திங்கள், 20 ஏப்ரல், 2020

கத்தரி வெயிலும் தமிழரின் வானியல் கணியமும்: மரு. கீதா மோகன்


கத்தரி என்றால் தற்போதைக்கு இந்த வார்த்தை காயை குறிப்பிடக்கூடிய வார்த்தையாக தான் உள்ளது. இன்னொரு இடத்தில் கத்தரி என்ற வார்த்தை பயன்படுவதை காணலாம். இரண்டு சாணம் பிடிக்கப்பட்ட இரும்பு பட்டையை ஒரு முனையில் வைத்து அதை அளவு கோலாக ஒரு பொருளை துண்டிக்க பயன்படுத்தியிருக்கிறார்கள் அந்த பொருளின் பெயர் கத்தரிகோல்.

இதே போல தான் கத்தரி வெயிலின் முக்கியத்துவம் நிலப்பகுதிக்கு முக்கியம்.

கத்தரி இந்த வார்த்தையை மறந்து நம்மையறியமால் அக்னிநட்சத்திரம் என்ற பெயரை பெருமளவு உச்சரிக்க ஆரம்பித்து விட்டோம்.
இல்லை அந்த வார்த்தையை மறக்கடிக்க பட்டோமோ என தெரியவில்லை.
அக்னி நட்சத்திரம் இந்த பெயரை நான் தொடக்க பள்ளி காலத்தில் கேள்வி பட்ட பெயர் ஏனென்றால் அப்போது தான் மணிரத்னம் அவர்கள் படத்திற்கு அந்த பெயரை சூட்டியிருந்த தருணம்.
படம் பார்த்த போது கண் கூசுவது போல சற்றும் குறையாத விளக்கொளி தான் அந்த படத்தின் சிறப்பு.
அதே போல தான் இந்த கத்தரி மீனும் சற்றும் குறையாத ஔியுடன் வானத்தில் இருக்கும்.

கத்தரி வெயில் என்பது குறிப்பிட்ட கால நேரத்தில் சூரியன் தனது பயணத்தை தொடங்கி முடிக்கும் காலம்.
வழக்கில் சித்திரை பின்னேழு வைகாசி முன்னேழு கத்தரியின் உச்ச நாட்களாகும். ஆனால் அதற்கு முன் முன்கத்தரி பின்கத்தரி என நாட்களை சேர்த்து மொத்தம் இருபத்தி ஒரு நாட்கள் கணக்கிடப்படுகிறது.
சூரியன் தனது பயணத்தை பரணி நட்சத்திரத்தில் தொடங்கி கார்த்திகை ஊடே பயணிக்கும் காலமே கத்தரி வெயில் காலம் என்று பஞ்சாங்க கணியம் கூறுகின்றது.
இந்த காலகட்டத்தில் அதிக வெய்யில் இருக்கும் எனவும் புதிதாக செயல்களை மேற்கொள்ள கூடாது எனவும் விவசாய பணிகள் அதாவது விதைத்தல் போன்றவற்றை செய்ய கூடாது எனவும் கூறப்படுகிறது.
நமது வானிலை ஆய்வு மையம் கத்தரி குறித்து கேள்வி எழுப்பினால் கத்தரி வெயிலுக்கும் வானியலுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகிறார்கள்.
சரி வேதங்களில் இது குறித்து என்ன கூறியிருக்கிறார்கள் உற்று நோக்கினால்.

அக்னி பகவனான் நோயுற்றிருந்தாராம். அவர் மிகவும் நலிவுற்றிருந்தால் இந்திரன் யமுனை ஆற்றங்கரையில் உருவாக்கிய வனத்தில் உள்ள ரிசிகள் மூலிகைளிடையே அரிய தவத்தினில் ஈடுபட்டிருந்தனராம். அந்த வனத்திற்குள் சென்று மூலிகையை பறித்து உண்ணலாம் என்று நினைத்தால் வருண பகவான் மழையை பொழிந்து விடுகிறாராம். அதனால் அக்னி பகவான் கவலையுற்றிருக்க அந்த வழியே உலா வந்த கிருஷ்ணன் அர்ஜினினடம் முறையிட எங்களிடம் பொருள் இல்லை என கூற அம்பையும் துணியையும் வழங்கி அதை கொண்டு அம்பை விட மழை வருவது நின்றது.
அக்னி பகவானும் முதல் வாரம் இலை புற்கள் இரண்டாம்வாரம் செடிகளையும் மூன்றாவது வாரம் மரங்களையும் உண்டாராம்.உடனே அவர் நோய் நீங்கியதாம்.அதற்கு பின் அம்பு விடுவதை அர்ஜினன் நிறுத்த வருண பகவான் மழை பொழிந்தாராம்.
கிருஷ்ணன் ரிசிகளிடம் மீண்டும் வனத்தை புதுப்பிக்க கூறினாராம்.
இது வேதம் கூறும் அக்னிநட்சத்திர காலம்.

இதற்குள் இருக்கும் தொல்வானியலையும் அறிவியலையும் தேட வேண்டியது நமது பொறுப்பு என கருதி கொண்டேன்.

இன்னொரு முக்கியமான நம்பிக்கையும் விவசாயிகளிடம் உள்ளது.
அதாவது இந்த கத்தரி வெயில் காலக்கட்டத்தில் புவியானது சூரியனுக்கு மிக அருகில் வரக்கூடிய காலக்கட்டம்.
அப்போது புவிக்குள் ஏற்படும் சூட்டினால் ஏற்படும் அழுத்ததினால் புவியின் மேற்பரப்பில் வெடிப்புகள் தோன்றும் இந்த வெடிப்புகளிடையே ஏற்கனவே இலையுதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் மண்ணின் ஊடே புதையும் கத்தரி வெயிலின் காலத்திற்கு பின் பெய்யும் மழையினால் மண்ணின் வளம் மேம்படுபடும். பொதுவான நிலப்பரப்பிற்கும் மட்டுமல்லாமல் கானகத்திற்கும் பொருந்தும். இதனை மண்ணின் கர்ப்போட்டம் என குறிப்பிடுகின்றனர்.

சரி தொல்வானியல் கணியத்தில் என்னவெல்லாம் குறிப்புகள் அடங்கியிருக்கிறது என காணலாம்.
கத்தரிமீன் வானியலில் பெருநாய் என அழைக்கப்படும் நட்சத்திர கூட்டத்தில் சிரயஸ் நட்சத்திரத்தை கத்தரிமீன் அல்லது அழல்மீன் என குறிப்பிடுகின்றனர். இதை வானத்தின் ராணி என ஜப்பான் நாட்டவர் கூறுகின்றனர்.
மிக ஔிர்வுடைய நட்சத்திரமாக வெறும் கண்ணுக்கு புலப்படும் நட்சத்திரமாக குறிப்பிடப்படுகிறது.
இது மிகப்பெரிய நட்சத்திரமா அல்லது செம்மை நிற நட்சத்திர கூட்டமா என்றால் இல்லை என்று தான் தொல்கணியம் கூறுகிறது. இருப்பினும் புவியில் இருந்து மிகக்குறைந்த ஔியாண்டில் பயணிப்பதால் பார்த்ததும் மிகவும் ஔிர்வாக தெரிகிறது.
இதை விட செம்மை நிற நட்சத்திரங்கள் நிறைய இருக்க இதை ஏன முக்கியமாக கருத வேண்டும்.
கிரேக்கத்தில் உள்ள குறிப்புகளில் இந்த நட்சத்திரம் கிழக்கில் தெரிந்தால் அவர்களின் அறுவடைக்காலம் என்றும் மேற்கில் தெரிந்தால் வயதானவர்களும் நோயுற்றவர்களும் மரணிப்பார்கள் என குறிப்பிடுகின்றனர்.
பண்டைய எகிப்தியர் இந்த நட்சத்திரம் வானில் தோன்றும் நாழியிலிருந்து ஆண்டை கணக்கிட்டதாக குறிப்பிடுகின்றனர்.
நம் தொல் கணியத்தில் கூட கத்தரி வெய்யிலில் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் வெறி பிடிக்கும் என கூறப்படுகிறது.
இதனை ஆங்கிலத்தில் Dog days என அழைக்கின்றனர்.

கத்தரி என்ற அழல் மீன் பெருநாய் என்னும் கேனஸ் மேஜர் என்ற நட்சத்திரத்தின் கூட்டத்தின் ஒரு ஔிர்வுடைய நட்சத்திரம்.
ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் மேற்கில் மாலை ஏழு மணிக்கு மேல் எட்டரை மணி வரை அதிக ஔிர்வுடன் வெறும் கண்ணுக்கே புலனாகும்.
மேற்கில் ஓரையன் நட்சத்திர கூட்டத்தின் கால் பகுதியில் இருக்க கூடிய நட்சத்திரம் என ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தனது கட்டுரையான பாறைகளில் விண்வெளி குறித்த ஓவியங்கள் என்ற தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

மனிதர்கள் தான் கண்டதை கேட்டதை பார்த்தவற்றை எல்லாம் ஓவியங்களாக கற்களில் வரைந்தும் பின்னாளில் பாறைகளில் செதுக்கியும் வைத்திருந்திருக்கின்றனர். அதை பற்றிய தன்னோட கள ஆய்வில புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்ட ஓவியத்தின் அடிப்படையில் ஓரையனின் என குறிப்பிடும் நட்சத்திரத்தின் இடுப்பு பகுதியான மூன்று புள்ளிகளின் கால் பகுதியில் பெருநாய் உருவத்தை வரைந்த ஒவியத்தை கண்டதாக குறிப்பிடுகிறார்.
ஓரையன் பொதுவாக சிவனை குறிக்கும் நட்சத்திரம் வேடன் என்றும் குறிப்படுவர்.
ஓரையன் என்ற வார்த்தை தமிழ் வார்த்தையே இதிலிருந்து தான் ஓரை என்றும் சமஸ்கிருதத்தில் ஹோரை என்றும் வழக்கில் வந்திருக்கிறது.
இந்த வேடன் என்ற சிவனின் கால்பகுதியில் பெருநாய் உருவ வடிவம் சிவனின் காலபைரவரின் தோற்றத்தின் அடிப்படையாகும்.
சமஸ்கிருதத்தில் இந்த பெருநாய் நட்சத்திர கூட்டத்தை மிருககவ்வியதன் என குறிப்பிடுகின்றனர்.

சூரியனுக்கு மிக அருகில் இந்த பெருநாய் என்ற நட்சத்திரகூட்டத்தின் ஔிமிக்க சிரியஸ் என்ற கத்தரி வரும் நாட்களில் கத்தரி வெயில் தொடங்குகிறது.

பண்டைய தமிழனின் தொல்கணியம் இதற்கு சரியான விளக்கத்தையும் தருகிறது.
இதனை பரிபாடல் மூலம் அறியலாம்.
பரிபாடலில் ஒரு பாடற்குறிப்பில்
சூரியனின் பயணத்தை வீதியாக பகுத்து அதனை எரி அல்லது வேழம் அல்லது மேழம் பின் சடை பின் ஆடவை என மூன்று வீதியாக பிரிக்கின்றர்.
"எரி "என்பது மேச ராசியில் சூரியன் தொடங்கும் பாதையாகும்.
அடுத்து "சடை" என்பது ஆவணி மாதத்தில் சூரியன் தனது பயணத்தை மகம் நட்சத்திரத்தில் தொடங்கும் பாதையாகும்.
"ஆடவை "என்பது மார்கழியில் சூரியன் தொடங்கும் பாதையாகும்.
முதல் பாதையான சூரியன் மேசத்தில் தொடங்கும் எரி என்ற பாதை சித்திரை, வைகாசி, ஆனி ,ஆடி ,இந்த நான்கு பாதையில் சூரியன் பயணிக்கும் காலம் முழுமையுமே புவி வெப்ப மயமாக தான் காணப்படும் என தொல் கணியம் கூறுகிறது. எனவே தான் இந்த பாதையை எரி என வைத்திருக்கின்றனர்.
இந்த பாதையை சமஸ்கிருதத்தில் ஐராவதம் என குறிப்பிடுகின்றனர்.

இந்த எரி என்ற பாதையின் தொடக்க கட்ட மாதத்தில் 'சித்திரை பின்னேழு ,
'வைகாசி முன்னேழு ,என குறிப்பிடுகின்ற கிட்டதட்ட இருபத்தி ஒரு நாட்கள் எந்த வித பருவமழை காற்றிற்கும் உட்படாத நாட்கள் எனவும் குறிப்பிடலாம்.

மாசிக்கு மேலயே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தொல்கணியம் கூறுகிறது.
அதனை வாரணரும் கணியமும் தலைப்பில் காணலாம்.
ஆனால் சித்திரைக்கு மேல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல கூடாத நாட்கள் என தொல்கணிய குறிப்புகளும் உள்ளது.
இதனை "ஆறாமீன்றவோட்ட காலம் "என்ற குறிப்பும் உள்ளது.
மீன்களின் இனப்பெருக்க காலம் என மீனவர்கள் தங்களுக்குள் கட்டுப்படாக இருந்தாலும் இந்த நாட்களில் கடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது எனவும் கூறுகின்றனர்.
சித்திரையின் ஊடே சூரியன் பயணிக்கும் காலம் "சித்திரை குழப்பம்" எனவும் அதற்கடுத்த வைகாசி மாதமும் கடல் பயணத்திற்கு இடையூறு தரும் கொந்தளிப்பு மாதங்களாக குறிப்புகள் உள்ளன.
இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்கள் மழை இன்மையால் ஆற்று நீர் கடலில் கலக்க வாய்ப்பின்மையால் கடல் நீர் அதிக உப்பு தன்மையுடன் காணப்படும்.
இதனை ஐயன் வள்ளுவர்
'நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும்' என தனது குறளில் கூறுகிறார்.
இந்த நீர்மை குன்றும் காலகட்டத்தை அகத்தியர் நட்சத்திரத்தோடு தொடர்பு படுத்தி அகத்தியர் கடல் நீரை குடித்தார் என புராண கதை கூறுகிறது.

கத்தரி நட்சத்திரமே கொடிய வெப்பநிலையை தருவதில்லை. ஓராண்டில் உச்ச அளவை எய்தும் ஒரு பருவத்தையே கத்தரி வெயில் காலம் குறிக்கும்.
அந்த காலகட்டத்தில் புவிக்கு அருகில் கத்தரி மீனை காணலாம்.
இந்த காலகட்டத்தில் புவியின் தரைப்பகுதியிலும் கடல் பகுதியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு தென்மேற்கு பருவக்காற்றாக மாற இந்த கத்தரி வெயிலின் காலகட்டம் உதவுகிறது.
இந்த காற்று தான் பின்னாளில் ரிவர்ஸ் என்ற முறைக்கு உட்பட்டு வடகிழக்கு பருவமழையாக கடலில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு மழையாக, வடகிழக்கு பருவமழை பெரும்பான்மையாக தமிழகத்திற்கு பயன்தருகிறது.
இதனை தான் வழக்கில் "தெற்க அடிச்ச காற்று திருப்பி அடிக்க எவ்வளவு காலமாகிவிட போகிறது" என கூறுவார்கள்.
இதனை பழமொழியாக கருதாமல் இதில் உள்ள அறிவியலையும் சிந்திக்க வேண்டும்.

இந்த கத்தரி காலகட்டத்தில் முடிந்த அளவு வெளியில் வராமல் இருப்பது.
நன்றாக தண்ணீர் குடிப்பது.
உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருள்களை எடுத்துக்கொள்வது.
மேலும் முறையான எண்ணெய்குளியல்களை மேற்கொள்வது கத்தரியை கடினமில்லாமல் கடக்க ஏதுவாகும்.

கத்தரி வெயிலை கடினமின்றி கடக்கும் அதே நேரத்தில் கத்திரி வெயில் என்ற வார்த்தையையும் உச்சரித்து வழக்கத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.
மொழி என்பது நமது அடையாளம் மற்றும் உணர்வு மட்டுமல்ல நமது வளம்.
நில வளம் ,நீர்வளம் ,என்பது போல மொழி வளம் மட்டுமே மரபை ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்த ஏதுவான காரணிகள்.
ஆங்கிலம் கற்க மறந்தாலும் அகராதிகள் கற்று கொடுத்து விடும்.
ஆனால் நம் தமிழின் மொழி வளத்தை அதன் செம்மையை அதன் செழுமையை உச்சரித்தால் மட்டுமே கடத்த முடியும்.

மரு.கீதா மோகன்,
சித்த மருத்துவர் மற்றும் வானியல் கணிய ஆராய்ச்சியாளர்.
20.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 20.04.2020 /

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

மருத்துவமனைகளும் மன நோயாளிகளாக ஆக்கப்படும் மனிதர்களும்: முனைவர் அ.இராமலிங்கம்

இன்று உலகமெங்கும் பல மருத்துவமனைகள் வியாபார நோக்கோடு செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளை வரம் தரும் கோயில்களாகவும், மருத்துவர்களை நம் கண்ணெதிரில் காணும் உயிர்காக்கும் கடவுள்களாகவும் நோயாளிகள் நினைக்கிறார்கள். ஆனால், பல மருத்துவர்கள் மற்ற தொழில்களைப் போல இதையும் ஒரு தொழிலாக எண்ணி இலாப நட்ட கணக்குப்பார்த்துத் செயல்பட்டு வருகிறார்கள்.

தீராத பிரச்சினைகளும் மருத்துவமனைகளுக்குச் சென்றால் தீர்ந்துவிடும் என்று எண்ணி, பல நோயாளிகள் உயிர்ப்பயத்தோடு மருத்துவமனையை நாடிச் செல்கிறார்கள்.

இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு பல மருத்துவமனைகள் வசூல் வேட்டைகளில் இறங்கி விடுகின்றன. பணம் போவது ஒரு பக்கம் என்றாலும், உயிர்ப்பயமும் மனதில் தோன்றி மக்களை மனநோயாளிகளாக்கி ஆட்டிப் படைக்கின்றன.

இதற்கு என்னையே ஓர் உதாரணமாக்கி விளக்கம் தருகிறேன்.

சிறு வயதில் எனக்கு ஏற்பட்ட ஒவ்வாமை முற்றி பீனிசமாக அதாவது சைனசைட்டிஸ் என்ற நோயாக மாறியது. ஆரம்பக் காலத்தில் நான் இதை பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல் எளிதாகக் கடந்து சென்றுவிட்டேன். அதன் விளைவாக சைனசில் பெருந்தொந்தரவு ஏற்பட்டது.

கல்லூரிப்பருவத்தில், எனக்கு அதிகாலையில் அடுக்கடுக்காய்த் தும்மல் வரும். நேரம் செல்லச் செல்ல வெயில் ஏறியவுடன் தும்மல் படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவேன்.
ஆதலால், இதை ஒரு பெரும்பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் எளிதாகக்கடந்து சென்றுவிட்டேன். அதன் விளைவு பீனிசம் என்று அழைக்கப்படக்கூடிய சைனசைட்டிஸ் என்ற ஒரு தீர்க்கமுடியாத நோய் தீவிரமடைந்தது.

ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்த பிறகும்கூட இதை நான் கண்டு கொள்ளாததால் நோய் முற்றி நாளுக்கு நாள் வீரியம் அடைந்தது.
படிக்கும் காலத்திலிருந்தே புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததால், ஒவ்வாமை மேலும் அதிகமாகி தீராத வேதனையைத் தந்தது. இயல்பான மூச்சுக்காற்றை நாசித் துவாரங்களின் மூலம் என்னால் சுவாசிக்க இயலாமல் போனது. வாய்வழியே மட்டுமே சுவாசிக்க முடிந்தது. உணவுக்கும் சுவாசத்திற்கும் வாய் மட்டுமே ஒரு வழிப்பாதை போல பயன்பட்டது. இது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது.

உதாரணமாக, பகல் நேரங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது பெரிய பிரச்சனையாகத் தோன்றாது. இரவில் தூங்கும்போது படுத்த நிலையில் இருப்பதால் மூக்கடைப்பு ஏற்பட்டு நாசித்துவாரங்கள் வழியே சுவாசிக்க இயலாமல் போகும். வாய் வழியேதான் சுவாசிக்க முடியும். இரண்டு மூன்று தலையணைகளை உயரமாக அடுக்கி, தலையை உயரமாக உயரத்தில் வைத்து வாயால் மூச்சு விட்டுத் தூங்கினால்தான் தூக்கம் வரும். பல நாட்களாக இவ்வாறு நான் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். வாசமும் தெரியாது. மணம் இல்லாததால் எந்த உணவுப் பொருட்களையும் சுவைத்துச் சாப்பிட முடியாது. மொத்தத்தில் சுவாசமும் வாசமும் மறந்து பல வருடங்கள் ஆயிற்று.

இந்த பீனிச நோயைத் தீர்க்கும் பொருட்டு மதுரையில் இருக்கும் பிரபலமான பல காது-மூக்கு-தொண்டை நிபுணர்களைச் சந்தித்து நான் ஆலோசனை பெற்றிருக்கிறேன். ஆனாலும்கூட நோயின் தீவிரம் குறைந்தபாடில்லை.
மாற்றுமுறை மருத்துவமும் எனக்குக் கை கொடுக்கவில்லை.

நான் தேடிச்செல்லும் மருத்துவர்கள் எல்லாம் இதற்கு முறையான மருந்துகள் இல்லை என்றும், அறுவைச்சிகிச்சை ஒன்று தான் நிரந்தரத்தீர்வு என்றும் சொல்வார்கள். அப்படியானால், அறுவைச்சிகிச்சை செய்துவிட்டால் நோயின் தீவிரம் குறைந்து, பாலிப் என்னும் நீர்ச்சதை மாறி நிம்மதியாக மூச்சு விட முடியுமா? எனக் கேட்டால், அதற்கு உத்தரவாதமில்லை என்றும், தூசு மற்றும் பனிக்காற்று இவற்றைச் சந்திக்க நேர்ந்தால் மீண்டும் ஒவ்வாமை ஏற்பட்டு நீர்ச்சதை வளர வாய்ப்பு இருக்கிறது என்றும், தற்போதைக்குத் தற்காலிகத் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அறுவைச் சிகிச்சை ஒன்றே தீர்வாகும் என்றும் பதிலளித்து விடுவர். பிறகு ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தும் சில மருந்துகளோடு வீடு திரும்பி விடுவேன்.

அதேவேளையில், இந்த நோய்க்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதில் எனக்கு ஆசை இல்லாமல் இல்லை. ஆனால், அதற்கு வழி இல்லையே. மருத்துவமனை சென்று அறுவைச்சிகிச்சை செய்தாலும் நிரந்தரத் தீர்வு இல்லாதபோது அந்த அறுவைச்சிகிச்சை தேவைதானா என்ற எண்ணம் என் மனதில் தோன்றும்.

விலங்கியல் படித்துவரும் மாணவர்களிடம் ஒரு சிலரைத்தவிர, அறுவைப் பெட்டி இருப்பது அரிதாகிப்போன சூழலில் விலங்கியல் ஆசிரியரான என்னிடம் முழுமையான ஓர் அறுவைப் பெட்டி இருக்கும். இதன் மூலம் நாசித்துவாரங்களில் அடைப்பை ஏற்படுத்தி வெளியே எட்டிப் பார்க்கும் நீர்ச் சதைகளை வெட்டி வீழ்த்துவேன். ஊர் அடங்கிய வேளையில் என் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நடுஇரவில் நிலைக் கண்ணாடி முன் நின்று என் நாசித் துவாரங்களில் காணப்படும் நீர்ச்சதைகளை அறுவைப் பெட்டியில் இருக்கும் கவ்வியால் கவ்வி கத்தரிக்கோலால் கத்தரிப்பேன். இவ்வாறு முப்பது முறை சுய அறுவைச்சிகிச்சைகள் நடந்தேறியிருக்கின்றன.
இவ்வாறு சுயமாக அறுவைச்சிகிச்சை செய்யும்போது உயிர் போய் உயிர் வரும் வலியைப் பொருட்படுத்தாது நீர்ச் சதைகளை வெட்டுவேன்.

இப்படியே விட்டால் சரிப்படாது என்று எண்ணி, மதுரை மாநகரில் உள்ள அம்பாளின் மருத்துவமனையை நாடி அறுவைச்சிகிச்சைக்கு ஆயத்தமானேன். வெளிநோயாளியாக வந்த நான், உள்நோயாளியானேன். அறுவைச்சிகிச்சைக்கான ஆயத்த மருந்துகள் கொடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன.

மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் வரப்பெற்று மருத்துவர் என்னிடம் வந்தார்.
மருத்துவர், ஈ.சி.ஜியிலும் எக்கோவிலும் சிறிய பிரச்சினைகள் இருக்கின்றன. இதயத்தில் கோளாறு இருப்பதாகத் தெரிகிறது என்றார். ஆகவே, ஆஞ்சியோகிராம் செய்தால் இதயப்பிரச்சினையைத் துல்லியமாக அறியலாம் என்றும் கூறினார்.

இதயத்தில் என்ன கோளாறு என்று மருத்துவரிடம் கேட்டேன். உங்களுக்கு இதயத்தாக்கு (heart attack) ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர் சொன்னார். இதயத்தாக்கு எப்போது ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவரிடம் கேட்டேன். அவர் எப்போதென்று தெரியவில்லை என்றார். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டேன்.அதற்கு சைனசு பிரச்சினைகள் இப்போது முக்கியமில்லை. இதயத்தைப் பாதுகாப்பதே இப்போதைக்கு மிக அவசியம் என்றார் மருத்துவர். புலி பிடிக்கப் போய் பூனை பிடித்த கதையாயிற்றே என்று என் மனதில் தோன்றியது.

ஒருவழியாக நான் ‌என் மனதைத்‌ திடமாக்கி, மருத்துவரிடம் ‌எனக்கு ஒரு வாரத்திற்கு மருந்துகள் கொடுங்கள் வீட்டிற்குச்சென்று ஆலோசித்து விட்டு வருகிறேன் என்று சொன்னேன். அவர் நீண்ட யோசனைக்குப் பின் மருந்துகள் தந்தார். நான் வீடு வந்தடைந்தேன்.

மருத்துவர் தந்த அதிர்ச்சியால் ஒரு வாரமாக என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. உறக்கமின்றித் தவித்தேன்.

ஒரு வாரம் கழித்து இதயம் பற்றி இரண்டாவது கருத்துப் பெற அதே மதுரை மாநகரில் கிரேக்கப் புராணங்களில் வரும் கவிதை இசைக்கடவுளின் மருத்துவமனையை அடைந்தேன். அங்கு, இதய மருத்துவர் என்னைச் சோதித்தார். ஸ்டெத்தாஸ்கோப் மட்டுமே வைத்து என்னைப் பரிசோதித்த மருத்துவர், இதயத்திற்கு ஒன்றுமில்லை என்றார். ஆனாலும், மற்றொரு மருத்துவமனையிலிருந்து இதயம் பற்றி எதிர்மறைக் கருத்துகள் பெற்றிருந்ததால் மீண்டும் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டி மருத்துவரை மன்றாடிக் கேட்டுக்கொண்டேன். மருத்துவர் வேறு வழியின்றி மருத்துவப் பரிசோதனைகள் செய்தார்.

பரிசோதனைகளின் முடிவுகளை வைத்து மருத்துவர் என்னிடம் பேசினார்.
மருத்துவர், ஈ.சி.ஜி, எக்கோ, ட்ரெட்மில் ஆகிய பரிசோதனை முடிவுகள் அனைத்தும் இயல்பாகத் தான் இருக்கின்றன. உங்கள் இதயத்திற்கு எவ்வித இடர்பாடுமில்லை, இதைத்தானே நான் முதலிலே உங்களிடம் சொன்னேன் என்றார். நான் அவரிடம் மன்னித்துவிடுங்கள் வேறு ஒரு மருத்துவமனையில் பெற்ற பரிசோதனை முடிவுகளால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகத்தான் உங்களை மீண்டும் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வற்புறுத்தினேன் என்றேன். அதற்கு மருத்துவர், பரவாயில்லை என்று சொல்லி ஏற்கெனவே இருக்கும் சர்க்கரை நோய்க்கு ஒரு மருந்தையும், புதிதாகக் கொழுப்புக்கு ஒரு மருந்தையும் கொடுத்து வாழ்நாள் முழுவதும் இந்த இரண்டு மருந்துகளையும் அருமருந்தாக எடுக்க வேண்டும் என்று கூறி வழியனுப்பினார்.
மிகுந்த மகிழ்ச்சியோடு இல்லம் வந்து சேர்ந்தேன்.

ஆக மொத்தம், ‌சைனசு பிரச்சினைக்கு எவ்வித மருந்துகளும் எடுக்கவில்லை. முறையற்ற அறுவைச் சிகிச்சைகள் முப்பதைத் தவிர முறையான அறுவைச் சிகிச்சைகள் எதுவுமில்லை.

அடிக்கடி வெந்நீர் பருகுவதையும், சுக்கு, மிளகு, திப்பிலி போட்டு காஃபி அருந்துவதையும் வழக்கமாக்கி, தினமும் நடைப்பயிற்சி செய்து வருவதால், அடைபட்ட நாசித்துவாரங்கள் திறக்கப்பட்டு இப்போது இயல்பான சுவாசமும் இருக்கிறது. வாசமும் நன்றாகத் தெரிகிறது.

இப்போது இன்னும் ஒரு செய்தி சொல்ல வேண்டியுள்ளது. அறுவைச் சிகிச்சையில்லாமலும், நவீன மருத்துவத்தின் மருந்துகள் எடுக்காமலும், எளிய உடற்பயிற்சி மற்றும் சில நாட்டு மருந்துகள் உட்கொண்டபிறகு, தீராத நாட்பட்ட நோய் தீர்கிறது என்றால், நவீன மருத்துவத்தின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையை சந்தேகிக்கத் தோன்றுவதும் இயல்பு தானே?

எப்போதாவது ஒவ்வாமையால் மூக்கடைப்பு ஏற்பட்டாலும், மீண்டும் இயல்பாக சுவாசம் கிடைக்கும். சுவாசத்துடன் வாசமும் உடன் வந்துவிடும். இதைப்போலவே வாழ்க்கையின் இறுதி நாள் வரை இருக்குமானால் வாழ்க்கை முழுக்க வசந்தம் தான்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரேவிதமான மருத்துவத்தைப் படித்தவர்கள், மருத்துவப் பரிசோதனைகளும் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட கருவிகளால் தான் செய்யப்படுகின்றன. ஆனால், பரிசோதனை முடிவுகளில் மட்டும் வேறுபாடுகள் தெரிவது ஏன் என்ற சந்தேகம் எழுகிறது.

நாம் வாழும் தேசத்தில் அனைத்தும் வணிகமாகிவிட்ட நிலையில், மருத்துவமும் வணிகத்தில் சிக்கிப்போட்ட முதலீடுகளை வேகமாக எடுக்க போட்டிப் போட்டுக் கொண்டு, உயிர்ப்பயத்தோடு வரும் நோயில்லாத அப்பாவி மக்களை மனநோயாளிகளாக்குகிறதா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

தீராத நாட்பட்ட சைனசு பிரச்சினைக்குத் தீர்வு காண, பதைபதைப்புடன் என்னைப் போன்றவர்களுக்கு இதயத்தாக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லும்போது, இதயத்தாக்கு ஏற்கனவே இல்லாவிட்டாலும் கூட, இதயம் பலவீனமாக இருந்தால் அந்த நேரத்தில் இதயத்தாக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறதே. சுலபமாக ஆஞ்சியோகிராம் செய்தால்தான் இதயத்தில் கோளாறை அறிய முடியும் என்று வாய் கூசாமல் சொல்லும் மருத்துவருக்கு, இதயம் என்ன கல்லிலா செய்யப்பட்டிருக்கிறது?

கடவுளைக் காண வாய்ப்பில்லாதபோது, கண் கண்ட கடவுள்களாக மருத்துவர்களை மக்கள் தங்கள் மனதில் எண்ணும்போது நேர்மை தவறி நடக்கலாமா? ஏனைய விடயங்களில் தவறுகள் நடந்தால் பொருட்சேதம் மட்டுமே நிகழும். மருத்துவத்தில் தவறுகள் நடந்தால் உயிர்ச்சேதம் அல்லவா நிகழும்?

கொரோனா காலங்களில்,
மருத்துவம் ஒரு மாயை என்பதையும், தனிமனிதனின் நோயெதிர்ப்பாற்றலே நோயிலிருந்து விடுபடக்காரணம் என்பதையும் கொரோனா வைரசு மெய்ப்பித்து வருகிறது. மருந்துகளுக்குக் கட்டுப்படாத கொரோனா வைரசு, நோயெதிர்ப்பாற்றல் குறைந்த மருத்துவர்களைக்கூட விட்டு வைக்கவில்லை.

மருத்துவர்களே!
தாங்கள் படித்த மருத்துவத்தைக் குறைந்தபட்ச மனசாட்சியோடு வணிகமாக்காமல் சேவை மனப்பான்மையுடன் செய்யுங்கள்.
அவ்வாறு மருத்துவர்கள் மருத்துவத்தைச் சேவையாகச் செய்தால் மருத்துவமனைகள் கோயில்களாகவும், மருத்துவர்கள் நடமாடும் கண்கண்ட கடவுள்களாகவும் மக்கள் கண்களுக்குத் தெரியும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.

முனைவர் அ.இராமலிங்கம்,
விலங்கியல் துறை இணைப்பேராசிரியர்,
ம.து. அரசுக் கல்லூரி,
சிவகங்கை.
19.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 19.04.2020 /

சித்தம்: வெறும் மருத்துவம் மட்டுமல்ல; வாழ்வின் சித்தாந்தக் களஞ்சியம் :- எழுத்தாளர் மேக்னா சுரேசு


நான், ஒரு முக்கியமான தகவலை உங்களோடு பகிர வந்துள்ளேன்.
என் நட்பின் இணைப்பில் இருக்கும் அனைவரும் அறிவர் நான் யார் என்று.
ஆனாலும், என்னை முறையாக அறிமுகப்படுத்தி விட்டே இந்த குறுங்கட்டுரைக்குள் நுழைகிறேன்.

நான் ஒரு செவிலி. அலோபதி என்று அழைக்கப்படுகின்ற ஆங்கிலவழி மருத்துவத் துறையில் நானும் ஓர் அங்கம்.

என் பயிற்சிக் காலத்தின்போதே அலோபதி குறித்த அடங்கா பெருமை எனக்குண்டு.
என்ன இருந்தாலும் ரோட்ல விழுந்து கை, கால் தனியாப் போனாலும் அதை ஒன்னு சேர்க்குற திறமையும் வசதியும் எங்ககிட்டதானே இருக்கு என அறுவை சிகிச்சைத்துறை குறித்துக் கர்வம் கொள்வேன்.
அதோடு மாற்று மருத்துவத் துறைகள் (அலோபதி, சித்தா,யுனானி, மற்றும் இயற்கை மருத்துவம்) குறித்து அவ்வளவாக உயர்ந்த சிந்தனைகளும் இருந்ததில்லை.

இதெல்லாம் எப்போது என்றால், நான் என் கல்வி முடித்துப் பணியில் இணையும் வரை மட்டுமே.

அதன் பிறகான என் உலகம் புத்தக வாசிப்பின் மூலம் எல்லைகள் உடைத்து, என் குறுகிய சிந்தையையும் மாற்றியது.

அதோடு என் மூத்த மகளுக்குப் பல அலோபதி மருத்துவமனைகளில் வைத்தியம் பார்த்துச் சோர்ந்து, அடிக்கடி சாதாரண சளித் தொற்றுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆண்டிப்பாயாடிக் மருந்துகள் கண்டு மிரண்டு, இறுதியில் என் கணவரின் தோழர் வழிகாட்டுதலின் பெயரில் ஹோமியோபதி மருத்துவத்தைச் சரண் அடைந்தேன்.

நோய் குணம் கண்டதோடு, அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்றின் கால இடைவெளியும் குறைந்தது.

ஆனால், என் பணி நிமித்தம் நாங்கள் ஊர் மாற வேண்டி இருந்ததால், எங்கள் வீட்டின் அருகில் இருந்த மற்றொரு அலோபதி குழந்தை மருத்துவரிடம் அவளுக்குத் தற்சமயம் நல ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்கிறேன்.

இந்த நிலை வரையிலும் மாற்று மருத்துவம் குறித்துப் பெரிதாய் எந்தத் தாக்கமும் எனக்கு ஏற்படவில்லை.
சித்த மருத்துவர்களின் நலன் பயக்கும் நூல்கள், மற்றும் கட்டுரைத் தொகுப்புகள் வாசிப்பவள் ஆயினும், அந்த மருத்துவம் குறித்த உள்ளொளி எனக்குப் பெரிதாய் ஏதுமில்லை.

இந்த நிலையில், எங்கள் கல்லூரியின் சார்பில் சேலத்தில் இயங்கும் சித்த மருத்துவக் கல்லூரி ஒன்றின் (observational visit ) செயல்பாடு குறித்து விளக்க, பார்வையிட அழைத்துச் சென்றார்கள்.

அன்றுதான், முதன்முறையாக நான் ஏன் இந்த அபூர்வ வகை மருத்துவத் துறையின் ஒரு அங்கமாக இல்லாமல் போய் விட்டோம் எனப் பெருங்கவலை கொண்டேன்.'யப்பா....என்ன வைத்திய முறையடா..!' இது என்று வியந்த நாள்.

