சனி, 9 மே, 2020

குதிரை வீரன் அழகம்மாள் காதல்: உள்ளூர்க் கதை வழக்காறும் வரலாறும்:- உதியன் பெருஞ்சேரலாதன்

உலகம் இருக்கும் வரை காதல் இருந்து கொண்டே இருக்கும்;காதல் இருக்கும் வரை உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும் என்பதற்கு எங்களூர் எல்லைச் சாமிகளே சாட்சி.
அவர்களைப் பற்றியகதை அதைத்தான் வரலாறாய்ச் சொல்கிறது.

அப்படித்தான், குதிரைப்படை வீரனுக்கும் செல்வச் சீமாட்டியாக வளர்ந்துவந்த அழகம்மாளுக்கும் காதல் அரும்பத் தொடங்கியது. அழகம்மாள் அழகில் மட்டும் அல்ல; சகல அந்தஸ்திலும் ஏழு அண்ணன்மார்கள் புடைசூழ வளமான வாழ்வை வாழ்ந்து வந்தவள்.

நாடாண்ட மன்னவனுக்குச் சேவகம் செய்யும் குதிரை வீரன் ஒருவன் அழகம்மாள் வாழும் வீதியில் தினமும் சென்று வருவது வாடிக்கை தான். அளவான உயரம்... அடுக்கடுக்கான கட்டுடம்பு.... கொண்டையிட்ட தலைமுடி. கூடவே ஒரு வேட்டை நாய். இப்படித்தான் அந்தக் குதிரை வீரன் காட்சியளித்தான்.

கலைந்த கூந்தலைக் காயவைக்க மாடியில் தோழிகளோடு உலாவரும் அழகம்மாளின் கண்களுக்குக் குதிரை வீரனின் தோற்றம் கண்ணுக்குள் புகுந்தது....
அதோடு மட்டுமல்ல; பருவப் பெண்ணல்லவோ அழகம்மாள். அவளைப் பாடாய் படுத்தியது குதிரை வீரனின் நினைவு. காதல் அவஸ்தை அனைத்தையும் பெற்று ஆண்டாளாகவே மாறினாள் அழகம்மாள்.

தோழியைத் தூது விட்டாள்... துயரத்தை முதன் முதலில் சந்தித்தாள். காதலைக் குதிரைவீரன் ஏற்கவில்லை. மறுமுறை தூது விட்டால் அழகம்மாள்.... குதிரைவீரன் நேரில் பார்க்க வருகிறேன் என்று தோழியிடம் கூறி விடைபெற்றான்.

மறுநாள் மாலை வேளை, அந்த வனப்பகுதியில் அவளைச் சந்திப்பதாக மடல் கொடுத்தான் குதிரை வீரன். மடல் கிடைத்த மகிழ்ச்சியில் அழகம்மாள் அதிக அழகானாள். நந்தவனத் தோழிகள் புடைசூழ நர்த்தனம் புரிந்தது. குதிரைவீரன் வருகை புரிந்தார். குதிரை, உடைவாள், நாய் இவற்றுடன்....

அழகம்மாள் இந்திரலோகத்து இளவரசியாய் அழகின் கொடையாய் ஒய்யார நடை பயின்று நாணத்துடனும் மடத்துடனும் முகம் மறைத்து நிலாப் பெண்ணாய் முகம் காட்டினாள். குதிரை வீரனுக்குப் பெருமகிழ்ச்சி.. அழகை ஆராதனை செய்கின்றான் தன் கண்களால். முடிவு செய்துவிட்டான் குதிரைவீரன். வாழ்ந்தால் இவளுடன் மட்டுமே என முடிவாகிவிட்டது.

அவளிடம், என்னுடன் வந்துவிடு என்றான். அவளும் சம்மதித்தாள். குதிரையில் வைத்துக் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதியை நோக்கி குதிரை ஏறிச் செலுத்தினான். குதிரை வீரன், அழகம்மாள் உடன் கூடவே நாயும் விரைந்து ஓடி வந்தது.

இளைப்பாறவும் ஓய்வெடுக்கவும் வெங்கலக் குறிச்சிக் கண்மாய்க்குள் இருவரும் தஞ்சம் ஆனார்கள். நாணல்கள் சூழ்ந்த இடம். நாட்டுக் கருவேல மரங்கள் அரணாகப் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து இருவரும் துயில் கொண்டனர்.

அப்போது, சாரட் வண்டியில் இருந்து இறங்கி ஓடி வந்த ஏழு பேரும், அழகம்மாளையும் குதிரை வீரனையும் கண்டறிந்தனர். அவிழ்ந்திருந்த கூந்தல் பூமிக்குக் குடை  விரித்து இருந்த கார் கூந்தலைப் பிடித்து அரிவாளால் ஒரே வெட்டு. குடைசாய்ந்தாள் அழகம்மாள் பூமியில். அலறித் துடித்தான் குதிரைவீரன். உடைவாளை எடுத்து எழுவரையும் காயப்படுத்தினான். அழகம்மாளின் உடன்பிறந்தவர்கள் என்பதற்காகவே உயிருடன் தப்பிப் பிழைத்தார்கள் அவர்கள்.

குருதி ஓடிய நிலையில் மயங்கிக் கிடந்த அழகம்மாளைத் தன் தோளில் கிடத்திக்கொண்டு ஆட்கள் உள்ள இடத்தை நோக்கி ஓடிவந்தான் குதிரை வீரன். கண்மாய்க் கரையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடையனைக் கண்டு அலறியபடி தண்ணீர் கேட்க, அவனோ பயந்து தண்ணீர் இல்லை என்று ஆட்டின் பாலைக் கொடுக்க முன்வந்தான். பால் அருந்திய நிலையில் அழகம்மாள் இடையனை நோக்கி உன் குலம் வாழ்க என்றாள் கண்ணீர் மல்க...காதலனைக் கட்டி அணைத்து முத்தம் இட்டு மடிந்தாள்அழகம்மாள்.

தன் உடைவாளை எடுத்து, குதிரையையும் நாயையும் வெட்டிச் சாய்த்துவிட்டு, தன் உடைவாளை நெஞ்சில் சொருகினான் குதிரைவீரன்.

சாதி மதம் பார்க்கும் காதல் கொலைஞர்கள் அந்தஸ்தும் பார்த்தார்கள் அழகம்மாளின் காதலில் ...

வன் கொலையாய் மரணித்த அழகம்மாளும் குதிரை வீரனும் ஊரைக் காக்கும் எல்லைச் சாமிகளாயினர் என்ற உள்ளூர்க் கதை, காலங்காலமாக வழங்கி வருகின்றது.

காதலர்கள் வாழவில்லை; காதல் சாகவில்லை என்பதை, எல்லைச் சாமிகளாக மக்கள் வழிபடும்  குதிரைவீரன் அழகம்மாள் பற்றிய வழக்காற்றுக் கதை உணர்த்திக் கொண்டிருக்கிறது.

//ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், வெங்கலக் குறிச்சி ஊராட்சி, வெங்கலக் குறிச்சியில் அமைந்துள்ள அழகம்மாள் கோவில் கதை.//

-உதியன் பெருஞ்சேரலாதன்.
09.05.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 09.05.2020 /

வெள்ளி, 8 மே, 2020

வசுமித்ர - இலக்கியம் - இடதுசாரி : ப.பிரபாகரன்

அம்பேத்கரின் அறிவுத்தேடல் என்பது, புத்தரின் ஆண்குறியை மட்டுமே வரம்பாகக் கொண்டிருந்தது எனும் வசையில் நீங்கள் இலக்கியம் லயித்தால், இடதின் சாரம் துய்த்தால் நீங்கள் தான் வசுமித்ர. கவனிக்கவும் வசுமித்ரா அல்ல. ஏனெனில் வசுமித்ரா என்பது மார்க்ஸோடு புனிதம் உய்க்கத் தடை செய்தலின் பொருட்டில் வார்த்தெடுக்கப்பட்டதாய் கருதப்படுகிறது.

குறி மடக்கல்
இந்திரியம்
முலை
பை நாகம்
யோனிப்பழம்
எமனின் காமம்
எருமையைப் புணர்தல்
காளியைப் புணர்வதில் ஆகச்சிறத்தல்
காந்திய ஊதொலி
-இவையெல்லாம் இலக்கியம் என்றால், கவிதை என்றால், அந்த எழவு வீட்டுப் பிணத்தின் தலைமாட்டு நெல் மரக்கால் எனக்குத் தேவையில்லை. நீங்களே பொங்கித் தின்றுவிடுங்கள்.

செழிப்பும் மனக்கொழுப்பும் மிக்க புத்திஜீவியாகிய நீங்கள் மக்களுக்கு வகுப்பெடுக்கத் தயாரென்றால் எதுவும் பேசலாம். உங்களை ஒரு குழு மேடையேற்றும். அதில் நீங்கள் மினுக்கும் மார்க்சியத்தை மெச்சி முகரலாம். எதிர்பார்த்தபடி கம்யூனிச அறிஞர் பட்டத்தையும் தட்டிச்செல்லலாம்.

இதற்குப்பிறகும் நீங்கள் பிரபலமாக ஆசைப்பட்டால்,
ரெண்டு பீரை வாங்கி வரும் நுரையின் சூத்திரமென்ன? எனும் தத்துவார்த்த வேள்விகளில் உங்களின் மதிப்புமிகு சலைவாக்களை ஒழுக விட்டு ஆய்வு செய்யலாமே தவிர, யார் குறியில் அம்பேத்கர் அறிவைத்தேடினார் என்று அந்தரங்கச்சுவை நாடும் உங்கள் ஆழ் மனதின் அடக்கி வைக்கப்பட்ட மலங்களின் நாற்றமெடுத்த வாயுக்களைப் பிடுங்கி விடத்தேவையில்லை. ஏனெனில் அது உங்கள் உடலில் ஊறிப்பெருகி உங்களை மட்டும் அழித்துக்கொள்ளும் சாதிய ஊதல். அதற்கு நாங்கள் பலிபடையல் ஆக முடியாது.

அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகள், புத்தத் தேடல் போன்றவற்றில் விமர்சனமிருந்தால் விவாதமாக முன் வைக்கலாம். மாறாக, அவதூறு செய்தால் நாங்களும் பதிலுக்கு ஏதாவது செய்வோம். ஆனால், அது நிச்சயம் அவதூறாக இருக்காது. உங்களை அம்பலப்படுத்துவதாக அமையும்.

கம்யூனிச புத்திஜீவிகள் என உங்களுக்கு நீங்களே பட்டம் கொடுத்துக்கொண்டு, ஊடக வெளிச்சத்தில் ததும்பி நிற்கும் மூளைக் கதுப்புகளின் விஞ்ஞான சமிக்ஞைகளையெல்லாம் எங்களை நோக்கி ஏவி விடும் நீங்கள் உண்மையான இடதுசாரித் தோழர்களை அறிவீர்களா?

உடல் அளவுக்குப் பொருந்தாத பழைய ஆடைகளை அணிந்து, தானாக முடிவெட்டி சவரம் செய்து, பேருந்துக் காசை மிச்சம் பிடித்து, போகுமிடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பசியாறி, எளிய வாழ்க்கை வாழ்ந்து, அவர்களுக்காக அரச பயங்கரத்தையும் ஆதிக்க சாதி வெறியையும் எதிர்த்து, சமரசமின்றி போராடி, வெட்டப்பட்டுச் செத்துப்போன பிறகும் இன்றுவரை அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் அவர்கள்.

படிப்பை உதறி, உடல்சுகம் உதறி, சொந்தபந்தம் சொத்துசுகம் அனைத்தையும் துறந்து தியாகியானவர்களே கம்யூனிஸ்டுகள்.

தோழர் தமிழரசனைத் தெரியுமா?

விழுப்புரத்திலிருந்து சென்னை வரை நடந்தே சென்றவர். பச்சை வாழைக்காயைச் சுட்டுத தின்று பசியாறியவர். மீன்சுருட்டி அறிக்கையில் சாதியொழிப்பைப் பேசி காடுவெட்டி குருவையே குலைநடுங்கச் செய்தவர். அவரையே இதுநாள் வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் கம்யூனிஸ்ட்டாக ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜூலியஸ் ஃபூசிக் தன் பன்னிரண்டு வயதில் கவிதை பாடி அரசியல் பேசியவன்.
அவன் சொல்கிறான்.
"கம்யூனிஸ்டுகள் தனித் தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள். ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக மாறவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்"
-சொல்லியபடியே தூக்கிலேறி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து செக்கோஸ்லேவியாவுக்காகச் செத்து போனான்.

அவன் ஒரு போதும் உங்களைப்போல் யோனியின் கரு, பூ, பிஞ்சு, காய், பழம், அழுகல் எனும் இலக்கியங்களுக்குள் திளைத்துப்போகவில்லை. மாறாக காவல் படையின் குண்டாந்தடி அடிகளை வாங்கி முகம் உடைந்த பின்பும் எதிர்த்து முழங்கினான்
"போலீஸ் அராஜகம் ஒழிக" என்று..!!

உலகம் போற்றும் 'எர்னஸ்டோ சே குவேரா'வைச் கூட கட்சியில் வேலை செய்யாதவர் எனும் விமர்சனம் செய்வோர் உண்டு.

நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாவிட்டாலும், இது போன்ற எண்ணிலடங்கா தியாகத் தோழர்களின் வரலாறு தெரிந்திருப்பதால்தான் இன்னமும் இடதுசாரி ஆதரவாளராக உள்ளேன்.

ஆனால், அவர்களையே விஞ்சும் வகையில் மார்க்சியம் பேசும் நீங்களெல்லாம் உங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று கூறிக்கொள்வதுதான் என் போன்றோரைக் கெக்கலிக்க வைக்கிறது.

அப்படிப்பட்ட பாரம்பரியம் வாய்ந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உள்ள தோழர்களே அம்பேத்கரை சரியான அளவுகோளில் அணுகும்போது, ஆபாச அவதூறு கிளப்பும் வசுமித்ரவோ மற்றுமவனை ஆதரிக்கும் இடதுகளோ
முத்துராமலிங்கத்தையோ, காந்தியையோ, திலகரையோ, படேலையோ, ராமதாசையோ, யுவராஜையோ, இன்னும் பல சாதிப்புழுக்களையோ நாகரிகச் சொற்களைக் கொண்டாவது விமர்சித்திருக்கிறீர்களா?

மாட்டீர்கள். ஆனாலும், நீங்கள் கம்யூனிஸ்டுகள் என்று பீற்றிக்கொண்டு உயர்தர நிறுவனத்துச் செஞ்சட்டைகளணிந்து காணொளிக் காட்சிகள் மூலம் வகுப்புகள் எனும் பெயரில் தூய்மைவாதம் பேசுகிறீர்களே, அந்தப் பேச்சு என்றாவது உங்களைப் பரிசுத்தப்படுத்துமா பேச்சு வியாபாரிகளே?

பறைசாதி வெறியர்கள், தலித்திய அறிவிலிகள் என்று கவிஞ முகமணிந்து முயங்கிப்பெறும் காமத்திளைப்பில் கம்யூனிசம் கண்டடைந்த நீங்கள், உங்களின் தனியான கழிவறையில் மலத்துவாரத்தைச் சிறுதுளை நீர் பீய்ச்சான் கொண்டு சுத்தப்படுத்துவதைத் தவிர்த்து, வாய்க்கொப்பளித்து விழுங்கி, குளித்துத் துவைத்து செடிக்கூற்றிப் பறித்துச் சமைக்கும் ஏரித்தண்ணீர் விளைவித்த கத்தரிக்காய் குழம்பை ரேஷன் அரிசிச்சோற்றில் பிசைந்து சாப்பிடுவீர்களா?

நாங்கள் கம்யூனிஸ்ட் வரலாற்றில் புது வடை சுடுகிறோம் எனும் ஆன்லைன் ஆர்ப்பாட்டக்காரர்களே! நீங்கள் உயர்தர சானிட்டரி பேட் தவிர்த்து பிறப்புறுப்பில் பீறிடும் உதிரம் உறிஞ்ச ஃபுல் வாயில் புடவைகளைக் கிழித்துப் பொருத்தி கட்டிட வேலை செய்திருக்கிறீர்களா?

நீர்க்கடுப்பில் குறி வலித்து கொட்டை வீங்கி யூனிட் கணக்கில் ஜல்லியை அள்ளி விட்டிருக்கிறீர்களா?

கல்யாண மண்டபத்தில் வியர்வதை வழித்து, பாத்திரங்கள் கழுவி இருநூறு வாங்கி கைகளில் சொறி வந்து நொந்திருக்கிறீர்களா?

காய்கறி மார்க்கெட்டுகளில் இடுப்பெலும்பு முறியுமளவு மூட்டைகள் தூக்கியிருக்கிறீர்களா?

இன்னும் எத்தனையோ உழைக்கும் வெளிகளில் மூத்திர வாடையோடு வாழ்ந்திருக்கிறீர்களா?

இதை வாசிக்கும்போதுதான் உங்களுக்கு இவை அறிமுகமே ஆகியிருக்கும்.

ஆனாலும், நீங்கள்தான் கம்யூனிஸ்டுகள் உயர்தர செல்பேசியில் உயர்தனிச் செம்மொழிகளில் அம்பேத்கரை குறிபாடும் தூய இடதுசாரிகளாகிய நீங்கள்தான் புரட்சி செய்யப்போகிறீர்கள்? நீங்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளை நோண்டப்போகிறீர்கள்.?

சங் பரிவார் குறிகளால் குத்திக்கிழிக்கப்படும் சிறுபான்மை மக்களின் உடல்களைப் பற்றி பேசாதவர்கள், பழங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்துப் பதறாதவர்கள், குறி கொண்டு அம்பேத்கரிய வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனாலும், நீங்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்து வேலை செய்ய மாட்டீர்கள். நீங்கள் பதிப்பகம் வைத்திருப்பீர்கள். நீங்கள் புத்தகம் எழுதுவீர்கள். நீங்கள் விருது கொடுப்பீர்கள். விருது வாங்குவீர்கள். கம்யூனிஸ்ட் கட்சியினருக்கே பாடம் நடத்துவீர்கள். உங்களை அவர்களும் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

உங்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

"நீங்கள்லாம் கம்யூனிஸ்ட் கெடையாது. எந்தக் கட்சிலயும் சேராம உடம்ப வருத்தி ஒழைக்காம வாயாலயே ஓலா உட்டு ஓத்ஸ் சாப்புடுறவனுங்க.. உங்க எழுத்துக்கொழுப்புக்கெல்லாம் உச்சம் தேவைப்பட்டா குழி பறிச்சி குறியைப் பொதச்சிக்கிங்க. அத விட்டுட்டு புக்க படி, கவிதையப் படின்னு ஆபாச குருத்துகளுக்கு உரம் வேண்டி வாதம் பண்ணினா, நீ எழுதினத நான் ஏண்டா படிக்கணும்னுதான் பதில் கேள்வி கேப்பேன்."

அப்புறம்,

அம்பேத்கர் எட்டாயிரம் ரூபாய் கொடுத்துத் தங்கத்திலான குர்-ஆன் வாங்கினார்;
கார் வைத்திருந்தார்; கோட், தொப்பி அணிந்திருந்தார்; மாடி வீடு கட்டினார்; கடைசி வரை அரச நட்புக்களிடம் நற்சார்பு கொண்டிருந்தார்
-எனச் சொல்லும் யோக்கியவான்களே! பெரியாரைப் பேசுபவர்கள், அவர் சொன்ன எளிமையான வாழ்வை வாழ்கின்றனரா? மார்க்ஸைப் பின்பற்றுபவர்கள் முழு கம்யூனிச தியாக வாழ்வை வாழ்கின்றனரா?
இவர்களிடம் செல்லுபடியாகாத உங்கள் கோபம் அம்பேத்கரிடம் மட்டும் குறி கொள்ளுமென்றால் உங்களுக்கோர் பதிலுண்டு.

ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த அம்பேத்கரும் சரி, அவரால் உரிமை பெற்ற நாங்களும் சரி, இந்திய அரசால் சாதிய சக்திகளால் அனுபவித்த கொடுமைகள் இன்னமும் முழுமையாக நீங்காமல் தொடர்ந்து கொண்டேதான் சகித்து வாழ்கிறோம். இட ஒதுக்கீடு மூலம் கல்வி பெற்று இன்னமும் நூறாண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் எங்களைத் தூய்மை வாழ்க்கை வாழ, தியாக வாழ்க்கை வாழ, வறுமை வாழ்க்கை வாழ, கம்யூனிசத்தின் பெயரால் பணிப்பீர்களேயானால் உங்களை நீங்களே திருப்பிக் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட்தானா என்று..

"நாங்க எப்பதாண்டா நல்ல சட்ட போட்டு நல்ல சோறு திங்கிறது?

உங்களை நான் நன்கறிவேன்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு வாட்சப் குழுவில் வகுப்பெடுத்துக் கொண்டிருப்பீர்கள். கட்சிப்பணி ஆற்ற முடியவில்லையென உங்கள் அடிப்பொடிகளிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி அடையாளம் பெறுவீர்கள். சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பிரபலம் ஆவீர்கள். ஆனால் ஒரு போதும் கம்யூனிஸ்ட் ஆக மாட்டீர்கள்.

ஆனால் தலித்துகளுக்கு மட்டும் பாடமெடுப்பீர்கள்.. உங்களைப் பற்றி கட்சி கம்யூனிஸ்ட்டுகள்தான் கண்டித்து எழுத வேண்டும். ஆனால், அவர்கள் உங்கள் நண்பர்களாக இருப்பார்கள். நீங்கள் இருக்கும்வரையில் இந்தியாவில் புரட்சி நிச்சயம் என்று நம்புபவர்கள் அவர்கள்.

இங்கே உங்களைப்போன்ற கழிசடைகளை ஆதரிக்கும் சில கட்சி கம்யூனிஸ்டுகளை இப்போது நாங்கள் அடையாளம் காண்கிறோம். இவர்களை இனி புரட்சிக்கான புண்ணியவான்கள் என்று கருதி இந்தியாவை இவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நாம் ஏதேனும் தமிழ்ப்படம் பார்த்து விமர்சனம் எழுதிக்கொள்வதே உத்தமம். அந்தளவுக்கு 'பிளக்க வாசிப்பவர்கள்''
சாமுவேல் போன்ற தோழர்களையே தலித்திய சாதிவெறியன் என்று முத்திரை குத்திப் பேசுபவர்களைக்கூட அமைதியாகக் கடந்து போகிறவர்கள்.

ஆனாலும், சில உண்மையான கம்யூனிஸ்டுகள் களத்தில் அதிகாரத்தை எதிர்த்துக் சமர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்குக் கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஆனால் வசுமித்ர கும்பலோ புத்தகம் விற்க அடையாளம் தேடுகிறது. லாபம் பார்த்தவர்கள் வேறென்ன செய்வார்கள்? அதற்கு அம்பேத்கர் தான் இம்முறை இவர்களின் தேர்வு என்றால்,
"வா, காத்திருக்கிறோம்..!!"

ப.பிரபாகரன்.
08.05.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 08.05.2020 /

நன்றி:
ஜின் அவர்களது முகநூல் பதிவு.

வியாழன், 7 மே, 2020

அப்பாவின் பூர்வீகத்துப் பெருங்கோபம்: அன்பு தவமணி


தாய் அறிமுகப்படுத்திதான் ஒரு குழந்தைக்கு அப்பாவைத் தெரியும் என்று சொல்லுவார்கள். தமிழ்ச் சமூகத்தில் இந்த மொழியைப் பரவலாக நாம் கேள்விப்பட்டிருப்போம். தமிழ் சினிமாவில் கூட நிறைய இதுபற்றிய உரையாடல்களும் பாடல்களும் வந்திருக்கிறது.

நான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் என்பது, என்னுடைய தந்தையின் ஊர் அல்ல. என் தாய் பிறந்த மண்ணில் தான் நான் பிறந்ததில் இருந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

தமிழ்ச் சமூகத்தில் ஒருவருக்குப்
பிறந்த மண்ணை விட்டுப் புலம் பெயர்ந்து போவது என்பது மிகவும் துயரமான சம்பவம். அதை ஏற்றுக் கொள்ள ஒவ்வொருவருடைய மனமும் மறுக்கத்தான் செய்யும். அந்த வகையில், என் தந்தைக்கு எப்படி இருந்ததோ என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே அவர்கள் அந்த இடத்தை விட்டுப் பிரிந்து செல்கிறார்கள் என்றால், அது உடலிலிருந்து உயிர் பிரிவதற்குத்தான் சமம்.

இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை நாம் கூற முடியும். குறிப்பாக, நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு நடந்ததையே கொள்ளலாம். இதுபோன்று பாலஸ்தீனம், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும், வறுமையின் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் நிறைய மக்கள் தான் பிறந்த இடத்தை விட்டுப் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். அவர்களுடைய மன நிலையை நாம் ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பிறப்பிடம் பற்றிய ரணம் இருக்கத்தான் செய்யும்.

அந்தவகையில், என்னுடைய பிறந்த ஊரில் இருந்து எனக்கு நிகழ்ந்த பிரிவு என்பது கொஞ்சம் விசித்திரமானது. அதனால் என்னவோ எனக்கு அந்த நெகிழ்வான தருணம் என்பது இல்லாமல் போய்விட்டது.

இன்னொரு வகையில், நாம் வாழும் நாடு என்பதும் தாய்நாடு, நாம் வாழும் பூமி என்பது தாய் பூமி, நம் பூமியில் ஓடும் நதிகள் என்பது பெண்பாற் பெயர்களாகவே உள்ளது .

இப்படி நம் சமூக அமைப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் நீங்கள் வாழ்வது தந்தையின் ஊராக இருக்க வேண்டும். சொத்து என்பதும் ஆண்களுக்கு வழங்கப்படும். சமூக அமைப்பும் ஆணாதிக்கச் சமூகமே. இது ஒருபுறம் இருக்க, எனக்குக் கிடைத்த வாய்ப்போ என் தாய் பிறந்த ஊரிலேயே நான் பிறந்து இருக்கிறேன்.

அதனால் எனக்கு அப்பா பிறந்த ஊர், அந்த ஊரின் மீதான நாட்டம், ஈர்ப்பு, பிடிப்பு என்று ஏதும் பெரிய அளவில் இல்லை.

ஒருவேளை, நான் தந்தை ஊரில் பிறந்து இருந்து, அங்கு கொஞ்ச காலம் வாழ்ந்து இருந்து, அதன் பிறகு தாய் ஊருக்கு வந்திருந்தால் எனக்கு அந்த வலியும் வேதனையும் எல்லோருக்கும் போல எனக்கும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னை ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்கு நகரத்திற்கு அழைத்துச் சென்றதுதான் அப்பாவைப் பற்றிய பெரிய அளவிலான நினைவு. அப்போ எனக்கு 10வயது . அதற்கு முன்பு வரை அவரைப்பற்றித் தெரியவில்லையா என்ற கேள்வி எழும். அப்படி என்றால் தெரியும். எப்படி தெரியும் ?

அவர் வெளியூர்களுக்குச் சென்று வேலை பார்த்து வரக்கூடியவர். ஒரு வாரம் அல்லது10 நாள் என்று வேலை பார்ப்பவர். விவசாயம் எந்தெந்த ஊர்களில் நடக்கிறதோ, அங்கெல்லாம் கதிர் அடித்த பிறகு அந்த வைக்கோல்களைக் கட்டி மாட்டு வண்டிகளில் கேரளாவிற்கு ஏற்றி விடும் வேலை. வேலை முடிந்து பாரம் ஏற்றிய மாட்டுவண்டி மூலமாக மதுரை வழியாக வரும்போது அவர் இறங்கி வீட்டிற்கு வருவார்.

எனக்கு ஆறு ஏழு மணிக்குத் தூங்கும் பழக்கம் உள்ளதால், நான் அவர் வரும்போது உறங்கி விடுவேன். அதன்பிறகு உள்ளூரிலும் அவருக்கு வேலை இருக்கும். உள்ளூர் கதிர் அடிப்புக் காலங்களில் அப்பொழுது அவர் காலையில் என் தலைமாட்டில் 10 பைசா 20 பைசா என்று எனக்குச் செலவுக்கு வைத்துவிட்டு வேலைக்கு 5 மணிக்கே சென்றுவிடுவார். நான் எழுந்து ஆவலுடன் தலையணையைப் புரட்டுவேன். அந்த 10 பைசா 20 பைசாவா என்ற தொகை தான் என் முக மலர்ச்சிக்குக் காரணமாக இருக்கும். அதுதான் அவர் மீது நான் செலுத்தும் பாசமாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், சில நேரங்களில் மாலை வெளியூர் சென்று வரும்போது சில சுவராசியமான நிகழ்வுகள் நடந்து இருக்கின்றது.

அவர் வரும்போது கதவு திறக்கும் சத்தம் கேட்கும். ஏதோ ஒருவகையான அரைகுறை முழிப்பு. அதன் பிறகு பக்கத்தில் அமர்ந்து பெயர் சொல்லி அழைத்து எழுந்திரு எழுந்திரு என்றும் கூப்பிட்டு, இந்தா புரோட்டா சாப்பிடு என்பார். அப்பொழுதெல்லாம் பாலித்தீன் கவரில் தனியாக சால்னா வாங்கக்கூடிய பழக்கம் இல்லை. கடையிலேயே இலையில் புரோட்டாவைப் பிச்சுப் போட்டு அதில் சால்னாவும், அதற்குள் ஒரு ஆம்பளைட் வைத்து கட்டித் தருவார்கள். அதை என் முகத்திற்கு முன்னால் திறக்கும்போது அந்த வாடை என்னை எழுப்பி விடும். அதன் பிறகு அரைத் தூக்கத்தில் அந்த புரோட்டாவைத் தின்றிருக்கிறேன். அதன் பிறகு அவர்கள் வாயைக் கழுவி விட்டு தண்ணீர் கொடுத்து அப்படியே தூங்கவைத்த நாட்கள் அதிகம். அதை காலையில் கேட்பார்கள். நான் சாப்பிட்டதுகூட எனக்கு நினைவில் இருக்காது. ஆனால், அவர்கள் சொல்லித்தான் அதை நான் தெரிந்து இருக்கிறேன்.

புரோட்டா வாங்கி வராத காலங்களில் அதிகமாக எனக்குக் கிடைத்த தின்பண்டம் மிச்சர். அந்த மிக்சர் நான் சாப்பிடும் நேரமும் இதேபோல அரைத்தூக்கம்தான். அதைச் சாப்பிடும்போது காரம் அதிகமாக இருக்கும். அதனால் அதை அள்ளி ஒரு டம்ளரில் போட்டுக்கொண்டு அதில் பச்சைச் தண்ணீரை ஊற்றி, அதன் பிறகு அதைப் பிழிந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தின்ற நாட்கள் ஏராளம். சில நாட்கள் ஞாபகம் இல்லாமலேயே தின்று இருக்கிறேன். இதையும் மறுநாள் காலையில் எனக்கு நினைவு படுத்தி இருக்கிறார்.

சில காலங்களில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மார்கழி மாதம் கிட்டத்தட்ட எனக்கு ஏழு எட்டு வயதில் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவதை வழக்கமாகக் கொண்ட அவர், எனக்கும் அந்த மாதிரியான ஒரு வாய்ப்பு ஏற்படுத்தினார்கள். அப்போது விரதம் இருக்கக் கூடிய ஒரு வழக்கம் இருந்தது.கட்டுப்பாடுகள் கடுமையானதாக இருக்கும். பெண்கள் குறிப்பாக அம்மாகூட வீட்டுத் தூரமான காலங்களில் கொடுமையான முறையில் அவர்கள் வழி நடத்தப் பட்டார்கள்.

எனக்கு இந்தக் காலங்களில் கிடைத்த ஒரு சுவையான நிகழ்வு, அனுபவம் என்னவென்றால், ரோட்டுக் கடையில் எனக்குத் தினமும் காலையில் சாப்பிடுவதற்கு எங்க அப்பா ஏற்பாடு செய்திருந்தார். அதுவும் ஒரு அய்யர் கடை.

பூரிக் கிழங்கு என்றால் ஒரு அலாதிப்பிரியம். நான் போய் எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற சுதந்திரமும் எனக்கு இருந்தது. இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. அந்த இரண்டு மாதகாலம் அவ்வாறு இருந்ததால் எனக்கு அவர் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. குறிப்பாகச் சொல்லப்போனால், தாயைவிட தந்தை மீது எனக்கு ஏற்பட்ட பிரியங்கள் இந்த வகையில்தான்.

அதன் பிறகு, ஆறாவது பள்ளியில் சேர்த்து, பின்பு விடுதியில் சேர்த்து விட்ட பிறகு, அவருடைய பணி நின்று விட்டது. என் கல்விப்புலம் சார்ந்த ஒட்டுமொத்த கவனிப்பும் என் தாய் சார்ந்தே ஆகிவிட்டது. அதனால் என்னவோ தாயின் மீது வெறுப்பும், தந்தையின் மீது பாசம் என்று ஒரு இரு மைய நிர்வாகமாக மாறிப்போனது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் காலங்களில் எப்போதாவது ஒரு நாள் வருவது போவது என்று இருந்ததன் காரணமாக, நான் வரும் நேரத்தில் அவர் வேலைக்குச் செல்வதும், அவர் இருக்கும் நேரத்தில் நான் கல்லூரி பல்கலைக்கழகங்களில் விருப்பமாக என் வாழ்க்கை மாறிப் போனது. அவர் மீது நேரடியாக இல்லாமலும் மறைமுகமாகப் பாசம் ஏராளமாக இருந்து வந்தது. தற்போது அவருடனே இருந்து நெருங்கி வாழ்ந்து வரும் போது தான் தெரிகிறது, என் தாய் அவரோடு எவ்வளவு சிரமப்பட்டு குடும்பம் நடத்தியிருக்கிறார் என்று.

சிறுவயதில் என்னை என் தாய் கட்டுப்படுத்திவிட , பன்மடங்கு நான் அவரைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். ஆனால் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. இது ஒரு விசித்திரமான நிகழ்வாக இருக்கிறது. நான் குழந்தையாக இருக்கும்போது அவர் செய்ய வேண்டியது இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.

நான் பிறந்த ஊரான சொந்த ஊரைப் பற்றிப் பெரிதாக இங்கே இன்னும் சொல்லவில்லை. அங்கு தந்தையுடன் பிறந்த மூத்த அண்ணன் ஒருவர் இருக்கிறார். பிறகு அவருக்குச் சித்தப்பா பெரியப்பா மகன்கள் இருக்கிறார்கள். ஒரு பத்து குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு எப்போதாவது மாசிமாதம் நடக்கக்கூடிய திருவிழாவிற்கும், அந்த ஊரிலேயே நடக்கக்கூடிய அனைத்து சமூகம் சார்ந்த திருவிழாவிற்கும் நான் எப்போதாவது செல்வதுண்டு. அந்த மாதிரி ஒன்று இரண்டு முறை சென்ற நிகழ்வு நினைவிலிருக்கிறது.

நான் எட்டாம் வகுப்பு படித்த காலத்தில் பள்ளி விடுதியில் இருந்து நானாகவே முதல்முறையாக அந்த ஊருக்குச் செல்கிறேன். இரவு நேரம். அதுதான் எனக்கு வெளியூருக்கு என்ற தனிப் பயணம். எனக்கு அதில் ஒரே ஒரு பதட்டம் தான். பயமில்லை. நாம் போகிற பேருந்து அந்த ஊரைக் கடந்து போகும்போது| அப்போ அந்த இறங்கும் இடத்தைத் தவற விட்டு விட்டோம் என்றால், வேறு இடத்துக்குக் கொண்டு சென்று விடுவார்கள். திரும்புவதற்குக் காசில்லை என்ற அந்தப் பதட்டம் தான். அதனால் நான் ரொம்ப முனைப்பாக வெளியில் பார்த்துக் கொண்டும், அந்த நடத்துனரிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டும் சென்றேன்.

மறுநாள், என் பெரியப்பா மகன் அவர்களிடம் வாங்க கடை பக்கம் போவோம் என்று அழைத்து விட்டுச் சென்றேன். அந்தக் கடையில் டீ போடுவதற்கு முன்னால் இந்தப் பையன் யார் என்று கேட்டார்கள். அப்போது என் அண்ணன் இவன். என் உறவுக்காரன் என்று சொன்னான். பிறகு எனக்கு அங்கு ஒரு தேநீர் வழங்கப்பட்டது. அவனுக்கும் வழங்கப்பட்டது. இரண்டும் பீங்கான் டம்ளர். அதன்பிறகு மற்றவர்களுக்குச் சில்வர் டம்ளரும் கொடுக்கப்பட்டது. குடித்த பின்பு நான் வேண்டுமென்றே அந்த டம்ளரை கீழே போட்டு உடைத்து விட்டேன். அந்தக் கடைக்காரன் பதறி, ஏன் உடைத்தாய்? நீ எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் தெரியுமா?என்று கேட்டபோது, என் அண்ணன் பொறுங்கள் பார்த்துக் கொள்வோம் என்று சமாதானப்படுத்தினார். மறுபடியும் அந்தக் கடைக்காரர் யார் இந்தப் பையன் என்று கேட்டபோது, என் சித்தப்பா பையன் என்று சொல்லி, என் தந்தையின் புனைப்பெயரைச் சொன்னான். அதற்கு அந்தக் கடைக்காரர், நினைத்தேன்; கண்டிப்பாகச் செய்வான். இவன் செய்வான் என்றார்.

இந்த ஊரைவிட்டு 15 வருடம் என் தாயின் ஊரில் இருந்தாலும், அவ்வப்போது அவர் அந்த ஊருக்குச் சென்று வந்திருக்கிறார். அப்பொழுது எல்லாம் தெரியாது, அவர் அங்கு வாழ்ந்த வாழ்க்கை என்ன என்று. அவரைப் பற்றிய கதைகள் அங்கு ஏராளமாக இருந்தது. ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒரு புரட்சியாளர் போல போர்க்குணமிக்க மனிதராக அங்கு வாழ்ந்திருக்கிறார். நான் சிறுசிறு சம்பவங்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன்.

எதிர்காலத்தில் எனக்குள்ளும் என்னை அறியாமல் இந்தப் போர்க்குணம் வந்து இருக்கலாம். எந்த வகையில் என்று தேடினால் அது இந்த வகையில் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

அன்பு தவமணி
07.05.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 07.05.2020 /

ஓவியம்:
திரைக்கலைஞர் பொன்வண்ணன்

திங்கள், 4 மே, 2020

இருள் வாழ்வுக்கு ஒளிகாட்டிய தாய் விளக்கு: அன்பு தவமணி

அம்மா என்ற சொல் இந்த பூமிப்பந்தில் மிக முக்கியமானது. இந்த அர்த்தத்தில் வெவ்வேறு உச்சரிப்பில் பல்வேறு நாடுகளில் சொற்களில் கையாளப்பட்டாலும், அங்கு அந்தச் சொற்களுக்கு இருக்கக்கூடிய உறவு முறைகளுக்கும் தமிழகச் சூழலில் இருக்கக்கூடிய அம்மா, தாய், தாய்மை என்ற உறவுகளுக்கும் உள்ள பந்தம் கண்டிப்பாக வேறுபாடு உடையதாகதான் இருக்கும்.

அம்மா என்ற சொல் மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறதோ அல்லது இருந்ததோ என்று தெரியவில்லை. ஆனால், என்னைப் பொருத்தவரை வித்தியாசமானதாகவும்; விசித்திரமானதாகவும் இருந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணங்களும் பல்வேறு உண்டு.

நான் சிறுபிள்ளையாக இருக்கும் காலந்தொட்டே அம்மாவின் மீது கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு ஏற்பட்டது. ஏனென்றால், நான் இரண்டாம், மூன்றாம் வகுப்பு படிக்கும்போது மாலை நேரத்தில் வீட்டுப்பாடம் செய்தாயா? என்று கேட்பார்கள். அப்போது வீட்டில் மண்ணெண்ணைத் தீபம்தான். அந்தத் தீபத்தில் இருந்து வரும் புகையும், இரவு நேரம் படிப்பதும் எனக்குப் பிடிக்காது. அதுபோக, ஆறரை ஏழு மணிக்குத் தூங்கும் பழக்கம் இருந்தது. அதனால், என்னவோ தெரியவில்லை அம்மாவைப் பிடிக்காமல் போனது.

தொடக்கக்கல்வி முடிந்தபிறகு, ஆறாம் வகுப்புப் படிப்பிற்காக நகரத்திற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. என் ஊர்ப் பக்கத்தில் உள்ள ஒத்தக்கடையிலும் மேல்நிலைப்பள்ளி இருந்தது. ஆனால், என்னை மதுரை நகரத்தில் உள்ள இளங்கோ மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். என் விருப்பத்துக்கு மாறாக விடுதியில் வேறும் என்னைச் சேர்த்துவிட்டார்கள். அதற்குக் காரணமும் என் அம்மாதான். அங்கிருந்தும் தினந்தோறும் வீட்டிற்கு வந்து போகக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பை எனக்கு அவர்கள் வழங்கவில்லை. என்னோடு சேர்ந்து என் ஊரைச் சார்ந்த உறவினர்கள் நாலு பேர் படித்தார்கள். ஏதோ ஒரு வழியில் ஆறாம் வகுப்பு கடந்துவிட்டேன். ஏழாம் வகுப்பில் என் உறவுக்காரர்கள் விடுதியை விட்டு நின்று விட்டார்கள். நான் எவ்வளவோ என் தாயிடம் மன்றாடினேன். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நீ எப்படியானாலும் விடுதியில்தான் இருக்க வேண்டும் என்று என்னைக் கட்டாயப்படுத்தி விட்டார். நானும் வேறு வழியில்லாமல் விடுதியில் இருந்தேன். அப்பொழுது என் உறவினரிடம், நீங்கள் ஊரிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி வரும்போது என் வீட்டிலிருந்து எனக்குச் செலவுக்குப் பணம் வாங்கி வாருங்கள் என்று கூறுவேன். அவர்கள் வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ அல்லது மறந்தோ என எனக்குத் தெரியவில்லை. பணம் வாங்காமல் வருவார்கள். இதுவும் என் தாயின் மீது வெறுப்பைக் காட்டியது.

இப்படியே, எட்டாம் வகுப்பும் தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பில் பாதி படித்து அரையும் குறையுமாக வீட்டுக்கு வந்தும் போயுமாக இருந்து பயணப்பட்டேன். அப்பொழுதே எனக்கும் என்னுடைய தாய்க்கும் முரண்கள் ஆரம்பித்தது எலியும் பூனையுமாக. ஒருவழியாகப் பத்தாம் வகுப்பை முடித்து நான் படித்த இளங்கோ மாநகராட்சிப் பள்ளியில் நான் கேட்ட பாடப் பிரிவான அறிவியல் பிரிவு கிடைக்காத காரணத்தால், ஒத்தக்கடை அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து விட்டேன். இங்கு தினந்தோறும் வீட்டிற்கு வந்து போகும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், பிரச்சனை வேறு விதமாக எனக்கும் என் அம்மாவுக்கும் உருவானது.

என் பள்ளியில் படிக்கக் கூடிய இன்னொரு மாணவ நண்பர் வீட்டைத் தாண்டித்தான் என் அம்மா கடைக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது அந்த நண்பர் அவர் வீட்டுக்கு வெளியில் உட்கார்ந்து சத்தமாகப் படிக்கும் பழக்கம் உடையவர். அவரைப் பார்த்து வந்த பிறகு, உன் உடன் பயிலும் நண்பர் எவ்வாறு படிக்கிறார்? நீ படிக்கவில்லையே என்று எனக்குப் பலவிதமான நெருக்கடிகளையும் சிரமங்களையும் கொடுப்பதாகவே நான் உணர்ந்தேன். அந்த மாணவன் நண்பர்தான்.

ஒருவழியாகப் பன்னிரண்டாம் வகுப்பு கடந்த பின்பு, என்னுடைய அம்மாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கர்ப்பப் பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ரொம்பத் திண்டாட்டம் ஆன அந்தச் சூழ்நிலையில், எனக்கு கோவாபரேடிவ் என்ற ஒரு படிப்புக்கும், ஓர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி, தமிழ்ப் பாட பிரிவுகளுக்கும் விண்ணப்பித்திருந்தபோது, ஒரே நாளில் எனக்கு அழைப்பு வந்தது. அம்மா கோவாபரேடிவ் போ என்றார்கள். அப்போது எனக்கும் அவருக்கும் சண்டைதான். கல்லூரிக்குத்தான் போவேன் என்ற எனக்கு, என்னுடைய பெரியப்பா அவர்கள் அழைத்துக்கொண்டு கல்லூரியில் பிஎஸ்சி ஜீவாலஜி சேர்த்துவிட்டார்கள். இரண்டு நாள் படித்தேன். ஆங்கிலவழிக்கல்வி எனக்கு ஏறவில்லை. வீட்டுக்கு வந்து விட்டேன். வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. அந்த நேரத்தில்தான் கல்லூரிப் பேராசிரியர்களின் மாபெரும் போராட்டம் ஒன்று நடந்தது. பல்கலைக்கழக மானியக்குழுவை எதிர்த்து என்று நினைக்கிறேன். அது முடிந்த பிறகு வெயிட்டிங் லிஸ்டில் எனக்குத் தமிழ் அனுப்பியிருந்தார்கள். உடனே போய் பழைய கட்டணத்தை மாற்றி தமிழ்ப் பட்டப் படிப்பில் இளங்கலை சேர்ந்து கொண்டேன். அங்கேயும் விடுதி வாழ்க்கைதான். இப்படி தொடர்ச்சியாக நான் வீட்டுக்கு ஒரே ஒரு ஆணாக மட்டும் பிறந்த என்னோடு வேறு பிள்ளைகள் கூட இல்லை. அப்படி இருந்தும் நான் ஊரில், வீட்டில் இல்லாமல் வெளியில் படித்த நாட்கள்தான் அதிகம்.

நிறைய பேர்கூட என் முன்னால் வைத்தே என் அம்மாவிடம் கேட்டு இருக்கிறார்கள். பிள்ளையைப் பெற்றுவிட்டு வெளியில் வைத்துப் படிக்க வைக்கிற உனக்கு, உன் மகன் மீது பாசம் இல்லையா என்று. அப்பொழுது அவர் என்ன நினைத்தார்? என்ன பதில் சொன்னார்? என்று கூட எனக்கு இப்போது நினைவிலில்லை. இப்படியே போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கல்லூரிப் படிப்பு ஒரு வகையில் முடிவடைந்தது.

அதன் பின்பு, கல்வியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றும், ஒரு இரண்டாயிரம் ரூபாய் கட்ட முடியாத சூழலில் பல்கலைக்கழகத்தை நோக்கி பயணப்பட நேர்ந்தது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தேன் நான். எனக்கு முன்பாக ஒரு நபர் சிபாரிசு மூலமாக முந்திக் கொண்டு சென்றுவிட்டார். என்னோடு கதவு அடைக்கப்பட்டது. அந்த முதுகலைத் தமிழ்ப் படிப்புக்கு வேறு வழியில்லாமல் போனது. என்னுடைய முதுகலை பட்டப்படிப்பைப் பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் துவங்குகிறேன்.

அதன் பிறகு, நான் பயணப்பட்ட வாழ்க்கை முறைகள் வேறு. அது ஒரு காலம். நான் திரும்பிப் பார்த்தால் எனக்குப் பின்னால் ஒட்டுமொத்தமாக இருட்டாய் இருக்கிறது. ஆனால் நான் நடந்து வந்த பாதை மட்டும் என்னவோ வெளிச்சமாகத் தெரிகிறது. காரணம், ஒருவேளை பத்து மாதம் இருட்டில் வயிற்றில் வைத்திருந்த காரணத்தால் என்னவோ, ஒட்டுமொத்தமாக என் வாழ்க்கையின் வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறார் அம்மா.

ஆம், ஓர் அரசுப்பள்ளியில் முதுகலை ஆசிரியப் பணியில் இருக்கிறேன்.

நான் கடந்து வந்த பாதை மட்டுமே வெளிச்சமாக இருக்கிறது. தெரு விளக்கு இல்லாத ஊரில் பிறந்த எனக்கு மட்டும் ஒட்டுமொத்தமாக வெளிச்சத்தைத் தந்தது என் தாய் மட்டுமே. ஆனால், நான் நேரடி வாழ்க்கையில் இன்றுவரை எலியும் பூனையுமாகத்தான் இருந்து வருகிறேன். அது என்னவோ தெரியவில்லை. ஆனால், வெளி உலகில் அவர் என்னை விட்டுக் கொடுத்ததில்லை, நான் அவரை விட்டுத் தந்ததும் இல்லை. ஆனாலும், இதுவரையிலான நேரடி வாழ்க்கை எலியும் பூனையுமாகவே வாழ்ந்து வருகிறோம்.

என்னைப் பொருத்தவரை, இந்தத் தொப்புள்க் கொடி உறவு தொடர்ந்து கொண்டேதான்  இருக்கும்; ஓடிக் கொண்டேதான் இருக்கும்; உறைந்து போகாது. அன்பின் எள்ளளவும் குறையாது உயிர் போகும் வரை.

அன்பு தவமணி
04.05.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 04.05.2020 /

வெள்ளி, 1 மே, 2020

வ.உ.சியின் முன்னெடுப்பும் கோரல் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டமும்: ஆய்வறிஞர் இரெங்கையா முருகன்

தொழிற்சங்கம் என்ற அமைப்பு இல்லாத அந்த காலத்தில் குறைந்த ஊதியம் அளித்து கூலி என்ற பெயரால் இழிவாக நடத்தப்பட்டு தொழிலாளர்களை கடுமையாக வேலை வாங்கியது ஆங்கிலேய முதலாளி வர்க்கம். தொழிலாளர்களின் நிலைமையும்  மிக வருந்திய நிலைத்தக்கதாய் இருந்தது.

பத்து வயது பன்னிரண்டு வயது சிறுவர்களும் ஆலையில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். வார விடுமுறையென்பது, தொழிலாளர்கள் அறியாத ஒன்றாக இருந்தது. உணவு அருந்த செல்ல போதிய இடைவேளை கிடையாது. ஊதியம் மிகவும் சொற்பமானது. உடல் நலக் குறைவால் விடுப்பு எடுப்பின் அதற்கு ஊதியம் மறுக்கப்படும். அத்துடன் சில நேரங்களில் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய தொழிலாளிக்கு வேலை மறுக்கப்படும். இதனால் ஊதியமில்லாத விடுமுறையில் செல்வதற்கு கூட தொழிலாளர்கள் அஞ்சிய காலம்.

காலை ஆறு மணியிலிருந்து  மாலை ஆறு மணி வரை தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வேலை செய்தனர். ”ரேகை பார்த்து ஓட்டுதல்” என்ற சொல்லால் வேலையின் தொடக்கமும் முடிவும் குறிப்பிடப்பட்டது. உள்ளங்கை ரேகையானது தெளிவாக தெரியும் நேரத்தில் வேலையினைத் தொடங்கி, அதனைப் பார்க்க பார்க்க முடியாத அளவில் ஒளி மங்கும் நேரத்தில் வேலையை முடிக்க வேண்டும் என்ற சொல்லின் பொருளாகும்.

தொழிலாளர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு கூட பிரம்படி வழங்கப்பட்டது. வெள்ளையதிகாரிகள்  ஆலையினுள் வரும் போது குறுக்கே கடந்து சென்றாலும் அடியும் உதையும் கிடைக்கும்.
கோரல் மில் தொழிலாளர்களின் அவல நிலையை கண்ணுற்ற வ.உ.சி. மற்றும் சிவா, பதமநாப அய்யங்கார் தொழிலாளர்களினை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். ஆங்கிலேய இரகசிய அறிக்கை கீழ் வருமாறு குறிப்பிடுகிறது.

“ஆண்டு தோறும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லும் பணத்தின் அளவை அவர் குறிப்பிட்டார். இதனைத் தவிர்க்க வேலை நிறுத்தம் செய்யும்படி கூலிகளுக்கு அறிவுரை கூறினார். ருசியப் புரட்சியானது மக்களுக்கு நன்மையளித்தது. (1905 ம் ஆண்டு நடைபெற்ற முதல் ரஷ்ய புரட்சி). புரட்சியானது உலகத்துக்கே எப்பொழுதும் நல்லதையே புரியும் என்று அவர் குறிப்பிட்டார். வேலையாட்கள் மூன்று நாட்கள் வேலையை நிறுத்தினால் ஐரோப்பிய முதலாளிகள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

1908 பிப்ரவரி 27 தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களை திரட்டி வேலை நிறுத்தம் செய்ய வைத்து ஊதிய உயர்வு, வார விடுமுறை, இதர வசதிகளை வலியுறுத்தி இந்தியாவெங்கும் தலைப்பு செய்திகளில் அதிரச் செய்தார்  வ.உ.சிதம்பரனார் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர். இந்த தொழிலாளர் போராட்டத்தை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த காலனிய ஏகாதிபத்தியத்திற்கு விழுந்த சென்ற நூற்றாண்டின் பெரிய சம்மட்டி அடி.

தென் கோடியில் நடந்த இந்த போராட்டம் இந்தியாவை தாண்டி ரஷ்யா வரை மிகவும் நுட்பமாக கவனிக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தம் பொதுமக்களின் எழுச்சியாக மாறி அடித் தட்டு வர்க்க மக்களிடையே அரசியல் அறிவும் பரவியது.

இந்தியா முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோரல் மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்ட்ம் வெறுமனே ஊதிய உயர்வு போராட்டமாக மட்டுமே கருதாமல் இந்திய விடுதலை இயக்கத்தில் சுதேசி இயக்கத்துடன் தொழிலாளி வர்க்கத்தை இணைக்கும் நோக்குடன் திறம்பட செய்து வழிகாட்டினார் வ.உ.சி.

தொழிலாளர்கள் போராட்டம்  எந்த வகையிலும் குன்றி விடாமல் பார்த்துக் கொண்டார் வ.உ.சி. குறிப்பாக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்ட காலங்களில் பட்டினி பசியால் வாடி விடக் கூடாது அதனால் போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பொதுமக்களிடம் பொது நிதி திரட்டி சாப்பாடு போட்டதுதான் மிகவும் முக்கியமானது.

 தொழிலாளர்களின் போராட்ட உணர்வு குன்றாமல் இருப்பதற்காக சுப்பிரமணிய சிவாவினுடைய எரிமலைப் பேச்சை நன்றாக பயன்படுத்தினார். வ.உ.சி. தனது சுயசரிதையில் சிவாவின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவார்.

”அறிக்கைப் படியே அனேகர் பேட்டையில்
செறிக்க வந் திருந்தனர் செப்பினன் சிவஞ்சில
கேட்டதும் நம்மவர் கிளம்பினர் ஆர்த்தனர்
பார்த்தேன் ஆபத்து பலத்த தென் றுன்னினேன்
யார்த்தேன் சிலசொல் மன வலி கொண்டே
உயிரென இனியவென் உத்தம நண்பரே!

 வ.உ.சி. மற்றும் சிவா தலைமையில் நடைபெறும் தூத்துக்குடி போராட்டத்துக்கு  முக்கியத்துவம் அளித்து சுதேசமித்திரனில் ஜி.சுப்ரமண்ய அய்யர் “ தூத்துக்குடி பவள தொழிற்சாலை வேலை நிறுத்தம்” “ தூத்துக்குடியும் சுதேசியமும்” “ தூத்துக்குடி வேலை நிறுத்தம்” “ நம் தொழிலாளிகள்” “ தூத்துக்குடி சமாச்சாரம்” போன்ற பல்வேறு தலைப்புகளில்  செய்திகளினை வெளியிட்டார்.

மகான் அரவிந்தர் தன்னுடைய வந்தேமாதரம் இதழில்  “வெல்டன் மிஸ்டர் பிள்ளை’’ (நன்று செய்தீர் பிள்ளையவர்களே) என்ற புகழ் மிக்க தலையங்கம் எழுதியதுடன் தொடர்ந்து போராட்டம் குறித்து அச் சமயத்தில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பால கங்காதார திலகர் அவர்களும் தனது பங்குக்கு கேசரி, மராட்டா பத்திரிக்கைகளில் தூத்துக்குடி தொழிலாளர் போராட்டம் குறித்து சிறப்பு செய்திகளாக வெளியாகின.

முத்தாய்ப்பாக ரஷ்யா நாட்டு ஜார் மன்னனின் இந்திய தூதுவராக பம்பாயில் பணியாற்றிய செர்கின் (Chirkin) என்பவர் இந்தியாவில் திட்டமிட்டு திறம்பட நடத்தப்படும் வேலைநிறுத்தம்’’. என்று அறிக்கை அனுப்பியதோடு மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும்  உணவு அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

உணவு அளிக்கப்பட்டு போராடியதால் தொழிலாளர்களை அக்கால காலணிய பிரிட்டீஸ் அரசாங்கத்தாரால் அவர்கள் நினைத்த மாதிரி தொழிலாளர்களை திசை திருப்ப முடியவில்லை. போராட்ட காலங்களில் ஆயிரக் கணக்கான தொழிலாளர் குடும்பத்தினருக்கும்  உணவு அளிப்பதென்ற முடிவு என்பது மிகவும் முக்கியமானது. இப் போராட்டத்திற்காக பொதுமக்களிடமும் வசூல் செய்து மீதிசெலவை வ.உ.சி. தனது பொருளாதார இருப்பில் இருந்து சமாளித்துள்ளார். இதுதான் ஒரு தலைவனுக்கு அழகு.

இப் போராட்டத்தின் விளைவாக நாவிதர்கள் பிரிட்டீஸ் அதிகாரிகளுக்கு உடந்தையாக செயல்படும் ஆட்களுக்கு சவரம் செய்ய மறுத்தனர். துணி துவைக்கும் வண்ணார் சமூகத்தவர் துணிகளை துவைக்க மறுத்தனர். பொதுமக்களும் அவரவர் அளவில் வழக்கறிஞார்கள், வணிகர்கள், சிறு வியாபாரிகள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் மற்றும் பலர் பொதுபுறக்கணிப்பு செய்தனர். இதனால் தொழிலாளர் வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி கண்டது.

இந்திய அளவில் பம்பாயில் நடந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை குறிப்பிடும் வரலாற்று ஆய்வாளார்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற உணர்ச்சி மிகுந்த போரட்டத்தை வசதியாக குறிப்பிட மறந்து விடுகின்றனர்.

13.03.1908 ல் வந்தேமாதரம்  இதழில் அரவிந்தர் எழுதிய தூத்துக்குடி போராட்ட வெற்றி குறித்து எழுதியது பின்வ்ருமாறு

“தூத்துக்குடி கோரல் மில் போராட்டம் வெற்றி பெற்றது. மகத்தான மக்கள் பெற்ற வெற்றியாகும். வேலை நிறுத்தம் செய்தோரின் ஒவ்வொரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரிட்டீஷ் முதலாளித்துவம் பரிதாபத்துக்குரிய நிபந்தனையற்ற சரணாகதியை அடைந்துள்ளது. தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அற்புதமாக வெற்றியைத் தேடி தந்த அஞ்சா நெஞ்சத் தலைவர்களைப் பற்றி தேசியம் உள்ளபடியே மிக்க பெருமை கொள்ளலாம்.

சிதம்பரம், பத்மநாப ஐயங்கார், சிவா ஆகியோர் ஒரு சில் மில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்திற்காகவும், நியாயத்திற்காகவும் சிறை செல்லவும், நாடு கடத்தப்படவும் முன் வந்தனர். படித்த வர்க்கத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் பிணைப்புதான் சுயராஜ்யம் பெறுவதற்கான வழிமுறைகளில் மகத்தான வழிமுறையாகும்.

வங்காளத்திலும் பல தொழிலாளர் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அச்சகத்தார் வேலை நிறுத்தத்தை தவிர வேறு எந்த வேலை நிறுத்தமும் வெற்றி பெறவில்லை.

தனித்து நிகழ்ந்த ஒரு தொழிலாளர் புரட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தூத்துக்குடி வேலை நிறுத்தம் ஒரு முழுமையான எடுத்துக்காட்டாகும். ஈடு இணையற்ற திறமையுடனும் தைரியத்துடனும் போராடிய தூத்துக்குடி தலைவர்களையே அனைத்துப் பெருமையே சாரும்.

கோரல் மில் தொழிலாளர்களின் குறைகள், அவர்களுக்கு உற்ற துன்பங்கள் முதலானவற்றோடு அனைத்து இந்திய நலன்களும் இணைந்துள்ளன.

பட்டாபி சீதாராமையாரால் எழுதப் பெற்ற அதிகாரப் பூர்வமான காங்கிரஸ் சபை வரலாற்று நூலின் காங்கிரசின் சிறு சிறு போராட்டத்தைக் கூட குறிப்பிடும் பக்கங்களில்  வ.உ.சி.யின் தூத்துக்குடி போராட்டம் குறித்து ஒரு வரி கூட குறிப்பிட வில்லை என்பதுதான் எவ்வளவு வேதனையான விசயம்.

சிறைவாசத்திற்கு பின்பு வ.உ.சி. 1913 வாக்கில் சென்னையில் வந்து தங்கினார். பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உடன் பணியாற்றிய அனுபவமும் வாய்க்கப் பெற்றார் தனது துயரமான  வறுமை வாட்டிய நிலையிலும் திரு.வி.க. அவர்களோடு சேர்ந்து பஞ்சாலை தொழிலாளர்களுக்கு சங்கம் கண்டார். தபால் ஊழியர்களுக்காக பெரம்பூரில் வ.உ.சி.யின் முயற்சியில் அவர் கண்ட சங்கமே பழமையான சங்கம்.

31.01 1919 ல் டிராம்வே யூனியன் கூட்டத்தில் வ.உ.சி. பேசிய பொழுது தொழிலாளர்கள் அவர்களுக்குத் தேவைப்படும் நிதியை திரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். சகிக்க முடியாத நிலை உருவாகும் பொழுதுதான் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். அரசாங்கம் முதலாளிகளுக்கு உதவும். தொழிலாளர்களுக்கு உதவாது என்றும் எடுத்துரைத்தார். 

11. 10.1921 ல் சென்னை விவசாய கைத்தொழில் சங்கத்தை துவக்கி வைத்து வ.உ.சி. முக்கிய தொலை நோக்கு விசயங்களை கையாளவேண்டும் என்பதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

உழவர், தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி தரல்

உழவும் கைத்தொழிலும் நவீன காலமுறைப்படி வளர்ச்சி பெறச் செய்தல்

சோப்பு, மெழுகுவர்த்தி, பித்தான் ஆகிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவது

சென்னை மாகாண தரிசு நிலங்களை வாங்கி விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ய உழவர்களுக்குப் பயிற்சியளித்தல் .

இன்றும் வடசென்னை நகரங்களில் வ.உ.சி. பெயர்களில் ஏராளமான தெருப் பெயர்கள் அமைந்திருக்கிறது என்றால் ம.பொ.சியின் முன்னெடுப்பும் மற்றும் உழைக்கும் தொழிலாளர்கள் குழுமிய பகுதி. நன்றியை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்.

17.12. 1919ம் வாக்கில் திலகர் சென்னைக்கு வருகை தந்தார். அச் சமயம் வ.உ.சி. திலகரிடம் தைரியமாக ஒரு வேண்டுகோள் வைத்தார்.

‘’ இப்பொழுது தொழிலாளர் காலம்’’. தாங்கள் பணக்காரர்களின் பங்களா வீடுகளில் தங்க கூடாது. அப்படி  தாங்கள் தங்கினால் ஏழைகளாகிய தொழிலாளர்கள் உங்களை சந்திக்க இயலாமல் போய்விடும். ஆகையால் ஏழை தொழிலாளர் மக்கள் உங்களை இயல்பாக சந்திக்கும் விதமாக தொழிலாளர் இயக்க காரியதரிசிகளின் யாருடைய வீட்டிலாவது தங்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். ‘சிதம்பரம் ! எனக்கா விண்ணப்பம்? எனக்கு எந்த குடிசையாயிருந்தாலென்ன? என்றார். உடனடியாக “தேசபக்தன்’’ லிமிடெட் காரியதரிசி சுப்பராய காமத’ வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கோரல் மில் வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி அடைய வ.உ.சி.யின் அணுகுமுறை முக்கியமானது. இதனால் கோரல் மில் நிர்வாகம் வ.உ.சி.யின் மீது தீரா கோபம் வாழ்நாள் வரை கொண்டிருந்தது. ஏ.பி.சி.வீரபாகு ஒரு சம்பவம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

“வ.உ.சி. என்ற பெயரால் தூத்துக்குடியில் கல்லூரி ஒன்றை அமைக்கும் பணி விடுதலைக்கு பின் 1950 ல் தொடங்கிய போது அதற்காக நிதி திரட்டினர். அந்த நகரில் பல்வேறு அறப்பணிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்கி வரும் ஹார்வி மில் நிர்வாகத்திடம் கல்லூரி கட்ட நிதி கேட்ட பொழுது அவர்கள் கூறிய பதில் “வ.உ.சி.யின் பெயரால் அமையும் எந்த நிறுவனத்திற்கும் உதவி செய்வதில்லை என்பது கொள்கை முடிவு. இந்த மறுப்புரை வ.உ.சி.யின் இறப்பிற்கு பிறகும் கிடைத்த உண்மையான புகழாரம் ஆகும்.

முதல் செங்கொடி ஏற்றிச் சிறப்பித்த சிந்தனை சிற்பி சிங்கார வேலர்,
“1923 ஆம் ஆண்டு மே முதல் நாள் சென்னையில் தோழர் சிங்காரவேலு செட்டியார் அவர்கள் இந்தியாவில் ஒரு கொடியை ஏற்றி வைத்தார்

இந்தியாவின் முதலாவது மே தினம் கொண்டாடப்பட்டது அந்த மே தினத்தில்  சிங்காரவேலர்  முயற்சியில் தொழிலாளர் விவசாய கட்சி உருவாக்கப்பட்டது சென்னையில் இரண்டு மேதினப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது கடற்கரையிலும் வட சென்னை உயர்நீதிமன்ற கடற்கரையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையிலும் நடத்தப்பட்ட கூட்டங்களில் சுப்பிரமணிய சிவாவும், கிருஷ்ணசாமி சர்மாவும் கலந்து கொண்டனர் இந்த கூட்டங்களில் பாட்டாளிகள் சுயராஜ்யம் அடைய இந்திய மக்களுக்கு அறைகூவல் விடப்பட்டது.

சென்னை தொழிலாளர் சங்கத்தை தோற்றுவித்த குத்தி கேசவ பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், சக்கரை செட்டியார், வாடியா, இ.எல்.அய்யர், செல்வபதி செட்டியார், இராமனுஜலு செட்டியார்,, கஜபதி, என்.தண்டபாணி பிள்ளை, எம்.சி.இராஜா, தேசிகாச்சாரி, ஜார்ஜ் ஜோசப், த.வே.முருகேசனார் மற்றும் பலரையும் மே தினத்தில் நினைவு கூர்ந்திடுவோம்.

ஆய்வறிஞர்
இரெங்கையா முருகன்.

/ ஏர் இதழ் வெளியீடு / 01.05.2020 /

வியாழன், 30 ஏப்ரல், 2020

தமிழீழ விடுதலைப் போராட்டம்: விடுதலைப்புலிகளும் இசுலாமியர்களும்:- பரணி கிருசுணரஜனி


  
01. புலிகள் குற்றவாளிகளா?

‘தமிழ் – முஸ்லிம் குரோதம் எங்கே முளைவிட்டது?’ என்பதை வரலாற்றின் போக்கில் ஆராய்ந்தால் புலிகள் மீது யாரும் குற்றம் சுமத்த முடியாது.

ஆயுதப் போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழ்க் கட்சிகள் முஸ்லிம்களை தாம் தேர்தலில் வெல்வதற்கான ஒரு வாக்கு வங்கியாகத்தான் பார்த்தார்கள். முஸ்லிம்களின் வாழ்வு தொடர்பான நலனில் அக்கறை காட்டவில்லை. இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து அவர்கள் சிங்கள கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட போது ‘தொப்பி பிரட்டிகள்’ என்று தூற்றப்பட்டார்கள்.
இப்படியாக முதல் விரிசலை தொடக்கி வைத்தவை தமிழ்க் கட்சிகள்தான். பிற்பாடு அதை ஊதி வளர்த்தவர்கள் தென்னிலங்கை முஸ்லிம் தலைமைகள்.


அடுத்து ஆயுதப் போராட்டம் வெடித்தவுடன் ஈசல் போல் முளைத்த இயக்கங்கள் புலிகள் போல் தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. அத்துடன் பணம் பறித்தல், கப்பம் அறவிடல் என்பவற்றை தமிழ் மக்களிடையே வன்முறையாக அணுகியது போல் முஸ்லிம்களிடமும் அந்த வழிமுறையைக் கையாண்டார்கள். இது அடுத்த விரிசலை உருவாக்கியது.

இதன் விளைவாக முஸ்லிம்கள் மீள வன்முறையைப் பிரயோகித்தார்கள்.

இதைச் சரியாகப் பயன்படுத்திய இன அழிப்பு அரசின் உளவுத்துறை ‘ஊர்க்காவற்படை’ என்னும் பெயரில் ஒரு வன்முறை அமைப்பை உருவாக்கி தமிழ் மக்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது.

அது மட்டுமல்ல 1985 களில் மாற்று இயக்கங்களிலிருந்து திசைமாறி அலைந்து திரிந்த போராளிகளையும் இந்த முஸ்லிம் ஆயுதக் குழுக்களையும் இணைத்து ‘ஜிகாத்’ என்னும் அமைப்பையும் உருவாக்கியது இன அழிப்பு அரசின் புலனாய்வுத்துறை.


இவ்வமைப்பு முழுக்க முழுக்க அரசக் கூலிப்படைகளாய் இயங்கியமையால் தமிழருக்கெதிரான வன்முறைகளை பிரயோகித்தது மட்டுமல்ல இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன.விளைவாக தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டது மட்டுமல்ல அவர்கள் நிலமும் முற்றாகப் பறிபோகத் தொடங்கின.

தமிழ்,  முஸ்லிம் விரோதப் போக்கை எண்ணெய் ஊற்றி வளர்த்த இந்த ஜிகாத் தமிழ்/ முஸ்லிம்களிடையே நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க முயன்ற மூதூர்மஜித், காத்தான்குடி அகமட்லெவ்வை போன்றோரைச் சுட்டுப் படுகொலைசெய்ததை இன்று பலரும் மறந்து போனது வேதனைக்குரியது.

இந்த வரலாறுதான் பிற்பாடு அனைத்து இயக்கங்களும் அழிந்து போன நிலையில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாய் போரிட்ட புலிகள் மீதான முஸ்லிம்களின் வன்மமாக உருமாறியது.

எந்த தவறும் செய்யாமலேயே புலிகள் பழி சுமந்த வரலாறு இது.

தென்தமிழீத்தில் இந்த ஜிகாத் மற்றும் ஊர்காவல் படைகளின் அட்டுழியங்களை நிறுத்த புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களும் பிற்பாடு தவிர்க்க முடியாத பல அரசியல் காரணங்களால் முஸ்லிம்களை வெளியேற்றியதும் இன்று வரை எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது.

இது விரிவாக இரு தரப்பும் பரஸ்பர புரிதலுடன் பேசி தீர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நந்திக்கடலின் இறுதிச் செய்தியும் அதுதான்.

அதை விடுத்து தமிழர் தரப்பிலிருந்தே ஏதோ நாம் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்களாக சித்தரிக்கப்படுவதும் அதையும் தாண்டி ‘இனச்சுத்திகரிப்பில்’ ஈடுபட்டோம் என்று வரலாற்று புரிதலின்றி பேசுவதும் ஆரோக்கியமானதல்ல.

02. முஸ்லிம்களை வெளியேற்றியது ‘இனச் சுத்திகரிப்பா?

இனஅழிப்பு என்பதை நிறுவ அல்லது அதை அந்த அர்த்தத்தில் ஏற்றுக்கொள்ள ஒரு முன் நிபந்தனை ஒன்றை இன அழிப்பு தொடர்பான சட்ட வரைபு அல்லது அதன் மீதான கோட்பாட்டுருவாக்கம் நம்மிடம் கோரி நிற்கிறது.

அதாவது ‘இன அழிப்பு’ என்று நாம் முன்வைக்கும் ஒரு நிகழ்வு அல்லது பல நிகழ்வுகள் எதிரிகளால் அதாவது அதில் ஈடுபட்ட அரசோ அல்லது ஒரு இனக்குழுவோ இன அழிப்பு ‘நோக்கங்களுடன்’ அதில் ஈடுபட்டனவா என்பதை நிறுவும் முன் நிபந்தனைதான் அது.


இந்த அடிப்படையில் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது இன அழிப்பு நோக்கங்களைக் கொண்டது அல்ல. எனவே அதை இனச் சுத்திகரிப்பு என்று வரையறுப்பது அடிப்படையில் தவறு.

புலிகளைப் பொருத்தவரை, புலிகள் தமது போராட்டத்தைத் தக்க வைப்பதற்காக தற்காலிகமாகச் செய்த ‘தவிர்க்கமுடியாத’
ஒரு பெரும் தவறு அது.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பொருத்தவரை மறக்க முடியாத – மன்னிக்க முடியாத ஒரு கூட்டு அவலம் அது.

ஆனால் அவர்கள் வெளியேற்றப்பட்டதனூடாக அவர்களது உயிர் மட்டுமல்ல அடையாளம், தனித்துவம் என்பது கூட்டாகப் பேணப்பட்டது. அது எந்த சிதைவுக்கும் உள்ளாகவில்லை.

ஆனால் தொடர்ந்து புலிகளின் ஆளுகைக்குள் இருக்க நேரிட்டிருந்தால் அவர்கள் பாரிய மனிதப் பேரவலத்தைச் சந்தித்திருப்பார்கள். அது புலிகளை ஒரு இனப்படுகொலைக் குற்றவாளிகளாக்குவதற்கான அனைத்து முகாந்திரங்களையும் கொண்டிருந்தன.

காரணம், ஒன்றல்ல பல நூறு. அது விரிவாக வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு இந்த இடைப்பட்ட காலத்தில் பல நூறு தமிழர்களே, உளவு பார்த்த குற்றம்
சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். பலருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த வழிமுறைகளை முஸ்லிம்களுக்கு பிரயோகிப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.


ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை போன்று அடைக்கப்பட்டு தினமும் கண்காணிக்கப்பட்டு அவர்கள் இயல்பு வாழ்வை குலைத்து
அவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நூற்றுக்கணக்கில் புலகளினால் கைது செய்ப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதென்பதும், அவர்களைக் கூட்டாகக் கொலை செய்வதென்பதும் முறையே மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இனப்படுகொலை உள்ளடக்கங்களை கொண்டதாக அறியப்பட்டிருக்கும்.

போதாததற்கு பாஸ் நடைமுறையை வேறு புலிகள் கடைப்பிடித்தார்கள். அது தம்மை ஒரு தனித்த இனக்குழுமமாக கருதும் முஸ்லிம்களைப் பொருத்தவரை அது புலிகளின் ‘கட்டமைக்கப்பட்ட’ இன அழிப்பு ஒன்றிற்கான உள்ளடக்கங்களையே அடையாளம் காட்டும்.

இது ஒரு கட்டத்தில் ஒரு இன அழிப்புக் குற்றமாக அனைத்துலக சமூகத்தால் கணிக்கப்பட்டு முஸ்லிம்களை சுதந்திரமாக வெளியேற்றுமாறு ஒரு கோரிக்கைகூட வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பை யாரும் மறுக்க முடியாது.

அது புலிகளை மேலும் சிக்கலுக்குள் தள்ளியிருக்கும்.

இப்படி தர்க்கரீதியாக பேச பல நூறு காரணங்கள் உண்டு.

ஆனால் அதற்காக யாரும் வெளியேற்றத்தை நியாயப்படுத்த முடியாது. அதற்காக ‘இனச் சுத்திகரிப்பு’ என்ற தவறான வார்த்தை பிரயோகங்கள் வருவதையும் அனுமதிக்க முடியாது.

இது நடந்த இனஅழிப்புக்கு நீதி வேண்டி நிற்கும் இனமாக நமக்கு நாமே குழி தோண்டுவதாகவே அமையும்.

முஸ்லிம்களுடன் மனம் திறந்த ஒரு உரையாடலை தொடங்கவும் இது தடை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

03. இனச் சுத்திகரிப்பில் முஸ்லிம்கள்.

இந்த இடைப்பட்ட போராட்ட காலத்தில் புலிகளினால் சிங்கள மற்றும் முஸ்லிம்களின் கிராமங்கள் ஆக்கிரமிக்கப்படவோ, அடையாள அழிப்புக்குள்ளாக்கப்படவோ இல்லை.

அவர்களது வணக்கத்தலங்கள், பண்பாட்டு அடையாளங்கள் அழித்தொழிப்புக்குள்ளாகவில்லை. அது மட்டுமல்ல அவை எந்தவொரு அடையாள மாற்றத்திற்கும் உட்படுத்தப்படவில்லை.

ஆனால் சிங்களவர்களினாலும் முஸ்லிம்களினாலும் தமிழர்களின் கிராமங்கள், பாரம்பரிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அடையாள சிதைவுக்குட்படுத்தப்பட்டது மட்டுமல்ல, வணக்கத் தலங்கள், பண்பாட்டு அடையாளங்கள் முற்றாக சிதைக்கப்பட்டு பவுத்த மற்றும் முஸ்லிம் அடையாளங்களாக மாற்றப்பட்டுள்ளன.


இது இனச்சுத்திகரிப்பு உள்ளடக்கங்களை கொண்டது என்பதை தனியாகக் கூறவும் வேண்டுமா?

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றும் போது கூறியது போலவே பின்பு சமாதான காலத்தில் அவர்களை அவர்களது தனித்துவ -பண்பாட்டு அடையாளங்களுடன் அவர்களது வாழ்விடங்களில் மீளக் குடியேற அனுமதித்தார்கள்.

சிங்களவர்களும் , முஸ்லிம்களும் தம்மால் அடையாள அழிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழர் தொன்ம நிலங்களை – கிராமங்களை மீளக் கையளிப்பார்களா?

அதுவரை அது ‘இனச் சுத்திகரிப்பாகவே’ இருக்கும்.

தமிழர் தரப்பு எந்த இனச் சுத்திகரிப்பிலும் ஈடுபடவில்லை என்பதே வரலாறு. இனியும் அதை செய்யப்போவதில்லை என்பதை ‘நந்திக்கடல்’ தெளிவாகவே வரையறுத்துள்ளது.

அத்துடன் ‘நந்திக்கடல்’ முஸ்லிம்களை தனித்துவ இனக்குழுமமாக அங்கீகரித்து அவர்கள் தமிழர் நிலத்தில் தமது தனித்துவ அடையாளத்துடன் வாழும் அவர்கள் உரிமையை ஏற்றுக் கொள்கிறது.

முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டிய அழுத்தமான செய்தி இது.

04. முஸ்லிம்களுக்கான ‘நந்திக்கடலின்’ செய்தி.

முஸ்லிம்கள் தம்மை ஒரு தனித்த இனக் குழுமமாகக் கருதினால், அவர்கள் தமது பண்பாட்டு அடையாளங்களுடன் தமிழர் நிலத்தில் வாழும் உரிமையை ‘நந்திக்கடல்’ முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

உலகெங்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் இனக் குழுமங்கள் எதிர் கொள்ளும் சிக்கலான நெருக்கடி இது.

போராடும் இனக் குழுமங்களிடையே தம்மை ஏதோ ஒரு வகையில் வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் உபரி குழுமங்களின் தனித்துவத்தை அரச பயங்கரவாதம் தமக்கு சார்பாக பயன்படுத்தி பிரித்தாளும் தந்திரங்களினூடாக சம்பந்தப்பட்ட இரு குழுமங்களையும் வேறு பிரித்து தனிமைப்படுத்தி அழித்தொழிக்கும் என்கிறது ‘நந்திக்கடல்’.

ஆனால் முஸ்லிம்கள் இந்த புரிதலின்றி சக தேசிய இனம் மீது இன அழிப்பு அரசுடன் சேர்ந்து இயற்கை வளங்களையும் அழித்து/ நில ஆக்கிரமிப்பு செய்வதென்பது தமிழீழத்தில் தனித்த அடையாளங்களுடன் ஒரு இனக் குழுமமாக வாழும் முஸ்லிம்களின் உரிமையையும் இருப்பையும் கேள்விக்குட்படுத்துகிறது.

இன அழிப்பு அரசுடன் ஒத்தோடும் இந்த யுக்தி அடிப்படையில் முஸ்லிம்களின் தனித்துவத்தை கேள்விக்குட்படுத்தும் தூரநோக்கற்ற செயலாகவே கருத வேண்டியுள்ளது.

இத்தகைய உபரி தேசிய இனங்களின் உரிமைகள் குறித்து ‘நந்திக்கடல்’ நிறையவே அக்கறை கொள்கிறது.

கால நீரோட்டத்தில் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து தனித் தேசமாகும் போது சிங்களம் – தமிழ் என்று தேசங்கள் உடையும் போது முஸ்லிம்களின் இத்தகைய போக்கால் இரு தரப்பாலும் தனித் தீவாக அவர்கள் நட்டாற்றில் விடப்படுவார்கள் என்கிறது ‘நந்திக்கடல்’.

முஸ்லிம்களுக்கான ‘நந்திக்கடலின்’ அக்கறையுடன் கூடிய எச்சரிக்கை இது.

ஏனென்றால் ‘நந்திக்கடல்’ தமிழர்கள் விடுதலை குறித்து மட்டும் அக்கறை கொளள்வில்லை. அது உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து இனக் குழுமங்கள் குறித்தும் கரிசனை கொள்கிறது.

எனவே முஸ்லிம்கள் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்காமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் / புலிகளையும் - குறிப்பாகத் தலைவரை இத்தகைய புரிதலுடன் அணுக வேண்டும்.

மேலதிக இணைப்பு:

முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் காடையர்கள் இன அழிப்பு அரசின் படைகளுடன் இணைந்து நடத்திய வீரமுனைப் படுகொலைகள் என்பது ஒரு “மினி முள்ளிவாய்க்கால்”.

தென் தமிழீழ மண்ணிலிருந்து தமிழர்களை வாழ்ந்த சுவடுகளே தெரியாமல் அழித்தொழிப்பு செய்து அதை முஸ்லிம் குடியிருப்புக்களாக மாற்ற நடந்த பல அழித்தொழிப்புக்களின் உச்சமாக அது நடந்தேறியது.

1990 ஓகஸ்ட் மாதம் இது நடக்கிறது.
புலிகள் இந்த அழித்தொழிப்பு நடந்து மூன்று மாதங்களின் பின்பே ஒக்டோபர் 30 முஸ்லிம்களை வட தமிழீழத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற முடிவெடுக்கிறார்கள்.

இந்த வரலாற்று செய்தியை பலர் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கிறார்கள்.
இதன் வழி புலிகளுக்கு ஒரு இக்கட்டான நிலை திட்டமிட்டே இன அழிப்பு அரசின் புலனாய்வு வலையமைப்பால் உருவாக்கப்படுகிறது.

வட தமிழீழத்திலும் இன அழிப்பு அரசின் உதவியுடன் இப்படியான நில ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் அது போராட்டத்தின் போக்கையே மாற்றி விடும் அபாயாம் உணரப்படுகிறது.

விளைவு தற்காலிக வெளியேற்றம்.

இந்த வெளியேற்றத்தின் பல தர்க்க நியாயங்களை பல தடவை அடுக்கி விட்டேன். சொல்லப்படாமல் இன்னும் நிறைய இருக்கிறது.

அதில் குறிப்பான ஒன்று கீழே..

தென் தமிழீழத்தில் முஸ்லிம்கள் ஆதரவுடன் தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்கள் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட புலிகள் மவுனமாக இருப்பதென்பதும் வட தமிழீழத்தில் புலிகள் அவர்களுக்கு அரணாக இருப்பதென்பதும் ஒரு பிரதேச வாத பிரச்சினையாக தென் தமிழீழ மக்களால் பார்க்கப்படும் ஒரு போக்கு உருவாகியது.

அதை தலைமைக்கு அறிவித்ததே இதே ” பிரதேசவாத”பிரச்சினையை பின்னாளில் கையிலெடுத்து போராட்டத்தைக் கூறு போட்ட கருணாதான்.

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியிருக்காவிட்டால் ஒருவேளை அப்போதே பிரதேசவாத உடைப்பிற்கு புலிகள் முகம் கொடுத்து போராட்டம் நீர்த்துப் போயிருக்கலாம்.

இப்படி தவிர்க்க முடியாத பல நூறு காரணங்கள்.

ஆனால் எதையும் கணக்கில் எடுக்காமல் வரலாறு நெடுகிலும் புலிகளை குற்றவாளிகளாக்கும் போக்கு தொடர்வது வேதனை.

பரணி கிருசுணரஜனி
30.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 30.04.2020 /


புதன், 29 ஏப்ரல், 2020

விடுதலைப் புலிகளும் இசுலாமியத் தமிழர்களும்: மகாராசன்

தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழீழத் தமிழர்களும் இசுலாமியத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதாகவே இங்குள்ள பெரும்பான்மை இசுலாமிய அறிவுஜீவிகளின் பொதுப்புத்தியாய் உறைந்து கிடக்கிறது.

அதேவேளையில், தமிழ்த்தேசிய இனத்தின் ஓர் அங்கமாய்க் கருதி, சமயப் பண்பாட்டால் இசுலாமியர்களாக இருந்தாலும், தம்மைத் தமிழராகவே கருதுகிறார்கள் பெரும்பான்மை இசுலாமியத் தமிழர்கள். இந்நிலையில், தமிழர் ஓர்மையைச் சிதைக்கும் சாதிவாத மதவாத சக்திகள் தமிழர்களிடையே இசுலாமியர்கள் எனத் தனியாக அந்நியப்படுத்திப் பிரித்தாளும் சூழ்ச்சி வலைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஆளும் அதிகார அமைப்பாலும், சுரண்டும் வர்க்கத்தாலும், பன்னாட்டு நிறுவனங்களாலும் ஆரிய மதவாதப் பயங்கரவாதங்களாலும், இன்னபிற அரச பயங்கரவாதங்களாலும், உலக வல்லாதிக்க நாடுகளாலும் இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்த ஒடுக்குமுறைகளோடு சேர்ந்தே மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் இசுலாமியர்கள்/கிறித்துவர்கள் உள்ளிட்டவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

ஒடுக்குமுறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக எந்த சக்திகளும் ஒன்றிணைந்துவிடக் கூடாது என்றுதான் அதிகார நிறுவனங்களும் மதவாத நிறுவனங்களும் பிரித்தாளும் அரசியலை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில்தான், தமிழர்கள் வேறு; இசுலாமியர்கள் வேறு என்ற பிரித்தாளும் சூழ்ச்சி நுண் அரசியலை ஆரியவாதிகளும் இசுலாமியவாதிகளும் தனித்தனியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரித்தாளும் நுண் அரசியலுக்கு அவர்கள் முன்னெடுப்பதெல்லாம், ஈழத்தில் 1990 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய இசுலாமியர் கட்டாய வெளியேற்ற நிகழ்வு குறித்துத்தான்.

இந்நிகழ்வை மட்டுமே முன்வைத்துக்கொண்டு, விடுதலைப்புலிகளும், ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒட்டுமொத்த இசுலாமிகளுக்கே எதிரானவர்கள் என்கிற மதவாதக் கண்ணோட்டத்திலேயே தமிழர் மீதான வன்மங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் இசுலாமிய அறிவுஜீவிகள்.

சக இசுலாமியத் தமிழர்களின் மனப்போக்கை, சக தமிழர்களுக்கு எதிராகக் கட்டமைக்கும் இந்த நுண் அரசியல் வன்மங்களையும் அவதூறுகளையும் முறியடிக்க வேண்டியது அவசியம். அந்த நோக்கத்திலேயே இந்தப் பதிவு.

தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டங்களில், விடுதலைப்புலிகள் குறித்தும், அங்குள்ள சமூக நிலைமைகள் குறித்தும் அவதூறுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன. அந்த சூழலில்தான், அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் 'ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும்' எனும் நூல் எனது தொகுப்பில் 2007 இல் கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தால் வெளிவந்தது.

2008 இறுதிப்போர் தொடங்கி 2009 இனப்படுகொலை நிகழ்வு காலகட்டங்களிலும், அதற்குப் பிந்தியுமான காலத்திலும் தமிழீழ விடுதலைப் போராட்டங்கள் குறித்த அவதூறுகள் நிறையவே வெளியாகின. இந்த அவதூறுகள் எல்லாம் உண்மையானவை இல்லை என்றாலும், அவற்றுக்கான பதில்கள் வெளிவரவில்லை என்றால், அவதூறுகளே உண்மையாகக் கருதப்படும். ஆகவே, இனப்படுகொலை நிகழ்வுக்குப் பின் இருந்த தமிழினத்தின் பெரும் மவுனத்தைக் கலைக்கும் நோக்கிலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதான அவதூறுகளுக்கு மறுப்புரைக்கும் வகையிலும் 'அவதூறுகளை முறிபடிப்போம்: தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும்' என்கிற நூல் எனது தொகுப்பில் 2010 சனவரியில் பாலை பதிப்பகத்தால் வெளிவந்தது.

மேற்குறித்த இரு நூல்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதன் அரசியலை, அதன் பங்களிப்பை வரலாற்றுப்பூர்வமாகப் பேசி இருப்பதுடன், அப்போராட்டத்தின் மீதான அவதூறுகளுக்கும் விரிவான பதிலுரைகளையும் தந்துள்ளன. பல்வேறு ஆய்வாளர்கள், படைப்பாளிகள், களச் செயல்பாட்டாளர்கள், அரசியலாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களின் கட்டுரைத் தொகுப்புகள் அவை.

மேற்குறித்த நூலில், இசுலாமியர்களைக் குறித்தும், விடுதலைப்புலிகள் குறித்தும் பல பதிவுகள் உள்ளன. இசுலாமியத் தமிழர்களின் புரிதலுக்காக அவற்றுள் சில பதிவுகள் வருமாறு:

'வட கிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுவான தாயகத்தையும், பொதுவான மொழியையும், பொதுவான பொருளாதார வாழ்வையும், பொதுவான நலன்களையும், சமூகப் பொருளாதார வாழ்வு காரணமாக ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் தங்கியிருப்பதால் தமிழரும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்ட சக்தியாக ஒருங்கு சேர்ந்து தமது உரிமைக்காகப் போராடுவது அத்தியாவசியமானதாகும்.

முஸ்லிம் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றால், தமது நலன்களை அடைந்து நல்வாழ்வு காண வேண்டுமென்றால், முக்கியமாக தமது இன, மத, கலாசாரத் தனித்துவத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றால், தமிழருடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, தமிழருடன் ஒருங்கிணைந்து போராடுவதே சாலச் சிறந்ததாகும்.

தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தைக் குறைத்து, தமிழ்த்தேசிய ஒன்றியத்தைத் சிதறடிக்கும் நோக்கத்துடன் சிங்கள இனவாத அரசானது, தமிழர் முஸ்லிம் மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டிவிடும் நாசகார முயற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு, எமது தாயக பூமியையும் படிப்படியாக விழுங்கி வருகின்றது. பொதுவான எதிரியையும் பொதுவான லட்சியங்களையும் எதிர்கொள்ளும் தமிழ் முஸ்லிம் மக்கள், தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.'
/தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட 'சோசலிச தமிழீழம்' எனும் நூலில் பக்கம் 14, பத்தி 1, இரண்டாம் பகுதி. /

*
'யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய செயல், விடுதலைப்புலிகளின் இந்துத்துவ நிலைப்பாட்டிலிருந்து எடுத்த நடவடிக்கை என, தான் இப்போதும் கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்கவில்லை'
/இளைய அப்துல்லாஹ்,
ஊடகவியலாளர். /

*
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வு சரிதானா?

'தாம் முஸ்லிம்களிடம் ஏற்கனவே மன்னிப்பு கோரி இருக்கிறோம். இஸ்லாமியர்களுக்குத் தமிழர் தாயக நிலத்தில் உரிமை உண்டு'
/2002 ஆகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சர்வதேச ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போது ஆண்டன் பாலசிங்கம் அளித்த பதில். /

*
'புலிகள் முஸ்லிம் மக்களுடன் உறவு பேண விரும்பியதையும், அவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஈடுபாட்டையும் புலிகள் கொண்டிருந்தனர். காலப்போக்கில் முஸ்லிம் மக்கள் சிங்கள இனவெறி அரசுடன் உறவு பேணியதால் சில உரசல்கள் ஏற்பட்டன.

முஸ்லிம் மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில் புலிகளின் முதல் முஸ்லிம் போராளியின் படத்தைத் தாங்கியபடி 'ஒன்றிணைந்து போராடுவோம்' என்று புலிகளின் அரசியல் பிரிவு ஒரு புத்தகத்தையும் வெளியிட்டது. அந்தப் புத்தகத்தில் புலிகள், முஸ்லிம் மக்களுக்கும் தமிழர்களுக்குமான பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை முறியடிக்க ஒன்றிணைந்து போராடுதல் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தி இருந்தார்கள்.

சிங்களப் பேரினவாதம் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைச் சீர்குலைத்து பகைமையைக் கட்டமைக்கும் வழிமுறைகளில் ஈடுபட்டதையும் புலிகளின் வெளியீடுகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தன. ஆனால் முஸ்லிம் இனவாதக் குழுக்கள் பல உருவாக்கப்பட்டு, சிங்கள இனவெறி சக்தியுடன் இணைந்து கொண்டு ஆயுதம் தரித்துத் தமிழர்களை வேட்டையாடியதை வரலாறு கண்டது.

சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்த நடவடிக்கைகளில் பல முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஈடுபட்டு வந்தன. இவர்களுக்கு எதிராகப் புலிகளின் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட சிலரை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிரானவர்கள் புலிகள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. மூதூர் வெளியேற்றம் குறித்துப் பேசுகின்ற பலரும், அந்த வெளியேற்ற நடவடிக்கைகளுக்காகப் புலிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது குறித்து வாய் திறக்காமல் மூடிக் கொள்வதற்குப் பின்னணியில், பேரினவாதம் தான் ஒளிந்து கொண்டு இருக்கிறது.
/அதிரடியான்./

*
'விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவர்களை ஒழிக்கவும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கவும், இலங்கை ராஜதந்திரிகளால் பாகிஸ்தானிய மூளையால் உருவாக்கப்பட்ட ஜிஹாத் அமைப்பினர் ஆயுத தாரிகளாய் வலம் வந்தார்கள். ஆயுதங்களால் பேசினார்கள். அரசாங்கத்தின் ஆசியால் ஒரு பயங்கரவாத அமைப்பை உருவாக்கி ஆகிவிட்டது. இன்று ஜிகாத் அமைப்பிடம் இருந்து ஆயுதங்களைக் களைவது எப்படி என்பது அரச பயங்கரவாதத்திற்கு பெரும் சிக்கலாகி உள்ளது.

என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அது (புலிகள் அழிப்பு) முடிந்துவிட்டது. இனி ஜிஹாத் அமைப்பினர் ஆயுதக் குழுவாகச் செயல்படாமல் ஒரு மத அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று கெஞ்சும் வேண்டுகோள் அரசிடமிருந்து வெளியாகி ஊடகங்களிலும் இடம் பிடித்தது.'
/சூரியதீபன்./

*
'புலிகள், முஸ்லிம்களைத் துரத்தி விட்டதில் இருந்து துவங்குகிறது தமிழர் இஸ்லாமியர் வேறுபாடு. இந்த மன வேறுபாட்டை ஊட்டி வளர்த்தது இலங்கை அரசு. புலிகளால் துரத்தப்பட்ட இஸ்லாமியர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் வாழ்வதற்கான உரிமையை இலங்கை ராணுவம் மறுத்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு உள்ளேயே இருக்கிறது. அதுபோல கிழக்குத் தன்னார்வக் குழுக்களின் இறுகிய பிடிக்குள் சிக்கி இருக்கிறது எதிர்ப்பு இயக்கங்கள். மற்ற இஸ்லாமிய சந்தர்ப்பவாத தலைமையானது இலங்கை அரசோடு அதிகாரத்தைப் பகிர்ந்து இருக்கிறது.

புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு, தமிழர் அரசியல் பலவீனமடைந்து இருக்கும் சூழலில், இஸ்லாமியர்களின் குரல் வலுப்பெற்ற சூழலை இலங்கையில் இன்று நாம் காண்கிறோம். இது நல்ல விஷயம் தான். ஆனால், இஸ்லாமியத் தலைமைகள் இலங்கை அரசோடு சேர்ந்து இயங்குவதன் மூலம், கிழக்கு முஸ்லிம்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்?
/டி அருள் எழிலன்./

*
'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குச் சமராடி மரணமுற்ற இஸ்லாமியப் போராளிகளையும் இளைஞர்களையும் யுவதிகளையும் விடுதலைப் புலிகள் தமது முள்ளியவளை மாவீரர் நினைவு இல்லத்தில் ஒன்றாகவே புதைத்தனர். இஸ்லாமிய முறையின்படி இஸ்லாமிய சமாதியில் போராளிகள் புதைக்கப்படவில்லை எனும் வருத்தம்கூட ஈழத்து இஸ்லாமிய மக்களிடம் இருக்கிறது. ஆனால், சாதி மதம் கடந்தவர்களாகத் தம்மை வரித்துக் கொண்ட விடுதலைப்புலிகள், அனைவரையும் போலவே தமது அமைப்பின் இஸ்லாமிய போராளிகளையும் ஒரே மாவீரர் சமாதியில் புதைப்பது தவிர வேறுவிதமாக செயல்பட்டிருக்க முடியாது.

யாழ்ப்பாண இஸ்லாமியர் வெளியேற்ற விடயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர் பானுவும் கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த கரிகாலனும் கருணாவும்தான் முக்கிய பங்காற்றினர். அதே கருணா தற்போது ஜனநாயகவாதியாக முடிசூட்டப்பட்டிருப்பது வரலாற்றின் முரண்நகை'
/ யமுனா ராஜேந்திரன்/.

'ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழர் என்ற உணர்வோடு விடுதலைப்புலிகளின் ஈகத்தை நெஞ்சில் ஏந்தி, தமிழகத்து நிலத்தில் இன உணர்வைத் தமிழர்களுக்கு விதைக்கும் நோக்கில் தீக்குளித்து மரணித்த மாவீரன் அப்துல் ரவூப்பின் தியாகத்தை உலகத் தமிழர்களால் வணங்கப்படுகிறது. மாவீரன் அப்துல் ரவூப்பின் தியாகத்தைப் பெரும்பாலான இசுலாமிய அறிவுஜீவிகள் மறைக்கவே செய்கிறார்கள்'
/ஏர் மகாராசன்/

இன்னும் விரிவான தகவல்களுக்கு..

அவதூறுகளை முறியடிப்போம்:
தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும்.

தொகுப்பாசிரியர்: மகாராசன்.

வெளியீடு: பாலை பதிப்பகம்
விலை: உரு 90/-
தொடர்புக்கு:
9842265884, 9487352972.

தோழமையுடன்
ஏர் மகாராசன்
29.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 29.04.2020. /