வியாழன், 11 மே, 2023

கல்விக்குள் நாசிசம்-பாசிசம்-காவியிசம் : மரு.தமிழ் சிலம்பரசன்


தேசியவாதக் கல்விக்கொள்கை 2019இன் அடிப்படையே இனத்தூய்மைவாதம் (racism purity) கொண்டதுதான். 

ஹிட்லர் நாசிசத்தைப் பரப்புவதற்குக் கையில் எடுத்தது, பாடத்திட்டத்தின் (curriculum) வழியாகத் தங்களின் கொள்கைக்குத் தகுந்தாற்போல் குடிமகனை (citizenry) உருவாக்குவதற்கு எடுத்துக்கொண்டது, பாடத்திட்டத்தின் வழியாக நாசிசத்தைப் பரப்புவதுதான். 

முசோலினியும் தனது பாசிசக் கொள்கைகளைப் பரப்புவதற்கு - பாசிசத்தை விரும்புகிற குடிமகன்களை உருவாக்குவதற்கு - அதன் வழியாகப் பாசிச வேர்களைப் பரப்புவதற்கு நம்பியது பாடத்திட்டத்தில் மாற்றம்தான்..

காவியிசமும் அதைத்தான் செய்கிறது. பாடத்திட்டத்தின் வழியாகவே தங்களது இந்துத்துவா கொள்கையைப் பரப்புவதற்கு அல்லது இந்துத்துவா கொள்கை கொண்ட குடிமகன்களை உருவாக்குவதற்கு, தேசியவாதக் கல்விக்கொள்கை -2019 உருவாக்கியது. அதில் மும்மொழிக்கொள்கை, கலை, தாராளமான கல்விக்கொள்கை என்று எல்லாம் வரையறுக்கப்பட்டதற்கான அடிப்படையே இந்துத்துவாதான். 

இந்தக் காவியிசம் கல்விக்கொள்கையின் வரைவுத் திட்டத்தின் தலைவராக இருந்தவர் கஸ்தூரி ரங்கன். ரங்கன் ஓர் விஞ்ஞானி, விஞ்ஞானிக்கும் கல்விக்கொள்கைக்கும் என்ன தொடர்பு? என்கிற அடிப்படையான கேள்வியே நாம் இக்கல்விக்கொள்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

தேசியவாதக் கல்விக்கொள்கை பற்றி தமிழ்நாட்டில் சரியான விவாதம் நடத்தப்படவில்லை என்பதே என்னுடைய வருத்தம். 

கல்விச் செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியியல் சார்ந்த அறிஞர்கள் (Education policy makers) பேசவேண்டியவற்றை, அதற்குச் சற்றும் தொடர்பு இல்லாத நபர்களை வைத்து இன்றையளவும் தமிழ்நாட்டு ஊடகங்கள் விவாதம் செய்தது அல்லது செய்துகொண்டு இருக்கிறது என்பது ஒருபுறம் வருத்தமாக இருக்கிறது. 

அப்போது, இதுவரையில் இருந்த அடிப்படைக் கல்விக்கொள்கை என்ன என்று நீங்கள் கேட்கலாம். அதை வகுத்தவரே சொன்ன வார்த்தைகள் இவை. 

“நாம் கொடுக்கும் கல்வியின் மூலம் இவர்கள் ரத்தத்தாலும், நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள். சிந்தனை, ரசனை மற்றும் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள் “ - மெக்காலே.

இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டமே இதன் அடிப்படையிலானதுதான். 

மெக்காலேவின் கல்விமுறைதான் அனைவருக்குமான கல்வியைக்கொடுத்தது என்று வாதடுபவர்களும் உண்டு.

இந்தியாவின் குறுக்கே நெடுக்கே கல்வியின் அடிப்படையிலேயே பயணம் செய்து இருக்கிறேன். ஓர் சிறியகிராமத்தில்கூட சமஸ்கிருத மொழி பேசுபவர்களை நான் கண்டதில்லை. இந்தியா இப்படி இருக்கையில், பாமர மக்களினால் பேசப்படாத ஒரு மொழியைக் கற்கச் சொல்வதை மும்மொழிக் கொள்கையாக வரையறுத்து இருக்கிறார் கஸ்தூரிரங்கன். 

சரி, தேசியவாதக் கொள்கைக்கு (nationalistic education) மாற்றுதான் என்ன? அதுதான் சமூகவாதக் கல்விக்கொள்கை(society driven education).

இந்தியாவின் கல்வியில் மேம்பட்டவராகக் கருதப்படும் அறிவாசன் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், கல்வியியலில் தனது ஆசானாக அறிவித்தது ஜான் துவே (john dewey) அவர்களைத்தான் . 

ஜான், சமூகவாதக் கல்வியைப் பெரிதும் நேசித்தவர். 

“education is a social process; education is growth, education is not preparation for life, education is itself life”

 - jhone Dewey 

உலக அறிவியல் மையத்தின் வளர்ச்சியைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்கா, தனது மாவட்டங்களைக் கல்வியில் உயர்ந்த மாவட்டங்களாகப் ( education district) பிரிக்கிறது. ஆனால், இந்தியாவில் மாவட்டமாகப் பிரிப்பது வருவாய் மாவட்ட முறையில் (Revenue district ) பிரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் higher society education draft committee என்று எதுவுமே கிடையாது. அதற்குக் காரணம் சமூகவாதக் கல்விக்கொள்கையை வித்திட்ட ஜான் துவேன் கல்விப் புரட்சி எனலாம். 

பின்லாந்து, உலகக் கல்வியில் முதலிடம். காரணம், அங்கே கல்விக்கொள்கையை நிர்ணயிப்பது அந்தமாவட்டத்தைச் சார்ந்த மக்கள்தான், அதுதான் சமூகவாதக் கல்விக்கொள்கை.

தேசியவாதக் கல்விக்கொள்கை 2019, குலக்கல்வி வாழ்வியலையும் அதன் பண்பாட்டு மீட்டெடுப்புகளையும், அதன் மொழியுயையும் மக்களிடம் புகுத்துவதே இக்கல்விக்கொள்கையின் நோக்கம்.  

உலகத்தில் எந்தவொரு கல்வி நிறுவனங்களிலும் இல்லாத ஒரு வார்த்தை, இந்திய கல்வி நிறுவனங்களில் விளம்பரங்களில் உண்டு “100% placements”. உலகத்தின் முதன்மையான பல்கலைக்கழங்களில்கூட இப்படியொரு விளம்பரம் இருக்காது. காரணம், கல்வியை அவர்கள் விற்பனைப் பொருளாகப் பார்ப்பதன் விளைவுதான் 100% placements. கல்வி வேலைக்கானது இல்லை, கல்வி சமூகத்திற்கானதுதான்.

ஆனால், இந்தியாவில் அது வியாபாரமாக மாறியது. அதற்குக் காரணம் உலகச் சந்தை. மனிதர்களாலும் கல்வி வணிகர்களாலும் இந்தக்கொடுமை நடந்தேறியது. இவர்களின் கல்விக்கொள்கை அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும்.

மனிதனை ஒரு விற்பனையாளராக மாற்றும் முறை தேசியவாதக் கல்விமுறை. ஆனால், சமூகவாதக் கல்விக்கொள்கை அறிவையும், அதனை வைத்துப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்வது, அறிவுப்புரட்சியை உருவாக்குவது. 

பரதநாட்டியத்தைக் கலையாக மாற்றியதும், ஆனால் கரகாட்டத்தை இன்னும் கலையாக மாற்றாமல் போனதற்குக் காரணம், சமூகவாதக் கல்வியை பின்பற்ற மறந்ததுதான்.

தேசியவாதக் கல்விக்கொள்கை அல்ல; காவியிசத்திற்கான கல்விக்கொள்கை. National education policy - 2019 

தேசியவாதக் கல்விக்கொள்கை என்ன செய்ய நினைக்கிறதோ, அதைத்தான் தமிழ்நாட்டு கல்விக்கொள்கையும் செய்ய நினைக்கிறதோ என்கிற அச்சம் முனைவர் ஐயா ஜவகர்நேசன் ஐயா விலகலிருந்து தெரிகிறது.. 

மிகுந்த கவனத்தோடு கையாளுவோம் நமது மாணவர்களின் எதிர்காலம் ! 

குறிப்பு: சமூகவாதக்கல்வி கொள்கைப்பற்றி முனைவர் ஜவகர் நேசன் எழுதிய “A response to draft education policy 2019 “ In search of education nationalistic education vs social driven education எனகிற புத்தகம் உண்மையில் கல்வியைப்பற்றிய மாற்றுச் சிந்தனை நமக்குத் தரக்கூடியது.

இந்தியா முழுவதும் ஒற்றைச் சிந்தனையோடு இருந்தபோது, மாற்றாக இதுதான் இந்தியாவின் கல்விமுறையாக இருக்கவேண்டுமென்று எழுதிய முனைவர் ஜவகர் நேசன் அவர்களை வசைப்பாடியுள்ளது மனது ஏற்க மறுக்கிறது..  

     மருத்துவர் தமிழ் சிலம்பரசன் அவர்களது பதிவிலிருந்து...