முதலில் சித்த மருத்துவம் என்பது வெறும் மருத்துவத் துறை மட்டுமல்ல, வாழ்வின் பரிபூரணச் சித்தாந்தக் கொள்கைகளை உள்ளடக்கியது.

நாம் என்னதான் ஆயிரக்கணக்கில் ஆங்கில வழி மருத்துவப் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தாலும், அதன் தோற்றகாலம் மிஞ்சி மிஞ்சிப் போனால் சில பல நூற்றாண்டுகளைத் தொடுமா.?

சித்த மருத்துவத்தின் மூல நூலின் வயது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தது.
அன்று நாங்கள் பார்வையிட்ட போது, அங்கிருந்த துறை மருத்துவர்கள் சித்த மருத்துவம் பற்றி ஆற்றிய உரை சித்த மருத்துவம் குறித்த என் உள்ளொளியை முற்றிலும் மாற்றி அமைத்து.

அதில் முதலில் தன் உரையைத் துவக்கிய சித்த மருத்துவர் ஒருவர், பிரபஞ்சப் பெருவெளி வெடிப்பை உடல் சமநிலையோடு தொடர்புபடுத்திப் பேசினார். அதாவது, நோயற்ற நிலை அமைதி, அங்கு ஏற்படும் சலனம் நோய்.

இந்தப் பிரஞ்சமே முதலில் சலனமற்றுதான் இருந்தது. பிறகு ஒரு சலனம் ( பெரு வெடிப்பு) புவி தோன்றிற்று.

அதாவது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பெற்ற நூல் பிரபஞ்ச பெரு வெடிப்பைப் பேசி இருக்கிறது. நாம் இங்கு முக்கியமாக அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது வெறும் தொடக்கம் மட்டுமே. மீதம் இருந்த அத்தனை மருத்துவர்களும் உரை ஆற்றி முடித்தபோது நாங்கள் உணர்ந்தது ஒன்றுதான். சித்த மருத்துவம் நாம் கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாத வகையில் அத்தனை மருத்துவ முறைகளைக் காட்டிலும் தலை சிறந்தது.

அங்கிருந்த அத்தனை மருத்துவர்களும் தூய தமிழில் சொற்பொழிவாற்றினார்கள். நீங்கள் செவிலியர்தானே உங்களுக்கு இதெல்லாம் தேவைப்படாது என்றோ, அன்றி புரியாது என்றோ எந்த இடத்திலும் சுணக்கம் காட்டவில்லை.

அடுத்து, அவர்களின் குணபாடம் வழி மருந்து தயாரிக்கும் மருந்தாளர்களும் அவர்களே. ஆக அதிக விஷத்தன்மை வாய்ந்ததாக ஒரு இணையம் நமக்குக் காட்டும் மூலிகையை அவர்கள் process சமன் செய்து நமக்கு மருந்தாக்கித் தருவார்கள்.

நாம் டோஸ் என்று சொல்கின்ற அளவீடு அங்கும் உண்டு. ஒரு சித்த மருத்துவர் ஒரு மூலிகையைப் பறித்தவுடன் அதை சுமார் பத்து முறை ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

அதன் பிறகே அதில் என்ன கூட்ட வேண்டும்? என்ன குறைக்க வேண்டும்? அதை மருந்தாக்க அந்த மூலிகையின் எப்பகுதியைக் கையாள வேண்டும்? அதோடு வேறு என்ன பொருள் சேர்க்க வேண்டும்? என்ன வெப்பநிலை பயன்படுத்த வேண்டும்? எந்த வடிவச் கல்லில் அரைக்க வேண்டும்? இப்படி இந்தப் பட்டியல் இன்னும் மிக நீளமாய் நீண்டு கொண்டே போகும். அத்தனையும் என்னால் இங்கே பதிய முடியவில்லை . மன்னிக்கவும்.

அலோபதி முறையில் நாம் நோயாளிகளின் உடலியல், நோய்க்குறியியல், அதற்கான மருத்துவம் அவைகளை மட்டுமே வாசிப்போம்.
ஆனால், இவர்கள் அதோடு தாவரவியல் பற்றிய முழுத் தொகுப்புகளையும் படிக்க வேண்டும். மருந்துகளை அவர்களே தயார் செய்யப் பழக வேண்டும். மூலிகைகளை இனம் காணப் பழக வேண்டும்.

இப்படி பல கலைகளை உள் அடக்கியது சித்தா. அதற்காக நான் அலோபதித் துறையைக் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை.

அசலூர்க்காரி எத்தனை வசீகரம் கொண்டவளாக இருப்பினும், அம்மாவின் அழுக்கு முந்தானைக்கு ஈடாகுமா.?

சித்த வழி மருத்துவம் நம் தாய். அங்கே குறை இருப்பின் அதனை நிறை செய்ய வேண்டியதும், நம் மருத்துவக் கலையை உலகறியச் செய்ய வேண்டியதும் நம் கடமை.

ஒருங்கிணைந்த மருத்துவம் நமக்குக் கிடைத்திருக்கும் வரம்.
சரியான முறையில் அதனைப் பயன்படுத்திப் பல இன்னுயிர்களைக் காப்போம்.

அலோபதி மருத்துவர் துறையினருக்குச் சித்த மருத்துவம் குறித்த கருத்தரங்கம், விளக்கக் கூட்டம் இப்படி சிலவற்றை அரசு முனைந்து நடத்தினால், இரு துறைகளும் மற்ற துறையின் மேன்மையைப் புரிந்து கொள்ள வழிகோலும் என்று எண்ணுகிறேன்.

சித்தம் வெறும் மருத்துவம் அல்ல.... வாழ்வின் சித்தாந்த பொக்கிஷம். 'சித்தம்' தமிழின் , தமிழனின் அரிச்சுவடி. முடிந்தால் வாசித்துப் பிரபஞ்சம் அறிவோம். இல்லையேல் அமைதியாயிருப்போம்.

தாயைப் பழித்தல் நம் மரபிற்கே அழகன்று அல்லவா.

மேக்னா சுரேசு.
எழுத்தாளர்/செவிலியர்.
17.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 19.04.2020 /

சனி, 18 ஏப்ரல், 2020

வீட்டு வைத்தியமும் நாட்டு வைத்தியமும் தமிழ் மருத்துவமே! : கவிஞர் குட்டி ரேவதி

நிறைய நண்பர்கள் சித்த மருத்துவதை நூல்கள் வழியாக எப்படிக்கற்றுக் கொள்வது என்று ஆர்வத்துடன் கேட்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நிறைய அரிய சித்தமருத்துவ நூல்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். சித்தமருத்துவத்தின் பாடத்திட்டம், அதன் தத்துவமும் தமிழ் இலக்கியமும் நம் சமூக வரலாறும் குழைந்த இடத்திலிருந்து தொடங்குகிறது. முதல் நூலே, ‘தோற்றக்கிரம ஆராய்ச்சியும் சித்தமருத்துவ வரலாறும்’. இந்த நூல் வாசிக்கக் கொஞ்சம் அலுப்பான நூல். நிறைய வைதீகக் கலப்பு உள்ள நூல். ஒரு வாய்ப்பு கிடைத்தால் இந்த நூல் திருத்தி எழுதப்படவேண்டும் என்று விரும்புவேன். அதற்கு ஓர் இயக்கமே தேவை. அரசு முன்வரவேண்டும். பெருங்கூட்டத்திற்கே பணிகள் தரப்படவேண்டும். சித்த மருத்துவத்தின் தத்துவத்திற்கும் இதில் அத்தத்துவத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சனாதன விடயங்களுக்கும்  எந்தப் பொருத்தமுமில்லை, பொருளுமில்லை.

நம் மருத்துவம் என்பது  வீட்டிலிருந்தே தொடங்கப்படவேண்டும். நாட்டுவைத்தியம், வீட்டு வைத்தியம் என்று சொல்லப்படுபவை, சித்த மருத்துவத்தின் தொடக்கநிலை கல்வி போல.  நன்கு ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு வீட்டிலும் பெண்களோ முதியவர்களோ ஒரு பத்து மருந்துகளேனும் அறிந்து வைத்திருப்பார்கள். சுக்கு, வெற்றிலை, மஞ்சள், கடுக்காய் என்று சொல்வார்கள். இவற்றை வழக்கத்தில் வைத்துக்கொள்வதும், நடைமுறையில் செயல்படுத்துவதுமே தமிழ்மருத்துவப் புரிதலின் தொடக்கம்.

சித்தமருத்துவக்கல்வியில் கற்றுக்கொடுக்கப்படும் மருந்துகள் எல்லாம் உயரிய, மிக நெடிய செய்முறை விதிகள் கொண்ட மருந்துகள், நெடுங்கால நோய்களுக்கான மருந்துகள் என்று சொல்லலாம். மூலிகைகளே நம் நாட்டின் செல்வங்கள். நம் நாட்டில் அங்கும் இங்கும் மலைகள் தோறும் ஆற்றுப்படுக்கைகள் தோறும் சமவெளிகளிலும் வயல்வெளிகளிலும் அவ்வளவு அரிய மூலிகைகள் வாழ்கின்றன. ஒரு மூலிகையை அறிவதும் அதை நம் வீட்டில் வைத்திருப்பதும் அதை நம் உணவாக்கிக்கொள்வதும், மருந்தாகப் பயன்படுத்த அறிந்திருப்பதும் நம் சிறந்த அறிவுப்புலத்தில் சேர்வன.  ஒரு சித்தமருத்துவர் நோயாளிக்கு என்ன மாதிரி மருந்துகளைக் கொடுக்கலாம் என்று முடிவெடுக்கும்போது ‘வேர் பாரு, தழை பாரு, மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரு’, என்ற தத்துவத்தைத் தான் கொள்ளவேண்டும். எளிய மருந்துகளில் தொடங்கி அவை செயல்படவில்லையென்றால் தான் கடினமான பற்ப செந்தூரங்களை நோக்கி நகரவேண்டும் என்பதே உத்தி. அதிலும், வேர் மருந்துகள் மருந்து மூலப்பொருட்களைச் சத்தாக மாற்றிவைத்திருப்பவை. அங்கிருந்து தொடங்கி மூலிகைத் தழை, சமூலம், பின்பே பற்ப, செந்தூரங்கள். மூலிகைகளை அறிந்துவைத்திருப்பது ஓர் அகராதியைத் தன்னிடத்தே கொண்டிருப்பது போல.

ஒவ்வொரு வீட்டிற்கும் பத்து சிறந்த மருத்துவ முறைகள் அறிந்துவைத்திருப்பதும், மூலிகைகளின் பயன்களை அறிந்து வைத்திருப்பதுமே தமிழ் மருத்துவத்தின் மீதான உண்மையான நாட்டதின் தொடக்கம். இன்னொரு முக்கியமான விடயமும் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் உடலை நுட்பமாக அறிந்து வைத்திருத்தலும் அவசியம். தன் அன்றாட வாழ்க்கை முறை, எந்த உணவு தன் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது, எந்த நடவடிக்கை தன் உடலுக்குப் பொருந்தாது போன்றவற்றைத  தனக்குத்தானே அறிந்து வைத்திருந்து ஒழுகுவது.  தன் உடலுக்கு மருத்துவர் என்பது அவசரங்களின் போதும், நீண்ட கால நோய்களின் போதும் தாம் தேவைப்படுவது. எடுத்ததற்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாமல், சளி, காய்ச்சல், வயிற்றுத் தொல்லைகள், சிறிய காயங்கள் போன்றவற்றிற்கெல்லாம் முதலுதவி மாதிரியான மருத்துவச் சேகரிப்பைத் தன் வசமே வைத்திருக்கவேண்டும். உடல் வளர்த்தோர், உயிரும் வளர்த்தோரே.

மேற்சொன்னதே வீட்டு வைத்தியம். நாட்டு வைத்தியம் என்று பரம்பரைப் பரம்பரையா சித்தமருத்துவப்பயிற்சியைச்  சொல்கிறோம். எலும்பு முறிவு, சுளுக்கு, குழந்தைகள் வைத்தியத்திற்கு எங்கள் ஊர்ப்பக்கம் வைத்தியரை வீட்டிற்கு அழைப்பார்கள். இதில் பெரும்பாலும் மருத்துவச்சிகளாக இருப்பார்கள். பச்சிளம் குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, உடலுக்கு எண்ணெய்த் தேய்த்துவிடுவது, பெண்களுக்கு மார்பகத்தில் பால் கட்டிக்கொண்டால் சரி செய்வது என்று பரம்பரை வைத்தியர்கள் நீண்ட நெடுங்காலமாக நம் மருத்துவ மரபை, மருத்துவப்பண்பைக் காப்பாற்றி வருகிறார்கள். செங்கல்பட்டில் ஒரு களஆய்விற்காகச் சென்றிருந்த போது, ஒரு மருத்துவச்சி அந்த ஊரில் இருக்கும் 90 பெண்களுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறாராம். எல்லாமே சுகப்பிரசவம். பிரசவ காலத்திலேயே என்னென்ன சாப்பிடவேண்டும், என்னென்ன ஒழுக்கங்களைப் பின்பற்றவேண்டும் என்ற ஆலோசனைகளை எல்லாம் வழங்குவாராம்.

என்றாலும், சித்தமருத்துவத்தைத் தொழில்முறை வடிவமாகவும் சீரிய கல்வித்திட்டமாகவும் மாற்றியதில் இந்த நாட்டுவைத்தியர்கள் தாம் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர். மைய நீரோட்டத் துறையையும் பாரம்பரியத்துறையையும் இணைத்து முறைப்படுத்துவதற்கு நாம் எல்லோருமே தமிழ் மருத்துவம் குறித்தப் பெரிய விழிப்புணர்வைப் பெறவேண்டும். ஒரு மூலிகையின் மருத்துவ அறிவைப் பெற்றிருப்பதைக் கூடப் போற்றிக் கொண்டாட வேண்டும். சிறிய சிறிய தொட்டிகளில் அழகிற்காகச் செடிகள் வளர்க்காமல், அரிய மூலிகைகளை அன்றாட மருத்துவப்பயன்பாட்டிற்கு ஏற்ற மூலிகைகளை வளர்க்கத் தொடங்கவேண்டும். அடிப்படையான விழிப்புணர்வு, நடைமுறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவரும்.

மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டாம் என்பது ஆங்கில மருத்துவத்திற்குத்தான் பொருந்தும். நம் பருவங்கள், கால நிலை மாற்றங்கள், திணைகளுக்கேற்ற மூலிகைகளைக் கொண்ட மருந்துகள், உணவுகள், வாழ்க்கை முறை என்று மிக கவனமாக தமிழ் மருத்துவர்கள் மருத்துவச் சிந்தனைகளைத் தொகுத்திருக்கின்றனர். மருத்துவம் மற்றும் உடல் நலன் குறித்த மிகுந்த அச்சமூட்டும் மன உளைச்சல்களோடும் வலிகளோடும் நோய்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்கால வாழ்க்கைமுறையிலிருந்து நாம் எல்லோரும் விடுபடவேண்டும்.

செங்கல்பட்டு திருமுக்கூடலில்  உள்ள விஷ்ணு கோவிலில் பதின்னொன்றாம் நூற்றாண்டின் மருத்துவக்கல்வெட்டு காணப்படுகின்றது. நெல் தானமாக வழங்கப்பட்ட ஒரு மருத்துவரையும் அவர் சிகிச்சை வழங்க ஏதுவான பதினைந்து மருத்துவப்படுக்கைகளையும் கொண்டதைச் சொல்கின்றது. தேவைப்படுகின்ற மூலிகைகளைச் சேகரித்து வந்து மருந்து தயாரித்தோருக்கும் நெல் வழங்கப்பட்டதையும் குறிப்பிடுகின்றது. ஆசிரியர்கள், மருத்துவப்பணியாளர்கள், மாணவர்கள் பற்றிய  விவரமான குறிப்புகளைத் தருகின்றது. எல்லா காலத்திலும் நம் மருத்துவம் என்பது தனிமனிதன், வீடு, அரசு, பொதுவாழ்வு என்று எல்லாவற்றோடும் நீக்கமறக் கலந்து தான் இருந்திருக்கிறது.

கவிஞர் குட்டி ரேவதி,
18.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 18.04.2020 /

மரு.உமேரா: சித்த மருத்துவப் பெண் ஆளுமை :- மரு.வி.விக்ரம் குமார்

சித்த மருத்துவத்திற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் பெண் சரவெடி இவர்! திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாபுதூர், சவ்வாது மலையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் அரசு சித்த மருத்துவராகப் பணி புரிகிறார்! மலைப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!

ஒரு ஆண் மருத்துவர் களத்தில் இறங்கி வேலை செய்வதெல்லாம் என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய விஷயமில்லை!. திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான பின்பும், தனது மகனையும் கவனித்துக் கொண்டு, குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு களத்தில் இறங்கி தீயாய் வேலை செய்கிறார் எனும் போது, இவரைப் பற்றி எழுதாமல் இருக்க முடியுமா, இல்லை பாராட்டாமல் இருப்பதுதான் முறையா!

மலைவாழ் மக்களின் உடல் நலனை மேம்படுத்த, அவர்களுக்கான சித்த மருந்துகளை அவ்வப்போது முகாம் வைத்து மருத்துவம் பார்த்து சேர்ப்பது... சித்த மருத்துவ உரை நிகழ்த்துவது... சில நேரங்களில் போக்குவரத்து இல்லாத மலையின் குக்கிராமப் பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்து அவர்களைக் கவனித்துக் கொள்வது... எனச் சிறப்பாய் செயல்படுகிறார் மரு.உமேரா!

இவரது கணவர் நவீன மருத்துவர். அவரின் துணையோடு ஒருங்கிணைத்த மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கனவோடு செயல்படும் இளம் சித்த மருத்துவர்! உங்கள் கனவு நிச்சயம் ஈடேறும் உமேரா!...

மலைப்பகுதிதானே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தினமும் தவறாமல் சித்த மருத்துவத்திற்குப் பங்களிக்கிறார்... மலைப்பகுதியில் இருக்கும் சிறுவர் சிறுமிகளுக்குப் புத்தகங்கள் வாங்கிப் பரிசளிப்பது, முடிந்த உதவிகளைச் செய்வது என விடாமல் செயல்படுகிறார்!

நானும் இவரும் சித்த மருத்துவம் குறித்து அவ்வப்போது நிறைய விவாதிப்பதுண்டு... இருவரின் எண்ண ஓட்டமும் ஒன்றாக இருப்பதால் கூடுதல் மகிழ்ச்சி! சகோதரனாகக் கூறுகிறேன்... உங்கள் எண்ணத்திற்கும் உழைப்பிற்கும் நிறைய சாதிப்பீர்கள் சகோதரி!

இவரோடு தொலைபேசியில் உரையாடும் போது, இவரது பேச்சின் வீரியமும் ஆக்கமும் நம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமையும்!

மூலிகைகள் குறித்து... சித்த மருத்துவம் குறித்து... சித்த மருத்துவ அரசியல் குறித்து விவாதிக்கும்போது இவரது எண்ணங்கள் நேர்த்தியாக இருப்பதை உணர முடியும்!...இப்போதைய சூழலில் சித்த மருத்துவத்திற்கான வாய்ப்பு குறித்து நாங்கள் விவாதித்ததில் நிறைய புதிய விஷயங்கள் தோன்றின... செயல்படுத்துவோம்!...

இவரது சேவை... அந்த மலைக்கிராம மக்களுக்குப் பேருதவி புரியும்... இவரது சேவையைப் பாராட்டி கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த மருத்துவர் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது!...

மரு.உமேரா... போற்றப்பட வேண்டிய பெண் சித்த மருத்துவர்!

-மரு.வி.விக்ரம் குமார், எம்.டி.,(சித்தா)
அரசு சித்த மருத்துவர்.
18.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 18.04.2020 /

பறிபோன தமிழரின் வானியல் கணிய மரபு: மருத்துவர் கீதா மோகன்


சித்திரை ஒன்று என்றாலே, எல்லோரும் இது திரிபுப் புத்தாண்டு என்றும்; இல்லை, தை மாதமே தமிழ்ப் புத்தாண்டு என்றும் கூறுவதுண்டு.

புதிய ஆண்டு எதைக் கணக்கீடு செய்து வைத்திருப்பார்கள் என்ற சர்ச்சை இன்னும் பல காலம் நீடிக்கவே செய்யும்.
நமக்குத் தமிழ் மேல் பற்றும் புரிதலும் ஏற்பட்டு விட்டால் இந்த மாதிரி குழப்பங்களே வாராது..

சூரியனின் சுழற்சி, தையில் வடசெலவை அதாவது வட பகுதியைச் சுற்ற ஆரம்பித்த காலத்திலிருந்து, மீண்டும் அதே பகுதியை அடையும் வரை உள்ள கால அளவுதான் எனப் பலர் விவாதம் செய்வதைப் பார்க்கிறேன்..
ஆனால், எனக்கு நீண்ட வருடங்களாக இதை எப்படி கணக்கில் தமிழர்கள் கொண்டு வந்திருக்க முடியும்? என எனது தேடலில் எனக்குக் கிடைத்தவற்றை மட்டும் பகிர்கிறேன்.. விவாதத்திற்காக அல்ல..

தமிழர்கள் தன் மரபில் ஒரே நாள்காட்டியைத்தான் உபயோகித்தனர். ஆனால், நடைமுறைக் கணக்கில் மூன்று கணக்கீடுகளை வைத்திருந்தனர்.
ஒன்று, வருட கணக்கு அல்லது மழைக்கான கணக்கு.
இரண்டாவது, விவசாயக் கணக்கு. அதாவது, விதைத்தால் எத்தனை நாளில் பலன் கிடைக்கும்? தமிழ்நாடு மழை மறைவுப் பிரேதசம் என்பதால், என்ன மழையை எப்படி உபயோகிக்கலாம் என்பதற்கான விவசாய கணக்கு..
மூன்றாவது, பயன் கணக்கு. அதாவது, லாபக் கணக்கு. விளைந்த வேளாண் பொருள்கள் பற்றியும் அதைச் சேமித்து அடுத்த பட்டத்திற்கான விதைச் சேகரிப்பு போன்றவற்றுக்கான கணக்கு..
இப்போது புரியும் என நம்புகிறேன்.

முதலில், சித்திரை ஒன்று வரும். மழையை எதிர்பார்த்து காற்றின் வேகத்தை வைத்து இந்த வருடம் மழை எப்படி வரும்? அதன் கோள் நிலைகள் என்ன என்பதைக் கணக்கீடு செய்வதற்காக அமைத்த கணியம் சித்திரைக் கணியம்..
சித்திரை ஒன்றில் பஞ்சாங்கப் பாடலைப் படிப்பது கணிய மரபில் இருந்துதான் வந்தது..

அடுத்து, தென் செலவில் ஆரம்பிக்கும் காலத்தில் தெற்கே அடிக்கிற காற்றை வைத்து ஆடிப்பட்டம் தேடி விதைத்த விவசாயக் கணக்கு..

அடுத்து, தை மாதம் விளைந்த பொருள் வீடு வந்ததும், கதிரவனுக்கு நன்றி சொல்லி அடுத்த பருவம் வரை பொருளைப் பத்திரப்படுத்தியதின் அதற்கான கணக்கீடு..

சரி, சித்திரை ஒன்று ஏன் வருடமாகக் கணித்தார்கள்.?

சூரியன் உச்சம் என்ற நிலையை அப்போதுதான் வந்தடையும்..
சூரியன் மேழ ஓரையில் உச்சம் என்ற பகுதியை வந்தடைந்தால் தான் 360 டிகிரி கணக்கீட்டை எடுத்துக்கொள்ள முடியும்..

சுறவத்தை அதாவது மகர ஓரையில் சூரியன் உத்திராடம் நட்சத்திரத்தில் வரும் போதுதான் தை பிறக்கிறது. அதுவும் உத்திராடம் இரண்டாம் பாதத்தில் தான் தை மகள் பிறக்கிறாள். அப்படியிருக்க அதுவும் முழுநட்சத்திர நுழைவுப் பாதை கிடையாது..
மேலும், உத்திராடத்தைச் சங்கப் பாடல்களில் விழுவநாள் என்றும் குறிப்பிடுவதை காணலாம்..

மேழத்தில் உச்சத்தை ஆளும் சூரியனைச் சிலப்பதிகாரம் உச்சிக்கிழான் என்று குறிப்பிடுகின்றது.
காரணம், சித்திரை பிறந்து பத்து நாட்களில் சூரியன் நடு வானில் உச்சியில் செங்குத்தாக நிற்கும். அதற்கு நேராக ஒரு குச்சியை நடுவர். அதற்கு விழுவன் குச்சி என்று பெயர். அந்தக் குச்சியைச் சுற்றிலும் விழும் கதிர் நிழல்களைக் கணக்கில் கொண்டு சூரியன் ஒவ்வொரு ஓரையிலும் நகர்வதைக் கணக்கிட்டுக் கொண்டனர்..

அப்படி நகரும்போது வடபகுதியில் விழும் நிழலை வைத்து வடதிசை நோக்கி சூரியன் நகர்கிறது என்றும், தென் திசை நோக்கி நகர்கிறது என்றும் கணித்தனர்..

இவ்வாறாக, ஞாயிறு மண்டலத்தை வெட்டும் இரு விழுக்களைக் கணித்தனர். ஒன்று, மேழவிழு. மார்ச் 21 ஆம் நாளில் இரவும் பகலும் சமமாக இருக்கும்..
தொல்வானியலரான கணியர்கள் இந்த நிழல்களை விழியை வரைந்து விழுக்களாகக் குறித்து வைத்திருந்தனர்.

விழியில் இருந்து பிறந்த விழு பின்பு விசு என்னும் சமஸ்கிருதமாக மாறியது.
இன்றளவும் சேரநாட்டில் சித்திரை ஒன்றாம் தினத்தை விசுக்கனியாகக் கொண்டாடுவதை நாம் பார்க்கலாம்..
விசு என்னும் சமஸ்கிருதச் சொல்லின் வேர் தமிழ்தான் என ஆய்வாளர் சுந்தர் ராசு கூறுகிறார்.

சூரியன், மேழம் என்ற உச்சப்பகுதிக்குள் நுழைவதை, மேழ ஓரைக்குள் விழும் விழுவத்தை மேழவிழுவம் என்றும், மாவிழுவம் என்றும் தமிழில் குறிப்பிடுகின்றனர்.
இதைத்தான் மகாவிசுவம் என்று சமஸ்கிருத மொழியில் கூறப்படுகிறது.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாண்மீன் விராய கோணமீன்போல
மலர்தலை மன்றத்து...
மேழகத் தகரோடு சிவல்விளையாட என்ற பட்டினப்பாலை பாடல் வரிகளைக் காணலாம்.

மேழப்பகுதிக்கு வரையாட என்ற தமிழ்ப்பெயரும் உண்டு. வரையாட என்றால் தமிழில் உச்சப்பகுதி என்று பொருள். மலையின் உச்சியில் உள்ள ஒரு வகை ஆட்டின் வகையை வரையாடு என்று குறிப்பிடுவதைக் காணுங்கள்.
இந்த வரையாட என்ற வார்த்தையிலிருந்து வரு என்ற வார்த்தை உருவாகியிருக்கலாம்.
அதிலிருந்து வருடம் என்ற வார்த்தையும் பிறந்திருக்கும்.
ஏனெனில், சூரியன் மேழம் என்ற உச்சப்பகுதியை நுழைந்தவுடன் பூமியின் தரைப்பகுதியில் வெப்பம் அதிகமாகும்.
இயற்கையாகவே தரையில் வெப்பம் அதிகமானால் கடல் பகுதியில் குளிர்மைக்காற்று வீசும்.
இந்த மாறுபாடுகள் நடந்த பின், கத்தரி வெயில் காலம் கடந்த பின் தென்மேற்குப் பருவக்காற்று காலம் ஆரம்பிக்கும்.
கத்தரி நட்சத்திரம் பற்றிய விரிவான குறி்ப்பைப் பிறகு காணலாம்.

வைகாசியில் சாரல் மழை என்று சொல்லுவார்கள்.
வைகாசி பிறந்ததும் நெய்தல் நிலமான குமரி முனை மற்றும் பொதிகை மலையில் வீசும் காற்றினால் தென்மேற்குப் பருவமழை உருவாகிறது..
நெய்தல் நிலத்துக்குரிய கடவுளாக வருணனை வைத்திருப்பதன் காரணமும் இதுவே.

நாடோடிகளாக வந்தவர்களுக்குத் தொல்வானியல் அறிவு எங்கிருந்து வந்தது? என யாரும் சிந்திக்காமல், ஆரியத்திரிபு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, தமிழனின் தொல் அறிவியலான வானியிலை இன்று சோதிடமாகப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோன்று, மரபு மருத்துவம், சித்த மருத்துவம் இன்று ஆயுள்வேதம் என்ற பெயரில் உபயோகித்து வருகிறோம்..

தொல் வானியலறிவை முற்றிலும் சிதைந்த நிலையில் கற்பனைக் கதாபாத்திரங்களாக நமக்குக் கிடைக்கிறது. உண்மையான பகுத்தறிவுக் சிந்தனையாளர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மனதில் எழும் கேள்வியாலும், ஏற்கனவே உள்ள ஒடுக்கு முறையாலும் உண்மையான வருடக் கணக்கைத் திரித்தல் எனக் கூறிவிடுகிறோம்.
உண்மையில் புவியின் ஒவ்வொரு சுழற்சியும் நமக்கு விழாக்களாகவும்,
சந்திரனின் சுழற்சியை விரத நாள்களாகவும் இருப்பதற்குப் பின்னால் கணியத் தொடர்பும் நிச்சயம் இருக்கிறது.

கீதா மோகன்,
சித்த மருத்துவர் மற்றும் வானியல் கணியம் பற்றிய ஆய்வாளர்.
17.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 18.04.2020 /

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

சித்த மருத்துவத்தில் மருந்துகள் செய்முறை: கவிஞர் குட்டி ரேவதி

சித்தமருத்துவத்தில் என்னை மிகவும் ஈர்த்தவை, அதன் மருந்துச் செய்முறைகள் தாம். இரசவாதம் என்று சொன்னால் எவ்வளவு உங்களுக்கு வசீகரமானதொரு கற்பனை தோன்றுகிறதே அதற்குச் சற்றும் குறைவில்லாதவை, சித்தமருத்துவத்தின் மருந்துச் செய்முறைகள். தமிழகத்தின் முக்கியமான இரு மருத்துவர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். இருவருக்குமே அவர்களின் மருந்துத் தொழிற்சாலையில் பெரிய அளவில் லேகியம், தைலம், பற்பம் செய்யும் மருத்துவராகவே பணியாற்றினேன். கல்லூரியில் மருந்துச்செய்முறையில் அதிக வல்லமையுடைய பெண் மருத்துவப்பேராசிரியர் ஒருவருடனேயே எப்பொழுதும் சுற்றித்திரிந்து மருந்துகள் செய்யக் கற்றுக்கொண்டேன்.

மூலப்பொருட்களிலிருந்து நிறைய கவனமான செய்முறைகள் வழியாக அவை மருந்தாக மாறும் தன்மையை இரவும் பகலும் உடனிருந்து கவனிப்பது என்பது சொல்லொணா இன்பமும் அருமையும் கூட்டும் அனுபவம்.  சமைக்கவே தெரியாத நான், பிற்காலங்களில் மருந்துகள் எல்லாம் செய்யக் கற்றுக்கொண்ட பின்பு, ஒரு தக்காளி ரசத்தைக் கூட மருந்தென எண்ணிச் சமைக்கத்தொடங்கினேன்.

சித்த மருந்தின் செய்முறைக்கு வருவோம். சித்தமருந்துகளின் செய்முறைகள் மிகப்பெரிய வேதியியலாகவே அமைந்துள்ளது. தமிழ் மருத்துவர்கள், தாவரங்கள், தாதுப்பொருட்கள்(Mineral Origin), உலோகங்கள் (Metal Origin), நடமாடும் உயிர்கள் ஆகிய நான்குவகை மூலப்பொருட்களிலிருந்து மருந்துகளைத் தயாரித்துள்ளனர்.

உப்புகள் - 15, உபரசங்கள் - 20, பாடாணங்கள் (இயற்கை 32 + செயற்கை 32) - 64, உலோகங்கள் 12, மூலிகைகள் 1008  இவையே சித்தமருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள். இவை தமிழ் மருத்துவத்தின் அறிவியல் திறனை உறுதிப்படுத்துகின்றன. இந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, 32 அகமருந்துகளும், 32 புறமருந்துகளும் செய்யக் கற்றுக்கொண்டிருக்கின்றனர் தமிழ் மருத்துவர்கள்.

அகமருந்து, உள்ளுக்குக் கொடுக்கப்படுவது. புற அருந்து, வெளிப்பிரயோகத்திற்கானது.  அடை, இலேகியம், உட்களி, உருக்கு, எண்ணெய், கட்டு, கடுகு, களங்கு, கற்கம், கற்பம், குடிநீர், குருகுளிகை,குழம்பு, சத்து, சாறு, சுண்ணம், சுரசம், சுவைப்பு, சூரணம், செந்தூரம், தீநீர், தேனூறல், பற்பம், நெய், பக்குவம், பதங்கம், பிட்டு, மணப்பாகு, மாத்திரை, மெழுகு, வடகம், வெண்ணெய் ஆகியவை அகமருந்துகள். இதில் ஒவ்வொன்றிலும் பல வகைகள் உண்டு. உதாரணத்திற்கு நெய்யை எடுத்துக்கொள்வோம். பிறப்புவகையில், 12 வகை. கொதி நெய், உருக்கு நெய், புடநெய், தீநீர் நெய், சூரியப்புட நெய், மண் நெய், மர நெய், சிலை நெய், நீர் நெய், ஆவி நெய், சுடர் நெய், பொறி நெய் என்பன.
இந்தப்பன்னிரண்டு வகையையும் முடி நெய், குடி நெய், பிடி நெய், தொளை நெய், சிலை நெய் என்ற ஐந்து வகைக்குள் அடக்கலாம். இப்படியாக ஒவ்வொரு மருந்து வகையும் அவற்றின் செய்முறைக்கு ஏற்பவும், பயன்படுத்துமுறைக்கு ஏற்பவும் வகைப்பட்டுக்கொண்டே போகும்.

புற மருந்துகளாவன: அட்டை விடல், அறுவை, உறிஞ்சல், ஊதல், ஒற்றடம், கட்டுதல், கலிக்கம், களி, களிம்பு, காரம், கீறல், குருதி வாங்கல், கொம்பு கட்டல், சலாகை, சீலை, சுட்டிகை, தொக்கணம், நசியம், நாசிகாபுராணம், நீர், பசை, பற்று, பீச்சு, புகை, பூச்சு, பொட்டணம், பொடி, பொடி திமிர்தல், முறிச்சல், மை, வர்த்தி, வேது.

இன்று தற்கால மருத்துவத்தில் இருப்பது போலவே தமிழ் மருத்துவத்தின் அடிப்படை நெறிகளும் இருந்திருக்கின்றன. மருந்துப்பொருட்களின் குணமறிதல் (Pharmacognosy), ம்ருந்துகளைக் கையாளுதல் (Pharmacy), நோய்க்கேற்ற மருந்துகளைத் தரும் மருந்தியல் (Pharmacology).

புடமிட்டுத் தயாரிக்கப்படும் உப்பு, சுண்ணம், செந்தூரம், பற்பம் போன்றவற்றைச் செய்து நம் சில தலைமுறைகள் வரை அதன் மருத்துவ வீரியம், ஆற்றல் குறையாமல் பயன்படுத்தலாம். அதாவது, நான் இன்று செய்து வைக்கும் ஒரு மருந்து, என் பேத்தி, கொள்ளுப்பேத்தி தலைமுறை  வரை நோய்தீர்க்கப் பயன்படும் சொத்து. உயில் போலவே, இம்மருந்துகளையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு எழுதி வைத்துவிட்டுச் செல்லலாம்.

மணிக்கணக்கில் மூலிகைச்சாறு இட்டு அரைப்பது, கவனமாகப் புடமிடுவது, தைலத்தின் பக்குவம் தவறாமல் காய்ச்சி எடுப்பது, ஒவ்வொரு மூலிகையிலும் இருக்கும் அகநஞ்சை, புறநஞ்சை நீக்க எப்படி சுத்திகரிப்பது என்பது போன்ற நூற்றுக்கணக்கான, தனித்த செய்முறைகள் எல்லாம் இவற்றில் அடங்கும். மருந்தின் காலக்கணக்கு மிக மிக முக்கியம். மருந்தைச்செய்வதிலும் எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவிலும், மருந்தை எடுத்துக்கொள்ளும் காலத்திலும்.

மருந்துகள் சரியான பயனைத்தர, மருந்துகளைச் சரியாகச் செய்வது முக்கியம் என்பது தமிழ் மருத்துவக் கல்வியில் கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும்.

வேறு எந்த மருத்துவத்திலும் இப்படி மருத்துவரே மருந்துகள் செய்யக் கற்றுக்கொள்வதில்லை. குறிப்புச்சீட்டு எழுதிக்கொடுத்தால் போதுமானது. ஆயுர்வேதம் கூட, பிற்காலத்தில் தான் அதுவும் சித்தமருத்துவத்தின் பகுதியைத் தான் அந்த மருத்துவத்தால் பின்பற்றமுடிந்தது.

கவிஞர் குட்டி ரேவதி,
14.04.2020.

/ ஏர் இதழ் வெளியீடு / 17.04.2020 /