திங்கள், 13 ஏப்ரல், 2020

சித்த மருத்துவ நூல்களே தமிழின் மைய இலக்கியம்: கவிஞர் குட்டி ரேவதி


தமிழ் மருத்துவ இலக்கியத்தை இங்கே ஒரு பதிவில் வரையறுத்துவிட முடியாது. என்றாலும் அவை என்ன மாதிரி பதிவுகளாக இருக்கின்றன என்பதை இங்கே கொஞ்சம்  தொட்டுக்காட்டிவிட  விரும்புகிறேன்.

தமிழ் மருத்துவ இலக்கியம் என்பது இதுவரை கண்டறியப்பட்டுச் சேகரிக்கப்பட்ட 3000 சித்தமருத்துவச் சுவடிகளை உள்ளடக்கியது.

பெரும்பாலான நூல்கள் அகத்தியர் 12000, போகர் - 7000, மச்சமுனி - 800, சட்டமுனி - 3000 என்பனவாய் சித்தமருத்துவர்களான அகத்தியர், போகர், மச்சமுனி, சட்டமுனி, கொங்கணர், கோரக்கர் ஆகியோர் பெயர்களிலேயே வழங்கப்படுகின்றன.

பதிப்பிக்கப்பட்ட நூல்களில் குறிப்பிடப்படும் சில நூல்கள் மறைந்து போயிருப்பதையும் அறிய முடிகிறது. உதாரணத்திற்கு, தேரையர் யமக வெண்பா என்ற நூலில் குறிப்பிடப்படும் பிற மருத்துவ நூல்களும் மேற்கோள் நூல்களும் நிறைய இன்று நம்மிடம் இல்லை.

நாங்கள் படிப்பதற்கு எங்களிடம் இருக்கும் நூல்களை விட, அதாவது இங்கே சித்தமருத்துவர்களுக்குப் பாடத்திட்டத்தில் வழங்கப்படும் நூல்களை விட எண்ணற்ற நூல்கள் புழக்கத்தில், வாசிப்பிற்கு, மருத்துவத்திற்கு இருந்திருக்கிறது. ஆங்கில ஆட்சியின் போது, பிரிட்டீஷார் தமிழ் மருத்துவத்தினால் ஈர்க்கப்பட்டு நிறைய நூல்களைத் தங்களின் History of Medicine நூலகச் சேகரிப்பிற்குக் கொண்டு சென்றதாக அறிகின்றேன். இங்கே ஆய்வு மேற்கொள்ள விரும்பும் சித்தமருத்துவர்கள் அங்கும் சென்று நூல்களை வாசிக்கையில் தான் ஆய்வுகள் முழுமையாகும்.

நிறைய நூல்கள் அவை இயற்றப்பட்டிருக்கும் பாக்களின் வகையிலேயே வழங்கப்படுகின்றன. தேரையர் வெண்பா, குணவாகட வெண்பா, சட்டைமுனி தாழிசை(தாழிசைச் செய்யுள்), அகத்தியர் விருத்தம் (ஆசிரிய விருத்தப்பாக்கள்), மச்சமுனி கலிப்பா, கருவூரார் நொண்டிச்சிந்து, யூகிமுனிவர் வாகடக்கும்மி, அகத்தியர் பள்ளு, அகத்தியர் வைத்திய காவியம், பதார்த்தகுண சிந்தாமணி, அகத்தியர் வைத்திய சூடாமணி, யூகி வைத்திய சிந்தாமணி, புலத்தியர் வைத்திய சதகம். குறள் வெண்பாவைப் போலவே வழங்கப்படும் ஒளவைக்குறளும் உண்டு.

சூத்திரம், நிகண்டு, மூலிகை நூல்கள், குழந்தை மருத்துவம் தொடர்பான நூல்களும் உண்டு. இதில் சூத்திரம் என்பது தமிழ் மருத்துவத்தின் மறைபொருள்களைக் குறிப்பிடும் நூலாகும். நிறைய பெயர்கள் மொழி வளமைத் திறனால், வேறு அர்த்தம் தொனிக்கச் சொல்லப்பட்டிருக்கும்.  அகத்தியர் காவியச் சுருக்கம்  ஒருபாடலாலும்  மச்சமுனி சூத்திரம் 800 பாடல்களாலும் ஆனது. அகத்தியர் குழம்பு, அகத்தியர் வல்லாதி என்று முக்கியமான சித்தமருந்துகளின் பெயரால் ஆன நூல்களும் உண்டு. சரக்குவைப்பு நூல்கள் என்று குறிப்பிடப்படுபவை முக்கியமானவை.

மருத்துவத்திற்குப் பயன்படும் மருத்துவ இயற்கையான மூலப்பொருட்களே சரக்கு. இயற்கையான பாடாணங்களைக் கொண்டு செயற்கைப்பாடாணங்களை ஆக்கும் வழிமுறைகள் சொல்பவை.  இயற்கைப்பாடாணங்கள் - 32, செயற்கைப்பாடாணங்கள் - 32. இந்தச் செயற்கைப்பாடாணங்கள் செய்முறை தமிழ் மருத்துவர்களுக்கு மட்டுமே உரிய கலைத்திறன் என்று சொல்லவேண்டும்.

கலைஞான நூல்கள் என்ற வகை நூல், அறிவு நூல் என வழங்கப்படுகிறது. வர்மநூல்கள் மொத்தம் 116 இருப்பதாக அறிகிறோம். கால்நடை மருத்துவ நூல்களும் தமிழ் மருத்துவ இலக்கியத்தில் அடங்கும்.

உண்மையில், தமிழ் இலக்கியப் பரப்பின் பெரும் பகுதியை   தமிழ் மருத்துவ இலக்கியங்களே   எடுத்துக்கொள்ளும். தமிழ் இலக்கணமும் இலக்கியக் கல்வியும் தமிழ் மருத்துவத்தை அறிய முக்கியமாகையால், தமிழ் மருத்துவம் இலக்கியத்தில் இன்னும் சிறப்புடைய துறையாகிறது. தமிழ் இலக்கிய அறிவைப் புகட்டாமல், தமிழ் மருத்துவ அறிவைப் புரிய வைத்துவிட முடியாது. அறிவுக்கலையின் செம்மையான வடிவமாக இது திகழ்வதால், இதை ஒரு சமூகத்தில் புகட்டாமல் நவீனத்தையோ மறுமலர்ச்சியையோ எட்டமுடியாது.
நூற்றுக்கணக்கான சான்றோர்களின் அறிவும், உழைப்பும், அக்கறையும் நிறைந்த நூல்களுடன் இத்துறை திகழ்வதும் இதன் சிறப்பு.

நான் இங்கே தொட்டுக்காட்டியுள்ளது மிக மிகக்குறைவே. இது ஒரு கடல், இதுவே தமிழின் மைய இலக்கியம்.

கவிஞர் குட்டி ரேவதி
13.04.2020.

/ ஏர் இதழ் / 13.04.2020/

2 கருத்துகள்:

  1. 305 of global population is China and India both are rural level using the Siddha medicine is proved So, Time has come it must be sysnthesized now to give life , let us stop using dead system like doomacracy saxonic judiciary . Concious must rule us nothing else , our Tamil medicine must rule us , not the fake sciences !

    பதிலளிநீக்கு