செவ்வாய், 28 ஏப்ரல், 2020

நானும் மலையாளத் திரைப்படங்களும்: இயக்குநர் வெற்றி

என் இனம் தமிழினம்; என் தேசம் தமிழ் தேசம் என்பதில் உறுதி கொண்டவன் எழுதுகிறேன்.
திரைப்படம் இயக்கும் வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறேன். என் தொழில் சினிமா எடுப்பது. அதற்காக சினிமாக்களை பார்த்து என்னை தயார் செய்து கொண்டியிருப்பேன். துல்கர் சல்மானின் வர்னே அவசிமுண்டு படத்தை இந்தப் பிரச்னை தொடங்குவதற்கு முன்பே பார்த்துவிட்டேன். முகநூலில் கூட அந்தப் படத்தை தவறாமல் பார்க்க வேண்டும் என்று பாராட்டி எழுதி இருந்தேன். அந்தப் படத்தில் இப்படியான காட்சி இடம்பெற்றதை நானும் கவனித்தேன்.

தொடர்ந்து மலையாளப்படங்கள் பார்க்கிறவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். மலையாளப் படங்களில் தமிழ் கதாபாத்திரங்கள் இழிவுபடுத்தும் விதத்தில் சித்தரிக்கப்படுவது என்பது தொடர்ந்து நடந்து வருவதுதான். இது இன்றுக்கு நேற்று நடப்பதல்ல; காலங்காலமாக நடப்பதுதான்.
தமிழில் ராஜிவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேண் கண்டுகொண்டேன் படத்தில், மம்முட்டி முன்னாள் ராணுவவீரராக வருவார். போரில் ஒரு காலை இழந்த ஊனமுற்றவராக நடித்திருப்பார். ஒரு காட்சியில் அவர் கோபமாக பேசும்போது அவர் இந்திய அமைதிப் படையில் பங்கேற்று இலங்கை சென்றிருக்கிறார் என்றும், விடுதலைப்புலிகள் தாக்கியதில் அவர் கால் ஊனமுற்றது என்றும் சொல்வார்.

தமிழர்களை கொன்று குவித்த அமைதிப்படையினரை வரவேற்கச் செல்லாதது மிகப்பெரிய தேச விரோத செயல்போல் அந்தக் காட்சியில் சித்தரித்திருப்பார்கள்.
இந்தப் படத்தை தயாரித்தவர் கலைபுலி தாணு. அப்போது அவர் மதிமுகவில் இருந்தார்! 
ராஜிவ் மேனன் யார் என்பதும் எதற்காக ஒரு காதல் படத்தில் வழிந்து இந்தக் காட்சியை வைத்திருப்பார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தப் படத்துக்குப் பின்னும் ராஜிவ் மேனன் தமிழ்த் திரையுலகில் பணியாற்றிக் கொண்டுதானிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இயக்கிய டெரரிஸ்ட் மற்றும் இனம் போன்ற படங்கள் விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் இழிவு படுத்தின. ராஜிவ் மேனனும் சந்தோஷ் சிவனும் எங்கிருந்து வந்தவர்கள்? கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துக்குப் பின் ராஜிவ் மேனனும், டெரரிஸ்ட், இனம் படத்துக்குப் பின் சந்தோஷ் சிவனும் தமிழ்ச் சினிமாவில் பணியாற்றிக் கொண்டுதானிருக்கிறார்கள். தமிழ் பெண்களை கருத்த பன்றிகள் என்று வர்ணித்த நடிகர் ஜெயராமனும் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டுதானிருக்கிறார். அவர் மகன் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார்.

தமிழில் எடுக்கும் படங்களிலேயே இந்த அளவுக்கு அவர்களால் ‘செய்ய‘ முடிகிறது என்றால் அவர்கள் மொழியில் எடுக்கும் படங்களை பற்றி கேட்கவே வேண்டாம்!  தமிழர்களை கேலியாக இழிவாகப் பார்க்கும் பார்வை அவர்கள் மரபுலேயே இருக்கிறது.

மலையாளத் திரைப்படைப்பாளிகள் தொடர்ந்து சினிமா மூலமாக நம்மீது எச்சிலை துப்புகிறார்கள். அதற்கு பதிலடியாக நாம் என்ன செய்ய வேண்டும்? எதிரி என்ன ஆயுதத்தை கையில் எடுக்கிறானோ அதே ஆயுதத்தை நாமும் கையில் எடுப்பதுதான் புத்திசாலித்தனம்.. அவர்களை போல கலையம்சங்களுடன் நம்மால் சினிமா எடுக்க முடியாதா?

எவ்வித விருப்பும் வெறுப்பும் இன்றி யோசித்துப் பாருங்கள், பெரும்பாலான தமிழ்ப் படங்கள்  எப்படி இருக்கின்றன? பெரும்பாலான மலையாளப்படங்கள் எப்படி இருக்கின்றன? சமீபத்தில் தமிழில் வெளியான நல்லபடங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மலையாளத்தில் பெரும்பாலான படங்கள் அழகியலோடும் கலையம்சத்தோடும் அவர்களின் கலாசாரத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் நடந்த முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை சம்பவத்தை அவர்கள்தான் டிராஃபிக் என்ற படமாக எடுத்தார்கள்.

மலையாள திரைத்துறையின் தந்தை என்று போற்றப்படும் ஜே.சிடேனியல் வாழ்க்கை வரலாறு பிரித்வி ராஜ் நடிப்பில் செல்லுலாய்ட் என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்று  கடைக்கோடி மலையாள சினிமா ரசிகனுக்கும் அவன் மொழி சினிமாவின் தந்தையை தெரிந்திருக்கிறது, என்றால் இப் படம்தான் காரணம்.

தென்னிந்திய திரைத் துறையின் தந்தை தமிழரான சாமிகண்ணு வின்சென்ட். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவில் பதிவு செய்ய 100 ஆண்டு தமிழ் சினிமாவில் சிறு முயற்சி கூட எடுக்கப்படவில்லை. சினிமா பார்க்கும் தமிழர்களில் எத்தனை பேருக்கு சாமிகண்ணு வின்சென்ட் தெரிந்திருக்கும்?  அட, முதலில் சினிமாக்காரர்கள் எத்தனை பேருக்கு சாமிக்கண்ணுவைத் தெரியும்? 
அவ்வளவு ஏன்?

உலகில் உள்ள எந்த தாயை விடவும் தியாகத்தில் உயர்ந்து நிற்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வாழ்க்கைத் துயரத்தை திரைப்படமாக எடுக்க இங்கே யாராவது முயற்சி செய்திருப்போமா?  அப்படி  செய்திருந்தால், பேரறிவாளனின் தாயின் தியாகத்தையும் பேரறிவாளன் தரப்பு நியாயத்தையும் வலியையும் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சென்றிருக்க முடியும்.  இதில் படைப்பாளிகளை மட்டும் குறை சொல்லி பயனில்லை. இங்கே உள்ள அரசியல் (அடிமை) சூழ்நிலை  அப்படி இருக்கிறது. கேரளாவின் பிரதான கட்சியான கம்யூனிஸ்ட்டை கட்சியை விமர்சித்து வெளியான பத்துக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களை பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டில் ஒரு லெட்டர் பேட் கட்சியைக் கூட சினிமாவில் விமர்சிக்க முடியுமா?

சில மாதங்களுக்கு முன்பு தமிழில் ஒரு படத்தின் ட்ரெய்லர் ரீலீஸ் ஆனது. அந்த ட்ரெய்லர் பார்த்தாலே அது குப்பைப் படம் என்று தெரிந்து விட்டது. அப்படியே விட்டிருந்தால் திநகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் காலைக்காட்சியில் ரிலீஸ் ஆகி அடுத்த நாளே தியேட்டரை விட்டுப் போயிருக்கும்.
ஆனால் ட்ரெய்லரைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அந்தப்படத்துக்கு எதிராக எழுத ஆரம்பித்தார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அந்தப்படம் பிரபலமாக காரணமாக இருந்தது அந்தப்படத்தின் தரமோ? அந்தப் படத்தின் நடித்தவர்களோ இல்லை. படத்தை எதிர்த்தவர்களால் மட்டுமே அப்படியொரு படம் பிரபலமானது. அந்தப்படத்தை பார்க்கும் மலையாளிகளுக்கும் பிற மாநிலத்தவர்களுக்கும் தமிழர்களை பற்றி என்னமாதிரியான மதிப்பு இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
இன்று அந்தப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவால் வாங்கப்பட்டிருக்கிறது என்றால் அந்தப் பெருமை அந்தப் படத்தை எதிர்த்த நம் தோழர்களையே சேரும். ஊரங்கு உத்தரவால் ஒரு பக்கம் மக்கள் பசியால் செத்துக் கொண்டிருக்க, நாம் மதுவந்தியின் முட்டாள் தனமான வீடியோவை நக்கல் நையாண்டி செய்து கொண்டிருந்தோம்.  நாம்  கிண்டலடித்துக் கொண்டும் நையாண்டி செய்து கொண்டிருக்கும் ஆட்களின் வீடுகளுக்கு நம் முதல்வரே பால் பாக்கெட் கொண்டு போய்  போடுகிற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்படியெல்லாம் நடந்து கொண்டால், மலையாளிகள் அல்ல, யார்  வேண்டுமானாலும் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள்.
விஷயத்துக்கு வருகிறேன்.
நாடி நரம்பெல்லாம் தமிழர் வெறுப்பு கலந்துள்ள மலையாள சினிமாவுக்கு  பதிலடியாக நாமும் கலையம்சங்களுடன் நம் பெருமையை பேசும் படங்களை எடுக்க முடியும்.
என் ஆவணப்படத்தின் திரையிடலின் போது, விடுதலைப் புலிகளின் நியாயத்தை பேசும் படங்கள் தமிழில் எடுக்கப்படவில்லை என்று நான் வருத்தப்பட்டு குறிப்பிட்டதற்கு காற்றுக்கென்ன வேலி, படத்தை இயக்கிய புகழேந்தி தங்கராஜ் அவர்களின் நண்பர்கள் சிலர் கோபித்துக் கொண்டதாக அறிந்தேன்.

காற்றுக்கென்ன வேலியை ஒரு திரைப்படமாக என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. (நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உரைத்தவர்கள் நாம் என்பதை மறந்து விடக்கூடாது)

இறுதிக்கட்டப் போரின் போது புகழேந்தி தங்கராஜ், சத்யராஜ் சீமான் போன்றோரை வைத்து இயக்கிய இன்னொரு படமும் (பெயர் ஞாபகம் இல்லை) என்ன லட்சணத்தில் இருந்தது என்று மனசாட்சியுடன் யோசித்துப் பாருங்கள்.

விடுதலைப்புலிக்கு எதிராக மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இருக்கும் அழகியலும்  கலையம்சமும் புலிகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படங்களில் இல்லையே, ஏன்?
தமிழில் ஆகச்சிறந்த இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களால் எடுத்திருக்க முடியும்? ஏனோ அவர்கள் செய்யவில்லை. அப்படியே எடுத்தால் தியேட்டரில் வெளியாகுமா? சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என்பதெல்லாம் வேறு கதை?

இப்போது OTT platform வந்துவிட்டது. Youtube, Netflix, prime video, zee5, Mx Player  என்று ஏராளமாக உள்ளன.
இது வெப்சீரிஸ் காலம். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றையே ஒளிவு மறைவின்றி queen என்று வெப்சீரியஸாக எடுத்து (தைரியமாக) வெளியிவிட்டார்கள். யாரும் அதை எதிர்க்க முடியவில்லை. (இதே காலகட்டத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயரை வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்ததற்காக தியேட்டரில் வெளியான சர்க்கார் படம் கடும் எதிர்ப்பை சந்தித்ததை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பின் அந்தப் பெயர் நீக்கப்பட்டது )

புலிகள் வரலாற்றையோ, நம் தலைவர் பிரபாகரன் பற்றியோ வெப்சீரிஸ் எடுத்தால் யாரும் தடுக்க முடியாது. தரமாக இருந்தால் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கி வெளியிட OTT Platforms தயாராக இருக்கின்றன. வர்னே அவசிமுண்டு படத்தைத் தியேட்டரில் பார்த்தவர்களை விட, Netflix ல் பார்த்தவர்களே அதிகம்!

உடனே நீ என்ன செய்து கிழித்துவிட்டாய் என்று கேள்வி கேட்பீர்கள். அவர்களுக்காக  சொல்கிறேன்: நானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெப்சீரிஸ் எடுத்து வருகிறேன். உலகத் தமிழர்கள் மத்தியில் எங்கள்  வெப்சீரிஸ்க்கு (கால்கட்டு, கஞ்சா) நல்ல வரவேற்பு உள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை பின்புலமாக வைத்து உண்மையை சம்பவங்களின் தழுவலில் திரைக்கதை அமைத்து OTT platform ஐ அணுகினேன்.  திரைப்படங்கள் இயக்கிய அனுபவம் உள்ள இயக்குநர்களை வைத்துதான் நாங்கள் வெப்சீரிஸ் தயாரிப்போம் என்று சொல்லி, என் கதையை மட்டும் தந்துவிடச் சொன்னார்கள்.

புலிகள் பற்றிய கதையை மற்றவர்கள் கையாலும் போது,  தவறாக சித்தரிக்க வாய்ப்பு இருப்பதால் கதையைக் கொடுக்க மறுத்து விட்டேன்.  என்னை விடுங்கள், வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் நல்ல படைப்பாளிகளை அணுகி நம் பெருமை பேசும் தமிழ்ப் படங்களை கலையம்சத்துடன் உலகத் தரத்தில் எடுக்க முயற்சி செய்யுங்கள். அதுவே நம் எதிரிகளுக்கு நாம் கொடுக்கும் பதிலடியாக இருக்கும்.

குறிப்பாக, நான் சொல்ல  விரும்புவது இரண்டே விஷங்கள் தான்.

ஒன்று, மலையாள திரைப்படைப்பாளின் தமிழர் விரோத போக்கை உங்களால் தடுக்க முடியாது. இந்த சம்பவத்துக்குப் பின் அவர்கள் இன்னும் தீவிரமாவார்கள்.

இரண்டு, அவர்களுக்கு பதிலடி கொடுக்க கலையம்சங்களுடன் கூடிய படங்களை நாமும் செய்து நம் பெருமையை நிலைநாட்ட என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். OTT platform ஐ
நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், வேற எவனாவது வந்து விடுதலைப்புலிகள் பற்றி  வெப்சீரிஸ் அல்லது படம் எடுக்கிறேன் என்று அவர்களை இழிவு படுத்தி வைப்பான். நாமும் வேறு வேலைகளை விட்டுவிட்டு அவனை திட்டித்தீர்த்துக் கொண்டிருப்போம். காலம் பூராவும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது வினை ஆற்றப்  போகிறோமா? சிந்திப்போம்.

நிறைவாக. கலையம்சம் உள்ள படங்கள் எந்த மொழியில் வந்தாலும் சினிமாக்காரனாக பார்க்கவே செய்வேன். அதை எதன் பொருட்டும் யாரும் தடுக்க முடியாது. அதற்காக நீங்கள் ஆத்திரப்பட்டு என் மேல் சேற்றை வாரி இரைத்தாலும் எனக்குக் கவலை இல்லை.

தமிழ் வாழ்க.
நன்றி
வெற்றி (28.4.2020)
#blackpasanga #Kaalkattu

/ ஏர் இதழ் வெளியீடு / 28.04.2020 /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக