளர்ந்து முழுமை பெற்றுக் கருத்தியலாக மலர்வது வெறும் அகவய நிகழ்ச்சிப்போக்கு மட்டுமன்று. அது உரிய புறவய நிலைமைகளின் தோற்றத்துடனும் வளர்ச்சியுடனும் இயங்கியல் உறவு கொண்டிருப்பதாகும்.

தமிழ் மக்கள் ஒரு மொழிவழிக் குமுகாயமாக அமைந்து எல்லைகள் வரையறுக்கப்பட்ட புலத்தில் வாழ்ந்தமைக்கான இலக்கிய வரலாற்றுச் சான்றுகளாக தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும் திகழ்கின்றன. தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் தமிழ்நாடு என்றும் இந்த இலக்கியங்கள் தமிழ் மக்களின் தாயகத்தைக் குறிப்பிடுகின்றன.

தமிழ்ப் பண்பாட்டையும் அந்தப் பண்பாட்டின் முற்போக்கான கூறுகளையும் சுட்டும் பழந்தமிழ் இலக்கியங்கள் பற்பல. இவ்வகையில் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் தொடங்கி, சித்தர்கள், வள்ளலார் வரை தமிழ்த் தேசியத்தின் வேர்களைக் காண முடியும்.

சமற்கிருதம், ஆங்கிலம், உருது, பாரசீகம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட அயல்மொழிகளின் ஊடுருவலைத் தடுத்துத் தமிழின் தூய்மை காக்கும் போராட்டம் தமிழ்த் தேசியத்தின் வரலாற்றில் சிறப்பிடம் பெறத்தக்கதாகும். தேவநேயப் பாவாணர் கூறுவது போல், தமிழின் தொன்மையை உலகிற்கறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர். செடியாகத் தழையச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகளார், அதனை மரமாக வளர்த்தடுத்தவர்கள் பாவாணறும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும். ஆய கலைகள் அனைத்துக்கும் ஏற்ற திறன் கொண்ட மொழியாகத் தமிழை வளர்த்திட உழைப்பவர்களில் முதலாமவர் சொல்லாய்வறிஞர் அருளியார். இவர்கள் எல்லாம் முன்னெடுத்த, இன்றளவும் முன்னெடுத்து வருகிற தனித்தமிழ் இயக்கத்தின் முயற்சிகளில் எதிரொலித்த தமிழர் மறுமலர்ச்சியை தமிழ்த் தேசியத்தின் இன்றியமையாக் கூறுகளில் ஒன்றாகக் கருத வேண்டும்.

அயல்மொழிப் படையெடுப்புக்கெதிராகத் தமிழின் தூய்மை காக்கும் போராட்டத்தில் தனித் தமிழியக்கத்தின் பங்கு மதிக்கத்தக்கது. பாவாணரும் பாவலரேறுவும் தனித் தமிழுக்காக மட்டுமல்ல, தனித் தமிழ்நாட்டுக்கவும் முழங்கியவர்கள். இன்றளவும் உயிர்ப்போடியங்கி வரும் தென்மொழி உள்ளிட்ட இதழ்களையும் இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

சரியாகச் சொன்னால், தமிழ்த் தேசம் உருவாகுமுன்பே தமிழ்த் தேசியம் முகிழ்த்து விட்டது. அது தேசம் இல்லாத தேசியமாகத்தான் இருந்தது. அது உணர்வாக, பண்பாடாக, அறநெறியாக இருந்து, தேச உள்ளடக்கத்தைப் பெற்ற பின் ஒரு முழுமைப்பட்ட அரசியல்-கருத்தியலாக மலர்ந்தது. தேச உருவாக்கத்துக்குத் தேசியம் உதவிற்று. தேசியத்தின் வளர்ச்சிக்குத் தேச உருவாக்கம் பொருத்தமான அடித்தளத்தை வழங்கிற்று. தமிழ்த் தேசத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான வரலாற்று-இயங்கியல் உறவை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியத் துணைக்கண்டம் பிரித்தானியரின் (சிறிதளவுக்கு பிரெஞ்சியர், போர்த்துகேயர், டச்சியர் ஆகியோரின்) காலனியாதிக்கத்துக்குள் வராமற் போயிருந்தால் ஐரோப்பாவில் போலவே தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் -- உரிய திருத்தங்களோடுதான் என்றாலும் -- மொழிவழித் தேசியங்களின் இயல்பான படிமலர்ச்சி பற்பல தேச அரசுகளின் உருவாக்கத்துக்கு வழிவகுத்திருக்கக் கூடும்.

வல்லரசியத்தின் குறுக்கீடும் அதனால் மேலிருந்து திணிக்கப்பெற்ற முதலியமும் மொழிவழிக் குமுகாயங்களில் தாக்கங்கொண்டு தேசியங்கள் வளர்வதற்கு முதலில் தடை ஆயின என்றாலும், பிறகு அவை விழித்தெழச் சுற்றடியாக வழிவகுத்தன.

இந்தியத் துணைக்கண்டத்தில் மொழிவழித் தேசியங்களின் வளர்ச்சிக்குக் காலனியாதிக்கம் போலவே மற்றொரு தடையாக அமைந்தது இந்துக் குமுகமாக அறியப்படும் வர்ண சாதிக் கட்டமைப்பு.

இந்தியத் தேசியத்துக்கு இணையாகவே மொழிவழித் தேசியங்களும் வளர்ந்தன. ஒரு வகையில் இந்தியத் தேசியத்தின் வளர்ச்சியே கூட மொழிவழித் தேசியங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது எனலாம். இந்தியத் தேசியம் எதிர்வகைத் தேசியமே தவிர நேர்வகைத் தேசியமன்று என்றாலும், அது இந்துத்துவப் பழைமையிலிருந்து ஊட்டம் பெறத் தயங்கியதில்லை என்றாலும், வல்லாதிக்கத்துடன் முரண்பட்ட வரை குடியாண்மை (சனநாயக) உள்ளடக்கம் கொண்டிருந்தது. வரம்புக்குட்பட்ட அளவில் என்றாலும் வல்லாதிக்கக எதிர்ப்புக்கு மக்கள் பெருந்திரளை அணிதிரட்ட வேண்டிய தேவை இருந்தது. இதற்காக மக்கள்மொழியில் பேசவும் மக்கள்மொழியில் கலை இலக்கியம் படைக்கவும் வேண்டியிருந்தது. ஆகவேதான் இந்தியத் தேசியம் வளர்ந்த போதே தமிழ்த் தேசியமும் வளர்ந்தது. இரண்டுக்குமான முரண்பாடும் முட்டல் மோதலும் அப்போதே வெளிப்பட்ட போதிலும் ஒன்றையொன்று ஒழித்துக் கட்டும் பகைமையாக முற்றவில்லை. இந்த உறவுமுறையை வரலாற்றுப் பகைமையும் அரசியல் நட்பும் என்று குறிப்பிடலாம்.

இந்தியத் தேசியப் பாவலர் பாரதியிடம் தமிழ்த் தேசியமும் இருந்தது. கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த சிதம்பரனாரின் இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்தை மறுதலிக்கவில்லை. அது எல்லா வகையிலும் தமிழ்த் தேசியத்தின் வித்துகளைச் சூல்கொண்டிருந்தது. பாவேந்தர் பாரதிதாசன் இந்தியத் தேசிய மண்ணிலிருந்துதான் தமிழ்த் தேசியத்தின் தலைப் பாவலராக மலர்ந்தார்.

மொழிவழித் தேசியத்தின் மலர்ச்சிக்கும் இந்தியத் தேசியத்துக்குமான இடையுறவை விளங்கிக் கொள்ள வங்காளத்தின் வரலாறு நமக்கு உதவும். 1905 வங்கப் பிரிவினைக்கு எதிரான எழுச்சி இந்திய விடுதலைப் போராட்டத்தின் பேரெழுச்சியான சுதேசி இயக்கத்துக்கு வழிகோலிற்று என்றால் இராசாராம் மோகன்ராய், ஈஸ்வரசந்திர வித்யாசாகர் போன்றவர்களின் சமூக சீர்திருத்த இயக்கம் இந்தியத் தேசியக் கருத்தியல் வளர்ச்சிக்குத் துணை செய்தது. இலக்கியத் துறையில் பக்கிம்சந்திரரும் இரவீந்திரநாத் தாகூரும் வங்கத் தேசியத்துக்கும் இந்தியத் தேசியத்துக்கும் பாலம் அமைத்தவர்கள். வந்தே மாதரம் பாடலில் போற்றி வணங்கிய வங்க அன்னையைத்தான் இந்தியத் தாயாக மாற்றிக் கொண்டார்கள். நம் பாரதியார் இந்தப் பாடலில் இடம்பெறும் ஏழு கோடியை முப்பது கோடியாக மாற்றிக் கொண்டது வெறும் மொழிபெயர்ப்பு அன்று, தேசியப் பெயர்ப்பு! இந்த வகையில் வங்கத்தையும் தமிழகத்தையும் ஒப்பாய்வு செய்தால் கருத்துக்குரிய பார்வைகள் கிடைக்கும்.

தமிழ்த் தேசியம் என்ற உணர்வும் கருத்தியலும் வெறும் கோட்பாட்டுச் செயல்வழிகளால் மட்டும் வந்து கிடைப்பவை அல்ல, அவை பெருந்திரள் மக்கள் இயக்கங்களின் வழி மலரக் கூடியவை. இவ்வகையில் தமிழ்த் தேசியம் என்னும் அரசியல் போக்கு இந்தியத் தேசிய அரசியல் எனும் உதிரத்தில் உதித்ததென்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. இவ்வகையில் (மீண்டும் இவ்வகையில்தான்) இந்தியத் தேசியத்தின் இயங்கியல் நிலைமறுப்புதான் தமிழ்த் தேசியம்.

தமிழ்த் தேசிய ஓர்மைக்குப் பெரும் தடையான வர்ண சாதிக் கட்டமைப்பையும் அதனை ஆளும் பார்ப்பனியத்தையும் எதிர்த்து சமூகநீதிக்காக நடைபெற்றுள்ள இயக்கங்கள் யாவும் உள்ளியலாகவும் உள்ளடக்கத்திலும் தமிழ்த் தேசியத்துக்கான நன்முயற்சிகளே – அவை தம்மை அப்படி அழைத்துக் கொண்டாலும் இல்லை என்றாலும்! இந்தக் கோணத்தில் பார்க்குமிடத்து திருவள்ளுவர் தொடங்கி சித்தர்கள் வழியாக வள்ளலார் வரை தமிழ்த் தேசியத்தின் வரலாற்று வேர்களுக்கு நீர் பாய்ச்சியவர்கள் என்று சொல்லலாம்.

தந்தை பெரியார் குடியரசு ஏட்டைத் தொடங்கியது சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கத்தைக் குறித்தது மட்டுமன்று, வரலாற்று வழியில் தமிழ்த் தேசம் தன்னைத்தான் இனங்காணும் செயல்வழியின்  தொடக்கத்தையும் குறித்தது. பார்ப்பன மேலாதிக்க எதிர்ப்பும் சமூகநீதிக்கான குரலும் வெளிப்படையாக ஒலித்தன என்னும் அதேபோது, இது தமிழ்த் தேசிய வளர்ச்சியில் ஒரு முக்கியக் கட்டத்தைக் குறித்தது. பின்னர் வந்த முதல் மொழிப்போரில் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் முதன்மைப் பங்கு வகித்தது தற்செயலன்று.

இராசாசி சென்னை மாகாணத் தலைமையமைச்ச்சராகப் பொறுப்பேற்று இந்தித் திணிப்பில் ஈடுபட்டதும், அதற்கெதிராகத் தமிழறிஞர்களும் தந்தை பெரியாரும் அறப்போர் தொடுத்ததும் (1938) இந்தியத் தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான முதல் அரசியல் மோதலைக் குறித்தது. இந்த மோதலின் உச்சத்தில்தான், தமிழ்நாடு தமிழருக்கே! என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முழக்கம் பிறந்தது. சரியாகப் பொருள் கொண்டால், இது தமிழ்த் தேசியத் தன்தீர்வுரிமைக்கான (சுயநிர்ணய உரிமைக்கான) முழக்கம் ஆகும். இந்த உரிமையை ஆளும் அரசு அறிந்தேற்க வேண்டும் என்பதற்கான சட்டவாத முழக்கமன்று. இது நம் தேசத்தின் பிறப்புரிமை என்பதறிந்து  இந்த உரிமையைப் பயன்படுத்தி விடுதலை கேட்பதற்கான முழக்கம் ஆகும்.

இடைக்காலத்தில் இந்த முழக்கத்தின் திரிபுற்ற வடிவமாக திராவிட நாடு திராவிடருக்கே! என்று முழங்கினாலும் மொழிவழி மாநில அமைப்புக்குப் பின் தமிழ்நாடு தமிழருக்கே! என்று மீண்டு விட்டது. பெரியார் தமிழ் நாட்டின் முழு விடுதலைக்கான முழக்கமாகவே இதனைக் கூறி வந்தார்.

தமிழ்நாடு தமிழருக்கே! என்பதை இறுதி மூச்சு வரை வலியுறுத்தியவர் பெரியார். ஆனால் இந்த முழக்கத்தை மெய்ப்படச் செய்வதற்கான விடுதலை அரசியலை அவர் கைக்கொள்ளத் தவறினார். விடுதலைக் கருத்தியலைப் பேசிக்கொண்டே பல நேரம் சிற்சில சீர்திருத்தங்களை முன்னிறுத்தி விடுதலையின் பகைவர்களுக்குத் துணைபோகும் நடைமுறை அரசியலைக் கடைப்பிடித்தார். தமிழ்த் தேசியப் பேரெழுச்சியாக அமைந்த 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு எதிராகவும் அரசு அடக்குமுறைக்கு ஆதரவாகவும் பெரியார் எடுத்த நிலைப்பாடு ஒரு பெரிய சறுக்கல் என்றுதான் சொல்ல வேண்டும்.

பெரியாரிடமிருந்து பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய அண்ணா தமிழ்த் தேசியத்துக்கு முரணான திராவிட நாடு என்னும் பொருந்தாக் கோரிக்கையைப் பேசிக் கொண்டிருந்தார். அண்ணாவின் திராவிட நாட்டுக்குத் தெளிவான வரையறையும் கிடையாது. 1956 – 61 காலத்தில் இந்தக் கோரிக்கையை மோசடி என்று சாடி, தனித் தமிழ்நாடுதான் சரி என்று பரப்புரை செய்தவர் பெரியார்.

1961இல் பிரிவினைத் தடைச் சட்டம் வரப்போவதைக் காட்டி அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைகழுவினார். அமைப்பைக் காக்கக் குறிக்கோளைக் கைவிடும் வேடிக்கையான முடிவை மேற்கொண்டார். திராவிட நாட்டுக்கு மாற்றாக மாநில சுயாட்சிக் கோரிக்கையைக் கைகொண்டார். அதுவும் வெறும் தேர்தல்வழிப் பதவி அரசியலுக்கான முழக்கமாகச் சுருங்கிப் போயிற்று. தேசிய விடுதலை இயக்கத்தைக் கட்டுவதை விடவும் தேர்தல் அரசியலுக்கான கட்சி ஒன்றைக் கட்டுவதிலேயே குறியாக இருந்து அதில் வெற்றியும் பெற்றார். இந்தியத் தேசியத்தோடு இணங்கிப் போவதற்குப் பொருத்தமாகவே திமுகவும் அதன் தொடர்ச்சியாக அதிமுகவும் தங்கள் கொள்கைகளையும் நடைமுறைகளையும் அமைத்துக் கொள்கின்றன.

அண்ணாவின் திராவிடக் கருத்தியல் தமிழ்த் தேசியத்தின் உருத்திரிந்த வெளிப்பாடாகவே இருந்தது. தமிழ்ப் பற்று, தமிழுணர்வு. இந்தி எதிர்ப்பு ஆகியவற்றின் வளர்ச்சியில் அண்ணா தலைமையிலான திமுக வகித்த பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்த் தேசியத்தின் பேரெழுச்சியாக அமைந்த 1965 மொழிப் போராட்டத்துக்கான களத்தைச் செப்பனிட்டதில் திமுகவுக்கு முக்கியப் பங்கு உண்டு. பொய்யான அரசியல் அதிகாரத்தின் மீதான மயக்கமும் நாட்டமும் வளர வளர திமுகவின் ‘தமிழ்த் தேசியம்’ சிதைந்து சீரழிந்து போயிற்று. இது தமிழ்த் தேசிய ஆர்வம் கொண்ட அனைவருக்குமான பாடம்.

இத்தனைக் குறைபாடுகளும் இருந்தாலும் தமிழ்த் தேசியத்தின் படிமலர்ச்சி வரலாற்றில் திராவிட இயக்கத்துக்கு ஒரு முகாமைப் பங்கு உண்டு. அவ்வியக்கத்தின் குடியாண்மை (சனநாயக) உள்ளடக்கம், அதன் சமூக இயைபு, வரலாற்று வேர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்படிச் சொல்கிறோம். தமிழ்த் தேசியத்தின் படிமலர்ச்சி என்பது வெறும் கோட்பாட்டுப் படிமலர்ச்சி மட்டுமன்று, மக்கள் இயக்கம் என்ற வகையிலான படிமலர்ச்சியும்தான் என்றால் தமிழ்த் தேசியம் திராவிட இயக்கக் கட்டத்தையும் கடந்தே வந்திருக்கக் காணலாம்.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சி கண்டவர் ஈ.வெ.கி. சம்பத். திராவிடத்தை உதறி தமிழினத்தின் தன்தீர்வுரிமையை (சுய நிர்ணய உரிமையை) குறிக்கோளாக அறிவித்தார். ஆனால் காங்கிரசு எதிர்ப்பை விடவும் திமுக எதிர்ப்புக்கு அவர் கொடுத்த முக்கியத்துவமும், இந்தியப் பணநாயகத்தை சனநாயகமாகவே நம்பித் தேர்தல் அரசியலில் மூழ்கிப் போனதும் அவரைப் பகைமுகாமில் கலக்கச் செய்தன.

சி.பா. ஆதித்தனார் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம், ம.பொ.சி. தலைமையிலான தமிழரசுக் கழகம் போன்ற அமைப்புகளும் தமிழ்த் தேசியத்தின் முன்னோடிகளாக மதிக்கத்தக்கவை ஆகும். ஈழம் உள்ளிட்ட தமிழ்ப் பேரரசுக் கனவு கண்டவர் ஆதித்தனார். ஆனால் இவை முனைப்பான குழுக்களாக இயங்கினவே தவிர, இவற்றால் பெருந்திரளான மக்களை அணிதிரட்ட இயலாமலே போயிற்று.

ஆதித்தனாரின் தமிழ்ப் பேரரசுக் குறிக்கோள் தேசிய இனச் சிக்கல் தொடர்பான சமூக அறிவியலுக்கு மாறுபட்டு, வெறும் அகநோக்கியல் குறிக்கோளாகவே அமைந்து விட்டது. புதுமைக் காலக் கண்ணோட்டங்களை விடவும் பழம்பெருமைப் பார்வையே அதில் மிகுந்திருந்தது. ஆனால் அவரது கருத்தியல் இந்தியத் தேசியத்துடன் விட்டுக் கொடுக்காத ஒரு போக்கை மேற்கொண்டது. தமிழீழ மக்களுடன் தமிழக மக்களின் தோழமைக்கு ஆதித்தனார் ஒரு முன்னோடியாகவே இருந்தார். ஆதித்தனார் தொடக்கத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் நாட்டம் கொண்டு குடியரசு ஏட்டிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சி. பா. ஆதித்தனாரின் முதன்மைப் பங்களிப்பு அவரது இதழியல் பணிதான். 1942 நவம்பர் மாதம் தினத் தந்தி தொடங்கினார். அதற்கு முன்பே தமிழன் என்ற வார ஏட்டைத் தொடங்கினார். தமிழ்நாட்டு மக்களிடையே செய்தித் தாள் படிக்கும் வழக்கத்தைப் பரவலாக்கியது தினத் தந்தி. தில்லிக்கும் இந்திக்கும் எதிரான விழிப்பைத் தூண்டுவதில் தினத் தந்தியின் பங்கு மகத்தானது. தமிழீழ ஆதரவை வளர்ப்பதிலும் ஆதித்தனார் தொடங்கிய ஏடுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. 

நாம் தமிழர் இயக்கம் பெரிய கட்சியாக வளராத போதும் பல போராட்டங்கள் நடத்தியது. 1956க்குப் பின் ஆதித்தனார் தனித் தமிழ்நாட்டுக்கான போராட்டத்தில் தந்தை பெரியாரோடு சேர்ந்து நின்றார். பெரியாரைப் போலவே அவரும் திராவிட நாடு கோரிக்கையைக் கடுமையாகச் சாடினார்.

தமிழக சட்டமன்ற மேலவையிலோ பேரவையிலோ விட்டுவிட்டு  உறுப்பினராக இருந்து வந்த ஆதித்தனார் 1967 பொதுத் தேர்தலுக்குப் பின் பேரவைத் தலைவராகவும், அண்ணா மறைவுக்குப்பின் கலைஞர் அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.  பதவி அரசியலில் நாட்டம் கொண்ட பின் தமிழ்த் தேசியத்துக்கான அவரது போர்க்குணம் நீர்த்துப் போனதாகத்தான் கருத வேண்டியுள்ளது.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யாக அறியப்பட்ட ம.பொ. சிவஞானம் 1946ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்த படியே தமிழரசுக் கழகம் நிறுவினார். 1954ஆம் ஆண்டுதான் காங்கிரசை விட்டு வெளியேறினார்.

தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காகவும், தமிழ்வழிக் கல்விக்காகவும் திருப்பதியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகவும், சென்னையை ஆந்திரத்திடம் இழந்திடாமல் தடுப்பதற்காகவும் மபொசியன் தமிழரசுக் கழகம் தொடர்ந்து போராடியது. வடக்கே திருப்பதியை இழந்த போதும் திருத்தணிகையை மீட்கவும், தெற்கே தேவிகுளம் பீர்மேட்டை இழந்த போதும் குமரியை மீட்கவும் எல்லைப் போராட்டங்கள் உதவின. தமிழ்த் தேசியத் தாயகத்தை உறுதி செய்வதற்கான இந்தப் போராட்டங்கள் தமிழ்த் தேசிய மீட்பியக்கத்தில் முகாமையனதொரு பகுதியாகும்.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் இந்தியத் தேசியத்துக்குட்பட்ட தமிழ்த் தேசியத்தையே வலியுறுத்தி வந்தது என்றாலும் தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் சிறப்பான பங்கு வகித்தது. தேசியத்தின் இன்றியமையாக் கூறாகிய தாயக உரிமைக்கான போராட்டத்தில் ம.பொ.சி.யின் வரலாற்றுப் பங்களிப்பு மதிக்கத்தக்க ஒன்று.

ம.பொ.சி.யின் செங்கோல் ஏடு தமிழ்த் தேசியக் கருத்தியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியது. மூன்றாம் வகுப்பு வரை மட்டும் படித்து அச்சுக் கோப்புத் தொழிலாளியாக இருந்து தமிழ் இலக்கியங்களோடு பழக்கமானவர் என்றாலும் அவரது இலக்கியப் பங்களிப்பு செறிவானது. சிலப்பதிகாரம், திருக்குறள், வள்ளலார், பாரதியார், வ.உ. சிதம்பரனார் குறித்தெல்லாம் ஏராளமாய் எழுதியுள்ளார். 

ஆதித்தனார் போலவே ம.பொ.சியும் இறுதிக் காலத்தில் பதவி அரசியலில் நாட்டம் கொண்டு அதற்கேற்ப மாறிப் போனார். 1987 இராசீவ் காந்தி–ஜெயவர்த்தனாவின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் இந்திய அமைதிக் காப்புப் படையையும் ஆதரித்து விடுதலைப் புலிகளைத் திட்டிப் பேசுவதில் சோ இராமசாமியுடனும் செயகாந்தனுடம் சேர்ந்து கொண்டது மபொசிக்கு ஏற்பட்ட இறுதி வீழ்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

மார்சல் நேசமணி தலைமையிலான குமரி விடுதலைப் போராட்டமும், மங்கலங்கிழார் கட்டி வளர்த்த வடக்கெல்லைப் போராட்டமும், சென்னையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான  முயற்சிகளும் தமிழ்த் தேசிய மக்கள் இயக்க வரலாற்றில் முகாமையானவை. இந்தப் போராட்டங்கள் முழு அளவிலான தாயக உரிமைப் போராட்டங்களாக வளர்த்தெடுக்கப்பட வில்லை. பெரும்பாலான இந்தப் போராட்டத் தலைமைகளை உள்வாங்கி உட்செரிப்பதில் இந்தியத் தேசியம் வெற்றி கண்டது. அதற்கொரு கருவியாகத் தேர்தல்வழிப் பதவி அரசியல் பயன்படுத்தப்பட்டது. 

ஈ.வெ.கி. சம்பத், ஆதித்தனார், ம.பொ.சி. எல்லாரும் பதவி நாட்ட அரசியலில் மூழ்கித்தான் மூச்சடங்கினர். தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தேர்தல்வழிப் பதவி அரசியல் வண்டியோட்ட நினைப்பவர்களுக்கெல்லாம் இவர்களின் பட்டறிவு ஒரு தெளிவான எச்சரிக்கை.

தமிழன் என்ற பெயரிலேயே ஏடு நடத்தியவர் அயோத்திதாசப் பண்டிதர். தமிழகத்தின் தலித்தியக்க முன்னோடிகள் பலரும் தமிழ்ப் பற்றும் குடியாண்மை உணர்வும் மிக்கவர்கள். தமிழகத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான சமூகநீதிப் போராட்டத்தில் தலித்து இயக்கம் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளது. இவ்வகையில் தமிழர் ஓர்மைக்கும் ஒற்றுமைக்குமான போராட்டத்தில் தலித்து இயக்கத்தின் இந்தப் புறவயப் பங்கு கணக்கில் கொள்ளப்பட வேண்டும். அதேபோது தலித்து இயக்கத்தின் ஒரு பகுதியை இன்றளவும் பீடித்துள்ள இந்தியத் தேசிய மாயையும் பதவி நாடும் வாய்ப்பிய (சந்தர்ப்பவாத) அரசியலும் சமூகநீதிப் போராட்டத்துக்கும், ஆகவே தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கும் தடைகளாக உள்ளன.

தமிழகத்தில் தமிழீழ ஆதரவு என்பது எப்போதும் தமிழ்த் தேசிய எழுச்சியின் ஒரு கூறாகவே இருந்து வருகிறது. 1967 தேர்தலுக்குப் பின் மங்கிப் போன தமிழ்த் தேசிய உணர்வெழுச்சியை ஒரளவு மீட்டது 1983 கறுப்பு யூலைதான். அது முதல் ஏற்றவற்றங்களின் ஊடேதான் என்றாலும் தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவு என்பது தமிழ்த் தேசிய அரசியலின் அடையாள முத்திரை ஆயிற்று.

இந்திய-இலங்கை ஒப்பந்தம், அமைதிப் படையின் பெயரால்  இந்தியா நிகழ்த்திய வன்படையெடுப்பு ஆகியவற்றுக்குப் பின் ஈழ ஆதரவு என்பதே பெரும்பாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்றாகி விட்டது. 1991 இராசீவ் கொலையின் விளைவு தமிழ்த் தேசியத்துக்கு ஒரு பின்னடைவையே குறித்தது என்றாலும், தமிழீழப் போராட்டத்துக்குரிய உறுதியான ஆதரவுத் தளம் குலைந்து போய் விடவில்லை.

நீறுபூத்த நெருப்பாய் இருந்த ஈழ ஆதரவை 2008-09 காலத்திய இறுதிப் போர் ஊதி விட்டது. போரை நிறுத்து என்ற முழக்கம் அனைத்துப் பிரிவு தமிழக மக்களையும் களத்தில் இறக்கியது. அரசியலை எட்டியும் பார்க்காத பல பிரிவினரை அது போராடச் செய்தது. சிங்களப் பேரினவாத அரசுக்கு உடந்தையான இந்திய வல்லாதிக்கத்தை அம்பலப்படுத்தியது. வீரத் தமிழன் முத்துக்குமார் முதல் அடுத்தடுத்து நிகழ்ந்த தீக்குளிப்புகள் தமிழகத்தின் கொந்தளிப்பை உணர்த்தின.

 முள்ளிவாய்க்கால் இனக்கொலை (2009) ஏற்படுத்திய தாக்கம் தமிழகத்தில் அனைத்துப் பகுதித் தமிழ் மக்களிடையேயும், குறிப்பாக இளைஞர்கள் மாணவர்களிடையே, தமிழ்த் தேசியம் புத்தெழுச்சி பெறத் தூண்டுதலாகியுள்ளது. ஈழத் தமிழர் ஈடுசெய் நீதிக்கான போராட்டம் பெரும்பாலும் உணர்ச்சி சார்ந்த ஒன்றாகவே இருந்து வந்த தமிழீழ ஆதரவை ஓரளவு அறிவுசார்ந்த ஒன்றாக மற்ற உதவியுள்ளது 2013 மாணவர் போராட்டம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட தமிழக ஆற்றுநீர் உரிமைக்கான போராட்டத்தில் கோரிக்கைகளையும் போராட வழிகளையும் வகுப்பதில் போராடும் தமிழ்த் தேசிய ஆற்றல்கள் வீரியமிக்க செயலூக்கியாக பங்கு வகித்துள்ளன.

கூடங்குளம்-இடிந்தகரை, நெடுவாசல், கதிராமங்கலம், நியூட்ரினோ போராட்டங்கள் தமிழ்த் தேசியத்தை செழுமைப்படுத்த உதவியுள்ளன. பசுமைத் தமிழ்த் தேசியம் இயல்பாக மலர்ந்து மணம் வீசுகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் முதலில் முறையான தொழிற்சங்க இயக்கம் முகிழ்த்தது தமிழ் மண்ணிலேதான். தமிழ்நாட்டின் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளிடம் தமிழும் பொதுமையும் சமூகநீதியுமான நோக்குகள் முனைந்து மிளிர்ந்தன. அவர்களால் அந்தக் கட்டத்திலேயே இந்தியத் தேசியக் கூட்டினை உடைத்து வெளிவர முடியவில்லை என்பதைக் குற்றமாகச் சொல்ல முடியாது.

தேசிய இனச் சிக்கல் குறித்து மார்க்சிய-இலெனினியம் தந்த சரியான புரிதல் இருந்த போதிலும் பொதுமைக் கட்சித் தலைமையால் சிந்தனை-சொல்-செயலளவில் இந்தியத் தேசியக் கருத்தியலை விட்டு வெளிப்பட முடியவில்லை. இந்த இயலாமையால்தான், குறிப்பாகத் தேசியஇனச் சிக்கலில் இந்தியத் தேசியக் காங்கிரசின் இடதுசாரி வாலாகவே அது பிற்காலத்தில் சீர்கெட்டது. தேசிய இனச் சிக்கலில் இந்தியாவின் சட்டவாதப் பொதுமை இயக்கத்தின் பெருஞ்சரிவு காசுமீரத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கிறது.

இந்தியாவின் பல்வேறு தேசங்களிலும் மார்க்சிய-லெனினியக் குழுக்கள், அமைப்புகள் வரலாற்றின் படிப்பினைகளை உள்வாங்கித் தங்கள் சர்வதேசியக் கொள்கையின் செயலார்ந்த வடிவமாகத் தத்தமது மொழிவழித் தேசியத்தை அறிந்தேற்று, தேசியக் கோரிக்கைகளுக்காகப் போராட முன்வந்திருப்பது காத்திரமானதொரு வளர்ச்சிப் போக்காகும். இந்தப் போக்கு தமிழ்நாட்டிலும் வளர்ந்து வருவது தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கத்தையும் திசைவழியையும் செழுமை செய்யும் என்பதில் ஐயமில்லை. போராடும் தமிழ்த் தேசியத்துக்கு இணையாகவே வாயாடும் தமிழ்த்தேசியமும் வளர்ந்துள்ளது. இனவாதம், சாதியம், பதவி வேட்டை, குடியாண்மை மறுப்பு, பொதுவிய எதிர்ப்பு, தனிமனித வழிபாடு, வெற்றுப் பகட்டு அரசியல் என்ற வழிகளில் இளைஞர்களின் தமிழ்த் தேசிய உணர்வும் உழைப்பும் வீணாகி விடுமோ என்று கவலைகொள்ள வேண்டியுள்ளது.                                                தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுத் தடத்தைப் பயின்று வெற்றிகளிலிருந்து வீரம் பெற்று தோல்விகளிலிருந்து பாடம் பெற்று தமிழ்த் தேசியத்தின் குறிகோள்களை அடைவதற்கான அறிவுத் தெளிவும் உணர்வெழுச்சியும் அணிதிரட்டலும் வளரப் பாடாற்றுவோம்.
• தியாகு, 28/03/2018
thozharthiagu.chennai@gmail.com

ஓவியம்:
இரவி பேலட்

வெள்ளி, 31 மே, 2019

ஊடகப் பன்முகத் தன்மை: அறமும் எதிர்பார்ப்பும் :- அருள் ரத்தினம்


"பத்திரிகையாளர்களின் சாதி என்ன?" டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் கேள்வி மிகச் சரியானது, மிக முக்கியமானது!

----------------
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தமிழ்நாட்டின் ஊடகங்களின் நிலை குறித்து மிகச்சரியான, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை எழுப்பியுள்ளார். அவரது கேள்வி ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான மிக முக்கியமான தொடக்கப்புள்ளி ஆகும்.

ஜனநாயக நாட்டின் நான்காவது தூணாக விளங்க வேண்டிய ஊடகங்கள், ஜனநாயகத்தை அழிக்கும் புற்றுநோயாக மாறியுள்ளன. இந்த பெரும் நோயை தடுத்து, ஜனநாயகத்தை காப்பாற்றவும், அதன் மூலம் நாட்டை காக்கவும் டாக்டர் கிருஷ்ணாசாமி அவர்களின் கேள்வி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக விவாதிக்கப்பட வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டின் ஊடகங்கள் தம்மீதுள்ள அழுக்கை மறைப்பதற்காக டாக்டர் கிருஷ்ணமி அவர்கள் மீது புழுதிவாரி தூற்றுகின்றன. இந்த அக்கிரம செயல் கண்டிக்கப்பட வேண்டும்.

----------------
"நடப்பது என்ன?"

டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் 28.5.2019 பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து ஊடகங்கள் பின்வருமாறு எழுதி வருகின்றன:

//தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம், "நீ என்ன சாதி?" என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.  ஒரு தலைவர் இப்படி பேசலாமா என மக்கள் அனைவரும் விமர்சித்து வருகின்றனர்// என்று ஊடகங்கள் கூறிவருகின்றன.

இதன் மூலம் டாக்டர் கிருஷ்ணசாமி  அவர்களின் மிக நியாயமான, மிகத் தேவையான கேள்வியை தவறானதாக சித்தரிக்கின்றன. ஒருசில சமூகங்கள் மட்டுமே ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தினால், அது ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் பெரும் கேடு என்பதால்,  ஊடகங்களில் வேலை செய்கிறவர்கள் யார், அவர்கள் சார்ந்திருக்கும் சமூகம் எது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது.

உண்மையில், ஊடகங்களில் பணியாற்றுவோர், அதனை நிர்வகிப்போர் நாட்டு மக்களிடையே உள்ள பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். இத்தகைய ஊடக பன்முகத்தன்மை (Diversity in Media) மிக அவசியம் ஆகும். அதுதான் ஜனநாயகத்தையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கான மிக முதன்மை வழியும் ஆகும்.

----------------
ஊடகப் பன்முகத்தன்மை (Diversity in Media) எதற்காக?

தம்மைச் சுற்றியுள்ள அரசியல் உலகம் மற்றும் சமூக உலகம் குறித்த மக்களின் புரிந்துணர்வை ஊடகங்களே தீர்மானிக்கின்றன. ஒரு சமுதாயம், ஒரு மதம், ஒரு கட்சி, ஒரு அரசியல் நம்பிக்கை என எதை எடுத்தாலும், மக்கள் அதன் உண்மை நிலையை வைத்து மட்டும் மதிப்பிடுவது இல்லை. மாறாக, ஊடகங்கள் எவ்வாறு சித்தரிக்கின்றனவோ, அவ்வாறே பொது மதிப்பீடுகளும் உருவாகின்றன.

ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் சிக்கல்களில் அந்த நாட்டின் மக்கள் காட்டும் ஆர்வம் - ஊடகங்கள் அந்த சிக்கல்களை எவ்வாறு சித்தரிக்கின்றன என்பதிலிருந்துதான் உருவாகிறது. ஊடகங்கள் ஒரு சிக்கலை எவ்வாறு சித்தரிக்கின்றன என்பது - அந்த ஊடகத்தின் செய்தியாளர்களும் உரிமையாளர்களும் யாராக இருக்கின்றனர் என்பதை பொருத்துதான் முடிவாகிறது.

ஊடகங்கள் வெறும் தகவலையோ, செய்தியையோ மட்டும் பரப்பவில்லை. அவை ஒரு சமூகத்தின் பொது புத்தியையே தீர்மானிக்கின்றன. தனிமனிதர்கள், சமூகம், நாடு என எல்லாவற்றின் மீதும் ஊடகங்கள் கடுமையான தாக்கத்தை உருவாகுகின்றன. இதனால், ஊடகத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே சமுதாயத்தையும் நாட்டையும் கட்டுப்படுத்துகிறார்கள். இந்த அதிகாரம் சில தனிமனிதர்களிடமோ அல்லது ஒரு சில குழுவினரிடமோ குவியும்போது, அது ஜனநாயகப் படுகொலையாக மாறிப்போகிறது.

கண்ணில் எது தென்படவில்லையோ, அது மூளைக்கும் தென்படாது (out of sight, out of mind) என்பது ஒரு பொன்மொழி ஆகும். ஊடகங்கள் தான் மக்கள் மனதை கட்டுப்படுத்தி, அரசியல் பிரச்சினைகளையும் வாக்காளர்களின் மனநிலையையும் தீர்மானிக்கின்றன. ஜனநாயக நாட்டின் அரசியலை கட்டுப்படுத்துவதில் ஊடகங்கள் தான் முதலிடத்தில் இருக்கின்றன. இவ்வாறு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஊடகங்கள் பெரும்பான்மை மக்களை திட்டமிட்டு புறக்கணிக்கின்றன.

ஊடகப் பன்முகத்தன்மை இல்லை என்றால், ஜனநாயக அரசு முறையே தோல்வியடைந்து விடும். எனவே, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் ஊடகங்களில் பன்முகத்தன்மை வேண்டும் என்கிற கோரிக்கை உலகம் முழுவதும் பேசப்படுகிறது.

----------------
ஊடகப் பன்முகத்தன்மை (Diversity in Media) என்றால் என்ன?

ஊடகங்கள் எந்த சமூகத்துக்காக, எந்த மக்களுக்காக செய்தியை வெளியிடுகிறார்களோ, அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே ஊடகமும் அமைய வேண்டும் என்பதுதான் ஊடகப் பன்முகத்தன்மை ஆகும். சமூகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டும் ஆதிக்க செய்திகளை மட்டும் பரப்பாமல், சமூகத்தின் அனைத்து தரப்பினருக்குமான செய்திகளை அளிப்பதற்கான வழிமுறை இதுவாகும்.

ஊடகங்கள் வெளியிடும் செய்திகளும் தகவல்களும் அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஊடகங்களில் பணியாற்றுபவர்கள், செய்தியாளர்கள் தொடங்கி ஆசிரியர் குழு வரை, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியவர்களாக இருக்க வேண்டும்.

இந்த பன்முகத்தன்மைக்கு மூன்றுவிதமான வடிவங்கள் உள்ளன. 1. மக்கள் எந்த செய்தியை காண்கிறார்கள் அல்லது கேட்கிறார்கள் (what we see and hear),  2. செய்திகளை உருவாக்குவோர் யார் (who writes, reports and produces what we see and hear), 3. செய்திகளை அளிக்கும் சாதனம் யாருக்கு உரிமையாக இருக்கிறது (who owns the companies that dictate what we see and hear) - என்கிற இந்த மூன்று இடங்களிலும் பன்முகத்தன்மை இருக்க வேண்டும் என்பது பன்னாட்டு ஊடக நேறி ஆகும்!

இதன் மூலம் அனைத்து தரப்பினரின் குரலுக்கு செவிமடுக்கும் வகையிலும், அனைத்து தரப்பினருக்கான செய்திகளை வெளியிடும் வகையிலும் ஊடகங்கள் இருக்க வேண்டும்.

The media system, from broadcast television to local radio, should be fully representative of the communities that it serves. A diverse media is one that is inclusive of all social groups and women in content (what we see and hear), employment (who writes, reports and produces what we see and hear), and, most importantly, ownership (who owns the companies that dictate what we see and hear) so that the stories of all citizens can be told, and the voices of all citizens can be heard.

----------------
உலகின் மற்ற நாடுகள் ஊடகப் பன்முகத்தனமைய வலியுறுத்துகின்றனவா?

ஊடகப் பன்முகத்தன்மையை பல நாடுகள் சட்டப்படி கட்டாயமாக்கியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஊடகங்களில் பன்முகத்தன்மை கட்டாயம் தேவை என்பதை சட்டபூர்வமாக வலியுறுத்துகின்றன.

அமெரிக்க நாட்டில் எந்த ஒரு தொலைக்காட்சியும் 39% மக்களுக்கு மேல் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது என்றும், ஒருவர் எத்தனை ஊடகங்களை வைத்திருக்கலாம் என்பதற்கும் விதிமுறைகள் உள்ளன. அனைத்து பிரிவு மக்களையும் உள்ளடக்கியதாக ஊடகம் இருப்பதும் அனைத்து தரப்பு கருத்துகளையும் வெளியிடுவதும் அங்கு கட்டாயமாகும். நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சட்டப்படி ஊடகப் பன்முகத்தன்மை கட்டாயப்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் பிபிசி ஊடகப் பன்முகத்தன்மையை அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. 2016 ஆம் ஆண்டின் பிபிசி கொள்கைப்படி, 2020 ஆம் ஆண்டிற்குள் பிபிசி ஊழியர்களில் பெண்கள் எண்ணிக்கையை 50% அளவுக்கு உயர்த்துவது என்றும், ஆசிய நாட்டினர் மற்றும் கருப்பின ஊழியர்களின் எண்ணிக்கையை இப்போதைய 10% அளவில் இருந்து 15% அளவுக்கு உயர்த்துவது என்றும் கொள்கை வகுத்துள்ளது.

----------------
தமிழ்நாட்டில் ஊடகப் பன்முகத்தன்மை எவ்வாறு அமைய வேண்டும்?

ஊடகங்கள் எந்த சமூகத்துக்காக, எந்த மக்களுக்காக செய்தியை வெளியிடுகிறார்களோ, அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே ஊடகமும் அமைய வேண்டும் என்பதுதான் ஊடகப் பன்முகத்தன்மை ஆகும்.

எனவே, தமிழக ஊடகங்களில், தமிழக மக்கள் தொகையை பிரதிபலிக்கும் வகையில் - செய்தியாளர்கள் தொடங்கி, ஆசிரியர் குழு வரை அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறே, ஊடகங்கள் வெளியிடும் செய்திகளிலும் இந்த பன்முகத்தன்மை இருக்க வேண்டும்.

குறிப்பாக, பெண்கள், மதங்கள், தாய்மொழி, சமூகப்பிரிவுகள் ஆகிய அடிப்படைகளில் ஊடகங்கள் மக்கள் தொகையை பிரதிபலிக்க வேண்டும். வெளிவரும் செய்திகளும் இந்த மாறுபட்ட குழுக்களின் பார்வையை எதிரொலிக்க வேண்டும்.

ஊடகப் பன்முகத்தன்மை என்பது இன்னொரு இடஒதுக்கீட்டு கோரிக்கையோ, வேலைவாய்ப்பு கோரிக்கையோ அல்ல. இதனை அவ்வாறு கூறுவது பிரச்சினையை சிறுமைப்படுத்துவது ஆகும். இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான கோரிக்கை. உண்மையான நாகரீக சமூகமாக தமிழகம் மாறுவதற்கான கோரிக்கை.

----------------
என்ன செய்ய வேண்டும்?

2018 மே மாதம் 3 ஆம் நாள் கானா நாட்டின் அக்ரா நகரில் கூடிய ஐநாவின் யுனெஸ்கோ ஊடகங்கள் மாநாட்டில், 'அக்ரா பிரகடனம்' (Accra Declaration) எனும் அறிவிப்பை வெளியிட்டார்கள்.

அந்த யுனெஸ்கோ பிரகடனத்தில் "ஊடகங்களில் பன்முகத்தன்மையை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, சமூகத்தில் அங்கம் வகிக்கும் எல்லா பிரிவினரும் ஊடகங்களிலும் இடம்பெற வேண்டும் (fair representation in the media of different groups in society). அதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Accra Declaration: UNESCO World Press Freedom Day International Conference.- "We therefore: Call on each UNESCO Member State to:... Promote media diversity, including by preventing excessive concentration of media ownership, by requiring media outlets to be transparent about their ownership, ...by promoting fair representation in the media of different groups in society."

தமிழ்நாட்டின் ஊடகங்களில் உரிமையாளர்கள் யார் என்பதில் பன்முகத் தன்மையை கொண்டுவருவது (preventing excessive concentration of media ownership) தற்போதைய நிலையில் சாத்தியம் இல்லை. ஆனால், அந்த ஊடகங்களில் பணி புரிவோரில் (அதாவது, செய்திகளை யார் உருவாக்குகிறார்கள் என்பதில்) பன்முகத்தன்மையை கொண்டு வருவது (promoting fair representation in the media of different groups in society) சாத்தியம் தான்.

அதற்கான முதல் படியாக - தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊடகமும் தமது ஊடகத்தில் செய்திகளை உருவாக்கும் படிநிலைகளில் (ஆசிரியர் குழு, செய்தியாளர்கள்) தமிழ்நாட்டின் எந்த சமூகத்தினர் எத்தனை விழுக்காட்டினர் பணியாற்றுகிறார்கள் என்பதை வெளியிட வேண்டும் (உலகின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் அவ்வாறான பட்டியலை வெளியிடுகின்றன).

அந்த வகையில் தமிழக ஊடங்களில் படிநிலை பணிகள் வாரியாக OC, BC, MBC, தமிழ் மொழி பேசுவோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவினரும் எத்தனை விழுக்காட்டினர் வேலை செய்கிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறாக, ஊடகங்களில் செய்திகளை உருவாக்குகிறவர்கள் யார் என்பது வெளிப்படையாக தெரியும் பொது - அந்த ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் எவ்வாறு இருக்கும் என்பதை மக்கள் தாமாகவே அனுமானிக்க முடியும். அதாவது, எந்த ஊடகம் எத்தகையை செய்திகளை வெளியிடும் என்பது வெளிப்படையாக தெரியும்.

இவ்வாறாக, தமிழ்நாட்டின் ஊடகங்கள் தமது பன்முகத்தன்மையின் உண்மை நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வது ஒன்றே பத்திரிகை தர்மம் தமிழ்நாட்டில் படுகொலை ஆகாமல் தடுக்கும் வழியாகும்!

மொத்தத்தில், டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் கேள்வி, தமிழ்நாட்டில் ஊடக பன்முகத்தன்மைக்கான  (Diversity in Media) திறவுகோலாக அமைய வேண்டும்.

"Diversity must be regarded as a core journalistic value. If your coverage does not reflect your community, it's not accurate"  - David Yarnold, San Jose Mercury-News

சனி, 25 மே, 2019

வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வும் சாவும்தான் சூழ் எனும் பெருங்கதை :- கதிர் நம்பி, பொறியாளர், பேரா.தொ.ப. வாசகர் வட்டம்


கண்மாயிற்கு நீர் வரத்து இல்லை.வேலிக்கருவை கண்மாய் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அரசு கருவையை வெட்டும் (தூரோடு பிடுங்க அல்ல) உத்தரவு தருகிறது. ஊரில் இருந்து பெருந்தலைகள் அரசு விடுக்கும் வெட்டு ஏலத்தை எடுத்து வருகிறார்கள். ஒரு நல்ல! வெட்டு மர நிறுவனத்திற்கு கண்மாயின் வேலிக்கருவையை பெரிய தொகைக்கு கைமாற்றி விடுகிறார்கள். பிறகு வந்த பெரிய தொகையில் ஒரு பிள்ளையார் கோயிலை கட்டி ஊரின் வாயைத் தைத்து விடுகிறார்கள். எஞ்சியிருக்கும் பணத்தை தங்களுக்குள் பங்கிக் கொள்கிறார்கள்.
அத்தி பூத்தார் போல கண்மாயில் நீர் சேகரமாகிறது. மடை பராமரிப்பு இல்லை. வாய்க்கால் இல்லை. தண்ணீர் வேண்டுமெனில் எண்ணெய் எந்திரம் வைத்து நீர் எடுத்துக் கொள் என்கிற நிலை.கடைமடை சம்சாரிக்கு நீர் போய் சேராது. எந்திரம் வைத்திருப்பவரே நீர் எடுத்துக் கொள்வார். நீர் பாய்ச்ச மணிக்கு இத்தனை ரூபாய் என பணம் கட்டுகிற நிலை இருக்கிறது. இப்படி கண்மாயின் மீது உரிமை இழந்து கையறு நிலையில் நிற்கின்ற என்னைப் போன்ற சம்சாரிகள் நிற்கின்ற இடத்தை தீர்க்க தரிசனமாக தொட்டு சூல் பெருங்கதை நிறைவு பெறுகிறது.
உருளைக்குடி எனும் ஊரினில், எட்டையபுர மன்னர் தொட்டுத் தந்த மண்வெட்டியை வைத்து சாமிக்கு பூசை செய்து விட்டு கண்மாய் கரையை மடைக் குடும்பன் வெட்ட, கண்மாயிலிருந்து ஊரார் கரம்பை மண்ணை எடுத்து செல்வதில் ஆரம்பித்து, மக்களரசு கண்மாயிற்கு அமர்த்திய கண்மாய் காவலரிடம் (watchman) மடைக் குடும்பன் மடையின் சாவியையும் மண்வெட்டியையும் ஒப்படைப்பதோடு முடிகிறது. உழைக்கும் உழுகுடி மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பாடுகளையும் இயல்பாக நம் கண் முன் நிறுத்துகிறது சூல் பெருங்கதை.
கண்மாய் :
----------------
“முதல் எனப்படுவது நிலம்”  என்கிறது தொல்காப்பியம். நிலத்தின் மீதான உரிமை தான்  உழைப்பின் மீதும் உழவின் மீதும் ஒரு உயிர்ப்பான உறவை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் ஏர் மகாராசன். எனினும் அந்த உரிமைக்கு மூலமாய், நிலத்திற்கு மூலமுதலாய் இருப்பது நீர். அந்த நீரினை சேகரம் செய்கின்ற ஏந்தல், தாங்கல், ஏரி,கண்மாய்,ஊரணி,குளம்,குட்டை என அனைத்து நீர்நிலைகளை ஒரு குமுகம் எவ்வாறு காத்து வந்தது என்பதற்கு சூல் ஒரு உதாரணம். ஆசிரியர் கண்மாயை நிறைமாத சூலிக்கு ஒப்பிடுவார். என்ன ஒரு கவித்துவமான ஒப்பீடு! நிறை மாத சூலி போல கண்மாயின் வயிறு தண்ணீரால் வீங்கி இருக்கிறது. கண்மாய்களுக்கு நீர் கொண்டு வரும் ஓடைகளை ஆணின் குறி என்றும், மழை தான் இயற்கையின் விந்து என்றும் கண்மாய் தான் பெண்ணின் யோனி என்றும் கர்ப்பப்பை என்றும் உருவகப்படுத்துகிறார். இவை உருவகங்கள் மட்டும் அல்ல., உண்மையும் கூட. கண்மாய் நீரில் வாழும் மீன்களான விரால்,விலாங்கு,அயிரை,கெண்டை,கெளுத்தி,
கொறவை என பல வகையான மீன்களுக்கு ஆதாரமாய் நிற்கிறது. வலசை வரும் பறவைகள் கண்மாயின் நடுவே வீற்றிருக்கும் மரங்களில் தஞ்சமடைகின்றன. கரைக்கு அப்பால் இருக்கும் வயல்களை பச்சையம் போர்த்திட நீர் தந்து சம்சாரிகளை காக்கின்றது.
சிறகி,உள்ளான்,நாமக்கோழி,மீன்கொத்தி என பல பறவைகளுக்கு மீன்களையும்,நத்தை,நண்டு என உணவு தந்து பறவைகளை குதியாளம் போட வைக்கின்றது.நீர் வறட்சியே நம்பிக்கையின் வறட்சி என ஆசிரியர் குறிப்பிடும் பொழுது உருளைக்குடி மக்கள் நம்பிக்கை வறட்சி காணாத வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள் என பதிவு செய்கிறார். கண்மாய் பல்லுயிரியம் பேணுகிறது, கரையில் ஓரமாய் நிற்கும் அய்யனாரையும் சேர்த்து...
பனையும் கரையும் :
-------------------------------
மண் அரிப்பு ஏற்பட்டு கண்மாய்க் கரை உடைந்து போகாது காப்பது கரையில் நெடிந்தோங்கி உயர்ந்து நிற்கும் பனை மரங்களின் வேர்களும் பனை மரத்தோடு சேர்ந்து கரை முழுக்க விரவிக் கிடக்கும் காட்டுக் கொடிகளும் தான். கூடவே தெய்வமாகிப் போன மடைக் குடும்பனும் அவனை துணைக்கு கூட்டிக் கொண்ட அய்யனாரும் கரையில் அமர்ந்து கண்மாயை காக்கிறார்கள். அவரவருக்கு அவரவர் வயிறு. ஊருக்கு கண்மாய் தான் வயிறு. “வீட்டுக்கு கும்பா,ஊருக்கு கண்மாய்,சித்தனுக்கு திருவோடு” என ஊருக்கு உணவளிக்கும் அட்சய பாத்திரம் தான் கண்மாய் என்று ஆசிரியர் சொல்வதிலிருந்து கண்மாய் மீதான் பிடிப்பை உணர முடிகிறது.
மடைக் குடும்பன் :
----------------------------
நீர் ஆதாரங்களில் உள்ள மடைகளின் வழியே நீரை மேலாண்மை செய்கிறவர்கள் மடையர்கள். அன்றைய குமுகத்தில் மடைக் குடும்பன் என்பது ஒரு மதிப்புமிக்க பதவியாகும்.(high esteemed designation).மரபு வழிப்பட்ட தொழிலாக மடை நிர்வாகம் இருந்ததாலும் ஊரில் உள்ள சம்சாரிகள் அத்தனை பேருக்கும் சரி சமமாக நீர் பாய்ச்சும் நேர்மை கொண்டதாலும் இவர்கள் செல்வாக்கு மிகுந்து இருந்தார்கள்.உருளைக்குடி ஊரில் நீர்பாய்ச்சி மடைக் குடும்பன் ஒருவன் கையில் தான் மொத்த சம்சாரிகளின் வாழ்வாதாரமும் இருந்து வந்தது. கண்மாய் நீரை திறந்து விட்டதும் நிலம் முழுக்க பச்சையம் போர்த்தி நிற்பதைப் பார்ப்பதும் தான் மடைக் குடும்பனுக்கு பெருமிதம். கரையில் பரவிக் கிடந்த சங்கச் செடியில் இருந்த பூக்களை பிடுங்கிச் சென்ற கிழவியின் வீடு தேடிச் சென்று விசாரணை நடத்தி எச்சரிப்பதில் தெரிகிறது கண்மாயின் மீது மடைக் குடும்பனுக்கு இருக்கின்ற அக்கறை.
நாம் ஒருவரை இழித்து பழிப்பதற்கு ‘மடையா’ என்ற சொல்லை என்றைக்கு  பயன்படுத்தினோமோ அன்றே நாம் நம்முடைய நீரின் மீதும் நீர்நிலைகளின் மீதும் இருந்த உரிமையை இழந்து விட்டோம். மடைக் குடும்பன் மடை திறக்கவோ அல்லது அடைப்பு எடுக்கவோ நீருக்குள் முக்குளித்து அடியாலத்திற்கு செல்கின்ற பொழுது அவனும் ஒரு நீர் வாழ் உயிரினமாக மாறி விடுகிறான். அப்படியொரு அடைப்பு எடுக்க நீரில் பாய்ந்து இறந்து போன மடைக் குடும்பனின் பாட்டன் தான் சாமியாகி கரையில் கருப்பன் சாமி என்ற பெயர் தாங்கி நிற்கிறான்.கரணம் தப்பினால் மரணம் என்ற தொழில் மடை காப்பது.எனினும் மரபு வழிப்பட்டு வந்த தொழிலை போற்றி வந்திருக்கின்றனர்.மடையர்கள் கண்மாயை விட்டு பிரிந்தார்கள்; நீரும் கண்மாயை விட்டுப் பிரிந்தது.
தெய்வங்களும் மக்களும் :
-----------------------------------------
உருளைக்குடியில் தெய்வங்களும் மக்களும் பிண்ணிப் பிணைந்து கிடந்திருக்கிறார்கள். இந்த மக்கள் தெய்வங்களை கொண்டாடுகிறார்கள், தூற்றுகிறார்கள்,பகடி செய்கிறார்கள்,சாட்சியாக வைத்துக் கொள்கிறார்கள். தெய்வத்தின் மீது பயம் இருக்கிறது.பக்தி இல்லை.ஏன் இவர்கள் தெய்வங்களோடு இவ்வளவு இணக்கமாக இருக்கிறார்கள்?ஏனெனில் நேற்றைய மனிதர்கள் இன்றைய தெய்வங்கள். நடுகல் நினைவேந்தலின் தொடர்ச்சி தானே தெய்வ மரபு. ஊருக்காக செத்துப்போன மடைக்குடும்பன் கருப்பன் சாமியாகவும் நிறைமாத சூலியாக செத்துப்போன மாதாயியும் தெய்வங்களாகி உருளைக்குடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நம்பிக்கை எவரையும் பாதிக்கவில்லை. ஏனெனில் அறிவுத்திமிர் உருளைக்குடியில் குடியேறாத காலம். மழையை வழி அனுப்பி வைக்கும் சடங்கிற்காக தோரணங்கள் கட்டப்படுகின்றன. “இன்ன தேதில சடங்கு சார்த்த போறோம்னு ஊருல இருக்குற எல்லாருக்கும் தெரியும்.அப்புறம் ஏன் தோரணம் கட்டனும்?”  என்ற கேள்விக்கு “நமக்குத் தெரியும்.நம்ம சாமிக்கு தெரிய வேண்டாமா? நம்மள மாதிரி அதுவும் சுத்த பத்தமா இருக்க வேண்டாமா? நம்மள மாதிரி தான் நம்ம சாமியும்., இங்க இருக்குற பொம்பள சாமி பக்கத்துக்கு ஊருல இருக்குற ஆம்பிள சாமிகூட தொடுப்பு வச்சிருக்கும். அதெல்லாம் இல்லாம கொஞ்ச நாளைக்கு சாமிகளும் சுத்த பத்தமா இருக்கணும்னு சொல்லித் தான் தோரணம் கட்டி சாமிக்கு அறிவிக்கிறது”  என ஊருளைகுடி மக்கள் சொல்கின்ற பதிலில் இருந்து மக்களும் தெய்வங்களும் இரண்டறக் கலந்து கிடந்தார்கள் என்ற செய்தி கிடைக்கிறது. இந்த தனித்த ‘மக்கள்-தெய்வம்’ உறவு புரியாமல் முற்போக்காளர்களும் வலது சாரிகளும் இந்த மக்களை தன்வயப் படுத்திட நினைத்து தோல்வியே அடைகின்றனர் என்பது என் கருத்தாகும். பெருந்தெய்வ கடவுளான சிவன் பார்வதியை வைத்து ஒரண்டை இழுக்கும் கிளைக்கதை ஒன்று இந்த மக்கள் பெருந்தெய்வ கோயில்களிடம் இருந்து அந்நியப்பட்டிருந்ததை சொல்கிறது. தெய்வங்கள் சூழ் மனிதர்கள்! நீர் சூழ் ஊர்! தெய்வங்கள் கண்மாயை காக்கிறதோ ? கண்மாய் தெய்வங்களை காக்கிறதோ?
அறம் காத்தவர்கள் :
------------------------------
அறம் என்றால் என்ன? அதை எப்படி காப்பது?
செவ்வியல் இலக்கியமான மணிமேகலை
“அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்;
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” 
என அறம் என்பதற்கு பொருள் தருகிறது.
கரிசல் இலக்கியமான சூல் பெருங்கதையில் வருகின்ற கொப்புலாயி ஒற்றை வரியில் அறம் என்பதற்கான பொருளை போகிற போக்கில் நெற்றியில் அடித்தாற் போல சொல்கிறாள்.
“கல்லுலையும் சோறு; கத்தாழையிலையும் சோறு; தொண்டைக்கு அங்கிட்டு போனா  நரகலு”.
கொப்புலாயி மட்டும் அல்ல, உருளைக்குடி உழுகுடி மக்கள் அனைவருமே அறம் காத்தவர்கள் தான். ஊருக்கு வழிப்போக்கரோ, ஆண்டியோ,சித்தனோ,வித்தைக்காரர்கள் என நாடோடிகள் எவர் வந்தாலும் பசியோடு படுக்கப் போக மாட்டார்கள். ஊரின் இளவட்டங்கள் அவர்களாகவே வீடுகளுக்கு சென்று சோறு எடுத்துக் கொண்டு வந்து வந்தவரை பசியாற வைப்பர். இன்றைக்கும் சில ஊர்களில் இந்த பழக்கம் இருந்து வருகிறது. உழுகுடிகள் வறியவருக்கு வேண்டும் என்கிற மட்டிற்கும் உணவு கொடுத்துப் பழகியவர்கள். பிறரை பிச்சை கேட்க அனுமதிக்காமலே அவர்களாகவே உணவு அளித்திருக்கிறார்கள். இங்கு உபரி உற்பத்தி நடக்கிறது. எனினும் ஊர் அறம் காக்கிறது. கண்மாய் மூலக் காரணமாய் நிற்கிறது.
“நீரும் சோறும் விற்பனைக்கு அல்ல” என்பது தமிழரின் அறம் என தொ.ப சொல்கிறார். உருளைக்குடி போன்ற எண்ணற்ற ஊர்கள் அப்படியானதொரு அறம் காத்து வந்திருகின்றன.
மானாவாரிக் காட்டில் விதைத்திருக்கும் குருதவாலிக்கும் கேப்பைக்கும் காவல் யாருமில்லை.மினுதாக் குடும்பன் என்ற ஒற்றை மனிதன் தவசங்களை மொட்டப்பாறையில் வந்து அமரும் பறவைகளுக்காக வீசினான். பறவைகள் தவசங்களை இறையெடுப்பதை கண்டு மகிழ்ந்தான்.அவன் போல ஊராரும் அவ்வாறே தவசங்களை மொட்டப்பாறையில் வீசினார்கள்.பறவைகள் நாளடைவில் உருளைக்குடிவாசிகளாகி விட்டது. தனி மரம் தோப்பானது! நாம் இவைகளுக்கு உணவு தரவில்லை எனில் எவர் தருவார்? நம்மையெல்லாம் கஞ்சப்பயலுக என்று இந்த பறவைகள் நினைத்து விடாதா? என அவர்கள் எழுப்பும் கேள்விகள் அறங்காவலர்கள் என்ற சொல்லுக்கு பொருள் தருகிறது. 
குமுக உறவுகளும் உற்பத்தியும் :
---------------------------------------------------
உழுகுடிகள் உழுது வேளாண்மை செய்கிறார்கள். உருளைக்குடியும்  நிலவுடைமைச் சமூகம் கொண்ட ஊராக இருக்கிறது. நாயக்கமார்களிடம்,பிள்ளைமார்களிடம் நிலம் இருக்கிறது. அவர்கள் நிலத்தில் வேலை(பண்ணையாள்) பார்க்க ஊர் கூடி குலுக்கல் முறையில் அருந்ததியர்களை வேலைக்கு தெரிவு செய்துகொள்கிறார்கள்.சமூக நிதி பற்றி சிந்தித்திடாத காலம்.ஆனாலும் சமூக இணக்கங்கள் கொண்ட காலமாக இருக்கிறது. ஆண்டான்-அடிமை வர்க்க பேதம் உருளைக்குடியிலும் நிலவுகிறது. எனினும் நெகிழ்வுத் தன்மை இருக்கிறது. பண்ட மாற்று மட்டுமே அறிந்து பழகியவர்களாக இருக்கிறார்கள். வேளார் குமுகத்தினர் மண்பாண்டங்களை கொடுத்து நெல்லும் தவசங்களும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆசாரி குமுகத்தினர் கலப்பைகளை செப்பனிடுவது,உழவு மாடுகளுக்கு லாடம் கட்டுவது என உழவு நிமித்தமான வேலைகளை பூர்த்தி செய்கிறார்கள். பனையேறிகள் கள் இறக்கி பனையடிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தற்சார்பு நிறைந்த ஊராக இருக்கிறது. மிகை உற்பத்தி எட்டயபுர ஜமீனுக்கே சென்றிருக்க வேண்டும். விளைச்சல், கூலி நிர்ணயம்,அளவை மதிப்பீடு போன்ற கூடுதல் செய்திகள் சொல்லப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஊருக்கென கட்டுப்பாடு இருக்கிறது.மீறினால் தண்டனை. தண்டனை என்பது தவறை மனத்தால் வருந்துகின்ற நிலையை ஏற்படுத்தும் அளவிற்கே இருக்கிறது. குழு மனப்பான்மையோடு இயங்கினார்கள்.புராதான பொதுவுடைமைச் சமூகத்தின் எச்சமாக இருந்தார்கள். ஊரில் கண்மாய் இருக்கிறது.கண்மாயில் நீர் இருக்கிறது.எல்லோர் வீட்டிலும் இன்பம் இருக்கிறது. 
அறிகுறிகளும் சடங்குகளும் :
---------------------------------------------
  தன்னை இயற்கையோடு ஒரு அங்கமாக கருதியிருந்த குமுகத்தை கொண்டிருந்தது உருளைக்குடி. சொலவடைகள்,சொல்லாடல்கள் எல்லாமே நீரையும் மழையையும் ஒட்டியே அவர்களின் வழக்காறுகளாய் அமைந்திருக்கிறது.மழை வேண்டி ஒரு சடங்கு. மழையை அனுப்பி வைக்க ஒரு சடங்கு. உழுகுடிகள் வாழும் நிலத்தில் சடங்குகளுக்கு பஞ்சம் இருக்காது.
சடங்குகளே ஒரு குமுகத்தின் பண்பாட்டினை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது. குமுக நினைவுகளின் தொகுப்பே (social memoirs) வரலாறாகும் என பேரா.ஆ.சி முன்வைக்கிறார். சடங்குகள் வழியே நினைவுகளை மீட்கிறார்கள். சடங்குகளே மரபறிவின் கூடாகவும்(shell) இருக்கிறது. சடங்குகளில் ஏற்பன ஏற்று துறப்பன துறந்திட வேண்டும். சடங்குகள் இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள் அறிவைக் கடத்த(knowledge transfer) பயன்படுத்திய ஒரு ஊடகம்(medium) அன்றி வேறொன்றும் இல்லை. ஆகச் சிறந்த உதாரணம் : மொளைப்பாரி சடங்கு. விதை நேர்த்தி செய்வதிலிருந்து விதைத்து அறுவடை செய்கின்ற வரை சடங்குகள், சடங்குகள், சடங்குகள்..... எத்தனை சடங்குகளோ அத்தனை பட்டறிவு!!!!
மழையை வழி அனுப்பி வைக்க மாவினை கையில் எடுத்து வானத்தை நோக்கி வீசும் முன்னர் வேண்டுமா எனக் கேட்கின்றனர். வேண்டாம் சாமி என சொன்னதும் மாவினை வானத்தை நோக்கி தூக்கி வீசி மழை வேண்டாம் என்று உரக்க கத்தி உறுதி செய்கின்றனர். மாவின் மீதும் மழையை ஏற்றி சடங்கு சார்த்தப் படுவதால் தொத்து சடங்கு என இதை வகைப்படுத்தலாம்.
நாமக்கோழியின் வருகை, தூக்கணாங்குருவிக் கூட்டின் வாசல் திசை, அது கட்டப்பட்டிருக்கும் இடம்,எறும்புகளின் நகர்வு, மீன்கள் தட்டுப்பாடு என இவற்றை எல்லாம் கணித்து மழையின் வரத்தை கணித்துக் கொண்ட உருளுக்குடியினருக்கு எந்த காலேஜ்காரனும் (விவசாயக் கல்லூரி முகவர்கள் – கோவை வட்டாரத்தில் காலேஜ்காரன் என விளிப்பார்கள்) இவற்றை எல்லாம் சொல்லித் தரவில்லை.
வேதக் கோயிலும் விஞ்ஞானமும் :
----------------------------------------------------
வெள்ளையடித்த வேதக்  கோயில்களின் வரவு, உருளைக்குடி பிள்ளைகள் படிப்பதற்கான பள்ளி இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டாலும் புதிதாக வேதத்தில் சேர்ந்தவர்களிடம்  ஊரார் சற்று தள்ளியே இருந்திருக்கின்றனர். வெள்ளையர்கள் கொண்டு வந்த புகைவண்டியை பார்த்து மிரண்டு போய் அது எந்த நேரத்திலும் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் இருப்பதாக எண்ணி ஊரை காலி பண்ணிய செய்தியும் இந்த பெருங்கதையில் வருகிறது. வெள்ளையர்கள் கள்ளிச் செடியை அழிப்பதற்கு அந்து பூச்சியை கள்ளிச் செடியில் ஏற்றி ஒரு வருடத்தில் மொத்த கள்ளிச் செடியையும் காலி செய்கிறார்கள்.எனில் இவர்கள் நெல்லை என்ன பாடு படுத்தியிருப்பார்கள் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மன்னராட்சி X மக்களாட்சி :
--------------------------------------------
கரிசல் இலக்கியம் என்றால் கட்டபொம்மன் இல்லாமலா என்று கேட்கத் தோன்றுகிறது. வெள்ளையர்கள் வருகிறார்கள். எட்டயபுரம் வெள்ளையர்களுக்கு பணிந்து விட்டது. பாஞ்சாலங்குறிச்சி முரண்டு பிடிக்கிறது. உருளைக்குடி எட்டயபுர ஜமீனுக்கு உட்பட்ட பகுதி என்பதால் மன்னரின் முடிவே மக்களின்  முடிவாக இருக்கிறது. அரண்மனை மீது அவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்கள். அரண்மனையும் மக்களை சீண்டுவதில்லை. ராஜ துரோக செயல்களுக்கு மட்டுமே அரண்மனை ஆட்கள் ஊருக்குள் வருகிறார்கள். கட்டபொம்மனுக்கு உதவி செய்த ஆசாரியும் பணியேறியும் அவர் கொடுத்த தங்கபரிசை புதைத்து வைத்து அனுபவிக்க முடியாமல் இரண்டு தலைமுறைகள் அழிந்து போகிறது. இந்த புதையல் விவரணை கொஞ்சம் அதிகமாக நீடித்துவிட்டதோ எனத் தோன்றுகிறது.
குஞ்ஞான் எனும் மந்திரவாதி மன்னராட்சியின் வீழ்ச்சியை, சர்வாதிகார போக்கை, ஏக ஆதிபத்தியத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வருகிறான் என்றால் குப்பாண்டிச்சாமி மக்களாட்சியில் கேட்பாரற்று இந்த குமுகம் சீரழிந்து போகுமே என்று தன்னுடைய தீர்க்க தரிசனங்களை முன் வைக்கிறான். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விடும் சூழல் மக்களாட்சியில் இருப்பதால் அது மன்னாராட்சியை விட பெரும்பாதகங்களையும் விளைவித்து விடுமே என அஞ்சுகிறான் குப்பாண்டிச் சாமி எனும் சித்தன்.
மக்களாட்சி அமைந்தவுடன் அதிகாரிகள் மகிழ்வண்டியில் வந்து போக சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கண்மாய் கரையோரம் இருந்த பனைகளை  வெட்டுவதில் ஆரம்பிக்கிறது மக்களாட்சியின் அனர்த்தங்கள்.பஞ்சாயத்து தலைவர் பொறம்போக்கு நிலத்தை தன் பெயரில் பட்டா போட்டு மடையை மாற்றி தன் நிலத்தில் நீரை பாய்ச்சுவதில் ஆரம்பிக்கிறது மக்களாட்சியின் ஓட்டைகள்.
மக்களாட்சி கண்மாயில் கிடந்த அயிரை,கெளுத்தி,விலாங்கு போன்ற மீன்களை எல்லாம் துவம்சம் செய்து விட்டு ஜிலேபி கெண்டையை இறக்குமதி செய்கிறது, நாளடைவில் கண்மாயில் நாட்டு மீன்கள் இல்லாது போய்விடுகிறது. நிழல் தரும் வேப்ப மரங்களை வெட்டி விட்டு பஞ்சாயத்து அலுவலகம் கட்டி வானொலிப் பெட்டியை வைத்து மக்களுக்கு உரம் போடுவது,மருந்தடிப்பது,டிராக்டர் வைத்து உழுவது என விவாசாயப் பாடம் நடத்தியது.
கரம்பை அடித்து, குப்பை அடித்து, உழுது, விதைத்து அறுவடை செய்து தற்சார்பாய் வாழ்ந்த ஒரு குமுகத்தை நுகர்வுப் பிராணிகளாக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் கண்மாயின் உரிமையை பிடுங்கியதிலிருந்தே தொடங்குகிறது.
கோழியும் சேவலும் சேராமலே முட்டைகளை உருவாக்கி சாதனை என உருளைக்குடி மக்களை நம்ப வைத்தது மக்களாட்சி. “இன்றைக்கு கோழிகள் நாளைக்கு நீங்கள்”  என குப்பாண்டிச் சாமி சொல்கிறார். இன்றைக்கு தெருவெங்கும் மகப்பேறு மையங்கள்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண் – திருக்குறள்.
கண்மாயில் கிடந்த மணி நீர்(செம்புலப் பெயல் நீர்), வளமான மண்ணைக் கொண்ட வயல் வெளிகள், கொப்புலாயி, காட்டுப்பூச்சி போன்ற அறங்காவலர்கள் உருவாக்கிய நந்தவனங்கள்(அணிநிழற்காடு) மலை கொண்டு வந்து சேர்த்தும் பருவ மழை என இவைகள் தாம் உருளக்குடி எனும் குடியரசின் அரண்கள்.இப்படியான ஒரு குடியரசை நாம் காண இயலாது. தான் பார்த்து கேட்டு வாழ்ந்த குமுகத்தை கண் முன்னே காட்சிப் படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.நூலின் பின்னட்டையில் ஜெயமோகன் இந்த நூல் ஆவணத் தன்மை கொண்டதல்ல என்று சொல்லியிருக்கிறார். என் பார்வையில் இந்த நூல் சர்வ நிச்சயமாக ஓர் ஆவண நூல் தான். இனி வரும் தலைமுறைக்கு கண்மாயும்,அதன் உயிரோட்டமும் அதனை ஒட்டி வாழ்ந்த மக்களின் வாழ்வியலை குமுக உறவுகளை உணர்ந்து கொள்ள சூல் – பெருங்கதை நல்லதொரு ஆவணமாக பயன்படும்.
மேலோட்டமாக பார்க்கின் மன்னராட்சியே தேவலாம் போல என்ற மாயை உருவாகும்.உண்மை என்னவெனில் உழைக்கும் உழுகுடிக்கு  மன்னராட்சியிலும் சரி மக்களாட்சியிலும் சரி விடிவு காலம் பிறக்கவே இல்லை. மன்னராட்சி நிலபிரபுத்துவ முறையில் உழுகுடிகளுக்கு சலுகை வழங்கி வந்தது என்றாலும் உழைப்பை திருடியது. மக்களாட்சி முதலாளித்துவத்திற்கு முகவராக உருமாறி உழுகுடிகளை சுரண்டி கொழுத்தது. இறுதியாக உழுகுடிகள் “அல்லும் பகலும் நிலத்திலே உழன்று கிடந்த உழவர்களின் நிலம்,அதிகாரம் சார்ந்தவர்களுக்கு கை மாறிய போதும் வெள்ளந்தியாய் உழைத்தே கிடந்திருக்கிறார்கள்” என ஏர் மகாராசன் பதிவு செய்கிறார். அப்படி ஒரு வெள்ளந்தி ஊரான  உருளைக்குடி எனும் குடியரசின் வாழ்வும் சாவும் தான் சூல் எனும் பெருங்கதை!
பார்வை நூல்கள் :
---------------------------
ஏறு தழுவுதல் – ஏர் மகாராசன்,
பண்பாட்டு அழகியலும் அரசியலும் –
ஏர் மகாராசன்,
மந்திரங்களும் சடங்குகளும் –
பேரா. ஆ.சிவசுப்பிரமணியன்,
வரலாறும் வழக்காறும் -
பேரா. ஆ.சிவசுப்பிரமணியன்,
பண்பாட்டு அசைவுகள் – பேரா.தொ.பரமசிவன் .

திங்கள், 20 மே, 2019

நந்திகிராம் பாசிஸ்ட்டுகள் சொல்கிறார்கள் பிரபாகரன் பாசிஸ்ட் என்று.. :- சிலம்புச் செல்வன்

நான் திமுக வினரை விமர்சனம் செய்து பதிவிட்டது யாருக்கு உறுத்துகிறதோ இல்லையோ சிபிஎம் மினருக்கு எரிகிறது. தோழர் முகமது சிராஜூதீன் என் பதிவிற்கு ஒரு கவிதை பின்னூட்டமிடுகிறார். என்னவென்று "பிரபாகரன் ஒரு நாய்" என்று...

            அவருக்கு எவ்வளவு காழ்ப்புணர்வு, வன்மம், குரூரம் இருந்தால் இப்படி எழுதுவார். ஒருவரை கொள்கை ரீதியாக தாக்குவது என்பது வேறு. தனிப்பட்ட முறையில் தாக்குவது வேறு. சிராஜூதீன் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துகிறார்.

         அவர் ஏற்கனவே "காத்தான்குடி இஸ்லாமியர் படுகொலை" குறித்து எழுதியபோதே பொதுவாக சிறு விமர்சனம் ஒன்றை நிலைத்தகவலாக பதிவு செய்தேன். அதற்கு மதுரை இரவிக்குமார் (ஸ்ரீ ரசா) பின்னூட்டம் ஒன்றை இட்டார். உங்களால் மறுக்க முடிந்தால் மறுங்கள் என்று எழுதியிருந்தார்.

              நான் அதற்கு பதிலளிக்காமல் கடந்து சென்றேன். காரணம் கம்யூனிச தோழமைச் சக்திகளை அளவுக்கு மீறி விமர்சனம் செய்வது சரியானதாக இருக்காது என்று நினைத்தேன்.

            என்னால் அதற்கு பதிலளிக்க முடியாமல் அல்ல. எதிரி பலமானவனாக இருக்கும் போது நாம் தோழமைச் சக்திகளுடன் விமர்சனம் என்ற பெயரில் முரண்பட்டுக் கொள்ள வேண்டாம் என்று கருதியே.

         ஆனால் சிராஜூதீன் அதையெல்லாம் துச்சமாக தூக்கி எறிந்து விட்டு விமர்சனம் செய்துள்ளார். இனிமேலும் எங்களைப் போன்றவர்கள் அமைதி காத்தால் அது எங்களை நாங்களே இழிவு படுத்திக் கொள்வதாகும்.

           கொள்கை விமர்சனம் என்று வந்து விட்டால் நண்பன் எதிரி என்று நான் பார்ப்பதில்லை. எனக்கு சரி என்ற வகையிலேயே விமர்சனங்களை முன்வைப்பவன்.

           அவ் வகையிலேயே கூறுகிறேன் "பிரபாகரனை பாசிஸ்ட் " என்றும் 'நாய்' என்றும் கூறுகிற தகுதி சிபிஎம் முக்கு இருக்கிறதா? ஆர். எஸ்.எஸ் சுக்கு இணையாக இந்தியாவை காப்பாற்றத் துடிப்பவர்கள் பாசிஸ்டுகள் அல்லாமல் வேறென்ன?

          நந்திகிராம் படு கொலைகள்தான் சிபிஎம்மின் அரசு பாசிசத்தையும், கட்சி பாசிசத்தையும் ஒரு சேர வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதன் பின்புதான் மேற்கு வங்கத்தில் சிபிஎம் தூக்கி எறியப்பட்டது. அதே பாசிசத்தனமான நடவடிக்கைதான் தமிழ்நாட்டிலும் சிபிஎம் செய்கிறது. என்ன கருத்தியல் பாசிசமாகவே இது பெரும்பாலும்  உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கார்தான் பிரபாகரனை நாய் என்கிறார். பாசிஸ்டுகள் எப்போதும் பிறரை பாசிஸ்ட்டுகள் என்பார்கள். அதன் தப்பாத பிரதிநிதியாக சிபிஎம் உள்ளது.

ஞாயிறு, 12 மே, 2019

சுளுந்தீ: மருத்துவ மரபணு கொண்டவரால் மட்டுமே தொகுக்க முடியும் :- சித்த மருத்துவர் கீதா.

அருமையான எழுத்துக்கோர்வை....
எழுவதற்கு மனமில்லாமல் படித்துக்கொண்டிருக்கிறேன்...
எதை ஈர்க்கிறோமோ அதை அடைய முடியும்...
என் தேடலில் உங்க நாவலுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு....
சின்ன சின்ன விடயங்களை எவ்வளவு அழகாக கதையாக சொல்கிறீர்கள்...
இலக்கிய நயத்தோடு இடையிடேய வட்டார மொழியில்... வார்த்தைகளையும் நிறைய நுட்பங்களையும் இது நாவல் அல்ல ஆய்வுக்கட்டுரை போல உள்ளது....
சேராங்கொட்டையில் இருந்து சாயம் எடுக்கும் முறை அப்பப்பா வியந்து தான் போயிருக்கேன்....
புளியரையும் தேனும் சித்தரின் உணவு என்ன ஒரு ஆராய்ச்சி...
ஒரு மருத்துவ மரபணு மட்டுமே இப்படி தொகுக்க முடியும்...
குழித்தைலம் இறக்கும் முறை...
ராசபிளவைக்கு கருஞ்சித்திரமூல தைலம்... என்ன ஒரு மருத்துவ அறிவு...
வாழ்வியலாக மருத்துவம் பார்த்தவர்களுக்கே உரிய நடை....
கூடவே இனக்குழுக்களுக்கு நேரும் ஆபத்து...
முல்லை நில மக்களின் வாழ்வாதாரம் பற்றிய குறிப்பு நீண்டுகொண்டே போகிறது ஐயா...
விரைவில் புத்தக வாசிப்பை முடித்து விட்டு தொகுக்கிறேன் நன்றி....

தமிழர் சமூக வரலாற்று நெருப்பைக் காத்து நிற்கும் சுளுந்தீ :- வழக்கறிஞர் பா.அசோக்.


பொதுவாக நாவல்கள் அதிகம் வாசிப்பதில்லை.
சுஜாதாவோடு அது மறந்து விட்டது.

சாருவையும் எஸ்ராவையும் படிக்கும் மனநிலை இப்போது ஏனோ வருவதில்லை. இத்தனைக்கும்
சாருவின் தீவிர வாசகன் நான்.

 ஒருகாலத்தில் அவருடைய பிளாக்கை காலையும் மாலையும் இரவு என மூன்று நேரமும் திறந்து பார்ப்பவன். சாருவின் பதிவுகள் வராவிட்டால் ஏதோ இழந்தது போலிருக்கும். பின்னர் அவருடைய அதீதமான self boasting என் மனநிலையை பிறழ வைத்து விடுமோ என பயமே வந்துவிட்டது. விக்கியும் கூகுளாண்டவரும் அவருக்கு நிறைய அருள் புரிந்துள்ளனர் என தெரிந்த பிறகு சாரு  பூசாரியை விடுவது இயல்பு தானே.

2017 இல் அண்ணன் நந்தன் ஸ்ரீதரன் கைகளில் இருந்ததால் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை வாசித்தேன். வித்தியாசமான நாவல் பரபரப்பான ஆங்கில நாவல் மாதிரி வெகு இயல்பான சுயநல மனிதர்கள் வியாபார உத்திகள் என நகர்ந்தது.

பின்னர் Shankar A வினுடைய தொடர் நாவல். விறுவிறுப்பான ஒன்று.

மிக நீண்ட நாள் கழித்து
வழக்கறிஞர் Suthakaran Inthiran புண்ணியத்தால் இரண்டு மூன்று நாவல்கள் வாசிக்க ஆரம்பித்தேன். அவரின் பரிந்துரை தவிர்த்து நான் தொட்டது பாலகுமாரனின் உடையார் ..
கைசுட்டது தான் மிச்சம்.
மீண்டும் தெனாலிராமனின் பூனையானது போலிருந்தது.

சுதாகரனிடம் நான் கேட்டது ஏர்மகராசனின் தமிழ் எழுத்துகள் பற்றிய நூல் ஒன்று. ஆனால் அவர் தருவித்தது

     சுளுந்தீ.

புத்தகம் வந்த இரண்டு மூன்று நாட்கள் வாசிக்கவேயில்லை . தமிழ் இந்து.. Lakshmi Gopinathan ஆகியோரின் நூல் விமர்சனங்கள் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது.

நேற்று வீட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலில் இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். அதன் பிறகு கீழே வைக்கவில்லை.  வைக்க முடியவில்லை. எவ்வளவு செய்திகள். டாவின்சி கோடுக்கு பிறகு ஒரே நாளில் வாசித்த நூலிது.

பன்றி மலை சுவாமிகள் பற்றி செவிவழி  செய்திகள் தான் அறிந்துள்ளேன். இதில் அவரும் ஒரு பாத்திரம்.

அல்கெமி, அரபு நாடுகளின் வேதியல் வெளிப்பாடு என்றால் வெடியுப்பும் கந்தகமும் தமிழ் சித்த மருத்துவத்தின் பிள்ளைகள்.

பாஷாணம் எனும் விஷப்பொருளை மருந்தாக்க தெரிந்தவன் தமிழன்.

மேலை நாட்டு தாவரவியல் ஆய்வாளர்கள் flora's and faunas களை தொகுக்கும்  போது ஒரு தமிழ் மருத்துவ சமுதாயத்தை சார்ந்த நபர் துணை நின்றது மறந்த வரலாறு. அவர் பெயரும் இராமன் என்றே நினைக்கிறேன்.

சுளுந்தீயில் தான் எத்தனை செய்திகள்..
தமிழ் இந்துவில் வந்த விமர்சனத்தில் தொ.பரமசிவன் நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ அது போல என எழுதியிருந்தார்கள்.

அதில் ஒரே ஒரு திருத்தம்

 தொ.பரமசிவனும் ஆ.சிவசுப்பிரமணியனும்
இணைந்து எழுதிய நாவல் என கண்டிருப்பதே சரி என்பது என் கருத்து.

வெங்கம்பய என்பது நம் காதுகளில் அவ்வப்போது விழும் வசைச்சொல் அதன் பொருள் புரியாமல் பலபேரும் பயன் படுத்தி வருகிறோம். இந்த நாவல் வாசித்த பிறகு தான் பொருள் தெரிந்தது.
Necrophilia என எதிராளிக்கு தெரிந்தால் நம் பாடு என்ன ஆகும்.

நிலவியல்.. வானியல்.. மருத்துவம் .. வேதியல்.. வாய்மொழி வரலாறு.. சாதிய வேறுபாடு .. போர்முறைகள்.. சமூக பொருளாதாரம் என எல்லா களங்களையும் தொட்டுவிட்டு போகிறார் நூலாசிரியர் இரா. முத்துநாகு.

நீ சிரைக்க தான் லாயக்கு என எவரையும் திட்டிவிட முடியாது. சிரைப்பதில் கூட எவ்வளவு நுணுக்கங்கள்.

உண்மைக்கு வெகு அருகில் இருக்கும் நாவல்களில் ஒன்று. நாவல் படிப்பதில் ஒரு அறிவும் கிட்டாது அவை வெறும் உணர்ச்சி குவியல்களே என எண்ணும் என் போன்றவர்களின் கருத்தை சுக்கு நூறாக்கி விட்டுப்போன நூலிது.

காப்பியடித்து அடுத்தவன் உழைப்பை சுரண்டி நாவல் எழுதி அதையும் அரசியல் ரீதியாக புரமோட் செய்து  அகா "டம்மி " விருது வாங்குவோர் மத்தியில் தனது உச்சபட்ச உழைப்பை அறிவை கொட்டியிருக்கும் முத்துநாகுவின் அரும்பணி போற்றுதலுக்குரியது.

வாசித்துவிட்டோம் என வெறுமனே கடந்து போகமுடியவில்லை .
எத்தனை மரபார்ந்த அறிவை இழந்திருக்கிறோம் என்ற பெருஞ்சுமை மனதில் ஏறுகிறது.

மாடனின் குதிரையாகவே ...
நாவல் தந்த எண்ணங்களை சுமந்து அலைகிறது மனம்.

கொட்டும் மழையில் கூட அணையாது நிற்பது சுளுந்துக்குச்சியின் தீ.

காலமழை எத்தனை பெய்யினும்
தமிழர் சமூக வரலாற்று நெருப்பை காத்து நிற்கும் சுளுந்தீ.

வியாழன், 9 மே, 2019

சுளுந்தீ :அறிவுத்தீக்கான வரலாற்றுச் சித்த மருந்து. :- இலட்சுமி கோபிநாதன், வழக்கறிஞர்.

ஒரு நாவலிற்கான கருவையும் கதைக் களத்தையும் தேர்வு செய்தபின்னர் அந்த நாவல் முழு வடிவம் பெற்று வாசகனை அடைவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்பதை உணர்த்துகிற நாவல்.  சில நூல்களைத்தான் நாம் காலமெல்லாம் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றும். அப்படி எனக்குத் தோன்றிய நாவல் இது.

மதுரைக்கு அருகே உள்ள கன்னிவாடி கிராமமும் ஏனைய மதுரை மாவட்டத்தின் நிலப்பரப்பையும் அதைச் சுற்றிய வரலாற்றையும் பேசுகிறது இந்த நாவல். நாயக்கர் ஆட்சிக்காலம். மன்னருக்கு அடுத்தபடியாக குறுகிய எல்லையில் அதிகாரம் கொண்ட அரண்மனையாரின் ஆட்சியிலும், ஆட்சிக்காகவும் நடக்கும் சம்பவங்களே கதை.
சின்ன கதிரியப்ப நாயக்கரான அரண்மனையார், அந்த எல்லையில் வாழ்ந்து அங்குள்ளவர்களுக்கு வைத்தியம் பார்க்கிற சித்தர், அவரின் சீடராக வரும் நாவிதரும் பண்டுவருமான ராமன், அவரது மகன் மாடன், ராமனையும் மாடனையும் பழிவாங்கத் துடிக்கும் தளபதி, இவர்கள்தான் முக்கியமான கதை மாந்தர்கள்.

நாவலின் முதல் பகுதி ஒரு  சித்த மருத்துவக் களஞ்சியம். ராஜபிளவு எனச் சொல்லப் படுகிற நோயில் தொடங்கி, அறுந்த காதை ஒட்டவைக்கும் வைத்தியம், காது வளர்க்கும் வகை, பெண்களுக்கு வரும் பெரும்பாடு எனும் கரு சம்பந்தமான நோய், வெட்ட வாய்வு நோய், பசிப்பிணி, மூல நோய், ஓரண்ட வாயு எனும் ஆண்களுக்கு வரும் நோய், குழந்தை பிறப்பிற்கு என கிட்டத்தட்ட நம் சமகாலத்தில் நாம் சந்தித்து வரும் எல்லா நோய்களுக்குமான மருத்துவக் குறிப்புகள் சித்தர் வாயிலாக சொல்லப்பட்டுள்ளது. அதையெல்லாம் வாசிக்கும்போது நாம் ராமனாக மாறி சித்தருக்கு சீடராக இருக்கக்கூடாதா என மனம் ஏங்கித் தவிக்கிறது. சித்தர் பொடவிலிருந்து வெளியே வரும்போதெல்லாம் நம் மனமும் பொடவை பக்தியோடும் பணிவோடும் நோக்கி நிற்கிறது. நம் மருத்துவ அற்புதங்களைக் கொன்று புதைத்துவிட்டு மூக்கிலும் நரம்புகளிலும் ஊசிகளை சொருகிக் கொண்டு கை நிறைய பலவண்ண மாத்திரைகளிடம் தஞ்சம் புகுந்திருக்கிறோம்.

சித்தர் சமாதியானதும் தான் ராமனின் கதை தொடங்குகிறது. சித்தரே ராமனை சீடனாக அறிவித்தாலும் கூட, பந்த பாசம் கொண்ட ராமனால் சித்தராக வாழ முடியவில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. தனது மகனை எப்படியாவது அரண்மனைப் படையில் வீரனாக சேர்த்துவிட வேண்டும் என்பதே நாவிதரான ராமனின் கனவாக இருக்கிறது. ஆனால் பிறப்பால் நாவிதரான ராமனின் மகனால் அரண்மனை வீரனாக முடியவே முடியாது என்பதே யதார்த்தம். குலத்தொழிலே கட்டாயம். ஆனாலும் ராமன் தன் மகனை மிகச் சிறந்த வீரனாக வளர்க்கிறார். படைவீரனாகும் கனவையும் அவனுக்குள் விதைக்கிறார். அரண்மனையாரின் மிகுந்த மரியாதைக்குரியவராய் இருந்தும் ராமனால் தன் காலத்தில் தன் மகன் மாடனை அரண்மனை வீரனாக்க இயலவில்லை. அதே நேரம் தன்னுடைய குலத்தொழிலான நாவிதத்தின் நுணுக்கங்களையும் அதன் பெருமைகளையும் தன் மகனுக்குக் கற்றுத் தருகிறார் ராமன். இந்த இடத்தில் நாவிதத்தின் மகிமைகளை ராமன் சொல்லும்போது நம் சடங்குகளைப் பற்றிய பல செய்திகள் நமக்குத் தெரிய வருகிறது.

ராமன் திடீரென மறைந்துவிட மாடனை வீரன் கனவு துரத்துகிறது. ஒரு வீரனாவதற்காகவே வளர்க்கப்பட்டவனால் குடிமக்களிடமும் அதிகார வர்க்கத்திடமும் குழைந்து பிழைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் நல்லவனாக இருந்தாலும் கூட, மாடன் ஊராறால் வெறுக்கப் பட்டு சதியால் கொலை செய்யப் படுகிறான். இதுதான் கதை.

இந்தக் கதைக் களத்தில் எத்தனை எத்தனை வார்த்தைகளுக்கான காரணங்களோடு கூடிய அர்த்தங்கள். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தைகளான ஈத்தரப்பய போன்ற வார்த்தைகளுக்கான பின்புலங்கள் தெரிய வரும்போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. செந்தூரம் எனப்படுகிற பாஸ்பரஸ் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய மருந்து. அதிலிருந்து வெடி தயாரிக்கப்பட்டதால் வெடிமருந்து என்கிற பெயர் புழக்கத்திலிருக்கிறது என்கிற விளக்கம். என ஏகப்பட்ட நமக்கு அறியாத விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன இந்த நூல் முழுவதும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இன்று வரை நம் சமூகம் கண்டு பயப்படும் சித்து வேலை, பில்லி சூனியம் ஆகியவற்றின் பின்னால் உள்ள சூட்குமங்கள் பற்றிய எளிய விளக்கங்கள் அந்தந்த கதை மாந்தர்களை வைத்தே விளக்கப் பட்டுள்ள விதம் மிக மிக அருமை. அதில் கொஞ்சம்கூட பகுத்தறிவின் பிரச்சார நெடி இல்லை.
நாவலின் இறுதிப் பகுதியை வாசிக்கையில் எங்கே நாம் சாப்பிட்டு வருவதற்குள் மாடனைக் கொன்று விடுவார்களோ என்கிற பதற்றத்தில் சாப்பிடக்கூட பொறுமையில்லாமல் பரபரவென வாசிக்க வைக்கிற கதையின் ஓட்டம்.
இது புதினமாக இருந்தாலும் பெரும்பாலும் அனைத்து செய்திகளும் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது என்பதால் ஆசிரியரின் உழைப்பின் தீவிரம் நமக்குப் புரிகிறது. குலநீக்கம் என்பதின் பின்னால் உள்ள சூழ்ச்சி மற்றும் குல நீக்கம் செய்யப் பட்டுள்ளவர்களின் வேதனைகளையும் மிக அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நாவல்.
ஆனந்தா வருடப் பஞ்சம் பற்றிய பகுதி வரும்போது மனசு துக்கப் படத்தயாரகிக் கொண்டிருந்தது. ஆனால் பஞ்ச காலத்தைப் பற்றி எழுதும்போதுகூட சோகத்தை எழுத்தில் வலிந்து திணிக்காமல் மிக மிக யதார்த்தமாய் பஞ்சத்தின் இயல்பையும் அதைக் கடந்து வர மக்கள் செய்த நடவடிக்கைகளையும் பஞ்சத்தைக் கடக்க கிணறு வெட்ட நிலத்தடி நீரை உறிஞ்சுகிற பூதம் புறப்பட்ட விதத்தையும் ஆசிரியர் எதியிருக்கிற விதம் நமக்கு வாழ்வின்  மீதான நம்பிக்கையை வளர்க்கிறது.

இன்னும் எழுத எவ்வளவோ இருக்கிறது. முழுமையாக எழுதினால் சுளுந்தீ பற்றிய விமர்சன நூலே எழுதலாம். ஆசிரியர் திரு.முத்து நாகு அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பரிந்துரைத்ததோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கு வி,பி.பி.யில் வரவழைத்து உதவிய அன்புத் தம்பி சுதாகருக்கு அன்பும் நன்றியும்.

சுளுந்தீ - அறிவுத்தீக்கான வரலாற்று சித்த மருந்து.

சுளுந்தீ- நாவல்
இரா.முத்துநாகு
ஆதி பதிப்பகம்
VPPயில் புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்
+91 99948 80005-திரு.முரளி

புதன், 8 மே, 2019

ஆரிய வைதீகச் சமய மரபும் பிள்ளையாரும் : மகாராசன்

உ’ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும்,  பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பதுமான சமய உரையாடல்கள் ஒருபுறம் இருப்பினும், தமிழ்ச் சமூக வரலாற்றிலும் ஆரிய / வைதீகச் சமய மரபிலும் பிள்ளையாருக்கான இடம், அதன் தோற்றப் பின்புலம், அதன் பரவலாக்கம் போன்ற சமூக மற்றும் சமயப் பண்பாட்டு  நோக்கிலான கருத்தாடல்களும் ஆய்வுகளும் வேறுவகையிலான செய்திகளை முன்வைக்கின்றன. அவ்வகையில், பிள்ளையாரைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘பிள்ளையார் அரசியல்’ எனும் நூல், பிள்ளையாரைப் பற்றிய சமயப் பண்பாட்டுத் தரவுகளைத் தந்திருக்கிறது.

ஆரிய / வைதீகச் சமய அடையாளமாகப் பிள்ளையார் கருதப்பட்டாலும், அச்சமய மரபில் குறிக்கப்படுகிற மற்ற கடவுள்களைப் போலான இடம் வழங்கப்படவில்லை. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்து சமயம் என்று அழைக்கப்பெறும் பிராமணிய சமயத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன், முருகன் என மேல்நிலையில் உள்ள தெய்வங்கள் ஒருபுறமும், பரிவார தெய்வங்கள் என்ற பெயரில் அனுமன், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன. இவை இரண்டிலும் இடம்பெறாமலும், பிராமணிய சமயத்திற்கு வெளியிலுள்ள நாட்டார் தெய்வங்கள் வரிசையில் இடம்பெறாமலும், தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள தெய்வம் பிள்ளையார் ஆகும் என்கிறார்.

வைதீகச் சமயப் பெருங்கோயில்களில் மட்டுமின்றி, இவருக்கெனத் தனியாகவும் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருக்கள், கூரையின்றி வெட்டவெளியிலும்கூட பிள்ளையார் இடம் பெற்றிருக்கிறார். இத்தகைய வழிபாட்டு மரபில் உள்ள பிள்ளையார் எனும் விநாயகரின் உருவம் மனிதன், விலங்கு, தேவர், பூதம் என்கிற நான்கின் இணைப்பாகக் காட்சி தருவதாகக் குறிக்கப்படுகிறது.

யானைத் தலையும் காதுகளும் தும்பிக்கையும் விலங்கு வடிவமாகவும், பேழை போன்ற வயிறும் குறுகிய கால்களும் பூதவடிவமாகவும், புருவமும் கண்களும் மனித வடிவமாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் தேவ வடிவமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய இவரது உருவம் மனித விலங்கு உருவ இணைப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் பிள்ளையாருக்கு வடமொழிச் சுலோகங்கள் கூறி ஆகம முறையிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்படுவதால், அதன் அடிப்படையில் இவர் உயர்நிலைத் தெய்வமாகவே காட்சியளிக்கிறார். எனினும்,  வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம் பெறவில்லை என்று அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்திற்கு முந்திய சிற்பங்களில் பிள்ளையார் வடிவம் இல்லை என்று கூறும் ஆனந்தகுமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகிறார் .

பிள்ளையாரின் தோற்றம் குறித்துப் பல்வேறு கதைகள் வழக்கில் உள்ளன. பிள்ளையாரின் தோற்றம் குறித்த புராணக் கதைகளில் அவர் ஏதாவது ஒரு வகையில் யானையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். யானை முகமும் மனித உடலும் இணைந்த பிரமாண்டமான உருவத்தை உடைய பிள்ளையார், எலி ஒன்றின் மீது வீற்றிருக்கிறார். இந்நிலையில், யானையுடன் பிள்ளையார் தொடர்புபடுத்துவதற்கான காரணத்தையும், எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் தமது நூலில் விளக்கப்படுத்தி இருக்கிறார். அது வருமாறு:

பிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள கணபதி என்ற அவரது பெயர் உணர்த்தும் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கணபதி என்ற சொல்லின் பொருள் கணங்களின் கடவுள் என்பதாகும். கணா + பதி என்ற சொல்லைப் பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்வர். கணபதியின் மற்றொரு பெயரான கணேசன் என்ற சொல்லைக் கணா + ஈசர் என்று பிரித்து கணங்களின் கடவுள் என்று பொருள் கொள்வர்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மந்திரர், கணநாயகா என்று பிள்ளையாரைக் குறிப்பிடுகிறார். கணத்தின் தலைவன் என்பது இச்சொல்லின் பொருள். ரிக் வேதத்தில் இடம்பெறும் கணபதி என்ற சொல், ஒரு குழு அல்லது படை அல்லது சபையின் தலைவனைக் குறிப்பதாக மோனியர் வில்லியம்ஸ் கருதுகிறார். கணபதி என்ற சொல்லுக்குக் கணங்களைப் பாதுகாப்பவர் என்று அந்நூலின் உரையாசிரியரான மஹிதார்  குறிப்பிடுகிறார்.

சில மக்கள் குழுவினர், குறிப்பாகப் பழங்குடிகள் தங்களை விலங்கு, தாவரம் போன்ற இயற்கைப் பொருட்களிடமிருந்தோ, புராண மூதாதையர்களிடம் இருந்தோ தோன்றியதாகக் கருதினர். இவ்வாறு தாம் கருதும் தாவரம் அல்லது விலங்கைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இவ்வாறு விலங்குகள் தாவரங்கள் இயற்கை பொருட்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட குலம் தோன்றியதாக நம்பியதன் அடிப்படையில் அதன் தோற்றத்திற்குக் காரணமான பொருள் ஒரு குலத்தின் குலக் குறியாக அமைகிறது. இவ்வாறு குலக்குறியானது குலத்தின் சமூக பண்பாட்டு வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இனி, யானை எலி ஆகியன குலக்குறியாக விளங்கியதைக் காண்போம். மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாகும். மாதங்கி என்ற சொல் யானையைக் குறிப்பதாகும். குலக் குறியான யானையின் பெயராலேயே இக்குழு மதங்கர்கள் என்று பெயர் பெற்றது. வேத காலம் முடிவதற்கு முன்னரே இக்குழுவினர் ஒரு சாதியாக உருப்பெற்று மௌரியப் பேரரசுக்கு முன்னதாகவே அரசு அதிகாரத்தை நிலை நிறுத்தி இருந்தனர்.

லலிதா விஸ்தாரகா என்ற புத்த மத நூல், பசனாதி என்ற கோசல மன்னனை யானையின் விந்தில் இருந்து தோன்றியவனாகக் குறிப்பிடுகிறது.  இக்கருத்து குலம், குலக்குறியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி வாழ்வின் எச்சமாகவே இதைக் கொள்ளவேண்டும்.

இதுபோன்று மூசிகர் என்ற பிரிவு தென்னிந்தியாவில் இருந்துள்ளது. இவர்களை வனவாசிகள் உடன் இணைத்து மகாபாரதம் குறிப்பிடுகிறது. மூஷிகம் என்ற வடமொழிச் சொல் எலியைக் குறிப்பிடுகிறது. இந்தியப் பழங்குடிகள் பலருக்கு எலி குலக்குறியாக உள்ளது. ஒரு குலக் குழுவினர் மற்றொரு குழுவினருடன் போரிட்டு வென்றால், தோல்வியடைந்த குலத்தின் குலக்குறி அழிக்கப்படும் அல்லது வெற்றி பெற்றதுடன் இணைக்கப்படும். ஆளும் குலமானது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும்போது, பிற குலங்களின் குலக்குறிக் கடவுளர்களை இணைத்துக்கொண்டு தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் என்று தாம்சன் குறிப்பிடுவார். இக்கருத்தின் பின்புலத்தில் பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலம் ஒன்று, எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றபோது, அவ்வெற்றியின் அடையாளமாக அக் குலக்குறியைத் தன் குலக் கடவுளின் வாகனமாக மாற்றியுள்ளது. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி ஒன்று, விரிவடைந்து அரசு என்ற அமைப்பை உருவாக்கியபோது அதன் குலக்குறியான  யானை கடவுளாக மாற்றமடைந்தது.  ஆயினும், பிராமணிய சமயம் இக்கடவுளை உடனடியாகத் தன்னுள் இணைத்துக் கொள்ளவில்லை. தமது தெய்வங்களுக்கு வெளியிலேயே அதை நிறுத்தி வைத்தது. நான்காவது வருணமான சூத்திரர்களின் கடவுளாகவே அவர் மதிக்கப்பட்டார்.

பல்வேறு பழங்குடி அமைப்புகளை அழித்துப் பேரரசு உருவாகும்போது, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகத் தன் சமய வட்டத்திற்குள் பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்துக் கொள்ளும். அந்தவகையில், குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமயமாக விளங்கிய பிராமணிய சமயம், சூத்திரர்களின் கடவுளான பிள்ளையாரைத் தன்னுள் இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக விக்னங்களை உருவாக்கும் விநாயகர் விக்னங்களைப் போக்குபவராக மாறினார். பழங்குடிகளின் குலக்குறி என்ற தொடக்ககால அடையாளம் மறைந்து பிராமணிய சமயக் கடவுளர் வரிசையில் இடம் பெற்றார் எனப் பிள்ளையாரின் தோற்றப் பின்புலத்தைக் குறித்து விளக்கியுள்ளார் ஆ.சிவசுப்பிரமணியன்.

மேற்குறித்த தரவுகளின் அடிப்படியில் நோக்கும்போது, கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் வேறு வேறு குலக்குறி வழிபாட்டு அடையாளங்களாக இருந்தவை ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் எனும் வழிபடு கடவுளாகத் தோற்றம் கொண்டிருக்கிறது எனக் கருதமுடிகிறது. அதாவது, அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்த பகுதியை கி.பி 320 முதல் 551 வரை  ஆட்சி செய்தது குப்தப் பேரரசுதான்.  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக அது இருந்திருக்கிறது.

குப்தர்கள் காலத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய உருவாக்கம் ஒரு நிறுவனத் தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, ஆரிய / வைதீகச் சமயத் தொன்மங்கள் உருவானது இக்காலகட்டத்தில்தான். மேலும், சமக்கிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்ததும் அதே காலகட்டம்தான்.

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் சமக்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. அவ்வகையில், அதே காலகட்டத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் வழிபாடானது இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதியில் தோற்றம் கொண்டு நிலவி வந்திருக்கிறது எனக் கருதலாம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் வழிபடு கடவுளராக இருந்த பிள்ளையாரோடு தொடர்புடைய மற்றொன்று சமக்கிருத மொழியாகும். ரிக், யசூர், சாமம், அதர்வனம் என்கிற நான்கு வேதங்களும் எழுதாக் கிளவியாக இருக்க, வியாசரின் மகாபாரதமே எழுதப்பட்ட கிளவியாக - அய்ந்தாவது வேதமாக எழுத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், வியாசரின் மகாபாரதம் சமக்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதே மகாபாரதம் என்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,  பிள்ளையார் வழிபடு கடவுளாகத் தோற்றம் பெற்றதே கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் எனும்போது, எழுதாக் கிளவியாக இருந்த சமக்கிருத மொழியில் பிள்ளையார் முதன் முதலாக  எழுதியதான காலமும் கி.பி.3ஆம் நூற்றாண்டு வாக்கில்தான்  இருந்திருக்க வேண்டும். ஆக, பிள்ளையாரும் சமக்கிருத மொழியும் இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியைச் சார்ந்த ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டின் அடையாளங்கள் என்றே உறுதியாகக் கருத முடியும்.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005

சுளுந்தீ : அனைவரின் உள்ளத்திலும் ஏற்ற வேண்டிய அறிவுத்தீ! :- மூ.செல்வம்


மதுரை நாயக்கர் ஆட்சியின் தலைமையிடமாக இருந்த, கன்னிவாடி ஜமினின் வளமையையும் வறுமையையும் மிக அழகாக சித்தரிக்கும் வரலாற்றுப் பெட்டகம்.
    முப்பது பகுதிகளையும், 471 பக்கங்களையும் கொண்டுள்ள இந்நூலில், முக்கியமில்லா பக்கங்கள் எதுவுமில்லை, அரிய தகவல்களும் சுவாரசியங்களும் பக்கத்திற்குப் பக்கம் கொட்டிக்கிடக்கிறது.
     இரண்டு மூன்று முறை தெளிவாக வாசித்துவிட்டால், வாசித்தவர் சித்த மருத்துவராக மாறிவிடும் அளவிற்கு மருத்துவச் செய்திகள் குவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று நாவல் மட்டுமல்ல சித்த மருத்துவ பெட்டகம் கூட. இவ்வளவு செய்திகளையும் எவ்வாறு இவரால் திரட்ட முடிந்ததுவென வியந்து, ஆசிரியர் இரா.முத்துநாகு அவர்களை ஆராயும் போது, அவருடைய தாத்தா கண்டமனூர் ஜமினில் அரண்மனை பண்டுவராக இருந்த செய்தி இடம்பெற்றிருந்தது, பரம்பரை பரம்பரையாக மருத்துவக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரால் தான் இவ்வளவு நுணுக்கமான செய்திகளை கொடுக்க முடியும் என உணர்ந்தேன்.
     கன்னிவாடி ஜமினில் நாவிதர் குடியில் பிறந்த, செங்குளத்து மாடனின் வீரத்தைப் பேசுகிறது நூல். அம்பட்டயர், முடிவெட்டுபவர், சவரம் செய்பவர் என அழைக்கப்படுபவர்களே நாவிதர்கள். பிறப்பு முதல் இறப்பு வரை மனித சமூகத்திற்கு நாவிதர்களின் பங்கு வியக்கத்தக்கது என்பதனை, அழகாக விரிவாக விளக்குகிறது. நூலை படித்து முடித்த பின்பு நாவிதத் தொழில் செய்பவர்களை உயர்வாகவே எண்ணத் தோன்றுகிறது.  நவிதர்களும் பண்டுவர்களும் போற்றி பாதுகாக்க வேண்டிய கலைக்களஞ்சியம் இந்நூல்.
     புதைக்கப்பட்ட சொலவடைகள் (பழமொழிகள்) பலவற்றை புதைகுழியிலிருந்து மீட்டெடுத்து புலக்கத்தில் விட்டிருப்பது பாராட்டுக்குரியது.
    வருசநாட்டுப் பகுதியில் என் அப்பனும் அம்மையும் தேடி வைத்த காட்டில் கொட்டமுந்திரி பறித்த போதும், இலவம் நெற்றை உடைத்த போதும், நாவலில் வரும் பன்றிமலை சித்தரும், பண்டுவ  இராமனும், வல்லத்தாரையும், மாடனும், கொன்றி மாயனும், வங்காரனும் மாறிமாறி என் நினைவுக்குள் வந்து, கேள்விகள் பலவற்றை எழுப்பி, என்  வேலையைக் கெடுத்த போது, என் மனம் சொன்னது நீ படித்தது சிறந்த நூல் என்று.
     நூலின் எழுத்து நடை சிறுவயதில் கேட்ட முன்னோர்களின் பேச்சுக்களை நினைவுபடுத்தியது.
     சுளுந்தீ அனைவரின் உள்ளத்திலும் ஏற்ற வேண்டிய அறிவுத்தீ!
     கற்றது கடலளவு சொன்னது கையளவு!

மூ. செல்வம்,
முதுகலை ஆசிரியர்,
வாலிப்பாறை.

வெள்ளி, 3 மே, 2019

வ.உ.சி : சாதி கடந்தவர்; சுயசாதி எதிர்ப்பைச் சுமந்தவர் :- இரெங்கையா முருகன்.


1900 கால கட்டத்தில்  ஒரு ஏழை விவசாயியைக்  காரணம் ஏதுமின்றி சம்பந்தமில்லாமல் பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாக்கினர்.  இது சம்பந்தமாக நீதிமன்ற  வாய்தா என்ற பேரில் மன உளைச்சலுக்கு உட்படுத்தி பல தடவை அலைக்கழிக்க வைத்தனர். கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக ஓட்டாபிடாரத்தில் அருகே அமைந்துள்ள கிராமத்திலிருந்து தூத்தூக்குடிக்கு கால் நடையாகவோ, வண்டி மாடு கட்டியோத்தான் செல்ல வேண்டும்.

பல காலமாக நீதிமன்றத்துக்கு அலைவதுடன் தாங்க முடியாத மன உளைச்சலுக்கும் ஆட்பட்டிருந்த அந்த தலித் விவசாயி ஒரு நாள்  கோயில் அருகே மயக்க மடைந்து சரிந்து விழுந்துள்ளார். மிகவும் விசனமடைந்து துக்கித்த நிலையில் காணப்பட்டார்.

அச் சமயம் தற்செயலாக  மயக்கமடைந்து சரிந்து வீழ்ந்த அன்பரை எதிர் நோக்கி உதவ முன் வருகிறார். மயக்கத்திலிருந்து தெளிந்த அந்த விவசாயி தனது மனக் குமுறலை ஆற்றாது உதவ வந்தவரிடம் ஒரு தகவலாக தனக்கு நேர்ந்த பிரச்னைகளை விலாவாரியாக தெரியப் படுத்துகிறார்.

வந்தவரோ பேர் போன பரம்பரை வக்கீல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த எளியோன் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் விவசாயி. அக் காலத்தில் இந்த எளியவர்களை ச்சீ என உதாசீனப்படுத்தும் மன நிலையில் இருந்த சூழலில் வந்து உதவுபவரோ வழக்கத்திற்கு மாறான வித்தியாசப் பண்புடையவர்.

அந்த விவசாயிக்கு  உதவ வந்தவர், நொந்து போன அவரது மனதிற்கு நல்ல வார்த்தைகள் கூறி ஆசுவாசப்படுத்தி விட்டு அவரது மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட கோர்ட் வழக்கு விவரங்களை கேட்டு குறிப்பு எடுத்து கொள்கிறார். மேலும் இனி மேல் தாங்கள் நீதிமன்ற படி ஏற வேண்டியது வராது. நல்ல செய்தி வீடு தேடி வரும். கவலைப் படாமல் வீடு போய் சேருங்கள்  என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.

 மயக்கமடைந்த ஏழை விவசாயிக்கு எல்லாம் கனவா இல்லை நனவா என்ற குழப்பத்துடன் அவரும் தனது வீட்டை நோக்கி நடையை கட்டிவிட்டார். மயக்கம் அடைந்து விழுந்த கோவில் அந்தப் பகுதிகளில் பிரசித்திப் பெற்ற உலகம்மன் கோவில்.

மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஏழை விவசாயிக்கு  கோர்ட் விவகாரத்தில் நன்றாக வாதாடியதன் விளைவாக  நீதி வென்றது.அந்த செய்தி  தலித் ஏழை விவசாயி வீட்டிற்கு  வந்து சேர்ந்தது. அவரால் நம்ப முடிய வில்லை. வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் திக்கு முக்காடி விட்டார்.

அந்த சமயத்தில் அந்த விவசாயி தனது  குடும்பப் பரம்பரை வாரிசுகளிடம் பின் வருமாறு கூறுகிறார். அந்த உலகம்மன் தெய்வம்தான் கடவுள் மாதிரி வந்து எனக்கு உதவுவதற்காகவே அவரை அனுப்பி வைத்துள்ளார். அவர் மூலம் வெற்றியும் கிடைத்துள்ளது. ஆகையால் இனி நமது கடைசி வம்சாவளி வரை ஆண்குழந்தை பிறந்தால் உலக நாதன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் உலகம்மை என்றும் பெயர் வையுங்கள் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாராம்.

இந்த ஏழை விவசாயிக்கு உதவ முன் வந்தவர் பேறு போன வக்கீல் குடும்பத்தைச் சார்ந்த உலகநாத பிள்ளையின் தவச் செல்வர் கப்பலோட்டிய தமிழன், தியாகத்தின் இலக்கணம் வ.உ.சிதம்பரனார். இச் செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டவர் திரு. லேனா குமார் அவர்கள்.

அவருக்கு இச் செய்தியை பகிர்ந்தவர் பாதிக்கப்பட்ட அந்த விவசாயி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் நாவலாசிரியர் சோ. தர்மன் அவர்கள்.

இந்த செவி வழிச் செய்திக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று தேட ஆரம்பிக்கும் போது வ.உ.சி. தனது சுயசரிதையில் ஒரு இடத்தில் கீழ் வருமாறு குறிப்பிடும் நான்கு வரி இடம் பெறுகிறது. இதை ஒரு அனுமானமாக எடுத்துக் கொள்ளலாம்.

“முடிமனில் என்னுடை முன்னோர் நாள் முதல்
அடிமை புரியும் அறிவினைக் கொண்ட
வேத நாயகம் எனும் மேம்படு  பள்ளனை
ஏத மில்லாமலே எண்ணிலா வழக்கில்
அமிழ்த்தினர் போலிஸார்;அனைத்தினும் திருப்பினேன்”.

இந்த வரிகளை கொண்டு மேற்கண்ட சம்பவம் ஒருவாறாக இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வலியவர்கள் எளியோரை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு வ.உ.சி.யின்  வாழ்வில் பல செய்திகள் கொட்டிக் கிடைக்கிறது. உதாரணமாக சில செய்திகளை காணலாம்.

சாதிச் செருக்கு மிகுந்த அக்காலத்தில் இரண்டு கண்களை இழந்த ராமையா தேசிகன் என்ற தேவேந்திர குல வகுப்பைச் சார்ந்தவரை தனது வீட்டில் வைத்து பாதுகாத்து உணவிட்டு வந்தவர். ஆனால் அதே வேளையில் தனது தெருவாசிகளுக்கும்  தன் சாதி சார்ந்த சமூகத்தாருக்கும்  தெரியாமல் பாதுகாத்து வருகிறார். பிறகு நாள் செல்லச் செல்ல இச் செய்தி தெரிய வந்து அவரது சமூகத்தாரிடமிருந்தே எதிர்ப்பு வருகிறது. வ.உ.சியை சாதி நீக்கம் செய்யும் அளவுக்கு போய்விடுகின்றனர்.

வ.உ.சி.யின் சுயசரிதை வரிகளில் காணலாம்

”சிவப் பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென்
தவப் பயனால் இலம் தங்கப் பெற்றேன்.
ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால்
தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்
குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென்
தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்
கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை
ஓட்டிடக் கருதி யான் உரமில்லாமையால்
‘அவளிடத்’ துரைத்திட அடுக்களை சென்றேன்.
‘’எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!
எல்லாம் கடவுளா யிருக்க வேண்டும்
உருவம் முதலிய ஒன்றினும் பேதம்
மருவுதலிலாமை மலை போல் கண்டும்,
கற்பனை யாகக் காணும் குலத்தின்
சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய!
துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண்
இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம்
ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின்
பிழையெனார் உலக பேதமை உணர்ந்தோர்.

அச் சமயம் வ.உ.சி.யின்  மனைவி பார்வை இழந்த இவருக்கு இது வரை தட்டில்தான் சாப்பாடு  அருகில் வைத்து வந்தேன். இனி மேல் நானே  கண்களை இழந்த அவருக்கு சாப்பாட்டை அவரது வாயில்  ஊட்டி விடுகிறேன் என்பதோடு மட்டுமல்லாமல் ஊட்டியும் விட்டவர். இது குறித்து வ.உ.சி.யிடம் முறையிட பயந்தார்கள் அவரைச் சார்ந்த சமூகத்தார்கள்.  காரணம் அவரது முரட்டுத்தனம். முரட்டு வக்கீல் பிள்ளை என்றே அழைப்பார்கள்

வள்ளுவ வகுப்பினரைச் சார்ந்த சுவாமி சகஜானந்தரை தனது வீட்டில் ஒரு அங்கத்தினராகவே போற்றி பாதுகாத்தவர். வ.உ.சி.தன்னுடைய அலுவல் பணிகளுக்கிடையே சகஜானந்தரையும் உடன் அழைத்துச் செல்வார். அச் சமயம் வ.உ.சியுடன் பணியாற்றுபவர்கள் வ.உ.சி.க்கு பயந்து அவர்  இல்லாத நேரத்தில் சகஜானந்தரிடம் சாதி குறித்து விசாரிப்பார்கள். வ.உ.சி.யின் அறிவுறுத்தலின் படி நானோ துறவி. துறவிக்கு ஏது சாதி என்று கூறி விடுவார்.

ஏழைகளுக்கும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கும் தனது சொந்த செலவில் வாதாடிய தென்னகத்தின் ஒரே வக்கீல் அக் காலத்தில் வ.உ.சி. ஒருவரே. இன்றைய மேம்பட்ட அரசியல்வாதிகள் 1927 ம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில்  வ.உ.சி. உரையாற்றிய அரசியல் பெருஞ்சொல் சொற்பொழிவை பால பாடமாக படியுங்கள். ஏரி, குளம், பொது தண்ணீரை எல்லா சமூக மக்களும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், சமூக மக்களிடையே பிணக்கு ஏற்படும் போது பிரச்னை இல்லாமல் எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும் ,கல்வி, மருத்துவம் இலவசமாக வழங்கிட வழி செய்தல், சுயாட்சி குறித்து மிகு விவர தகவல், தமிழ் சித்த மருத்துவத்தின் மேன்மை, தமிழர் பண்பாட்டுச் சிறப்பு, தமிழ் மொழியை வளர்ப்பதற்கென  பல்கலை கழகங்கள் முக்கியத்துவம் போன்ற பல்வேறு விசயங்களை அலசி ஆராய்ந்த சொற்பொழிவு .

இன்றைய சாதி + அரசியல் வாரிசு தலைவர்கள் வோட்டு வங்கி தேர்தல் அரசியல் சுய லாபத்திற்காக வலியவர்களாகிய இவர்கள் எளியவர்களை எவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள். சமூகத்தை எவ்வளவு பிளவுபடுத்த கங்கணம் கட்டி வேலை செய்கிறார்கள். பல தலைவர்கள் மேடையில் வீராவேசம் பேசுவார்கள். தனது சொந்த வாழ்க்கையில் சம்பந்தமில்லாத வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கிறார்கள். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க நாமும் வ.உ.சியை போன்ற உண்மையான தியாக வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க தவறியதன் பலன்தான்  சினிமாகாரர்களையும், சுயநல மிக்க கேடுகெட்ட அரசியல் வாரிசுகளுக்குத்தான் நாம் குடை பிடித்து வரவேற்க காத்திருக்கிறோம்.

மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன
    மகிழ்வொடு தாங்கிய ரேனும்

இன்னலுற் றயர்ந்தோம் எனக்கலுழ்ந் திடில் தன்
    இரு விழி நீரினை உகுப்பான்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

தமிழைத் தாழ்த்தும் நாகசாமிகள் விவாதத்திற்கு வரத் தயாரா? :- மொழியியல் அறிஞர் மா.சோ.விக்டர்.



“இவர்கள், குறிப்பாக அந்தணர்கள், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என ஒத்துக் கொள்ளமாட்டார்கள், சிறிதும் தயங்காமல், ஆடம்பர ஒலி கொண்ட சொற்களை அளந்து பார்த்து, தங்கள் மனதில் தோன்றும் முதல் சொற்களை, அவை உண்மைக்குப் புறம்பாக இருப்பினும், முழு அதிகார அரியணைக் கூற்றாகக் கொடுப்பதற்கு அஞ்சமாட்டார்கள். இக்கூற்றுகள், எத்துணை பொய்யானவை என்பது, அவர்களுடைய ஆசிரியர்கள் நூல்களை, இங்கு மங்கும் படிக்கும் போது தெளிவாகத் தெரியும்.” - வீரமா முனிவர்.1

300 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த பிராமணர்கள் பற்றி, வீரமாமுனிவர் எழுதி வைத்த குறிப்பு இது!

“தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தில் எனது பணிகள் என்பது, கடந்த 60 ஆண்டுகளாக உலகம் அறிந்தது. எனவே, என்னை தமிழ் மொழிக்கு எதிரானவன் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியது, ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல”.

“எனது கருத்தே அல்ல: திருக்குறள் வேதங்களிலிருந்து வந்தது” என்று நான் தெரிவித்ததாக, ஸ்டாலின் கூறியுள்ளார். இது எனது தனித்த பார்வையல்ல. எனக்கு முன்பாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய அறிஞர்களின் கருத்தாகும். தமிழைக் கற்றுணர்ந்த மிகப் பெரிய அறிஞர்களான பாதிரியார் பெஸ்கி, எல்லிஸ், ஜி.யு. போப், உ.வே. சாமிநாதய்யர் ஆகியோரின் கருத்துகளையே எதிரொலித்தேன். போப் தனது புத்தக்கத்தில், பகவத் கீதையை, திருக்குறள் பின்பற்றுகிறது எனத் தெரிவித்து இருக்கிறார். எனவே, திருக்குறள் தொடர்பாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழ் அறிஞர்களின் விளக்கத்தைக் கோரியிருக்க வேண்டும். 300 ஆண்டுகள் பழமையான தமிழ் வரலாற்று ஆய்வுகளைப் பற்றி, மு.க. ஸ்டாலின் அறிந்திருப்பார் என நான் கருதவில்லை. உலகத் தமிழ் அறிஞர்கள் மத்தியில், அவர் தமிழ் மொழி குறித்து தனது அறியாமையை வெளிபடுத்திவிட்டார்.”

- தினமணி, 08.03.2019.

மேற்கண்ட மறுப்பு அறிக்கை, தமிழ்நாடு தொல்லியல் துறை மேனாள் இயக்குநர் திரு. நாகசாமி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

திரு. மு.க. ஸ்டாலினுக்கு தமிழைப் பற்றி எதுவும் தெரியாது என்ற மிகப்பெரிய உண்மையை, திரு. நாகசாமி கண்டுபிடித்துவிட்டார் எனலாம். திருக்குறள், பகவத் கீதையின் வழி நூல் என்பதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த அறிஞர்கள் கூறியிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட அறிஞர்களில் பெஸ்கி என்ற வீரமாமுனிவர் மட்டும் 300 ஆண்டுகளுக்கு முன்பு அறியப்பட்டவர். மற்றவர் அனைவரும், கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்திருந்தவர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் கூறிய செய்திகளை, திரு. நாகசாமி தெரிவிக்கவில்லை. அவ்வாறு எவரும் கூறவில்லை என்பதுதான் உண்மை நிலை.

பாதிரியர் பெஸ்கி, அந்தணர்களைப் பற்றிக் கொண்டிருந்த மதிப்பீடு, திரு. நாகசாமி அவர்களுக்கு பொருந்தும். பெஸ்கி என்கிற வீரமாமுனிவர், தம் வாழ்நாளில் படைத்துள்ள 36 நூல்களில், திருக்குறள், பகவத்கீதையின் வழிநூல் என்று எங்குமே குறிப்பிடவில்லை. முழுப் பொய்யைக் கூறி, திரு. நாகசாமி, இல்லாத சான்றுகளை, இருப்பதாகக் கூறுகிறார்.

எல்லிஸ், ஜி.யு.போப் ஆகிய இரு ஐரோப்பியர்களும் தமிழின்பால் பற்று கொண்டவர்கள். கால்டுவெல்லைப் போல், சமற்கிருதத்தால் தமிழ் வளம் பெற்றது, சமற்கிருதத்தின் உதவியின்றி, தமிழால் தனித்தியங்க முடியாது என்று அவர்கள் சொன்னதாகப் பதிவுகள் இல்லை. எல்லிஸ், திராவிடம் என்ற சொல்லையே பயன்படுத்தாதவர்.

திரு. உ.வே. சாமிநாதய்யரைப் பற்றி முரண்பாடான செய்திகள் உள்ளன. ‘தமிழ்த்தாத்தா’ என்று அனைவராலும் போற்றப்படும் திரு. உ.வே.சா வின் மறு பக்கம் பற்றிப் பலரும் அறியாதிருக்கின்றனர். புறனானூற்றுப் பாடல் ஒன்றில், மூலத்தையே அவர் திருத்தியிருப்பது, அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது 2.

‘என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்று நூலில், பெருமாள் கோயில் இருப்பதால், அரியலூர் என்ற பெயர் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1830களில், ஆங்கிலேயர் வெளியிட்டுள்ள கெசட்டில், அரி என்ற சொல்லுக்குப் பனைமரம் என்றும், பனை மரங்கள் மிகுந்திருந்ததால், அவ்வூர், அரியலூர் என்று சொல்லப்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாவை வணங்கி வந்த நடைமுறை, சங்க காலத்திலேய இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். “படைத்தோன் மன்ற அப்பண்பிலான்” என்ற புறநானூற்று வரியில் உள்ள, படைத்தோன் என்ற சொல்லுக்கு, பிரம்மன் என்று உரையெழுதியுள்ளார். இவ்வுலகில் படைத்ததாகக் கூறப்படும் இறைவன் பண்பில்லாதவன் என்று, பக்குடுக்கையார் சாடுகிறார். பண்பில்லாத கடவுளாக, பிரம்மனை திரு. உ.வே.சா கூறுகிறாரா என்று தெரியவில்லை.

‘பிள்ளையார் வணக்கம்’ சங்க காலத்திலேயே இருந்தது என்று மற்றொரு உண்மைக்கு மாறான தகவலை, திரு. உ.வே.சா முன் வைக்கிறார். உ என்ற எழுத்து பிள்ளையாரைக் குறிப்பதாகவும் கூறுகிறார் 5. தமிழரின் உலகளாவிய மாந்த நேயத்தைக் கொச்சைப்படுத்தும் விளக்கம் இது!

தமிழ் இலக்கியங்கள், உலகம் என்ற சொல்லை முதன்மைப்படுத்தியே, தொடங்குகின்றன. சங்க இலக்கியங்கள் முதல் இடைக்கால இலக்கியங்கள் வரை இந்நடை பொருந்தும்6. பிற்காலத்தில், உலகம் என்ற சொல்லைச் சுருக்கி, உ என்ற எழுத்தை மட்டும், தமிழர்கள் பயன்படுத்தி வந்தனர். பிள்ளையார் வணக்க முறை, பல்லவர் காலத்திலிருந்து தொடங்குவதாக வரலாறு கூறுகிறது.

முரண்பாடான செய்திகளைத் தரும் திரு. உ.வே.சாவை, திரு நாகசாமி, தன் கருத்துக்கு வலிமை சேர்க்க முயல்கிறார். எதைச் சொன்னாலும் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற காலம் ஒன்று இருந்தது. இன்று, ஆய்வுகள் மலர்ந்து, உண்மைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. திரு. நாகசாமி, பழைய சிந்தனை களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழ் மரபில் தோன்றிய தமிழனால் தான், தமிழ் மொழியின் தொன்மையையும், நுட்பத்தையும் ஆழத்தையும் ஆய்வு செய்ய இயலும். அயன்மொழிக்காரர்களும், வெளி நாட்டவரும் தமிழர் வரலாற்றையும் தமிழையும் ஆய்வு செய்வது, நுனிப்புல் மேய்வதையொக்கும்” என்று தேவநேயப் பாவணர் உறுதிபடக் கூறுகிறார். வீட்டில் ஒரு மொழியும், நாட்டில் ஒருமொழியும், ஏட்டில் ஒரு மொழியும் கொண்டுள்ள திரு. நாகசாமி, தமிழ்மொழியையும், தமிழர் வரலாற்றையும் ஆய்வு செய்யத் தகுதியற்றவர். அவர் துணைக்கு அழைத்திருப்பவர்களும் அவ்வாறே என்க.

ஒரு தொல்லியலாளருக்கு, பன்முகத் திறமைகள் வேண்டும். சுவர்களில் உள்ளவற்றை தூசி தட்டி, படித்துப் பார்ப்பது மட்டும் தொல்லியலாளரின் பணியன்று. தமிழரின் பல்லாண்டுக்கால வரலாற்றை, கி.மு. 500 ஆண்டுகளில் சுருக்கி, அதனை அரசாங்க ஒப்புதலோடு பதிவு செய்தவர், திரு. நாகசாமி அவர்கள். இடைக்காலக் கல்வெட்டுகளையே, தமிழ்நாடு தொல்லியல் துறை முதன்மைப் பணியாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளது.

பனிக்காலம், பனி உருகல் காலம், கண்டப் பெயர்ச்சி, நிலத்தடித் தட்டுகளின் பெயர்ச்சி, ஆழிப்பேரலைகளுக்கான தோற்றக் காரணங்கள் பற்றிய செய்திகள் எவையும் தமிழ்நாட்டுத் தொல்லியலாளர்கள் அறிந்திருக்கவில்லை. சங்க இலக்கியங்களிலும், தமிழ் மொழியின் மூலம், வேர் போன்ற நுட்பமான துறை களிலும் நாகசாமிக்குப் பயிற்சி இல்லை.

ஆதிச்சநல்லூரின் பொருநையாற்று நாகரிகம், மதுரை, கீழடியின் வையையாற்று நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், யூப்ரடீஸ் - தைகிரீஸ் சமவெளி நாகரிகம், நைல் ஆற்று நாகரிகங்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, பழந்தமிழர் நாகரிகமே என்பதை திரு. நாகசாமி அறிந்திருக்கமாட்டார். சுமேரிய, பாபிலோனிய, எபிறேய மொழி இலக்கியங்களில், ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், திரிந்தும் திரியாமலும் இருப்பதையும் திரு. நாகசாமி அறிந்திருக்கவில்லை.

இவ்விலக்கியங்களில், பழந்தமிழர் வரலாறு பொதிந்து கிடப்பதை, தொல்லியலாளர்கள் அறிய முயற்சிப்பது மில்லை. கிணற்றுத் தவளைகள் போல், கடந்த 100 ஆண்டுகளாக, சொன்னவற்றையே, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் தொல்லியல் துறையை, பின்னோக்கித் தள்ளிச் சென்ற பெருமைகளுக்கு உரியவர் திரு. நாகசாமி.

அவருக்குத் தெரிந்தவை, சமற்கிருதம், வேதங்கள், பகவத் கீதை, இதிகாசங்கள், புராணங்கள் போன்றவையே. சமற்கிருதத்திலிருந்தே தமிழ் மொழி தோன்றியது என்று, தமிழ்நாட்டு அறிஞர்கள் எவரும் இதுவரை சொல்லவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழைப் படித்து, தமிழர்களால் வாழ்வு பெற்ற தமிழரல்லாதவர்கள் தாம் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

மொழி, வரலாறு பற்றி ஆய்வு செய்த திரு. நாகசாமி, சமற்கிருத மொழியின் தோற்றக்காலம் பற்றி, விளக்க முன்வருவதில்லை. தமிழின் தொன்மையையும் அவர் அறிந்திருக்கவில்லை. அரைவேக்காட்டு அறிவுடன், திரு. நாகசாமி கூறும் செய்திகளை, தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டியதில்லை. திரு. நாகசாமியை விட, திறமை மிக்க, அறிவு சார்ந்த வரலாற்று மொழியில் துறை சார்ந்த ஆய்வாளர்கள், தமிழகத்தில் உள்ளனர் என்பதை, திரு. நாகசாமி மறந்துவிட வேண்டாம்.

தமிழ்ச் சொற்களால் கி.மு.2000 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு கமுக்க மொழி. மன்னர்களுக்கும், பிற்காலத்தில் வணிகர்களுக்கும் பயன்பட்டிருந்தது. இக்கமுக்க மொழி பற்றிய செய்திகள் மேலை நாகரிகங்களிலும் காணப் படுகின்றன 7.

சிந்து வெளி நாகரிக மறைவுக்குப் பின் தோன்றிய வட்டார அரசுகள், தங்கள் ஆவணங்களை, கமுக்க மொழியில் பதிவு செய்து வைத்திருந்தன. அடுத்தடுத்து இந்தியாவுக்குள் நுழைந்த ஊணர்கள், பாரசீகர்கள், மங்கோலியர்களின் மொழிகள், இக்கமுக்க மொழியில் கலந்தன. தொடக்கத்தில் ஆரியர்களுக்கு இம்மொழி பற்றிய தெளிவு இருந்ததில்லை. பிற்காலத்தில் அக்கமுக்க மொழிகளுடன் கலந்து, பிராகிருதம் என்ற மொழி உருவாயிற்று8.

பிராகிருதம், கிரேக்கர்களின் வருகைக்குப் பின், சமற்கிருதமாக உருப்பெற்றது. சமற்கிருதம் (SAMSKRU) எனத் திரிந்தது. ஆங்கிலத்தில் சான்ஸ்கிரீட் எனப்பட்டது. கிரேக்கர்களின் வருகைக்கு முன் அம்மொழிக்கு, கீர்வாணம் என்ற பெயர் இருந்ததாக, சிவத்தியாநாநந்த சுவாமிகள் தனது, ரிக்வேத சம்ஹிதை என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் 11. அக்கால அளவுகளில், சமற்கிருதத் துக்கான வரிவடிவம் கண்டறியப்படவில்லை.

சமற்கிருத வேதங்கள் மற்ற இலக்கியங்கள் அனைத்தும் வாய் மொழியாகவே, தலைமுறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில். குசராத்தில் ஆட்சி செய்த ருத்திர தாமன் காலத்தில்தான், முழுமை செய்யப்படாத சமற்கிருத எழுத்துக்களைக் கொண்ட கல் வெட்டு, முதன் முதலில் அறியப் படுகின்றது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே, வாய் மொழியாகச் சொல்லப்பட்ட வேதங்கள் உள்ளிட்டவை, எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டன. இந்தச் செய்திகள் பற்றியெல்லாம், திரு நாகசாமி உள்ளிட்ட தொல்லியலாளர்கள் வாய் திறப்பதில்லை.

வேதங்களில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று பலர் கூறுவதுண்டு. வேதங்களே தமிழில்தான் எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு. இந்தியர்களுக்கு, ஆரியர்கள்தாம், அறிவியல், கணக்கியல், வானியல் போன்ற வற்றைக் கற்றுத் தந்தனர். தமிழரும் அவர்களிடமிருந்தே கற்றனர் என்று திரு. நாகசாமி கூறி வருகிறார்.

இதற்கு மாறான செய்தியை, சமற்கிருத அறிஞர், மோனியர் வில்லியம்ஸ் கூறுகிறார் 12. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வானியல், அறிவியல் தொடர்பான செய்திகளுக்கும் ஆரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், அவர்கள் பஞ்சாபில் குடியேறுவதற்கு முன்பே (4000 - 2500), இந்தியப் பழங்குடிகள் அவற்றை அறிந்திருந்தனர் என்றும், அச்செய்திகளையே, 1400 - 1000 ஆண்டுகளில் வேதத்தில் இணைத்துக் கொண்டனர் என்றும், ஆரியர்கள் கூறிவரும் பொய்யைப் போட்டு உடைக்கிறார். மோனியர் வில்லியம்ஸ்

வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த வேதங்கள், கி.பி. 200 ஆண்டுகளுக்குப் பிறகே, எழுத்து வடிவம் பெற்றன என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறுகிறார். ரிக் வேதத்தின் 10 ஆவது அதிகாரமான புருஷ சூக்தம், கி.பி 500 ஆண்டுகளுக்குப் பிறகே, வேதத்தில் இணைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். முதல் பகுதிகளில் காணப்படும் மொழி நடையும், 10ஆவது சூக்த மொழி நடையும் மாறு பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் 13. இவற்றுக் கெல்லாம், தொல்லியலாளர்கள் மறுப்போ, விளக்கமோ கூறுவதில்லை.

முன்னர் சொல்லப்பட்ட செய்திகளுடன், எழுத்து வடிவில் கொடுக்கப்பட்ட காலங்களில், அந்தச் சூழ் நிலைக்கு ஏற்ப புதிய செய்திகளையும் இணைத்துள்ளனர். அவ்வாறுதான், மனுவின் சட்டங்கள், வங்காள ஆளுநரும், நடுவர் மன்றத் தலைவருமான வில்லியம் ஜோன்சிடம், மூலத்தை விட, விரிவாக இணைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டன. கி.பி.1780களில் தான் மனுவின் சட்டங்கள் எழுத்து வடிவம் பெற்றன.

மகாபாரதக் கதை, வாய் மொழியாகவே சொல்லப் பட்டு வந்த நிலையில், கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட, மூலக்கதையோடு பல கிளைக் கதைகள் இணைக்கப்பட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பகவத் கீதையும் அவ்வாறு, கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, இணைக்கப்பட்டது. திருக்குறள், பகவத்கீதையின் தழுவல் என்று கூற, எவ்வகையான சான்றுகளும் இல்லை.

கருத்தியல் முரண்பாடுகளும் மிகுதியாக உள்ளன. “உலகில் சாதிக் கட்டமைப்புகள் தகர்க்கப்படும்போது, மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து வந்து, அக்கட்டமைப்பைத் தகர்த்தவர்களை அழிப்பேன். ஏனெனில், சாதிக் கட்டமைப்பையும் வர்ணாசிரம தர்மத்தையும் உருவாக்கியவன் நான்தான்,” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார் என்று பகவத் கீதை கூறுகிறது. சாதியமைப்பை, பகவத் கீதை நேர்மைப்படுத்துகிறது. திருக்குறள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறுகிறது. அன்பைக் கற்பிக்கும் திருக்குறள், அழிவுகளை நேர்மைப்படுத்தும் பகவத் கீதையின் தழுவல் என்பது, அறியாமையின் உச்சகட்டம்!

பகவத் கீதை, கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப் பட்டது எனக் கூறப்படும் செய்திகளை மறுத்து, அந்நூல் எக்காலத்தில் எழுதப்பட்டது என இதுவரை, திரு. நாகசாமி விளக்கம் தரவில்லை. தமிழரின் போர் முறைக்கு மாறுபட்டு, போர்களில், சூழ்ச்சி, வஞ்சித்தல் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்றும், உறவுகளைக் கொல்வது கூட தவறில்லை என்றும் பகவத் கீதை கூறுவதை அனைவரும் அறிவர்.

திருக்குறள், கி.மு.31 ஆண்டுகளில் எழுதப்பட்டது அல்லது, திருவள்ளுவரின் பிறப்பாண்டு என்று கருதப்பட்டது. உரோமானிய தத்துவ ஞானியும், கவிஞருமான செனகா (Seneka), திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும், இலங்கையைப் பற்றிய தன் குறிப்புகளில் எழுதியுள்ளார் என பேராசிரியர் மருதநாயகம் மேற் கோள் காட்டுகிறார். திருக்குறளின் பெருமையும் புகழும் உரோமைக்கும் சென்றடைந்து, அதனின்றும் மேற்கோள் சொல்லப்பட்டிருப்பதால்,கி.மு. 300 ஆண்டுகளில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்து உறுதிப் படுகின்றது. இச்செய்திகளையெல்லாம் திரு. நாகசாமி அறிந்திருக்கமாட்டார்.

இலங்கையில், கொழும்புக்கு தென்கிழக்கேயுள்ள ஓரிடத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு கிடைத்த எலும்புக் கூடுகள் மற்றும் பொருட்களை கார்பன் முறைப்படி ஆய்வு செய்ததில், அவ்வெலும்புக் கூடுகள், கி.மு. 37000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த மக்களுடையது எனக் கண்டறியப் பட்டுள்ளது 14. தமிழரின் தொன்மையை விளக்கும் சான்று இது!

எவ்வகையிலும் பகவத் கீதையினின்றே கருத்துகளைப் பெற்று திருக்குறள் எழுதப்பட்டது என்பதற்கானச் சான்றுகளை, திரு.நாகசாமி வெளியிடட்டும். 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்கள் கூறியதையே நான் எடுத்துக் கூறினேன் என்று தப்பிக்க முயல வேண்டாம். தொடக்கத்தில் வீரமாமுனிவர் கூறியுள்ள உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூற, அந்தணர்கள் அஞ்ச மாட்டார்கள் என்ற கூற்றினை மீண்டும் படித்துப் பார்க்கவும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பற்றியும் அந்நிறுவனம் அளிக்கும் 5 இலக்கம் பணத்துடனான விருது பற்றியும் திரு. மு.க. ஸ்டாலின், தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்தேர்வுக் குழுவினின்று திரு. நாகசாமியை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இக்கருத்து வரவேற்கத் தக்கது மட்டுமில்லாமல் பாராட்டத் தக்கதும் கூட எனலாம்.

செம்மொழி நிறுவனத்தில் அளிக்கப்படும் விருதுகள், மற்ற விருதுகளைப் போல் முரண்பாடுகளைக் கொண்டவையே. மத்திய அரசின் ஆட்சியிலுள்ளவர்கள் விரும்பியவர்களுக்கே தொல்காப்பியர் விருதுகள் அளிகப்படுகின்றன. மற்ற விருதுகளையும் போல், தகுதி வாய்ந்த தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை.

கோவையில் நடை பெற்ற செம்மொழி மாநாட்டில். திரு. ஐராவதம் மகாதேவன் தலைமையில், சிந்துவெளி நாகரிகம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. திரு. மகாதேவனின், மாணாக்கர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இருவர், கட்டுரை படித்தனர். அக்கட்டுரையில், சிந்துவெளி மொழியில், தமிழ்ச் சொற்களை விட, கன்னடச் சொற்களே மிகுதியாகக் காணப்படுகின்றன என்று படித்தனர். பார்வையளர்கள் திகைத்துப் போயினர்.

செம்மொழி மாநாட்டில், தமிழ்மொழி சிறுமைப் படுத்தப்பட்டது. இக்கட்டுரைகளை வடித்துக் கொடுத்த திரு. ஐராவதம் மகாதேவனுக்கு, தொல்காப்பியர் விருது, செம்மொழி நிறூவனத்தால் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில், அந்நிறுவனத்தின் இயக்குநர், நிதி காப்பாளர், பதிவாளர் ஆகிய மூன்று பேருமே, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர். இந்நிகழ்வு, காங்கிரஸ் ஆட்சியில்தான் நடை பெற்றது.

தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்க வேண்டும் என்று, திமு.க அரசு காங்கிரஸ் அரசுடன் போராடிப் பெற்றதாக விளம்பரம் செய்யப்பட்டு, விழாக்களும் எடுக்கப்பட்டன. இத்தகுதிச் செய்தியை அறிவித்த மாந்த வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், தமிழ் மொழியின் வரலாறு, 1000 ஆண்டுகள் பழமையுடையது என்று கூறினார். தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் தோன்றவே, 1500 ஆண்டுகள் என வைத்துக் கொள்ளுங்கள் என்றார். (செயகாந்தன், தமிழை நாய்மொழி என்று கூறி, பின்னர் சிங்க மொழியென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்). மீண்டும் எதிர்ப்புகள் தோன்றவே, தமிழுக்குத் தொடர்பில்லாத ஆ.ராசா என்ற அமைச்சர், மாந்தவள மேம்பாட்டுத் துறையின் அறிவிப்பை வரவேற்று, ஆண்டுக் கணக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், இந்த ஆணை கிடைத்ததே போதும் என்றும் அறிக்கை விட்டார். திரு. கருணாநிதி அவர்களால் விளக்கம் தர இயலாத நிலையில், ஆ. ராசா விளக்கமளித்தார். முதற்கோணலே, அடுத்தடுத்த கோணல்களுக்கு மூலமாக அமைந்தன.

திரு. கருணாநிதியை, தலைவராகக் கொண்டு, செம்மொழி நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. ஆட்சி மாறி செயலலிதா முதல்வராக வந்துவிட்டால், தலைவர் பதவி அவருக்குப் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாக, பதிவுச் சட்ட வரைவுகள் பலமுறை திருத்தப் பட்டன. இவற்றை எவரும் சொல்லி நான் எழுதவில்லை. தொடக்கத்தில், 5 ஆண்டுக்காலம், அந்நிறுவனத்துக்குச் சென்று வந்தவன் நான். உண்மையில் அந்நிறுவனத்தின் தலைமை, மாந்த வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கே உரியது. திரு. கருணாநிதி, தமக்குக் கீழ் ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்று இரு குழுக்களை அமைத்துக் கொண்டார். அக்குழுக்களில் இடம் பெற்றிருந்தவர்களில் எவரும் தமிழஞர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் திரு. கருணாநிதியின் அன்பிற்குரியவர்கள். தொடக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும், 20 கோடிகள் அளவில் தொகைகள் வந்தன. அத்தொகை, எவ்வாறு செலவு செய்யப்பட்டிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

தமிழ் மொழியை ஆய்வு செய்வதில், சரியான திட்டமிடல் இல்லாததால், திட்டம் தீட்டத் தகுதியானவர்கள், அங்கு இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும், பல கோடிகளை, டெல்லிக்கே திருப்பி அனுப்பினர்.

தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கும் காங்கிரஸ் அரசு செம்மொழித் தகுதிகளை வழங்கியது. அழகிப் போட்டியில் அனைவருக்கும் முதல் பரிசு வழங்கப்பட்டதை ஒப்பு நோக்குக. மலையாளம், செம்மொழித் தகுதியுள்ள மொழியென்பதை, திரு. ஐராவதம் மகாதேவன் தான் கேரள அரசுக்கு எழுதிக் கொடுத்தார்.

தமிழுக்குத் தலையையும், கன்னடத்துக்குத் தோளையும், மலையாளத்துக்குக் கைகளையும் காட்டியவர் திரு.மகாதேவன். இவருக்கு மட்டும் செம்மொழி நிறுவனம் ஆய்வுக்காக பல இலட்சம் கொடுத்தது. செம்மொழி நிறுவனம் ஒரு குழுவின் சொத்தாகவே மாறிப்போனது.

பாரதிய சனதாக் கட்சி, ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே தொடர்ந்தது. தம் பங்குக்கு பல உதவிகள் செய்தனர். விருதுகள் வழங்கினர். தி.மு.க. முற்றிலுமாக அந்நிறுவனத்திலிருந்து விடுவிக்கப் பட்டது. திரு. கருணாநிதியுடன் ஏறக்குறைய 50 ஆண்டுகள் உடனிருந்த திரு. நாகசாமி பற்றி, திரு. ஸ்டாலினுகுத் தெரியாதா? கடந்த 50 ஆண்டுகளில், தமிழ் எவ்வாறு தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ளது என்பதை தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள், தமிழைப் போற்றி வளர்ப்பதாக உறுதி கூறி ஆட்சிக்கு வந்து, ஆங்கிலப் பள்ளிகளைத் திறந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் வளமை சேர்த்தது.

இன்று, திரு. ஸ்டாலின், திரு. நாகசாமியை எதிர்ப்பது, பா.ஜ.க.வை குற்றம் கூறுவதற்காக மட்டுமே என்க. ஆரியத்தைத் தமிழகத்தின்று அகற்றியே தீருவோம் என்றவர்கள், பின்னர் எவ்வாறு அவர்களுடன் சமரசம் செய்து கொண்டார்கள் என்பதை நாடறியும்.

பண்டாரம், பரதேசிகள் என்று கூறியவர்கள், பின்னர் நண்பர்களானர்கள். கூடாநட்பு கேடாய் முடியும் என்றவர்கள், பின்னர் தோழமை கொண்டனர். திராவிடம் பேசும் திரு. ஸ்டாலினும், தேசியம் பேசும் திரு. நாகசாமியும், அரசியலுக்கான அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் தமிழுக்கோ, தமிழ்நாட்டுக்கோ எப்பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழர்களைப் பகைவர்களாகக் கருதும் இரண்டு தேசியக் கட்சிகளும், தமிழ் நாட்டுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. தமிழர்கள் விழிப்புணர்வு பெறுவதைத் தவிர, இன்று வேறு வழிகள் இல்லை.

திரு. நாகசாமி, நூல்களையும், அறிக்கைகளையும் வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு, சமற்கிருதம், தமிழ், பகவத் கீதை, தமிழர் வரலாறு, ஆரியர் வரலாறு பற்றி, பொதுமக்கள் மத்தியில் அல்லது தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக வெளிப்படையான விவாதத்துக்கு முன் வரவேண்டும். திரு. நாகசாமியின் பொய்யான, கற்பனையான, ஒரு சமூகத்தை உயர்த்தும் உள்நோக்கம் கொண்ட பிதற்றல்களை, தமிழறிஞர்கள் சந்திக்கக் காத்திருக்கின்றனர்.

ஒன்று அவர் விவாதமேடைக்கு வரவேண்டும் இல்லையேல், இதுபோன்ற வரலாற்றுத் தொடர்பற்ற கற்பனைச் செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரங்கள், அரைகுறைகளை வேண்டுமானால் வளைத்துக் கொள்ளலாம், அறிஞர்களை வளைக்கவோ, தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரவோ இயலாது என்பதை, திரு. நாகசாமியும், அவரை ஆய்வாளர் என்று நம்பிக் கொண்டிருக்கிற தேசிய கட்சியும், உணரவேண்டும். நெய்யும் மெய்யும் வெளிப்பட்டே தீரும் என்ற பாவாணரின் மொழியில், இதனை உணர்த்த விரும்புகிறேன்.

அடுத்த 10 ஆண்டுகளில், இந்திய மொழிகளுக்குத் தாய்மொழி தமிழே என்றும், தமிழே உலக மொழிகளுக்கு மூலம், வேர் என்றும், உலக அரங்கில் உறுதியாக நிறுவப்படும். அதற்கான காலம் கனிந்து கொண்டிருக் கிறது!"

அடிக்குறிப்புகள்:-
===============
1. வீரமாமுனிவர் அருளிய சதுரகாதி, பதிப்பாசிரியர், டாக்டர்.சூ. இன்னாசி, வீரமாமுனிவர் ஆய்வுக் கழகம், பாளையங்கோட்டை, 1979, முன்னுரை, பக். XVII-XVIII..

2. குரவன் என்ற சொல்லை எடுத்துவிட்டு, பார்ப் பார் என்ற சொல்லைத் திணித்துவிட்டதாக, எல்லிசின் குறிப்புகளை மேற்கோள் காட்டி, பேரா.ப. மருதநாயகம் பதிவு செய்துள்ளார்.

3. DISTRICT GAZETTIER, TRICHINOPOLY,1830.

4. புறநானூறு, 194, பக்குடுக்கை, நன்கணியார்.

5. என் சரித்திரம் அரியலூர் மாவட்டப் பண்பாட்டுப் பேரவை.

6. ஏம வைகல் எய்தின்றால் உலகே - பெருந்தேவனார், குறுந்தொகை.

நீர் நின்று அமையாது உலகம் போல - நற்றிணை, முதல் பாடல்.

தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகெ - அகநானூறு, கடவுள் வாழ்த்து.

மண் திணிந்த நிலனும் - புறநானூறு

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு - முருகாற்றுப்படை

மலை நாறிய வியன் ஞாலத்து - மதுரைக் காஞ்சி.

உலகெலாம் ஓதற்கரியவன் - திருமுறை - என விரியும்.

7. Special Language: The professional and secret language practiced by the scribes, appear in both Egypt and Mesopotamia. It was even more difficult for more than a few to mester these skills. - Dictionary of the Bible,P.779.

8. Pragrit: The Languages other than Sankrit, that apoken and written in North India. Monier Williams, Introduction in his Dictionary, P.XX.

9. Sankrit: Perfectly constructed Speech. - Ibid, P.XX

10. குறி: குறி அறிந்தோரே - தொல்காப்பியம்.

11. சிவத்தியாநாநந்தர், ரிக்வேத சம்கிதை, இராயப் பேட்டை, 1938, முன்னுரை.

12. Rig Veda: The Oldest of its (Vedas) hymns being assigned by some who rely on certain astronomical calculations to a period between 4000 and 2500 B.C., before the settlement of the Aryans in India and by others who adopt a different reckoning to a period between 1400 B.C.- 1000 B.C., when Aryans had settled down in Punjab.
Monier Williams, A Sanskrit - English Dictionary, P.1015.

13. Dr.B.R.Ambetkar, “Who is Sutra?”

14. தகவல் மற்றும் படங்கள், அமெரிக்காவின் நவேடா மாநிலம், கர்சான்சிட்டி, மாநிலத் தலைமை, நூலகத்திலிருந்த, The Encyclopedia - anthropology, Vol.VII, என்ற நூலிலிருந்து, கட்டுரை ஆசிரியரால் எடுக்கப்பட்டது.

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 மார்ச் 16 – 31 இதழ்)

===============================
கண்ணோட்டம் இணைய இதழ்
===============================
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: tamizhdesiyam.com
===============================