சனி, 25 நவம்பர், 2023

குப்பி கடித்த புலிப்பல் - அறிவுமதி கவிதை


குப்பிக் கடித்த மகனோடு
ஒரு தாய்
பேசுகிறாள்:

குப்பி கடித்தாயாமே மகனே!
கேள்விப்பட்டேன்.
விழிக் குடிசைகளின்
ரோமக் கூரைகளில்
உப்பு மழைத்துளிகள்
ஒழுக
ஒழுக
உனக்காக
அழவேண்டும் என்று
எதார்த்தம்
விரும்புகிறது
மகனே !
ஆனால்
உனது கனவுகள் வந்து
என் கண்ணீரைத்
துடைத்து விடுகின்றன.
இது உனக்கு
இறந்த நாளா?
இல்லை மகனே…
மரணம்
என்பது
உண்மையான வீரனுக்கு
இரண்டாவது
பிறந்த நாள்
ஆம்…
அவ்வளவுதான் மகனே !
உன்னைப்
பெற்றெடுத்த நாட்களில்
வளர்ந்து
ஆளாகி
உனது கைகளால்
ஒரு
பெண்ணின்
கழுத்தில் நீ
தாலி கட்ட
அதைப் பார்த்து மகிழ வேண்டும்
என்று
அம்மா நான்
ஆசைப்பட்டது
உண்மைதான்
மகனே !
உண்மைதான்.
ஆனாலும்
உனக்கு
நீயே
மரணத் தாலி
கட்டிக் கொண்டதைப்
பார்த்த
நாளில்
அதைவிடவும் அதிகமாய்
மகிழ்ந்தேன்
மகனே !
மகிழ்ந்தேன்.

நாட்டிற்குள்
பெருமாள்களாய்
வாழ்வதைக் காட்டிலும்
காட்டிற்குள்
பி*ர*பா*க*ர*ன்*களாய்
கிட்டுகளாய்
வாழ்ந்து
போராடுகிறீர்கள்
என்பதில்தான்
மகனே
நான் இன்னும்
மகிழ்ந்தேன்.
ஆம்…
நாட்டிற்குள் தான்
வாழ்கிறேன்
ஆனால்
மிருகங்களுக்கு
மத்தியில்.
நீ
காட்டிற்குள்தான்
வாழ்ந்தாய்
ஆனால்
மனிதர்களுக்கு
மத்தியில்.

சிங்கப் பல்
தெரிய
நீ
சிரித்த
அழகையெல்லாம்
சேகரித்துப்
பார்க்கிறேன் மகனே…
அவற்றையெல்லாம் விட
அதே
சிங்கப் பல்
இன்று
சயனைட்
குப்பிகடித்து
புலிப் பல்லாக
மாறிப் போன
செய்தி
கேட்டு
குளிர்ந்தேன்.
எனது மார்புகளில்
பால்
குடித்த
நாட்களில்
முதல்
பல்லால் நீ
கடித்தபோது
ஏற்பட்ட
இன்ப
வேதனையை விடவும்
அதே
பல்லால் நீ
குப்பி
கடித்தாய் என்கிற
செய்தி கேட்டு
அடைந்த
துன்ப மகிழ்ச்சி
இனிமையானது
மகனே!
இனிமையானது !

விழுந்த பல்
முளைக்கவில்லை
என்று
உன் மாமன்
நெல்லால்
கீறிவிட்ட பொழுது
கசிந்த
இரத்தம் பார்த்து
என்
கண்கள்
பனித்தன மகனே!
கண்கள்
பனித்தன.
இன்று
குப்பி கடிக்க நீ
ரத்தம் கசிய
கண்கள் மூடினாய்
என்று
கேள்விப் படுகையில்
கண்களும்
சிரித்தன மகனே !
கண்களும்
சிரித்தன.

சின்ன வயதில்
நான் கொடுத்த
வெல்லக் கட்டிக்காக
போட்டி
போட்டுக்கொண்டு
நீயும்
உனது
தம்பிகளும்
காக்காய்க் கடி
கடித்துப்
பங்கிட்டுக் கொள்வதைப்
பார்த்து
மகிழ்ந்த உன் தாய்
மகனே…
இன்று
இயக்கம் தந்த
குப்பியை
நீயும்
உனது
தோழர்களும்
புலிக்கடி கடித்து
மரணத்தைப்
பங்கிட்டுக்
கொண்டதைக்
கேட்கக்
கேட்கக்
மகிழ்கிறேன்
மகனே !
மகிழ்கிறேன்.

பெற்றெடுத்த
மகன்
இறந்துவிட்டாயே
என்கிற
வருத்தமில்லை
மகனே.
ஈழவிடுதலையைப்
பெற்றெடுக்காமல்
இறந்துவிட்டாயே
என்கிற
வருத்தம்தான்
எனக்கு.
ஆனாலும்…
நம்பிய
தலைவனை
நம்பிய
இயக்கத்தைக்
காட்டிக்
கொடுக்கமாட்டேன்
என்கிற
உறுதியோடு
குப்பி கடித்த
என் செல்ல மகனே!
உன்னை
இழந்தாலும்
என்னை
அம்மா
அம்மா
என்றழைக்க
ஆயிரமாயிரம்
புலிகள்
அணிவகுத்துக் கொண்டே
இருக்கிறார்கள்
மகனே !
அவர்கள்
பெற்றுத்தரப் போகிற
தமிழீழத்தில்
சின்னஞ் சிறுசுகள்
நாளை
சிரிக்கிற போது…
குப்பி கடித்த
உனது பல் ஞாபகமாக
அன்று
கண்ணீர் வடிப்பேன் மகனே!
அன்று
வடிப்பேன்
ஆனந்தக் கண்ணீர்!
இனியும்
தமிழச்சிகள்
வீரர்களைப் பெற்றுத்தருகிற
வெறும்
கர்ப்ப இயந்திரங்களாக மட்டும்
இருக்க மாட்டார்கள்.
அவர்களே…
வீராங்கனைகளாக
மாறுவார்கள்.
மாறிக்கொண்டும்
இருக்கிறார்கள்.
ஆயுதங்கள்
ஏந்துவார்கள்.
ஏந்திக் கொண்டும்
இருக்கிறார்கள்..

எழுதியவர்: 
கவிஞர் அறிவுமதி.

சனி, 4 நவம்பர், 2023

தமிழ் அறிவு மரபும், அறிஞர் க.நெடுஞ்செழியன் எனும் தனித்துவ மரபும்.

தமிழ் அறிவுச் செயல்பாட்டின் மரபாகவும் நீட்சியாகவும் இருந்து, தமிழ் அடையாள மீட்பின் அறிவுக் கொடையை வழங்கிய ஆய்வறிஞர் க.நெடுஞ்செழியன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் புகழ் வணக்கம்.

அறிஞரின் தமிழ் ஆய்வுப் பண்பு குறித்தும், வாழ்வும் போராட்டமும் குறித்தும் பேராசிரியர்கள் டி.தர்மராஜ், சே.கோச்சடை, ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் ஆகியோரது 3 கட்டுரைகள் ஒருங்கே தரப்பட்டுள்ளன. அய்யாவின் புகழ் நீடு வாழ்க.

ஏர் மகாராசன்

*

1.

அறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வுகளில் கலகக் குணமும் மாற்றுச் சிந்தனை மரபும்.

:பேரா டி.தருமராஜ்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அரிதானவர்.  அதனால், தமிழகத்தில் அறியப்படாதவர். அறிந்திருந்தவர்களும் நெடுஞ்செழியனை நமட்டுச் சிரிப்புடனே கடந்து போனார்கள்.  

இந்த நமட்டலுக்கு நம்மிடம் வரலாறு உண்டு. பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று பலரின் மீதும் செலுத்தப்பட்ட அசட்டு நமட்டல் இது.  

நெஞ்செழியன், திராவிட சித்தாந்தத்தில் பயின்று வந்தவர். அதன் பிரதானக் காரணிகளாக கடவுள் மறுப்பையும், சாதி எதிர்ப்பையும், தமிழ்ப் பற்றையும் அவர் உருவகித்திருந்தார்.  இது ஒரு வகையில், திராவிடப் பாரம்பரியத்திலிருந்து கிளைத்து வந்த மாற்று மரபு என்று கூட சொல்ல முடியும்.  

சைவ, வைணவ மதக் கட்டுமானங்களை கட்டுடைப்பது என்று மட்டுமல்லாமல், அதன் மாற்று வடிவங்களை யோசித்ததே நெடுஞ்செழியனின் ஆகப்பெரிய பங்களிப்பு.  இத்தகைய மாற்று வடிவ யோசனைகள் இந்தியா முழுமைக்கும் பொதுவானவை என்பது நமக்குத் தெரியும்.  இந்த மாற்று யோசனைகள் மொத்தமும் பெளத்ததில் சென்று கலந்து விடுகிற காலத்தில், அதிலிருந்து விலகி ஆசீவகத்தை நோக்கி நகர்ந்தது எனக்கு அவர் மீது பெரும் மதிப்பையும் ஆச்சரியத்தையும் அளித்திருந்தது.

இதனால் அவர் மாற்று யோசனைகளின் மாற்றாகவும் விளங்கியிருந்தார்.  பெருஞ்சமயங்களுக்கு எதிரான இந்திய மாற்று  - ‘பெளத்தம்’, என்ற நீரோடையிலிருந்து நெடுஞ்செழியன் விலகியதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன என்று நான் நினைக்கிறேன்.  ஒன்று, பூரண தமிழ்ச் சிந்தனை மரபொன்றை (பெளத்தமும் சமணமும் வேற்றுமொழிச் சிந்தனை மரபுகள்) வரலாற்றிலிருந்து வடிவமைக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்; இரண்டு, அது என்றென்றைக்கும் அதிகாரத்திலிருந்து விலகி இருந்திருக்க வேண்டும் என்றும் நம்பினார்.  

அந்த வகையில் ஆசீவகம், எல்லா வகையான மேலாதிக்கத்திலிருந்தும் விலகியே இருந்திருக்கிறது.  வரலாற்றில் அதை எந்த அரசும் ஆதரித்ததற்கான சான்றுகள் இல்லை;  அரசு மட்டுமல்ல, வெகுஜனத் தளத்திலிருந்தும் கூட ஆசீவகச் சிந்தனையாளர்கள் விலகியே நின்ற சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன.  பெருஞ்சமயங்களின் சாகரமாக விளங்கும் இந்தியச் சிந்தனை நீரோட்டத்தில் ஆசீவகத்திற்கான மரியாதை, கேலிக்கும் கண்டனத்திற்கும் அவதூறுகளுக்குமானது என்பதில் சந்தேகமில்லை.  ஏனெனில், நேரடியான ஆசீவகப் பிரதிகள் எவையும் நமக்குக் கிடைப்பதில்லை.  ஆசீவகத்திற்கு எதிராக எழுதப்பட்ட கண்டனங்களிலிருந்தும், வசைகளிலிருந்துமே நாம் அதனை ஒருவாறு யூகித்துக் கொள்கிறோம்.  இந்திய சிந்தனை மரபில் ஆசீவகத்திற்கு வழங்கப்படும் இடமும் அந்தஸ்தும், நவீன இந்தியாவில் தமிழகத்திற்கு வழங்கப்படும் இடத்தையும் அந்தஸ்தையும் ஒத்தது என்ற யோசனை நெடுஞ்செழியனின் பிரதியெங்கும் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.  

