புதன், 29 ஏப்ரல், 2020

விடுதலைப் புலிகளும் இசுலாமியத் தமிழர்களும்: மகாராசன்

தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழீழத் தமிழர்களும் இசுலாமியத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதாகவே இங்குள்ள பெரும்பான்மை இசுலாமிய அறிவுஜீவிகளின் பொதுப்புத்தியாய் உறைந்து கிடக்கிறது.

அதேவேளையில், தமிழ்த்தேசிய இனத்தின் ஓர் அங்கமாய்க் கருதி, சமயப் பண்பாட்டால் இசுலாமியர்களாக இருந்தாலும், தம்மைத் தமிழராகவே கருதுகிறார்கள் பெரும்பான்மை இசுலாமியத் தமிழர்கள். இந்நிலையில், தமிழர் ஓர்மையைச் சிதைக்கும் சாதிவாத மதவாத சக்திகள் தமிழர்களிடையே இசுலாமியர்கள் எனத் தனியாக அந்நியப்படுத்திப் பிரித்தாளும் சூழ்ச்சி வலைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஆளும் அதிகார அமைப்பாலும், சுரண்டும் வர்க்கத்தாலும், பன்னாட்டு நிறுவனங்களாலும் ஆரிய மதவாதப் பயங்கரவாதங்களாலும், இன்னபிற அரச பயங்கரவாதங்களாலும், உலக வல்லாதிக்க நாடுகளாலும் இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்த ஒடுக்குமுறைகளோடு சேர்ந்தே மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் இசுலாமியர்கள்/கிறித்துவர்கள் உள்ளிட்டவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

ஒடுக்குமுறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக எந்த சக்திகளும் ஒன்றிணைந்துவிடக் கூடாது என்றுதான் அதிகார நிறுவனங்களும் மதவாத நிறுவனங்களும் பிரித்தாளும் அரசியலை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில்தான், தமிழர்கள் வேறு; இசுலாமியர்கள் வேறு என்ற பிரித்தாளும் சூழ்ச்சி நுண் அரசியலை ஆரியவாதிகளும் இசுலாமியவாதிகளும் தனித்தனியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரித்தாளும் நுண் அரசியலுக்கு அவர்கள் முன்னெடுப்பதெல்லாம், ஈழத்தில் 1990 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய இசுலாமியர் கட்டாய வெளியேற்ற நிகழ்வு குறித்துத்தான்.

இந்நிகழ்வை மட்டுமே முன்வைத்துக்கொண்டு, விடுதலைப்புலிகளும், ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒட்டுமொத்த இசுலாமிகளுக்கே எதிரானவர்கள் என்கிற மதவாதக் கண்ணோட்டத்திலேயே தமிழர் மீதான வன்மங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் இசுலாமிய அறிவுஜீவிகள்.

சக இசுலாமியத் தமிழர்களின் மனப்போக்கை, சக தமிழர்களுக்கு எதிராகக் கட்டமைக்கும் இந்த நுண் அரசியல் வன்மங்களையும் அவதூறுகளையும் முறியடிக்க வேண்டியது அவசியம். அந்த நோக்கத்திலேயே இந்தப் பதிவு.

தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டங்களில், விடுதலைப்புலிகள் குறித்தும், அங்குள்ள சமூக நிலைமைகள் குறித்தும் அவதூறுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன. அந்த சூழலில்தான், அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் 'ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும்' எனும் நூல் எனது தொகுப்பில் 2007 இல் கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தால் வெளிவந்தது.

2008 இறுதிப்போர் தொடங்கி 2009 இனப்படுகொலை நிகழ்வு காலகட்டங்களிலும், அதற்குப் பிந்தியுமான காலத்திலும் தமிழீழ விடுதலைப் போராட்டங்கள் குறித்த அவதூறுகள் நிறையவே வெளியாகின. இந்த அவதூறுகள் எல்லாம் உண்மையானவை இல்லை என்றாலும், அவற்றுக்கான பதில்கள் வெளிவரவில்லை என்றால், அவதூறுகளே உண்மையாகக் கருதப்படும். ஆகவே, இனப்படுகொலை நிகழ்வுக்குப் பின் இருந்த தமிழினத்தின் பெரும் மவுனத்தைக் கலைக்கும் நோக்கிலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதான அவதூறுகளுக்கு மறுப்புரைக்கும் வகையிலும் 'அவதூறுகளை முறிபடிப்போம்: தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும்' என்கிற நூல் எனது தொகுப்பில் 2010 சனவரியில் பாலை பதிப்பகத்தால் வெளிவந்தது.

