சனி, 18 ஏப்ரல், 2020

பறிபோன தமிழரின் வானியல் கணிய மரபு: மருத்துவர் கீதா மோகன்


சித்திரை ஒன்று என்றாலே, எல்லோரும் இது திரிபுப் புத்தாண்டு என்றும்; இல்லை, தை மாதமே தமிழ்ப் புத்தாண்டு என்றும் கூறுவதுண்டு.

புதிய ஆண்டு எதைக் கணக்கீடு செய்து வைத்திருப்பார்கள் என்ற சர்ச்சை இன்னும் பல காலம் நீடிக்கவே செய்யும்.
நமக்குத் தமிழ் மேல் பற்றும் புரிதலும் ஏற்பட்டு விட்டால் இந்த மாதிரி குழப்பங்களே வாராது..

சூரியனின் சுழற்சி, தையில் வடசெலவை அதாவது வட பகுதியைச் சுற்ற ஆரம்பித்த காலத்திலிருந்து, மீண்டும் அதே பகுதியை அடையும் வரை உள்ள கால அளவுதான் எனப் பலர் விவாதம் செய்வதைப் பார்க்கிறேன்..
ஆனால், எனக்கு நீண்ட வருடங்களாக இதை எப்படி கணக்கில் தமிழர்கள் கொண்டு வந்திருக்க முடியும்? என எனது தேடலில் எனக்குக் கிடைத்தவற்றை மட்டும் பகிர்கிறேன்.. விவாதத்திற்காக அல்ல..

தமிழர்கள் தன் மரபில் ஒரே நாள்காட்டியைத்தான் உபயோகித்தனர். ஆனால், நடைமுறைக் கணக்கில் மூன்று கணக்கீடுகளை வைத்திருந்தனர்.
ஒன்று, வருட கணக்கு அல்லது மழைக்கான கணக்கு.
இரண்டாவது, விவசாயக் கணக்கு. அதாவது, விதைத்தால் எத்தனை நாளில் பலன் கிடைக்கும்? தமிழ்நாடு மழை மறைவுப் பிரேதசம் என்பதால், என்ன மழையை எப்படி உபயோகிக்கலாம் என்பதற்கான விவசாய கணக்கு..
மூன்றாவது, பயன் கணக்கு. அதாவது, லாபக் கணக்கு. விளைந்த வேளாண் பொருள்கள் பற்றியும் அதைச் சேமித்து அடுத்த பட்டத்திற்கான விதைச் சேகரிப்பு போன்றவற்றுக்கான கணக்கு..
இப்போது புரியும் என நம்புகிறேன்.

முதலில், சித்திரை ஒன்று வரும். மழையை எதிர்பார்த்து காற்றின் வேகத்தை வைத்து இந்த வருடம் மழை எப்படி வரும்? அதன் கோள் நிலைகள் என்ன என்பதைக் கணக்கீடு செய்வதற்காக அமைத்த கணியம் சித்திரைக் கணியம்..
சித்திரை ஒன்றில் பஞ்சாங்கப் பாடலைப் படிப்பது கணிய மரபில் இருந்துதான் வந்தது..

அடுத்து, தென் செலவில் ஆரம்பிக்கும் காலத்தில் தெற்கே அடிக்கிற காற்றை வைத்து ஆடிப்பட்டம் தேடி விதைத்த விவசாயக் கணக்கு..

அடுத்து, தை மாதம் விளைந்த பொருள் வீடு வந்ததும், கதிரவனுக்கு நன்றி சொல்லி அடுத்த பருவம் வரை பொருளைப் பத்திரப்படுத்தியதின் அதற்கான கணக்கீடு..

சரி, சித்திரை ஒன்று ஏன் வருடமாகக் கணித்தார்கள்.?

சூரியன் உச்சம் என்ற நிலையை அப்போதுதான் வந்தடையும்..
சூரியன் மேழ ஓரையில் உச்சம் என்ற பகுதியை வந்தடைந்தால் தான் 360 டிகிரி கணக்கீட்டை எடுத்துக்கொள்ள முடியும்..

சுறவத்தை அதாவது மகர ஓரையில் சூரியன் உத்திராடம் நட்சத்திரத்தில் வரும் போதுதான் தை பிறக்கிறது. அதுவும் உத்திராடம் இரண்டாம் பாதத்தில் தான் தை மகள் பிறக்கிறாள். அப்படியிருக்க அதுவும் முழுநட்சத்திர நுழைவுப் பாதை கிடையாது..
மேலும், உத்திராடத்தைச் சங்கப் பாடல்களில் விழுவநாள் என்றும் குறிப்பிடுவதை காணலாம்..

மேழத்தில் உச்சத்தை ஆளும் சூரியனைச் சிலப்பதிகாரம் உச்சிக்கிழான் என்று குறிப்பிடுகின்றது.
காரணம், சித்திரை பிறந்து பத்து நாட்களில் சூரியன் நடு வானில் உச்சியில் செங்குத்தாக நிற்கும். அதற்கு நேராக ஒரு குச்சியை நடுவர். அதற்கு விழுவன் குச்சி என்று பெயர். அந்தக் குச்சியைச் சுற்றிலும் விழும் கதிர் நிழல்களைக் கணக்கில் கொண்டு சூரியன் ஒவ்வொரு ஓரையிலும் நகர்வதைக் கணக்கிட்டுக் கொண்டனர்..

அப்படி நகரும்போது வடபகுதியில் விழும் நிழலை வைத்து வடதிசை நோக்கி சூரியன் நகர்கிறது என்றும், தென் திசை நோக்கி நகர்கிறது என்றும் கணித்தனர்..

இவ்வாறாக, ஞாயிறு மண்டலத்தை வெட்டும் இரு விழுக்களைக் கணித்தனர். ஒன்று, மேழவிழு. மார்ச் 21 ஆம் நாளில் இரவும் பகலும் சமமாக இருக்கும்..
தொல்வானியலரான கணியர்கள் இந்த நிழல்களை விழியை வரைந்து விழுக்களாகக் குறித்து வைத்திருந்தனர்.

விழியில் இருந்து பிறந்த விழு பின்பு விசு என்னும் சமஸ்கிருதமாக மாறியது.
இன்றளவும் சேரநாட்டில் சித்திரை ஒன்றாம் தினத்தை விசுக்கனியாகக் கொண்டாடுவதை நாம் பார்க்கலாம்..
விசு என்னும் சமஸ்கிருதச் சொல்லின் வேர் தமிழ்தான் என ஆய்வாளர் சுந்தர் ராசு கூறுகிறார்.

சூரியன், மேழம் என்ற உச்சப்பகுதிக்குள் நுழைவதை, மேழ ஓரைக்குள் விழும் விழுவத்தை மேழவிழுவம் என்றும், மாவிழுவம் என்றும் தமிழில் குறிப்பிடுகின்றனர்.
இதைத்தான் மகாவிசுவம் என்று சமஸ்கிருத மொழியில் கூறப்படுகிறது.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாண்மீன் விராய கோணமீன்போல
மலர்தலை மன்றத்து...
மேழகத் தகரோடு சிவல்விளையாட என்ற பட்டினப்பாலை பாடல் வரிகளைக் காணலாம்.

மேழப்பகுதிக்கு வரையாட என்ற தமிழ்ப்பெயரும் உண்டு. வரையாட என்றால் தமிழில் உச்சப்பகுதி என்று பொருள். மலையின் உச்சியில் உள்ள ஒரு வகை ஆட்டின் வகையை வரையாடு என்று குறிப்பிடுவதைக் காணுங்கள்.
இந்த வரையாட என்ற வார்த்தையிலிருந்து வரு என்ற வார்த்தை உருவாகியிருக்கலாம்.
அதிலிருந்து வருடம் என்ற வார்த்தையும் பிறந்திருக்கும்.
ஏனெனில், சூரியன் மேழம் என்ற உச்சப்பகுதியை நுழைந்தவுடன் பூமியின் தரைப்பகுதியில் வெப்பம் அதிகமாகும்.
இயற்கையாகவே தரையில் வெப்பம் அதிகமானால் கடல் பகுதியில் குளிர்மைக்காற்று வீசும்.
இந்த மாறுபாடுகள் நடந்த பின், கத்தரி வெயில் காலம் கடந்த பின் தென்மேற்குப் பருவக்காற்று காலம் ஆரம்பிக்கும்.
கத்தரி நட்சத்திரம் பற்றிய விரிவான குறி்ப்பைப் பிறகு காணலாம்.

வைகாசியில் சாரல் மழை என்று சொல்லுவார்கள்.
வைகாசி பிறந்ததும் நெய்தல் நிலமான குமரி முனை மற்றும் பொதிகை மலையில் வீசும் காற்றினால் தென்மேற்குப் பருவமழை உருவாகிறது..
நெய்தல் நிலத்துக்குரிய கடவுளாக வருணனை வைத்திருப்பதன் காரணமும் இதுவே.

நாடோடிகளாக வந்தவர்களுக்குத் தொல்வானியல் அறிவு எங்கிருந்து வந்தது? என யாரும் சிந்திக்காமல், ஆரியத்திரிபு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, தமிழனின் தொல் அறிவியலான வானியிலை இன்று சோதிடமாகப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோன்று, மரபு மருத்துவம், சித்த மருத்துவம் இன்று ஆயுள்வேதம் என்ற பெயரில் உபயோகித்து வருகிறோம்..

தொல் வானியலறிவை முற்றிலும் சிதைந்த நிலையில் கற்பனைக் கதாபாத்திரங்களாக நமக்குக் கிடைக்கிறது. உண்மையான பகுத்தறிவுக் சிந்தனையாளர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மனதில் எழும் கேள்வியாலும், ஏற்கனவே உள்ள ஒடுக்கு முறையாலும் உண்மையான வருடக் கணக்கைத் திரித்தல் எனக் கூறிவிடுகிறோம்.
உண்மையில் புவியின் ஒவ்வொரு சுழற்சியும் நமக்கு விழாக்களாகவும்,
சந்திரனின் சுழற்சியை விரத நாள்களாகவும் இருப்பதற்குப் பின்னால் கணியத் தொடர்பும் நிச்சயம் இருக்கிறது.

கீதா மோகன்,
சித்த மருத்துவர் மற்றும் வானியல் கணியம் பற்றிய ஆய்வாளர்.
17.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 18.04.2020 /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக