புதன், 20 மே, 2020

எருமைப்பட்டி கோவிந்தன் கோவில்: உள்ளூர் வரலாறு. :- உதியன் பெருஞ்சேரலாதன்.


அழகர் மலையான் கோவிலிலிருந்து ஒரு தம்பட்டம் மாட்டை ஓட்டிக்கொண்டு பல மாதங்கள் கடந்துபோக ஊர் ஊராகப் பயணப்பட்டே வந்திருந்தார் அந்த முதியவர். வைகைத் தண்ணீர் ஆர்ப்பரித்து வரும்போது அதன் கோபத்தைத் தணிக்கும்
கூத்தன் கால்வாய். அருகில் நான்கைந்து வீடுகள் அமையப்பெற்ற உழைக்கும் உழுகுடிமக்கள் மட்டுமே வாழும் அழகானதான எருமைப்பட்டி எனும் ஊரின் வடமேற்குத் திசையில் அந்த முதியவர் வந்து அமர்ந்திருந்தார்.

அவ்வூரில் ஒன்பது பெண் பிள்ளைகளோடு ஓர் ஆணும் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் மாயழகன். இவருக்கு மூத்தவர்களாக பெரிய ராமாயி, சின்ன ராமாயி, பெரிய சிட்டு, சின்னச் சிட்டு, பெரிய சிவனி, சின்னச் சிவனி, சின்னச் சாத்தி, பெரிய சாத்தி, இருளாயி போன்றவர்கள் அவ்வூரில் வாழ்ந்து வந்தனர்.

அந்த முதியவர் ஓட்டிவந்த தம்பட்ட மாடு பார்ப்பதற்குத் தேவலோகப் பசுவை போன்று இருந்தது. மேலாடை பொருத்தப்பட்ட வெள்ளை நிற மாடு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வளைந்த வாள்போல் அமைந்த கொம்பில் வண்ணத் துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு நெற்றியில் ஒரு ராமம் பூசப்பட்டிருக்கும். தம்பட்ட மாட்டை அவ்வூரிலுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்துப் பார்த்து மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.

அம்முதியவர் தம்பட்டம் மாட்டை ஓட்டிக்கொண்டு மாயாவதாரனின் புகழைப் பாடிக் கொண்டும், ஒவ்வொரு வீட்டின் முற்றத்தில் அருள்வாக்கு கூறிக் கொண்டும் அம்முதியவர் வலம் வந்தார்.

அவரின் இசைப் பாடலுக்கு ஏற்ப சிறு பறையைக் கொட்டும்போது தம்பட்ட மாடு தலையாட்டும்....வீட்டில் உள்ள பெண்மணிகள் சொளகில் கொண்டுவரப்பட்ட நெல் மணியைத் தன் நாவால் தடவும். மீதி உள்ள நெல்மணிகளைத் தன் தோளில் கிடக்கும் தானியப் பையில் முதியவர் போட்டு வைத்துக் கொள்வார்.

ஒவ்வொரு வீட்டின் முன்பும் கோவிந்தனின் பெருமையையும் கோவிந்தனின் அவதாரத்தையும் கோவிந்தனின் புகழையும் இசைபாடி சிறுபறை கொட்டி அருள்வாக்கு கூறுவார் அந்த முதியவர். இப்படித்தான் அந்த முதியவர் ஊரில் வாழ்ந்து வந்தார்.

தன் கையில் பிறம்பு ஒன்று வைத்திருப்பார். அது பார்ப்பதற்குக் கமண்டலம் போலப் பெரிதாக இருக்கும். அந்தக் கம்பின் இரு பகுதிகளிலும் அவர் வைத்திருந்த உடமைப் பொருள்களைத் தொங்க விட்டிருப்பார். மாட்டின் கயிற்றை அடிப்பகுதியில் கட்டியிருப்பார். கோணிப் பையில் தலைவைத்து முனிவர் போலத் தவக்கோலம் கொண்டிருப்பார் அந்த முதியவர்.

இரவு முடிந்து காலைப்பொழுது வந்தவுடன் வேறு ஊருக்குப் புறப்படும் நோக்கம் கொண்டு கிளம்பினார். கையில் பைகளையும் மாட்டின் கயிற்றையும் எடுத்துக்கொண்டு ஊன்றிய பிரம்பைப் புடுங்க...பிரம்பை அவரால் அசைக்கக் கூட முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை. இறைவனை நினைத்து வேண்ட அருள் வந்து ஆடினார் அந்த முதியவர்.

அருள் ஆடிய அந்த முதியவர், நான்தான்டா கோவிந்தன் வந்திருக்கேன். குடிகளைக் காக்க கோவிந்தை வந்து இருக்கேன்டா. சித்திரை மாதம் திரியாட்டு எடுத்து அருள்வாக்கு கூறி அழகர் மலைக்கு வாங்கடா..வாழ்வாங்கு வாழ நான் வழிகாட்டுறேன்டா...என்று ஆக்ரோசமா அருள்வாக்கு கூறி முதியவர் திடீரெனக் காணாமல் போனார்.

அவ்வூரில் வாழ்ந்த மாயழகனுக்கு கோவிந்தன் அருள் கிடைக்க, கோடாங்கியாக மாறி அருள்வாக்கு வழங்கினார். சேதுபதி ராஜா அரண்மனையில் நாட்டிலுள்ள கோடாங்கிகளை எல்லாம் அழைத்து வந்து அடைத்து வைத்திருந்தனர். நீண்ட தலைமுடி, நெற்றியில் விபூதிப் பட்டை, சந்தனப் பொட்டின் மீது குங்குமம், கழுத்தில் நிறைய ருத்ராட்ச கொட்டை அடுக்கிய மாலை, இடுப்பில் காவி வேட்டி வேட்டி நழுவாமல் இருக்க இருக்கிக் கட்டியத் துண்டு...பூஜைக்குரிய பொருட்கள் அடங்கிய சிறு பை. அகலமாய் அமர்ந்திருந்தனர் கோடாங்கிகள்.

ஒவ்வொருவரும் மரண பயத்துடன் உட்கார்ந்து இருந்தனர். ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை. அரண்மனையின் அமைச்சர் வந்தார். நம்ம ராசா வீட்டில் ஒரு சில நாட்களாகத் துன்பமாக இருக்கிறது. அது என்ன? எதனால் நிகழ்ந்தது? தெய்வ குத்தம் ஏதேனும் உண்டா? வேறு என்ன? இதனை நீக்குவதற்கு என்ன பரிகாரம் இருக்கு? என்பதை நீங்க சொல்லணும்.....என்றார் கறாராக.

குறி சரியாகச் சொல்லாத கோடாங்கி சாட்டையால் பதம்பார்த்து அனுப்பினர் அரண்மனைக் காவலர்கள். போலிக் கோடாங்கிகள் ஓட்டம் பிடித்தனர். அரண்மனை வெறிச்சோடியது. ராசாவின் முகம் மட்டும் சோகம் படர்ந்து அப்பிக் கிடந்தது. ராணியின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருப்பதைக் கண்ட அரண்மனை மருத்துவன், சாமி...எருமைப்பட்டி மாயழகன் என்கிற ஒரு கோடாங்கி இருக்கானாம்....அவன கூட்டிட்டு வந்தா எல்லாம் சரியாயிடும் என்று அக்கம்பக்கத்துல பேசுகிறார்கள் என்று ராசாவுடன் கோரிக்கை வைக்க, குதிரை வண்டி எருமைப்பட்டி வந்து சேர்ந்தது.

ராசாவின் கட்டளை. உடனே அரண்மனைக்கு வாங்க என்று குதிரை வண்டியில் வந்து இறங்கிய காவலாளி சொன்னான். ராசாவின் கட்டளையை ஏற்ற கோடாங்கி மாயழகன், நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு கோரிக்கையும் பையையும் எடுத்துக் கொண்டு குதிரை வண்டியில் அமர, புயல் வேகத்தில் அரண்மனை வாயிலை அடைந்தது குதிரைவண்டி.

அரண்மனையே மாயழகு கோடாங்கியின் வருகைக்கு மட்டுமே காத்து கிடந்தது. ராசாவின் முகத்தில் சோக ரேகைகள் படர்ந்து கிடந்தது. அரண்மனையின் ஆசனம் போடப்பட்டது. ஆனால் கோடாங்கி மாயழகு ஆசனத்தில் அமர வில்லை. தான் கொண்டுவந்த கோணிப் பையை எடுத்து தரையில் விரித்தார். மதுரை அழகர் மலையானை நோக்கி உட்கார்ந்து, கையில் சோதியை இறுக்கிப் பிடித்து தரையில் உருட்டினார். இரண்டு மூன்று தடவை சோதி தரையில் உருண்டு செய்தி சொன்னது கோடாங்கிக்கு ...

அரண்மனையைச் சுற்றிப் பார்த்தேன் கோளாறு இல்ல. ராணிக்கு சேதாரம் வந்திருக்கு.... உடலில் கோளாறு...வாளையாய் கட்டி இறைக்குது...நோயைச் சொல்லி நோய்க்கு மருந்தும் சொல்லி குறி சொல்லி முடித்து திருநீற்றைக் கொடுத்து ராணிக்குப் பூசுங்க ராஜா என்று திருநீற்றை அள்ளிக் கொடுத்தார் கோடாங்கி மாயழகன்.

திருநீற்றைப் பூசிய சில நொடிகளில் ராணி எழுந்து நடந்தாள்...அரண்மனையே இன்பத்தில் திளைத்தது. ராசாவுக்கு ஒரே மகிழ்ச்சி கோடாங்கி மாயழகனை கட்டிப்பிடித்துத் தழுவினார்.உனக்கு என்ன வேணும் கேளுங்க சாமி என் நாட்டில் ஒரு பகுதியைத் தருகிறேன் என்று ராசா கோடாங்கியிடம் சொன்னார்.

எனக்கு எதுவும் வேண்டாம் ராஜா....நீங்க நல்லா இருந்தா போதும். நாடு நல்ல வளம் பெருகும். கோவிந்தன் அருளால் அவ்வளவுதான். உங்க நினைவா அரண்மனைப் பொருளான வெண்கலக் குவளை மட்டும் போதும் ராசா என்று சொன்ன கோடாங்கி மாயழகன், கோணிப் பையை எடுத்துச் சுருட்டிக்கொண்டு ஒரு பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு அரண்மனை வாயிலைக் கடந்து சாரட் வண்டியில் ஏறி அமர்ந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு எருமைப்பட்டிக்கு திடீர் விஜயம் செய்தார் ராசா. கோவிந்தனுக்குக் கோயில் எடுத்தான். கல்லில் சிலை வடிக்காது, கரையானால் அழிக்கப்படாத
மரச்சிலையைக் குதிரையில் அமர்ந்த நிலையில் கோவிந்தனுக்குச் சிலை வைத்தான். கோடாங்கி மாயழகனுக்குக் கற்சிலையால் சிலை வைத்துத் தன் நன்றிக்கடனைச் செய்து முடித்தார் ராசா என்றும், கோவிந்தன் 400 ஆண்டுகளுக்கு மேல் எருமைப்பட்டியில்இருந்து எல்லா மக்களையும் காத்து நிற்கின்றான் வெயிலிலும் மழையிலும் நனைந்தபடி...கொண்டையிட்ட தலையுடனும் கும்பிட்ட கைகளுடனும் கோடாங்கி மாயழகன் வட மேற்குத் திசையில் இருக்கும் அழகர்மலையில் வாழும் கோவிந்தனை வணங்கியபடி காட்சி தருகிறார்.

தகவல்: மா.வேலுச்சாமி, கருங்கலக்குறிச்சி.
இவர் அழகர்மலையான் கோவிந்தனுக்குத் திரியாட்டு எடுத்தவர்.

1 கருத்து:

  1. என் பூர்விகம் எருமைப்பட்டி... அங்கு வாழ்ந்தவர்கள் எருமைகள் மேய்க கூடிய கோட்டினத்து இடையர்கள்

    பதிலளிநீக்கு