மேற்குறித்த இரு நூல்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதன் அரசியலை, அதன் பங்களிப்பை வரலாற்றுப்பூர்வமாகப் பேசி இருப்பதுடன், அப்போராட்டத்தின் மீதான அவதூறுகளுக்கும் விரிவான பதிலுரைகளையும் தந்துள்ளன. பல்வேறு ஆய்வாளர்கள், படைப்பாளிகள், களச் செயல்பாட்டாளர்கள், அரசியலாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களின் கட்டுரைத் தொகுப்புகள் அவை.

மேற்குறித்த நூலில், இசுலாமியர்களைக் குறித்தும், விடுதலைப்புலிகள் குறித்தும் பல பதிவுகள் உள்ளன. இசுலாமியத் தமிழர்களின் புரிதலுக்காக அவற்றுள் சில பதிவுகள் வருமாறு:

'வட கிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுவான தாயகத்தையும், பொதுவான மொழியையும், பொதுவான பொருளாதார வாழ்வையும், பொதுவான நலன்களையும், சமூகப் பொருளாதார வாழ்வு காரணமாக ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் தங்கியிருப்பதால் தமிழரும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்ட சக்தியாக ஒருங்கு சேர்ந்து தமது உரிமைக்காகப் போராடுவது அத்தியாவசியமானதாகும்.

முஸ்லிம் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றால், தமது நலன்களை அடைந்து நல்வாழ்வு காண வேண்டுமென்றால், முக்கியமாக தமது இன, மத, கலாசாரத் தனித்துவத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றால், தமிழருடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, தமிழருடன் ஒருங்கிணைந்து போராடுவதே சாலச் சிறந்ததாகும்.

தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தைக் குறைத்து, தமிழ்த்தேசிய ஒன்றியத்தைத் சிதறடிக்கும் நோக்கத்துடன் சிங்கள இனவாத அரசானது, தமிழர் முஸ்லிம் மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டிவிடும் நாசகார முயற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு, எமது தாயக பூமியையும் படிப்படியாக விழுங்கி வருகின்றது. பொதுவான எதிரியையும் பொதுவான லட்சியங்களையும் எதிர்கொள்ளும் தமிழ் முஸ்லிம் மக்கள், தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.'
/தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட 'சோசலிச தமிழீழம்' எனும் நூலில் பக்கம் 14, பத்தி 1, இரண்டாம் பகுதி. /

*
'யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய செயல், விடுதலைப்புலிகளின் இந்துத்துவ நிலைப்பாட்டிலிருந்து எடுத்த நடவடிக்கை என, தான் இப்போதும் கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்கவில்லை'
/இளைய அப்துல்லாஹ்,
ஊடகவியலாளர். /

*
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வு சரிதானா?

'தாம் முஸ்லிம்களிடம் ஏற்கனவே மன்னிப்பு கோரி இருக்கிறோம். இஸ்லாமியர்களுக்குத் தமிழர் தாயக நிலத்தில் உரிமை உண்டு'
/2002 ஆகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சர்வதேச ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போது ஆண்டன் பாலசிங்கம் அளித்த பதில். /

*
'புலிகள் முஸ்லிம் மக்களுடன் உறவு பேண விரும்பியதையும், அவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஈடுபாட்டையும் புலிகள் கொண்டிருந்தனர். காலப்போக்கில் முஸ்லிம் மக்கள் சிங்கள இனவெறி அரசுடன் உறவு பேணியதால் சில உரசல்கள் ஏற்பட்டன.

முஸ்லிம் மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில் புலிகளின் முதல் முஸ்லிம் போராளியின் படத்தைத் தாங்கியபடி 'ஒன்றிணைந்து போராடுவோம்' என்று புலிகளின் அரசியல் பிரிவு ஒரு புத்தகத்தையும் வெளியிட்டது. அந்தப் புத்தகத்தில் புலிகள், முஸ்லிம் மக்களுக்கும் தமிழர்களுக்குமான பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை முறியடிக்க ஒன்றிணைந்து போராடுதல் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தி இருந்தார்கள்.

சிங்களப் பேரினவாதம் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைச் சீர்குலைத்து பகைமையைக் கட்டமைக்கும் வழிமுறைகளில் ஈடுபட்டதையும் புலிகளின் வெளியீடுகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தன. ஆனால் முஸ்லிம் இனவாதக் குழுக்கள் பல உருவாக்கப்பட்டு, சிங்கள இனவெறி சக்தியுடன் இணைந்து கொண்டு ஆயுதம் தரித்துத் தமிழர்களை வேட்டையாடியதை வரலாறு கண்டது.

சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்த நடவடிக்கைகளில் பல முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஈடுபட்டு வந்தன. இவர்களுக்கு எதிராகப் புலிகளின் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட சிலரை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிரானவர்கள் புலிகள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. மூதூர் வெளியேற்றம் குறித்துப் பேசுகின்ற பலரும், அந்த வெளியேற்ற நடவடிக்கைகளுக்காகப் புலிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது குறித்து வாய் திறக்காமல் மூடிக் கொள்வதற்குப் பின்னணியில், பேரினவாதம் தான் ஒளிந்து கொண்டு இருக்கிறது.
/அதிரடியான்./

*
'விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவர்களை ஒழிக்கவும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கவும், இலங்கை ராஜதந்திரிகளால் பாகிஸ்தானிய மூளையால் உருவாக்கப்பட்ட ஜிஹாத் அமைப்பினர் ஆயுத தாரிகளாய் வலம் வந்தார்கள். ஆயுதங்களால் பேசினார்கள். அரசாங்கத்தின் ஆசியால் ஒரு பயங்கரவாத அமைப்பை உருவாக்கி ஆகிவிட்டது. இன்று ஜிகாத் அமைப்பிடம் இருந்து ஆயுதங்களைக் களைவது எப்படி என்பது அரச பயங்கரவாதத்திற்கு பெரும் சிக்கலாகி உள்ளது.

என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அது (புலிகள் அழிப்பு) முடிந்துவிட்டது. இனி ஜிஹாத் அமைப்பினர் ஆயுதக் குழுவாகச் செயல்படாமல் ஒரு மத அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று கெஞ்சும் வேண்டுகோள் அரசிடமிருந்து வெளியாகி ஊடகங்களிலும் இடம் பிடித்தது.'
/சூரியதீபன்./

*
'புலிகள், முஸ்லிம்களைத் துரத்தி விட்டதில் இருந்து துவங்குகிறது தமிழர் இஸ்லாமியர் வேறுபாடு. இந்த மன வேறுபாட்டை ஊட்டி வளர்த்தது இலங்கை அரசு. புலிகளால் துரத்தப்பட்ட இஸ்லாமியர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் வாழ்வதற்கான உரிமையை இலங்கை ராணுவம் மறுத்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு உள்ளேயே இருக்கிறது. அதுபோல கிழக்குத் தன்னார்வக் குழுக்களின் இறுகிய பிடிக்குள் சிக்கி இருக்கிறது எதிர்ப்பு இயக்கங்கள். மற்ற இஸ்லாமிய சந்தர்ப்பவாத தலைமையானது இலங்கை அரசோடு அதிகாரத்தைப் பகிர்ந்து இருக்கிறது.

புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு, தமிழர் அரசியல் பலவீனமடைந்து இருக்கும் சூழலில், இஸ்லாமியர்களின் குரல் வலுப்பெற்ற சூழலை இலங்கையில் இன்று நாம் காண்கிறோம். இது நல்ல விஷயம் தான். ஆனால், இஸ்லாமியத் தலைமைகள் இலங்கை அரசோடு சேர்ந்து இயங்குவதன் மூலம், கிழக்கு முஸ்லிம்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்?
/டி அருள் எழிலன்./

*
'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குச் சமராடி மரணமுற்ற இஸ்லாமியப் போராளிகளையும் இளைஞர்களையும் யுவதிகளையும் விடுதலைப் புலிகள் தமது முள்ளியவளை மாவீரர் நினைவு இல்லத்தில் ஒன்றாகவே புதைத்தனர். இஸ்லாமிய முறையின்படி இஸ்லாமிய சமாதியில் போராளிகள் புதைக்கப்படவில்லை எனும் வருத்தம்கூட ஈழத்து இஸ்லாமிய மக்களிடம் இருக்கிறது. ஆனால், சாதி மதம் கடந்தவர்களாகத் தம்மை வரித்துக் கொண்ட விடுதலைப்புலிகள், அனைவரையும் போலவே தமது அமைப்பின் இஸ்லாமிய போராளிகளையும் ஒரே மாவீரர் சமாதியில் புதைப்பது தவிர வேறுவிதமாக செயல்பட்டிருக்க முடியாது.

யாழ்ப்பாண இஸ்லாமியர் வெளியேற்ற விடயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர் பானுவும் கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த கரிகாலனும் கருணாவும்தான் முக்கிய பங்காற்றினர். அதே கருணா தற்போது ஜனநாயகவாதியாக முடிசூட்டப்பட்டிருப்பது வரலாற்றின் முரண்நகை'
/ யமுனா ராஜேந்திரன்/.

'ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழர் என்ற உணர்வோடு விடுதலைப்புலிகளின் ஈகத்தை நெஞ்சில் ஏந்தி, தமிழகத்து நிலத்தில் இன உணர்வைத் தமிழர்களுக்கு விதைக்கும் நோக்கில் தீக்குளித்து மரணித்த மாவீரன் அப்துல் ரவூப்பின் தியாகத்தை உலகத் தமிழர்களால் வணங்கப்படுகிறது. மாவீரன் அப்துல் ரவூப்பின் தியாகத்தைப் பெரும்பாலான இசுலாமிய அறிவுஜீவிகள் மறைக்கவே செய்கிறார்கள்'
/ஏர் மகாராசன்/

இன்னும் விரிவான தகவல்களுக்கு..

அவதூறுகளை முறியடிப்போம்:
தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும்.

தொகுப்பாசிரியர்: மகாராசன்.

வெளியீடு: பாலை பதிப்பகம்
விலை: உரு 90/-
தொடர்புக்கு:
9842265884, 9487352972.

தோழமையுடன்
ஏர் மகாராசன்
29.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 29.04.2020. /

3 கருத்துகள்:


  1. 'புலிகள், முஸ்லிம்களைத் துரத்தி விட்டதில் இருந்து துவங்குகிறது தமிழர் இஸ்லாமியர் வேறுபாடு. ஏன் துரத்தினர் .துரத்துவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது .அக்காலகட்டத்தில் நானும் புலிகளின் தீவிர விசுவாசியாய்
    இருந்தேன் .அதை எண்ணி இப்போது ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்.
    விடுதலை புலிகள் கடைத்தெடுக்கப்பட்ட அயோக்கியர்கள் என்பது என்பார்வை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது உங்களது புரிதல். இன்னும் நாம் அறியா புரிதல்கள் நிறைய இருக்கின்றன.

      நீக்கு
    2. அன்பருக்கு ,
      வணக்கம் .நீங்கள் கூறுவது உண்மை . சரியான புரிதல் இல்லாமையினாலேயே பலர் விடுதலைப்புலிகளை ஆதரித்து (நானுட்பட ) இழப்பதற்கு ஏதுமில்லாத நிலையை அடைந்தார்கள்.
      புரிதல் இல்லாததாலேயே பிரபாகரன் தமிழரை கோவணத்துடன் விட்டு சென்றார் .

      நீக்கு