வியாழன், 9 ஏப்ரல், 2020

சித்த மருத்துவம் மீளுமா?:- இரா.முத்துநாகு


மனித குலத்தை அச்சத்தில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நாவல் கொரொனா தொற்றுநோய்ப் பரவலை முறியடிப்பதற்கு, மருந்தில்லா மருந்தாகத் 'தனித்திருக்கும்'படி மருத்துவ உலகம் அறிவுறுத்தலாக வழங்கியுள்ளது.

'இந்த நோயின் பெயர்தான் புதிது. ஏற்கனவே மனித குலத்தில் இருந்த நோய்தான்'. இதற்குப் பாரம்பரிய மருந்துவத்திலும் தீர்வு உண்டு. தொற்று நோய்கள், ஒட்டுவார் ஒட்டி எனப் பெயர். இதற்குத் தனித்திருத்தல் ஏற்கனவே மக்களிடமிருந்த மரபு மருத்து முறை. அம்மை, காய்ச்சல் போன்ற தொற்று நோய் வந்தவர்கள் வீடுகளில், வேப்பம் இலை சொறுகி அடையாளப்படுத்தித் தனிமைப்படுவார்கள். அவர்கள் வீட்டிற்கு வேற்று ஆள் வந்தால் வாயிற்படியில் நிற்க வைத்து ‘எங்க வீட்டில் அம்மை விளையாண்டுள்ளது. கடும் காய்ச்சல் கண்டுள்ளது’ என்று சொல்லி, தூரநின்று பேசுவார்கள். இப்படியான விவாதம் சித்த மருத்துவர்களிடமிருந்து கிளம்பியது.

‘பாரம்பரிய மருத்துவம் என்பது 'மூட நம்பிக்கை' என்று ஆங்கில மருத்துவத்திற்கு ஆதரவான கருத்தும், ‘நாம் உண்ணும் உணவிலிருந்து அனைத்திலும் நமது மரபு உள்ளது’ என்று நாட்டு மருத்துவர்களும் சமூகத் தளங்களில் காரசாரமாக விவாதித்துக்கொண்டுள்ளனர்.

அலோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சை, உடலுறுப்பு மாற்றுதல், துண்டான உடலுறுப்பைப் பொறுத்துதல் போன்ற வளர்ச்சியால் உலகத்தையே வசீகரித்துள்ளது நீக்கமற நிறைந்திருந்தாலும், உலகம் முழுவதும் மரபு மருத்துவம் அரசு ஆதரவில்லாமல் உயிர்ப்புடன் உள்ளது. மரபு மருத்துவத்தில் அலோபதியில் தீர்க்கப்படாத நோய்கள் குணமாவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சித்த மருத்துவம், எங்கு எப்படிப் பரவி இருந்தது? 19ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்தியக் கம்பெனி இந்தியா முழுவதையும் தனது அதிகாரத்திற்குக் கீழ் கொண்டுவருவதற்கு முன்பு, தமிழகத்தில் இருந்த சித்த மருத்தும் ஏன் வளராமல் போனது? அதற்கான காரணங்கள் என்ன?

விலங்கிலிருந்து பிரிந்த மனிதன், தன்னைத்தானே காத்துக்கொள்ள கண்டுபிடித்த முதல் தற்காப்பு ஆயுதம் மருத்தவமாக மட்டுமே இருக்கும். அதன் பின்னரே ஆயுதங்கள் கண்டறிந்திருப்பான் என்று மானுடத் தோற்றத்தின் ஆய்வு நூல்கள் சொல்கின்றன.

கம்பெனி ஆட்சிக்கு முன்பு, மன்னர்களின் நிர்வாகத் தளமாக இருந்தவை கோயில்களும் அதன் மடங்களும்தான். இவை மருத்துவம், வானிலை, சிற்பம், நடனம், நாடகம், பூமியின் நீர் இருப்பு அறியும் கூவகச் சாத்திரம், கல்வி போன்ற கலைகள் கற்றுக்கொடுக்கும் மையமாகச் செயல்பட்டன. (சான்றுகள்: கல்வெட்டு அறிஞர்களான சுப்புராயலு, புலவர் இராசு, சாந்தலிங்கம் போன்றவர்களின் தமிழகக் கல்வெட்டு, செப்பேட்டுத் தொகுதிகள்).

கோயில்களைப் பிரிட்டீஷார் அறநிலையத்துறையாக மாற்றம் செய்தனர். கோயில் பணியாளர்கள் தவிர, கலைத்துறையினருக்கு வழங்கப்பட்ட மானிய நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டன. பிறகு, கோயில்கள் இறைத்தளமாக மட்டுமே உருமாறின.

கோயிலைச் சார்ந்து இயங்கிய கலைஞர்களைக் காத்திட அரசு விருப்பம் காட்டாததால், கிராமங்களை நோக்கி அவர்கள் நகர்ந்தனர். கவனிக்க ஆளில்லாததால் மடங்களில் இருந்த பல ஆயிரம் மருத்துவச் சுவடிகள், ஆவணங்கள் மறைந்தும், அழிந்தும் போயின. மருத்துவர்கள் கூடி விவாதிக்கும் முறை தொலைந்தது. (சான்று நூல்கள்: இந்திய வரலாறு - ரொமிலா தபார், ஏ.எல்.பாஸ்யம், கோசாம்பி, வின்சென்ட் ஸ்மித், ரிச்சர்டு எம். இ. ஏடன் – டெக்கான் சோசியல் கிஸ்டரி, உ.வே.சாவின் சுயசரிதை)

இந்திய ஒன்றியக் கடற்கரைப் பகுதிகளில் வணிகத்திற்காகக் குடியேறிய டச்சு, பிரிட்டீஷ், பிரெஞ்சு, போர்த்துகீசியர்களின் வணிகப் போட்டியாலும், இந்திய நிலப்பரப்பில் ஆண்டு கொண்டிருந்த பல்வேறு மன்னர்களிடம் நிலவிய அரசியல், சமூகக் காரணங்களாலும் சுமார் 1730 இல் துவங்கிய யுத்தம் 1805இல் முடிவுக்கு வந்தாலும், உள்நாட்டுப் போராக, கலவரமாக சுமார் 1920 வரை நீடித்தது. (சான்று: தென்னாட்டுப் போர்க்களங்கள் - கா.ப.அப்பாத்துரை).

உள்நாட்டு யுத்தம் 1858 வரை வலுவாகவே நீடித்ததால், எங்கும் நிலையான அரசு இல்லை. அந்தந்தப் பகுதிகளில் வலுத்த சாதியக் குழுத்தலைவர்கள், மன்னர்களின் பிரதிநிதியாக இருந்தவர்கள் சிறு சிறு பகுதிகளாக நிர்வாகம் செய்தனர். (நூல் சான்று: பேராசிரியர் இராசையன் – சவுத் இந்தியன் ரிபெல்லியன், தமிழக வரலாறு, பேராசிரியர் காளிமுத்து - காலனி ஆட்சியில் வேளாண்குடிகள், வியக்க வைக்கும் தமிழகம், கோரமண்டல கடற்கரை வரலாறு ஜெர்னல்ஸ், டச்சுக் குறிப்புகள்- பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன், சோசியல் கிஸ்டரி 1550 – 1960 - பேராசிரியர் வர்கீஸ் ஜெயராஜ்.)

ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்த போரின் முடிவாகக் கிழக்கு இந்தியன் கம்பெனி இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தனர். சீரழிந்திருந்த இந்தியாவை ஆள முற்பட்டவர்களுக்குக் கலைகளைக் காட்டிக்காப்பது தேவையற்ற சுமையாகத் தெரிந்தன. ஆனாலும், உயிர் காக்கும் கலையான மருத்துவத்தைக் காத்திட உடனடித் தேவை இருந்தது.

இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவம் குறித்து ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த மருத்துவம் எழுதப்பட்ட சமற்கிருத மொழியைப் புரிந்து கொள்ளவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் இம்மருத்துவ முறையில் உள்ள போதாமையால் பிரிட்டீஷார் அதனைப் பெரிதுபடுத்தவில்லை.

தமிழகத்தில் இருந்த பண்டுவம் என்ற சித்த மருத்துவத்தைச் சுமார் 1880 பின்பே கண்டு கொண்டனர். (தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி, ஆப்ராகாம் பண்டிதர், அனந்தம் பண்டிதர், முருகேச முதலியார், விருதை சிவஞாயோகி, வ.உசி போன்றவர்களால்).

கிழக்கு இந்தியன் கம்பெனி 1805ல் உப்பின் வளத்தை முழுமையாகத் தன் வயப்படுத்தியது. (சான்று நூல்கள்: மோனோபோலி ஆப் சால்ட் இன் மெட்ராஸ் பிரசிடென்சி, சால்ட் பாலிசி இன் மெட்ராஸ், சால் இண்டஸ்ட்டிரி இன் இந்தியா, சால்ட் மெனுவல், கேஸ்ட் கேப்படலிசம் நகரத்தார் போன்ற நூல்கள்). இதனால் உப்புத் தட்டுப்பாடு நிலவியது.

உப்பு இல்லாததால் பெரும்பான்மையான மக்களுக்கு உள்ளுறுப்பு நோய்த் தாக்குதல் ஏற்பட்டது. (நூல் சான்று: எண்டமிக் டிஸ்சிஸ் இன் இந்தியா, குரோத் ஆப் மெடிக்கல் இன் இராஜ்). இராணுவ வீரர்களால் மட்டுமே ஆன கிழக்கு இந்தியன் கம்பெனியார்களுக்கு நோய்வாய்ப்பட்ட மக்கள் மூலம் நோய்கள் பரவுவதைத் தடுக்கவும், உலகப்போர், உள்நாட்டில் காயம்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்க்கவும் அதிகமான மருத்துவர்கள் உடனடித் தேவையாக இருந்தது. இதனால் பிரிட்டீஷார் ஆளும் நாடுகளிலிருந்து மருத்துவர்களை இறக்குமதி செய்தனர். அலோபதி மருத்துவ முறையில் அவர்களுக்குத் தேவையான மருத்துவம் கிடைத்தது. இதனால் இந்தியாவிலிருந்த மருத்துவ முறைகளை அவர்கள் கவனப்படுத்த மறுத்தனர்.(நூல் சான்று: சாகித்ய அகதாமி விருது பெற்ற சசி தரூரின் நூல் ; தமிழில் இருண்ட இந்தியா, வில்லியம் லீமேன்; பிரிட்டீஷ் அதிகாரிகளின் குறிப்புகள்).

இந்தியர்களைப் படிப்படியாகவே கம்பெனி இராணுவத்தில் சேர்த்தனர். பிரிட்டீஷார் துவக்கிய பஞ்சாலை, சாயத்தொழில், உப்பு தொழில்சாலைகளின் வேலை ஆட்களுக்காகச் சென்னையில் சித்த, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவம் கற்றுத்தரும் பள்ளிகளை நிறுவினார்கள். அது எப்போது என்றால், இந்தியா முழுவதையும் 1801ல் கைப்பற்றி 120 ஆண்டுகள் ஆண்ட பின்னரே, இந்தியர்களின் மருத்துவமான சித்த, ஆயுர்வேத, யுனானி பள்ளிகளைத் துவக்கினார்கள். ஆனாலும், அலோபதி மருத்துவத்தில் கிடைத்த வருவாயினைக் கவனத்தில் கொண்டு அதைப் பரப்புவதிலே கவனம் செழுதினர்.

சமற்கிருதம், பாரசீக, இந்தி, மாரத்தி போன்ற மொழிகளில் அலோபதி மருத்துவத்தைக் கற்றுக்கொடுத்தனர். இலங்கையில் மட்டும் தமிழில் கற்றுக் கொடுத்தனர். (நூல் சான்று: growth of medical education in colonial period, and golden tea ceylon, காலனி ஆட்சியில் நமது வாழ்வும் நலவாழ்வும் - டாக்டர் நரேந்திரன்).

இப்படித்தான் இந்தியாவில் அலோபதி என்ற மருத்துவம் காலடி வைத்தது. இதே காலத்தில், பிரிட்டீஷார் நடத்திய நாட்டு மருத்துவப் பள்ளியிலிருந்தும் மாணவர்கள் உருவானார்கள். இவர்களுக்குக் காலப்போக்கில் அலோபதி மருத்துவமும் சேர்த்துப் படிக்க பாடத்திட்டம் மாற்றி அமைக்ப்பட்டது. அரசு நிறுவனத்தில் படித்த இந்த மாணவர்கள், பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்க 1932 வரை அனுமதிக்க சட்டம் இயற்றவில்லை.

‘சித்த மருத்துவர்கள் கந்தகம், பூதம் (பாதரசம்), வெடிப்பு, துத்தம், துருசு போன்றவையில் மருந்து தயாரிக்கிறார்கள். அபின் போன்ற போதைபொருள்கள் வைத்துள்ளர். இவை சீனநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டவை’ என அறிக்கை கொடுத்தனர். இதனால் ‘வெடிபொருள் வைத்திருந்த குற்றத்திற்காக மருத்துவர்களைக் கைது செய்து போலி மருத்துவர்கள் என்று அறிவித்தனர். சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படும் கஞ்சாவைக் கைப்பற்றி கிரிமினல் சட்டத்தில் சிறையில் தள்ளினர்.(நூல் சான்று: கிரைம் கிஸ்டரி இன் தி மெட்ராஸ் பிரசிடென்சி, பிரிட்டீஷ் உள்துறை அறிக்கை). இதனால் மருத்துவம் படித்த பலர் வேறு தொழிலுக்கு மாறினர். கிராமங்களில் மருத்துவம் பார்த்த பண்டுவர்கள் தலைமறைவானர்கள். ஏற்கனவே தனியார்கள் ஆதரவில் நடந்த நாட்டு மருத்துவப் படிப்பிற்கு பிரிட்டீஷ் அரசு பெயரளவிற்கு நிதி ஒதுக்கியதால், ஒரு கட்டத்தில் மாணவர்கள் படிக்க முன்வரவில்லை.

இந்தக் காலகட்டத்தில் பிளேக், காலரா போன்ற தொற்று நோய்கள் பரவியது. இந்த நோய்க்கு நாட்டு மருந்துவர்களிடம் பிரிட்டீஷார் மருத்துவம் பெற்றனர். ஒட்டுவார் ஒட்டி நோய் என்பதை அறிந்து தனித்து வாழும் முறையை நாட்டு மருத்துவர்கள் சொல்லிக் கொடுத்தனர். இதனால் பிரிட்டீஷார் கண்டோமெண்ட் உருவானது.

தொற்று நோயிலிருந்து காப்பாற்றிய பல மருத்துவர்களுக்கு ‘சர், வைத்திய இரத்னா’ என்ற பட்டத்தைப் பிரிட்டீஷ் அரசு வழங்கியது.

இந்தக் காலகட்டத்தில் நாட்டு மருத்தும் மீண்டும் தளைத்தது. ஆங்கில மருத்துவத்தின் வருவாயினைக் கணக்கில் கொண்டவர்கள் | ‘நாட்டு மருந்தினை ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விற்பனை செய்யவேண்டும்’ என தடை போட்டனர். மாறிமாறி விசாரணைக் கமிசன்களை அமைத்து காலம் தாழ்த்தினார்கள். (கோமன், உஸ்மான் கமிசன்). இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாட்டு மருத்துவப்படிப்பை நிறுத்தினார்கள்.

அதேவேளையில், முதல் உலகப்போருக்கு முன்பே தஞ்சை மாராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியின் முயற்சியில் உலகளவில் உள்ள மருத்துவக்குழுவை கூட்டி அறுவை சிகிச்சையைத் துவக்கி வெற்றியும் கண்டார். கண்புரை அறுவை சிசிக்சை சிறப்பாக நடந்தது என ஆங்கில மருத்துவர்களே சித்த மருத்துவர்களைப் பாராட்டி எழுதிய குறிப்புகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ளது. ஆனால், ஆட்சி அதிகாரம் பிரிட்டீஷார் வசமிருந்ததால் உடற்கூறியல் மருத்துவத்தைத் தன் வசப்படுத்தினார்கள்.

1942இல் பிரிட்டீஷார் மூடிய நாட்டு மருத்துவப் படிப்புகள் நெடிய போராட்டங்களுக்குப் பின்பு 1964 இல் மீண்டும் பூத்தது. ஆனால், ஆங்கில ஆட்சியில் எப்படி மரபு மருத்துவத்தை இரண்டாம் தரமாக நடத்தினார்களோ, அதுபோலவே இந்திய அரசும் நடத்தி வருகிறது.

இந்திய, தமிழக மரபான மருத்துவப் படிப்பிற்கு இன்று வரை பல்கலைக் கழகம் துவக்கவில்லை. ஆங்கில மருத்துவத்தின் துணை மருத்துவமாகவே இன்றும் நடத்துகிறது. இதனால் சித்த மருத்துவத்தின் நுண் அறிவியலான நாடி பார்த்து நோய் அறியும் முறைகூட, மூடநம்பிக்கை என்று சொல்லும் அளவிற்குப் போய்விட்டது.

சித்த மருத்துவப் பண்டுவத்தை ஏற்காததற்கும், அதில் அறிவியல் இல்லையென்பதற்குமான மையக் காரணம் மிகக் குறிப்பானது. அதாவது,"செந்தூர மருந்துகள் தவிர்த்து, பெரும்பாலான மருந்துகள் யாவும் மூலிகைகள்தான். இவற்றை மக்கள் தங்கள் வாழ்வியலோடு அறிந்து வைத்திருந்தனர். அவற்றை எளிதாக அறிந்து தெளிந்து கொள்ளவும் முடியும். வெகுமக்களின் அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் மருத்துவ மரபுக்கும் மக்களுக்குமான இடைவெளிகளை அதிகப்படுத்தவும், அதனை அப்புறப்படுத்தவும் அறிவியலை அதிகார இருப்பாக வைத்து அடக்கி வந்தது காலனி அரசு. இதன் தொடர்ச்சியே தற்போது  ஆங்கில மருத்துவ ஆதரவாளர்களும்.

பண்டுவ மரபில், மருந்து அதிலும் செந்தூரமே மிகச்சிறந்த மருந்து ஆகும். இதை நோயறிந்து கொடுத்தால் இம்மருந்துகள் உடல் உள் உறுப்புகளைச் செம்மைப்படுத்தி நோய் எதிர்பினை உருவாக்கும்.  அலோபதி மருத்துவத்தில் பெரும் வணிகம் கொடுப்பது மருந்து மட்டுமே என்பதை கவனத்தில் கொண்டால் அனைத்தும் புரியும்.

மரபு என்பது நம்பிக்கை அல்ல; அது மானுடத்தின் அனுபவ அறிவு. அதைப் பயன்படுத்தும் இடத்தில் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும்.

இரா.முத்துநாகு,
சுளுந்தீ நூலாசிரியர்.
09.04.2020






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக