ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

மருத்துவமனைகளும் மன நோயாளிகளாக ஆக்கப்படும் மனிதர்களும்: முனைவர் அ.இராமலிங்கம்

இன்று உலகமெங்கும் பல மருத்துவமனைகள் வியாபார நோக்கோடு செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளை வரம் தரும் கோயில்களாகவும், மருத்துவர்களை நம் கண்ணெதிரில் காணும் உயிர்காக்கும் கடவுள்களாகவும் நோயாளிகள் நினைக்கிறார்கள். ஆனால், பல மருத்துவர்கள் மற்ற தொழில்களைப் போல இதையும் ஒரு தொழிலாக எண்ணி இலாப நட்ட கணக்குப்பார்த்துத் செயல்பட்டு வருகிறார்கள்.

தீராத பிரச்சினைகளும் மருத்துவமனைகளுக்குச் சென்றால் தீர்ந்துவிடும் என்று எண்ணி, பல நோயாளிகள் உயிர்ப்பயத்தோடு மருத்துவமனையை நாடிச் செல்கிறார்கள்.

இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு பல மருத்துவமனைகள் வசூல் வேட்டைகளில் இறங்கி விடுகின்றன. பணம் போவது ஒரு பக்கம் என்றாலும், உயிர்ப்பயமும் மனதில் தோன்றி மக்களை மனநோயாளிகளாக்கி ஆட்டிப் படைக்கின்றன.

இதற்கு என்னையே ஓர் உதாரணமாக்கி விளக்கம் தருகிறேன்.

சிறு வயதில் எனக்கு ஏற்பட்ட ஒவ்வாமை முற்றி பீனிசமாக அதாவது சைனசைட்டிஸ் என்ற நோயாக மாறியது. ஆரம்பக் காலத்தில் நான் இதை பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல் எளிதாகக் கடந்து சென்றுவிட்டேன். அதன் விளைவாக சைனசில் பெருந்தொந்தரவு ஏற்பட்டது.

கல்லூரிப்பருவத்தில், எனக்கு அதிகாலையில் அடுக்கடுக்காய்த் தும்மல் வரும். நேரம் செல்லச் செல்ல வெயில் ஏறியவுடன் தும்மல் படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவேன்.
ஆதலால், இதை ஒரு பெரும்பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் எளிதாகக்கடந்து சென்றுவிட்டேன். அதன் விளைவு பீனிசம் என்று அழைக்கப்படக்கூடிய சைனசைட்டிஸ் என்ற ஒரு தீர்க்கமுடியாத நோய் தீவிரமடைந்தது.

ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்த பிறகும்கூட இதை நான் கண்டு கொள்ளாததால் நோய் முற்றி நாளுக்கு நாள் வீரியம் அடைந்தது.
படிக்கும் காலத்திலிருந்தே புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததால், ஒவ்வாமை மேலும் அதிகமாகி தீராத வேதனையைத் தந்தது. இயல்பான மூச்சுக்காற்றை நாசித் துவாரங்களின் மூலம் என்னால் சுவாசிக்க இயலாமல் போனது. வாய்வழியே மட்டுமே சுவாசிக்க முடிந்தது. உணவுக்கும் சுவாசத்திற்கும் வாய் மட்டுமே ஒரு வழிப்பாதை போல பயன்பட்டது. இது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது.

உதாரணமாக, பகல் நேரங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது பெரிய பிரச்சனையாகத் தோன்றாது. இரவில் தூங்கும்போது படுத்த நிலையில் இருப்பதால் மூக்கடைப்பு ஏற்பட்டு நாசித்துவாரங்கள் வழியே சுவாசிக்க இயலாமல் போகும். வாய் வழியேதான் சுவாசிக்க முடியும். இரண்டு மூன்று தலையணைகளை உயரமாக அடுக்கி, தலையை உயரமாக உயரத்தில் வைத்து வாயால் மூச்சு விட்டுத் தூங்கினால்தான் தூக்கம் வரும். பல நாட்களாக இவ்வாறு நான் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். வாசமும் தெரியாது. மணம் இல்லாததால் எந்த உணவுப் பொருட்களையும் சுவைத்துச் சாப்பிட முடியாது. மொத்தத்தில் சுவாசமும் வாசமும் மறந்து பல வருடங்கள் ஆயிற்று.

இந்த பீனிச நோயைத் தீர்க்கும் பொருட்டு மதுரையில் இருக்கும் பிரபலமான பல காது-மூக்கு-தொண்டை நிபுணர்களைச் சந்தித்து நான் ஆலோசனை பெற்றிருக்கிறேன். ஆனாலும்கூட நோயின் தீவிரம் குறைந்தபாடில்லை.
மாற்றுமுறை மருத்துவமும் எனக்குக் கை கொடுக்கவில்லை.

நான் தேடிச்செல்லும் மருத்துவர்கள் எல்லாம் இதற்கு முறையான மருந்துகள் இல்லை என்றும், அறுவைச்சிகிச்சை ஒன்று தான் நிரந்தரத்தீர்வு என்றும் சொல்வார்கள். அப்படியானால், அறுவைச்சிகிச்சை செய்துவிட்டால் நோயின் தீவிரம் குறைந்து, பாலிப் என்னும் நீர்ச்சதை மாறி நிம்மதியாக மூச்சு விட முடியுமா? எனக் கேட்டால், அதற்கு உத்தரவாதமில்லை என்றும், தூசு மற்றும் பனிக்காற்று இவற்றைச் சந்திக்க நேர்ந்தால் மீண்டும் ஒவ்வாமை ஏற்பட்டு நீர்ச்சதை வளர வாய்ப்பு இருக்கிறது என்றும், தற்போதைக்குத் தற்காலிகத் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அறுவைச் சிகிச்சை ஒன்றே தீர்வாகும் என்றும் பதிலளித்து விடுவர். பிறகு ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தும் சில மருந்துகளோடு வீடு திரும்பி விடுவேன்.

அதேவேளையில், இந்த நோய்க்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதில் எனக்கு ஆசை இல்லாமல் இல்லை. ஆனால், அதற்கு வழி இல்லையே. மருத்துவமனை சென்று அறுவைச்சிகிச்சை செய்தாலும் நிரந்தரத் தீர்வு இல்லாதபோது அந்த அறுவைச்சிகிச்சை தேவைதானா என்ற எண்ணம் என் மனதில் தோன்றும்.

விலங்கியல் படித்துவரும் மாணவர்களிடம் ஒரு சிலரைத்தவிர, அறுவைப் பெட்டி இருப்பது அரிதாகிப்போன சூழலில் விலங்கியல் ஆசிரியரான என்னிடம் முழுமையான ஓர் அறுவைப் பெட்டி இருக்கும். இதன் மூலம் நாசித்துவாரங்களில் அடைப்பை ஏற்படுத்தி வெளியே எட்டிப் பார்க்கும் நீர்ச் சதைகளை வெட்டி வீழ்த்துவேன். ஊர் அடங்கிய வேளையில் என் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நடுஇரவில் நிலைக் கண்ணாடி முன் நின்று என் நாசித் துவாரங்களில் காணப்படும் நீர்ச்சதைகளை அறுவைப் பெட்டியில் இருக்கும் கவ்வியால் கவ்வி கத்தரிக்கோலால் கத்தரிப்பேன். இவ்வாறு முப்பது முறை சுய அறுவைச்சிகிச்சைகள் நடந்தேறியிருக்கின்றன.
இவ்வாறு சுயமாக அறுவைச்சிகிச்சை செய்யும்போது உயிர் போய் உயிர் வரும் வலியைப் பொருட்படுத்தாது நீர்ச் சதைகளை வெட்டுவேன்.

இப்படியே விட்டால் சரிப்படாது என்று எண்ணி, மதுரை மாநகரில் உள்ள அம்பாளின் மருத்துவமனையை நாடி அறுவைச்சிகிச்சைக்கு ஆயத்தமானேன். வெளிநோயாளியாக வந்த நான், உள்நோயாளியானேன். அறுவைச்சிகிச்சைக்கான ஆயத்த மருந்துகள் கொடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன.

மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் வரப்பெற்று மருத்துவர் என்னிடம் வந்தார்.
மருத்துவர், ஈ.சி.ஜியிலும் எக்கோவிலும் சிறிய பிரச்சினைகள் இருக்கின்றன. இதயத்தில் கோளாறு இருப்பதாகத் தெரிகிறது என்றார். ஆகவே, ஆஞ்சியோகிராம் செய்தால் இதயப்பிரச்சினையைத் துல்லியமாக அறியலாம் என்றும் கூறினார்.

இதயத்தில் என்ன கோளாறு என்று மருத்துவரிடம் கேட்டேன். உங்களுக்கு இதயத்தாக்கு (heart attack) ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர் சொன்னார். இதயத்தாக்கு எப்போது ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவரிடம் கேட்டேன். அவர் எப்போதென்று தெரியவில்லை என்றார். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டேன்.அதற்கு சைனசு பிரச்சினைகள் இப்போது முக்கியமில்லை. இதயத்தைப் பாதுகாப்பதே இப்போதைக்கு மிக அவசியம் என்றார் மருத்துவர். புலி பிடிக்கப் போய் பூனை பிடித்த கதையாயிற்றே என்று என் மனதில் தோன்றியது.

ஒருவழியாக நான் ‌என் மனதைத்‌ திடமாக்கி, மருத்துவரிடம் ‌எனக்கு ஒரு வாரத்திற்கு மருந்துகள் கொடுங்கள் வீட்டிற்குச்சென்று ஆலோசித்து விட்டு வருகிறேன் என்று சொன்னேன். அவர் நீண்ட யோசனைக்குப் பின் மருந்துகள் தந்தார். நான் வீடு வந்தடைந்தேன்.

மருத்துவர் தந்த அதிர்ச்சியால் ஒரு வாரமாக என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. உறக்கமின்றித் தவித்தேன்.

ஒரு வாரம் கழித்து இதயம் பற்றி இரண்டாவது கருத்துப் பெற அதே மதுரை மாநகரில் கிரேக்கப் புராணங்களில் வரும் கவிதை இசைக்கடவுளின் மருத்துவமனையை அடைந்தேன். அங்கு, இதய மருத்துவர் என்னைச் சோதித்தார். ஸ்டெத்தாஸ்கோப் மட்டுமே வைத்து என்னைப் பரிசோதித்த மருத்துவர், இதயத்திற்கு ஒன்றுமில்லை என்றார். ஆனாலும், மற்றொரு மருத்துவமனையிலிருந்து இதயம் பற்றி எதிர்மறைக் கருத்துகள் பெற்றிருந்ததால் மீண்டும் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டி மருத்துவரை மன்றாடிக் கேட்டுக்கொண்டேன். மருத்துவர் வேறு வழியின்றி மருத்துவப் பரிசோதனைகள் செய்தார்.

பரிசோதனைகளின் முடிவுகளை வைத்து மருத்துவர் என்னிடம் பேசினார்.
மருத்துவர், ஈ.சி.ஜி, எக்கோ, ட்ரெட்மில் ஆகிய பரிசோதனை முடிவுகள் அனைத்தும் இயல்பாகத் தான் இருக்கின்றன. உங்கள் இதயத்திற்கு எவ்வித இடர்பாடுமில்லை, இதைத்தானே நான் முதலிலே உங்களிடம் சொன்னேன் என்றார். நான் அவரிடம் மன்னித்துவிடுங்கள் வேறு ஒரு மருத்துவமனையில் பெற்ற பரிசோதனை முடிவுகளால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகத்தான் உங்களை மீண்டும் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வற்புறுத்தினேன் என்றேன். அதற்கு மருத்துவர், பரவாயில்லை என்று சொல்லி ஏற்கெனவே இருக்கும் சர்க்கரை நோய்க்கு ஒரு மருந்தையும், புதிதாகக் கொழுப்புக்கு ஒரு மருந்தையும் கொடுத்து வாழ்நாள் முழுவதும் இந்த இரண்டு மருந்துகளையும் அருமருந்தாக எடுக்க வேண்டும் என்று கூறி வழியனுப்பினார்.
மிகுந்த மகிழ்ச்சியோடு இல்லம் வந்து சேர்ந்தேன்.

ஆக மொத்தம், ‌சைனசு பிரச்சினைக்கு எவ்வித மருந்துகளும் எடுக்கவில்லை. முறையற்ற அறுவைச் சிகிச்சைகள் முப்பதைத் தவிர முறையான அறுவைச் சிகிச்சைகள் எதுவுமில்லை.

அடிக்கடி வெந்நீர் பருகுவதையும், சுக்கு, மிளகு, திப்பிலி போட்டு காஃபி அருந்துவதையும் வழக்கமாக்கி, தினமும் நடைப்பயிற்சி செய்து வருவதால், அடைபட்ட நாசித்துவாரங்கள் திறக்கப்பட்டு இப்போது இயல்பான சுவாசமும் இருக்கிறது. வாசமும் நன்றாகத் தெரிகிறது.

இப்போது இன்னும் ஒரு செய்தி சொல்ல வேண்டியுள்ளது. அறுவைச் சிகிச்சையில்லாமலும், நவீன மருத்துவத்தின் மருந்துகள் எடுக்காமலும், எளிய உடற்பயிற்சி மற்றும் சில நாட்டு மருந்துகள் உட்கொண்டபிறகு, தீராத நாட்பட்ட நோய் தீர்கிறது என்றால், நவீன மருத்துவத்தின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையை சந்தேகிக்கத் தோன்றுவதும் இயல்பு தானே?

எப்போதாவது ஒவ்வாமையால் மூக்கடைப்பு ஏற்பட்டாலும், மீண்டும் இயல்பாக சுவாசம் கிடைக்கும். சுவாசத்துடன் வாசமும் உடன் வந்துவிடும். இதைப்போலவே வாழ்க்கையின் இறுதி நாள் வரை இருக்குமானால் வாழ்க்கை முழுக்க வசந்தம் தான்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரேவிதமான மருத்துவத்தைப் படித்தவர்கள், மருத்துவப் பரிசோதனைகளும் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட கருவிகளால் தான் செய்யப்படுகின்றன. ஆனால், பரிசோதனை முடிவுகளில் மட்டும் வேறுபாடுகள் தெரிவது ஏன் என்ற சந்தேகம் எழுகிறது.

நாம் வாழும் தேசத்தில் அனைத்தும் வணிகமாகிவிட்ட நிலையில், மருத்துவமும் வணிகத்தில் சிக்கிப்போட்ட முதலீடுகளை வேகமாக எடுக்க போட்டிப் போட்டுக் கொண்டு, உயிர்ப்பயத்தோடு வரும் நோயில்லாத அப்பாவி மக்களை மனநோயாளிகளாக்குகிறதா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

தீராத நாட்பட்ட சைனசு பிரச்சினைக்குத் தீர்வு காண, பதைபதைப்புடன் என்னைப் போன்றவர்களுக்கு இதயத்தாக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லும்போது, இதயத்தாக்கு ஏற்கனவே இல்லாவிட்டாலும் கூட, இதயம் பலவீனமாக இருந்தால் அந்த நேரத்தில் இதயத்தாக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறதே. சுலபமாக ஆஞ்சியோகிராம் செய்தால்தான் இதயத்தில் கோளாறை அறிய முடியும் என்று வாய் கூசாமல் சொல்லும் மருத்துவருக்கு, இதயம் என்ன கல்லிலா செய்யப்பட்டிருக்கிறது?

கடவுளைக் காண வாய்ப்பில்லாதபோது, கண் கண்ட கடவுள்களாக மருத்துவர்களை மக்கள் தங்கள் மனதில் எண்ணும்போது நேர்மை தவறி நடக்கலாமா? ஏனைய விடயங்களில் தவறுகள் நடந்தால் பொருட்சேதம் மட்டுமே நிகழும். மருத்துவத்தில் தவறுகள் நடந்தால் உயிர்ச்சேதம் அல்லவா நிகழும்?

கொரோனா காலங்களில்,
மருத்துவம் ஒரு மாயை என்பதையும், தனிமனிதனின் நோயெதிர்ப்பாற்றலே நோயிலிருந்து விடுபடக்காரணம் என்பதையும் கொரோனா வைரசு மெய்ப்பித்து வருகிறது. மருந்துகளுக்குக் கட்டுப்படாத கொரோனா வைரசு, நோயெதிர்ப்பாற்றல் குறைந்த மருத்துவர்களைக்கூட விட்டு வைக்கவில்லை.

மருத்துவர்களே!
தாங்கள் படித்த மருத்துவத்தைக் குறைந்தபட்ச மனசாட்சியோடு வணிகமாக்காமல் சேவை மனப்பான்மையுடன் செய்யுங்கள்.
அவ்வாறு மருத்துவர்கள் மருத்துவத்தைச் சேவையாகச் செய்தால் மருத்துவமனைகள் கோயில்களாகவும், மருத்துவர்கள் நடமாடும் கண்கண்ட கடவுள்களாகவும் மக்கள் கண்களுக்குத் தெரியும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.

முனைவர் அ.இராமலிங்கம்,
விலங்கியல் துறை இணைப்பேராசிரியர்,
ம.து. அரசுக் கல்லூரி,
சிவகங்கை.
19.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 19.04.2020 /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக