வெள்ளி, 28 ஜனவரி, 2022

தமிழ் ஈழத் தாகத்தோடு தீக்குளித்துத் தன்னுயிர் நீத்த முத்துக்குமார் எழுதிய அறிக்கை மடல்


தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த துண்டுப்பிரசுரம் விபரம் வருமாறு :

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் 

என் தமிழ்ச் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம்.

வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை.

என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும்,இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும்,சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.

இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு,சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?

ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா?

பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ,தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும்சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள்,வழக்கறிஞர்களும்தான்.

இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது,தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.

சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!

போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!,

ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள்,ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால்,அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம்.

எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி,அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.

எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம்,அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க,தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்?

எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும்,ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்?

எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும்,பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது.

அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே,போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு,எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம்,தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும்என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம்,உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே,பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான்.

இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில்,அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா...

இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன்.

நீங்கள் நாம் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது,ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...

அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்.

1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்?இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.

இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக,இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மௌனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள்.

'அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை' என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில்,புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, தீவிரவாதிகள் அல்ல காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள்அதனால்தான் சண்டை என்கிறது.ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ,மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை.

ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா,தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தேஇந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை.

இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும்.

கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி !

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மௌனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும்,குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ,இலங்கைக்கோ கிடையாது !

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா,உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த,பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு,அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.


என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,

கு. முத்துக்குமார், 

கொளத்தூர்,

சென்னை-99.

29.01.2009

.....................................................

நன்றி

https://eelavizhi.blogspot.com/2017/01/blog-post_26.html

செவ்வாய், 25 ஜனவரி, 2022

உழவுப் பாடுகளும் தமிழ்ப் படைப்பாக்கமும் : கதிர்நம்பி


உழவு குறித்து இதுவரை கிடைத்த இலக்கியங்கள் அனைத்தும் உழவின் மேன்மையை விளக்குவனவாக அமைந்துள்ளன. செவ்வியல் மரபான சங்க இலக்கியத் தரவுகள் எல்லாம் உழவர்களையும் உழவினையும் விதந் தோதுகின்றன. உழைக்கின்ற சேற்றில் உழல்கின்ற உழவனை பாடுபொருளாக வைத்து பார்ப்பதால் அவனுடைய உழைப்பின் வீரியத்தை, அவனுடைய இன்னல்களை பேசுபொருளாக்கவில்லை. இன்னும் பகுத்து பார்ப்போமேயானால் இலக்கியங்கள், அவற்றைப் படைத்த கவிஞர்கள் எல்லாம் அரச இயந்திரத்தின் ஒரு பாகமாக விளங்கி வருவது கண்கூடு . எனவே கவிஞர்களிடமிருந்து கலகக் குரல்களை எதிர்பார்க்க இயலாது தான். விதிவிலக்காக அரசனை கேள்விக்குட்படுத்தும் கவிஞர்களை சங்க இலக்கியப் பரப்பில் காணமுடிகிறது. எனினும் விதிவிலக்குகள் எல்லாம் விதிகள் ஆகாது.

"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் 

அலகுடை நீழ லவர்" என்கிறார் வள்ளுவர். 

உழுதலால் நெல் உடையவரான கருணையாளர் பல வேந்தர் குடை நிழலது ஆகிய உலகம் முழுவதையும், தம் அரசன் குடைக்கீழ் வந்து சேரக் காணும் சக்தி உடையவர் ஆவர் என்பது இக்குறளிற்கான புலியூர் கேசிகனின் உரையாகும்.