இச்சூழலில், ஆசீவக ஆய்வுகளில் நெடுஞ்செழியன் முன்வைக்கும் கருதுகோள்கள் மரபை மீறிய, சாகச குணம் கொண்டவை.  உதாரணத்திற்கு, அவர் இந்தியா முழுமைக்கும் கிடைக்கப்பெறாத ஆசீவக நேரடிப் பிரதிகளை தமிழ் சங்க இலக்கியப் பாடல்களில் கண்டறியத் தொடங்குகிறார்.  ஏராளமான புறநானூற்றுப் பாடல்களுக்கு அவர் அளிக்கும் விளக்கங்கள் அவற்றை ஆசீவகச் சிந்தனைப் போக்கில் வாசிக்கத் தூண்டுகின்றன.  உதாரணத்திற்கு, பகுத காச்சாயனர் என்ற ஆசீவகச் சிந்தனையாளரை புறநானூற்றுப் பாடலாசிரியர் பஃகுடுக்கை நன்கணியாராக அவர் சித்தரிக்கத் தொடங்குவது புதிய வெளிச்சத்தை அளிக்கக்கூடியது.  அதன் தொடர்ச்சியாக, மற்கலி கோசரையும் புஷ்கரையும் பூரணரையும் மருகால்தலையில் வீற்றிருக்கும் அய்யனார் - பூர்ணா - புஷ்கலா தம்பதிகளிடம் கொண்டு வந்து நிறுத்தும் இடம் நம்மைச் சலனப்படுத்துவது.  

அந்த வகையில், இந்தியச் சிந்தனை மரபின் ஒடுக்கப்பட்ட அதே நேரம் கலகக் குணம் கொண்ட சிந்தனை மரபாக தமிழை யோசிக்கும் வகையில் அவர் ஆசீவகத்தைக் கையாண்டார் என்பதே உண்மை.  அவருக்கு என் பூரண மரியாதையும், அஞ்சலியும்.

https://aerithazh.blogspot.com/2022/11/blog-post_4.html

*

2.

க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி!.

: இரா. மன்னர் மன்னன்.

இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு. 

ஆதிநாதர் முதலான 23 தீர்த்தங்கரர்கள் ஜைனர்கள், ஆசீவகர்கள் - ஆகிய இருவருக்கும் பொது. இதனால்தான் இவர்கள் இருவருமே சமணர்கள்.

ஆனால் ஜைனருக்கு மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர், ஆசீவகர்களுக்கோ மர்கலி 24ஆவது தீர்த்தங்கரர். உண்மையில் ஆசீவகம் ஜைனத்தின் போட்டி மதம். ஆனால் பின்னர் நலிவடைந்த ஆசீவகத்தை, ஜைனம் கைப்பற்றி சுவடே தெரியாமல் போகுமாறு செய்தது. 

அப்படியாக அழிந்து போயிருந்த ஆசீவக வரலாற்றை அதன் கடைசி சல்லிவேரில் இருந்து மீட்டு எடுத்தவர் ஆய்வாளர் க.நெடுஞ்செழியன் அவர்கள். அவரது மறைவின் நாளில் அவரது ஆய்வைப் பற்றி தமிழர்களுக்குக் கூறுவதே அவருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும் என நினைக்கிறேன்.

தலைமுடியை தனது கைகளால் பிய்த்து (மயிர் பறித்து) மொட்டைத் தலையோடு துறவிகளாகும் ஜைனர்களும், நீண்ட தலைமுடியோடு உள்ள ஆசீவகர்களும் ’சமணர்’ - என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் வழிபாடுகள் கொள்கைகள் வேறுவேறு. ஜைனர்களும் பவுத்தர்களைப் போல ’வானத்தை பூதமாக ஏற்க இயலாது, மொத்தம் 4 பூதங்களே’ - என்ற போது, ’வானமே முக்கியமானது, மொத்தம் 5 பூதங்கள்’ - என்று சொன்னவர்கள் ஆசீவகர்கள். 

எதையும் விவாதித்து விளக்கும் மரபினர் ஆசீவகர்கள், இவர்கள் வசித்த இடங்களான ‘பள்ளி’கள் மக்களுக்குக் கல்வி கொடுத்ததன் தொடர்ச்சியாகவே பின்னர் கல்வி நிலையங்களுக்கு ‘பள்ளி’ என்ற பெயர் வந்தது. 

மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக ஆசீவகர்களைப் பல்வேறு இலக்கியங்கள் குறிக்கின்றன, குறிப்பாக மனநல மருத்துவத்தில் இவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர்.

ஆனால் ‘தீமை என்ற ஒன்று இல்லை, எல்லாம் ஊழ்’ - என்ற வினைக் கோட்பாடு இவர்களை வீழ்தியது. மக்கள் பரிகார லஞ்சங்களோடு வந்த பிற மதங்களின் பக்கம் ஈர்க்கப்பட, அறிவார்ந்த மதமான ஆசீவகம் அழிந்தது.

கி.மு.5-3ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவரை செல்வாக்கோடு இருந்த ஆசீவகம், 13-15ஆம் நூற்றாண்டுகளில் பெரும் தேய்வை சந்தித்தது. ஆசீவகம் கடைசி மூச்சை விட்ட இடமும் தமிழகம்தான்.

தமிழகத்தில் ‘சமணர் கழுவேற்றம்’ - என்று சொல்லப்படுவது பெரும்பாலும் ஆசீவகர் கழுவேற்றமாகவே இருந்துள்ளது, அதற்கு சடைமுடியோடு ஆசீவகர்கள் கழுவேறும் சிற்பங்களும் ஓவியங்களும் சான்றுகளாகின்றன.

அதுபோல சமணர் ஓவியம் என்று சொல்லப்படும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களிலும் முடிநீண்ட ஆசீவகர்களே உள்ளனர்.

தமிழகத்தில் ஆசீவகர்கள் சங்ககாலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர். கி.மு.5ஆம் நூற்றாண்டுவரை பழமையானது எனக் கருதப்படும் மாங்குளம் கல்வெட்டில் சமணர் என்ற பெயர் காணப்படுகின்றது. இவர்களின் சான்றுகளைத் திரித்துதான், ‘தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தே ஜைனர்கள் உள்ளனர், வடக்கில் இருந்து தமிழருக்கு எழுத்தை அறிமுகப்படுத்தியவர்களே ஜெயினர்கள்தான்’ - என்ற கூற்று முன்வைக்கப்பட்டது.

தங்களுக்கு மொழி இல்லாத காரணத்தால்தான் ஜைனர்கள் சமஸ்கிருதத்தையும் பிராமி எழுத்தையும் எடுத்துக் கொண்டனர் - என்பதுதான் வட இந்திய வரலாறு. ஆனால் எழுத்தே இல்லாதவர்கள் நமக்கு எழுத்து கொடுத்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர். நாமும் நம்பி வந்தோம்.

அதை உடைத்து, ’சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்தவர்கள் ஜைனர்கள் அல்ல ஆசீவகர்கள். ஆசீவகம் தமிழரின் அறிவை வடக்குக்கு கொண்டு சென்றது, வடக்கில் இருந்து எழுத்தோ, வானியலோ இங்கு வரவில்லை’ - என்று சான்றுகளோடு எழுதியவர் க.நெடுஞ்செழியன் அவர்கள். இதற்காகவே தமிழினம் ஐயா அவர்களுக்குக் கடமைப்பட்டு உள்ளது.

தமிழின் பெயரால் தமிழை அழித்துப் பிழைப்பவர்கள் மத்தியில், தமிழுக்காக வாழ்ந்து மறைந்திருக்கிறார் க.நெடுஞ்செழியன் அவர்கள். நினைவை ஏந்துவோம்!.

https://aerithazh.blogspot.com/2022/11/blog-post_5.html


*

3.

அறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வாளர் மட்டுமல்ல; சமூகப் போராளியும்கூட.

:பேரா சே.கோச்சடை.

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அன்பில் படுகை கிராமத்தில் பிறந்தவர்.இவர் குடும்பம் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்துடன் நெருக்கமாக இருந்தது.பேராசிரியர்  இளமையிலிருந்தே பெரியார் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர்.பேராசிரியர் சக்குபாயைக் காதலித்துச் சாதிமறுப்புத் திருமணம் செய்து  கடைசிவரையில் கருத்தொருமித்து வாழ்ந்தவர். தமிழ் மொழி,இனம், பகுத்தறிவு ஆகியவற்றில் பிடிப்போடு பரப்புரை செய்தவர். சொல் ஒன்று செயல் வேறாக நினைக்காதவர். ஈழ விடுதலைப் போரில் புலிகளை ஆதரித்ததால் இந்திய ஒன்றிய அரசின் கடும் சித்திரவதைகளுக்கு ஆளானவர்.தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் பணியாற்றியபோது இராசீவ்காந்தி கொலையை ஒட்டி கர்நாடகத்தைப் பிடிக்கச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக்  கைது செய்யப்பட்டுக் கர்நாடக மாநிலச் சிறையில் அடைக்கப்பட்டார்

இரண்டரையாண்டுகள் அங்கே கழித்தார்.தமிழ்ப் பல்கலைக் கழக வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு வேலை செய்துவிட்டுத் தஞ்சையிலும் திருச்சியிலும் தங்கியிருந்தவரைக் கர்நாடகாவில் இருந்து, வேறு சிலருடன் சேர்ந்து சதி செய்ததாகப் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது அரசு.தக்க ஆவணங்களைக் காட்டி வாதாடியும்கூட, கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டிருக்கும்  நீதித்துறைக்கு அச் சான்றுகளைப் பார்க்க முடியவில்லை.

    ஒரு மகனும்  இரண்டு மகள்களும் பெற்ற அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காகப் போர் புரியப் பொறியியல் பட்டம் பெற்ற தன் மகனை அனுப்பினார்கள். அவர் அங்கே ஈகியானார்.

விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மற்ற தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட்டார்.தமிழகத்துக்கு வந்து பேராசிரியர் உதவியோடு பொருட்களை வாங்கிக்கொண்டு ஈழம் திரும்பிய பதினேழு புலிகள் இந்தியக் கடற்படையின் இரண்டகத்தால் நடுக்கடலில் சயனைடு  அருந்தித் தற்கொலை செய்துகொண்டதை அறிவோம். அவர்கள் தோழர் வீட்டுக்கு வந்து திரும்பியபோது நடந்த துன்பியல் நிகழ்வு அது.அஞ்சா நெஞ்சர் அவர்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தில் கெடுவாய்ப்பாக அவர் எங்களுக்கு எதிரான அணியில் இருந்தார். ஆனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரால் பதவி அடைந்தவர்கள் அவருக்குக் குரல் கொடுக்கவில்லை.மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் முனைவர்.சுரேஷ் வாயிலாக எங்கள் தலைவர் கே.ஜி.கண்ணபிரான் அவருக்காக வாதாட கண.குறிஞ்சி உள்ளிட்ட நாஙகள் முயன்றோம். அப்போது சேலத்தில்  மாநிலச் செய்குழுக் கூட்டம் நடந்தது.புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் தோழர் சங்கரசுப்பிரமணியன்ஆசிரியர் கழகப் பொதுச்செயலர். நாங்கள் செயற் குழுவில் பேசித் தீர்மானம் நிறைவேற்றித் தமிழ் நாடெங்கும் அவரை விடுதலை செய்யக் கோரிக் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். 

   ம.கோ.இரா.அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த பொன்னையன் ஆசிரியர்களுக்கு எதிரான போக்குள்ளவர்.திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் ஈழப் போராளிகளுக்கு ஆதரவாக மறியல் செய்ததற்காகப் பேராசிரியர் நெடுஞ்செழியனையும், நக்சலைட் என்று என்னையும் பொன்னையன் பழி வாங்கும் இடமாற்றம் செய்தார்.சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு 1987இல் மாற்றப்பட்ட நாங்கள் அங்கே ஒரு பண்ணையின் மாட்டுக் கொட்டகையை வாடகைக்குப் பிடித்துச் சமைத்து உண்டு, கல்லூரியில் இரவுக் காவலர்களுடன் படுத்து எழுந்தோம். வெள்ளிக் கிழமை மாலையில் ஊருக்கு வந்துவிட்டுத் திங்கட்கிழமை காலை ஆத்தூருக்கு வருவோம்.நான் காரைக்குடியில் இருந்து பேருந்து ஏறித் திருச்சியில் அவருடன் காலை ஆறரை மணிப் பேருந்தைப் பிடித்துச் செல்வோம்.எளிமையானவர்.

அப்போது ஆத்தூர் கல்லூரியில் உள்ளூர் ஆசிரியர்கள் ஆதிக்கம் செய்தனர்.மாணவர் நலனில் அக்கறை இல்லை.ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுக்காததால் எழுத்துத் தேர்விலும் செய்முறைத் தேர்விலும் பணம் விளையாடியது.நாங்கள் ஆசிரியர் கழகத்தில் பேசித் தீர்மானம் போட்டுக் கல்லூரிப் பாடங்களை ஆசிரியர்கள் ஒழுங்காக நடத்த வைத்தோம்.அவர் சிறைச்சாலையை அறச்சாலை ஆக்கிய மணிமேகலையைக் கற்பிப்பவர் அல்லவா? 

பல்கலைக் கழகத் தேர்வுகளில் நடக்கும் நேரத்தில் நாங்கள் ஊருக்கு வந்துவிட்டோம்.அப்போது முதன்மைத் தேர்வுக் கண்காணிப்பாளராக இருந்தவர் இவருடைய துறைத் தலைவர்.பகலில் தேர்வு நடந்த பிறகு நன்றாகத் தேர்வு எழுதாதவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு,அவர்களை இரவில் வரச் சொல்லி,பழைய தாள்களை உருவி எடுத்துவிட்டுப் புதிய தாள்களைக் கொடுத்துப் பார்த்து எழுதவைத்துச் சேர்த்திருக்கிறார்.இது கல்லூரி இருக்கும் வட சென்னிமலையில் பலருக்குத் தெரிந்திருந்தது.நாங்கள் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தைக் கூட்டிப் பேசிச்  சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு முறையீடு விடுத்தோம்.எங்கள் ஆசிரியர் தலைவர்கள் வாயிலாக விசாரணை ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. எங்களுடன் வேறு சில ஆசிரியர்களும் சென்னைக்கு வந்து சான்றளித்தனர் .1987 முதல்1989 வரை நாங்கள் அங்கே பணியாற்றிய இரண்டு ஆண்டுகளும் நல்ல தேர்ச்சி. 

அங்கே நாங்கள் இருந்தபோது பரிபாடலில் பெருவெடிப்புக் கொள்கைக்கான முற்கோள் (hypothesis).இருந்ததைக் கண்டார்.நான் இயற்பியலுடன் தமிழும் படித்தவன் என்பதால் அந்தப் பகுதியை நான் விளக்கினேன். அப்புறம் அதில் பரிணாம வளர்ச்சி பற்றியும் சொல்லப்பட்டுள்ளது என்று விளக்கியிருர்தார்.என் பங்கு இதில் சிறிதெனினும் என் பெயரையும் சேர்த்தே அக் கட்டுரையை வெளியிட்டார் .

பேராசிரியரின் ஆராய்ச்சி  எழுத்துப் பணி மிகவும் சிறப்பானது.ஆசீவகம் என்ற தமிழர் மெய்யியலை இலக்கியச் சான்றுகளுடன் களப்பணி ஆய்வும் செய்து நிலைநாட்டினார்.அதில் குறை காண்பார்கள் உண்டு.ஆனால் அவரது ஆய்வு புது வெள்ளம் போன்றது.நுங்கும் நுரையும் குப்பையும் கூளமுமாகத்தான் ஆறு தொடங்கும்.ஓட்டத்தில்தான் நீர் தெளியும். பேராசியரது முன்னெடுப்பை மேலும் பலர் தொடரும் நிலையில் கால ஓட்டத்தில் தமிழர் மெய்யியல் முழுமையாக நிறுவப்படும். அவருக்கு வீர வணக்கம்.

https://aerithazh.blogspot.com/2022/11/blog-post_6.html


*

நன்றி:

பேரா டி.தர்மராஜ்,

பேரா சே.கோச்சடை,

ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் ஆகியோரது பதிவுகள்.


ஏர் மகாராசன்

வியாழன், 2 நவம்பர், 2023

அறிஞர் ஒரிசா பாலுவின் கடற் பயணமும் தமிழ் ஆய்வும்: பேரா. அரங்க மல்லிகா




கடல்சார் ஆய்வாளர் திரு ஒரிசா பாலு அவர்கள் தமிழக வரலாற்றைத் தமிழ் இலக்கியத்திலிருந்து தேடுவதைப்போல  கடலிலிருந்தும் ஆய்வு செய்ய வேண்டும்  என்பதைத் தன்னுடைய ஆய்வு முடிவாகத் தந்தவர். தருகிறார் .  

  குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்ததென விரிவாகக் கடலுக்குள் பயணப்பட்டு பேசி இருக்கிறார்.சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் வைகை ஆற்றங்கரை நாகரிகத்திற்கும் உள்ள தொடர்பைக் கடலில் மூழ்கிய கட்டிடங்கள், வாழ்வியல் முறைகள், பழங்கற்கால நாகரிகம்  ஆகியவற்றை வைத்துத் தொடர்புபடுத்துகிறார்.

தொடக்ககாலத்தில் இது லெமூரியா கோட்பாடாக(1863) இருந்தது.பிறகு குமரிக்கண்ட ஆய்வாக( 1864) த் தொடர்ந்ததும் 1898 இல் தமிழ் இலக்கியத்தையும் லெமுரியா ஆய்வையும் கொண்டு நரசிம்மப்பிள்ளை ஆய்வு செய்ததாகக் கூறுகிறார். பிறகு அது (1940) இல் கடல் கொண்ட தென்னாடு என மாறியது. இந்தக்காலக் கட்டத்தில் தான் தன்னுடைய ஆய்வு தொடர்ந்தது என்பதை விரிவாகப்பேசுகிறார்.

அவருடைய ஊடகப் பேட்டிகளில் ஆய்வுகளின் மூலத்தைக்  கடலுக்குள் அழிந்துபோன நகரங்களைக் கொண்டு விரிவான தரவுகளுடன்  அவர் பதிவு செய்திருக்கிறார் .தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர் வரலாற்றையும் தமிழருக்கும் வணிகத்திற்கும் உள்ள  தொடர்பையும் எடுத்துக்காட்டிய  ஒரிசா பாலு அவர்கள் மிக முக்கியமாகத் தன் ஆய்வில் ஆமைகளை ஆய்வு செய்ததில் தனக்கென ஓர் இடத்தை வரலாறாக மாற்றுகிறார்.தமிழரின் நாகரிகத்தை , பண்பாட்டை ஆய்வு செய்யும் ஆளுமைகளில் ஆமை ஆய்வில்தான் மிக முக்கியமான ஆய்வாளராக  ஒரிசா பாலு அவர்கள் அறியப்படுகிறார்.அவருடைய கடலாய்வின் மூலமாக குமரிக்கண்டம் மிகப்பெரிய ஒரு திருப்பு முனையைக்கொண்டது என உறுதிபடுத்துகிறார்.

  குறிப்பாக கடலில் ஆமைகள் நீந்தி வருவதை, திரும்பிச்செல்லும் வழியை, முட்டையிடும் முறையை ,குஞ்சு பொரிக்கும் அழகை யாவும் அறிகிறார். கடல் உள்வாங்குவது ஏன் என்பதை , குமரிக்கண்டம் இந்தோபசிபிக் ஆய்வின் மூலம்  வெளிப்படுத்துகிறார்.

       வரலாறு ஒரு நாகரிகத்தின் அடிப்படை. அதனால் வரலாற்றிலிருந்து ஆய்வைத்தொடர வேண்டும் என்பது அவர் அவா.தமிழ் மொழியைப் பயன்பாட்டில் கொண்டிருக்கும் நாடுகள் ஏராளம் .குறிப்பாக 125 நாடுகளில் தமிழ் மொழி, பயன்பாட்டில் இருக்கின்றது என்று கூறுகிறார் .எடுத்துக்காட்டாக தொழிலதிபர் வெர்ஜின் ஏர்லைன்ஸ் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சிஸ், மாறன் போன்றவர்கள் தமிழ்நாட்டை த் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு உலக நாடுகளில் பேரும் புகழும் பெற்று வரக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டும் அவர் உலக நாகரிகத்திற்கான தொடக்கம் வைகறை நாகரிகத்தில் இருக்கிறது .அதனைக் கீழடி என்ற  ஒற்றைச் சொல்லால் அடக்கி விட முடியாது என்று ஆணித்தரமாக ஆய்வின் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார். 

   2005 முதல் குமரிக்கடலில் ஆய்வு செய்யச் சென்ற அவருடைய அனுபவம் அதன் மூலமாக குமரிக்கடலில் மூழ்கிய நிலங்கள் தொடங்கி  மடகாஸ்கர் வரை தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் ஆய்வின் மூலமாக அவர் உறுதிப்படுத்துகிறார்.

 174 நாடுகளில் அவர் தமிழர்களுடன்   தொடர்புடையவராக இருந்து கொண்டிருந்தார் என்பது தான் தமிழ் மீதும் தமிழ் மொழி மீதும்  தமிழர்கள் மீதும்  அவர் கொண்டிருந்த தொடர்புக்கு சாட்சியாகும்.

  தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டுமல்ல தமிழைத்  தாய்மொழியாகக் கொண்டாலும் பழக்கத்தில்  மொழிப்பயன்பாடு  இல்லாதவர்கள் வாழ்வதையும் சுட்டிக்காட்டி  பல்வேறுபட்ட தமிழர்களுடைய நிலையையும்  வணிகத்தொடர்பையும் ஒவ்வொரு ஊடக உரையாடல்களிலும்  பெருமையோடு பகிர்ந்திருக்கிறார்.

வணிகத்தில் தமிழரே முதன்மையானவர்கள் என்பதை மணிமேகலை காப்பியத்தின் மூலம் தெரிவிக்கிறார்.

     முதன்முதலாக மருத நில நாகரிகத்தை உலக நாடுகளில் கொண்டு சேர்த்தவர்கள் தமிழர்கள்.அதற்கு குறிப்பாக தேவேந்திரக் குல வேளாளர்கள் வரலாற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார்.அவர்களின் மேம்பாட்டிற்கு அந்த இனத்தினரோடு  சேர்ந்து பல பணிகளைச்செய்திருக்கிறார்.விவசாயம் தேவேந்திர குல வேளாளர்களின் அடிப்படை தொழில் என்பதால் அவர்கள் உலகம் முழுவதும் அதைக்கொண்டு சேர்த்திருக்கிறார்கள் எனச்சொல்கிறார்.பழவேற்காடு தென்பெண்ணை ஆறு பாலாறு போன்ற இடங்களில் ஆய்வு  இன்னும் நடத்தப்பட வேண்டும் என்பதை முன்மொழிந்திருக்கிறார் .

  17 ஆற்றங்கரை நாகரிகங்கள் ஆய்விற்கு உட்பட்டு இருக்கின்றன என்றாலும் கூட உலக நாகரிகத்திற்கான தொன்மம் தமிழிலிருந்துதான் தொடங்குகிறது என்றும் அவர் உறுதிபடச்சொல்லுகிறார். 

2015 இல் நடந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு பெரிய மாற்றத்தை , பண்பாட்டு மாற்றத்தைத் தமிழரின்  அடையாளத்தை வெகுவாக எடுத்துக்காட்டும் என்றாலும் கூட அவை இன்னும் வெளிவராத சூழலில்,  குமரிக் கடலில் ஆய்வு செய்ததன் தொடர்ச்சியாக அவர் பல கருத்துக்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

    குமரிக்கடலில் மூழ்கிய நிலங்கள் , மடகாஸ்கர் வரை தமிழர்கள் வாழ்ந்த நிலம் ,கச்சத்தீவு போன்ற பகுதிகளில் உறுதி செய்வதற்கான தரவுகள் எனப் பல்வேறு செய்திகள் புதியனவாக இருக்கின்றன .சான்றாக அவர் உளி பானை ரசவாதம் வேதியியல் தாவரவியல் பற்றிய சிந்தனைகளில்  கடலுக்குள் வாழ்ந்த அந்த பகுதிகளிலும்  நிறைய சான்றுகளைக் காட்டுகின்றார். தமிழர்கள்  வாழ்ந்த நிலங்கள் கடலுக்குள் இருக்கின்றன என்றும் சொல்லுகின்றார் .

    பல்வேறு திறம்வாய்ந்த மக்கள் வணிக நுட்பம் தெரிந்த மக்கள்  திரைகடல் ஓடி திரவியம் தேடிய இந்த தமிழர்கள் மிகச்சிறந்த திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது வரலாறு என அவர் சுட்டிக் காட்டுகிறார் . தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் தேடுவதைக் காட்டிலும் கடலாய்வை முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார் .குமரிக்கண்டத்தை மீட்டவர்கள் கடல் மீன் பிடிப்பவர்கள் என்று ஆழமாகக் கூறுகிறார் .அவர்களைத் திரைமீளர் என்று  சொல்கிறார். இந்தச் சொல்லை அதிகமாகப் பயன்படுத்திய ஓர் ஆய்வாளராக ஒரிசா பாலு அறியப்படுகிறார் .தமிழர்கள் பெயராகவோ அல்லது உறவுகளின் பெயராகவோ பல நாடுகளில் வரலாறாகி இருக்கிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் சுட்டிக்காட்டுகிறார் .

   அறுபது வருட சுழற்சியில் தமிழ் வருடப்பெயர்கள் எங்கும் இல்லை என்பதைக் கவனப்படுத்துகிறார். தமிழ் மொழியோடு தொடர்புடையவர்களாகவும் தமிழ் வரலாற்றைக் கல்வெட்டுகளின் மூலமாக நாம் தமிழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவிலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றாலும் கூட ஏன்  60 வருட பெயர்கள் சுழற்சி முறையில் தமிழ்ப் பெயராக இல்லை என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுகிறார். 

அதனால் அவருடைய கோட்பாடு என்பது  தமிழ் மொழியினுடைய நிலை என்ன என்பதை உணரச் செய்தல் ,தமிழ் வரலாறு பண்பாடு அறியச்செய்தல், உலகம் முழுவதுமாக ஏன் தமிழர்கள் சென்றார்கள்?  வணிகத்தை, தமிழைக்கொண்டு சென்றவர்கள் தமிழர்களாக இருக்கும்போது ஏன் தமிழ் மொழி பின்னுக்குத்தள்ளப்படுகிறது?. அவர்களுக்குத் தான் வணிக நுண்ணறிவு அதிகமாக இருக்கிறது என்ற செய்தியைச் சொல்லி  மீண்டும் ஒரு மீள்கட்டமைப்பை அதாவது தமிழர் பண்பாட்டை உணர்தலை  மீள் கட்டமைப்புச் செய்தலை ஆய்வாளர்களுக்குச் சொல்லிச்சென்றிருக்கிறார். 

  உலக நாடுகளில் தமிழ் இன்றைக்குப் புழக்கத்தில் இருக்கின்றது என்றாலும் கூட சமஸ்கிருதம் இந்தியாவில் அதிகமாக வழிபாட்டு மொழியாக மாறி தமிழ் மொழியைச்சிதைத்து தமிழின்  முதன்மையை அதனுடைய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்தை முன்னெடுத்த ஆரியர்களுடைய வருகையையும்   சூழ்ச்சியை யும் அவர் சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தார். 

    தமிழர் பண்பாட்டை திரை மீளர்கள் மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அவர் தென்புலத்தார் என்ற ஒரு குழுமத்தையும் அமைத்தார். ஐயை என்ற ஒரு  குழுமத்தை அமைத்து அதன்மூலமாக  உலக நாடுகளில் இருக்கக்கூடிய பெண்களை ஒன்றிணைத்திருக்கிறார் .

அந்தக் குழுவில் இருக்கக்கூடிய பெண்கள் அதிகம் படித்தவர்களாக மிகப்பெரிய பணியில் இருப்பவர்களாக மிகப்பெரிய தொழில் அதிபர்களாக கட்டிடக்கலை நுண்ணியல்வாதியாக பேராசிரியர்களாக ஆய்வாளர்களாக படைப்பாளர்களாக இருக்கிறார்கள் என்றாலும் கூட வீட்டில் இருந்து கொண்டு சமையல் செய்யக்கூடிய குடும்பத்தைப் பராமரிக்கும் பெண்களையும் கூட அவர் ஊக்கப்படுத்தி அவர்களை எழுத வைத்திருக்கிறார் .அவர்களுடைய சிறு குறு தொழில்நுட்ப அறிவைக் கொண்டு அவர்களை ஒரு தொழில் முனைவோராக மாற்றி இருக்கிறார் .

இன்றைக்கு அந்த  குழுவின் மூலமாக அவர் விட்டுச் சென்றிருக்கக் கூடிய உறவுகள் என்று பார்த்தால் ஏறத்தாழ 174 நாடுகளிலிருந்து பெண்கள் அந்த குழுவில் இணைந்து இருக்கிறார்கள் .ஒரே இடத்தில் இருந்து கொண்டு உலகம் முழுக்க இருக்கக்கூடிய தமிழர்களை , தமிழச்சிகளை ஒன்றாக இணைத்த பெருமை திரு ஒரிசா பாலு அவர்களுக்கு இருக்கின்றது .

      எனக்கும் திரு ஒரிசா பாலு அவர்களுக்குமான தொடர்பு என்பது எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நான்  பேராசிரியராக இருந்த பொழுது ஒரு கருத்தரங்கத்திற்கு  அழைத்து அவரைச் சிறப்பு செய்தேன். அப்பொழுது அவர் தன்னுடைய கடல் ஆய்வு குமரிக்கண்ட ஆய்வைப் பற்றி மிக விரிவாகப் பேசினார் .மருத்துவத்திலும் அவருக்கு ஆழமான அறிவு இருப்பதையும் சுட்டிச் சென்றார் .அந்த அறிமுகம் பிறகு அவருடைய குடும்பத்தினரைச் சந்தித்து ப்பேசி உரையாடி மகிழ பல தருணங்களை வழங்கியது.

        புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து அவர் வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு அவரை நான் சென்று சந்தித்தேன்.

 அந்த சந்திப்பில் மணிமேகலை ஆய்வில் குறிப்பாக கடைசி நான்கு காதைகளை' அக்கா அரங்க மல்லிகா !நீங்கள் தான் அதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்'  என்ற ஒரு வேண்டுகோளை வைத்தார். நோய்வாய் பட்டு இருந்தாலும் கூட  பேச முடியாமல்  பேசினார்.

ஆனாலும்  சோர்வாக இருந்த அவர் என்னைப் பார்த்ததும்  ஏறத்தாழ 2 மணி நேரம் மணிமேகலை பற்றியும் மணிமேகலை எந்தெந்த நாடுகளில் பயணப்பட்டு இருக்கிறாள், இலங்கைக்கும் தமிழுக்குமான தொடர்பு என்ன ,மணிமேகலை காப்பியத்தின் மூலமாக மணிமேகலை கடலில் நீந்தி சென்ற முதல் பெண் என்றெல்லாம் விரிவாகப்பேசினார்.

 பௌத்த தத்துவ மரபு தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதுமாக இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்று சொன்னாலும் கூட இந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் மணிமேகலைக்கும் என்ன தொடர்பு என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதை என்னிடம் அவர் குறிப்புகளின் மூலமாக ஒரு பெரிய உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அதை நான் அடுத்த ஆய்வு நூலாக எழுத  இருக்கின்றேன்.

 ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சரியாக அவருக்கு மருத்துவச்சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதை மிகுந்த வருத்தங்களுடன் பதிவு செய்தார்..

அன்றைக்கு இருந்த  தமிழக அரசின் செயலாளருக்கு  நான் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் .அதில் மிகச்சிறந்த கடல் ஆய்வாளர் குமரிக்கண்ட ஆய்வாளர் தமிழ் மொழி குறித்த ஆய்வுகளில் மாபெரும் பங்களிப்புச்செய்தவர் திரு .ஒரிசா பாலு அவர்கள். 

அரசு  அவருக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன் .அவரும் அதற்கு இசைவு தெரிவித்திருந்தார். என்றாலும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஓமாந்தூரார் மருத்துவமனையில் அவரைத் தரையில் அமர வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை மிகுந்த வருத்தத்தோடு பாலு அவர்கள் என்னிடம் பதிவு செய்ததைக்கேட்டுக் கலங்கினேன்.

  தமிழ் ஆய்வுக்காக கடலில் மூழ்கி கடலாய்வு செய்த ஒரு மாபெரும் தமிழருக்குத் தமிழக அரசு உரிய மரியாதை செய்திருக்க வேண்டும் என்று மிகுந்த வேதனையோடு நான் இங்கே பதிவு செய்கிறேன். 

         1966 முதல் தமிழ் மாநாடு நடத்திய பெருமையைத் தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றாக பார்க்கக்கூடிய ஒரிசா பாலு அவர்கள் 2010 வரையில்  உலகச் செம்மொழி மாநாடு வரையில் நடந்த  தமிழ் மாநாடுகளைச் சுட்டிக்காட்டி உலக நாடுகளில் வாழும் தமிழர்களுக்காக ஒன்றைத்  தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைத்திருக்கிறார் . அதில் பன்னாட்டுத்தமிழர்களுக்கான ஒரு பதிவேடு அவசியம் எனச்சுட்டிக்காட்டுகிறார்.

           எப்படி கேட்வே டெல்லியில் இருக்கிறதோ, எப்படி  இந்தியா கேட்  மும்பையில் இருக்கிறதோ கேட் வே ஆஃப் வேர்ல்ட்  ஒன்று குமரிக்கடல் அருகே அமைக்கவேண்டும்  என்று அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அரசின் கவனத்திற்கு இங்கே நான் இதைப் பதிவுசெய்கிறேன்.

கட்டுரையாளர்:
பேரா.அரங்கமல்லிகா
தமிழ்த்துறைத் தலைவர்(ப.நி)
எத்திராஜ் மகளிர் கல்லூரி ,சென்னை

திங்கள், 26 ஜூன், 2023

திராவிடம்: தமிழர் அடையாளத்தை மறைக்கும் திரை - ம.பொ.சிவஞானம்


வடமொழியின்பால் தீராப்பகைமை கொண்டவர் போல் நடிக்கும் இவர்கள் தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்கின்றனர். ‘த்ராவிடம்’ என்பது வடமொழிச் சொல்லாகும். இதோ, ரெவரண்டு ராபர்ட் கால்டுவெல் டி.டி.எல்.எல்.டி. கூறுவதைக் கேளுங்கள்:

“வடமொழியில் தென்னிந்திய மொழியினத்தைக் குறிப்பதற்குப் பண்டை நாளில் வழங்கப்பட்டதாகத் தெரியக்கிடப்பது ‘ஆந்திர- திராவிட பாஷா’ என்ற சொற்றொடரேயாம். ‘தெலுங்கு - தமிழ்மொழி’ என்பது அச்சொல் தொடரால் போந்த பொருள்… சிறந்த வடமொழி வாணரான குமாரில பட்டர் என்பார் இச்சொற்றொடரை முதன்முதலாக எடுத்தாண்டுள்ளார்.”

”மனு ஸ்மிருதியில் ‘திராவிடம்’ என்ற சொல் ஏனைய தென்னிந்திய மக்கள் அனைவரையும் குறித்து நிற்பது… பெறப்படும். இனி, ஸ்மிருதி காலத்திற்குப் பின்னர் வந்த மொழியாராய்ச்சியாளர்களும் ‘திராவிடம்’ என்ற சொல்லைத் தென்னாட்டு மொழியினத்தைக் குறிப்பதற்கே எடுத்தாண்டுள்ளனர்.” “பாகத மொழித் தொகுதியில் ‘திராவிடி’ என்னும் பெயரால் திராவிட மொழியினம் சேர்க்கப்பட்டுள்ளது.”

“வடமொழி மூல நூல்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிட்ட ஜே.மூர் என்னும் பேராசிரியர், “சமஸ்கிருத மூலங்கள்” என்ற நூலில் எடுத்துக் காட்டியுள்ள மேற்கோள் ஒன்றில் ‘திராவிடம்’ என்பது ‘விபாஷை’ (சிறுபாகதம்) என்று வடமொழி வாணர் ஒருவரால் குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வடமொழி வாணர் திராவிடர்களுடைய மொழி ‘திராவிடி’ என்று கூறியுள்ளார்.” “பண்டை நாட்களில் வட நாட்டவரால் ‘திராவிட மொழிகள்’ என்று குறிக்கப்பட்டது.”

இவை, ‘கால்டுவெல் ஒப்பிலக்கணம்’ என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவையாகும். அந்நூலை, பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மேற்காட்டிய சான்றுகளால் ‘திராவிடம்’ என்னும் சொல் சங்க இலக்கியங்களிலோ தனித்தமிழ் நூல்களிலோ இல்லாத ஒன்றென்பதும், வடமொழியாளர் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நிலத்துக்கும் வைத்த இரவல் பெயர் என்பதும் நன்கு விளங்கும்.  

திராவிடர் என்பது மொழி அல்லது இன ஆராய்ச்சியாளர் தென்னிந்தியரைக் குறிப்பிடும் பொதுச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. அத்துறையிலும் முதன் முதலாக அந்தச் சொல்லைப் பயன்படுத்தியோர் அந்நியரான ஆங்கிலேயராகவே இருந்தனர். அவர்களும், ‘ஆரியர்’, ‘திராவிடர்’ என்ற இனப்பாகுபாடு இன்று நாட்டில் நடைமுறையில் இல்லையென்பதை எடுத்துக் காட்டி தென்னிந்தியரை எச்சரிக்கத் தவறவில்லை.

“சென்னை மாகாணத்தில் உள்ளவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றோ, அன்றி, வங்காளத்தில் உள்ளவர்களெல்லாம் மங்கோலியத் திராவிடர்கள் என்றோ நூல் பிடித்ததுபோல் பிரித்துக் கூறிவிடத் துணிதல் அறியாமையேயாகும்.

“ஆரியர், திராவிடர் என்பன போன்ற இனப்பிரிவு வகை, ஆராய்ச்சிக் கருவியாகக் கொண்ட பொதுவான அளவுகோலேயாகும்.”

இது, கிரீயர்ஸன் என்ற ஆராய்ச்சி வல்லுநர் “மொழி ஆராய்ச்சி” நூலில் கூறியிருப்பதாகும். இவ்வாறு அறிஞர்களெல்லாம் எச்சரித்தும், திராவிடர் என்னுஞ் சொல், தமிழர் என்னும் இனப்பெயருக்கு எதிராகத் திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டது. இந்தத் திராவிட மாயை தமிழரைத்தான் அதிகமாகப் பீடித்திருந்தது. ஆந்திரத்திலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ எந்த ஒரு அமைப்பும் திராவிடர் என்ற பெயரைத் தாங்கிக் கொள்ளவில்லை.

ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக் காலத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதித் திராவிடர்கள் எனப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, சுத்தத் தமிழர்களான அவர்களிடந்தான் அந்தப் பெயர் நிலைத்து விட்டது. ஆனால், ஆந்திராவிலுள்ள தாழ்த்தப்பட்டோர் நிலை வேறு. அவர்கள் ஆதி ஆந்திரர் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆம்; ஆந்திரர் என்ற இனப்பெயருக்கு எதிராக அவர்கள் ‘திராவிடர்’ என்ற சொல்லை ஏற்கவில்லை.

தமிழ்நாட்டில் ‘திராவிடர்’ என்ற சொல்லை நீண்ட நெடுங்காலமாக வற்புறுத்தி வந்தவர்களே பின்னர் அதைச் சந்தடியின்றிக் கைவிட்டனர். தற்போது, தமிழர் -மலையாளி என்ற இனப்பிரிவுகளைப் போர்க் கருவிகளாகப் பயன்படுத்தவும் முன்வந்து விட்டனர். ஆனால், சுமார் அரை நூற்றாண்டு காலம் திராவிடர் அல்லது பிராமணர் அல்லாதார் என்ற சொற்களைத் தமிழர் என்ற பெயருக்கு மாற்றாகப் பயன்படுத்தியதால், தமிழினத்தாருக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவது அவ்வளவு எளிதாக இல்லை என்பதைப் பார்க்கிறோம்.

1916இல் ஜஸ்டிஸ் கட்சி பிறந்த போது, அதனுடன் சேர்ந்து தமிழ் - தெலுங்கு - ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தனித்தனியே மூன்று நாளிதழ்கள் பிறந்தன. அவற்றின் பெயர்களைப் பார்ப்போம்: 

தமிழ் - ‘திராவிடன்’

தெலுங்கு - ‘ஆந்திரப் பிரகாசிகா’

ஆங்கிலம் - ‘ஜஸ்டிஸ்’ 

இந்த மூன்று நாளேடுகளிலே தெலுங்கு மொழி ஏடு ‘ஆந்திர’ என்ற இனப்பெயரைப் பெற்றிருக்க, தமிழ் ஏடு மட்டும் தமிழ் - தமிழர் - தமிழகம் என்ற பெயர்களை மறைக்கும் திரையாகத் ‘திராவிடன்’ என்ற பெயரைப் பெற்றதனை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இதே காலத்தில் ஆந்திர காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து பிறந்த மற்றொரு தெலுங்கு நாளேடுகூட ‘ஆந்திர பத்திரிகா’ என்று பெயர் பெற்றது. வேறு தேசியப் பெயர் எதனையும் பெறவில்லை. எங்கிருந்தாலும் ஆந்திரர் ஆந்திரர்தானே!

அன்று சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாக இருந்து, பின்னர் 1956இல் கேரளத்தில் இணைக்கப்பட்ட மலபார் மாவட்டத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகள் “கேரள சஞ்சாரி”, “கேரளோதயம்”, “மலையாளி” என்ற பெயர்களைப் பெற்றன. ஆம்; கேரளப் பிரதேசத்தில் வாழும் மலையாள மொழியினர் “திராவிடர்” என்ற பெயரை ஏற்காமல், தங்கள் மாநிலத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் பத்திரிகைகளை நடத்தினர் என்பது இதனால் புலப்படுகின்றது.

இலக்கிய வாட்டாரத்தினரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த “திராவிடர் ” என்னும் சொல்லுக்கு, அரசியல் வண்ணம் பூசப்பட்ட வரலாற்றை இங்கு சுருக்கமாகவேனும் விவரிக்க வேண்டியது அவசியமாகிறது.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி 1890இல் தமிழ் நாட்டளவில் “பறையர் மகாஜன சபா” என்னும் பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பெற்றது. “பறையர்” என்னும் சொல் தமிழ்நாட்டில் மிகவும் இழிந்த பொருளைக் கொண்டுவிட்டதால், 1910ஆம் ஆண்டுக்குப் பின்னர் “பறையர் மகாஜன சபை”யின் பெயர் “ஆதித் திராவிடர் மகாஜனசபை” என்று மாற்றப்பெற்றது. 

“திராவிடர் ” என்னும் சொல்லை, தென்னிந்தியர் அனைவரையுமே குறிக்கும் பொதுப் பெயராக இன ஆராய்ச்சியாளர் பயன்படுத்தி வந்ததால், தென்னிந்தியாவின் பழங்குடி மக்கள் என்பதனைக் குறிக்கும் வகையில் “ஆதி” என்னும் அடைமொழியும் திராவிடர் என்பதற்கு முன் சேர்த்துக் கொள்ளப்பட்டது .

இந்த மகாசபை 1918இல் சென்னை மாகாண அரசுக்குக் கொடுத்த கோரிக்கையிலே, மக்கள் கணக்கெடுப்பிலும் மற்றும் அரசு தஸ்தாவேஜூகளிலும் “பறையர்”, “பஞ்சமர்” என்னும் பெயர்களுக்குப் பதிலாக “ஆதித் திராவிடர்” என்னும் பெயர் சேர்க்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தப்பெற்றது.

ஆனால், அப்போதைய சென்சஸ் அதிகாரி ஈட்ஸ் என்பவர் இதனை ஏற்கவில்லை. ஆந்திரத்திலும், கன்னடத்திலும் “ஆதித் திராவிடர்” என்னும் பெயரை ஏற்க, தாழ்த்தப்பட்டோரில் எவரும் முன்வராத நிலையை இந்த அதிகாரி சுட்டிக் காட்டினார். ஆனால், ஆதித் திராவிடர் மகாசபை, பெயர் மாற்றக் கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியிலே பொதுக் கூட்டங்கள் போட்டு, தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது. ஜஸ்டிஸ் கட்சியினரும் அந்த மகாசபைக்குஉதவியாக இருந்தனர்.

அக்கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான டாக்டர் சி.நடேச முதலியார் ஆதித் திராவிட மகாஜன சபையின் கோரிக்கையை ஏற்குமாறு அரசினருக்குப் பரிந்துரை வழங்கும் தீர்மானம் ஒன்றை சென்னை மாநகராட்சிக் கூட்டம் ஒன்றிலே முன்மொழிந்து, அது நிறைவேறுமாறு செய்தார். 1921ஆம் ஆண்டுக்குரிய சென்சஸ் தயாரிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டளவில் பரவலாகச் சுமார் 15025 பேர் தங்களை ஆதித் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டு, அது குடிமதிப்பீட்டுக் கணக்கேட்டில் ஏறும்படி செய்தனர். 1921ஆம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி, சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிகை 63,70,074 ஆகும்.

இவர்களில் சுமார் பதினையாயிரம் பேர்தான் ஆதித் திராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர். இது தமிழகத் தாழ்த்தப்பட்டோரும் திராவிடர் என்னும் பெயரை விரும்பவில்லை என்பதைப் புலப்படுத்துகிறது. சென்னை மாகாணத்தின் இதரப் பகுதிகளில் தங்களை ஆதித் திராவிடர் என்று பதிவு செய்துகொள்ள எவரும் முன்வரவில்லை. 

1922இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் ஆதித் திராவிடர் என்னும் பெயரை அதிகாரப்பூர்வமாக ஏற்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று ஜஸ்டிஸ் கட்சியினரால் பிரரேபிக்கப்பட்டு நிறைவேற்றி வைக்கப்பட்டது. அதே ஆண்டில் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, “பஞ்மர்” அல்லது “பறையர்” என்பதற்குப் பதிலாக “ஆதித் திராவிடர்” என்னும் பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் இந்தப் பெயர் மாற்றம் தமிழ் மாவட்டங்களில்தான் அமுலில் இருக்குமென்றும் அரசு தெளிவுபடுத்தியது. 

மற்றபடி, தெலுங்கு மாவட்டங்களில் “ஆதி ஆந்திரர்” என்றும், கன்னட மாவட்டங்களில் “ஆதி கன்னடர்” என்றும் வழங்கி வரும் என்பதாகவும் அரசு உறுதி கூறியது. ஆம், அந்தப் பிரதேசங்களில் மொழிப்பற்றும் இனப்பற்றும் உடைய தாழ்த்தப்பட்ட மக்கள் “திராவிடர்” என்னும் பொதுப் பெயரை ஏற்க உறுதியாக மறுத்து விட்டனர். இந்த இனப்பற்றும் மொழிப்பற்றும் தமிழ் நாட்டினருக்கும் இருந்திருக்குமானால், இங்குள்ள தாழ்த்தப்பட்டோருக்கு “ஆதித் தமிழர்” என்ற பெயர் அன்றே தரப்பட்டிருக்கும்.

ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய நாள் தொட்டே தமிழர் என்னும் தன்மானப் பெயரை அழிக்கும் திரையாக - இல்லை, செயலாகவே “திராவிடர்” என்னும் போலிப் பெயரைப் பயன்படுத்தி வந்தனர் தமிழரிலே ஒரு சாரார். நல்ல வேளையாக 1956க்குப் பின் மனமாற்றமடைந்து தமிழ் வழங்கும் நிலப்பரப்பின் மீது “திராவிட நாடு” என்னும் பெயரைத் திணிக்க முயலாமல், “தமிழ் நாடு” என்னும் முயற்சியிலே மன நிறைவோடு பங்கு கொண்டனர்.

தமிழர் என்பதனை மறைக்கும் திரையாக - மறுக்கும் சொல்லாகத் திராவிடம் என்பது 1916 முதல் 1966 வரை சரியாக அரை நூற்றாண்டுக் காலம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்னமும் தமிழரிடையே செல்வாக்குப் பெற்றுள்ள இருவேறு கழகங்களின் பெயரிலே திராவிடம் ஒட்டிக் கொண்டிருக்கக் காண்கிறோம். 

திராவிடர் என்பது தென்னிந்தியர் - அவர்களிலும் பிராமணரல்லாதார் அனைவருக்குமான பொதுப்பெயர் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுவிட்ட பிறமொழியினருக்கும் சுத்தத் தமிழருக்குமான பொதுப்பெயராகவே அது பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால்தான் தமிழரல்லாதார் தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் தலைமை பெற முடிந்தது.

பார்வை நூல்கள்:

தமிழும் கலப்படமும், ம.பொ.சிவஞானம், முதல் பதிப்பு, 2014, கங்காராணி பதிப்பகம், சென்னை.

தமிழகத்தில் பிறமொழியினர், ம.பொ.சிவஞானம், முதல் பதிப்பு, 2011, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை. 

நன்றி: tamilthesiyan.wordpress.com

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,

தொகுப்பாசிரியர்: மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை,

முதல் பதிப்பு: டிசம்பர் 2022,

பக்கங்கள்: 128,

விலை: உரூ 150/-

*

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:

செந்தில் வரதவேல்,

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506




வியாழன், 11 மே, 2023

கல்விக்குள் நாசிசம்-பாசிசம்-காவியிசம் : மரு.தமிழ் சிலம்பரசன்


தேசியவாதக் கல்விக்கொள்கை 2019இன் அடிப்படையே இனத்தூய்மைவாதம் (racism purity) கொண்டதுதான். 

ஹிட்லர் நாசிசத்தைப் பரப்புவதற்குக் கையில் எடுத்தது, பாடத்திட்டத்தின் (curriculum) வழியாகத் தங்களின் கொள்கைக்குத் தகுந்தாற்போல் குடிமகனை (citizenry) உருவாக்குவதற்கு எடுத்துக்கொண்டது, பாடத்திட்டத்தின் வழியாக நாசிசத்தைப் பரப்புவதுதான். 

முசோலினியும் தனது பாசிசக் கொள்கைகளைப் பரப்புவதற்கு - பாசிசத்தை விரும்புகிற குடிமகன்களை உருவாக்குவதற்கு - அதன் வழியாகப் பாசிச வேர்களைப் பரப்புவதற்கு நம்பியது பாடத்திட்டத்தில் மாற்றம்தான்..

காவியிசமும் அதைத்தான் செய்கிறது. பாடத்திட்டத்தின் வழியாகவே தங்களது இந்துத்துவா கொள்கையைப் பரப்புவதற்கு அல்லது இந்துத்துவா கொள்கை கொண்ட குடிமகன்களை உருவாக்குவதற்கு, தேசியவாதக் கல்விக்கொள்கை -2019 உருவாக்கியது. அதில் மும்மொழிக்கொள்கை, கலை, தாராளமான கல்விக்கொள்கை என்று எல்லாம் வரையறுக்கப்பட்டதற்கான அடிப்படையே இந்துத்துவாதான். 

இந்தக் காவியிசம் கல்விக்கொள்கையின் வரைவுத் திட்டத்தின் தலைவராக இருந்தவர் கஸ்தூரி ரங்கன். ரங்கன் ஓர் விஞ்ஞானி, விஞ்ஞானிக்கும் கல்விக்கொள்கைக்கும் என்ன தொடர்பு? என்கிற அடிப்படையான கேள்வியே நாம் இக்கல்விக்கொள்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

தேசியவாதக் கல்விக்கொள்கை பற்றி தமிழ்நாட்டில் சரியான விவாதம் நடத்தப்படவில்லை என்பதே என்னுடைய வருத்தம். 

கல்விச் செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியியல் சார்ந்த அறிஞர்கள் (Education policy makers) பேசவேண்டியவற்றை, அதற்குச் சற்றும் தொடர்பு இல்லாத நபர்களை வைத்து இன்றையளவும் தமிழ்நாட்டு ஊடகங்கள் விவாதம் செய்தது அல்லது செய்துகொண்டு இருக்கிறது என்பது ஒருபுறம் வருத்தமாக இருக்கிறது. 

அப்போது, இதுவரையில் இருந்த அடிப்படைக் கல்விக்கொள்கை என்ன என்று நீங்கள் கேட்கலாம். அதை வகுத்தவரே சொன்ன வார்த்தைகள் இவை. 

“நாம் கொடுக்கும் கல்வியின் மூலம் இவர்கள் ரத்தத்தாலும், நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள். சிந்தனை, ரசனை மற்றும் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள் “ - மெக்காலே.

இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டமே இதன் அடிப்படையிலானதுதான். 

மெக்காலேவின் கல்விமுறைதான் அனைவருக்குமான கல்வியைக்கொடுத்தது என்று வாதடுபவர்களும் உண்டு.

இந்தியாவின் குறுக்கே நெடுக்கே கல்வியின் அடிப்படையிலேயே பயணம் செய்து இருக்கிறேன். ஓர் சிறியகிராமத்தில்கூட சமஸ்கிருத மொழி பேசுபவர்களை நான் கண்டதில்லை. இந்தியா இப்படி இருக்கையில், பாமர மக்களினால் பேசப்படாத ஒரு மொழியைக் கற்கச் சொல்வதை மும்மொழிக் கொள்கையாக வரையறுத்து இருக்கிறார் கஸ்தூரிரங்கன். 

சரி, தேசியவாதக் கொள்கைக்கு (nationalistic education) மாற்றுதான் என்ன? அதுதான் சமூகவாதக் கல்விக்கொள்கை(society driven education).

இந்தியாவின் கல்வியில் மேம்பட்டவராகக் கருதப்படும் அறிவாசன் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், கல்வியியலில் தனது ஆசானாக அறிவித்தது ஜான் துவே (john dewey) அவர்களைத்தான் . 

ஜான், சமூகவாதக் கல்வியைப் பெரிதும் நேசித்தவர். 

“education is a social process; education is growth, education is not preparation for life, education is itself life”

 - jhone Dewey 

உலக அறிவியல் மையத்தின் வளர்ச்சியைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்கா, தனது மாவட்டங்களைக் கல்வியில் உயர்ந்த மாவட்டங்களாகப் ( education district) பிரிக்கிறது. ஆனால், இந்தியாவில் மாவட்டமாகப் பிரிப்பது வருவாய் மாவட்ட முறையில் (Revenue district ) பிரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் higher society education draft committee என்று எதுவுமே கிடையாது. அதற்குக் காரணம் சமூகவாதக் கல்விக்கொள்கையை வித்திட்ட ஜான் துவேன் கல்விப் புரட்சி எனலாம். 

பின்லாந்து, உலகக் கல்வியில் முதலிடம். காரணம், அங்கே கல்விக்கொள்கையை நிர்ணயிப்பது அந்தமாவட்டத்தைச் சார்ந்த மக்கள்தான், அதுதான் சமூகவாதக் கல்விக்கொள்கை.

தேசியவாதக் கல்விக்கொள்கை 2019, குலக்கல்வி வாழ்வியலையும் அதன் பண்பாட்டு மீட்டெடுப்புகளையும், அதன் மொழியுயையும் மக்களிடம் புகுத்துவதே இக்கல்விக்கொள்கையின் நோக்கம்.  

உலகத்தில் எந்தவொரு கல்வி நிறுவனங்களிலும் இல்லாத ஒரு வார்த்தை, இந்திய கல்வி நிறுவனங்களில் விளம்பரங்களில் உண்டு “100% placements”. உலகத்தின் முதன்மையான பல்கலைக்கழங்களில்கூட இப்படியொரு விளம்பரம் இருக்காது. காரணம், கல்வியை அவர்கள் விற்பனைப் பொருளாகப் பார்ப்பதன் விளைவுதான் 100% placements. கல்வி வேலைக்கானது இல்லை, கல்வி சமூகத்திற்கானதுதான்.

ஆனால், இந்தியாவில் அது வியாபாரமாக மாறியது. அதற்குக் காரணம் உலகச் சந்தை. மனிதர்களாலும் கல்வி வணிகர்களாலும் இந்தக்கொடுமை நடந்தேறியது. இவர்களின் கல்விக்கொள்கை அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும்.

மனிதனை ஒரு விற்பனையாளராக மாற்றும் முறை தேசியவாதக் கல்விமுறை. ஆனால், சமூகவாதக் கல்விக்கொள்கை அறிவையும், அதனை வைத்துப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்வது, அறிவுப்புரட்சியை உருவாக்குவது. 

பரதநாட்டியத்தைக் கலையாக மாற்றியதும், ஆனால் கரகாட்டத்தை இன்னும் கலையாக மாற்றாமல் போனதற்குக் காரணம், சமூகவாதக் கல்வியை பின்பற்ற மறந்ததுதான்.

தேசியவாதக் கல்விக்கொள்கை அல்ல; காவியிசத்திற்கான கல்விக்கொள்கை. National education policy - 2019 

தேசியவாதக் கல்விக்கொள்கை என்ன செய்ய நினைக்கிறதோ, அதைத்தான் தமிழ்நாட்டு கல்விக்கொள்கையும் செய்ய நினைக்கிறதோ என்கிற அச்சம் முனைவர் ஐயா ஜவகர்நேசன் ஐயா விலகலிருந்து தெரிகிறது.. 

மிகுந்த கவனத்தோடு கையாளுவோம் நமது மாணவர்களின் எதிர்காலம் ! 

குறிப்பு: சமூகவாதக்கல்வி கொள்கைப்பற்றி முனைவர் ஜவகர் நேசன் எழுதிய “A response to draft education policy 2019 “ In search of education nationalistic education vs social driven education எனகிற புத்தகம் உண்மையில் கல்வியைப்பற்றிய மாற்றுச் சிந்தனை நமக்குத் தரக்கூடியது.

இந்தியா முழுவதும் ஒற்றைச் சிந்தனையோடு இருந்தபோது, மாற்றாக இதுதான் இந்தியாவின் கல்விமுறையாக இருக்கவேண்டுமென்று எழுதிய முனைவர் ஜவகர் நேசன் அவர்களை வசைப்பாடியுள்ளது மனது ஏற்க மறுக்கிறது..  

     மருத்துவர் தமிழ் சிலம்பரசன் அவர்களது பதிவிலிருந்து...

புதன், 8 பிப்ரவரி, 2023

கடலுக்குள் கட்டுமானங்கள்: சூழலியல் - சமூகவியல் பார்வை! : வறீதையா கான்ஸ்தந்தின்.


சென்னைத் துறைமுகம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடல் கட்டுமானங்கள் கடலியல் சூழலிலும், கடற்கரை பரப்புகளிலும், மீனவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய  விளைவுகள் என்ன..என்பதையெல்லாம் ஆராயும் போது, அதிர்ச்சிகரமான சில உண்மைகள் தெரிகின்றன” என்கிறார் கடல் சூழலியல் ஆய்வாளர் வறீதையா கான்ஸ்தந்தின்!

உலகக் கடல்கள் ஒரு பேரியக்கம். நகர்ந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டம். காற்று, அலை, ஓதம், நீரோட்டம், மேல்நோக்கிய பெயர்வு (upwelling) என்பதாக விரியும் இவ்வியக்கமே கடலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதன் பல்லுயிர்த் திரட்சிக்கும், அங்கிருந்து பெறுகிற மீன்வளத்துக்கும் இதுவே ஆதாரம். கரையில் நாம் பார்க்கிற கடல், பெருங்கடலல்ல, கடலின் குளம். குடா, வளைகுடா, கரைக்கடல் எனப் பலவாறாக நாம் அழைக்கும் இப்பகுதியில் அலையும் ஓதமும் தவிர, கரைக்கடல் நீரோட்டம் முக்கியமான பங்கு வகிக்கிறது.

பெருங்கடல் நீரோட்டங்களால் கொண்டு வரப்படும் மீன்கள் உள்ளிட்ட பல உயிரினங்கள் பருவம் தவறாமல் கரைக்கு வந்து சேர கரைக்கடல் / நெடுங்கரை நீரோட்டம் (Longshore current) அடிப்படையானது. அதன் ஒரு பகுதியாக மணல் நகர்வு நிகழ்கிறது. உலகின் 3,12,000 கிலோமீட்டர் கடற்கரைகளைத் தழுவிக்கிடக்கும் கரைக்கடலிலும் இந் நகர்வு ஊடறுப்பற்றும், சுழற்சியாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பருவம் தோறும் கரையில் நிகழும் மணல் குவிப்பும் மணல் அரிமானமும்  இந் நகர்வின் விளைவுகள்.

இப்படிக் கரையில் குவிகிற மணலின் ஒரு பகுதி, காற்றினால் நகர்த்தப்பட்டு, மணல் குன்றுகளாக மாறுகின்றன. அடிப்படையில், கரையோர மணல் பகிர்மான இயக்கத்தின் (coastal sand sharing system) அடிப்படைக் காரணி இந்த நெடுங்கரை நீரோட்டமே. மனிதக் குறுக்கீடு எழாத வரை கடற்கரை தன்னைப் பராமரித்துக் கொள்ளும். ஆனால், நெடுங்கரை நீரோட்டத்துக்குக் குறுக்காக ஒரு கட்டுமானத்தை அமைத்தால், அதன் இருபுறமும் உள்ள கடற்கரைப் பகுதிகள் சிதையத் தொடங்கும்.

தமிழ்நாட்டில் துறைமுகக் கட்டுமானங்களால் கடற்கரை விளிம்புகள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதைக் காலவாரியான செயற்கைக்கோள் தொலையுணரி வரைபடங்களில் தெளிவாய்ப் பார்க்கலாம். முக்கியமாக, கரைக்கடல் மணல் நகர்வில் நேர்ந்துள்ள பாரிய மாற்றங்கள்.

1908இல் சென்னைத் துறைமுகத்துக்காக அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர், மெரினா என்னும் செயற்கை மணல்வெளி உருவாகக் காரணமானது. ஆனால், துறைமுகத்துக்கு விலையாக வடக்கில் நிறையக் கடற்கரைகளைக் காவு கொடுக்க வேண்டியிருக்கிறது. மெரீனாவின் ஒரு பகுதி சமாதிகளால் நிரம்பிக் கொண்டிருப்பது கடல் சூழலியலுக்கு ஆரோக்கியமானதல்ல. தலைவர்கள் நம் மதிப்புக்குரியவர்கள் தான், சந்தேகமேயில்லை. அவர்கள் பெயரைச் சொல்லிக் கடற்கரைகளையும் கடலையும் காயப்படுத்த நமக்கு உரிமை இருக்கிறதா என்பது தான் கேள்வி. ஒரு காலத்தில் சூழலியல் புரிதல் இல்லாதிருந்தோம். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. கருணாநிதியின் சமாதிக்கு நேராக கடலுக்குள்ளே ஏறத்தாழ 360மீட்டர் தொலைவில் ஒரு பாதை உட்பட 8,452சதுரமீட்டர் பரப்பளவில் திட்டமிடப்படுவதாய்ச் சொல்கிறார்கள். நினைவுச் சின்னத்தின் அடித்தளம் கரைக் கடல் நீரோட்டத்தை மறித்து நிற்கும் கட்டுமானமாகும்.

சென்னை துறைமுகத்தால் உருவானதே மிகப் பெரிய மெரீனா கடற்கரை!

சென்னைத் துறைமுகம் தென்புறம் மெரினாக் கடற்கரையை உருவாக்கிவிட்டு, வடபுறத்துக் கடற்கரைகளை விழுங்கத் தொடங்கியது. எண்ணூர் காமராசர் துறைமுகமும் நிறுவப்பட்ட பிறகு, அதன் வடக்காக அமைந்துள்ள கிராமங்களை காணாமலாக்கிவிட்டுள்ளது.

மெரினா உருவாகுமுன், அக்கடற்கரைகள் எப்படியிருந்தன? மீனவர்களுக்கே உரிய தொழில்தள, வாழிடமாகவும் இருந்தவை அப்பகுதிகள். துறைமுகமும் மெரீனாவும் அக் குப்பங்களுக்குப் புதிய சிக்கல்களைக் கொணர்ந்தன.

எம்ஜிஆர் ஆட்சியில், 1985- ல் மெரீனாவை அழகுபடுத்துவதற்காக நொச்சிக்குப்பம் பகுதியில் இரவோடு இரவாக மீனவர்களின் படகுகள் அப்புறப்படுத்தப்பட்டபோது மீனவர்கள் போராடினர். சில உயிர்கள் பலியாயின. பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டது. 2003இல் மலேஷியத் தூதரகம் அமைக்க அப்பகுதியைக் கையகப்படுத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியும் மீனவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டன. பிறகொரு கெடுவிதியின் நாளில் விசாலமான அவர்களின் வாழிடங்கள் அடுக்ககங்களாய்ச் சுருக்கப்பட்டன. தையெழுச்சியின்போது நடுக்குப்பம் மீனவர்கள் காவல்துறையினரால் காரணமின்றித் தாக்கப்பட்டனர். பரம்பரைக் குற்றவாளிகள்போல் சித்திரிக்கப்பட்டனர்.

பட்டினப்பாக்கம் பகுதியில் ஏற்படும் கடுமையான கடலரிமானத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட மெரீனா லூப் ரோடு என்னும் அதிவிரைவுச் சாலை, நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையே கண்ணுக்குப் புலப்படாத மதில்சுவராய் நிற்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் அச் சாலை பொதுப் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுவிட்டது.

எழில்மிகு சென்னைக்கு கடற்குடிகளின் வாழ்நிலம் தேவைப்படுகிறது. விளைவாக கடற்குடிகள் சிறுத்து, காணாமலாகிக் கொண்டிருக்கிறார்கள். குரலெழுப்பத் திறனற்றுப்போன அவர்களுக்கான சமநீதி விலகியே நிற்கிறது.

பட்டினப்பாக்கமும் அதற்குத் தெற்கிலுள்ள கடற்கரைகளிலும் நேர்ந்துவரும் கடலரிமானமும் துறைமுகத்தின் தாக்கமே. கருணாநிதி நினைவுச்சின்னம் அமையும் தளத்துக்கு இருபுறமாகவும் கரைக்கடல் நீரோட்டம் திசைதிரும்பி மணல்நகர்வைத் தீவிரமாக்கும் அபாயமும் உண்டு

கடந்த 50 ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைகள் கடுமையான அரிமானத்துக்கு உள்ளானதற்குப் பல காரணங்கள் உண்டு: 1978இல் விழிஞம் மீன்பிடி துறைமுகம் நிறுவப்பட்ட போது நீரோடி முதல் குறும்பனை வரையுள்ள கடற்கரைகள் அழிவுக்குள்ளாயின. ஏறத்தாழ அதே காலத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் குமரிமுனையில் நிறுவிய போக்குவரத்துப் படகுத் துறையினால் கன்னியாகுமரி- சின்னமுட்டம் கடற்கரை பாதிக்கப்பட்டது. நீரோட்டத்துக்குச் செங்குத்தாக ஏராளமான தடுப்புச் சுவர்களை (vertical groynes) அமைத்தார்கள். 2010களில் அமைக்கப்பட்ட தேங்காய்ப் பட்டணம் துறைமுகத்தின் மேற்கு அலைத் தடுப்புச் சுவர் பூத்துறை, இரயுமன்துறை, முள்ளூர்துறை, இராமன்துறை உள்ளிட்ட கடற்கரைகளில் பெரும் கடலரிமானத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. முட்டம் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலைத் தடுப்புச் சுவரின் மிகையான நீட்சியால் அழிக்கால் கிராமத்தை மணல் மூடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதக் கடல் சீற்றத்தின் போது அக் கடற்கரைக்குச் சென்றிருந்தேன்.

குமரி முனையில் திருவள்ளுவர், விவேகானந்தர் நினைவிடங்கள் பாறைகளின் மீது அமைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் காலம் தொட்டு கடல் தரையின் தன்மையைத் தழுவி கரைக் கடல் நீரோட்டங்கள் அவற்றின் வழியைத் தீர்மானித்து விட்டிருக்கின்றன என்பதால் இக் கட்டுமானங்களால் சிக்கலில்லை. இருப்பினும், 2004 சுனாமியலை திருவள்ளுவர் சிலைக்கு மேலாக உயர்ந்ததை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஒரு கடற்கோளை எதிர்கொள்ள என்றுமே நாம் தயாராயில்லை.

குமரி முனையில் பூம்புகார்க் கப்பல்துறையின் படகுத்துறை சூழலியல் சிக்கலை ஏற்படுத்தியது. சிறு கடல்பாலங்கள் கூட பாதிப்பை ஏற்படுத்துபவைதான். குளச்சலில் அவ்வாறான ஒரு கடல் பாலம் இருக்கிறது. அது ஓர் இயற்கைத் துறைமுகம் என்றாலும் கூட கடலரிமானத்தில் அதன் தாக்கத்தைப் பார்க்க முடியும். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலைத்தடுப்புச் சுவரின் கிழக்கு நோக்கிய நீட்சியினால் அரிமானம் மேலும் கடுமையாகியுள்ளது. அதானியின் 10,000 ஏக்கர் காட்டுப்பள்ளி துறைமுகக் கட்டுமானத்தின் பின்னால் குரலற்ற மக்களின் துயரக்கதை உள்ளது. விழிஞம் அதானி துறைமுகம் கேரள அரசியலைக் கொதிநிலைக்குக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை கடலரிமானத்திலிருந்து பாதுகாப்பதற்கெனப் போடப்பட்டுள்ள தடுப்புச்சுவர், வடக்குப் பகுதியில் அரிமானத்தை வேகப்படுத்துகிறது. வட சென்னைக் கடற்கரை நெடுக எழும்பிவரும் தொழில் கட்டுமானங்களால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு நேர்ந்து போன சிதைவை சமவெளிச் சமூகம் கவனிக்கவேயில்லை. எண்ணூர் விரைவுச் சாலை, துறைமுகம் அமைப்பதற்காக இருப்பிடம் பறிக்கப்பட்ட மீனவர்கள் அலைகுடிகள் ஆகியிருக்கிறார்கள்.

வடசென்னை நிகழ்காலத்தின் துயர காவியம்.

சென்னையின் ஒட்டுமொத்தத் தொழில் வளர்ச்சியின் கழிவுச் சுமையை அக் குரலற்ற எளிய மனிதர்களின் தலையில் ஏற்றி வைத்துவிட்டோம். 2014-2018இல் தாழங்குப்பம், முகத்துவாரக் குப்பம் தொடங்கி கூனன்குப்பம் வரையுள்ள கடற்கரைகளில் மீனவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது வறண்டுபோன முகங்கள் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை முற்றாக இழந்திருப்பதைப் பார்த்தேன்.

“வளர்ச்சியைச் சொல்லி அவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும், வாழ்வாதாரமான கடலையும், கழிமுகங்களையும் பறித்துக்கொண்டு, அங்கு அனல் மின் நிலையச் சாம்பல் கழிவுகளையும் கொதி நீரையும் கொட்டிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கான சமூக நீதியை மறுத்து வந்திருக்கிறோம். அதைக் குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் நமக்கு இல்லை.” என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளார் நித்தியானந்த் ஜெயராமன். சென்னை, திருவள்ளூர்க் கடற்கரைகள் ‘வளர்ச்சியின் காயங்களை’ச் சுமந்துகொண்டிருக்கின்றன.

‘காசிமேட்டுக்கும் எண்ணூருக்கும் இடையில் நல்ல தண்ணீர் ஓடைக் குப்பம் என்றொரு மீனவர்களின் பெரிய குப்பம் 2017 வரை இருந்தது’ என்கிறார் ஊடகர் தயாளன்:

“இன்று அந்த ஊர் நடைமுறையில் இல்லை. ஆவணங்களிலும் இல்லை. அந்த மக்கள் தூக்கி வீசப்பட்டு விட்டார்கள். காசிமேட்டிலிருந்து தொடர்ச்சியாக ஏராளமான ஊர்களின் பட்டா நிலங்கள் கடலுக்குள் இருக்கின்றன. ஒரு பெரிய கோவில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்குள் இருக்கிறது. இவை எல்லாம் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் நிகழ்ந்து போன மாற்றங்கள். மெரினா கடற்கரையும், பெசண்ட் நகர் கடற்கரையும் செயற்கையாக உருவானவை. இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் திருவான்மியூர் கடற்கரையும் செயற்கையானதே. ஏன்? என்ற கேள்விக்கு பதில் தேடினால் கடலுக்குள் கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது என்று புரியும்.”

சென்னை துறைமுகம்

இராணுவம், துறைமுகம் போன்ற சில கட்டுமானங்களை அனுமதிப்பதால் கூட கடற்கரையோர வாழிடங்களுக்கும், வாழ்வாதாரத்துக்கும் பாதிப்புகள் எழவே செய்கின்றன. அவை நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத் தேவைகள் என்கிற அளவில் சூழலியல், சமூகவியல் தாக்கங்களைக் காய்தல், உவத்தலின்றி ஆய்ந்து, பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்வதும், அங்கு வாழும் பாரம்பரியத் திணைக் குடிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை நிறுவுவதை உறுதி செய்து கொள்வதும் பொறுப்பார்ந்த அரசின் கடமை.

‘‘நகராட்சி எல்லைக்குள் கடற்கரையில் ஒரு பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு, ஒரு வணிக மையம் அமைப்பதற்கு, கடற்கரை மக்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு பெரும் கெடுபிடி செய்யும் கடற்கரை ஒழுங்காற்று / சுற்றுச்சூழல் ஒழுங்காற்று விதிகள் பெரும் கட்டுமானங்களை அனுமதிக்கும் என்றால் சட்டம் யாருக்கானது?’’

2013- ல் நேர்காணல் செய்தபோது மேனாள் குளச்சல் நகராட்சித் தலைவர் ஜேசையா எழுப்பிய கேள்வி இது!

கடலுக்குள் நினைவுச் சின்னம் எழுப்பும் இப்போதைய முயற்சியின் அரசியல் நீட்சி என்னவாக இருக்கும்? அது ஒரு கொடுங்கனவு. இன்று அரசியலில் செல்வாக்குப் பெற்றிருக்கிற பல புள்ளிகளுக்கும் இம்மாதிரி ஆசை முளைத்து, அவர்களின் வாரிசுகளும், ஆதரவாளர்களும் தமிழ்நாட்டுக் கடல் நெடுக இது போன்ற பலப்பல கட்டுமானங்களைக் கொண்டு வரலாம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைச் சிலாகித்து வேறொரு தரப்பினர் கடலுக்குள் ஒரு ஸ்க்ரூ டிரைவரை நிறுவலாம்; சமய நினைவிடங்களை நிறுவலாம். அந் நாளுக்காக வாய்பிளந்து காத்திருக்கின்ற தரப்புக்கு இது பழம் நழுவிப் பாலில் விழுகிற வாய்ப்பு. அரசின் கருவூலம் கரையும்; அல்லது, தகுதியுள்ள மக்களுக்கு வந்துசேர வேண்டிய நிதிச் சேகரங்கள் விதிமீறலாக மடைமாற்றம் ஆகும். பட்டேல் சிலை நிறுவுவதற்கு 2,880 கோடி பணம் அவ்வழியில் திரட்டப்பட்டதே. கெடுவிதியாக, அந்த நிதி ஓக்கி (2017) கேரளப் பெருவெள்ளம் (2018) போன்ற பேரிடர்களின் போது நிவாரணத்துக்குக் கையேந்தி நின்ற மக்களுக்கு உதவவில்லை.

உள்ளூர்ச் சிக்கல்களின் கதை ஒரு புறம் இருக்க, கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.  அபத்தமாக, வளர்ந்த நாடுகள் கீழை நாடுகளின் மீது பழி போடுகின்றன. பருவநிலை நடவடிக்கைக் குழு என்னும் ஓர் அமைப்பு, அதன் அண்மைக்கால ஆய்வுகளில் அச்சமூட்டும் பல உண்மைகளை வெளியிட்டுள்ளது. கடல் மட்டம் 25 சென்டிமீட்டர் உயர்ந்தால் கடல்தொட்டுக் கிடக்கும் சென்னைப் பெருநகரத்தின் பல கிலோமீட்டர் தொலைவு வரை கடலுக்குள் மூழ்கிப் போகும் என்கிறது ஒரு குறிப்பு. எம்.ஜி.ஆர், கருணாநிதி சமாதி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளை 2050 இல் கடல் மூழ்கடித்து விடும் என்கிறது இன்னொரு குறிப்பு. கடல் மட்டம் உயர்தலின் முதல் பாதிப்புகளில் ஒன்று நிலத்தடிநீர் உவர்ப்பாகும் நிலைமை. கழிமுகங்களின் சிதைவும் உவர்நீர் இறால் பண்ணைகளின் பெருக்கமும் நிலைமையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகக் கடற்கரை இயல்பிலேயே செழிப்பானது, வனங்களும், நன்னீர் நிலைகளும் நிறைந்தது. இன்று ஏறத்தாழ எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். கிண்டி,  திருமறைக்காடு வனங்கள் மட்டுமே இன்று மீந்திருக்கின்றன.

2015 சென்னை, கடலூர் பெருவெள்ள நிகழ்வு வெறும் இயற்கைச் சீற்றமல்ல, கடலையும் கடற்கரையையும் இனிமேல் கவனமாய் அணுக வேண்டும் என்னும் இறுதி எச்சரிக்கை மணி.

சேது சமுத்திரம் என்கிற பெயரில் திமுக பங்கேற்ற மைய அரசு 2005 ஏப்ரலில் தொடக்கிவைத்து சற்றொப்ப 2000 கோடி பணத்தைக் கடலில் கொட்டி கோப்பை மூடிவிட்டது. அந்தத் திட்டம் நிற்காது, பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று, இன்று போல அன்றைக்கும் சூழலியலாளர்கள் சொன்னார்கள். தொழில்நுட்ப- வணிக அளவிலும், சூழலியல் – வாழ்வாதார அளவிலும் அது பெருந்தோல்வியைச் சந்தித்ததைத் தமிழ்நாடு அறியும்.

இன்றைக்கு அத் திட்டத்தை மீண்டும் துவங்க மாநில, மைய அரசுகள் முனைப்பு காட்டுகின்றன. மன்னார்க் குடாவில் 10,500 சதுர கிலோமீட்டர்ப் பரப்பைக் கடலுயிர்க்கோளம் என ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில் மாநில அரசு கடந்த செப்டம்பரில் பாக் நீரிணை பகுதியில் 458ச.கி.மீ பரப்பை கடற்பசு சேமப் பகுதியாக அறிவித்து, கடலைப் பாதுகாப்பது குறித்து மீனவர்களுக்கு நிறைய அறிவுறுத்தல்களை வழங்கியது. அதே அரசு இன்று கரைக்கடலில் ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னத்தை நிறுவ முயல்கிறது. இயற்கைச் சீற்றம் பேரிடர்களாய் மாறுவது மனிதர்களால் தான். சில பேரிடர்கள் மனிதர்களால் நிகழ்த்தப்படுகின்றன. சேதுக் கால்வாய்த் திட்டம் அண்மைக்கால சான்று.

மாநில அரசு சென்னை நகரைப் பெருவெள்ளத்திலிருந்து பாதுகாப்பது எப்படி என்று அறிஞர் குழுவை அமர்த்தி ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. சென்னையின் பெருவெள்ள மேலாண்மையில் பக்கிங்ஹாம் கால்வாய், கொற்றலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு ஆகியவற்றுக்கும் மாமுனி ஏரி, புழல், செம்பரம்பாக்கம், பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம் போன்ற நன்னீர் நிலைகளுக்கும் பங்குண்டு. 2004 சுனாமியிலிருந்து சென்னை நகரத்தைக் காத்தது பக்கிங்ஹாம் கால்வாய். நிலமோ, கடலோ- நீரின் வழமையான தடங்களை இடைமறிப்பது, பேரிடரை நம் வரவேற்பறைக்குள் கொண்டு வரும் மடமையே.

மெரீனா என்னும் உலகின் இரண்டாவது நீளமான மணல்வெளியை உருவாக்கிய கடலின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. மெரீனாவைப் பார்க்கிற ஒவ்வொரு முறையும் அப் பெருமணல்வெளியின் அழகியலைத் தாண்டி கடலின் பேராற்றல் குறித்த அச்சமே விஞ்சி நிற்கிறது. சென்னை மீனவர்களைத் துயர்  மேகம் சூழ்ந்திருப்பதாக உள்ளுணர்வு எச்சரிக்கிறது. பேனா திட்டமிடப்படும் இடத்துக்கு வடக்காக சிறு தொலைவிலேயே கூவம் கழிமுகம் கடலில் இணைகிறது. நினைவுச் சின்னத்தின் முதற்பலி கூவம் கழிமுகம் ஆகும் அபாயமுண்டு. சிக்கல் நினைவுச் சின்னம் அல்ல, அதைக் கடலுக்குள் அமைப்பதுதான்.

பேரிடர்கள் அரசியல் நில எல்லைகளைப் பொருட்படுத்துவதில்லை. அமெரிக்காவோ, ஆரியமோ, கிழக்கோ- எதையும் அவை சட்டை செய்யாது. பருவநிலை மாற்றமும் கடல்மட்ட உயர்வும் உடனடியாய் முகம் கொடுத்தாக வேண்டிய நிகழ் பேரிடர். ஒரு பொறுப்பான அரசு தன் நிலத்தையும் மக்களையும் பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் வழிகளை ஆய்ந்து, முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடற்கரை நம் நிலத்துக்கு அரணாய் நிற்பது. நிலத்தைப் பாதுகாப்பதன் தொடக்கம் கடற்கரையையும் கரைக்கடலையும் பாதுகாப்பது.

மரம் இல்லையேல் மானுடம் இல்லை!

சூழலியலாளர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்கிற ஒரு தோற்ற மாயை கார்ப்பொரேட்டுகளால் உருவாக்கப்படுகிறது. அவர்களால் பொய்களை எளிதாக மக்களிடம் விற்க முடிகிறது. ஊடகம் அவர்கள் கையில் இருக்கிறது. மக்கள் பகுத்துப்பார்க்கவும் விவாதிக்கவும் நேரமற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடித் தீர்வுகள் தேவைப்படுகின்றன. கண்களை விற்று ஓவியம் வாங்குவானேன் என்பதுதான் காந்தியப் பொருளாதார வல்லுநர் ஜே.சி.குமரப்பாவைப் போன்றவர்கள் முன்வைக்கும் பார்வை. உடனடி நன்மைகளின் பகட்டு வெளிச்சம் நம்மைச் சூழ்ந்திருக்கும் பேரிருளை மறைத்து விடுகிறது. தனிமங்களின் மீதான பேராசையால் வடகிழக்கில் வனங்களை அழித்தபோது எழுந்த அதே எச்சரிக்கைக் குரல் இன்று கடலின் அழிவு குறித்து எச்சரிக்கிறது. நாட்டுப் பற்றையும் வளர்ச்சியையும் அம்பானிகளின், அதானிகளின் கண்கள் வழியாய்ப் பார்ப்பவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை.

‘கடல் மட்டம் உயர்தல்’ உலகளாவிய சிக்கல். அதிலிருந்து மீள போர்க்கால அடிப்படையில் முயற்சியெடுக்க வேண்டிய நேரத்தில் உள்ளூரில் புதிய சிக்கல்களை ஏற்படுத்துவது நன்றன்று. கடலை நோண்டினால் அது நம்மைத் தோண்டி வீசி விடும். அதன் இயல்பான இடத்தையும் இயக்கத்தை நாம் மதிக்கவேண்டும். தவறினால், லூதர் பியுரோங்க் சொன்னது போல, ‘நமக்கு நாமே கொடுந்தீர்ப்பு எழுதிக் கொள்கிறவர்கள் ஆவோம்’.

கட்டுரையாளர்:

வறீதையா கான்ஸ்தந்தின்,

பேராசிரியர், கடல் சூழலியல் ஆய்வாளர்,

தொடர்புக்கு: vareeth2021@gmail.com


நன்றி: அறம் இணைய இதழ்.