வெள்ளி, 8 மே, 2020

வசுமித்ர - இலக்கியம் - இடதுசாரி : ப.பிரபாகரன்

அம்பேத்கரின் அறிவுத்தேடல் என்பது, புத்தரின் ஆண்குறியை மட்டுமே வரம்பாகக் கொண்டிருந்தது எனும் வசையில் நீங்கள் இலக்கியம் லயித்தால், இடதின் சாரம் துய்த்தால் நீங்கள் தான் வசுமித்ர. கவனிக்கவும் வசுமித்ரா அல்ல. ஏனெனில் வசுமித்ரா என்பது மார்க்ஸோடு புனிதம் உய்க்கத் தடை செய்தலின் பொருட்டில் வார்த்தெடுக்கப்பட்டதாய் கருதப்படுகிறது.

குறி மடக்கல்
இந்திரியம்
முலை
பை நாகம்
யோனிப்பழம்
எமனின் காமம்
எருமையைப் புணர்தல்
காளியைப் புணர்வதில் ஆகச்சிறத்தல்
காந்திய ஊதொலி
-இவையெல்லாம் இலக்கியம் என்றால், கவிதை என்றால், அந்த எழவு வீட்டுப் பிணத்தின் தலைமாட்டு நெல் மரக்கால் எனக்குத் தேவையில்லை. நீங்களே பொங்கித் தின்றுவிடுங்கள்.

செழிப்பும் மனக்கொழுப்பும் மிக்க புத்திஜீவியாகிய நீங்கள் மக்களுக்கு வகுப்பெடுக்கத் தயாரென்றால் எதுவும் பேசலாம். உங்களை ஒரு குழு மேடையேற்றும். அதில் நீங்கள் மினுக்கும் மார்க்சியத்தை மெச்சி முகரலாம். எதிர்பார்த்தபடி கம்யூனிச அறிஞர் பட்டத்தையும் தட்டிச்செல்லலாம்.

இதற்குப்பிறகும் நீங்கள் பிரபலமாக ஆசைப்பட்டால்,
ரெண்டு பீரை வாங்கி வரும் நுரையின் சூத்திரமென்ன? எனும் தத்துவார்த்த வேள்விகளில் உங்களின் மதிப்புமிகு சலைவாக்களை ஒழுக விட்டு ஆய்வு செய்யலாமே தவிர, யார் குறியில் அம்பேத்கர் அறிவைத்தேடினார் என்று அந்தரங்கச்சுவை நாடும் உங்கள் ஆழ் மனதின் அடக்கி வைக்கப்பட்ட மலங்களின் நாற்றமெடுத்த வாயுக்களைப் பிடுங்கி விடத்தேவையில்லை. ஏனெனில் அது உங்கள் உடலில் ஊறிப்பெருகி உங்களை மட்டும் அழித்துக்கொள்ளும் சாதிய ஊதல். அதற்கு நாங்கள் பலிபடையல் ஆக முடியாது.

அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள், புத்தத் தேடல் போன்றவற்றில் விமர்சனமிருந்தால் விவாதமாக முன் வைக்கலாம். மாறாக, அவதூறு செய்தால் நாங்களும் பதிலுக்கு ஏதாவது செய்வோம். ஆனால், அது நிச்சயம் அவதூறாக இருக்காது. உங்களை அம்பலப்படுத்துவதாக அமையும்.

கம்யூனிச புத்திஜீவிகள் என உங்களுக்கு நீங்களே பட்டம் கொடுத்துக்கொண்டு, ஊடக வெளிச்சத்தில் ததும்பி நிற்கும் மூளைக் கதுப்புகளின் விஞ்ஞான சமிக்ஞைகளையெல்லாம் எங்களை நோக்கி ஏவி விடும் நீங்கள் உண்மையான இடதுசாரித் தோழர்களை அறிவீர்களா?

உடல் அளவுக்குப் பொருந்தாத பழைய ஆடைகளை அணிந்து, தானாக முடிவெட்டி சவரம் செய்து, பேருந்துக் காசை மிச்சம் பிடித்து, போகுமிடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பசியாறி, எளிய வாழ்க்கை வாழ்ந்து, அவர்களுக்காக அரச பயங்கரத்தையும் ஆதிக்க சாதி வெறியையும் எதிர்த்து, சமரசமின்றி போராடி, வெட்டப்பட்டுச் செத்துப்போன பிறகும் இன்றுவரை அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் அவர்கள்.

படிப்பை உதறி, உடல்சுகம் உதறி, சொந்தபந்தம் சொத்துசுகம் அனைத்தையும் துறந்து தியாகியானவர்களே கம்யூனிஸ்டுகள்.

தோழர் தமிழரசனைத் தெரியுமா?

விழுப்புரத்திலிருந்து சென்னை வரை நடந்தே சென்றவர். பச்சை வாழைக்காயைச் சுட்டுத தின்று பசியாறியவர். மீன்சுருட்டி அறிக்கையில் சாதியொழிப்பைப் பேசி காடுவெட்டி குருவையே குலைநடுங்கச் செய்தவர். அவரையே இதுநாள் வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் கம்யூனிஸ்ட்டாக ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜூலியஸ் ஃபூசிக் தன் பன்னிரண்டு வயதில் கவிதை பாடி அரசியல் பேசியவன்.
அவன் சொல்கிறான்.
"கம்யூனிஸ்டுகள் தனித் தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள். ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக மாறவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்"
-சொல்லியபடியே தூக்கிலேறி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து செக்கோஸ்லேவியாவுக்காகச் செத்து போனான்.

அவன் ஒரு போதும் உங்களைப்போல் யோனியின் கரு, பூ, பிஞ்சு, காய், பழம், அழுகல் எனும் இலக்கியங்களுக்குள் திளைத்துப்போகவில்லை. மாறாக காவல் படையின் குண்டாந்தடி அடிகளை வாங்கி முகம் உடைந்த பின்பும் எதிர்த்து முழங்கினான்
"போலீஸ் அராஜகம் ஒழிக" என்று..!!

உலகம் போற்றும் 'எர்னஸ்டோ சே குவேரா'வைச் கூட கட்சியில் வேலை செய்யாதவர் எனும் விமர்சனம் செய்வோர் உண்டு.

நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாவிட்டாலும், இது போன்ற எண்ணிலடங்கா தியாகத் தோழர்களின் வரலாறு தெரிந்திருப்பதால்தான் இன்னமும் இடதுசாரி ஆதரவாளராக உள்ளேன்.

ஆனால், அவர்களையே விஞ்சும் வகையில் மார்க்சியம் பேசும் நீங்களெல்லாம் உங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று கூறிக்கொள்வதுதான் என் போன்றோரைக் கெக்கலிக்க வைக்கிறது.

அப்படிப்பட்ட பாரம்பரியம் வாய்ந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உள்ள தோழர்களே அம்பேத்கரை சரியான அளவுகோளில் அணுகும்போது, ஆபாச அவதூறு கிளப்பும் வசுமித்ரவோ மற்றுமவனை ஆதரிக்கும் இடதுகளோ
முத்துராமலிங்கத்தையோ, காந்தியையோ, திலகரையோ, படேலையோ, ராமதாசையோ, யுவராஜையோ, இன்னும் பல சாதிப்புழுக்களையோ நாகரிகச் சொற்களைக் கொண்டாவது விமர்சித்திருக்கிறீர்களா?

மாட்டீர்கள். ஆனாலும், நீங்கள் கம்யூனிஸ்டுகள் என்று பீற்றிக்கொண்டு உயர்தர நிறுவனத்துச் செஞ்சட்டைகளணிந்து காணொளிக் காட்சிகள் மூலம் வகுப்புகள் எனும் பெயரில் தூய்மைவாதம் பேசுகிறீர்களே, அந்தப் பேச்சு என்றாவது உங்களைப் பரிசுத்தப்படுத்துமா பேச்சு வியாபாரிகளே?

பறைசாதி வெறியர்கள், தலித்திய அறிவிலிகள் என்று கவிஞ முகமணிந்து முயங்கிப்பெறும் காமத்திளைப்பில் கம்யூனிசம் கண்டடைந்த நீங்கள், உங்களின் தனியான கழிவறையில் மலத்துவாரத்தைச் சிறுதுளை நீர் பீய்ச்சான் கொண்டு சுத்தப்படுத்துவதைத் தவிர்த்து, வாய்க்கொப்பளித்து விழுங்கி, குளித்துத் துவைத்து செடிக்கூற்றிப் பறித்துச் சமைக்கும் ஏரித்தண்ணீர் விளைவித்த கத்தரிக்காய் குழம்பை ரேஷன் அரிசிச்சோற்றில் பிசைந்து சாப்பிடுவீர்களா?

நாங்கள் கம்யூனிஸ்ட் வரலாற்றில் புது வடை சுடுகிறோம் எனும் ஆன்லைன் ஆர்ப்பாட்டக்காரர்களே! நீங்கள் உயர்தர சானிட்டரி பேட் தவிர்த்து பிறப்புறுப்பில் பீறிடும் உதிரம் உறிஞ்ச ஃபுல் வாயில் புடவைகளைக் கிழித்துப் பொருத்தி கட்டிட வேலை செய்திருக்கிறீர்களா?

நீர்க்கடுப்பில் குறி வலித்து கொட்டை வீங்கி யூனிட் கணக்கில் ஜல்லியை அள்ளி விட்டிருக்கிறீர்களா?

கல்யாண மண்டபத்தில் வியர்வதை வழித்து, பாத்திரங்கள் கழுவி இருநூறு வாங்கி கைகளில் சொறி வந்து நொந்திருக்கிறீர்களா?

காய்கறி மார்க்கெட்டுகளில் இடுப்பெலும்பு முறியுமளவு மூட்டைகள் தூக்கியிருக்கிறீர்களா?

இன்னும் எத்தனையோ உழைக்கும் வெளிகளில் மூத்திர வாடையோடு வாழ்ந்திருக்கிறீர்களா?

இதை வாசிக்கும்போதுதான் உங்களுக்கு இவை அறிமுகமே ஆகியிருக்கும்.

ஆனாலும், நீங்கள்தான் கம்யூனிஸ்டுகள் உயர்தர செல்பேசியில் உயர்தனிச் செம்மொழிகளில் அம்பேத்கரை குறிபாடும் தூய இடதுசாரிகளாகிய நீங்கள்தான் புரட்சி செய்யப்போகிறீர்கள்? நீங்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளை நோண்டப்போகிறீர்கள்.?

சங் பரிவார் குறிகளால் குத்திக்கிழிக்கப்படும் சிறுபான்மை மக்களின் உடல்களைப் பற்றி பேசாதவர்கள், பழங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்துப் பதறாதவர்கள், குறி கொண்டு அம்பேத்கரிய வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனாலும், நீங்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்து வேலை செய்ய மாட்டீர்கள். நீங்கள் பதிப்பகம் வைத்திருப்பீர்கள். நீங்கள் புத்தகம் எழுதுவீர்கள். நீங்கள் விருது கொடுப்பீர்கள். விருது வாங்குவீர்கள். கம்யூனிஸ்ட் கட்சியினருக்கே பாடம் நடத்துவீர்கள். உங்களை அவர்களும் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

உங்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

"நீங்கள்லாம் கம்யூனிஸ்ட் கெடையாது. எந்தக் கட்சிலயும் சேராம உடம்ப வருத்தி ஒழைக்காம வாயாலயே ஓலா உட்டு ஓத்ஸ் சாப்புடுறவனுங்க.. உங்க எழுத்துக்கொழுப்புக்கெல்லாம் உச்சம் தேவைப்பட்டா குழி பறிச்சி குறியைப் பொதச்சிக்கிங்க. அத விட்டுட்டு புக்க படி, கவிதையப் படின்னு ஆபாச குருத்துகளுக்கு உரம் வேண்டி வாதம் பண்ணினா, நீ எழுதினத நான் ஏண்டா படிக்கணும்னுதான் பதில் கேள்வி கேப்பேன்."

அப்புறம்,

அம்பேத்கர் எட்டாயிரம் ரூபாய் கொடுத்துத் தங்கத்திலான குர்-ஆன் வாங்கினார்;
கார் வைத்திருந்தார்; கோட், தொப்பி அணிந்திருந்தார்; மாடி வீடு கட்டினார்; கடைசி வரை அரச நட்புக்களிடம் நற்சார்பு கொண்டிருந்தார்
-எனச் சொல்லும் யோக்கியவான்களே! பெரியாரைப் பேசுபவர்கள், அவர் சொன்ன எளிமையான வாழ்வை வாழ்கின்றனரா? மார்க்ஸைப் பின்பற்றுபவர்கள் முழு கம்யூனிச தியாக வாழ்வை வாழ்கின்றனரா?
இவர்களிடம் செல்லுபடியாகாத உங்கள் கோபம் அம்பேத்கரிடம் மட்டும் குறி கொள்ளுமென்றால் உங்களுக்கோர் பதிலுண்டு.

ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த அம்பேத்கரும் சரி, அவரால் உரிமை பெற்ற நாங்களும் சரி, இந்திய அரசால் சாதிய சக்திகளால் அனுபவித்த கொடுமைகள் இன்னமும் முழுமையாக நீங்காமல் தொடர்ந்து கொண்டேதான் சகித்து வாழ்கிறோம். இட ஒதுக்கீடு மூலம் கல்வி பெற்று இன்னமும் நூறாண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் எங்களைத் தூய்மை வாழ்க்கை வாழ, தியாக வாழ்க்கை வாழ, வறுமை வாழ்க்கை வாழ, கம்யூனிசத்தின் பெயரால் பணிப்பீர்களேயானால் உங்களை நீங்களே திருப்பிக் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட்தானா என்று..

"நாங்க எப்பதாண்டா நல்ல சட்ட போட்டு நல்ல சோறு திங்கிறது?

உங்களை நான் நன்கறிவேன்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு வாட்சப் குழுவில் வகுப்பெடுத்துக் கொண்டிருப்பீர்கள். கட்சிப்பணி ஆற்ற முடியவில்லையென உங்கள் அடிப்பொடிகளிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி அடையாளம் பெறுவீர்கள். சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பிரபலம் ஆவீர்கள். ஆனால் ஒரு போதும் கம்யூனிஸ்ட் ஆக மாட்டீர்கள்.

ஆனால் தலித்துகளுக்கு மட்டும் பாடமெடுப்பீர்கள்.. உங்களைப் பற்றி கட்சி கம்யூனிஸ்ட்டுகள்தான் கண்டித்து எழுத வேண்டும். ஆனால், அவர்கள் உங்கள் நண்பர்களாக இருப்பார்கள். நீங்கள் இருக்கும்வரையில் இந்தியாவில் புரட்சி நிச்சயம் என்று நம்புபவர்கள் அவர்கள்.

இங்கே உங்களைப்போன்ற கழிசடைகளை ஆதரிக்கும் சில கட்சி கம்யூனிஸ்டுகளை இப்போது நாங்கள் அடையாளம் காண்கிறோம். இவர்களை இனி புரட்சிக்கான புண்ணியவான்கள் என்று கருதி இந்தியாவை இவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நாம் ஏதேனும் தமிழ்ப்படம் பார்த்து விமர்சனம் எழுதிக்கொள்வதே உத்தமம். அந்தளவுக்கு 'பிளக்க வாசிப்பவர்கள்''
சாமுவேல் போன்ற தோழர்களையே தலித்திய சாதிவெறியன் என்று முத்திரை குத்திப் பேசுபவர்களைக்கூட அமைதியாகக் கடந்து போகிறவர்கள்.

ஆனாலும், சில உண்மையான கம்யூனிஸ்டுகள் களத்தில் அதிகாரத்தை எதிர்த்துக் சமர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்குக் கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஆனால் வசுமித்ர கும்பலோ புத்தகம் விற்க அடையாளம் தேடுகிறது. லாபம் பார்த்தவர்கள் வேறென்ன செய்வார்கள்? அதற்கு அம்பேத்கர் தான் இம்முறை இவர்களின் தேர்வு என்றால்,
"வா, காத்திருக்கிறோம்..!!"

ப.பிரபாகரன்.
08.05.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 08.05.2020 /

நன்றி:
ஜின் அவர்களது முகநூல் பதிவு.

2 கருத்துகள்: