வெள்ளி, 1 மே, 2020

வ.உ.சியின் முன்னெடுப்பும் கோரல் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டமும்: ஆய்வறிஞர் இரெங்கையா முருகன்

தொழிற்சங்கம் என்ற அமைப்பு இல்லாத அந்த காலத்தில் குறைந்த ஊதியம் அளித்து கூலி என்ற பெயரால் இழிவாக நடத்தப்பட்டு தொழிலாளர்களை கடுமையாக வேலை வாங்கியது ஆங்கிலேய முதலாளி வர்க்கம். தொழிலாளர்களின் நிலைமையும்  மிக வருந்திய நிலைத்தக்கதாய் இருந்தது.

பத்து வயது பன்னிரண்டு வயது சிறுவர்களும் ஆலையில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். வார விடுமுறையென்பது, தொழிலாளர்கள் அறியாத ஒன்றாக இருந்தது. உணவு அருந்த செல்ல போதிய இடைவேளை கிடையாது. ஊதியம் மிகவும் சொற்பமானது. உடல் நலக் குறைவால் விடுப்பு எடுப்பின் அதற்கு ஊதியம் மறுக்கப்படும். அத்துடன் சில நேரங்களில் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய தொழிலாளிக்கு வேலை மறுக்கப்படும். இதனால் ஊதியமில்லாத விடுமுறையில் செல்வதற்கு கூட தொழிலாளர்கள் அஞ்சிய காலம்.

காலை ஆறு மணியிலிருந்து  மாலை ஆறு மணி வரை தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வேலை செய்தனர். ”ரேகை பார்த்து ஓட்டுதல்” என்ற சொல்லால் வேலையின் தொடக்கமும் முடிவும் குறிப்பிடப்பட்டது. உள்ளங்கை ரேகையானது தெளிவாக தெரியும் நேரத்தில் வேலையினைத் தொடங்கி, அதனைப் பார்க்க பார்க்க முடியாத அளவில் ஒளி மங்கும் நேரத்தில் வேலையை முடிக்க வேண்டும் என்ற சொல்லின் பொருளாகும்.

தொழிலாளர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு கூட பிரம்படி வழங்கப்பட்டது. வெள்ளையதிகாரிகள்  ஆலையினுள் வரும் போது குறுக்கே கடந்து சென்றாலும் அடியும் உதையும் கிடைக்கும்.
கோரல் மில் தொழிலாளர்களின் அவல நிலையை கண்ணுற்ற வ.உ.சி. மற்றும் சிவா, பதமநாப அய்யங்கார் தொழிலாளர்களினை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். ஆங்கிலேய இரகசிய அறிக்கை கீழ் வருமாறு குறிப்பிடுகிறது.

“ஆண்டு தோறும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லும் பணத்தின் அளவை அவர் குறிப்பிட்டார். இதனைத் தவிர்க்க வேலை நிறுத்தம் செய்யும்படி கூலிகளுக்கு அறிவுரை கூறினார். ருசியப் புரட்சியானது மக்களுக்கு நன்மையளித்தது. (1905 ம் ஆண்டு நடைபெற்ற முதல் ரஷ்ய புரட்சி). புரட்சியானது உலகத்துக்கே எப்பொழுதும் நல்லதையே புரியும் என்று அவர் குறிப்பிட்டார். வேலையாட்கள் மூன்று நாட்கள் வேலையை நிறுத்தினால் ஐரோப்பிய முதலாளிகள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

1908 பிப்ரவரி 27 தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களை திரட்டி வேலை நிறுத்தம் செய்ய வைத்து ஊதிய உயர்வு, வார விடுமுறை, இதர வசதிகளை வலியுறுத்தி இந்தியாவெங்கும் தலைப்பு செய்திகளில் அதிரச் செய்தார்  வ.உ.சிதம்பரனார் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர். இந்த தொழிலாளர் போராட்டத்தை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த காலனிய ஏகாதிபத்தியத்திற்கு விழுந்த சென்ற நூற்றாண்டின் பெரிய சம்மட்டி அடி.

தென் கோடியில் நடந்த இந்த போராட்டம் இந்தியாவை தாண்டி ரஷ்யா வரை மிகவும் நுட்பமாக கவனிக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தம் பொதுமக்களின் எழுச்சியாக மாறி அடித் தட்டு வர்க்க மக்களிடையே அரசியல் அறிவும் பரவியது.

இந்தியா முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோரல் மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்ட்ம் வெறுமனே ஊதிய உயர்வு போராட்டமாக மட்டுமே கருதாமல் இந்திய விடுதலை இயக்கத்தில் சுதேசி இயக்கத்துடன் தொழிலாளி வர்க்கத்தை இணைக்கும் நோக்குடன் திறம்பட செய்து வழிகாட்டினார் வ.உ.சி.

தொழிலாளர்கள் போராட்டம்  எந்த வகையிலும் குன்றி விடாமல் பார்த்துக் கொண்டார் வ.உ.சி. குறிப்பாக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்ட காலங்களில் பட்டினி பசியால் வாடி விடக் கூடாது அதனால் போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பொதுமக்களிடம் பொது நிதி திரட்டி சாப்பாடு போட்டதுதான் மிகவும் முக்கியமானது.

 தொழிலாளர்களின் போராட்ட உணர்வு குன்றாமல் இருப்பதற்காக சுப்பிரமணிய சிவாவினுடைய எரிமலைப் பேச்சை நன்றாக பயன்படுத்தினார். வ.உ.சி. தனது சுயசரிதையில் சிவாவின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவார்.

”அறிக்கைப் படியே அனேகர் பேட்டையில்
செறிக்க வந் திருந்தனர் செப்பினன் சிவஞ்சில
கேட்டதும் நம்மவர் கிளம்பினர் ஆர்த்தனர்
பார்த்தேன் ஆபத்து பலத்த தென் றுன்னினேன்
யார்த்தேன் சிலசொல் மன வலி கொண்டே
உயிரென இனியவென் உத்தம நண்பரே!

 வ.உ.சி. மற்றும் சிவா தலைமையில் நடைபெறும் தூத்துக்குடி போராட்டத்துக்கு  முக்கியத்துவம் அளித்து சுதேசமித்திரனில் ஜி.சுப்ரமண்ய அய்யர் “ தூத்துக்குடி பவள தொழிற்சாலை வேலை நிறுத்தம்” “ தூத்துக்குடியும் சுதேசியமும்” “ தூத்துக்குடி வேலை நிறுத்தம்” “ நம் தொழிலாளிகள்” “ தூத்துக்குடி சமாச்சாரம்” போன்ற பல்வேறு தலைப்புகளில்  செய்திகளினை வெளியிட்டார்.

மகான் அரவிந்தர் தன்னுடைய வந்தேமாதரம் இதழில்  “வெல்டன் மிஸ்டர் பிள்ளை’’ (நன்று செய்தீர் பிள்ளையவர்களே) என்ற புகழ் மிக்க தலையங்கம் எழுதியதுடன் தொடர்ந்து போராட்டம் குறித்து அச் சமயத்தில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பால கங்காதார திலகர் அவர்களும் தனது பங்குக்கு கேசரி, மராட்டா பத்திரிக்கைகளில் தூத்துக்குடி தொழிலாளர் போராட்டம் குறித்து சிறப்பு செய்திகளாக வெளியாகின.

முத்தாய்ப்பாக ரஷ்யா நாட்டு ஜார் மன்னனின் இந்திய தூதுவராக பம்பாயில் பணியாற்றிய செர்கின் (Chirkin) என்பவர் இந்தியாவில் திட்டமிட்டு திறம்பட நடத்தப்படும் வேலைநிறுத்தம்’’. என்று அறிக்கை அனுப்பியதோடு மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும்  உணவு அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

உணவு அளிக்கப்பட்டு போராடியதால் தொழிலாளர்களை அக்கால காலணிய பிரிட்டீஸ் அரசாங்கத்தாரால் அவர்கள் நினைத்த மாதிரி தொழிலாளர்களை திசை திருப்ப முடியவில்லை. போராட்ட காலங்களில் ஆயிரக் கணக்கான தொழிலாளர் குடும்பத்தினருக்கும்  உணவு அளிப்பதென்ற முடிவு என்பது மிகவும் முக்கியமானது. இப் போராட்டத்திற்காக பொதுமக்களிடமும் வசூல் செய்து மீதிசெலவை வ.உ.சி. தனது பொருளாதார இருப்பில் இருந்து சமாளித்துள்ளார். இதுதான் ஒரு தலைவனுக்கு அழகு.

இப் போராட்டத்தின் விளைவாக நாவிதர்கள் பிரிட்டீஸ் அதிகாரிகளுக்கு உடந்தையாக செயல்படும் ஆட்களுக்கு சவரம் செய்ய மறுத்தனர். துணி துவைக்கும் வண்ணார் சமூகத்தவர் துணிகளை துவைக்க மறுத்தனர். பொதுமக்களும் அவரவர் அளவில் வழக்கறிஞார்கள், வணிகர்கள், சிறு வியாபாரிகள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் மற்றும் பலர் பொதுபுறக்கணிப்பு செய்தனர். இதனால் தொழிலாளர் வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி கண்டது.

இந்திய அளவில் பம்பாயில் நடந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை குறிப்பிடும் வரலாற்று ஆய்வாளார்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற உணர்ச்சி மிகுந்த போரட்டத்தை வசதியாக குறிப்பிட மறந்து விடுகின்றனர்.

13.03.1908 ல் வந்தேமாதரம்  இதழில் அரவிந்தர் எழுதிய தூத்துக்குடி போராட்ட வெற்றி குறித்து எழுதியது பின்வ்ருமாறு

“தூத்துக்குடி கோரல் மில் போராட்டம் வெற்றி பெற்றது. மகத்தான மக்கள் பெற்ற வெற்றியாகும். வேலை நிறுத்தம் செய்தோரின் ஒவ்வொரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரிட்டீஷ் முதலாளித்துவம் பரிதாபத்துக்குரிய நிபந்தனையற்ற சரணாகதியை அடைந்துள்ளது. தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அற்புதமாக வெற்றியைத் தேடி தந்த அஞ்சா நெஞ்சத் தலைவர்களைப் பற்றி தேசியம் உள்ளபடியே மிக்க பெருமை கொள்ளலாம்.

சிதம்பரம், பத்மநாப ஐயங்கார், சிவா ஆகியோர் ஒரு சில் மில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்திற்காகவும், நியாயத்திற்காகவும் சிறை செல்லவும், நாடு கடத்தப்படவும் முன் வந்தனர். படித்த வர்க்கத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் பிணைப்புதான் சுயராஜ்யம் பெறுவதற்கான வழிமுறைகளில் மகத்தான வழிமுறையாகும்.

வங்காளத்திலும் பல தொழிலாளர் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அச்சகத்தார் வேலை நிறுத்தத்தை தவிர வேறு எந்த வேலை நிறுத்தமும் வெற்றி பெறவில்லை.

தனித்து நிகழ்ந்த ஒரு தொழிலாளர் புரட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தூத்துக்குடி வேலை நிறுத்தம் ஒரு முழுமையான எடுத்துக்காட்டாகும். ஈடு இணையற்ற திறமையுடனும் தைரியத்துடனும் போராடிய தூத்துக்குடி தலைவர்களையே அனைத்துப் பெருமையே சாரும்.

கோரல் மில் தொழிலாளர்களின் குறைகள், அவர்களுக்கு உற்ற துன்பங்கள் முதலானவற்றோடு அனைத்து இந்திய நலன்களும் இணைந்துள்ளன.

பட்டாபி சீதாராமையாரால் எழுதப் பெற்ற அதிகாரப் பூர்வமான காங்கிரஸ் சபை வரலாற்று நூலின் காங்கிரசின் சிறு சிறு போராட்டத்தைக் கூட குறிப்பிடும் பக்கங்களில்  வ.உ.சி.யின் தூத்துக்குடி போராட்டம் குறித்து ஒரு வரி கூட குறிப்பிட வில்லை என்பதுதான் எவ்வளவு வேதனையான விசயம்.

சிறைவாசத்திற்கு பின்பு வ.உ.சி. 1913 வாக்கில் சென்னையில் வந்து தங்கினார். பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உடன் பணியாற்றிய அனுபவமும் வாய்க்கப் பெற்றார் தனது துயரமான  வறுமை வாட்டிய நிலையிலும் திரு.வி.க. அவர்களோடு சேர்ந்து பஞ்சாலை தொழிலாளர்களுக்கு சங்கம் கண்டார். தபால் ஊழியர்களுக்காக பெரம்பூரில் வ.உ.சி.யின் முயற்சியில் அவர் கண்ட சங்கமே பழமையான சங்கம்.

31.01 1919 ல் டிராம்வே யூனியன் கூட்டத்தில் வ.உ.சி. பேசிய பொழுது தொழிலாளர்கள் அவர்களுக்குத் தேவைப்படும் நிதியை திரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். சகிக்க முடியாத நிலை உருவாகும் பொழுதுதான் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். அரசாங்கம் முதலாளிகளுக்கு உதவும். தொழிலாளர்களுக்கு உதவாது என்றும் எடுத்துரைத்தார். 

11. 10.1921 ல் சென்னை விவசாய கைத்தொழில் சங்கத்தை துவக்கி வைத்து வ.உ.சி. முக்கிய தொலை நோக்கு விசயங்களை கையாளவேண்டும் என்பதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

உழவர், தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி தரல்

உழவும் கைத்தொழிலும் நவீன காலமுறைப்படி வளர்ச்சி பெறச் செய்தல்

சோப்பு, மெழுகுவர்த்தி, பித்தான் ஆகிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவது

சென்னை மாகாண தரிசு நிலங்களை வாங்கி விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ய உழவர்களுக்குப் பயிற்சியளித்தல் .

இன்றும் வடசென்னை நகரங்களில் வ.உ.சி. பெயர்களில் ஏராளமான தெருப் பெயர்கள் அமைந்திருக்கிறது என்றால் ம.பொ.சியின் முன்னெடுப்பும் மற்றும் உழைக்கும் தொழிலாளர்கள் குழுமிய பகுதி. நன்றியை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்.

17.12. 1919ம் வாக்கில் திலகர் சென்னைக்கு வருகை தந்தார். அச் சமயம் வ.உ.சி. திலகரிடம் தைரியமாக ஒரு வேண்டுகோள் வைத்தார்.

‘’ இப்பொழுது தொழிலாளர் காலம்’’. தாங்கள் பணக்காரர்களின் பங்களா வீடுகளில் தங்க கூடாது. அப்படி  தாங்கள் தங்கினால் ஏழைகளாகிய தொழிலாளர்கள் உங்களை சந்திக்க இயலாமல் போய்விடும். ஆகையால் ஏழை தொழிலாளர் மக்கள் உங்களை இயல்பாக சந்திக்கும் விதமாக தொழிலாளர் இயக்க காரியதரிசிகளின் யாருடைய வீட்டிலாவது தங்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். ‘சிதம்பரம் ! எனக்கா விண்ணப்பம்? எனக்கு எந்த குடிசையாயிருந்தாலென்ன? என்றார். உடனடியாக “தேசபக்தன்’’ லிமிடெட் காரியதரிசி சுப்பராய காமத’ வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கோரல் மில் வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி அடைய வ.உ.சி.யின் அணுகுமுறை முக்கியமானது. இதனால் கோரல் மில் நிர்வாகம் வ.உ.சி.யின் மீது தீரா கோபம் வாழ்நாள் வரை கொண்டிருந்தது. ஏ.பி.சி.வீரபாகு ஒரு சம்பவம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

“வ.உ.சி. என்ற பெயரால் தூத்துக்குடியில் கல்லூரி ஒன்றை அமைக்கும் பணி விடுதலைக்கு பின் 1950 ல் தொடங்கிய போது அதற்காக நிதி திரட்டினர். அந்த நகரில் பல்வேறு அறப்பணிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்கி வரும் ஹார்வி மில் நிர்வாகத்திடம் கல்லூரி கட்ட நிதி கேட்ட பொழுது அவர்கள் கூறிய பதில் “வ.உ.சி.யின் பெயரால் அமையும் எந்த நிறுவனத்திற்கும் உதவி செய்வதில்லை என்பது கொள்கை முடிவு. இந்த மறுப்புரை வ.உ.சி.யின் இறப்பிற்கு பிறகும் கிடைத்த உண்மையான புகழாரம் ஆகும்.

முதல் செங்கொடி ஏற்றிச் சிறப்பித்த சிந்தனை சிற்பி சிங்கார வேலர்,
“1923 ஆம் ஆண்டு மே முதல் நாள் சென்னையில் தோழர் சிங்காரவேலு செட்டியார் அவர்கள் இந்தியாவில் ஒரு கொடியை ஏற்றி வைத்தார்

இந்தியாவின் முதலாவது மே தினம் கொண்டாடப்பட்டது அந்த மே தினத்தில்  சிங்காரவேலர்  முயற்சியில் தொழிலாளர் விவசாய கட்சி உருவாக்கப்பட்டது சென்னையில் இரண்டு மேதினப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது கடற்கரையிலும் வட சென்னை உயர்நீதிமன்ற கடற்கரையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையிலும் நடத்தப்பட்ட கூட்டங்களில் சுப்பிரமணிய சிவாவும், கிருஷ்ணசாமி சர்மாவும் கலந்து கொண்டனர் இந்த கூட்டங்களில் பாட்டாளிகள் சுயராஜ்யம் அடைய இந்திய மக்களுக்கு அறைகூவல் விடப்பட்டது.

சென்னை தொழிலாளர் சங்கத்தை தோற்றுவித்த குத்தி கேசவ பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், சக்கரை செட்டியார், வாடியா, இ.எல்.அய்யர், செல்வபதி செட்டியார், இராமனுஜலு செட்டியார்,, கஜபதி, என்.தண்டபாணி பிள்ளை, எம்.சி.இராஜா, தேசிகாச்சாரி, ஜார்ஜ் ஜோசப், த.வே.முருகேசனார் மற்றும் பலரையும் மே தினத்தில் நினைவு கூர்ந்திடுவோம்.

ஆய்வறிஞர்
இரெங்கையா முருகன்.

/ ஏர் இதழ் வெளியீடு / 01.05.2020 /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக