வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

தெற்காசிய அரசியல் சதுரங்கமும், தமிழர் தற்காப்புப் போரின் அவசியமும்: இயக்குநர் தங்கம்


எல்லாவித அடையாளங்களையும் உதறுவது தான் ஒருவனை மானுடனாக்கும். இதைச் சாதிப்பது மனிதாயத்தையும் தாண்டிய மகா மனிதாயம்.

- பிரமிள்.

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று கவி பாடப்பட்ட நிலம்; இனி, 'வாழ்வதற்கு வக்கற்ற சுடுகாடு' என்று கவி பாடலாம். அப்படி ஒரு சீரழிவைச் சந்திக்கப் போகிறது தமிழகம். அப்படி ஒரு சீரழிவுக்கு நானும் நீங்களுமே முதன்மைக் காரணமாவோம் என்பதை முதன்மையாக ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் நமக்கு வரலாற்று விழிப்பு இல்லை. இங்கு வரலாறுதான் அரசியல். தமிழர் வரலாற்றைக் குலைப்பதும், வரலாற்றை சிதைப்பதும், வரலாற்றை திரிப்பதும், வரலாற்றை மறைப்பதும், வரலாற்றை அழிப்பதும் அரசியல். தமிழ்ச் சமூகத்தை வரலாற்று மயக்கத்திற்குள் ஆழ்த்திவிட்டுத் தமிழரை வென்று விடலாம் என்பதுதான் திட்டம். இப்படி ஒரு வரலாற்றுத் தாக்குதலுக்கு ஆட்பட்ட மக்கள் திரள், தமது எந்த அடையாளம் அழிக்கப்படுகிறதோ அந்த அடையாளத்தைப் பேணுவதற்காக, அந்த அடையாளத்தை முன்னிறுத்தி ஓராற்றலாகத் திரள்கிறது. இந்தத் திரட்சியை இன்ன வித அடையாளமாக - அதாவது தமிழர் என்ற அடையாளமாக - உலகோர் ஏற்க வேண்டும் என்று உலகோரிடம் விண்ணப்பிக்கிறது. இந்த விண்ணப்பம், குறுகின வாதமல்ல. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற விழுமியத்தை நனவிலி மனதிலிருந்தே பேணி வருகிற ஒரு மக்கள் திரளிடம் இந்த விழுமியத்தைச் சுட்டிச் சுட்டி, இந்த மக்கள் திரள் ஒன்றுதிரண்டுவிடாமல் பார்த்துக்கொள்கின்றன அழிவாற்றல்கள். அந்த அழிவாற்றல்களின் தந்திரத் தாக்குதல்களிலிருந்து சந்ததியைக் காப்பதற்காகத்தான் தமிழர் தம்மைத் ‘தமிழர்’ என்கின்றனர். எனவே தமிழர் என்று தம்மை அழைத்துக் கொள்வதை, குறுகின வாதம், இனவெறி என்றெல்லாம் குறிப்பிடுகிற அந்த மாய்மாலக்காரர்கள் இனிமேல் அப்படி குறிப்பிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழர் தம்மைத் 'தமிழர்' என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் பொழுதிலெல்லாம் 'நீ தமிழன் அல்ல திராவிடன்' என்று திரிக்கின்றனர். 'நீ தமிழன் அல்ல, இந்து' என்று அதிகாரம் செலுத்துகின்றனர். 'யார் தமிழர்?' என்றுவேறு வினாத் தொடுக்கிறார்கள். சப்பான் மொழி பேசும் ஒருவர் தன்னை சப்பானியர் என்று அழைத்துக்கொள்வதையும், பிரெஞ்சு மொழி பேசும் ஒருவர் தன்னை பிரெஞ்சுக்காரர் என்று அழைத்துக்கொள்வதையும் ஏற்றுக் கொள்கிறவர்கள், தமிழர் தம்மைத் 'தமிழர்' என்று அழைத்துக் கொள்ளும்போது மட்டும் பொங்கி எழுகின்றனர். 'இனவாதம்' என்கின்றனர். 'இனவெறுப்பு’ என்கின்றனர். இனவெறி' என்கின்றனர். 'குறுகிய மனப்பான்மை' என்கின்றனர்; இன்னும் என்னென்னவோ! மேற்படி சப்பான்காரரிடமும், பிரெஞ்சுக்காரரிடமும், இன்னபிற தேசத்தாரிடமும் சென்று இப்படித் திரித்துரைக்க இயலுமா? இயலாது. ஆனால் தமிழகத்தில் இயலும். காரணம் - கருத்தியல் மயக்கமும், வரலாற்று போதையும் தமிழரின் தலைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில், மிகத் திட்டமிட்டு தமிழ்ச் சமூகத்திற்குள் கருத்தியல் மயக்க மருந்துகளும், வரலாற்றுப் போதை மருந்துகளும் செலுத்தி தமிழ்ச் சமூகத்தை வரலாற்று விழிப்பற்ற மக்கள் கூட்டமாக மாற்றியமைத்திருக்கிறார்கள். இந்த மக்களைக் கருத்தியல் மயக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கும், வரலாற்றுப் போதையிலிருந்து தெளிவிப்பதற்குமான மாற்று மருந்துகள் தரப்படும்போதெல்லாம், ‘தமிழ்ச் சமூகத்திற்குள் நஞ்சு புகட்டப்படுகிறது’ என்கிறார்கள்.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டுத் தமிழரது வரலாற்றில் , முள்ளிவாய்க்கால் இனவழிப்பு ஆண்டாகிய 2009 துவங்கி 2019 வரையிலான இந்தக் காலகட்டமானது ‘தலைமை நீக்கம் செய்யப்பட்ட’ தமிழ்ச் சமூகத்தின்’ இருண்டகாலமாகும்.

முதலில், தமிழர் தம்மைத் தமிழர் என்று அழைத்துக்கொள்வதை இனவாதம் என்றும், இனவெறுப்பு என்றும், இனவெறி என்றும், குறுகிய மனப்பான்மை என்றும் கருத்துரைப்பவர்களுக்கு ஒரு விளக்கம். தனித்துவமான இயற்கையமைப்புகள் கொண்டு விளங்கும் நிலப்பகுதி ஒன்றில், அந்த நிலத்திற்கேயுரிய தட்பவெப்பம், பருவநிலை, பயிர்கள், உயிர்கள் ஆகியனவற்றை இயற்கை வடிவமைத்திருக்கிறது. இந்த இயலொழுங்கிலிருந்து தனது வாழ்வைப் பெற்றுக் கொள்கிறது ஒரு மனிதத் திரள். தனக்கென்று ஒரு மொழியை, பல்துறை அறிவை, வாழ்வியலைக் கண்டடைந்து சந்ததிப்பெருக்கம் செய்கிறது. சந்ததிப் பெருக்கத்தின்போது எதிர்கொள்கிற வரலாற்றுச் சவால்களைச் சந்தித்து மீள்கிறது. இந்த வரலாற்றுச் சவால்கள், குறிப்பிட்ட அந்த மனிதத் திரளுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்கும் பொழுதில், பிற மனிதத் திரளிடம் இருந்து தம்மைக் காத்துக்கொண்டு சந்ததியைத் தழைக்கப் பண்ணுவதற்காக எண்ணற்ற நுட்பங்களைக் கற்றுக்கொள்கிறது. இப்படிக் கற்றுக்கொண்டவற்றைக் கடைபிடிக்கிறது. கடைபிடித்தவற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்துகிறது. இந்த மரபு, வேறொரு மனிதத் திரளின் மரபிலிருந்து வேறுபட்டதாகும். இந்த வேறுபட்ட தன்மையே அந்த இனத்தின் தன்மையாகும். ('இனம்' என்ற சொல்லை விளக்கப் புகுந்தால் ஒரு நூலளவு மிகும் என்பதால் விளக்கம் நிறுத்தப்படுகிறது.) அந்தத் தன்மையைக் கொண்டு, அந்த மனிதத் திரள் தன்னை அழைத்துக் கொள்வதில் பிழையொன்றுமில்லை. ஆனால் இந்த வேறுபட்ட தன்மையை, தன்மையாக மட்டுமே புரிந்து கொள்வதை விடுத்து, கூட்டகந்தையாகவும், வக்கிரமாகவும் உருமாற்றிக் கொள்ளும்போது இனக்கேடுகள் பிறப்பிக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்காலில் பார்த்தோம். உலகெங்கும் காண்கிறோம். ஹிட்லர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஹிட்லர் என்றொரு வக்கிரம் பீடித்த மனநோயாளி செத்துப் போன பின்னர், உருவாகி வந்ததொரு உலக ஒழுங்கில் நுட்பங்கள் மிகுந்த நவீன இனக்கொலை வடிவங்களைக் கண்டடைந்தனர் இனவெறியர்கள். பூமிப்பந்து நெடுகிலும் இனவெறிக் கொலைகளை இன்னமும் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றனர் இந்த இனவெறியர்கள். நான்காம் ஈழப்போர் முடிவுக்கு வந்தபோது ஒன்றரை லட்சம் ஈழத்தமிழரை வதைத்துத் துன்புறுத்தி சிதைத்து கொன்றிருந்தது சிங்கள பௌத்தம். உண்மையில் சிங்கள பௌத்தம் என்பது வெற்று முகமூடிதான். மிதமிஞ்சிய பொருள் வேட்கையும், மேலாதிக்க அகந்தையும், இனவக்கிரமும், தாழ்வு மனப்பான்மையும் உள்ளடக்கமாகக் கொண்ட உலக வல்லாதிக்கங்களின் ரத்தக்காட்டேரி முகங்களை மறைத்துக் காத்தது சிங்கள பௌத்த முகமூடி. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்றதொரு வரலாற்று அநீதியின் மீது ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற ஒரு முத்திரை பதித்து, அரசு பயங்கரவாதத்தையும், வல்லாதிக்க விரிவாக்கத்தையும், இன வக்கிரத்தையும் உலகத்தாரிடமிருந்து மறைக்க முற்பட்டனர் உலக பயங்கரவாதிகள். 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நோக்கம் தமிழரின் தலைமையை அழிப்பது; தமிழரின் கூட்டாற்றலை அழிப்பது; தமிழருக்கென்று உரிமை பெற்று வரலாற்றில் உருவாகி வந்துவிட்ட பொதுவுடைமைத் தேசமொன்றைச் சுவடற்றுப்போகச்செய்வது. மட்டுமின்றி, இனிவரும் காலங்களில் தமிழினம் அஞ்சியஞ்சி, நடுநடுங்கி, கையாலாகாத கோழைகளாக வரலாறு நெடுக வேற்று இனத்தாருக்குக் கீழே வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றதொரு வக்கிரநோக்கமும் இதனடியில் இருக்கிறது. வேற்றினத்தாருக்குக் கீழே தமிழரை அடிமைப்படுத்துதல் வேண்டும் என்ற ஆரியத்தின் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் தமிழ்நாட்டு ஆட்சி அதிகார அரசியலில் உள்ளிழுக்கப்படுகின்றனர், தமிழரல்லாத பல புதிய ஆரியத்துவ ஆற்றல்கள். இந்த அச்சத்தை, இந்த நடுக்கத்தை, இந்த கையாலாகாத்தனத்தை, இந்தக் கோழையுணர்வை - தீவுத் தமிழனுக்குள் மட்டுமல்லாது, தீபகற்பத் தமிழனுக்குள்ளும் விதைத்திட வேண்டும் என்பது இனவெறியின் நீட்சி. இலங்கைத் தீவில், சிங்கள பௌத்தம் என்ற பதங்கொண்டு தாண்டவமாடிய இனக்கொலை வடிவமானது, இந்தியத் தீபகற்பத்தில் வளம், வளர்ச்சி என்கிற லேபிள்களை ஒட்டிக்கொண்டு தமது ஆட்டத்தை, தமிழ் நிலத்தில் நடத்தி வருகிறது. தீவுத் தமிழ் நிலத்தில் சிங்கள பௌத்தத்தால் வடிவமைக்கப்பட்ட இனக்கொலை, தீபகற்பத் தமிழ் நிலத்தில் ஆரிய இந்துத்துவத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆரிய எதிர்ப்பானது, தொல்காப்பியருக்கும் முந்தைய காலத்திலேயே தமிழ் நிலத்தில் வேர்பிடித்து, பிரிட்டிஷ் இந்தியாவில் அயோத்திதாசர், பெரியார் வழியாகத் தழைத்து 1967இல் ஆட்சியதிகாரமாக கிளை விரித்துப் படர்ந்தது. இந்த ஆரிய எதிர்ப்பை அழித்தொழிப்பதென்றால் தமிழர் மாய வேண்டும் என்பது ஆரியத்தின் கோட்பாடு. எனவேதான் அண்மைக்காலத்தில், முள்ளிவாய்க்கால் இனக்கொடுங்கொலைக்கு பின்னரான காலத்தில், தமிழினத்தின் மீதான தாக்குதல் நுண்ணிய ஆரிய வடிவெடுத்து செயலாகி வருகிறது ஆரியத்தின் அதிகார வடிவமான டெல்லியானது வளம், வளர்ச்சி என்றெல்லாம் முழங்கியபடி தமிழரது மொழி வளம், அறிவு வளம், இயற்கை வளம், பண்பாட்டு வளம், வரலாற்று வளம், தொன்ம வளம் ஆகிய அனைத்தின் மீதும் போர் தொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் செயற்கை மின்வெட்டை நடைமுறைப்படுத்தி, தமிழரது தொழில் துறைகளைப் பாழ்படுத்தியது. குறிப்பாகக் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் வலுக்கொண்டு நின்ற தமிழரின் தொழிற்கட்டுமானங்களைச் சீர்குலைத்தது செயற்கை மின்வெட்டு. தமிழரது தொழில் வாய்ப்புகளும், பொருளீட்டுக் கருவிகளும், தொழில் தொடர்புகளும், வணிக வழிகளும் செயற்கையான முறையில் தமிழ்நாட்டுச் சிறு முதலாளிகளிடமிருந்தும் குறுமுதலாளிகளிடமிருந்தும் வன்மத்துடன் பிடுங்கப்பட்டன. தமிழ் முதலாளி வர்க்கத்தின் மீது தாக்குதல் ஏவப்பட்ட பின்னர், தமிழ்த் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் தாக்குதல் ஏவப்பட்டது. வேற்றினத்தார் தமிழகத்துக்குக் ‘கடத்தி’ வரப்பட்டு, தமிழ் நிலத்தின் வேலைவாய்ப்புகளில் அமர்த்தப்பட்டனர். சட்டவரையறைகளின் துணைகொண்டு, அரசுப்பணிகளில் முக்கால்வாசிக்கும் மேலே வேற்றினத்தார் அமர்த்தப்படுகின்றனர். இதற்கு உகந்தவாறு சட்ட வரையறைகள் திருத்தியமைக்கப்பட்டன. 

தமிழரின் வேலைவாய்ப்புகள் வடவரால் பறித்தெடுக்கப்படுகின்றன என்பதைக் காட்டிலும் பேராபத்து என்னவெனில், காலங்காலமாகத் தமிழர் வாழ்ந்து வந்த மரபு நிலம், தாயக நிலம் - கலப்பு நிலமாக உருமாற்றம் பெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழரது வரலாற்றுத் தாயகத்தை அழித்து விடுவது என்ற நெடுந்திட்டம் இது. மட்டுமின்றி, மொழிக் கலப்பை உருவாக்கி, தமிழிலிருந்து புதியதொரு மொழியை - கன்னடம், தெலுங்கு, மலையாளம் போல இன்னுமொரு புதிய மொழியை - உற்பத்தி செய்து விடுவது என்பதும் நெடுங்காலத் திட்டமாகும். அப்படியென்றால் தமிழரின் இன்றைய தாயக நிலம் சுருங்கும். தமிழரது தாயக நிலத்தைக் கலப்புநிலமாக்குவது, தமிழரது தாய்மொழியைக் கலப்பு மொழியாக்குவது போன்றவற்றுக்கு அப்பால், தமிழ் மொழியையே அழித்துவிட வேண்டுமென்ற திட்டமும் இதனடியில் உண்டு. அந்தவகையில் தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் ஆகியன தமிழ்நாட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும்.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் - பிரிட்டிஷ் இந்தியாவிலேயே - ஹிந்தித் திணிப்பு என்ற தாக்குதல் முறை மூலம் தமிழ் மொழியை அழிப்பதற்காகக் காய்நகர்த்திப் பார்த்தது ஆரியம். இன்றைக்கும் அரசு அலுவல் மொழி என்றவொரு சட்டத்தை அமல்படுத்தி அரசு அலுவலகங்களில் கட்டாய ஹிந்தித் திணிப்பை நடைமுறைப்படுத்தி, தமிழ் மொழியின் மீது தாக்குதல் நிகழ்த்திவருகிறது. தமிழரது பண்பாட்டுக்குள் வடவரின் பண்பாடுகளைக் கலப்பது என்ற திட்டமும் வெளிப்படையாக நிறைவேறி வருகிறது ‘கலாச்சார நடவடிக்கைகள்’ என்ற பெயரில். தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை அப்புறப்படுத்தாமல் தமிழரை வெல்ல முடியாது என்பதால், தமிழரின் வழிபாட்டு முறைகளின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல் வடிவம்தான் ரத யாத்திரை. ராமர் கடவுளாக இருந்துவிட்டுப் போகட்டும். ஒருபோதும் அவர் தமிழ்க் கடவுள் அல்ல.

பிறப்பின் அடிப்படையில் மானுடர்களைக் கீழ்மைப்படுத்தும் வர்ணாசிரம கீதை புனித நூலாக இருந்துவிட்டுப்போகட்டும். ஒருபோதும் அது தமிழரின் புனிதநூல் அல்ல. தமிழர் என்பவர் கடவுளை மறுக்கலாம்; ஏற்கலாம்; ஏற்கிற தமிழர் எந்தக் கடவுளையும் வணங்கலாம்; எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்; எந்தப் புனித நூலையும் பின்பற்றலாம் - இதுதான் தமிழர் பண்பாடு. ‘வழிபாடு’ என்பதை இறுக்கமான சட்டமாக மாற்றுகிற மேலாதிக்கத் திமிர், தமிழரது ‘வழிபடு பண்பாட்டில்’ இல்லை. சாதியற்ற வாழ்வே தமிழரின் அடிப்படை இலக்கணம் என்றும், சமயமற்ற வாழ்வு தமிழரின் விருப்பம் என்றும் கொள்ளலாம். இந்தியத் தீபகற்பத்தில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கும், வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் அடித்தளமாய் இருக்கிற இட ஒதுக்கீட்டுக் கொள்கையானது, இந்திய தீபகற்பத்துக்குத் தமிழர் உவந்தளித்த கொடையாகும். அதனால், தமிழரை பழிவாங்குவதற்காக ஆரியத்தால் கொண்டுவரப்பட்டதே ‘நீட்’. அது இப்போது மருத்துவக்கல்வி அளவில் மட்டுமே அல்லாமல் ஆட்சிப்பணி வரை, ஐ.ஏ.எஸ். தேர்வு வரை நீட்சி கொண்டிருக்கிறது. 

இலங்கையில் சிங்கள பௌத்தம் இதே போன்றதொரு தாக்குதலை எழுபதுகளின் துவக்கத்தில், ‘தரப்படுத்தல்’ என்ற பெயரில் ஈழத் தமிழர் மீது ஏவியது. இலங்கையில் கல்வி வாய்ப்புகளிலும், வேலை வாய்ப்புகளிலும் தமிழருக்கான பங்கினைத் தட்டி பறிப்பதற்காகச் சிங்களம் தீட்டிய நயவஞ்சகத் திட்டத்தின் சட்ட வடிவம் என்று, ‘தரப்படுத்தலை’க் குறிப்பிடலாம். வளமான எதிர்காலக் கனவுகளோடு கல்வி கற்றுக்கொண்டிருந்த ஈழத்து இளந்தலைமுறையின் எதிர்காலக் கனவுகள் கருகின. அப்போது வெகுண்டெழுந்த மாணவர்களுள் ஒருவரான உரும்பிராய் சிவகுமாரன், பருத்திக்காட்டில் குப்பி கடித்து வீரச்சாவைத் தழுவி வீரவித்தாக விழுந்து, பிற்காலத்து ஈழ விடுதலை இயக்கப் போராளிகளாக முளைத்தெழுந்தார். அன்றைக்குத் தீவுத் தமிழ் நிலத்தில் சிங்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தரப்படுத்தலை, இன்றைக்கு தீபகற்பத் தமிழருக்கு எதிராகக் கையாண்டு வருகிறது டெல்லி. தமிழரின் வாழ்வை பறிக்கிற சதி இது.

தமிழரது நிலத்தில் ஏராளமான கனிம வளம் புதையுண்டு கிடக்கிறது. இந்த வளத்தைப் பயன்படுத்துதல் என்கிற பெயரில் தமிழரது பூமியைக் குடைந்து, தமிழ் மண்ணை மலடாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னேறிய நாடுகள் எல்லாம் இவ்வகையான மரபாற்றல் வடிவங்களைப் புறக்கணித்து, தங்களது கடந்த கால மடைமைக்காகத் துயருற்று, மரபுசாரா ஆற்றல் வடிவங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. எனவே நவீனப் பார்வை கொண்டவர்கள் இந்தத் திட்டங்களை எதிர்க்கிறார்கள். இந்தத் திட்டங்களை எதிர்ப்பவர்கள் மீது, ‘நக்சலைட் பயங்கரவாதிகள்’, ‘தமிழ்த்தேசிய பயங்கரவாதிகள்’, ‘பிரிவினைவாதிகள்’ என்ற அடைமொழிகளை ஒட்டி, எல்லாக் கேடுகெட்ட வழிகளைக் கொண்டும் அழித்துவிட முனைப்பு காட்டுகிறது அதிகார வர்க்கம். ‘இந்தத் திட்டங்களை எதிர்க்கிற தமிழர்கள் நவீனத்தன்மை வாய்க்கப் பெறாதவர்கள்,’ என்பது போல், ஒரு பிம்பம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. கனிம வளங்களுக்காக வரம்பேதுமின்றி பூமியைக் குடையலாம் என்று வாதிடுபவர்களே நவீன அறிவு வாய்க்கப்பெறாதவர்கள். கனிம வளத்தைச் சுரண்டி எடுப்பதற்காகக் காவிரியை அழிக்கிற இவர்கள்தான், குடிநீர் தேவைக்காகத் தென்னிந்திய நதிகளை இணைக்கத் திட்டமிடுவதாகப் புளுகுகின்றனர். காவிரி ஆற்றினை வற்றச்செய்து தமிழரை அப்புறப்படுத்தினால், இன்னும் ஏராளமான வளத்தை தோண்டியெடுக்கலாம். காவிரியை வற்றச் செய்யலாம் என்பது டெல்லியின் நீண்ட கால திட்டம். காவிரி வற்றினால் தமிழ் இனம் பூண்டோடு அழியும், குமரிக்கண்டத்தின் தண்பொருநை ஆற்று நாகரிகத்தையும், சிந்துநதி நாகரிகத்தையும் இழந்ததுபோல் காவிரி ஆற்று நாகரிகத்தையும் தமிழர் இழப்பர். பின்னர் நிலமிழந்த, வரலாறிழந்த, மரபிழந்த பலவீனக் குடிகளாகத் தமிழரை மாற்றி உலகெங்கும் ஏதிலிகளாக ஓடவிட வேண்டும் என்பதே டெல்லியின் அவா. தமிழருக்கு எதிராக டெல்லி நடைமுறைப்படுத்தி வருகிற இந்த வகையான வஞ்சகத் திட்டங்களைத்தான், ‘நுட்பங்கள் மிகுந்த நவீன இனக்கொலை வடிவங்கள்’ என்று நாம் விளக்கியிருந்தோம். தமிழ் நிலத்தின் மீது, தமிழினத்தின் மீது இப்படி ஒரு நுட்பமான தாக்குதலை நிகழ்த்துவதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமானால், ‘தெற்காசியச் சதுரங்கம்’ என்றொரு ராஜதந்திர விளையாட்டை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். உலக வல்லரசுகளின் ராணுவ ராஜதந்திர ஆட்டமிது.

செயற்கையறிவு கோலோச்சவிருக்கிற நாளைய உலகரசில், ஓரரசுக்காக வல்லாதிக்கங்கள் தமக்குள் மோதிக்கொள்ளும்பபொழுது, தமிழ்ப் பெருங்கடல் முக்கியப் பாத்திரம் வகிக்கப்போகிறது; அந்த வரலாற்றுத் தருணத்தில் திருகோணமலைத் துறைமுகத்தின் போரியல் பங்களிப்பு, வல்லாதிக்கங்களின் வலுச் சமநிலையைக் குலைக்கப் பண்ணுவதற்கும், நிலைக்கப் பண்ணுவதற்குமான போரியல் சிறப்பு கொண்டதாகும். கீழ்த்திசை நாடுகளுக்கும் மேற்றிசை நாடுகளுக்குமிடையே குறைந்தது மூவாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட கடல் வணிகப் பாதையில் இயற்கை அமைத்துக் கொடுத்திருக்கும் அழகான நிலத்திட்டு ஒன்று உள்ளது; அதன் பெயர் இலங்கைத் தீவு. அந்தத் தீவில் - கிழக்கிலங்கையில் - அமைந்திருக்கிற திருகோண மலையின் வங்கு போன்ற துறைமுக அமைப்பானது, மிகச்சிறந்த கப்பற்படைத் தளமாகப் புழங்கப்படுவதற்குரியது. போரியல் அமைப்புக்கூறுகள் இயல்பாக வாய்க்கப்பெற்ற துறைமுகம். செயற்கை அறிவின் ஆட்சிக்குக்கீழ், இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மாறி எழும்பப்போகிற புதியவகை உலகவொழுங்குகளில், மானுடச் சட்டதிட்டங்களில், வல்லாதிக்கங்களுக்கிடையே, ‘உலக அரசு’ எவருடையது என்ற வல்லாதிக்க போட்டிதான் அனைத்தையும் தீர்மானிக்கவிருக்கிறது. இந்தத் தீவை எந்த வல்லரசு கைப்பற்றுகிறதோ, அந்த வல்லரசே தெற்காசியாவின் கட்டளைக்காரன். திருகோணமலைத் துறைமுகம் இலங்கைக்குரியது அல்ல. ஈழத்தமிழருக்கு உரியது. தமிழரின் நிலப்பகுதி. தமிழரின் சொத்து. சிங்களவர்களின் இன வித்தாகிய கலிங்கத்து விஜயனையும், விஜயனின் கூட்டாளிகளையும் சுமந்து வந்த மரக்கலம் இலங்கைத் தீவில் கரைதட்டிய காலத்திற்கு முன்னரே, சந்ததிகளை உருவாக்கி வாழ்ந்து வந்திருந்தனர் தமிழ் வேட்டுவக் குடிகள். இன்றைய ஆரிய இந்து மதத்தின் அடித்தளம் தமிழ்ச் சைவ சமயம்; சைவத்தின் தோற்றுவாய் ஆதி சைவம்; ஆதி சைவத்தின் ஊற்றுவாய் பூர்வலிங்க வழிபாடு; இந்தப் பூர்வ லிங்க வழிபாடு மேற்கொண்டிருந்த ஆதித் தமிழர்களின் தொன்மையான நிலமாகும் திருகோணமலை. தமிழரது இந்தத் தொல் நிலத்தை வெறிகொண்டு வேட்டையாட விசையுறுகின்றன உலக வல்லாதிக்கங்கள். இந்த வேட்டை வெறிகொண்ட உலக வல்லாதிக்கங்கள் தமிழர் சிங்களர் முரணைத் தமிழரிடமிருந்தும், சிங்களவரிடமிருந்தும் பிடுங்கி தமது கையில் வைத்துக்கொண்டு, ‘தெற்காசியச் சதுரங்கம்’ என்றொரு ராணுவ ராஜதந்திர விளையாட்டை ஆடிவருகின்றனர். மேலும், தமிழர் சிங்களர் முரணை உற்பவித்ததும் இந்த வல்லாதிக்கங்கள்தான்; சிங்களர் அல்லர்! மட்டுமன்றி, ‘தமிழர் சிங்களர் முரணை’, அந்தத் தீவின் ஆதிபத்யக் குடிகள் தமக்குள் ஒன்றிணைந்திவிடக்கூடாது என்பதற்காகவே, தீராப்பகையென மாற்றிவிட்டன இந்த வல்லாதிக்கங்கள்.

இலங்கைத் தீவின் தமிழ் நிலப் பகுதியில் ஆயுதம் தரித்து நிற்பவர் எவரோ, அவரே சதுரங்கப் பலகையின் நடுக்களத்தை ஆதிக்கம் செய்பவர். 2009 மே 17 அன்று புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்தனர். எனவே அன்றைய தேதியில் இருந்து நடுக்களத்தை ஆதிக்கம் செய்து வருகிறது கொழும்பு. யாழ்ப்பாணத்தின் பத்து லட்சம் தமிழர் நடுவே இரண்டு லட்சம் சிங்களப்படையினர் ஆயுதந்தரித்து நிற்பதாகவும், இந்தப் படையணிகளின் குடும்பத்தாரை யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகக் குடியமர்த்தும்படி ஒரு திட்டம் இருப்பதாகவும், அப்படியது நிறைவேற்றப்படுமெனில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை தமிழர் துவக்கவேண்டி வருமென்றும், சிங்கள ஆயுதப் படையினரைத் தமிழரின் மரபுத்தாயகத்திலிருந்து வெளியேற்ற வேண்டிவருமென்றும், முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் கலைந்து சென்றிருக்கிற புலிகள் மீண்டும் ஒருங்கிணைந்து தமிழ் நிலத்தை மீட்பதற்கு போராடுவார்களென்றும் அறிவித்திருக்கிறார் காசி ஆனந்தன்.

நடுக்களத்தைக் கைப்பற்றுவதற்காக மீண்டுமொரு ‘ஆட்டம்’ துவக்கப்படுமா? அது, ஐந்தாவது ஈழப்போருக்கு வழிவகுக்குமா? ஐந்தாவது ஈழப்போரில் சிங்களத்தின் கையிலிருந்து நடுக்களத்தைப் பறித்துவிட முடியுமா - முடியாதா? தமிழர் பறித்துக்கொண்டால், தமிழரின் ஆதிக்கத்திலேயே இருக்குமா? அல்லது சிங்களரிடமிருந்து பறிப்பதை டெல்லியிடம் கைமாற்றிவிடுவரா ‘இன்றைய’ ஈழத்தமிழர்? அல்லது ‘வழமைபோல்’ நடுக்களத்தை ஈழத்தமிழரிடமிருந்து வலுவந்தமாகக் கைப்பற்ற முனையுமா டெல்லி? அல்லது, 1983ஆம் ஆண்டைய கறுப்பு ஜூலை இனப்படுகொலைக்குப் பின்னர் தமிழ் இயக்கங்களுக்குப் பயிற்சியும், ஆயுதமும், பொருளும் கொடுத்து உருவாக்கியதுபோல் மீண்டுமொரு முயற்சியை முயற்சித்து பார்க்குமா‌ டெல்லி (1987 போல)? ஈழப்போர் தொடர் வரிசையில், ஐந்தாவது ஈழப்போர்தான் இறுதிப்போரா? அல்லது ஐரோப்பாவின் சிலுவைப்போர் போல நூற்றாண்டுகள் நீடிக்கிற ஆசியப் போரா ? எது எப்படியாயினும், தமிழர் வாழ்வை ஈவிரக்கமின்றிச் சிதைத்து வருகிறது வல்லாதிக்கங்களின் தெற்காசியச் சதுரங்க ஆட்டம். தமிழர் வாழ்வை மட்டுமல்ல; சிங்களர் வாழ்வையும்; சிங்களர் வாழ்வை மட்டுமல்ல; இந்தியர் வாழ்வையும்; இந்தியர் வாழ்வை மட்டுமல்ல; ஆசியாவின் அமைதியையும் சிதைக்க கூடியது வல்லாதிக்கங்களின் தெற்காசியச் சதுரங்கம்.

தெற்காசியச் சதுரங்கம் என்பது ஒரு பெருந்தொகுப்பு ஆட்டம்; ஒற்றை ஆட்டமல்ல. ‘கொழும்பு - பெய்ஜிங் கூட்டு’ என்பது ஒரு அணியாகவும், ‘டெல்லி - வாஷிங்டன் கூட்டு’ என்பது இன்னொரு அணியாகவும் ஆட்டப் பலகையை விரித்து எதிர்நிற்கின்றனர். இந்த முதன்மையணிகளின் பின்னிணைப்பாகத் துணையணிகளும் உண்டு. இலங்கைத் தீவின் தமிழ்நிலமும் இந்தியத் தீபகற்பத்தின் தமிழ்நிலமும் இணைந்த பொதுத் தமிழ்நிலமே இன்றைய ஆட்டப்பலகையாகும். அதாவது 2009 மே 17-க்கு பின்னரான ஆட்டப்பலகையாகும். பொதுவில் தமிழர் குறித்து, ஈழத்தமிழர், தமிழ்நாட்டுத் தமிழர் என்ற முந்தைய காலவரையறுப்புகள் அழிக்கப்பட்டு, ஒட்டுமொத்தத் தமிழ்நிலமும் ஆட்டப்பலகையாக விரிக்கப்பட்டிருக்கிறது. தீவுத் தமிழ்நிலம் கொழும்புவின் ஆதிக்கத்திற்குள் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டது. பிரபாகரனின் மறைவுக்குப் பின்னரிது நிறைவேற்றம் பெற்றிருக்கிறது. தீபகற்பத் தமிழ்நிலத்தை டெல்லியால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை. விடுதலைப்புலிகளை ஆற்றலிழக்கச் செய்த பின்னர்தான், தீவுத் தமிழ்நிலத்தைக் கொழும்புவால் கைப்பற்ற முடிந்தது போல, திராவிட இயக்கங்களை ஆட்சியிழக்கச்செய்த பின்னர்தான் தீபகற்பத் தமிழ் நிலத்தை டெல்லியால் கைப்பற்றமுடியும். தீவுத்தமிழ் நிலத்தைக் கைப்பற்றிவிட்டது கொழும்பு. தீபகற்பத் தமிழ்நிலத்தை கைப்பற்றுவதற்கான போரினை நடத்திக்கொண்டிருக்கிறது டெல்லி. அதுதான், ‘கழகம் இல்லாத தமிழ்நாடு’ என்ற முழக்கம். அது முழக்கமல்ல; போரியல் யுக்தி. கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை நிறைவேற்றிவிட்டது டெல்லி. 67-க்குப் பின்னர், கழகங்கள் மட்டுமே தமிழ்நாட்டை ஆண்டன. குறைந்தபட்சம் கேரளா, மேற்குவங்கம், திரிபுரா போல இடதுசாரிகள் ஆட்சியமைப்பதற்காகவாவது தமிழ்நாடு இடம் கொடுத்திருந்தால் தமிழ்நாட்டை இந்திய நாட்டின் ஒரு மாநிலமாக டெல்லி கருதியிருக்கும். இடதுசாரிக் கட்சிகளும் டெல்லிக் கட்சிகள்தானே? காங்கிரசும், பிஜேபியும் வலதுசாரிய டெல்லி என்றால், இ.பொ.க(மா)வையும், இ.பொ.கவையும் இடதுசாரி டெல்லி என்று சொல்லலாம். தமிழரின் தேர்ந்தெடுப்பு வலதுசாரியமா? இடதுசாரியமா? என்பதல்ல. தமிழியமா? டெல்லியமா? என்பதே. ஆரியத்தின் தற்கால நிழல்வடிவமே டெல்லியம் என்பதைத் தமிழரின் வரலாற்று ஆழ்மனம் உணர்ந்திருக்கிறது. எனவேதான் 1967-லிருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்நாட்டை அண்டவொட்டாது, டெல்லியை விரட்டடியடித்துவருகிறது தமிழரின் வரலாற்றுத் தொலையுணர்வு. இந்த வரலாற்றுத் தொலையுணர்வு, துணைகண்டத்தின் எந்தவொரு தேசிய இனத்திற்கும் வாய்த்திராதவொன்று. சிந்துவெளியில் முதன்முதலாக ஆரியரும் தமிழரும் நேர்கொண்ட துவக்கத் தருணத்திலேயே தெறித்தெழுந்த பகைநெருப்புப் பொறியானது, காலச் சூறாவளியில் விசிறப்பட்டு, நெளிந்தோடும் வரலாற்றின் மீதூர்ந்து, நெருப்புப் பாம்பைப்போல் பற்றியிருந்து படர்ந்து பெருகுகிறது. எனவே தமிழருக்கு மட்டுமே இந்த வரலாற்றுத் தொலையுணர்வு வாய்த்திருக்கிறது. மேலும், உலகின் மிக மூத்த பாசிசமான ஆரியத்தோடு இடையறாது மோதி வருகிறது தமிழியம் ; இந்திய வரலாறு என்பதே, ‘தமிழியம் Vs ஆரியம்’ என்பதுதான்.

தமிழரது வரலாற்று ஆழ்மனம் மிகவும் புதிரானது. பொதுவில், ஒரு இனத்தின் தொன்மம் தாக்கப்படும்பொழுது அந்த இனத்தின் வரலாற்று ஆழ்மனம் விழிப்புறுகிறது. தனது இனப்பிறப்பு காலந்தொட்டு, நவீனகாலம் வரையிலான நினைவைப் பிழிந்து அதன் சாரத்தையுறிஞ்சி வரலாற்று ஆழ்மனதைப் புதுப்பித்துக் கொள்கிறது அந்த இனம். ஒரு இனத்தின் வரலாறு என்பது சில நூறு ஆண்டுகள் என்றாலும், பல்லாயிரம் ஆண்டுகள் என்றாலும் - அந்த இனத்தின் தொன்மம் தாக்கப்படும்பொழுது விழிப்புற்று, வரலாற்று ஆழ்மனதை மறுகட்டாக்கம் செய்து கொள்கிறது. தமிழரின் வரலாற்று ஆழ்மன நினைவுகள் சில நூறு ஆண்டுகள் அல்ல; பல்லாயிரம் ஆண்டுகள் கொண்டது. எனவே வரலாற்று ஆழ்மனதின் மறுகட்டாக்கம் என்பது பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் தனது வரலாற்று ஆழ்மனதை, மறுகட்டாக்கம் செய்து கொள்ளும்படியான வரலாற்றுச் சவால்களை இடையறாது எதிர்கொண்டு வருகிற இனம் தமிழினம். எனவே தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்திற்கு, தமிழ் நிலத்திற்கு, தமிழ்த் தொன்மத்திற்கு நெருக்கடி நேருங்காலங்களிலெல்லாம் தமிழரது வரலாற்று ஆழ்மனம் விழிப்புற்று மறுகட்டாக்கம் செய்து கொள்கிறது. மேலும், எவ்வித வரலாற்று நெருக்கடியையும் நேர்கொள்ளாத காலகட்டத்தில்கூடத் தன்னியல்பில் தன்னை மறுகட்டாக்கம் செய்து கொள்ளும்படியானதொரு உள்கட்டளையை தனது இயல்நிரலில் கொண்டிருக்கிறது தமிழரின் வரலாற்று ஆழ்மனம். ‌எப்படியெனில், தமிழ் மொழிக்குள் இருக்கிறது அளவிடற்கரிய வரலாற்று ஆழ்மன நினைவுகள். தமிழின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளேயும், சொல்லின் வேர்ச்சொல்லுக்குள்ளேயும், வேர்ச்சொல்லின் ஆதி ஒலியினுள்ளேயும், ஆதி ஒலியின் விதையாகிய ஒலித்தாதுவினுள்ளேயும் தமிழரது அடையாளங்கள் உறைந்து கிடக்கின்றன. அவற்றுக்கு இளக்கம் கொடுத்து இயக்கிப் பார்த்தால், இந்த உலகின் முதல் மானுடன் பரிணாமங் கொண்ட கதைகள் சலனம் கொள்வதைக் காணலாம். எனில், தமிழரது வரலாற்று ஆழ்மன நினைவுகள் தமிழரின் சொத்து அல்ல; பூகோளச் சொத்து; உலக மானுடத்தின் சொத்து; எனவே தமிழினத்தின் மீதான தாக்குதல், தமிழ் நிலத்தின் மீதான தாக்குதல், தமிழ் மொழியின் மீதான தாக்குதல், தமிழ்த் தொன்மத்தின் மீதான தாக்குதல் என்பவை எல்லாம் ஒரே பொருளைக் கொள்கின்றன. உலக மானுடத்தின் மீதான தாக்குதல் என்ற பொருளை கொள்கின்றன. எனவே தமிழர் மேற்கொள்கிற தற்காப்புப் போர் என்பது தம் இனத்தைக் காப்பதற்கான, தம் நிலத்தைக் காப்பதற்கான, தம் மொழியைக் காப்பதற்கான, தம் தொன்மத்தைக் காப்பதற்கான போர் மட்டுமல்ல, உலக மானுட வரலாற்று நினைவுகளைக் காப்பதற்கான போரும் ஆகும். எனவேதான் வரலாறு நெடுக, போரிடும் இனமாகவே வாழ்ந்துவருகிறது தமிழினம். புறநானூறு என்றொரு இலக்கிய வகைமை தமிழிலக்கியத்தில் மட்டுமே காணக்கிடைக்கிறது. 

இன்றைய உலக வல்லாதிக்கங்கள், தங்களுக்குள் கலந்து விரிந்து கலந்து விரிந்து, இறுதியில் தம்மைத்தாமே வடிகட்டிக்கொண்டு உலகின் மிகத்திறன்வாய்ந்த ஆளும் வர்க்கம் ஒன்றை உருவாக்கவிருக்கின்றன. எதிர்காலத்தின் ‘ஓரரசு’ என்று கருத்தியல் வகையாகவும், எதிர்காலத்தின் ‘உலகரசு’ என்று புவியியல் வகையாகவும் சுட்டப்படுகிற அரசுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கப் போகின்றன. மனிதகுலம் தோற்றங்கொண்ட காலத்திலிருந்து இன்றுவரை சேகரமாகிவந்திருக்கும் நினைவுகளும், நெறிகளும், விழுமியங்களும் - உலகரசுக் காலத்தில் செல்லாப் பொருட்களாகிவிடும். ‘இப்படிப்பட்ட வளமான, தொன்மையான வரலாற்று ஆழ்மனம் கொண்டதொரு இனம், வருங்கால உலக ஒழுங்குக்கு எதிரி’ என்று கருதுகின்றன வல்லாதிக்கங்கள். செயற்கையறிவின் மனித மேலாண்மைச் சட்டங்களால் (human management law) கற்பிக்கப்படவிருக்கிற வாழ்க்கை நெறிகள் மிகப் புதுமையானவையாக இருக்கப் போகின்றன. அந்த நெறிகளை ஒழுகி வாழ்கிற மனிதக் குழுக்களை மட்டுமே, உலக அரசு வாழ்விக்கும்; அப்படியாயின், நினைவுகளற்ற மாந்தர்களே உலகரசின் தேவை. நினைவுகள் கொண்டிருக்கும் மாந்தர்குழுக்களின் நினைவுகளை அகற்றுவதற்கு உலகரசு முனையும்; நினைவுகளற்ற மாந்தர்குழுக்களாக மாற்றியமைக்கும். இந்த நிகழ்ச்சிநிரலுக்குள் பொருந்திப்போக மறுக்கிற இனம் தமிழினம் என்று கண்டிருக்கிறது உலக வருங்கால உலகரசு. எனவே தமிழருக்கு நினைவுகளை வழங்குகிற நிலம், தொன்மம், இயற்கை வளம், மொழி, ஆட்சியதிகாரம் உள்ளிட்ட யாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துக் கொண்டிருக்கிறது. இந்த நெடுந்திட்டத்தின் பெரு வெற்றியென்று ஈழம் வீழ்ந்ததை குறிப்பிடலாம்.

நாளைய உலகரசின் அதிகாரத்திற்காகத் தமக்குள் போரிட்டுக் கொண்டிருக்கிற உலக வல்லரசுகளின் அங்கீகாரத்துடன், ஆரியத்துவ டெல்லியின் கட்டளைப்படி, தமிழக திராவிடீயத்தின் துரோகத்தைத் துணைகொண்டு, கொழும்புச் சிங்களத்தை ஏவி - ஈழம் வீழ்த்தப்பட்டது. சீன பௌத்த தாதாவை முன்னிறுத்தி, ஈழமற்ற இலங்கையை அவசர அவசரமாக சிங்கள-பௌத்த இலங்கையாக்கிக் கொண்டிருக்கிறது கொழும்பு. பிரிட்டிஷ் இலங்கையில், ’தமிழருக்கு அதிகாரம் தரக்கூடாது’ என்று ஆங்கிலேயரிடம் அடம் பிடித்து வந்திருந்தது இலங்கை; 1947-க்குப் பின்னர் தமிழரது அதிகாரத்தைத் தட்டிப் பறித்தது.; 1957 வட்டுக்கோட்டை மாநாட்டுக்குப் பின்னர் தமிழர் மீது வன்முறையை ஏவியது; 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழரை அழித்தது; 2009க்கு பின்னர் தமிழ் அடையாளங்களை முற்றிலுமாகத் துடைத்தழித்துக் கொண்டிருக்கிறது. நூறு விழுக்காடு பௌத்த தேசமாக்குவதுதான் திட்டம். அந்தப் பணியின்னும் முற்றுப்பெறவில்லை. முற்றுப்பெறட்டுமென்று காத்திருக்கிறது டெல்லி. ஏனெனில், தமிழரது அடையாளங்கள் முற்றிலுமாகத் துடைத்தழிக்கப்படவேண்டும் என்பதுதான் ஆரியத்துவ டெல்லியின் விருப்பமும். 

ராஜபக்சே மீதான போர்க்குற்ற விசாரணையை இரண்டாண்டுகள் டெல்லி தள்ளிப்போட்டதற்கான காரணம் இதுவே. தமிழடையாளங்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்ட பின்னர், தமக்கான பண்டுரிமையைத் தமிழ் மக்கள் முற்றிலுமாக அழியக்கொடுத்த பின்னர் டெல்லி தலையீடு செய்யும். ’2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு மதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது’ என்றும், ’ஒன்றரை இலட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர்’ என்றும் பன்னாட்டு அவையில் குரலெழுப்பும். ‘முள்ளிவாய்க்காலில் இந்துக்களை படுகொலை செய்த ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும’ என்று இந்தியப் பாராளுமன்றம் தீர்மானம் போடும். பன்னாட்டு அவையில் அழுத்தம் தரும். ராஜபக்சே மட்டுமல்ல, அன்றைய காங்கிரசும், திமுகவும் கூட குற்றவாளிக் கூண்டில் ராஜபக்சேவின் இருபுறமும் நிறுத்தப்பட வேண்டும் என்பது டெல்லியின் திட்டம். கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை சாத்தியப்படுத்துகிற டெல்லி. காங்கிரஸ் இல்லாத இந்தியாவையும் சாத்தியப்படுத்தும். இவ்வளவையும் நிறைவேற்ற வேண்டுமாயின், தமிழரை முதலில் ’இந்துக்களாக’ உருமாற்ற வேண்டும்; ஆனால் உருமாற மறுக்கிறது தமிழ் மரபு. எனவே வடநாட்டு ’இந்துக்கள்’ கொண்டு தமிழ் நிலத்தைச் செறிவூட்டுகிறது டெல்லி. தமிழரை இந்து மயமாக்க முடியாததால், தமிழ்நிலத்தை இந்து நிலமாக்கிக் கொண்டிருக்கிறது. வடகண்டத்து உணவுமுறை, உடுத்துமுறை, வாழ்க்கை முறை, சடங்குகள், வழிபடு முறைகள், கடவுள்கள், கலைகள், தொழில்கள், முதலீடுகள், மொழிகள், அரசியல் கட்சிகள் என்று அனைத்தும் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்படும். ஈழத்தைச் சிங்கள பௌத்தம் உண்டுசெரித்ததுபோல், தமிழகத்தை ஆரியத்துவ இந்துத்துவம் உண்டு செரிக்கும். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பகையானது, பௌத்தத்திற்கும் இந்துத்துவத்திற்குமான பகையாக இருமுனையாக்கம் கொள்ளும். இந்திய வல்லரசோடு ஒப்பிட்டால், இலங்கை சின்னஞ்சிறு தீவுதான். ஆனால் இலங்கையுடன் மோதுவதென்பது சீனப்பேரரசோடு மோதுவதாகும். எனவே அமெரிக்காவையும், பிரிட்டனையும், ஐரோப்பிய யூனியனையும் கொண்ட அணியை அமைத்துக்கொண்டது டெல்லி. பக்கத்துணையாக சப்பான் போன்ற நாடுகளையும், சீனாவின் பிற எதிரி நாடுகளையும், கிழக்காசியாவின் பௌத்த நாடுகளையும் இணைத்துக்கொள்கிறது. தென்சீனக்கடலில் சீனத்தின் நெடுங்காலப் பகையாற்றல்களோடு நட்புறவு கொண்டு, தனது அணியில் இணைத்துக்கொள்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ’தெற்காசியச் சதுரங்கம்’ என்ற ராணுவ ராஜதந்திர ஆட்டத்தை வென்றெடுப்பதற்காக, தாங்கொணாத விலையைக் கொடுப்பதற்கும் தயாராகிவிட்டது. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் போதே - தெற்காசியச் சதுரங்கத்தின் துவக்க ஆட்டத்தில், திறப்புக் காய்களை நகர்த்தியது டெல்லி. 2009இல் ஈழ நிலத்தை பிரபாகரனிடமிருந்து பிடுங்கி ராஜபக்சேவிடம் கொடுத்துவிட்ட டெல்லி, ஈழ நிலத்தை மீட்பதற்கு என்றொரு புதியவாற்றலை உற்பத்திசெய்தது. காங்கிரசின் வரலாற்றுத் தேவை நிறைவேறிய பின்னர், புதியவாற்றலை மேலெழுப்பியது; பிரபாகரனின் மறைவில் உதயமானார் நரேந்திர மோடி. தெற்காசியாவில், நீடித்த ராணுவ நடவடிக்கைக்கான திட்டங்களைக் கொண்டிருக்கிறது டெல்லி. ‘மேக் இன் இந்தியா’, தமிழகத்தில் ராணுவத் தளவாட உற்பத்திக் கூடங்கள், போர்ப்படைகளை நகர்த்திச் செல்வதற்கு இலகுவான போக்குவரத்துக் கட்டுமானங்கள், செயற்கைக் கோள் விண்’களங்கள்’, விண்வெளியில் செயற்கைக்கோளைத் தாக்கியழிக்கும் அண்டத் தாக்குதல் வலிமை, துணைக்கண்டத்துத் தென்பகுதிக் கடல் ’வளையத்தை’ ராணுவத்திறன் கொண்டு கைப்பற்றி வைப்பதற்காக சாகர்மாலா ... 

இவ்வளவு ஆபத்துகளை எதிர்கொள்ளவிருக்கிறது தமிழகம். எனவே, தமிழர் தம்மைத் ’தமிழர்’ என்றழைத்துக்கொண்டு ஒன்றிணைவது காலக்கட்டாயம். இது இனவெறி அல்ல; இனவெறுப்பு அல்ல; இனவாதமல்ல; குறுகிய மனப்பான்மை அல்ல. தமிழர் என்ற சொல், அரசியல் பொருள் விளக்கம் பெறும்பொழுது ’தமிழ்த் தேசியர்’ என்று பரிமாணங்கொள்ளும். காலங்காலமாக இந்த மண்ணில் வேர்பிடித்து வாழ்ந்து வருகிற சந்ததியினர் தமிழர் என்றும், தமிழக எல்லைக்கு வெளியில் இருந்து குடியேறி, தமிழ்நிலத்தோடு தம்மைக் கரைத்துக் கொண்டவர்களைத் ’தமிழ்த் தேசியர்’ என்றும் குறிப்பிடலாம். இங்கு தமிழர் என்று குறிப்பிடும் பொழுது ’தமிழ்த் தேசியர்’ என்ற பொருளிலேயே குறிப்பிடுகிறேன். எனவே, அவ்வண்ணமே பொருள்கொள்ளுமாறு இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். 

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பின்னர், பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது ஐ.நா.அவை. அதில், பெரும்பாலான உலக நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. இந்தியாவும் கைச்சாத்திட்டிருக்கிறது. அந்த பிரகடனத்தில், ஒருவரது ’தேசிய இன உரிமை’ குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. 

1. தனது தேசிய இனத்திற்குரிய நிலத்திலிருந்து குடிபெயர்ந்து வேறொரு தேசிய இனத்திற்குரிய நிலத்தில் குடியமர்ந்து விட்ட ஒருவர், இரண்டு தலைமுறைக்காலம் அந்த வேற்றுநிலத்தில் வாழ்ந்துவிட்டவர் எனில், அந்த வேற்றுநிலத்தின் தேசிய இனத்தவராகத் தன்னை அறிவித்துக்கொள்ளும் உரிமைபெற்றவராகிறார். ஏனெனில், அந்த வேற்று நிலத்தின் மேம்பாட்டுக்காகத் தனது இரண்டு தலைமுறைகளை ஒப்புக் கொடுத்திருக்கிறார். 

2. இரண்டு தலைமுறைக் காலம் வேறொரு தேசிய நிலத்தில் வாழ்ந்து விட்ட ஒருவர், தனது தேசிய இனம் எதுவென்று தீர்மானிப்பதற்கான தன்னுரிமை பெற்றவராகிறார். (மேலதிக விபரங்களுக்கு, பாவை சந்திரன் எழுதிய ‘இலங்கை தமிழர் போராட்ட வரலாறு’ நூலைப் படிக்கவும்)

இவ்வகையில், தமிழ் நிலத்தில் தமது வாழ்வை அமைத்துக்கொண்டு தமிழராகவே வாழ்ந்து வருகிற எவரும் தமிழரே. ’யார் தமிழர்’? என்று குதர்க்கமாகக் கேள்விகேட்டு, தமிழ்த்தேசியத்திற்குள் பகைமூட்ட எண்ணுகிற பகைவர்களைத் தள்ளி - நிறுத்துவோம்; தமிழகத்தைக் காப்போம். டெல்லிக் கூட்டணிகளையும், வேடந்தரித்து வருகிற ஆரியத்துவக் கூட்டங்களையும் புறக்கணிப்போம். 1967 ல் டெல்லிக் கட்சிகளை தமிழகத்திற்கு வெளியே விரட்டியடிப்பதற்கான காரணங்கள் என்று எவையெவை இருந்தனவோ அவையெல்லாம் இன்றும் இருக்கின்றன. அன்றைய ஆபத்தை விட, ஆபத்தான ஆபத்தை இன்றைக்கு எதிர்நோக்கியிருக்கிறது தமிழகம். “தீவுத்தமிழ் நிலத்தையும், தீபகற்பத் தமிழ் நிலத்தையும் வல்லாதிக்கங்களின் ஆடுகளமாக்க அனுமதிக்க வேண்டாம்.

திரு தங்கம் தங்கம் அவர்களது பதிவிலிருந்து ...

வியாழன், 11 ஜனவரி, 2024

ஈழத்தின் வலியை, மொழியில் பதிவு செய்திருக்கும் குருதி வழியும் பாடல்: கிருசுண மூர்த்தி


அ.சி.விஜிதரன் அவர்களின் "குருதி வழியும் பாடல்" நூல் குறித்து...

தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்குமான தொடர்பு ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது. சங்கப் பாடல்களிலேயே அதற்கான சான்றுகள் விரவிக்கிடக்கின்றன. தமிழ் நவீன இலக்கியம் வரை இந்தத்தொடர்பு அறுபடவில்லை.

ஈழத்து மகாகவி உத்திரமூர்த்தி, வில்வரத்னம், சிவரமணி, ஆழியாள், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்நதி, அவ்வை எனத் தொடரும் ஈழத்து நவீனக் கவிதை மரபில் சமீபத்தில் இணைந்திருப்பவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் தோழர் அ.சி.விஜிதரன்.

ஏதிலி என்ற நாவலின் வழி தமிழ் இலக்கியத்தில் அழுத்தமான இடம்பிடித்த அ.சி.விஜிதரன் "குருதி வழியும் பாடல்" தொகுப்பின் மூலம் தேர்ந்த மொழிவளம் கைவரப்பெற்ற அரசியல் புரிதலுள்ள கவிஞராகவும் மிளிர்கிறார்.

இதுவரை நாம் அறிந்த ஈழத்துக் கவிதைகள் என்பவை விடுதலையைக் கோருபவையாக,அகதியாக்கப்படுவதின் வலியை சொல்வதாக, சிங்கள ராணுவத்தின் அநியாயங்களை சொல்வதாக, போரை விதந்தோதுவதாக, வீரத்தை மண்ணுக்கே உரியதாக மட்டுமே இருந்த சூழலில், ஏதிலிகளாக அதாவது சட்ட விரோதக் குடியேறிகள் எனும் பெயரில் புலம்பெயர் நாட்டில் படும் வலிகளை முதன்மைப்படுத்தும் பதிவாக குருதி வலியும் பாடல் தொகுப்பு அமைகிறது.

இந்திய ஒன்றிய அரசு சொல்லிக்கொண்டிருக்கும் அகதிகள் பட்டியலில் கூட ஈழமக்கள் கிடையாது என்பதையும் ஒரு பாகிஸ்தானியோ, வங்கத்தேசத்தவரோ இந்தியாவிற்குள் அகதியாக பதிவு செய்ய வாய்ப்புள்ள சூழலில் ஈழத்தவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக மட்டுமே பதிவு செய்யப்படுகிறார்கள் என்கிற அரசியல் அவலத்தைத் தொகுப்பு முதன்மையாக ஆவணப்படுத்துகிறது.

இன்றைக்கும் தமிழ்ச் சமூகத்தில் புராணக் தைகளைத் தூசி தட்டி அவை யாருக்கான ஆதரவுக் கருத்தியலைக் கொண்டிருக்கின்றன என்று பாராமல் தலையணை தலையணையாக வெளியிட்டு அவை மொழிக்கு வளம் சேர்ப்பதாகவும், மீட்டுருவாக்கம் செய்வதாகவும் சொல்லி இளம்தலைமுறைக்கு வர்க்கப் போராட்ட அரசியல் நீக்கம் செய்துகொண்டிருக்கும் மேதாவிகளுக்கு மத்தியில்தான் தோழர் அ.சி.விஜிதரன்,

" புராணக் கதைகள் என்றால் எவன் கால் பட்டாவது சாபம் நீங்கும் எனலாம். ஆனால், புதைக்கப்படும் நிலம் கூட சொந்தமில்லாமல் மக்கள் சபிக்கப்பட்டதை எப்படிச் சொல்ல" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஏதிலிகளின் வலியைக் கடத்திவிடுகிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஈழ அரசியல் என்பது உணர்ச்சிப்பூர்வமானது. இங்கே ஒரு தலைமுறையே ஈழத்திற்காக உயிர்த்தியாகம் செய்து தொப்புள்கொடி பேசிய வரலாறு உணர்வுபூர்வமாக உண்மையாக இருந்த அதே வேளையில் ஈழ வியாபாரம் செய்தவர்களையும் நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.

விஜிதரனின் கவிதைகள் எல்லோரையும் குற்றவுணர்வுக்கு ஆளாக்கி சிந்திக்க வைக்க முயற்சிக்கிறது,ரௌத்திரம் தெறிக்கிறது .இயற்கையின் அழகியலை, பூனைக்குட்டிகளை, கூரையில் படர்ந்திருக்கும் பரங்கிப்பூவை ரசித்து எழுதும் ஒருவகை தமிழ்க் கவிதைக் குழுக்களிலிருந்து காத தூரம் விலகி நிற்கிறார் விஜிதரன்.

"இருண்ட காலத்தில் பாடல்கள் இருக்குமா? இருக்கும். இருண்டகாலத்தைப் பற்றிய பாடல்கள் இருக்கும்" என்று தமிழ் முற்போக்கு மேடைகளில் அதிகம் ஒலித்த ஆப்பிரிக்கக் குரலாக பல கவிதைகளை அகதி முகாம் வாழ்க்கை பற்றி எழுதுகிறார் விஜிதரன். எழுத்துப்பிழையாக நினைக்காமலிருக்க ஒரு கவிதையில்,

" சத்தமில்லாக்
கலவி கற்றோர்
பேறு பெற்றோர்"

ஈழத்தமிழர் குடியறுப்பு" என்று முடிக்கிறார்.

இதன்வழியாக சட்டவிரோதக் குடியேறிகளாக அல்லல்படும் முகாம் தமிழர்களின் வாழ்வியலை அம்பலப்படுத்துகிறார்.

தமிழினம் அகதியாகச் சென்றாலும் தூக்கியெறியாமல் சுமந்துசெல்லும் சாபக்கேடுகளுள் ஒன்றான சாதியை ஈழத்தமிழர்களும் விடவில்லை என்பது குறித்து பல்வேறு புனைவுகளைப் பார்த்துள்ளோம் இவரும் சொல்கிறார்,

" எளிய நாயே 
கண்ட கண்ட 
தோட்டக்காட்டோனோடு பழகுவியோ முதல் முறையாய்
 அப்பாவின் முகம் முன்னால் நின்று சொன்னேன் அந்தத் தோட்டக்காட்டான் நாட்டில் தான் 
இப்ப நீ அகதி"

தமிழ்நாட்டில் பலருக்கு ஈழத்தமிழர்கள் குறித்தும்,மலையகத் தமிழர்கள் குறித்தும் புரிதல் இல்லாத சூழலில் மேற்கண்ட கவிதையின் வழியாக ஈழத்தின் மக்கள் பிரிவினரையும் வாழ்வியலையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதாக பல கவிதைகள் இருக்கின்றன.

தமிழக முகாம்களில் அரசு அதிகாரிகள் நடந்துகொள்ளும் முறையும்,அவர்களின் வாழ்விடம் குறித்து இந்திய சமூகம் ஒருபொழுதும் புரிந்துகொள்ள வாய்ப்பில்லாத சூழலையும் ,அவர்களுக்குள் துளிர்த்திருக்கும் பகிரமுடியா காதலையும்,இயல்பான வாழ்வியல் சந்தோசங்களுக்கே வாய்ப்பில்லாத புறச் சூழ்நிலையும் ,இருபது வருட முகாம் வாழ்க்கை வாழும் தோழர் இந்திரா முன்னுரையில் கூறியுள்ளது போல

" எப்போதும் பெருமை பேசி
அழிந்த இனம் நாங்கள் 
இனியாவது சொல்ல வேண்டும் எதார்த்தம் என்னவென்று இனியும் இழப்பதற்கு என்ன இருக்கு " 
என்று இருள் கிழிக்கிறார்.

ஈழத்து மாவீரர்தினம் குறித்து பல்வேறு விமர்சனங்களோடு முன்வைக்கும் கவிஞரின் குரலில் உண்மை இருக்கலாம்.மறுப்பதற்கில்லை.ஆனால் பலர் ரத்தம் சிந்தி உருவாக்கிய ஒரு மாபெரும் விடுதலை இயக்கத்தின் வளர்ச்சிப்போக்குகளில் விஜிதரனின் பார்வை மட்டுமே முழுமையானது என்றும் கொள்வதற்கில்லை.இந்த விமர்சனத்தையும் ஏற்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம்.

உலகம் முழுதும் பாசிச சக்திகள் ஆதிக்கம் செய்து சிறுபான்மையினரை ஒடுக்கும்போது அவ்வினம் தனது நிலவுடைமைக் கால,சாதிய மேட்டிமைவாத விழுமியங்களை தூக்கியெறிந்திருக்க வேண்டும் அதனை சரிசெய்யாமல் விடுதலையைப் பேசியதில் உள்முரண்கள் கூர்மைப்பட்டு சிறுபான்மையிலும் சிறுபான்மையினர் நசுக்கப்பட்டு துடிக்கின்ற வலியைத்தான் முதன்மை படுத்துகின்றன விஜிதரனின் கவிதைகள்.

ஒட்டுமொத்தமாக விஜிதரனின் மொழி என்பது ஈழத்திலும் ஒருவகை சார்பான மக்களை மட்டும் கருத்தில் கொண்டு நடத்திய போராட்டத்தால் கைவிடப்பட்டு,அகதியாக்கப்பட்ட நிலத்திலும் கண்டுகொள்ளப்படாத எளிய மக்களின் வலியை ஆவணப்படுத்துவதில் முதன்மை பெறுகிறது. அதனைத் தமிழ் இலக்கியம் கூறும் இடக்கரடக்கல் போன்ற எந்த இலக்கணத்திற்கும் உட்படாமல் வலியின் மொழியில் பதிவு செய்திருக்கிறது "குருதி வழியும் பாடல்".

கட்டுரையாளர்:
கிருசுண மூர்த்தி,
கவிஞர் மற்றும் கல்விச் செயல்பாட்டாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், திருவண்ணாமலை.

சனி, 25 நவம்பர், 2023

குப்பி கடித்த புலிப்பல் - அறிவுமதி கவிதை


குப்பிக் கடித்த மகனோடு
ஒரு தாய்
பேசுகிறாள்:

குப்பி கடித்தாயாமே மகனே!
கேள்விப்பட்டேன்.
விழிக் குடிசைகளின்
ரோமக் கூரைகளில்
உப்பு மழைத்துளிகள்
ஒழுக
ஒழுக
உனக்காக
அழவேண்டும் என்று
எதார்த்தம்
விரும்புகிறது
மகனே !
ஆனால்
உனது கனவுகள் வந்து
என் கண்ணீரைத்
துடைத்து விடுகின்றன.
இது உனக்கு
இறந்த நாளா?
இல்லை மகனே…
மரணம்
என்பது
உண்மையான வீரனுக்கு
இரண்டாவது
பிறந்த நாள்
ஆம்…
அவ்வளவுதான் மகனே !
உன்னைப்
பெற்றெடுத்த நாட்களில்
வளர்ந்து
ஆளாகி
உனது கைகளால்
ஒரு
பெண்ணின்
கழுத்தில் நீ
தாலி கட்ட
அதைப் பார்த்து மகிழ வேண்டும்
என்று
அம்மா நான்
ஆசைப்பட்டது
உண்மைதான்
மகனே !
உண்மைதான்.
ஆனாலும்
உனக்கு
நீயே
மரணத் தாலி
கட்டிக் கொண்டதைப்
பார்த்த
நாளில்
அதைவிடவும் அதிகமாய்
மகிழ்ந்தேன்
மகனே !
மகிழ்ந்தேன்.

நாட்டிற்குள்
பெருமாள்களாய்
வாழ்வதைக் காட்டிலும்
காட்டிற்குள்
பி*ர*பா*க*ர*ன்*களாய்
கிட்டுகளாய்
வாழ்ந்து
போராடுகிறீர்கள்
என்பதில்தான்
மகனே
நான் இன்னும்
மகிழ்ந்தேன்.
ஆம்…
நாட்டிற்குள் தான்
வாழ்கிறேன்
ஆனால்
மிருகங்களுக்கு
மத்தியில்.
நீ
காட்டிற்குள்தான்
வாழ்ந்தாய்
ஆனால்
மனிதர்களுக்கு
மத்தியில்.

சிங்கப் பல்
தெரிய
நீ
சிரித்த
அழகையெல்லாம்
சேகரித்துப்
பார்க்கிறேன் மகனே…
அவற்றையெல்லாம் விட
அதே
சிங்கப் பல்
இன்று
சயனைட்
குப்பிகடித்து
புலிப் பல்லாக
மாறிப் போன
செய்தி
கேட்டு
குளிர்ந்தேன்.
எனது மார்புகளில்
பால்
குடித்த
நாட்களில்
முதல்
பல்லால் நீ
கடித்தபோது
ஏற்பட்ட
இன்ப
வேதனையை விடவும்
அதே
பல்லால் நீ
குப்பி
கடித்தாய் என்கிற
செய்தி கேட்டு
அடைந்த
துன்ப மகிழ்ச்சி
இனிமையானது
மகனே!
இனிமையானது !

விழுந்த பல்
முளைக்கவில்லை
என்று
உன் மாமன்
நெல்லால்
கீறிவிட்ட பொழுது
கசிந்த
இரத்தம் பார்த்து
என்
கண்கள்
பனித்தன மகனே!
கண்கள்
பனித்தன.
இன்று
குப்பி கடிக்க நீ
ரத்தம் கசிய
கண்கள் மூடினாய்
என்று
கேள்விப் படுகையில்
கண்களும்
சிரித்தன மகனே !
கண்களும்
சிரித்தன.

சின்ன வயதில்
நான் கொடுத்த
வெல்லக் கட்டிக்காக
போட்டி
போட்டுக்கொண்டு
நீயும்
உனது
தம்பிகளும்
காக்காய்க் கடி
கடித்துப்
பங்கிட்டுக் கொள்வதைப்
பார்த்து
மகிழ்ந்த உன் தாய்
மகனே…
இன்று
இயக்கம் தந்த
குப்பியை
நீயும்
உனது
தோழர்களும்
புலிக்கடி கடித்து
மரணத்தைப்
பங்கிட்டுக்
கொண்டதைக்
கேட்கக்
கேட்கக்
மகிழ்கிறேன்
மகனே !
மகிழ்கிறேன்.

பெற்றெடுத்த
மகன்
இறந்துவிட்டாயே
என்கிற
வருத்தமில்லை
மகனே.
ஈழவிடுதலையைப்
பெற்றெடுக்காமல்
இறந்துவிட்டாயே
என்கிற
வருத்தம்தான்
எனக்கு.
ஆனாலும்…
நம்பிய
தலைவனை
நம்பிய
இயக்கத்தைக்
காட்டிக்
கொடுக்கமாட்டேன்
என்கிற
உறுதியோடு
குப்பி கடித்த
என் செல்ல மகனே!
உன்னை
இழந்தாலும்
என்னை
அம்மா
அம்மா
என்றழைக்க
ஆயிரமாயிரம்
புலிகள்
அணிவகுத்துக் கொண்டே
இருக்கிறார்கள்
மகனே !
அவர்கள்
பெற்றுத்தரப் போகிற
தமிழீழத்தில்
சின்னஞ் சிறுசுகள்
நாளை
சிரிக்கிற போது…
குப்பி கடித்த
உனது பல் ஞாபகமாக
அன்று
கண்ணீர் வடிப்பேன் மகனே!
அன்று
வடிப்பேன்
ஆனந்தக் கண்ணீர்!
இனியும்
தமிழச்சிகள்
வீரர்களைப் பெற்றுத்தருகிற
வெறும்
கர்ப்ப இயந்திரங்களாக மட்டும்
இருக்க மாட்டார்கள்.
அவர்களே…
வீராங்கனைகளாக
மாறுவார்கள்.
மாறிக்கொண்டும்
இருக்கிறார்கள்.
ஆயுதங்கள்
ஏந்துவார்கள்.
ஏந்திக் கொண்டும்
இருக்கிறார்கள்..

எழுதியவர்: 
கவிஞர் அறிவுமதி.

சனி, 4 நவம்பர், 2023

தமிழ் அறிவு மரபும், அறிஞர் க.நெடுஞ்செழியன் எனும் தனித்துவ மரபும்.

தமிழ் அறிவுச் செயல்பாட்டின் மரபாகவும் நீட்சியாகவும் இருந்து, தமிழ் அடையாள மீட்பின் அறிவுக் கொடையை வழங்கிய ஆய்வறிஞர் க.நெடுஞ்செழியன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் புகழ் வணக்கம்.

அறிஞரின் தமிழ் ஆய்வுப் பண்பு குறித்தும், வாழ்வும் போராட்டமும் குறித்தும் பேராசிரியர்கள் டி.தர்மராஜ், சே.கோச்சடை, ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் ஆகியோரது 3 கட்டுரைகள் ஒருங்கே தரப்பட்டுள்ளன. அய்யாவின் புகழ் நீடு வாழ்க.

ஏர் மகாராசன்

*

1.

அறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வுகளில் கலகக் குணமும் மாற்றுச் சிந்தனை மரபும்.

:பேரா டி.தருமராஜ்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அரிதானவர்.  அதனால், தமிழகத்தில் அறியப்படாதவர். அறிந்திருந்தவர்களும் நெடுஞ்செழியனை நமட்டுச் சிரிப்புடனே கடந்து போனார்கள்.  

இந்த நமட்டலுக்கு நம்மிடம் வரலாறு உண்டு. பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று பலரின் மீதும் செலுத்தப்பட்ட அசட்டு நமட்டல் இது.  

நெஞ்செழியன், திராவிட சித்தாந்தத்தில் பயின்று வந்தவர். அதன் பிரதானக் காரணிகளாக கடவுள் மறுப்பையும், சாதி எதிர்ப்பையும், தமிழ்ப் பற்றையும் அவர் உருவகித்திருந்தார்.  இது ஒரு வகையில், திராவிடப் பாரம்பரியத்திலிருந்து கிளைத்து வந்த மாற்று மரபு என்று கூட சொல்ல முடியும்.  

சைவ, வைணவ மதக் கட்டுமானங்களை கட்டுடைப்பது என்று மட்டுமல்லாமல், அதன் மாற்று வடிவங்களை யோசித்ததே நெடுஞ்செழியனின் ஆகப்பெரிய பங்களிப்பு.  இத்தகைய மாற்று வடிவ யோசனைகள் இந்தியா முழுமைக்கும் பொதுவானவை என்பது நமக்குத் தெரியும்.  இந்த மாற்று யோசனைகள் மொத்தமும் பெளத்ததில் சென்று கலந்து விடுகிற காலத்தில், அதிலிருந்து விலகி ஆசீவகத்தை நோக்கி நகர்ந்தது எனக்கு அவர் மீது பெரும் மதிப்பையும் ஆச்சரியத்தையும் அளித்திருந்தது.

இதனால் அவர் மாற்று யோசனைகளின் மாற்றாகவும் விளங்கியிருந்தார்.  பெருஞ்சமயங்களுக்கு எதிரான இந்திய மாற்று  - ‘பெளத்தம்’, என்ற நீரோடையிலிருந்து நெடுஞ்செழியன் விலகியதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன என்று நான் நினைக்கிறேன்.  ஒன்று, பூரண தமிழ்ச் சிந்தனை மரபொன்றை (பெளத்தமும் சமணமும் வேற்றுமொழிச் சிந்தனை மரபுகள்) வரலாற்றிலிருந்து வடிவமைக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்; இரண்டு, அது என்றென்றைக்கும் அதிகாரத்திலிருந்து விலகி இருந்திருக்க வேண்டும் என்றும் நம்பினார்.  

அந்த வகையில் ஆசீவகம், எல்லா வகையான மேலாதிக்கத்திலிருந்தும் விலகியே இருந்திருக்கிறது.  வரலாற்றில் அதை எந்த அரசும் ஆதரித்ததற்கான சான்றுகள் இல்லை;  அரசு மட்டுமல்ல, வெகுஜனத் தளத்திலிருந்தும் கூட ஆசீவகச் சிந்தனையாளர்கள் விலகியே நின்ற சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன.  பெருஞ்சமயங்களின் சாகரமாக விளங்கும் இந்தியச் சிந்தனை நீரோட்டத்தில் ஆசீவகத்திற்கான மரியாதை, கேலிக்கும் கண்டனத்திற்கும் அவதூறுகளுக்குமானது என்பதில் சந்தேகமில்லை.  ஏனெனில், நேரடியான ஆசீவகப் பிரதிகள் எவையும் நமக்குக் கிடைப்பதில்லை.  ஆசீவகத்திற்கு எதிராக எழுதப்பட்ட கண்டனங்களிலிருந்தும், வசைகளிலிருந்துமே நாம் அதனை ஒருவாறு யூகித்துக் கொள்கிறோம்.  இந்திய சிந்தனை மரபில் ஆசீவகத்திற்கு வழங்கப்படும் இடமும் அந்தஸ்தும், நவீன இந்தியாவில் தமிழகத்திற்கு வழங்கப்படும் இடத்தையும் அந்தஸ்தையும் ஒத்தது என்ற யோசனை நெடுஞ்செழியனின் பிரதியெங்கும் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.  

இச்சூழலில், ஆசீவக ஆய்வுகளில் நெடுஞ்செழியன் முன்வைக்கும் கருதுகோள்கள் மரபை மீறிய, சாகச குணம் கொண்டவை.  உதாரணத்திற்கு, அவர் இந்தியா முழுமைக்கும் கிடைக்கப்பெறாத ஆசீவக நேரடிப் பிரதிகளை தமிழ் சங்க இலக்கியப் பாடல்களில் கண்டறியத் தொடங்குகிறார்.  ஏராளமான புறநானூற்றுப் பாடல்களுக்கு அவர் அளிக்கும் விளக்கங்கள் அவற்றை ஆசீவகச் சிந்தனைப் போக்கில் வாசிக்கத் தூண்டுகின்றன.  உதாரணத்திற்கு, பகுத காச்சாயனர் என்ற ஆசீவகச் சிந்தனையாளரை புறநானூற்றுப் பாடலாசிரியர் பஃகுடுக்கை நன்கணியாராக அவர் சித்தரிக்கத் தொடங்குவது புதிய வெளிச்சத்தை அளிக்கக்கூடியது.  அதன் தொடர்ச்சியாக, மற்கலி கோசரையும் புஷ்கரையும் பூரணரையும் மருகால்தலையில் வீற்றிருக்கும் அய்யனார் - பூர்ணா - புஷ்கலா தம்பதிகளிடம் கொண்டு வந்து நிறுத்தும் இடம் நம்மைச் சலனப்படுத்துவது.  

அந்த வகையில், இந்தியச் சிந்தனை மரபின் ஒடுக்கப்பட்ட அதே நேரம் கலகக் குணம் கொண்ட சிந்தனை மரபாக தமிழை யோசிக்கும் வகையில் அவர் ஆசீவகத்தைக் கையாண்டார் என்பதே உண்மை.  அவருக்கு என் பூரண மரியாதையும், அஞ்சலியும்.

https://aerithazh.blogspot.com/2022/11/blog-post_4.html

*

2.

க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி!.

: இரா. மன்னர் மன்னன்.

இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு. 

ஆதிநாதர் முதலான 23 தீர்த்தங்கரர்கள் ஜைனர்கள், ஆசீவகர்கள் - ஆகிய இருவருக்கும் பொது. இதனால்தான் இவர்கள் இருவருமே சமணர்கள்.

ஆனால் ஜைனருக்கு மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர், ஆசீவகர்களுக்கோ மர்கலி 24ஆவது தீர்த்தங்கரர். உண்மையில் ஆசீவகம் ஜைனத்தின் போட்டி மதம். ஆனால் பின்னர் நலிவடைந்த ஆசீவகத்தை, ஜைனம் கைப்பற்றி சுவடே தெரியாமல் போகுமாறு செய்தது. 

அப்படியாக அழிந்து போயிருந்த ஆசீவக வரலாற்றை அதன் கடைசி சல்லிவேரில் இருந்து மீட்டு எடுத்தவர் ஆய்வாளர் க.நெடுஞ்செழியன் அவர்கள். அவரது மறைவின் நாளில் அவரது ஆய்வைப் பற்றி தமிழர்களுக்குக் கூறுவதே அவருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும் என நினைக்கிறேன்.

தலைமுடியை தனது கைகளால் பிய்த்து (மயிர் பறித்து) மொட்டைத் தலையோடு துறவிகளாகும் ஜைனர்களும், நீண்ட தலைமுடியோடு உள்ள ஆசீவகர்களும் ’சமணர்’ - என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் வழிபாடுகள் கொள்கைகள் வேறுவேறு. ஜைனர்களும் பவுத்தர்களைப் போல ’வானத்தை பூதமாக ஏற்க இயலாது, மொத்தம் 4 பூதங்களே’ - என்ற போது, ’வானமே முக்கியமானது, மொத்தம் 5 பூதங்கள்’ - என்று சொன்னவர்கள் ஆசீவகர்கள். 

எதையும் விவாதித்து விளக்கும் மரபினர் ஆசீவகர்கள், இவர்கள் வசித்த இடங்களான ‘பள்ளி’கள் மக்களுக்குக் கல்வி கொடுத்ததன் தொடர்ச்சியாகவே பின்னர் கல்வி நிலையங்களுக்கு ‘பள்ளி’ என்ற பெயர் வந்தது. 

மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக ஆசீவகர்களைப் பல்வேறு இலக்கியங்கள் குறிக்கின்றன, குறிப்பாக மனநல மருத்துவத்தில் இவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர்.

ஆனால் ‘தீமை என்ற ஒன்று இல்லை, எல்லாம் ஊழ்’ - என்ற வினைக் கோட்பாடு இவர்களை வீழ்தியது. மக்கள் பரிகார லஞ்சங்களோடு வந்த பிற மதங்களின் பக்கம் ஈர்க்கப்பட, அறிவார்ந்த மதமான ஆசீவகம் அழிந்தது.

கி.மு.5-3ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவரை செல்வாக்கோடு இருந்த ஆசீவகம், 13-15ஆம் நூற்றாண்டுகளில் பெரும் தேய்வை சந்தித்தது. ஆசீவகம் கடைசி மூச்சை விட்ட இடமும் தமிழகம்தான்.

தமிழகத்தில் ‘சமணர் கழுவேற்றம்’ - என்று சொல்லப்படுவது பெரும்பாலும் ஆசீவகர் கழுவேற்றமாகவே இருந்துள்ளது, அதற்கு சடைமுடியோடு ஆசீவகர்கள் கழுவேறும் சிற்பங்களும் ஓவியங்களும் சான்றுகளாகின்றன.

அதுபோல சமணர் ஓவியம் என்று சொல்லப்படும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களிலும் முடிநீண்ட ஆசீவகர்களே உள்ளனர்.

தமிழகத்தில் ஆசீவகர்கள் சங்ககாலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர். கி.மு.5ஆம் நூற்றாண்டுவரை பழமையானது எனக் கருதப்படும் மாங்குளம் கல்வெட்டில் சமணர் என்ற பெயர் காணப்படுகின்றது. இவர்களின் சான்றுகளைத் திரித்துதான், ‘தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தே ஜைனர்கள் உள்ளனர், வடக்கில் இருந்து தமிழருக்கு எழுத்தை அறிமுகப்படுத்தியவர்களே ஜெயினர்கள்தான்’ - என்ற கூற்று முன்வைக்கப்பட்டது.

தங்களுக்கு மொழி இல்லாத காரணத்தால்தான் ஜைனர்கள் சமஸ்கிருதத்தையும் பிராமி எழுத்தையும் எடுத்துக் கொண்டனர் - என்பதுதான் வட இந்திய வரலாறு. ஆனால் எழுத்தே இல்லாதவர்கள் நமக்கு எழுத்து கொடுத்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர். நாமும் நம்பி வந்தோம்.

அதை உடைத்து, ’சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்தவர்கள் ஜைனர்கள் அல்ல ஆசீவகர்கள். ஆசீவகம் தமிழரின் அறிவை வடக்குக்கு கொண்டு சென்றது, வடக்கில் இருந்து எழுத்தோ, வானியலோ இங்கு வரவில்லை’ - என்று சான்றுகளோடு எழுதியவர் க.நெடுஞ்செழியன் அவர்கள். இதற்காகவே தமிழினம் ஐயா அவர்களுக்குக் கடமைப்பட்டு உள்ளது.

தமிழின் பெயரால் தமிழை அழித்துப் பிழைப்பவர்கள் மத்தியில், தமிழுக்காக வாழ்ந்து மறைந்திருக்கிறார் க.நெடுஞ்செழியன் அவர்கள். நினைவை ஏந்துவோம்!.

https://aerithazh.blogspot.com/2022/11/blog-post_5.html


*

3.

அறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வாளர் மட்டுமல்ல; சமூகப் போராளியும்கூட.

:பேரா சே.கோச்சடை.

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அன்பில் படுகை கிராமத்தில் பிறந்தவர்.இவர் குடும்பம் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்துடன் நெருக்கமாக இருந்தது.பேராசிரியர்  இளமையிலிருந்தே பெரியார் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர்.பேராசிரியர் சக்குபாயைக் காதலித்துச் சாதிமறுப்புத் திருமணம் செய்து  கடைசிவரையில் கருத்தொருமித்து வாழ்ந்தவர். தமிழ் மொழி,இனம், பகுத்தறிவு ஆகியவற்றில் பிடிப்போடு பரப்புரை செய்தவர். சொல் ஒன்று செயல் வேறாக நினைக்காதவர். ஈழ விடுதலைப் போரில் புலிகளை ஆதரித்ததால் இந்திய ஒன்றிய அரசின் கடும் சித்திரவதைகளுக்கு ஆளானவர்.தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் பணியாற்றியபோது இராசீவ்காந்தி கொலையை ஒட்டி கர்நாடகத்தைப் பிடிக்கச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக்  கைது செய்யப்பட்டுக் கர்நாடக மாநிலச் சிறையில் அடைக்கப்பட்டார்

இரண்டரையாண்டுகள் அங்கே கழித்தார்.தமிழ்ப் பல்கலைக் கழக வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு வேலை செய்துவிட்டுத் தஞ்சையிலும் திருச்சியிலும் தங்கியிருந்தவரைக் கர்நாடகாவில் இருந்து, வேறு சிலருடன் சேர்ந்து சதி செய்ததாகப் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது அரசு.தக்க ஆவணங்களைக் காட்டி வாதாடியும்கூட, கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டிருக்கும்  நீதித்துறைக்கு அச் சான்றுகளைப் பார்க்க முடியவில்லை.

    ஒரு மகனும்  இரண்டு மகள்களும் பெற்ற அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காகப் போர் புரியப் பொறியியல் பட்டம் பெற்ற தன் மகனை அனுப்பினார்கள். அவர் அங்கே ஈகியானார்.

விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மற்ற தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட்டார்.தமிழகத்துக்கு வந்து பேராசிரியர் உதவியோடு பொருட்களை வாங்கிக்கொண்டு ஈழம் திரும்பிய பதினேழு புலிகள் இந்தியக் கடற்படையின் இரண்டகத்தால் நடுக்கடலில் சயனைடு  அருந்தித் தற்கொலை செய்துகொண்டதை அறிவோம். அவர்கள் தோழர் வீட்டுக்கு வந்து திரும்பியபோது நடந்த துன்பியல் நிகழ்வு அது.அஞ்சா நெஞ்சர் அவர்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தில் கெடுவாய்ப்பாக அவர் எங்களுக்கு எதிரான அணியில் இருந்தார். ஆனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரால் பதவி அடைந்தவர்கள் அவருக்குக் குரல் கொடுக்கவில்லை.மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் முனைவர்.சுரேஷ் வாயிலாக எங்கள் தலைவர் கே.ஜி.கண்ணபிரான் அவருக்காக வாதாட கண.குறிஞ்சி உள்ளிட்ட நாஙகள் முயன்றோம். அப்போது சேலத்தில்  மாநிலச் செய்குழுக் கூட்டம் நடந்தது.புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் தோழர் சங்கரசுப்பிரமணியன்ஆசிரியர் கழகப் பொதுச்செயலர். நாங்கள் செயற் குழுவில் பேசித் தீர்மானம் நிறைவேற்றித் தமிழ் நாடெங்கும் அவரை விடுதலை செய்யக் கோரிக் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். 

   ம.கோ.இரா.அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த பொன்னையன் ஆசிரியர்களுக்கு எதிரான போக்குள்ளவர்.திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் ஈழப் போராளிகளுக்கு ஆதரவாக மறியல் செய்ததற்காகப் பேராசிரியர் நெடுஞ்செழியனையும், நக்சலைட் என்று என்னையும் பொன்னையன் பழி வாங்கும் இடமாற்றம் செய்தார்.சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு 1987இல் மாற்றப்பட்ட நாங்கள் அங்கே ஒரு பண்ணையின் மாட்டுக் கொட்டகையை வாடகைக்குப் பிடித்துச் சமைத்து உண்டு, கல்லூரியில் இரவுக் காவலர்களுடன் படுத்து எழுந்தோம். வெள்ளிக் கிழமை மாலையில் ஊருக்கு வந்துவிட்டுத் திங்கட்கிழமை காலை ஆத்தூருக்கு வருவோம்.நான் காரைக்குடியில் இருந்து பேருந்து ஏறித் திருச்சியில் அவருடன் காலை ஆறரை மணிப் பேருந்தைப் பிடித்துச் செல்வோம்.எளிமையானவர்.

அப்போது ஆத்தூர் கல்லூரியில் உள்ளூர் ஆசிரியர்கள் ஆதிக்கம் செய்தனர்.மாணவர் நலனில் அக்கறை இல்லை.ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுக்காததால் எழுத்துத் தேர்விலும் செய்முறைத் தேர்விலும் பணம் விளையாடியது.நாங்கள் ஆசிரியர் கழகத்தில் பேசித் தீர்மானம் போட்டுக் கல்லூரிப் பாடங்களை ஆசிரியர்கள் ஒழுங்காக நடத்த வைத்தோம்.அவர் சிறைச்சாலையை அறச்சாலை ஆக்கிய மணிமேகலையைக் கற்பிப்பவர் அல்லவா? 

பல்கலைக் கழகத் தேர்வுகளில் நடக்கும் நேரத்தில் நாங்கள் ஊருக்கு வந்துவிட்டோம்.அப்போது முதன்மைத் தேர்வுக் கண்காணிப்பாளராக இருந்தவர் இவருடைய துறைத் தலைவர்.பகலில் தேர்வு நடந்த பிறகு நன்றாகத் தேர்வு எழுதாதவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு,அவர்களை இரவில் வரச் சொல்லி,பழைய தாள்களை உருவி எடுத்துவிட்டுப் புதிய தாள்களைக் கொடுத்துப் பார்த்து எழுதவைத்துச் சேர்த்திருக்கிறார்.இது கல்லூரி இருக்கும் வட சென்னிமலையில் பலருக்குத் தெரிந்திருந்தது.நாங்கள் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தைக் கூட்டிப் பேசிச்  சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு முறையீடு விடுத்தோம்.எங்கள் ஆசிரியர் தலைவர்கள் வாயிலாக விசாரணை ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. எங்களுடன் வேறு சில ஆசிரியர்களும் சென்னைக்கு வந்து சான்றளித்தனர் .1987 முதல்1989 வரை நாங்கள் அங்கே பணியாற்றிய இரண்டு ஆண்டுகளும் நல்ல தேர்ச்சி. 

அங்கே நாங்கள் இருந்தபோது பரிபாடலில் பெருவெடிப்புக் கொள்கைக்கான முற்கோள் (hypothesis).இருந்ததைக் கண்டார்.நான் இயற்பியலுடன் தமிழும் படித்தவன் என்பதால் அந்தப் பகுதியை நான் விளக்கினேன். அப்புறம் அதில் பரிணாம வளர்ச்சி பற்றியும் சொல்லப்பட்டுள்ளது என்று விளக்கியிருர்தார்.என் பங்கு இதில் சிறிதெனினும் என் பெயரையும் சேர்த்தே அக் கட்டுரையை வெளியிட்டார் .

பேராசிரியரின் ஆராய்ச்சி  எழுத்துப் பணி மிகவும் சிறப்பானது.ஆசீவகம் என்ற தமிழர் மெய்யியலை இலக்கியச் சான்றுகளுடன் களப்பணி ஆய்வும் செய்து நிலைநாட்டினார்.அதில் குறை காண்பார்கள் உண்டு.ஆனால் அவரது ஆய்வு புது வெள்ளம் போன்றது.நுங்கும் நுரையும் குப்பையும் கூளமுமாகத்தான் ஆறு தொடங்கும்.ஓட்டத்தில்தான் நீர் தெளியும். பேராசியரது முன்னெடுப்பை மேலும் பலர் தொடரும் நிலையில் கால ஓட்டத்தில் தமிழர் மெய்யியல் முழுமையாக நிறுவப்படும். அவருக்கு வீர வணக்கம்.

https://aerithazh.blogspot.com/2022/11/blog-post_6.html


*

நன்றி:

பேரா டி.தர்மராஜ்,

பேரா சே.கோச்சடை,

ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் ஆகியோரது பதிவுகள்.


ஏர் மகாராசன்

வியாழன், 2 நவம்பர், 2023

அறிஞர் ஒரிசா பாலுவின் கடற் பயணமும் தமிழ் ஆய்வும்: பேரா. அரங்க மல்லிகா




கடல்சார் ஆய்வாளர் திரு ஒரிசா பாலு அவர்கள் தமிழக வரலாற்றைத் தமிழ் இலக்கியத்திலிருந்து தேடுவதைப்போல  கடலிலிருந்தும் ஆய்வு செய்ய வேண்டும்  என்பதைத் தன்னுடைய ஆய்வு முடிவாகத் தந்தவர். தருகிறார் .  

  குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்ததென விரிவாகக் கடலுக்குள் பயணப்பட்டு பேசி இருக்கிறார்.சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் வைகை ஆற்றங்கரை நாகரிகத்திற்கும் உள்ள தொடர்பைக் கடலில் மூழ்கிய கட்டிடங்கள், வாழ்வியல் முறைகள், பழங்கற்கால நாகரிகம்  ஆகியவற்றை வைத்துத் தொடர்புபடுத்துகிறார்.

தொடக்ககாலத்தில் இது லெமூரியா கோட்பாடாக(1863) இருந்தது.பிறகு குமரிக்கண்ட ஆய்வாக( 1864) த் தொடர்ந்ததும் 1898 இல் தமிழ் இலக்கியத்தையும் லெமுரியா ஆய்வையும் கொண்டு நரசிம்மப்பிள்ளை ஆய்வு செய்ததாகக் கூறுகிறார். பிறகு அது (1940) இல் கடல் கொண்ட தென்னாடு என மாறியது. இந்தக்காலக் கட்டத்தில் தான் தன்னுடைய ஆய்வு தொடர்ந்தது என்பதை விரிவாகப்பேசுகிறார்.

அவருடைய ஊடகப் பேட்டிகளில் ஆய்வுகளின் மூலத்தைக்  கடலுக்குள் அழிந்துபோன நகரங்களைக் கொண்டு விரிவான தரவுகளுடன்  அவர் பதிவு செய்திருக்கிறார் .தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர் வரலாற்றையும் தமிழருக்கும் வணிகத்திற்கும் உள்ள  தொடர்பையும் எடுத்துக்காட்டிய  ஒரிசா பாலு அவர்கள் மிக முக்கியமாகத் தன் ஆய்வில் ஆமைகளை ஆய்வு செய்ததில் தனக்கென ஓர் இடத்தை வரலாறாக மாற்றுகிறார்.தமிழரின் நாகரிகத்தை , பண்பாட்டை ஆய்வு செய்யும் ஆளுமைகளில் ஆமை ஆய்வில்தான் மிக முக்கியமான ஆய்வாளராக  ஒரிசா பாலு அவர்கள் அறியப்படுகிறார்.அவருடைய கடலாய்வின் மூலமாக குமரிக்கண்டம் மிகப்பெரிய ஒரு திருப்பு முனையைக்கொண்டது என உறுதிபடுத்துகிறார்.

  குறிப்பாக கடலில் ஆமைகள் நீந்தி வருவதை, திரும்பிச்செல்லும் வழியை, முட்டையிடும் முறையை ,குஞ்சு பொரிக்கும் அழகை யாவும் அறிகிறார். கடல் உள்வாங்குவது ஏன் என்பதை , குமரிக்கண்டம் இந்தோபசிபிக் ஆய்வின் மூலம்  வெளிப்படுத்துகிறார்.

       வரலாறு ஒரு நாகரிகத்தின் அடிப்படை. அதனால் வரலாற்றிலிருந்து ஆய்வைத்தொடர வேண்டும் என்பது அவர் அவா.தமிழ் மொழியைப் பயன்பாட்டில் கொண்டிருக்கும் நாடுகள் ஏராளம் .குறிப்பாக 125 நாடுகளில் தமிழ் மொழி, பயன்பாட்டில் இருக்கின்றது என்று கூறுகிறார் .எடுத்துக்காட்டாக தொழிலதிபர் வெர்ஜின் ஏர்லைன்ஸ் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சிஸ், மாறன் போன்றவர்கள் தமிழ்நாட்டை த் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு உலக நாடுகளில் பேரும் புகழும் பெற்று வரக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டும் அவர் உலக நாகரிகத்திற்கான தொடக்கம் வைகறை நாகரிகத்தில் இருக்கிறது .அதனைக் கீழடி என்ற  ஒற்றைச் சொல்லால் அடக்கி விட முடியாது என்று ஆணித்தரமாக ஆய்வின் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார். 

   2005 முதல் குமரிக்கடலில் ஆய்வு செய்யச் சென்ற அவருடைய அனுபவம் அதன் மூலமாக குமரிக்கடலில் மூழ்கிய நிலங்கள் தொடங்கி  மடகாஸ்கர் வரை தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் ஆய்வின் மூலமாக அவர் உறுதிப்படுத்துகிறார்.

 174 நாடுகளில் அவர் தமிழர்களுடன்   தொடர்புடையவராக இருந்து கொண்டிருந்தார் என்பது தான் தமிழ் மீதும் தமிழ் மொழி மீதும்  தமிழர்கள் மீதும்  அவர் கொண்டிருந்த தொடர்புக்கு சாட்சியாகும்.

  தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டுமல்ல தமிழைத்  தாய்மொழியாகக் கொண்டாலும் பழக்கத்தில்  மொழிப்பயன்பாடு  இல்லாதவர்கள் வாழ்வதையும் சுட்டிக்காட்டி  பல்வேறுபட்ட தமிழர்களுடைய நிலையையும்  வணிகத்தொடர்பையும் ஒவ்வொரு ஊடக உரையாடல்களிலும்  பெருமையோடு பகிர்ந்திருக்கிறார்.

வணிகத்தில் தமிழரே முதன்மையானவர்கள் என்பதை மணிமேகலை காப்பியத்தின் மூலம் தெரிவிக்கிறார்.

     முதன்முதலாக மருத நில நாகரிகத்தை உலக நாடுகளில் கொண்டு சேர்த்தவர்கள் தமிழர்கள்.அதற்கு குறிப்பாக தேவேந்திரக் குல வேளாளர்கள் வரலாற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார்.அவர்களின் மேம்பாட்டிற்கு அந்த இனத்தினரோடு  சேர்ந்து பல பணிகளைச்செய்திருக்கிறார்.விவசாயம் தேவேந்திர குல வேளாளர்களின் அடிப்படை தொழில் என்பதால் அவர்கள் உலகம் முழுவதும் அதைக்கொண்டு சேர்த்திருக்கிறார்கள் எனச்சொல்கிறார்.பழவேற்காடு தென்பெண்ணை ஆறு பாலாறு போன்ற இடங்களில் ஆய்வு  இன்னும் நடத்தப்பட வேண்டும் என்பதை முன்மொழிந்திருக்கிறார் .

  17 ஆற்றங்கரை நாகரிகங்கள் ஆய்விற்கு உட்பட்டு இருக்கின்றன என்றாலும் கூட உலக நாகரிகத்திற்கான தொன்மம் தமிழிலிருந்துதான் தொடங்குகிறது என்றும் அவர் உறுதிபடச்சொல்லுகிறார். 

2015 இல் நடந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு பெரிய மாற்றத்தை , பண்பாட்டு மாற்றத்தைத் தமிழரின்  அடையாளத்தை வெகுவாக எடுத்துக்காட்டும் என்றாலும் கூட அவை இன்னும் வெளிவராத சூழலில்,  குமரிக் கடலில் ஆய்வு செய்ததன் தொடர்ச்சியாக அவர் பல கருத்துக்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

    குமரிக்கடலில் மூழ்கிய நிலங்கள் , மடகாஸ்கர் வரை தமிழர்கள் வாழ்ந்த நிலம் ,கச்சத்தீவு போன்ற பகுதிகளில் உறுதி செய்வதற்கான தரவுகள் எனப் பல்வேறு செய்திகள் புதியனவாக இருக்கின்றன .சான்றாக அவர் உளி பானை ரசவாதம் வேதியியல் தாவரவியல் பற்றிய சிந்தனைகளில்  கடலுக்குள் வாழ்ந்த அந்த பகுதிகளிலும்  நிறைய சான்றுகளைக் காட்டுகின்றார். தமிழர்கள்  வாழ்ந்த நிலங்கள் கடலுக்குள் இருக்கின்றன என்றும் சொல்லுகின்றார் .

    பல்வேறு திறம்வாய்ந்த மக்கள் வணிக நுட்பம் தெரிந்த மக்கள்  திரைகடல் ஓடி திரவியம் தேடிய இந்த தமிழர்கள் மிகச்சிறந்த திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது வரலாறு என அவர் சுட்டிக் காட்டுகிறார் . தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் தேடுவதைக் காட்டிலும் கடலாய்வை முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார் .குமரிக்கண்டத்தை மீட்டவர்கள் கடல் மீன் பிடிப்பவர்கள் என்று ஆழமாகக் கூறுகிறார் .அவர்களைத் திரைமீளர் என்று  சொல்கிறார். இந்தச் சொல்லை அதிகமாகப் பயன்படுத்திய ஓர் ஆய்வாளராக ஒரிசா பாலு அறியப்படுகிறார் .தமிழர்கள் பெயராகவோ அல்லது உறவுகளின் பெயராகவோ பல நாடுகளில் வரலாறாகி இருக்கிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் சுட்டிக்காட்டுகிறார் .

   அறுபது வருட சுழற்சியில் தமிழ் வருடப்பெயர்கள் எங்கும் இல்லை என்பதைக் கவனப்படுத்துகிறார். தமிழ் மொழியோடு தொடர்புடையவர்களாகவும் தமிழ் வரலாற்றைக் கல்வெட்டுகளின் மூலமாக நாம் தமிழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவிலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றாலும் கூட ஏன்  60 வருட பெயர்கள் சுழற்சி முறையில் தமிழ்ப் பெயராக இல்லை என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுகிறார். 

அதனால் அவருடைய கோட்பாடு என்பது  தமிழ் மொழியினுடைய நிலை என்ன என்பதை உணரச் செய்தல் ,தமிழ் வரலாறு பண்பாடு அறியச்செய்தல், உலகம் முழுவதுமாக ஏன் தமிழர்கள் சென்றார்கள்?  வணிகத்தை, தமிழைக்கொண்டு சென்றவர்கள் தமிழர்களாக இருக்கும்போது ஏன் தமிழ் மொழி பின்னுக்குத்தள்ளப்படுகிறது?. அவர்களுக்குத் தான் வணிக நுண்ணறிவு அதிகமாக இருக்கிறது என்ற செய்தியைச் சொல்லி  மீண்டும் ஒரு மீள்கட்டமைப்பை அதாவது தமிழர் பண்பாட்டை உணர்தலை  மீள் கட்டமைப்புச் செய்தலை ஆய்வாளர்களுக்குச் சொல்லிச்சென்றிருக்கிறார். 

  உலக நாடுகளில் தமிழ் இன்றைக்குப் புழக்கத்தில் இருக்கின்றது என்றாலும் கூட சமஸ்கிருதம் இந்தியாவில் அதிகமாக வழிபாட்டு மொழியாக மாறி தமிழ் மொழியைச்சிதைத்து தமிழின்  முதன்மையை அதனுடைய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்தை முன்னெடுத்த ஆரியர்களுடைய வருகையையும்   சூழ்ச்சியை யும் அவர் சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தார். 

    தமிழர் பண்பாட்டை திரை மீளர்கள் மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அவர் தென்புலத்தார் என்ற ஒரு குழுமத்தையும் அமைத்தார். ஐயை என்ற ஒரு  குழுமத்தை அமைத்து அதன்மூலமாக  உலக நாடுகளில் இருக்கக்கூடிய பெண்களை ஒன்றிணைத்திருக்கிறார் .

அந்தக் குழுவில் இருக்கக்கூடிய பெண்கள் அதிகம் படித்தவர்களாக மிகப்பெரிய பணியில் இருப்பவர்களாக மிகப்பெரிய தொழில் அதிபர்களாக கட்டிடக்கலை நுண்ணியல்வாதியாக பேராசிரியர்களாக ஆய்வாளர்களாக படைப்பாளர்களாக இருக்கிறார்கள் என்றாலும் கூட வீட்டில் இருந்து கொண்டு சமையல் செய்யக்கூடிய குடும்பத்தைப் பராமரிக்கும் பெண்களையும் கூட அவர் ஊக்கப்படுத்தி அவர்களை எழுத வைத்திருக்கிறார் .அவர்களுடைய சிறு குறு தொழில்நுட்ப அறிவைக் கொண்டு அவர்களை ஒரு தொழில் முனைவோராக மாற்றி இருக்கிறார் .

இன்றைக்கு அந்த  குழுவின் மூலமாக அவர் விட்டுச் சென்றிருக்கக் கூடிய உறவுகள் என்று பார்த்தால் ஏறத்தாழ 174 நாடுகளிலிருந்து பெண்கள் அந்த குழுவில் இணைந்து இருக்கிறார்கள் .ஒரே இடத்தில் இருந்து கொண்டு உலகம் முழுக்க இருக்கக்கூடிய தமிழர்களை , தமிழச்சிகளை ஒன்றாக இணைத்த பெருமை திரு ஒரிசா பாலு அவர்களுக்கு இருக்கின்றது .

      எனக்கும் திரு ஒரிசா பாலு அவர்களுக்குமான தொடர்பு என்பது எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நான்  பேராசிரியராக இருந்த பொழுது ஒரு கருத்தரங்கத்திற்கு  அழைத்து அவரைச் சிறப்பு செய்தேன். அப்பொழுது அவர் தன்னுடைய கடல் ஆய்வு குமரிக்கண்ட ஆய்வைப் பற்றி மிக விரிவாகப் பேசினார் .மருத்துவத்திலும் அவருக்கு ஆழமான அறிவு இருப்பதையும் சுட்டிச் சென்றார் .அந்த அறிமுகம் பிறகு அவருடைய குடும்பத்தினரைச் சந்தித்து ப்பேசி உரையாடி மகிழ பல தருணங்களை வழங்கியது.

        புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து அவர் வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு அவரை நான் சென்று சந்தித்தேன்.

 அந்த சந்திப்பில் மணிமேகலை ஆய்வில் குறிப்பாக கடைசி நான்கு காதைகளை' அக்கா அரங்க மல்லிகா !நீங்கள் தான் அதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்'  என்ற ஒரு வேண்டுகோளை வைத்தார். நோய்வாய் பட்டு இருந்தாலும் கூட  பேச முடியாமல்  பேசினார்.

ஆனாலும்  சோர்வாக இருந்த அவர் என்னைப் பார்த்ததும்  ஏறத்தாழ 2 மணி நேரம் மணிமேகலை பற்றியும் மணிமேகலை எந்தெந்த நாடுகளில் பயணப்பட்டு இருக்கிறாள், இலங்கைக்கும் தமிழுக்குமான தொடர்பு என்ன ,மணிமேகலை காப்பியத்தின் மூலமாக மணிமேகலை கடலில் நீந்தி சென்ற முதல் பெண் என்றெல்லாம் விரிவாகப்பேசினார்.

 பௌத்த தத்துவ மரபு தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதுமாக இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்று சொன்னாலும் கூட இந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் மணிமேகலைக்கும் என்ன தொடர்பு என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதை என்னிடம் அவர் குறிப்புகளின் மூலமாக ஒரு பெரிய உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அதை நான் அடுத்த ஆய்வு நூலாக எழுத  இருக்கின்றேன்.

 ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சரியாக அவருக்கு மருத்துவச்சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதை மிகுந்த வருத்தங்களுடன் பதிவு செய்தார்..

அன்றைக்கு இருந்த  தமிழக அரசின் செயலாளருக்கு  நான் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் .அதில் மிகச்சிறந்த கடல் ஆய்வாளர் குமரிக்கண்ட ஆய்வாளர் தமிழ் மொழி குறித்த ஆய்வுகளில் மாபெரும் பங்களிப்புச்செய்தவர் திரு .ஒரிசா பாலு அவர்கள். 

அரசு  அவருக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன் .அவரும் அதற்கு இசைவு தெரிவித்திருந்தார். என்றாலும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஓமாந்தூரார் மருத்துவமனையில் அவரைத் தரையில் அமர வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை மிகுந்த வருத்தத்தோடு பாலு அவர்கள் என்னிடம் பதிவு செய்ததைக்கேட்டுக் கலங்கினேன்.

  தமிழ் ஆய்வுக்காக கடலில் மூழ்கி கடலாய்வு செய்த ஒரு மாபெரும் தமிழருக்குத் தமிழக அரசு உரிய மரியாதை செய்திருக்க வேண்டும் என்று மிகுந்த வேதனையோடு நான் இங்கே பதிவு செய்கிறேன். 

         1966 முதல் தமிழ் மாநாடு நடத்திய பெருமையைத் தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றாக பார்க்கக்கூடிய ஒரிசா பாலு அவர்கள் 2010 வரையில்  உலகச் செம்மொழி மாநாடு வரையில் நடந்த  தமிழ் மாநாடுகளைச் சுட்டிக்காட்டி உலக நாடுகளில் வாழும் தமிழர்களுக்காக ஒன்றைத்  தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைத்திருக்கிறார் . அதில் பன்னாட்டுத்தமிழர்களுக்கான ஒரு பதிவேடு அவசியம் எனச்சுட்டிக்காட்டுகிறார்.

           எப்படி கேட்வே டெல்லியில் இருக்கிறதோ, எப்படி  இந்தியா கேட்  மும்பையில் இருக்கிறதோ கேட் வே ஆஃப் வேர்ல்ட்  ஒன்று குமரிக்கடல் அருகே அமைக்கவேண்டும்  என்று அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அரசின் கவனத்திற்கு இங்கே நான் இதைப் பதிவுசெய்கிறேன்.

கட்டுரையாளர்:
பேரா.அரங்கமல்லிகா
தமிழ்த்துறைத் தலைவர்(ப.நி)
எத்திராஜ் மகளிர் கல்லூரி ,சென்னை

திங்கள், 26 ஜூன், 2023

திராவிடம்: தமிழர் அடையாளத்தை மறைக்கும் திரை - ம.பொ.சிவஞானம்


வடமொழியின்பால் தீராப்பகைமை கொண்டவர் போல் நடிக்கும் இவர்கள் தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்கின்றனர். ‘த்ராவிடம்’ என்பது வடமொழிச் சொல்லாகும். இதோ, ரெவரண்டு ராபர்ட் கால்டுவெல் டி.டி.எல்.எல்.டி. கூறுவதைக் கேளுங்கள்:

“வடமொழியில் தென்னிந்திய மொழியினத்தைக் குறிப்பதற்குப் பண்டை நாளில் வழங்கப்பட்டதாகத் தெரியக்கிடப்பது ‘ஆந்திர- திராவிட பாஷா’ என்ற சொற்றொடரேயாம். ‘தெலுங்கு - தமிழ்மொழி’ என்பது அச்சொல் தொடரால் போந்த பொருள்… சிறந்த வடமொழி வாணரான குமாரில பட்டர் என்பார் இச்சொற்றொடரை முதன்முதலாக எடுத்தாண்டுள்ளார்.”

”மனு ஸ்மிருதியில் ‘திராவிடம்’ என்ற சொல் ஏனைய தென்னிந்திய மக்கள் அனைவரையும் குறித்து நிற்பது… பெறப்படும். இனி, ஸ்மிருதி காலத்திற்குப் பின்னர் வந்த மொழியாராய்ச்சியாளர்களும் ‘திராவிடம்’ என்ற சொல்லைத் தென்னாட்டு மொழியினத்தைக் குறிப்பதற்கே எடுத்தாண்டுள்ளனர்.” “பாகத மொழித் தொகுதியில் ‘திராவிடி’ என்னும் பெயரால் திராவிட மொழியினம் சேர்க்கப்பட்டுள்ளது.”

“வடமொழி மூல நூல்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிட்ட ஜே.மூர் என்னும் பேராசிரியர், “சமஸ்கிருத மூலங்கள்” என்ற நூலில் எடுத்துக் காட்டியுள்ள மேற்கோள் ஒன்றில் ‘திராவிடம்’ என்பது ‘விபாஷை’ (சிறுபாகதம்) என்று வடமொழி வாணர் ஒருவரால் குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வடமொழி வாணர் திராவிடர்களுடைய மொழி ‘திராவிடி’ என்று கூறியுள்ளார்.” “பண்டை நாட்களில் வட நாட்டவரால் ‘திராவிட மொழிகள்’ என்று குறிக்கப்பட்டது.”

இவை, ‘கால்டுவெல் ஒப்பிலக்கணம்’ என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவையாகும். அந்நூலை, பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மேற்காட்டிய சான்றுகளால் ‘திராவிடம்’ என்னும் சொல் சங்க இலக்கியங்களிலோ தனித்தமிழ் நூல்களிலோ இல்லாத ஒன்றென்பதும், வடமொழியாளர் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நிலத்துக்கும் வைத்த இரவல் பெயர் என்பதும் நன்கு விளங்கும்.  

திராவிடர் என்பது மொழி அல்லது இன ஆராய்ச்சியாளர் தென்னிந்தியரைக் குறிப்பிடும் பொதுச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. அத்துறையிலும் முதன் முதலாக அந்தச் சொல்லைப் பயன்படுத்தியோர் அந்நியரான ஆங்கிலேயராகவே இருந்தனர். அவர்களும், ‘ஆரியர்’, ‘திராவிடர்’ என்ற இனப்பாகுபாடு இன்று நாட்டில் நடைமுறையில் இல்லையென்பதை எடுத்துக் காட்டி தென்னிந்தியரை எச்சரிக்கத் தவறவில்லை.

“சென்னை மாகாணத்தில் உள்ளவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றோ, அன்றி, வங்காளத்தில் உள்ளவர்களெல்லாம் மங்கோலியத் திராவிடர்கள் என்றோ நூல் பிடித்ததுபோல் பிரித்துக் கூறிவிடத் துணிதல் அறியாமையேயாகும்.

“ஆரியர், திராவிடர் என்பன போன்ற இனப்பிரிவு வகை, ஆராய்ச்சிக் கருவியாகக் கொண்ட பொதுவான அளவுகோலேயாகும்.”

இது, கிரீயர்ஸன் என்ற ஆராய்ச்சி வல்லுநர் “மொழி ஆராய்ச்சி” நூலில் கூறியிருப்பதாகும். இவ்வாறு அறிஞர்களெல்லாம் எச்சரித்தும், திராவிடர் என்னுஞ் சொல், தமிழர் என்னும் இனப்பெயருக்கு எதிராகத் திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டது. இந்தத் திராவிட மாயை தமிழரைத்தான் அதிகமாகப் பீடித்திருந்தது. ஆந்திரத்திலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ எந்த ஒரு அமைப்பும் திராவிடர் என்ற பெயரைத் தாங்கிக் கொள்ளவில்லை.

ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக் காலத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதித் திராவிடர்கள் எனப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, சுத்தத் தமிழர்களான அவர்களிடந்தான் அந்தப் பெயர் நிலைத்து விட்டது. ஆனால், ஆந்திராவிலுள்ள தாழ்த்தப்பட்டோர் நிலை வேறு. அவர்கள் ஆதி ஆந்திரர் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆம்; ஆந்திரர் என்ற இனப்பெயருக்கு எதிராக அவர்கள் ‘திராவிடர்’ என்ற சொல்லை ஏற்கவில்லை.

தமிழ்நாட்டில் ‘திராவிடர்’ என்ற சொல்லை நீண்ட நெடுங்காலமாக வற்புறுத்தி வந்தவர்களே பின்னர் அதைச் சந்தடியின்றிக் கைவிட்டனர். தற்போது, தமிழர் -மலையாளி என்ற இனப்பிரிவுகளைப் போர்க் கருவிகளாகப் பயன்படுத்தவும் முன்வந்து விட்டனர். ஆனால், சுமார் அரை நூற்றாண்டு காலம் திராவிடர் அல்லது பிராமணர் அல்லாதார் என்ற சொற்களைத் தமிழர் என்ற பெயருக்கு மாற்றாகப் பயன்படுத்தியதால், தமிழினத்தாருக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவது அவ்வளவு எளிதாக இல்லை என்பதைப் பார்க்கிறோம்.

1916இல் ஜஸ்டிஸ் கட்சி பிறந்த போது, அதனுடன் சேர்ந்து தமிழ் - தெலுங்கு - ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தனித்தனியே மூன்று நாளிதழ்கள் பிறந்தன. அவற்றின் பெயர்களைப் பார்ப்போம்: 

தமிழ் - ‘திராவிடன்’

தெலுங்கு - ‘ஆந்திரப் பிரகாசிகா’

ஆங்கிலம் - ‘ஜஸ்டிஸ்’ 

இந்த மூன்று நாளேடுகளிலே தெலுங்கு மொழி ஏடு ‘ஆந்திர’ என்ற இனப்பெயரைப் பெற்றிருக்க, தமிழ் ஏடு மட்டும் தமிழ் - தமிழர் - தமிழகம் என்ற பெயர்களை மறைக்கும் திரையாகத் ‘திராவிடன்’ என்ற பெயரைப் பெற்றதனை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இதே காலத்தில் ஆந்திர காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து பிறந்த மற்றொரு தெலுங்கு நாளேடுகூட ‘ஆந்திர பத்திரிகா’ என்று பெயர் பெற்றது. வேறு தேசியப் பெயர் எதனையும் பெறவில்லை. எங்கிருந்தாலும் ஆந்திரர் ஆந்திரர்தானே!

அன்று சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாக இருந்து, பின்னர் 1956இல் கேரளத்தில் இணைக்கப்பட்ட மலபார் மாவட்டத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகள் “கேரள சஞ்சாரி”, “கேரளோதயம்”, “மலையாளி” என்ற பெயர்களைப் பெற்றன. ஆம்; கேரளப் பிரதேசத்தில் வாழும் மலையாள மொழியினர் “திராவிடர்” என்ற பெயரை ஏற்காமல், தங்கள் மாநிலத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் பத்திரிகைகளை நடத்தினர் என்பது இதனால் புலப்படுகின்றது.

இலக்கிய வாட்டாரத்தினரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த “திராவிடர் ” என்னும் சொல்லுக்கு, அரசியல் வண்ணம் பூசப்பட்ட வரலாற்றை இங்கு சுருக்கமாகவேனும் விவரிக்க வேண்டியது அவசியமாகிறது.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி 1890இல் தமிழ் நாட்டளவில் “பறையர் மகாஜன சபா” என்னும் பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பெற்றது. “பறையர்” என்னும் சொல் தமிழ்நாட்டில் மிகவும் இழிந்த பொருளைக் கொண்டுவிட்டதால், 1910ஆம் ஆண்டுக்குப் பின்னர் “பறையர் மகாஜன சபை”யின் பெயர் “ஆதித் திராவிடர் மகாஜனசபை” என்று மாற்றப்பெற்றது. 

“திராவிடர் ” என்னும் சொல்லை, தென்னிந்தியர் அனைவரையுமே குறிக்கும் பொதுப் பெயராக இன ஆராய்ச்சியாளர் பயன்படுத்தி வந்ததால், தென்னிந்தியாவின் பழங்குடி மக்கள் என்பதனைக் குறிக்கும் வகையில் “ஆதி” என்னும் அடைமொழியும் திராவிடர் என்பதற்கு முன் சேர்த்துக் கொள்ளப்பட்டது .

இந்த மகாசபை 1918இல் சென்னை மாகாண அரசுக்குக் கொடுத்த கோரிக்கையிலே, மக்கள் கணக்கெடுப்பிலும் மற்றும் அரசு தஸ்தாவேஜூகளிலும் “பறையர்”, “பஞ்சமர்” என்னும் பெயர்களுக்குப் பதிலாக “ஆதித் திராவிடர்” என்னும் பெயர் சேர்க்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தப்பெற்றது.

ஆனால், அப்போதைய சென்சஸ் அதிகாரி ஈட்ஸ் என்பவர் இதனை ஏற்கவில்லை. ஆந்திரத்திலும், கன்னடத்திலும் “ஆதித் திராவிடர்” என்னும் பெயரை ஏற்க, தாழ்த்தப்பட்டோரில் எவரும் முன்வராத நிலையை இந்த அதிகாரி சுட்டிக் காட்டினார். ஆனால், ஆதித் திராவிடர் மகாசபை, பெயர் மாற்றக் கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியிலே பொதுக் கூட்டங்கள் போட்டு, தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது. ஜஸ்டிஸ் கட்சியினரும் அந்த மகாசபைக்குஉதவியாக இருந்தனர்.

அக்கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான டாக்டர் சி.நடேச முதலியார் ஆதித் திராவிட மகாஜன சபையின் கோரிக்கையை ஏற்குமாறு அரசினருக்குப் பரிந்துரை வழங்கும் தீர்மானம் ஒன்றை சென்னை மாநகராட்சிக் கூட்டம் ஒன்றிலே முன்மொழிந்து, அது நிறைவேறுமாறு செய்தார். 1921ஆம் ஆண்டுக்குரிய சென்சஸ் தயாரிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டளவில் பரவலாகச் சுமார் 15025 பேர் தங்களை ஆதித் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டு, அது குடிமதிப்பீட்டுக் கணக்கேட்டில் ஏறும்படி செய்தனர். 1921ஆம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி, சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிகை 63,70,074 ஆகும்.

இவர்களில் சுமார் பதினையாயிரம் பேர்தான் ஆதித் திராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர். இது தமிழகத் தாழ்த்தப்பட்டோரும் திராவிடர் என்னும் பெயரை விரும்பவில்லை என்பதைப் புலப்படுத்துகிறது. சென்னை மாகாணத்தின் இதரப் பகுதிகளில் தங்களை ஆதித் திராவிடர் என்று பதிவு செய்துகொள்ள எவரும் முன்வரவில்லை. 

1922இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் ஆதித் திராவிடர் என்னும் பெயரை அதிகாரப்பூர்வமாக ஏற்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று ஜஸ்டிஸ் கட்சியினரால் பிரரேபிக்கப்பட்டு நிறைவேற்றி வைக்கப்பட்டது. அதே ஆண்டில் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, “பஞ்மர்” அல்லது “பறையர்” என்பதற்குப் பதிலாக “ஆதித் திராவிடர்” என்னும் பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் இந்தப் பெயர் மாற்றம் தமிழ் மாவட்டங்களில்தான் அமுலில் இருக்குமென்றும் அரசு தெளிவுபடுத்தியது. 

மற்றபடி, தெலுங்கு மாவட்டங்களில் “ஆதி ஆந்திரர்” என்றும், கன்னட மாவட்டங்களில் “ஆதி கன்னடர்” என்றும் வழங்கி வரும் என்பதாகவும் அரசு உறுதி கூறியது. ஆம், அந்தப் பிரதேசங்களில் மொழிப்பற்றும் இனப்பற்றும் உடைய தாழ்த்தப்பட்ட மக்கள் “திராவிடர்” என்னும் பொதுப் பெயரை ஏற்க உறுதியாக மறுத்து விட்டனர். இந்த இனப்பற்றும் மொழிப்பற்றும் தமிழ் நாட்டினருக்கும் இருந்திருக்குமானால், இங்குள்ள தாழ்த்தப்பட்டோருக்கு “ஆதித் தமிழர்” என்ற பெயர் அன்றே தரப்பட்டிருக்கும்.

ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய நாள் தொட்டே தமிழர் என்னும் தன்மானப் பெயரை அழிக்கும் திரையாக - இல்லை, செயலாகவே “திராவிடர்” என்னும் போலிப் பெயரைப் பயன்படுத்தி வந்தனர் தமிழரிலே ஒரு சாரார். நல்ல வேளையாக 1956க்குப் பின் மனமாற்றமடைந்து தமிழ் வழங்கும் நிலப்பரப்பின் மீது “திராவிட நாடு” என்னும் பெயரைத் திணிக்க முயலாமல், “தமிழ் நாடு” என்னும் முயற்சியிலே மன நிறைவோடு பங்கு கொண்டனர்.

தமிழர் என்பதனை மறைக்கும் திரையாக - மறுக்கும் சொல்லாகத் திராவிடம் என்பது 1916 முதல் 1966 வரை சரியாக அரை நூற்றாண்டுக் காலம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்னமும் தமிழரிடையே செல்வாக்குப் பெற்றுள்ள இருவேறு கழகங்களின் பெயரிலே திராவிடம் ஒட்டிக் கொண்டிருக்கக் காண்கிறோம். 

திராவிடர் என்பது தென்னிந்தியர் - அவர்களிலும் பிராமணரல்லாதார் அனைவருக்குமான பொதுப்பெயர் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுவிட்ட பிறமொழியினருக்கும் சுத்தத் தமிழருக்குமான பொதுப்பெயராகவே அது பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால்தான் தமிழரல்லாதார் தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் தலைமை பெற முடிந்தது.

பார்வை நூல்கள்:

தமிழும் கலப்படமும், ம.பொ.சிவஞானம், முதல் பதிப்பு, 2014, கங்காராணி பதிப்பகம், சென்னை.

தமிழகத்தில் பிறமொழியினர், ம.பொ.சிவஞானம், முதல் பதிப்பு, 2011, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை. 

நன்றி: tamilthesiyan.wordpress.com

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,

தொகுப்பாசிரியர்: மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை,

முதல் பதிப்பு: டிசம்பர் 2022,

பக்கங்கள்: 128,

விலை: உரூ 150/-

*

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:

செந்தில் வரதவேல்,

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506




வியாழன், 11 மே, 2023

கல்விக்குள் நாசிசம்-பாசிசம்-காவியிசம் : மரு.தமிழ் சிலம்பரசன்


தேசியவாதக் கல்விக்கொள்கை 2019இன் அடிப்படையே இனத்தூய்மைவாதம் (racism purity) கொண்டதுதான். 

ஹிட்லர் நாசிசத்தைப் பரப்புவதற்குக் கையில் எடுத்தது, பாடத்திட்டத்தின் (curriculum) வழியாகத் தங்களின் கொள்கைக்குத் தகுந்தாற்போல் குடிமகனை (citizenry) உருவாக்குவதற்கு எடுத்துக்கொண்டது, பாடத்திட்டத்தின் வழியாக நாசிசத்தைப் பரப்புவதுதான். 

முசோலினியும் தனது பாசிசக் கொள்கைகளைப் பரப்புவதற்கு - பாசிசத்தை விரும்புகிற குடிமகன்களை உருவாக்குவதற்கு - அதன் வழியாகப் பாசிச வேர்களைப் பரப்புவதற்கு நம்பியது பாடத்திட்டத்தில் மாற்றம்தான்..

காவியிசமும் அதைத்தான் செய்கிறது. பாடத்திட்டத்தின் வழியாகவே தங்களது இந்துத்துவா கொள்கையைப் பரப்புவதற்கு அல்லது இந்துத்துவா கொள்கை கொண்ட குடிமகன்களை உருவாக்குவதற்கு, தேசியவாதக் கல்விக்கொள்கை -2019 உருவாக்கியது. அதில் மும்மொழிக்கொள்கை, கலை, தாராளமான கல்விக்கொள்கை என்று எல்லாம் வரையறுக்கப்பட்டதற்கான அடிப்படையே இந்துத்துவாதான். 

இந்தக் காவியிசம் கல்விக்கொள்கையின் வரைவுத் திட்டத்தின் தலைவராக இருந்தவர் கஸ்தூரி ரங்கன். ரங்கன் ஓர் விஞ்ஞானி, விஞ்ஞானிக்கும் கல்விக்கொள்கைக்கும் என்ன தொடர்பு? என்கிற அடிப்படையான கேள்வியே நாம் இக்கல்விக்கொள்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

தேசியவாதக் கல்விக்கொள்கை பற்றி தமிழ்நாட்டில் சரியான விவாதம் நடத்தப்படவில்லை என்பதே என்னுடைய வருத்தம். 

கல்விச் செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியியல் சார்ந்த அறிஞர்கள் (Education policy makers) பேசவேண்டியவற்றை, அதற்குச் சற்றும் தொடர்பு இல்லாத நபர்களை வைத்து இன்றையளவும் தமிழ்நாட்டு ஊடகங்கள் விவாதம் செய்தது அல்லது செய்துகொண்டு இருக்கிறது என்பது ஒருபுறம் வருத்தமாக இருக்கிறது. 

அப்போது, இதுவரையில் இருந்த அடிப்படைக் கல்விக்கொள்கை என்ன என்று நீங்கள் கேட்கலாம். அதை வகுத்தவரே சொன்ன வார்த்தைகள் இவை. 

“நாம் கொடுக்கும் கல்வியின் மூலம் இவர்கள் ரத்தத்தாலும், நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள். சிந்தனை, ரசனை மற்றும் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள் “ - மெக்காலே.

இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டமே இதன் அடிப்படையிலானதுதான். 

மெக்காலேவின் கல்விமுறைதான் அனைவருக்குமான கல்வியைக்கொடுத்தது என்று வாதடுபவர்களும் உண்டு.

இந்தியாவின் குறுக்கே நெடுக்கே கல்வியின் அடிப்படையிலேயே பயணம் செய்து இருக்கிறேன். ஓர் சிறியகிராமத்தில்கூட சமஸ்கிருத மொழி பேசுபவர்களை நான் கண்டதில்லை. இந்தியா இப்படி இருக்கையில், பாமர மக்களினால் பேசப்படாத ஒரு மொழியைக் கற்கச் சொல்வதை மும்மொழிக் கொள்கையாக வரையறுத்து இருக்கிறார் கஸ்தூரிரங்கன். 

சரி, தேசியவாதக் கொள்கைக்கு (nationalistic education) மாற்றுதான் என்ன? அதுதான் சமூகவாதக் கல்விக்கொள்கை(society driven education).

இந்தியாவின் கல்வியில் மேம்பட்டவராகக் கருதப்படும் அறிவாசன் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், கல்வியியலில் தனது ஆசானாக அறிவித்தது ஜான் துவே (john dewey) அவர்களைத்தான் . 

ஜான், சமூகவாதக் கல்வியைப் பெரிதும் நேசித்தவர். 

“education is a social process; education is growth, education is not preparation for life, education is itself life”

 - jhone Dewey 

உலக அறிவியல் மையத்தின் வளர்ச்சியைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்கா, தனது மாவட்டங்களைக் கல்வியில் உயர்ந்த மாவட்டங்களாகப் ( education district) பிரிக்கிறது. ஆனால், இந்தியாவில் மாவட்டமாகப் பிரிப்பது வருவாய் மாவட்ட முறையில் (Revenue district ) பிரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் higher society education draft committee என்று எதுவுமே கிடையாது. அதற்குக் காரணம் சமூகவாதக் கல்விக்கொள்கையை வித்திட்ட ஜான் துவேன் கல்விப் புரட்சி எனலாம். 

பின்லாந்து, உலகக் கல்வியில் முதலிடம். காரணம், அங்கே கல்விக்கொள்கையை நிர்ணயிப்பது அந்தமாவட்டத்தைச் சார்ந்த மக்கள்தான், அதுதான் சமூகவாதக் கல்விக்கொள்கை.

தேசியவாதக் கல்விக்கொள்கை 2019, குலக்கல்வி வாழ்வியலையும் அதன் பண்பாட்டு மீட்டெடுப்புகளையும், அதன் மொழியுயையும் மக்களிடம் புகுத்துவதே இக்கல்விக்கொள்கையின் நோக்கம்.  

உலகத்தில் எந்தவொரு கல்வி நிறுவனங்களிலும் இல்லாத ஒரு வார்த்தை, இந்திய கல்வி நிறுவனங்களில் விளம்பரங்களில் உண்டு “100% placements”. உலகத்தின் முதன்மையான பல்கலைக்கழங்களில்கூட இப்படியொரு விளம்பரம் இருக்காது. காரணம், கல்வியை அவர்கள் விற்பனைப் பொருளாகப் பார்ப்பதன் விளைவுதான் 100% placements. கல்வி வேலைக்கானது இல்லை, கல்வி சமூகத்திற்கானதுதான்.

ஆனால், இந்தியாவில் அது வியாபாரமாக மாறியது. அதற்குக் காரணம் உலகச் சந்தை. மனிதர்களாலும் கல்வி வணிகர்களாலும் இந்தக்கொடுமை நடந்தேறியது. இவர்களின் கல்விக்கொள்கை அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும்.

மனிதனை ஒரு விற்பனையாளராக மாற்றும் முறை தேசியவாதக் கல்விமுறை. ஆனால், சமூகவாதக் கல்விக்கொள்கை அறிவையும், அதனை வைத்துப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்வது, அறிவுப்புரட்சியை உருவாக்குவது. 

பரதநாட்டியத்தைக் கலையாக மாற்றியதும், ஆனால் கரகாட்டத்தை இன்னும் கலையாக மாற்றாமல் போனதற்குக் காரணம், சமூகவாதக் கல்வியை பின்பற்ற மறந்ததுதான்.

தேசியவாதக் கல்விக்கொள்கை அல்ல; காவியிசத்திற்கான கல்விக்கொள்கை. National education policy - 2019 

தேசியவாதக் கல்விக்கொள்கை என்ன செய்ய நினைக்கிறதோ, அதைத்தான் தமிழ்நாட்டு கல்விக்கொள்கையும் செய்ய நினைக்கிறதோ என்கிற அச்சம் முனைவர் ஐயா ஜவகர்நேசன் ஐயா விலகலிருந்து தெரிகிறது.. 

மிகுந்த கவனத்தோடு கையாளுவோம் நமது மாணவர்களின் எதிர்காலம் ! 

குறிப்பு: சமூகவாதக்கல்வி கொள்கைப்பற்றி முனைவர் ஜவகர் நேசன் எழுதிய “A response to draft education policy 2019 “ In search of education nationalistic education vs social driven education எனகிற புத்தகம் உண்மையில் கல்வியைப்பற்றிய மாற்றுச் சிந்தனை நமக்குத் தரக்கூடியது.

இந்தியா முழுவதும் ஒற்றைச் சிந்தனையோடு இருந்தபோது, மாற்றாக இதுதான் இந்தியாவின் கல்விமுறையாக இருக்கவேண்டுமென்று எழுதிய முனைவர் ஜவகர் நேசன் அவர்களை வசைப்பாடியுள்ளது மனது ஏற்க மறுக்கிறது..  

     மருத்துவர் தமிழ் சிலம்பரசன் அவர்களது பதிவிலிருந்து...