முடியரசுகளின் எல்லை விவரிப்பிற்கும் உழவர்களினுடைய உழைப்பிற்கும் உள்ள தொடர்பை வள்ளுவர் இக்குறளில் விளக்கிக் காட்டியிருக்கின்றார். திருக்குறளில் வருகின்ற உழவு அதிகாரத்தில் அமைந்துள்ள பத்து குறள்களில் உழவனுடைய இன்னல்களையும் துயரங்களையும் எடுத்துரைப்பதாக அமையவில்லை என்பது கெடுவாய்ப்பாகும். உழவு குறித்து மேன்மையான கூறியிருந்தாலும் அரசு உருவாக்கத்திற்கு அது எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதையும் கூறியிருக்கின்றது.

வேட்டைக் குமுகமாக அலைந்து திரிந்து வாழ்ந்த மாந்தனை ஓரிடத்தில் நிலையாக அமரச் செய்தது வேளாண்மை எனும் தொழில்நுட்பம். "பெண்கள் தான் நிலத்தை முறையாக உழுது பயன்படுத்தும் வழியைக் கண்டுபிடித்தனர். அது கடினமான தொழிலாக இருந்தாலும் இதனை நடைமுறைப் படுத்தினர். தொல்பழங்கால சமுதாயத்தில் மாறாத் தன்மை வலுவாக இருந்த போதிலும் அதனால் வேளாண்மைக்கு முந்திய குழுக்களின் வட்டத்தில் இதன் எச்சங்கள் இன்றும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. முதலாவதாகத் தோன்றிய தாய்வழி உரிமை முறைக் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் வேளாண்மையை மேற்கொண்டதன் காரணமாக காடுகளில் அலைவதை விட்டுவிட்டு முதல் குடி அமைப்புகளை உருவாக்கினர்." என்கிறார் எஹ்ரென் பெல்ஸ். கலப்பையும் மாடுகளும் வேளாண்மையில் பங்குபெற வேளாண் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையடைய மிகை உற்பத்தி உருவானது. இதன் பொருட்டு தந்தை வழி குமுகம் தோன்றி அரசுகளை தோற்றுவித்தது. தோன்றிய அரசுகளை நிலைபெறச் செய்து செல்வத்தை பெருக்க செய்யவும் உழவர்கள் தொடர்ச்சியாக உற்பத்தியில் ஈடுபட வைக்கப்பட்டனர். உழுது உண்போர், உழுதுவித்து உண்போர் என பிரிவுகள் உருப்பெறலாயின.

"மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும்கை 

ஆழி தரித்தே அருளும் கை சூழ்வினையை 

 நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி காக்கும்கை காராளர் கை" என்று கம்பர் உழவர்களை நோக்கி வேந்தர்கள் இருப்பதாக பாடியதும் உழவர்களை மேன்மைபடுத்துவதாக அமைந்துள்ளது. 

"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னர் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால் 

யான் உயிர் என்பது அறிகை 

வேன்மிகு தானை வேந்தர்க் கடனே" என்று மோசிகீரனார் புறநானூற்றில் நெல்லையும் நீரையும் விட வேந்தனின் உயிரே முதன்மையானது என்கிறார். வேந்தன் தன் நாட்டு மக்களை காத்து நிற்பான் என்று பொருள் கூறுகிறார். இந்த பாடலிலும் கூட உழவர்களுடைய முதன்மைத்துவம் அல்லது அவர்களுடைய உழைப்பு பெரிதாக கருதப்படவில்லை. 

உழவர்களுடைய வாழ்வியல், அவர்களின் இன்னல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள், வழக்காறுகள் குறித்து 16- 17ஆம் நூற்றாண்டில் மத்தியில் வந்த முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியம் வெகுவாக படம்பிடித்து காட்டியுள்ளது. குறிப்பாக வேளாண் குடிகளான "மள்ளர்கள்" சாதி விலக்கத்திற்கு உள்ளானதை ஆவணப்படுத்தி இருக்கிறது. 

"பக்கமே தூரப் போயும் 

தக்க சோறு என் வேளாண்மை

 பள்ளா பள்ளா என்பார் 

மெய் கொள்ளாதவர்."

நிலம் கோயிலுக்குச் சொந்தம். கோயிலில் உறைகின்ற இறைவனின் பெயரால் நிலங்கள் அனைத்தும் மடங்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் உடைமையாக உருவாகியிருந்தது. நிலத்தில் உழைக்கின்ற உழுகுடிகளுக்கும் அந்த உழவை சார்ந்த நிற்கக்கூடிய இன்னபிற உழைக்கும் குடிகளுக்கும் விடிவு காலம் என்பது இல்லாது இருந்தது.

பல்லவர்,சேர,சோழ மற்றும் பாண்டியர் ஆகிய முடியரசுகள் பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கி இருக்கின்றது. பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள், தேவதானம், கிராமங்கள் (கிராமம் என்பது வடமொழிச் சொல். கிரமம் என்றால் ஒழுங்கு என்று பொருள். ஒழுங்குடன் வேதத்தை கற்கின்ற இடமே கிராமம்) என நிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. மறுதலையாக உழவர்களிடம் உழவடை வரி, பாசன வரி, நில வரி, போன்ற வரிகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இந்த கடுமையான வரி விதிப்புகளின் காரணமாக உழுகுடிகளும் இன்னபிற உழைக்கும் குடிகளும் தத்தம் நிலங்களை விட்டு புலம்பெயர்ந்து அலைகுடிகளாக மாறி அலைந்து திரிந்து இருக்கின்றனர். விஜயநகர பேரரசு காலத்தில் உழவர்களிடமிருந்து நன்செய் நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. அம்மாதிரியான செயல்பாடுகளுக்கு எதிராக அணிதிரண்ட உழவர்களெல்லாம் குல நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழகம் வெப்ப மண்டல பகுதி என்பதால் 

ஆண்டு முழுவதும் உழவர்கள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான இயற்கை சூழல் அமையப் பெற்றிருக்கிறது. இன்றைக்கும் கூட பெரும்பாலான விளைநிலங்கள் கோயில்களுக்கும் அதனுடைய மடங்களுக்குமே சொந்தமாக இருந்து வருகின்றது. இந்த சூழலில் நாம் முடியரசு காலமும் அதற்குப் பின்னான விஜயநகரப் பேரரசு காலமும் அதற்குப் பின்னான காலனியாதிக்க காலத்தையும் கணக்கெடுத்து பார்த்தோமானால் உழவர்கள் ஆண்டு முழுவதும் உழைத்து உழைத்து வரியை மட்டுமே செலுத்தி வந்திருக்கின்றனர் என்பது நமக்குப் புலப்படும்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சங்க இலக்கியம் தொட்டு கல்வெட்டு ஆதாரங்கள், இலக்கியச் சான்றுகள் நாட்டார் வழக்காறுகள் என அனைத்திலும் உழவருக்கு ஒரு நாள் அதாவது உழவர் திருநாள் அல்லது தமிழர் புத்தாண்டு என்று ஒரு நாளை நம்மால் இனம் காட்ட முடியவில்லை. முடியரசு காலத்தில் காவிரிப்படுகைக்கு ஆடிப்பெருக்கு சிறப்பான நாளாக கருதப்பட்டது. இன்னும் சில இடங்களில் சித்திரை பொன்னேர் பூட்டுதல் என்கின்ற சடங்கின் மூலமாக உழவுத்தொழில் தொடங்கப்பட்டது. பெரும்பான்மையான இடங்களில் தை அறுவடை என்பது உழவடை வரி வசூலிப்பு நாளாகவும் கருதப்படுகிறது. ஆக புத்தாண்டு, முதல் நாள் என்பதெல்லாம் ஆட்சியாளர்களின் வரி வசூலிப்பு போன்றவைகளை மையப்படுத்தி அமைந்தனவே ஒழிய அவை உழைக்கும் உழுகுடி மக்களின் பண்பாடாக கருத முடியாது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் வேளாண்மை நிலங்கள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் வேளாண்மைக்கு ஆதாரமான நீர் நிலைகளான கண்மாய்கள் ஏரிகள் குளங்கள் ஆற்றுப்படுகைகள் ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. உணவுப் பயிர்களை விடுத்து பணப் பயிர்களான அவுரி, சணல், பருத்தி, புகையிலை, தேயிலை,அபின் போன்றவற்றை அதிகம் சாகுபடி செய்ய பணித்த பிரிட்டிஷ் அரசு உழவர்களை மேலும் ரயத்துவாரி என்ற வரி விதிப்பின் மூலமாக கொடுமைக்கு உள்ளாக்கியது. இதனால் பிரிட்டிஷ் அரசு காலகட்டத்தில் இந்திய துணைக் கண்டம் நிறைய பஞ்சங்களை எதிர்கொண்டது.

ஏற்கனவே நிலை பெற்றிருக்கின்ற ஆண்டான் அடிமை நிலவுடமை குமுகம் மற்றும் பிரிட்டிஷ் அரசின் எதேச்சதிகார உழவர் எதிர்ப்பு கொள்கைகள் இவற்றின் காரணமாக நிலத்தில் உழைத்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் உழைப்பிலிருந்து அதாவது உழவில் இருந்து வெளியேறி தேயிலைத் தோட்டங்களுக்கும் ஏலக்காய் தோட்டங்களுக்கும் கரும்புத் தோட்டங்களுக்கு ரப்பர் தோட்டங்களுக்கு கிழக்காசிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.

சங்க காலத்திலிருந்து சமகாலம் வரைக்கும் உழவர்களுடைய இன்னல்களையும் வாழ்க்கை பாடுகளையும் துன்பங்களையும் நாட்டார் இலக்கியங்களே பதிவு செய்து வந்திருக்கின்றன. நாட்டார் இலக்கியம் என்பது ஓர் கலகச் செயல்பாடு. உழைக்கும் மக்களின் உணர்ச்சிகளில் இருந்து, உணர்வுகளில் இருந்து வெளிவருகின்ற பாடல்கள் அன்றைய ஆண்டான் அடிமைக் குமுகத்தையும் அரச தோற்றங்களையும் சாடி இருக்கின்றது. 

"எட்டேரு கட்டி உழுது 

இடை தரிசு போட்டுழுது

வட்டங்க சேர்த்துழுது 

மகாராஜன் பண்ணையிலேயே

களையெடுக்கும் கம்மா புன்செய் கணக்குப் பார்க்கும் வேப்பமரம் கொத்தளக்கும் பொன்னுசாமி

 கூட நாழி போடுங்களேன்" என இப்பாடல் உழவன் கூலி உயர்வு கேட்டதை பதிவு செய்கிறது. 

"முக்காப்படி கேப்பைக்காக 

முந்தருந்து வாடுறனே

ஐயா முதலாளி- நீங்க 

அளக்குறது பொட்ட நாழி" 

நாழி என்றால் உழவர்கள் தங்களின் உழைப்பிற்கு கூலியாக பெறுகின்ற தவசத்தின் அளவு. கீழ்வெண்மணியில் ஆறு லிட்டர் நெல் கூலி உயர்வாக கேட்டதற்கு தீயில் கொளுத்தப்பட்ட உழவர்களின் பாடு சொல்லி மாளாது.கீழைத் தஞ்சையில் மக்கள் மனங்களில் வாழும் வெண்மணி தியாகிகள் பற்றிய நாட்டார் பாடல்கள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும். 

1947-இல் வெள்ளையர்கள் இந்திய துணைக் கண்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் 1952 ல் ஐக்கிய அமெரிக்க அரசின் பெருநிறுவனங்கள் இந்திய துணைக் கண்டத்திற்கு வணிக நோக்கத்தோடு பசுமைப்புரட்சி என்ற பெயரில் உள்நுழைந்தன. இதன் விளைவாக பெரு நிலம் கொண்ட பண்ணையார்கள் பலன் அனுபவித்தனர். குறு நில உழவர்கள் வேளாண்மையை விட்டு வெளியேறினர். 

பசுமை புரட்சி, நிலம் கையகப்படுத்தும் சட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம், அண்மையில் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் இவையெல்லாம் உழவர்களை விட வேளாண்மையில் நிற்கிற பெரு நிறுவனங்களுக்கு வலு சேர்ப்பவை ஆகும். மூன்றாம் உலக நாடுகளில் இருக்கிற வளங்களை முதலாளியம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக சுரண்டி வருகிறது. 

சீக்கிய உழவர்கள் போராட்டத்தில் இருந்த பொழுது வட இந்திய செய்தி ஊடகங்கள் போராட்டத்தை மலினப்படுத்தி செய்திகளை பரப்பியது. குமுக ஊடகங்களில் இவர்களின் போராட்டத்தை தீவிரவாதிகளின் போராட்டம், பிரிவினைவாதிகளின் போராட்டம் என பலவாறு திசை திருப்ப தொடர் பிரச்சாரங்கள் நடந்து வந்தன. சில முற்போக்குவாதிகள் கூட உழவர்களை புனிதப்படுத்த வேண்டாம் என்று அண்மைக் காலங்களில் எழுதி வருகின்றனர். 

"லத்தின் அமெரிக்காவில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், தனிநபர் வருமானங்கள் குறைவதற்கும் மக்கள் போராட்டங்கள் பின் அடைவதற்கும் இடையே நேரடி தொடர்பு இருக்கிறது" என்று ஜேம்ஸ் மெட்ராஸ் கூறுகிறார். இவருடைய கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் அண்மைக்காலங்களாக இந்திய துணைக்கண்டத்தில், தமிழகத்தில் நடந்து வருகின்ற போராட்டங்களும் அந்தப் போராட்டங்களுக்கு எதிராக திசை திருப்பப்படும் செய்திகளை உருவாக்குகிற ஊடகங்களும் திகழ்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

நிலத்தின் மீதான உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பது "நிலத்தோடு உழவுக்குடிகள் உறவாடிக் கிடந்தாலும், நிலத்தின் மீதான உரிமைகளை அதிகார அமைப்புகளும் அதிகார சேவகர்களும் கோயில்களின் பேராலும், வரிகளின் பேராலும், மடங்களின் பேராலும் மெல்ல மெல்ல தன் வயப்படுத்தி கொண்டதை வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன" என்று ஏர் மகாராசன் கூறுவதிலிருந்து தெரிகிறது. 

*உழுபவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும்.

*உழவனின் விளை பொருளுக்கு அவனே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

*உழவர்கள் கடனில்லா வாழ்வு வாழ வேண்டும்.

*உழவர்களின் பங்களிப்போடு வேளாண் பெருமதி ஒதுக்கீடு (budget) நடக்க வேண்டும்.

மேற்சொன்ன விடயங்கள் நடக்கிற நாளே உழவர்களின் திருநாள் ஆகும். அது பொதுவுடமையின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் கை கூடும். ஒரு தேசமானது தன் சொந்த மக்களையே ஒடுக்கும் பொழுது, பாட்டாளி வர்க்கம் அந்த மக்களுக்கான சுய நிர்ணய தேசத்தை வென்றெடுக்க முனைய வேண்டும் என்பார் லெனின். லெனினின் கூற்றை பஞ்சாப் உழவர் வகுப்பினர் நினைவு படுத்தி உள்ளனர். உழவர் புரட்சி நீடிக்கட்டும் !

உதவிய நூல்கள் : 

நா.வா பள்ளு பாட்டு ஆராய்ச்சி, ஏர் மகாராசன்

ஏகாதிபத்திய பண்பாடு, ஜேம்ஸ் பெட்ராஸ்

தமிழ் நாட்டு பாமரர் பாடல்கள், நா.வானமாமலை 

உலகாயுதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாய

x