புதன், 7 டிசம்பர், 2022

இந்திய அரசின் சித்த மருத்துவப் புறக்கணிப்பை, தமிழ்நாடு அரசு ஆதரிக்கலாமா? - வான்முகில்


கடந்த 25.11.2022 அன்று, திருச்சி வந்திருந்த தமிழ்நாடு நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரசு ஆயுர்வேதக் கல்லூரி ஒன்று திருச்சியில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஓர் அரசு ஆயுர்வேதக் கல்லூரி கன்னியாகுமரி மாவட்டம் - நாகர்கோவிலில் செயல்பட்டு வருகிறது. இப்போது அமைச்சர் அறிவித்துள்ளது இரண்டாவது ஆயுர்வேதக் கல்லூரி ஆகும்.

இப்போது திருச்சியில் இரண்டாவது அரசு ஆயுர் வேதக் கல்லூரி அமைக்கவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? யார் கோரிக்கை வைத்தார்கள் என்றும் தெரியவில்லை!

இந்திய ஒன்றிய பா.ச.க. அரசு, "ஒரே இந்தியா - ஒரே பாரம்பரிய மருத்துவம் - அது சமற்கிருத ஆயுர்வேதம் மட்டுமே" என்கிறது. அந்தச் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு அரசின் ஆயுர்வேதக் கல்லூரி அறிவிப்பைப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், இந்திய முறை பாரம்பரிய மருத்துவம் என்பது சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி ஆகிய 3 மட்டுமே என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைக்குப் பின் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்த அனைத்து வடக்கத்திய அரசுகளும் இந்தியா முழுவதும் ஆயுர்வேதத்திற்கு மட்டுமே பல ஆய்வு நிறுவனங்களையும், ஒன்றிய உயர் மருத்துவ மனைகளையும் நிறுவி வளர்த்தெடுத்தன.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் போராடி, கடந்த 2005இல் தான், அப்போது ஒன்றிய நலவாழ்வுத்துறை அமைச்சகப் பொறுப்பிலிருந்த தலித் எழில்மலை, அன்புமணி இராமதாசு மற்றும் மருத்துவர் தெய்வநாயகம் ஆகியோரின் பெருமுயற்சியால் சென்னை தாம்பரத்தில் "தேசிய சித்த மருத்துவ ஆய்வு நிறுவனம்" (National Institute of Siddha - NIS) அமைக்கப்பட்டது. இன்றைக்கும் நாள்தோறும் சற்றொப்ப இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புறநோயாளிகள் பகுதியில் (OP) மட்டும் சிகிச்சை பெறும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆளும் ஆரியத்துவ பா.ச.க. அரசானது எல்லாத் துறைகளிலும் சனாதனத்தையும், சமற்கிருதமயமாக்கலையும் வெறி கொண்டு செயல்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, இந்திய முறை மருத்துவத்துறை (Department of Indian Medicine) என்றிருந்த பெயரை மாற்றி "ஆயுஷ்" என்ற (Department of AYUSH) சமற்கிருதப் பெயரைச் சூட்டியது.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சமற்கிருத ஆயுர்வேதத்திற்கும், வடக்கத்திய சனாதன யோகத்திற்கும் பல கார்ப்பரேட் சாமியார்களுடன் கூட்டு சேர்ந்து பல ஆயிரம் கோடிகளைச் செலவு செய்துள்ளது ஆரியத்துவ பா.ச.க. அரசு!

இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், இதுவரை சற்றொப்ப இரண்டாயிரம் கோடிக்கு மேல் அதற்கு நிதி ஒதுக்கி உள்ளது. இதில் சித்த மருத்துவத்திற்கென்று வெறும் எட்டு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது!

இந்நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திருச்சியில் அமைய இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை அக்கட்சியின் உட்கட்சிச் சண்டையால் மதுரைக்கு மாற்றப்பட்டது.

சித்த மருத்துவ ஆர்வலர்கள், கடந்த 2017ஆம் ஆண்டு புதுதில்லியில நிறுவப்பட்டுள்ள பெரிய 'எய்ம்ஸ் - ஆயுர்வேதா' மருத்துவமனையைப் போல், தமிழ்நாட்டில் 'எய்ம்ஸ் - சித்தா' மருத்துவமனையைத் திருச்சியில் அமைக்க வேண்டும் எனக் கோரி, அதற்குப் போராடி வருகின்றனர். அதன் பயனாக, தமிழ்நாடு அரசு பெரிய அளவில் நிலம் ஒதுக்கித் தரும்போது, அதனைச் செயல்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் பதில் தெரிவித்தது.

அதனைச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அடையாளம் காணப்பட்ட இடத்தில் 'எய்ம்ஸ் - சித்தா' மருத்துவமனை அமைக்க வேண்டும் எனச் சித்த மருத்துவகள் தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசிற்கு எந்தவகை நிதிச் சுமையும் ஏற்படுத்தாத - ஒன்றிய அரசின் நிதியின் மூலமே இத்திட்டம் செயல்படுத்தப்படும். நிலத்தை ஒதுக்கித் தருவது மட்டுமே தமிழ்நாடு அரசின் பொறுப்பாகும்!

ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளை ஆயுஷ் துறைக்கு ஒதுக்கும் இந்திய ஒன்றிய அரசின் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கான பங்கினை கேட்டுப் பெற முடியாததற்கு, 'எய்ம்ஸ் - சித்தா' போன்ற திட்டங்களும் நிறுவனங்களும் நம்மிடம் இல்லாதது ஒரு காரணமாகும்.

கடந்த 2022 செப்டம்பர் மாதம் புதுதில்லி சென்றிருந்த தமிழ்நாடு நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் இந்திய ஒன்றிய நலவாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் ஆயுஷ் அமைச்சர்களைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கு 'எய்ம்ஸ்' போன்ற சித்த மருத்துவமனை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அது ஊடகங்களிலும், மக்களிடமும் போதுமான கவனம் பெறவில்லை.

'எய்ம்ஸ் - சித்தா' மருத்துவமனை என்பது, All India Institute of Medical Science - AIIMS, All India Institute of Ayurveda - AllA போன்றது. அதாவது, All India Institute of Siddha - AlIS என்ற நிறுவனத்தைக் குறிப்பதாகும்.

இந்தியாவின் முதல் தலைமையமைச்சர் நேரு அவர்களால் 1952இல் தில்லியில் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் மருத்துவக் கல்வியிலும், உயராய்வு மருத்துவப் படிப்புகளிலும், மருத்துவ ஆராய்ச்சிகளிலும் இந்தியா தன்னிறைவு அடைவதே! அதன்பின் இந்தியா முழுமைக்கும் 8 எய்ம்ஸ் மருத்துவமனைகள் பெரிய அளவில் நிதி ஒதுக்கி அமைக்கப்பட்டன. மதுரையில் ஒன்று விரைவில் அமைய உள்ளது என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்தால் எய்ம்ஸ் மருத்துவ நிறுவனம் போல, ஆயுர்வேதத்திற்கு All India Institute of Ayurveda (AIIA) புதுதில்லியில் அமைய, மோடி அரசு 500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி 2017இல் அது தொடங்கப்பட்டது. அதன்படி பல பணிகள் நடந்துள்ளன. அப்போது அனைத்து இந்திய முறை மருத்துவத்திற்கும் இதேபோல் மருத்துவமனை நிறுவப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

எய்ம்ஸ்-ஆயுர்வேதா (AllA) மருத்துவமனையானது ஆயுர்வேதத்தில் 22 துறைகளைக் கொண்ட PG\ Ph.d.\M.S. போன்ற உயர் படிப்புகளையும், மருத்துவ ஆய்வுகளையும் மிகச் சிறப்பாக முன்னெடுப்பதற்காக ஆண்டுக்கு சுமார் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, இதன் மூலம் அரியானா, உத்தரப்பிரதேச மக்களுக்கும் சிறப்பான ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவா போன்ற சிறிய மாநிலம் தொடர்ந்து ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்து அதில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, தற்பொழுது இரண்டாவது AIIA ஆயுர்வேத மருத்துவமனை கோவாவில் விரைவில் அமைய உள்ளது.

இதேபோன்று சித்த மருத்துவத்திற்கும் எய்ம்ஸ்-சித்தா எனும் வகையில் "அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனம்" (AIIS - All India Institute of Siddha) நிறுவனத்தை அமைப்பதற்கு ஒன்றிய ஆயுஸ் அமைச்சகத்திடம் திட்டம் உள்ளது. 

"அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனம் (எய்ம்ஸ்-சித்தா)" தமிழ்நாட்டில் அமையும் போது, மிகச் சிறப்பான சித்த மருத்துவச் சேவையைத் தமிழ்நாட்டு மக்கள் பெற முடியும். அது மட்டுமன்றி, சித்த மருத்துவ உயர் படிப்புகள், சித்த மருத்துவ ஆராய்ச்சிகளும் உலகத்தரத்துடன் மேற்கொள்ளப்படும்.

புற்றுநோய்க்கான சித்த மருத்துவ ஆய்வு, தோல் நோய்க்கான சித்த மருத்துவ ஆய்வு, சர்க்கரை நோய்க்கான சித்த மருத்துவ ஆய்வு, பல புதிய வைரஸ் காய்ச்சலுக்கான சித்த மருத்துவ ஆய்வு, பெண்கள் மற்றும் குழந்தைப் பேரின்மைக்கான சித்த மருத்துவ ஆய்வு, வர்ம மருத்துவம் மற்றும் ஒடிவு முறிவுக்கான சித்த மருத்துவ ஆய்வு, சிறுநீரக நோய்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு, வளரிளம் குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு, முதியோர் நோய்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு போன்ற பல சித்த மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றிற்கு உலகத் தரத்திலான சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் இந்த (எய்ம்ஸ்-சித்தா) AllS மருந்துவமனையால் முடியும்.

இதன் வழியே, உலகத் தமிழர்கள் தீராத பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவம் வேண்டி தமிழ்நாடு வருவார்கள். அதன்மூலம் தமிழ்நாட்டின் மருத்துவச் சுற்றுலா அதிகரிக்கும்.

தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் எய்ம்ஸ்-சித்தா - AIIS அமையும்போது, அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் சிறப்பாகப் பயன்படும். ஏற்கெனவே, திருச்சி - தஞ்சை இடையே அமைய வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனையானது மதுரைக்கு மாற்றப்பட்டது. அப்போது AIIMS மருத்துவமனை கட்ட திருச்சியில் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசின் வசம் உள்ளது. அதனை AIIS சித்த மருத்துவமனை கட்ட தமிழ்நாடு அரசு ஒதுக்கினாலே போதுமானது. மற்ற அனைத்துச் செலவுகளையும் இந்திய ஒன்றிய அரசே ஏற்றுக் கொள்கிறது.

தில்லியில் உள்ள AIIA ஆயுர்வேத மருத்துவமனைக்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் இந்திய ஒன்றிய அரசு ஒதுக்கி மருத்துவச் செலவு செய்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில், இந்த முன்னெடுப்புகளைச் சீர் குலைக்கும் வகையில், சில செயல்கள் சனாதனக் கும்பல்களால் செயல்படுத்தப்படுகிறது. வரும் திசம்பர் மாதம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மருத்துவத்தின் அனைத்திந்திய மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டை ஒட்டி, தமிழ்நட்டிலுள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் குழு, இம்காப்ஸ் இயக்குனராக உள்ள பெண் மருத்துவர் மீரா சுதிர் தலைமையில், கடந்த 14.11.22 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவியை சந்தித்து, தமிழ்நாட்டில் ஆயுர்வேதம் ஒடுக்கப்படுவதாகவும் ஓரங்கட்டப்படுவதாகவும், தமிழ்நாடு அரசு இரண்டாவது ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்றும் முறையிட்டது.

ஆரியத்துவ சனாதனக் காப்பாளரான ஆளுநர் இரவி அக்கோரிக்கையை அவசரமாக தமிழ்நாடு நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். இதே குழு கடந்த 25.11.22 அன்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்து அதே கோரிக்கையை நேரில் முன்வைக்கிறது. உடனடியாக அக்கோரிக்கையை ஏற்ற அமைச்சர், 'திருச்சியில் ஆயுர்வேத மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கிறார்.

இந்தக் குழுவில் இருந்த பெண் மருத்துவர் மீரா சுதீர அவர்கள், கடந்த 12.11.22 அன்று "துக்ளக்" இணைய இதழுக்கு "தமிழ்நாட்டில் இந்தியை எப்படிப் பரப்பலாம் என்பது குறித்து விரிவாக விவாதித்தவர்! தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரைச் சந்திக்காமல், ஆரியத்துவ சேவகராக உள்ள ஆளுநரை ஆயுர்வேத மருத்துவக் குழு சந்திப்பதிலிருந்தே அவர்களது உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா முழுவதிலும் 273 ஆயுர்வேதக் கல்லூரிகள் உள்ளன. இதில் 53 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள்! இக்கல்லூரிகளில் ஆண்டுதோறும் சற்றொப்ப 27300 மாணவர்கள் சேர்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் ஒன்பது சித்த மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இதில் இரண்டு மட்டும்தான் அரசுக் கல்லூரிகள். இதில் சேர்க்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் வெறும் 650 மட்டுமே!

தமிழ்நாட்டில் சித்த மருத்துவத்தின் நிலைமை இப்படி இருக்க, தமிழ்நாடு அரசால் ஆயுர்வேதம் புறக்கணிக்கப்படுகிறது என்று கூறுவது அப்பட்டமான பொய்க் கூற்றாகும்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை முடக்கி வைத்துள்ள ஆளுநரைக் கண்டிக்காமல், அவர் மனம் குளிர வேண்டி இரண்டாவது ஆயுர்வேதக் கல்லூரியை அமைச்சர் அறிவிப்பது வேதனையானது.

பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தும், அதனைப் பல ஆண்டுகளாகியும் செயல்படுத்தவில்லை. சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட, அதனை முடக்கி வைத்துள்ள ஆளுநரிடம் இருந்து, ஒப்புதலைப் போராடிப் பெற தமிழ்நாடு நல்வாழ்வுத் துறை அமைச்சர் எவ்வகை முயற்சியும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் சித்த மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அந்தந்த மாநில அரசுகளை தமிழ்நாடு அரசு நிர்பந்திக்க முடியுமா? முடியாது! இன்று வரை தமிழ்நாடு தவிர்த்த வெளி மாநிலங்களில் ஒரு அரசு சித்த மருத்துவக் கல்லூரி கூட இல்லை என்பதே உண்மை!

அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே ஒரு தனியார் சித்த மருத்துவக் கல்லூரி உள்ளது. இதைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஒரு தனியார் சித்த மருத்துவக் கல்லூரி கூட இல்லை!

அருகிலுள்ள கர்நாடக மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் முன்பு வரை சித்த மருத்துவம் பயின்ற எவரும் மருத்துவமனை வைத்து மருத்துவம் பார்க்க முடியாது. அங்கு சித்த மருத்துவம் பார்ப்பது சட்டத்திற்கு புறம்பானது. சித்த மருத்துவர் அருளமுதனின் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்பே அங்கு தகுதி வாய்ந்த சித்த மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பது சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது.

தமிழர் மருத்துவ முறை என்ற ஒரே காரணத்திற்காக வெளி மாநிலங்களில் சித்த மருத்துவத்தை, ஆயுர்வேத மருத்துவர்கள் அனுமதிப்பதில்லை என்பதே உண்மை! 

உண்மையில், சித்த மருத்துவத்திற்கு தமிழ்நாட்டிற்கு வெளியேயும் இடமில்லை - தமிழ்நாட்டிற்கு உள்ளும் இடமில்லை என்பதே வேதனையான நிலை!

ஆயுர்வேதா- யுனானி - ஓமியோபதி ஆகியவற்றின் தலைமையகம் தில்லியில் அமைத்து, அவற்றை அங்கீகரிக்கும் இந்திய ஒன்றிய அரசு, சித்த மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் தலைமையகத்தை மட்டும் சென்னையில் வைத்தது. இதன் மூலம் தில்லியில் சித்த மருத்துவத்திற்கான அங்கீகாரம் முற்றிலும் மறுக்கப்பட்டது. இதனால் கொள்கை ரீதியாகப் பல முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சித்த மருத்துவம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது!

உலக நலவாழ்வு நிறுவனத்தின் (WHO) பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தை குசராத்தில் கடந்த ஆண்டு நிறுவியபோது, சித்த மருத்துவம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது.

தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி சித்த மருத்துவம் வளர விடக்கூடாது; தெரிந்து விடக்கூடாது என்பதில் ஆரியத்துவ ஆட்சியாளர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, இந்திய அரசால் - ஆரியத்துவ ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்படும் தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்திற்காகத் தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தேவையுள்ளது.

நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் :

1.உலகத் தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மருத்துவ அறிவாக தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தைப் பேரறிவிப்பு செய்ய வேண்டும்.

2. திருச்சியில் ஒன்றிய எய்ம்ஸ் சித்த மருத்துவமனை அமைக்க வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நிலத்தை ஒதுக்கித் தர வேண்டும்.

3. ஒன்றியத்தில் ஆயுஷ் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் பெரும் பங்கை நாம் சித்த மருத்துவத்திற்காகக் கேட்டுப் பெற வேண்டும்.

4. தமிழ்நாடு ஆளுநரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். ஆளுநரை அதை முடக்கினால் வெளியேற்ற மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

5. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவக் கல்லூரிகளைப் புதிதாக தொடங்க வேண்டும்.

6. ஏற்கெனவே நாகர்கோயிலில் திறக்கப்பட்ட ஒரு ஆயுர்வேதக் கல்லூரியே தமிழ்நாட்டிற்குப் போதுமானதாகும். புதிதாக திறந்தால் அதற்கு எதிராகப் போராட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆரியத்துவ சனாதனமும், சமற்கிருத மேலாதிக்கமும் எந்த வகையில் வந்தாலும் நாம் அதனை ஒருங்கிணைந்து சமரசமின்றிப் போராடி தடுத்து நிறுத்த வேண்டும்!

கட்டுரையாளர்: திரு வான்முகில்

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ், டிசம்பர் 2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக