புதன், 7 நவம்பர், 2018

முசிறி: தென்னகத்தின் மொகன்சோதாரோ :- கண. குறிஞ்சி.

கேரளத்திலுள்ள "துறை கடந்த தொல்லியல் அறிவியல் முன்னேற்றத்திற்கான நிறுவனம்" எனும் அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றும் மூத்த தொல்லியல் ஆய்வாளர் பி.ஜே.செரியன், தமிழகத்தின் துறைமுகப் பட்டணமாகிய முசிறி குறித்து ( கி.மு.  300 முதல் கி.மு. 500 வரை ) அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள், தமிழகத்தின் தொன்மையை நன்கு பறை சாற்றுகின்றன.

சங்க காலத்தின் பண்பாட்டு முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, தமிழகத்திலுள்ள இடங்களை மீண்டும் கண்டறிய முயற்சிப்பதாகச் செரியன் குறிப்பிட்டார். அந்த வகையில்  பட்டணம் பகுதியில் 2007 ஆம் ஆண்டில் அவர் அகழாய்வு நடத்தினார்.

முசிரிஸ் எனும் பழங்காலத் துறைமுகத்தின் ஒரு பகுதியாகப் பட்டணம் பகுதி இருந்திருக்கக் கூடும் என்பது அவரது கருத்தாக உள்ளது. பட்டணம் பகுதியில் சிறு அளவுதான் அவர் அகழ்ந்து பார்த்தார். இருப்பினும் அங்கு பெற்ற ஆதாரங்கள், தமிழகத்தின் சங்ககாலப் பகுதிகளோடு பட்டணம் பகுதிக்குத் தொடர்பு இருந்ததை உணர்த்தின.

"பழைய வணிகத் துறைமுகமாகிய
முசிறிஸ் / முசிறிப் பட்டணத்தின் உள்ளடங்கிய பகுதியாகப் பட்டணம் இருந்திருக்க வேண்டும். முசிறிப் பட்டணத்தை "முசிறிஸ்"  என  உரோமானியர்கள் அழைத்தாகச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

கடல் கடந்த வணிக மையமாக இருந்ததால், இப்பகுதி குறித்து இந்திய மற்றும் ஐரோப்பியச் செவ்வியல் இலக்கியங்களில் அதிக அளவு குறிப்புகள் காணப்படுகின்றன.

முசிறியின் ஓர் அங்கமாகப் பட்டணம் பகுதி இருந்ததற்கான தரவுகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அப்படிப் பார்த்தால், பட்டணம் பகுதிதான் தென்னிந்தியாவின் மொகன்சோ தாரோவாக இருந்திருக்க வேண்டும்.

மேலும் இன்றைய தமிழ்நாட்டின் புராதனப் பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் பெரிய அளவிலான தொடர்புகள் இருந்துள்ளன.

இன்றைய கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் பகுதிகள், கேரளத்தின் பட்டணத்தோடும், தமிழகத்திலுள்ள  கொடுமணல், அரிக்கமேடு, வீரம்பட்டினம் மற்றும் காவேரிப்பட்டினம் பகுதிகளோடும் பெருமளவு இணைப்பில் இருந்துள்ளன.

சில பகுதிகள் " பட்டணம் " என்ற பெயரைக் கொண்டுள்ளது, அவைகளுக்கு இடையே உறவு இருந்ததைத் தெளிவாக்குகிறது.

இது ஏதோ இரண்டு அல்லது மூன்று மாநிலங்களோடு குறுகி விடவில்லை. கருத்துக்களும், நம்பிக்கைகளும் கடல் கடந்தும் பகிரப்பட்டன.

உரோமானியர்கள், அராபியர்கள் மற்றும் கிருத்துவர்கள் எனக் கண்டங்கள் கடந்து  இணைப்புகள் இருந்தன " என ஆய்வாளர் செரியன் குறிப்பிடுகிறார்.

மேலும் தமிழகத்திலுள்ள சில பகுதிகளும், பட்டணம் பகுதியும் பல்வேறு பண்பாடுகளும், நம்பிக்கைகளும்  இணக்கமாக இருந்த புகழ் பெற்ற இடங்களாக இருந்துள்ளன.
தமிழ்நாட்டின் சில பகுதிகளும், பட்டணம் பகுதியும் அப்படிச் சிறந்து விளங்கியதற்கான பெளதீகச் சான்றுகள் போதிய அளவு  தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெளிவு படுத்துகிறார்.

"தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோண்டப் பட்ட  40 தொல்லியல் அகழாய்வுகளில், குறைந்தது  20 இடங்களாவது சங்க கால கட்டத்தில் இருந்திருக்கக் கூடும்.

கொடுமணல், அரிக்கமேடு மற்றும் அண்மையில் அகழப்பட்ட  கீழடி ஆகிய பகுதிகள், கேரளத்தின் பெரியாறு ஆற்றங்கரையிலுள்ள பட்டணம் எனும் பகுதியோடு பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. இந்தப் பட்டணம் பகுதி, தென் சீனத்திலிருந்து ஜிப்ரால்டர் வரையிலும் இருந்த 40 துறைமுகப் பகுதிகளோடு தொடர்பில் இருந்தமைக்கான பெளதீகச் சான்றுகள் உள்ளன.

வரலாற்றிலேயே இந்தக் காலகட்டத்தில்
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வேறுபட்ட கண்டங்களின் ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகத்திற்கு முதல் முறையாக மக்கள் பயணங்களை மேற்கொண்டனர்" என்ற அவரது கருத்து,  தமிழ்நாட்டின் தொன்மைக்குச் சான்றாக விளங்குகிறது.

"நீச மொழிக்கு இவ்வளவு சிறப்பா?" என சமஸ்கிருதவாதிகள் பொறாமையால் புழுங்கக் கூடும். என்ன செய்வது?

சூரியனைக் குடை கொண்டு மறைத்து விட முடியாதே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக