செவ்வாய், 6 டிசம்பர், 2022

தமிழ் என்னும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே திராவிடம் என்பதாகும்: பி.ஆர்.அம்பேத்கர்


இதுவரை நமக்குக் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, தென்னிந்தியாவின் திராவிடர்களும் வட இந்தியாவின் அசுரர்களும் அல்லது நாகர்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள்தான் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. 

நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், ‘திராவிடர்’ என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். ‘தமிழ்’ என்னும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல். 

‘தமிழ்’ என்னும் மூலச் சொல் முதன் முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்றபோது ‘தமிதா’ என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர், ‘தமில்லா’ ஆகி, முடிவில் ‘திராவிடா’ என்று உருத்திரிந்தது. ‘திராவிடா’ என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. 

நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயம், ‘தமிழ் அல்லது திராவிடம்’ என்பது, தென்னிந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக, அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது; காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழியாகவும் திகழ்ந்தது. 

ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வட இந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு, தென்னிந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவில் இருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். 

வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டு விட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால், தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை. தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக் காத்து வந்தனர். 

ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக் கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனதில் கொண்டால், திராவிடர் என்ற பெயர் தென்னிந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

திராவிடர் என்ற சொல்லை வட இந்தியர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனென்றால், திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டு விட்டனர். ஆனால், தென்னிந்தியாவின் நாகர்களைப் பொறுத்தவரையில், திராவிட மொழியைத் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு இருந்ததால், தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர். 

அதுமட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு விட்டதன் காரணமாக, திராவிட மொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக் கொள்வது மிக மிக அவசியம் ஆயிற்று. தென்னிந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.

பார்வை நூல்:

தீண்டப்படாதவர்கள், பி.ஆர்.அம்பேத்கார், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 14, எஸ்.பெருமாள் (ப.ஆ), மறு பதிப்பு, 2008, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் நல அமைச்சகம், புது டில்லி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக