புதன், 20 மே, 2020

மகப்பேறு அறுவை சிகிச்சையும் மருத்துவ அநீதியும்: கதிர் நம்பி

இந்தியாவில் சிசேரியன் அறுவைச் சிகிச்சை பிரசவங்கள் வேகமாகப் பரவி வருகிறது.

எப்போதும் இல்லாத வகையில் இந்தியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள சிசேரியன் என சொல்லப்படும் அறுவை சிகிச்சை முறையை அதிகம் பின்பற்றுகிறார்கள். அரசு தரப்பு தகவல்களும் இதனை உறுதிபடுத்துகின்றன.
2008-2009 இல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் அறுவை சிகிச்சை இரண்டு மடங்கு அதிகமாகி இருக்கிறது.

சி செக்சன் (c-section) என்பது வயிற்றையும் கருப்பையையும் கீறி குழந்தையை வெளியே எடுக்கும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும்.உலக சுகாதார நிறுவன (WHO) அறிவுறுத்தலின்படி, பிரசவத்தில் இக்கட்டான சூழலிலே மட்டும் தான் இந்த முறையை கடைபிடிக்க வேண்டும்.

இந்தியா உட்பட வளரும் நாடுகளிலும் வளர்ந்த நாடுகளிலும் ‘சி-செக்சன்’ அதிகமாக பரவி வருகின்றது என மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கூடவே முறைப்படுத்தப்படாத சந்தை, லாப நோக்கம் மற்றும் பெண்களிடையே இதன் மீது ஏற்பட்டிருக்கும் சிந்தனை போக்கு என இவை எல்லாம் அறுவை சிகிச்சைக்கு காரணமாக கூறுகிறார்கள்.

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் முன்னூறு சதவிகிதமும் (300%) தனியார் மருத்துவமனைகளில் நானூறு சதவிகிதமும் (400%) அறுவை சிகிச்சை பிரசவங்கள் கூடியிருக்கின்றன.
2018-2019 இல் பொது மருத்துவமனைகளில் பிறந்த 1.3 கோடி குழந்தைகளில் 19 லட்சம் குழந்தைகள் ‘சி-செக்சன்’ முறையில் பிறந்தவை என நல்வாழ்வு மற்றும் குடும்ப நல ஒன்றிய அமைச்சகத்தின் கீழ் நல மேம்பாட்டு தகவல் அமைப்பு (Health Management Information System) சேகரித்த தகவல் இருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை பாதியிலும் குறைவாகவே இருந்திருக்கிறது. 2008-2009இல் பொது மருத்துவமனைகளில் 73.13 லட்சம் பிறந்த குழந்தைகளில் 4.61 லட்சம் குழந்தைகள் ‘சி-செக்சன்’ முறையில் பிறந்தவை. 6 சதவிகிதமே கூடியிருக்கிறது.
அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழல் இருப்பதாலும் அதன் காரணமாக அதிகம் பணம் செலுத்தவும் வேண்டியதால் ‘சி-செக்சனின்’ நண்பன் என்று சொல்லப்படும் தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலை நீடிக்கிறது.

2008-2009இல் தனியார் மருத்துவமனைகளில் சி-செக்சன்’ முறையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சம். இதுவே 2018-2019 இல் நான்கு மடங்காக 20.5 லட்சம் என்றாகிப் போனது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மொத்த குழந்தைகளில் 17 சதவிகிதம் சி-செக்சன் அறுவை சிகிச்சை. இப்பொழுது அது இரண்டு மடங்காகி 33.8 இல் நிற்கிறது.

சி-செக்சன் என்பது சேவை அளிப்பவரின் லாப நோக்கத்தில் இருந்து வருகிறது. இங்கு சேவை அளிப்பவர் என்பது மருத்துவமனைகளை குறிக்கிறது. மருத்துவமனைகள் நல விழைவர்களுக்கு தங்களுடைய பொருளை குறித்த தகவல்களோடு விற்பனை செய்கிறார்கள். முறைப்படுத்தப்படாத சந்தை, நெறிமுறையற்ற விதிகள் என இவற்றின் காரணமாக இந்தியாவில் சி-செக்சன் பரவி வருகிறது என்கிறார் பொருளாதார நிபுணரும் உதவி பேராசிரியருமான இந்திரனில் முகோபாத்யாய்.

சி-செக்சன் பலம் x பலவீனம் :

சி-செக்சன் சில காரணங்களுக்காக “மருத்துவ அநீதி” என்று சொல்லப்படுகிறது. சி-செக்சன் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் புகட்டுவது தாமதமாகிறது, எடை குறைவு,சுவாசக் கோளாறுகள்,அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் போக்கு, குறைவான அப்கர் புள்ளி(lower apgar score)* என இவற்றையெல்லாம் ஐ.ஐ.எம் அகமதாபாத் தன் ஆய்வில் குறிப்பிடுகிறது.
எனினும் கூட, சுகப் பிரசவமாகாத சூழல் இருக்கின்ற பொழுது, காட்டாக குழந்தையின் இருப்பு நிலையில் சிக்கல் போன்ற சில எதிர்பாரா நிகழ்வுகளை பார்க்கின்ற பொழுது சி-செக்சன் ஒரு வரமாகவே பார்க்கப்படுகிறது என்கிறார் மகப்பேறு மருத்துவர் மரு.சுபஸ்ரீ.
உலக சுகாதார நிறுவனம், மருத்துவர்கள் சி-செக்சன் முறையை கொடுக்கப்பட்ட இலக்காகவோ அல்லது எண்ணிக்கைக்காகவோ செய்யக் கூடாது. பிரசவிக்கும் தாயின் தேவை கருதி அதை கையில் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

மேலும், சி-செக்சன் அறுவை சிகிச்சையை தவறாக செய்கின்ற பட்சத்தில் அது தாயிற்கு உடலில் ஏதேனும் இயலாமை அல்லது மரணத்தை கூட ஏற்படுத்திடக் கூடும். சி-செக்சன் அறுவை சிகிச்சையில் அதிகபட்ச லாபம் கிடைப்பதால் அது மேலும் அறுவை சிகிச்சைகளை அதிகரிக்கிறது. இதனால் பிற மருத்துவ சேவைகளில் தேக்கம் ஏற்பட்டு பலவீனத்தை ஏற்படுத்துகிறது.

சி-செக்சனில் முதன்மை வகிக்கும் நகரங்கள் :

மகாராஷ்டிரா தவிர்த்து தென் இந்தியாவில் தான் சி-செக்சன் அறுவை சிகிச்சை விகிதம் கூடுதலாக இருக்கிறது.ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிகமாக சி-செக்சன் முறையில் குழந்தைகள் பிறக்கின்றன.

சி-செக்சன் முறையை ஏற்க மறுத்தாலும் 2008-2009 கால கட்டத்தை ஒப்பிடும் பொழுது அதிகமாகவே அறுவை சிகிச்சை முறையில் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

மகாராஷ்ட்ராவில் 2008-2009இல் பொது மருத்துவமனைகளில் சி-செக்சன் முறையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 26,000. அது இப்போது 1.75 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் 51,000 ஆக இருந்து 2.25 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.

கர்நாடகாவில் 2008-2009இல் பொது மருத்துவமனைகளில் சி-செக்சன் முறையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 25,000. அது இப்போது 1.37 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் 20,000 ஆக இருந்து 1.4 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.

ஏன் சி-செக்சன் அதிகரிக்கின்றன? :

பிரசவ வலி தாங்கும் திறன் குறைந்து கொண்டே வருவதால் சி-செக்சன் அறுவை சிகிச்சையின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.”என்னுடைய அனுபவத்தில் பத்திற்கு ஆறு பேர் வலி தாங்க முடியாமல் சுக பிரசவத்தை தவிர்த்து விடுகின்றனர். கலந்தாய்வுகள் மூலம் நம்பிக்கை அளித்தாலும் உறவினர்கள் கூட அறுவை சிகிச்சையையே செய்யச் சொல்கிறார்கள்.” என்கிறார் டெல்லியைச் சார்ந்த ஸ்ரீ பாலாஜி மருத்துவ கல்வி நிறுவனத்தின் மூத்த மருத்துவர் மரு.சாதனா சிங்ஹால்.

தலைக்கு பதிலாக கால்கள் ஜனனப் பாதையை நோக்கி இருத்தல், தாயின் கடந்தகால நோய்க் குறியீடுகள், குழந்தை இயல்பு நிலையற்று பிறக்கும் காரணிகள் கொண்டிருத்தல், குழந்தை கருப்பையில் மலம் கழித்தல் போன்ற காரணங்களுக்காக மருத்துவர்கள் சி-செக்சன் முறையை தெரிவு செய்கிறார்கள் என்கிறார் சிங்ஹால்.

அரசு சுக பிரசவத்திற்கு பணம் தராமலும் அறுவை சிகிச்சைக்கு மட்டும் பணம் தருவதும் சி-செக்சன் அதிகரிக்க ஒரு காரணம் என்கிறார் OP ஜிண்டால் பல்கலையைச் சேர்ந்த முகோபாத்யாய்.

“சி-செக்சன் அறுவை சிகிச்சை செய்வதற்கு கிடைக்கின்ற இழப்பீட்டு தொகையைப் போல சுக பிரசவத்திற்கு எதுவும் கிடைப்பதில்லை.தனியார் மருத்துவமனைகளில் சராசரியாக 55 சதவிகித அறுவை சிகிச்சைகள் காப்பீட்டு திட்டங்களின் கீழ் நடக்கின்றன. இதுவே பொது மருத்துவமனைகளில் 17 சதவிகிதம் காப்பீட்டு திட்டங்களின் கீழ் நடக்கின்றன” என்கிறார் முகோபாத்யாய்.

மேலும் சி-செக்சன் மக்களுக்கு பெரும் செலவினமாக இருக்கிறது. ஐ.ஐ.எம் அகமதாபாத் நடத்திய ஆய்வின் படி தனியார் மருத்துவமனையில் சுக பிரசவத்திற்கு ஆகின்ற செலவு 10,814. ஆனால் சி-செக்சன் அறுவை சிகிச்சைக்கு ஆகின்ற செலவானது 23,978.

“எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டு விடக் கூடாதென்பதால் தீவிர கண்காணிப்பினாலும் பொது மருத்துவமனைகளில் சி-செக்சன் அறுவை சிகிச்சை தேர்வு செய்யப்படுகிறது என பொது துறை மருத்துவர்கள் கூறுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்வதால் அவர்களுக்கு ஊக்கத் தொகை எதுவும் கிடைக்காவிட்டாலும் கூட அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டு அதனால் வருகின்ற விளைவுகளை தவிர்க்கவே சி-செக்சனை தேர்ந்து எடுக்கிறார்கள்” என்கிறார் சுபஸ்ரீ.

ஆய்வுகள் சொல்லும் உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோள் :

உலக சுகாதார நிறுவனம் சிசேரியன் பிறப்பு விகிதத்திற்கு வைத்திருக்கிற அளவுகோலிற்கு மேலே தான் இந்தியா இருக்கிறது என்று மருத்துவ ஆய்வறிக்கை குழுமமான ஜாமா (Jama) வின் ஆய்வறிக்கை சொல்கிறது. அளவு கோளான 15 சதவிகிதத்தை இந்தியா எப்போதோ கடந்து விட்டது என்று நிறைவு செய்கிறது அந்த ஆய்வு.

2018-2019 இல் இந்தியாவில் நடந்த மொத்த பிரசவங்களில் 20 சதவிகிதம் சி-செக்சன் அறுவை சிகிச்சை பிரசவங்கள். கடந்த 2017-2018 இல் 18.7 சதவிகிதம் சி-செக்சன் அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடந்திருக்கின்றன. இது நெதர்லாந்து,பின்லாந்து நாடுகளை ஒப்பிடுகையில் அதிகமானதாகவே தெரிகிறது. 2008-2009இல் இதன் விகிதம் வெறும் 8.9 சதவிகிதம்.

பிரெஞ்ச் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் (FRID)
நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் 2010 லிருந்து 2016 வரைக்கும் 18 லட்சம் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருக்கின்றன. இதில் வசதி படைத்த, முன்னேறிய மேல்தட்டு மக்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனினும் இந்தியாவில் இரட்டை நிலை நிலவுகிறது. சி-செக்சன் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு வசதியற்ற எளிய மக்களும் இருக்கிறார்கள். மேலதிகமான அறுவை சிகிச்சை பிரசவங்களை செய்து கொள்ளும் வசதி படைத்த மக்களும் இருக்கிறார்கள்.

இதே கால கட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களிடத்தில் வெறும் 5 லட்சம் குழந்தைகளே அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருக்கின்றன. இங்கு பெரும்பாலும் வீட்டுப் பிரசவங்களே நடந்திருக்கின்றன. வீட்டுப் பிரசவங்களை விட சி-செக்சன் அறுவை சிகிச்சை பிரசவங்கள் குறைவாகவே நடந்திருக்கின்றன என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மூலக்கட்டுரை இணைப்பு கீழே :
https://theprint.in/health/caesarean-deliveries-have-become-an-epidemic-in-india-record-300-jump-in-last-decade/334291/.

மொழியாக்கக் கட்டுரை வெளியீடு:
அறிஞர் தொ.பரமசிவன் வாசகர் வட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக