சனி, 10 நவம்பர், 2018

அம்மாச்சி :- முத்துராசா குமார்.


வயக்காட்டில் ஊன்றினால்
நல்லதென்று எரிந்து தணிந்த சொக்கப்பனையிலிருந்து
பனங்கருக்கை பிடுங்கி வந்திருந்தாள்
அம்மாச்சி.

அவள் வருவதற்குள்
மொசைக்கி கற்களால்
பூசப்பட்டிருந்தது வயக்காடு.

தலைவிரிக்கோலத்தில்
கருக்கோடு நடந்தவள்
எத்திசையில் அலைகிறாள் என்று
இன்றுவரைத் தெரியவில்லை.

உடலைவிட பெரிய வாய்கள் கொண்ட
கதிரறுக்கும் எந்திரங்கள்
கொலைப்பசியில் ஊரையே
வேட்டையாடத் தொடங்கின.

முன்னொரு காலத்தில்
மிச்சம் விடப்பட்ட அடிக்கதிரின்
பின்னால் மறைந்திருந்த என்னை
அவைகளின் கண்கள் கண்டுகொண்டு
அருகே வந்து வாய் பிளந்தன.

'சடைப்பிடித்த நெற்களோடு
சாய்ந்து கிடக்கும் கதிர்கள் நானல்ல' என்று கண்ணீரும் சிறுநீரும் வழிய கெஞ்சுகையில்
ஊட பாய்ந்து பனங்கருக்கால்
எந்திரங்களை சங்கறுத்து விட்டு
திரும்பாமல் நடந்தாள் அம்மாச்சி.

(அக்டோபர் மாத 'நடுகல்' இதழில் வெளிவந்த கவிதை)
நன்றி: Pon Muthu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக