ஞாயிறு, 11 நவம்பர், 2018

வெட்டுப்பட்ட புளியமரம்: முத்துராசா குமார்

தலையின்றி கை கால்களின்றி
இறைச்சி கடையில்
முண்டமாகி கிடக்கும்
கறிவெட்டும் கட்டை
முன்பு புளியமரமாக
தழைத்திருந்தது

வெள்ளாட்டை வைத்து
வெட்டும் போது
கட்டையிலிருந்து சடச்சடவென
புளியம்பழங்கள்
உதிர்ந்தன

அடுத்தடுத்து வெட்டுகையில்
கூடுகள்
கொக்கு முட்டைகள்
விழுந்தன

ஒருகட்டத்தில்
தூளியாடிய சிறுவர்களும்
குதித்தனர்

ஞாயிறு காலையின் கூட்டத்தில்
ஒவ்வொரு வெட்டுக்கும்
எல்லாமும் சேர்ந்து
கிளைகளை உலுப்பின

கடுப்பான கடைக்காரர்
உதிர்ந்ததை
விழுந்ததை
குதித்ததை
மொத்தமாக வெட்டி
கறிகளோடு கலந்து கைமாற்றிவிட்டு கட்டையைத் தூக்கி வீதியில் வீசினார்

வாசலிலேயே காத்துக்கிடந்த
ஆணியடி வாங்கிய முனிகள்
வெட்டுக்காயங்களோடு வந்து விழுந்த
புளியமரத்தை தாங்கிப் பிடித்து
கூட்டிச் சென்றன

எந்த நாய்களும் குரைக்கவில்லை.

- முத்துராசா குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக