புதன், 8 மே, 2019

சுளுந்தீ : அனைவரின் உள்ளத்திலும் ஏற்ற வேண்டிய அறிவுத்தீ! :- மூ.செல்வம்


மதுரை நாயக்கர் ஆட்சியின் தலைமையிடமாக இருந்த, கன்னிவாடி ஜமினின் வளமையையும் வறுமையையும் மிக அழகாக சித்தரிக்கும் வரலாற்றுப் பெட்டகம்.
    முப்பது பகுதிகளையும், 471 பக்கங்களையும் கொண்டுள்ள இந்நூலில், முக்கியமில்லா பக்கங்கள் எதுவுமில்லை, அரிய தகவல்களும் சுவாரசியங்களும் பக்கத்திற்குப் பக்கம் கொட்டிக்கிடக்கிறது.
     இரண்டு மூன்று முறை தெளிவாக வாசித்துவிட்டால், வாசித்தவர் சித்த மருத்துவராக மாறிவிடும் அளவிற்கு மருத்துவச் செய்திகள் குவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று நாவல் மட்டுமல்ல சித்த மருத்துவ பெட்டகம் கூட. இவ்வளவு செய்திகளையும் எவ்வாறு இவரால் திரட்ட முடிந்ததுவென வியந்து, ஆசிரியர் இரா.முத்துநாகு அவர்களை ஆராயும் போது, அவருடைய தாத்தா கண்டமனூர் ஜமினில் அரண்மனை பண்டுவராக இருந்த செய்தி இடம்பெற்றிருந்தது, பரம்பரை பரம்பரையாக மருத்துவக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரால் தான் இவ்வளவு நுணுக்கமான செய்திகளை கொடுக்க முடியும் என உணர்ந்தேன்.
     கன்னிவாடி ஜமினில் நாவிதர் குடியில் பிறந்த, செங்குளத்து மாடனின் வீரத்தைப் பேசுகிறது நூல். அம்பட்டயர், முடிவெட்டுபவர், சவரம் செய்பவர் என அழைக்கப்படுபவர்களே நாவிதர்கள். பிறப்பு முதல் இறப்பு வரை மனித சமூகத்திற்கு நாவிதர்களின் பங்கு வியக்கத்தக்கது என்பதனை, அழகாக விரிவாக விளக்குகிறது. நூலை படித்து முடித்த பின்பு நாவிதத் தொழில் செய்பவர்களை உயர்வாகவே எண்ணத் தோன்றுகிறது.  நவிதர்களும் பண்டுவர்களும் போற்றி பாதுகாக்க வேண்டிய கலைக்களஞ்சியம் இந்நூல்.
     புதைக்கப்பட்ட சொலவடைகள் (பழமொழிகள்) பலவற்றை புதைகுழியிலிருந்து மீட்டெடுத்து புலக்கத்தில் விட்டிருப்பது பாராட்டுக்குரியது.
    வருசநாட்டுப் பகுதியில் என் அப்பனும் அம்மையும் தேடி வைத்த காட்டில் கொட்டமுந்திரி பறித்த போதும், இலவம் நெற்றை உடைத்த போதும், நாவலில் வரும் பன்றிமலை சித்தரும், பண்டுவ  இராமனும், வல்லத்தாரையும், மாடனும், கொன்றி மாயனும், வங்காரனும் மாறிமாறி என் நினைவுக்குள் வந்து, கேள்விகள் பலவற்றை எழுப்பி, என்  வேலையைக் கெடுத்த போது, என் மனம் சொன்னது நீ படித்தது சிறந்த நூல் என்று.
     நூலின் எழுத்து நடை சிறுவயதில் கேட்ட முன்னோர்களின் பேச்சுக்களை நினைவுபடுத்தியது.
     சுளுந்தீ அனைவரின் உள்ளத்திலும் ஏற்ற வேண்டிய அறிவுத்தீ!
     கற்றது கடலளவு சொன்னது கையளவு!

மூ. செல்வம்,
முதுகலை ஆசிரியர்,
வாலிப்பாறை.

வெள்ளி, 3 மே, 2019

வ.உ.சி : சாதி கடந்தவர்; சுயசாதி எதிர்ப்பைச் சுமந்தவர் :- இரெங்கையா முருகன்.


1900 கால கட்டத்தில்  ஒரு ஏழை விவசாயியைக்  காரணம் ஏதுமின்றி சம்பந்தமில்லாமல் பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாக்கினர்.  இது சம்பந்தமாக நீதிமன்ற  வாய்தா என்ற பேரில் மன உளைச்சலுக்கு உட்படுத்தி பல தடவை அலைக்கழிக்க வைத்தனர். கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக ஓட்டாபிடாரத்தில் அருகே அமைந்துள்ள கிராமத்திலிருந்து தூத்தூக்குடிக்கு கால் நடையாகவோ, வண்டி மாடு கட்டியோத்தான் செல்ல வேண்டும்.

பல காலமாக நீதிமன்றத்துக்கு அலைவதுடன் தாங்க முடியாத மன உளைச்சலுக்கும் ஆட்பட்டிருந்த அந்த தலித் விவசாயி ஒரு நாள்  கோயில் அருகே மயக்க மடைந்து சரிந்து விழுந்துள்ளார். மிகவும் விசனமடைந்து துக்கித்த நிலையில் காணப்பட்டார்.

அச் சமயம் தற்செயலாக  மயக்கமடைந்து சரிந்து வீழ்ந்த அன்பரை எதிர் நோக்கி உதவ முன் வருகிறார். மயக்கத்திலிருந்து தெளிந்த அந்த விவசாயி தனது மனக் குமுறலை ஆற்றாது உதவ வந்தவரிடம் ஒரு தகவலாக தனக்கு நேர்ந்த பிரச்னைகளை விலாவாரியாக தெரியப் படுத்துகிறார்.

வந்தவரோ பேர் போன பரம்பரை வக்கீல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த எளியோன் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் விவசாயி. அக் காலத்தில் இந்த எளியவர்களை ச்சீ என உதாசீனப்படுத்தும் மன நிலையில் இருந்த சூழலில் வந்து உதவுபவரோ வழக்கத்திற்கு மாறான வித்தியாசப் பண்புடையவர்.

அந்த விவசாயிக்கு  உதவ வந்தவர், நொந்து போன அவரது மனதிற்கு நல்ல வார்த்தைகள் கூறி ஆசுவாசப்படுத்தி விட்டு அவரது மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட கோர்ட் வழக்கு விவரங்களை கேட்டு குறிப்பு எடுத்து கொள்கிறார். மேலும் இனி மேல் தாங்கள் நீதிமன்ற படி ஏற வேண்டியது வராது. நல்ல செய்தி வீடு தேடி வரும். கவலைப் படாமல் வீடு போய் சேருங்கள்  என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.

 மயக்கமடைந்த ஏழை விவசாயிக்கு எல்லாம் கனவா இல்லை நனவா என்ற குழப்பத்துடன் அவரும் தனது வீட்டை நோக்கி நடையை கட்டிவிட்டார். மயக்கம் அடைந்து விழுந்த கோவில் அந்தப் பகுதிகளில் பிரசித்திப் பெற்ற உலகம்மன் கோவில்.

மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஏழை விவசாயிக்கு  கோர்ட் விவகாரத்தில் நன்றாக வாதாடியதன் விளைவாக  நீதி வென்றது.அந்த செய்தி  தலித் ஏழை விவசாயி வீட்டிற்கு  வந்து சேர்ந்தது. அவரால் நம்ப முடிய வில்லை. வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் திக்கு முக்காடி விட்டார்.

அந்த சமயத்தில் அந்த விவசாயி தனது  குடும்பப் பரம்பரை வாரிசுகளிடம் பின் வருமாறு கூறுகிறார். அந்த உலகம்மன் தெய்வம்தான் கடவுள் மாதிரி வந்து எனக்கு உதவுவதற்காகவே அவரை அனுப்பி வைத்துள்ளார். அவர் மூலம் வெற்றியும் கிடைத்துள்ளது. ஆகையால் இனி நமது கடைசி வம்சாவளி வரை ஆண்குழந்தை பிறந்தால் உலக நாதன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் உலகம்மை என்றும் பெயர் வையுங்கள் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாராம்.

இந்த ஏழை விவசாயிக்கு உதவ முன் வந்தவர் பேறு போன வக்கீல் குடும்பத்தைச் சார்ந்த உலகநாத பிள்ளையின் தவச் செல்வர் கப்பலோட்டிய தமிழன், தியாகத்தின் இலக்கணம் வ.உ.சிதம்பரனார். இச் செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டவர் திரு. லேனா குமார் அவர்கள்.

அவருக்கு இச் செய்தியை பகிர்ந்தவர் பாதிக்கப்பட்ட அந்த விவசாயி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் நாவலாசிரியர் சோ. தர்மன் அவர்கள்.

இந்த செவி வழிச் செய்திக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று தேட ஆரம்பிக்கும் போது வ.உ.சி. தனது சுயசரிதையில் ஒரு இடத்தில் கீழ் வருமாறு குறிப்பிடும் நான்கு வரி இடம் பெறுகிறது. இதை ஒரு அனுமானமாக எடுத்துக் கொள்ளலாம்.

“முடிமனில் என்னுடை முன்னோர் நாள் முதல்
அடிமை புரியும் அறிவினைக் கொண்ட
வேத நாயகம் எனும் மேம்படு  பள்ளனை
ஏத மில்லாமலே எண்ணிலா வழக்கில்
அமிழ்த்தினர் போலிஸார்;அனைத்தினும் திருப்பினேன்”.

இந்த வரிகளை கொண்டு மேற்கண்ட சம்பவம் ஒருவாறாக இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வலியவர்கள் எளியோரை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு வ.உ.சி.யின்  வாழ்வில் பல செய்திகள் கொட்டிக் கிடைக்கிறது. உதாரணமாக சில செய்திகளை காணலாம்.

சாதிச் செருக்கு மிகுந்த அக்காலத்தில் இரண்டு கண்களை இழந்த ராமையா தேசிகன் என்ற தேவேந்திர குல வகுப்பைச் சார்ந்தவரை தனது வீட்டில் வைத்து பாதுகாத்து உணவிட்டு வந்தவர். ஆனால் அதே வேளையில் தனது தெருவாசிகளுக்கும்  தன் சாதி சார்ந்த சமூகத்தாருக்கும்  தெரியாமல் பாதுகாத்து வருகிறார். பிறகு நாள் செல்லச் செல்ல இச் செய்தி தெரிய வந்து அவரது சமூகத்தாரிடமிருந்தே எதிர்ப்பு வருகிறது. வ.உ.சியை சாதி நீக்கம் செய்யும் அளவுக்கு போய்விடுகின்றனர்.

வ.உ.சி.யின் சுயசரிதை வரிகளில் காணலாம்

”சிவப் பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென்
தவப் பயனால் இலம் தங்கப் பெற்றேன்.
ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால்
தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்
குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென்
தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்
கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை
ஓட்டிடக் கருதி யான் உரமில்லாமையால்
‘அவளிடத்’ துரைத்திட அடுக்களை சென்றேன்.
‘’எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!
எல்லாம் கடவுளா யிருக்க வேண்டும்
உருவம் முதலிய ஒன்றினும் பேதம்
மருவுதலிலாமை மலை போல் கண்டும்,
கற்பனை யாகக் காணும் குலத்தின்
சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய!
துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண்
இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம்
ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின்
பிழையெனார் உலக பேதமை உணர்ந்தோர்.

அச் சமயம் வ.உ.சி.யின்  மனைவி பார்வை இழந்த இவருக்கு இது வரை தட்டில்தான் சாப்பாடு  அருகில் வைத்து வந்தேன். இனி மேல் நானே  கண்களை இழந்த அவருக்கு சாப்பாட்டை அவரது வாயில்  ஊட்டி விடுகிறேன் என்பதோடு மட்டுமல்லாமல் ஊட்டியும் விட்டவர். இது குறித்து வ.உ.சி.யிடம் முறையிட பயந்தார்கள் அவரைச் சார்ந்த சமூகத்தார்கள்.  காரணம் அவரது முரட்டுத்தனம். முரட்டு வக்கீல் பிள்ளை என்றே அழைப்பார்கள்

வள்ளுவ வகுப்பினரைச் சார்ந்த சுவாமி சகஜானந்தரை தனது வீட்டில் ஒரு அங்கத்தினராகவே போற்றி பாதுகாத்தவர். வ.உ.சி.தன்னுடைய அலுவல் பணிகளுக்கிடையே சகஜானந்தரையும் உடன் அழைத்துச் செல்வார். அச் சமயம் வ.உ.சியுடன் பணியாற்றுபவர்கள் வ.உ.சி.க்கு பயந்து அவர்  இல்லாத நேரத்தில் சகஜானந்தரிடம் சாதி குறித்து விசாரிப்பார்கள். வ.உ.சி.யின் அறிவுறுத்தலின் படி நானோ துறவி. துறவிக்கு ஏது சாதி என்று கூறி விடுவார்.

ஏழைகளுக்கும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கும் தனது சொந்த செலவில் வாதாடிய தென்னகத்தின் ஒரே வக்கீல் அக் காலத்தில் வ.உ.சி. ஒருவரே. இன்றைய மேம்பட்ட அரசியல்வாதிகள் 1927 ம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில்  வ.உ.சி. உரையாற்றிய அரசியல் பெருஞ்சொல் சொற்பொழிவை பால பாடமாக படியுங்கள். ஏரி, குளம், பொது தண்ணீரை எல்லா சமூக மக்களும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், சமூக மக்களிடையே பிணக்கு ஏற்படும் போது பிரச்னை இல்லாமல் எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும் ,கல்வி, மருத்துவம் இலவசமாக வழங்கிட வழி செய்தல், சுயாட்சி குறித்து மிகு விவர தகவல், தமிழ் சித்த மருத்துவத்தின் மேன்மை, தமிழர் பண்பாட்டுச் சிறப்பு, தமிழ் மொழியை வளர்ப்பதற்கென  பல்கலை கழகங்கள் முக்கியத்துவம் போன்ற பல்வேறு விசயங்களை அலசி ஆராய்ந்த சொற்பொழிவு .

இன்றைய சாதி + அரசியல் வாரிசு தலைவர்கள் வோட்டு வங்கி தேர்தல் அரசியல் சுய லாபத்திற்காக வலியவர்களாகிய இவர்கள் எளியவர்களை எவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள். சமூகத்தை எவ்வளவு பிளவுபடுத்த கங்கணம் கட்டி வேலை செய்கிறார்கள். பல தலைவர்கள் மேடையில் வீராவேசம் பேசுவார்கள். தனது சொந்த வாழ்க்கையில் சம்பந்தமில்லாத வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கிறார்கள். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க நாமும் வ.உ.சியை போன்ற உண்மையான தியாக வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க தவறியதன் பலன்தான்  சினிமாகாரர்களையும், சுயநல மிக்க கேடுகெட்ட அரசியல் வாரிசுகளுக்குத்தான் நாம் குடை பிடித்து வரவேற்க காத்திருக்கிறோம்.

மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன
    மகிழ்வொடு தாங்கிய ரேனும்

இன்னலுற் றயர்ந்தோம் எனக்கலுழ்ந் திடில் தன்
    இரு விழி நீரினை உகுப்பான்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

தமிழைத் தாழ்த்தும் நாகசாமிகள் விவாதத்திற்கு வரத் தயாரா? :- மொழியியல் அறிஞர் மா.சோ.விக்டர்.



“இவர்கள், குறிப்பாக அந்தணர்கள், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என ஒத்துக் கொள்ளமாட்டார்கள், சிறிதும் தயங்காமல், ஆடம்பர ஒலி கொண்ட சொற்களை அளந்து பார்த்து, தங்கள் மனதில் தோன்றும் முதல் சொற்களை, அவை உண்மைக்குப் புறம்பாக இருப்பினும், முழு அதிகார அரியணைக் கூற்றாகக் கொடுப்பதற்கு அஞ்சமாட்டார்கள். இக்கூற்றுகள், எத்துணை பொய்யானவை என்பது, அவர்களுடைய ஆசிரியர்கள் நூல்களை, இங்கு மங்கும் படிக்கும் போது தெளிவாகத் தெரியும்.” - வீரமா முனிவர்.1

300 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த பிராமணர்கள் பற்றி, வீரமாமுனிவர் எழுதி வைத்த குறிப்பு இது!

“தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தில் எனது பணிகள் என்பது, கடந்த 60 ஆண்டுகளாக உலகம் அறிந்தது. எனவே, என்னை தமிழ் மொழிக்கு எதிரானவன் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியது, ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல”.

“எனது கருத்தே அல்ல: திருக்குறள் வேதங்களிலிருந்து வந்தது” என்று நான் தெரிவித்ததாக, ஸ்டாலின் கூறியுள்ளார். இது எனது தனித்த பார்வையல்ல. எனக்கு முன்பாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய அறிஞர்களின் கருத்தாகும். தமிழைக் கற்றுணர்ந்த மிகப் பெரிய அறிஞர்களான பாதிரியார் பெஸ்கி, எல்லிஸ், ஜி.யு. போப், உ.வே. சாமிநாதய்யர் ஆகியோரின் கருத்துகளையே எதிரொலித்தேன். போப் தனது புத்தக்கத்தில், பகவத் கீதையை, திருக்குறள் பின்பற்றுகிறது எனத் தெரிவித்து இருக்கிறார். எனவே, திருக்குறள் தொடர்பாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழ் அறிஞர்களின் விளக்கத்தைக் கோரியிருக்க வேண்டும். 300 ஆண்டுகள் பழமையான தமிழ் வரலாற்று ஆய்வுகளைப் பற்றி, மு.க. ஸ்டாலின் அறிந்திருப்பார் என நான் கருதவில்லை. உலகத் தமிழ் அறிஞர்கள் மத்தியில், அவர் தமிழ் மொழி குறித்து தனது அறியாமையை வெளிபடுத்திவிட்டார்.”

- தினமணி, 08.03.2019.

மேற்கண்ட மறுப்பு அறிக்கை, தமிழ்நாடு தொல்லியல் துறை மேனாள் இயக்குநர் திரு. நாகசாமி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

திரு. மு.க. ஸ்டாலினுக்கு தமிழைப் பற்றி எதுவும் தெரியாது என்ற மிகப்பெரிய உண்மையை, திரு. நாகசாமி கண்டுபிடித்துவிட்டார் எனலாம். திருக்குறள், பகவத் கீதையின் வழி நூல் என்பதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த அறிஞர்கள் கூறியிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட அறிஞர்களில் பெஸ்கி என்ற வீரமாமுனிவர் மட்டும் 300 ஆண்டுகளுக்கு முன்பு அறியப்பட்டவர். மற்றவர் அனைவரும், கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்திருந்தவர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் கூறிய செய்திகளை, திரு. நாகசாமி தெரிவிக்கவில்லை. அவ்வாறு எவரும் கூறவில்லை என்பதுதான் உண்மை நிலை.

பாதிரியர் பெஸ்கி, அந்தணர்களைப் பற்றிக் கொண்டிருந்த மதிப்பீடு, திரு. நாகசாமி அவர்களுக்கு பொருந்தும். பெஸ்கி என்கிற வீரமாமுனிவர், தம் வாழ்நாளில் படைத்துள்ள 36 நூல்களில், திருக்குறள், பகவத்கீதையின் வழிநூல் என்று எங்குமே குறிப்பிடவில்லை. முழுப் பொய்யைக் கூறி, திரு. நாகசாமி, இல்லாத சான்றுகளை, இருப்பதாகக் கூறுகிறார்.

எல்லிஸ், ஜி.யு.போப் ஆகிய இரு ஐரோப்பியர்களும் தமிழின்பால் பற்று கொண்டவர்கள். கால்டுவெல்லைப் போல், சமற்கிருதத்தால் தமிழ் வளம் பெற்றது, சமற்கிருதத்தின் உதவியின்றி, தமிழால் தனித்தியங்க முடியாது என்று அவர்கள் சொன்னதாகப் பதிவுகள் இல்லை. எல்லிஸ், திராவிடம் என்ற சொல்லையே பயன்படுத்தாதவர்.

திரு. உ.வே. சாமிநாதய்யரைப் பற்றி முரண்பாடான செய்திகள் உள்ளன. ‘தமிழ்த்தாத்தா’ என்று அனைவராலும் போற்றப்படும் திரு. உ.வே.சா வின் மறு பக்கம் பற்றிப் பலரும் அறியாதிருக்கின்றனர். புறனானூற்றுப் பாடல் ஒன்றில், மூலத்தையே அவர் திருத்தியிருப்பது, அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது 2.

‘என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்று நூலில், பெருமாள் கோயில் இருப்பதால், அரியலூர் என்ற பெயர் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1830களில், ஆங்கிலேயர் வெளியிட்டுள்ள கெசட்டில், அரி என்ற சொல்லுக்குப் பனைமரம் என்றும், பனை மரங்கள் மிகுந்திருந்ததால், அவ்வூர், அரியலூர் என்று சொல்லப்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாவை வணங்கி வந்த நடைமுறை, சங்க காலத்திலேய இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். “படைத்தோன் மன்ற அப்பண்பிலான்” என்ற புறநானூற்று வரியில் உள்ள, படைத்தோன் என்ற சொல்லுக்கு, பிரம்மன் என்று உரையெழுதியுள்ளார். இவ்வுலகில் படைத்ததாகக் கூறப்படும் இறைவன் பண்பில்லாதவன் என்று, பக்குடுக்கையார் சாடுகிறார். பண்பில்லாத கடவுளாக, பிரம்மனை திரு. உ.வே.சா கூறுகிறாரா என்று தெரியவில்லை.

‘பிள்ளையார் வணக்கம்’ சங்க காலத்திலேயே இருந்தது என்று மற்றொரு உண்மைக்கு மாறான தகவலை, திரு. உ.வே.சா முன் வைக்கிறார். உ என்ற எழுத்து பிள்ளையாரைக் குறிப்பதாகவும் கூறுகிறார் 5. தமிழரின் உலகளாவிய மாந்த நேயத்தைக் கொச்சைப்படுத்தும் விளக்கம் இது!

தமிழ் இலக்கியங்கள், உலகம் என்ற சொல்லை முதன்மைப்படுத்தியே, தொடங்குகின்றன. சங்க இலக்கியங்கள் முதல் இடைக்கால இலக்கியங்கள் வரை இந்நடை பொருந்தும்6. பிற்காலத்தில், உலகம் என்ற சொல்லைச் சுருக்கி, உ என்ற எழுத்தை மட்டும், தமிழர்கள் பயன்படுத்தி வந்தனர். பிள்ளையார் வணக்க முறை, பல்லவர் காலத்திலிருந்து தொடங்குவதாக வரலாறு கூறுகிறது.

முரண்பாடான செய்திகளைத் தரும் திரு. உ.வே.சாவை, திரு நாகசாமி, தன் கருத்துக்கு வலிமை சேர்க்க முயல்கிறார். எதைச் சொன்னாலும் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற காலம் ஒன்று இருந்தது. இன்று, ஆய்வுகள் மலர்ந்து, உண்மைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. திரு. நாகசாமி, பழைய சிந்தனை களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழ் மரபில் தோன்றிய தமிழனால் தான், தமிழ் மொழியின் தொன்மையையும், நுட்பத்தையும் ஆழத்தையும் ஆய்வு செய்ய இயலும். அயன்மொழிக்காரர்களும், வெளி நாட்டவரும் தமிழர் வரலாற்றையும் தமிழையும் ஆய்வு செய்வது, நுனிப்புல் மேய்வதையொக்கும்” என்று தேவநேயப் பாவணர் உறுதிபடக் கூறுகிறார். வீட்டில் ஒரு மொழியும், நாட்டில் ஒருமொழியும், ஏட்டில் ஒரு மொழியும் கொண்டுள்ள திரு. நாகசாமி, தமிழ்மொழியையும், தமிழர் வரலாற்றையும் ஆய்வு செய்யத் தகுதியற்றவர். அவர் துணைக்கு அழைத்திருப்பவர்களும் அவ்வாறே என்க.

ஒரு தொல்லியலாளருக்கு, பன்முகத் திறமைகள் வேண்டும். சுவர்களில் உள்ளவற்றை தூசி தட்டி, படித்துப் பார்ப்பது மட்டும் தொல்லியலாளரின் பணியன்று. தமிழரின் பல்லாண்டுக்கால வரலாற்றை, கி.மு. 500 ஆண்டுகளில் சுருக்கி, அதனை அரசாங்க ஒப்புதலோடு பதிவு செய்தவர், திரு. நாகசாமி அவர்கள். இடைக்காலக் கல்வெட்டுகளையே, தமிழ்நாடு தொல்லியல் துறை முதன்மைப் பணியாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளது.

பனிக்காலம், பனி உருகல் காலம், கண்டப் பெயர்ச்சி, நிலத்தடித் தட்டுகளின் பெயர்ச்சி, ஆழிப்பேரலைகளுக்கான தோற்றக் காரணங்கள் பற்றிய செய்திகள் எவையும் தமிழ்நாட்டுத் தொல்லியலாளர்கள் அறிந்திருக்கவில்லை. சங்க இலக்கியங்களிலும், தமிழ் மொழியின் மூலம், வேர் போன்ற நுட்பமான துறை களிலும் நாகசாமிக்குப் பயிற்சி இல்லை.

ஆதிச்சநல்லூரின் பொருநையாற்று நாகரிகம், மதுரை, கீழடியின் வையையாற்று நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், யூப்ரடீஸ் - தைகிரீஸ் சமவெளி நாகரிகம், நைல் ஆற்று நாகரிகங்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, பழந்தமிழர் நாகரிகமே என்பதை திரு. நாகசாமி அறிந்திருக்கமாட்டார். சுமேரிய, பாபிலோனிய, எபிறேய மொழி இலக்கியங்களில், ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், திரிந்தும் திரியாமலும் இருப்பதையும் திரு. நாகசாமி அறிந்திருக்கவில்லை.

இவ்விலக்கியங்களில், பழந்தமிழர் வரலாறு பொதிந்து கிடப்பதை, தொல்லியலாளர்கள் அறிய முயற்சிப்பது மில்லை. கிணற்றுத் தவளைகள் போல், கடந்த 100 ஆண்டுகளாக, சொன்னவற்றையே, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் தொல்லியல் துறையை, பின்னோக்கித் தள்ளிச் சென்ற பெருமைகளுக்கு உரியவர் திரு. நாகசாமி.

அவருக்குத் தெரிந்தவை, சமற்கிருதம், வேதங்கள், பகவத் கீதை, இதிகாசங்கள், புராணங்கள் போன்றவையே. சமற்கிருதத்திலிருந்தே தமிழ் மொழி தோன்றியது என்று, தமிழ்நாட்டு அறிஞர்கள் எவரும் இதுவரை சொல்லவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழைப் படித்து, தமிழர்களால் வாழ்வு பெற்ற தமிழரல்லாதவர்கள் தாம் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

மொழி, வரலாறு பற்றி ஆய்வு செய்த திரு. நாகசாமி, சமற்கிருத மொழியின் தோற்றக்காலம் பற்றி, விளக்க முன்வருவதில்லை. தமிழின் தொன்மையையும் அவர் அறிந்திருக்கவில்லை. அரைவேக்காட்டு அறிவுடன், திரு. நாகசாமி கூறும் செய்திகளை, தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டியதில்லை. திரு. நாகசாமியை விட, திறமை மிக்க, அறிவு சார்ந்த வரலாற்று மொழியில் துறை சார்ந்த ஆய்வாளர்கள், தமிழகத்தில் உள்ளனர் என்பதை, திரு. நாகசாமி மறந்துவிட வேண்டாம்.

தமிழ்ச் சொற்களால் கி.மு.2000 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு கமுக்க மொழி. மன்னர்களுக்கும், பிற்காலத்தில் வணிகர்களுக்கும் பயன்பட்டிருந்தது. இக்கமுக்க மொழி பற்றிய செய்திகள் மேலை நாகரிகங்களிலும் காணப் படுகின்றன 7.

சிந்து வெளி நாகரிக மறைவுக்குப் பின் தோன்றிய வட்டார அரசுகள், தங்கள் ஆவணங்களை, கமுக்க மொழியில் பதிவு செய்து வைத்திருந்தன. அடுத்தடுத்து இந்தியாவுக்குள் நுழைந்த ஊணர்கள், பாரசீகர்கள், மங்கோலியர்களின் மொழிகள், இக்கமுக்க மொழியில் கலந்தன. தொடக்கத்தில் ஆரியர்களுக்கு இம்மொழி பற்றிய தெளிவு இருந்ததில்லை. பிற்காலத்தில் அக்கமுக்க மொழிகளுடன் கலந்து, பிராகிருதம் என்ற மொழி உருவாயிற்று8.

பிராகிருதம், கிரேக்கர்களின் வருகைக்குப் பின், சமற்கிருதமாக உருப்பெற்றது. சமற்கிருதம் (SAMSKRU) எனத் திரிந்தது. ஆங்கிலத்தில் சான்ஸ்கிரீட் எனப்பட்டது. கிரேக்கர்களின் வருகைக்கு முன் அம்மொழிக்கு, கீர்வாணம் என்ற பெயர் இருந்ததாக, சிவத்தியாநாநந்த சுவாமிகள் தனது, ரிக்வேத சம்ஹிதை என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் 11. அக்கால அளவுகளில், சமற்கிருதத் துக்கான வரிவடிவம் கண்டறியப்படவில்லை.

சமற்கிருத வேதங்கள் மற்ற இலக்கியங்கள் அனைத்தும் வாய் மொழியாகவே, தலைமுறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில். குசராத்தில் ஆட்சி செய்த ருத்திர தாமன் காலத்தில்தான், முழுமை செய்யப்படாத சமற்கிருத எழுத்துக்களைக் கொண்ட கல் வெட்டு, முதன் முதலில் அறியப் படுகின்றது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே, வாய் மொழியாகச் சொல்லப்பட்ட வேதங்கள் உள்ளிட்டவை, எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டன. இந்தச் செய்திகள் பற்றியெல்லாம், திரு நாகசாமி உள்ளிட்ட தொல்லியலாளர்கள் வாய் திறப்பதில்லை.

வேதங்களில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று பலர் கூறுவதுண்டு. வேதங்களே தமிழில்தான் எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு. இந்தியர்களுக்கு, ஆரியர்கள்தாம், அறிவியல், கணக்கியல், வானியல் போன்ற வற்றைக் கற்றுத் தந்தனர். தமிழரும் அவர்களிடமிருந்தே கற்றனர் என்று திரு. நாகசாமி கூறி வருகிறார்.

இதற்கு மாறான செய்தியை, சமற்கிருத அறிஞர், மோனியர் வில்லியம்ஸ் கூறுகிறார் 12. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வானியல், அறிவியல் தொடர்பான செய்திகளுக்கும் ஆரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், அவர்கள் பஞ்சாபில் குடியேறுவதற்கு முன்பே (4000 - 2500), இந்தியப் பழங்குடிகள் அவற்றை அறிந்திருந்தனர் என்றும், அச்செய்திகளையே, 1400 - 1000 ஆண்டுகளில் வேதத்தில் இணைத்துக் கொண்டனர் என்றும், ஆரியர்கள் கூறிவரும் பொய்யைப் போட்டு உடைக்கிறார். மோனியர் வில்லியம்ஸ்

வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த வேதங்கள், கி.பி. 200 ஆண்டுகளுக்குப் பிறகே, எழுத்து வடிவம் பெற்றன என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறுகிறார். ரிக் வேதத்தின் 10 ஆவது அதிகாரமான புருஷ சூக்தம், கி.பி 500 ஆண்டுகளுக்குப் பிறகே, வேதத்தில் இணைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். முதல் பகுதிகளில் காணப்படும் மொழி நடையும், 10ஆவது சூக்த மொழி நடையும் மாறு பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் 13. இவற்றுக் கெல்லாம், தொல்லியலாளர்கள் மறுப்போ, விளக்கமோ கூறுவதில்லை.

முன்னர் சொல்லப்பட்ட செய்திகளுடன், எழுத்து வடிவில் கொடுக்கப்பட்ட காலங்களில், அந்தச் சூழ் நிலைக்கு ஏற்ப புதிய செய்திகளையும் இணைத்துள்ளனர். அவ்வாறுதான், மனுவின் சட்டங்கள், வங்காள ஆளுநரும், நடுவர் மன்றத் தலைவருமான வில்லியம் ஜோன்சிடம், மூலத்தை விட, விரிவாக இணைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டன. கி.பி.1780களில் தான் மனுவின் சட்டங்கள் எழுத்து வடிவம் பெற்றன.

மகாபாரதக் கதை, வாய் மொழியாகவே சொல்லப் பட்டு வந்த நிலையில், கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட, மூலக்கதையோடு பல கிளைக் கதைகள் இணைக்கப்பட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பகவத் கீதையும் அவ்வாறு, கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, இணைக்கப்பட்டது. திருக்குறள், பகவத்கீதையின் தழுவல் என்று கூற, எவ்வகையான சான்றுகளும் இல்லை.

கருத்தியல் முரண்பாடுகளும் மிகுதியாக உள்ளன. “உலகில் சாதிக் கட்டமைப்புகள் தகர்க்கப்படும்போது, மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து வந்து, அக்கட்டமைப்பைத் தகர்த்தவர்களை அழிப்பேன். ஏனெனில், சாதிக் கட்டமைப்பையும் வர்ணாசிரம தர்மத்தையும் உருவாக்கியவன் நான்தான்,” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார் என்று பகவத் கீதை கூறுகிறது. சாதியமைப்பை, பகவத் கீதை நேர்மைப்படுத்துகிறது. திருக்குறள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறுகிறது. அன்பைக் கற்பிக்கும் திருக்குறள், அழிவுகளை நேர்மைப்படுத்தும் பகவத் கீதையின் தழுவல் என்பது, அறியாமையின் உச்சகட்டம்!

பகவத் கீதை, கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப் பட்டது எனக் கூறப்படும் செய்திகளை மறுத்து, அந்நூல் எக்காலத்தில் எழுதப்பட்டது என இதுவரை, திரு. நாகசாமி விளக்கம் தரவில்லை. தமிழரின் போர் முறைக்கு மாறுபட்டு, போர்களில், சூழ்ச்சி, வஞ்சித்தல் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்றும், உறவுகளைக் கொல்வது கூட தவறில்லை என்றும் பகவத் கீதை கூறுவதை அனைவரும் அறிவர்.

திருக்குறள், கி.மு.31 ஆண்டுகளில் எழுதப்பட்டது அல்லது, திருவள்ளுவரின் பிறப்பாண்டு என்று கருதப்பட்டது. உரோமானிய தத்துவ ஞானியும், கவிஞருமான செனகா (Seneka), திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும், இலங்கையைப் பற்றிய தன் குறிப்புகளில் எழுதியுள்ளார் என பேராசிரியர் மருதநாயகம் மேற் கோள் காட்டுகிறார். திருக்குறளின் பெருமையும் புகழும் உரோமைக்கும் சென்றடைந்து, அதனின்றும் மேற்கோள் சொல்லப்பட்டிருப்பதால்,கி.மு. 300 ஆண்டுகளில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்து உறுதிப் படுகின்றது. இச்செய்திகளையெல்லாம் திரு. நாகசாமி அறிந்திருக்கமாட்டார்.

இலங்கையில், கொழும்புக்கு தென்கிழக்கேயுள்ள ஓரிடத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு கிடைத்த எலும்புக் கூடுகள் மற்றும் பொருட்களை கார்பன் முறைப்படி ஆய்வு செய்ததில், அவ்வெலும்புக் கூடுகள், கி.மு. 37000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த மக்களுடையது எனக் கண்டறியப் பட்டுள்ளது 14. தமிழரின் தொன்மையை விளக்கும் சான்று இது!

எவ்வகையிலும் பகவத் கீதையினின்றே கருத்துகளைப் பெற்று திருக்குறள் எழுதப்பட்டது என்பதற்கானச் சான்றுகளை, திரு.நாகசாமி வெளியிடட்டும். 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்கள் கூறியதையே நான் எடுத்துக் கூறினேன் என்று தப்பிக்க முயல வேண்டாம். தொடக்கத்தில் வீரமாமுனிவர் கூறியுள்ள உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூற, அந்தணர்கள் அஞ்ச மாட்டார்கள் என்ற கூற்றினை மீண்டும் படித்துப் பார்க்கவும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பற்றியும் அந்நிறுவனம் அளிக்கும் 5 இலக்கம் பணத்துடனான விருது பற்றியும் திரு. மு.க. ஸ்டாலின், தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்தேர்வுக் குழுவினின்று திரு. நாகசாமியை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இக்கருத்து வரவேற்கத் தக்கது மட்டுமில்லாமல் பாராட்டத் தக்கதும் கூட எனலாம்.

செம்மொழி நிறுவனத்தில் அளிக்கப்படும் விருதுகள், மற்ற விருதுகளைப் போல் முரண்பாடுகளைக் கொண்டவையே. மத்திய அரசின் ஆட்சியிலுள்ளவர்கள் விரும்பியவர்களுக்கே தொல்காப்பியர் விருதுகள் அளிகப்படுகின்றன. மற்ற விருதுகளையும் போல், தகுதி வாய்ந்த தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை.

கோவையில் நடை பெற்ற செம்மொழி மாநாட்டில். திரு. ஐராவதம் மகாதேவன் தலைமையில், சிந்துவெளி நாகரிகம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. திரு. மகாதேவனின், மாணாக்கர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இருவர், கட்டுரை படித்தனர். அக்கட்டுரையில், சிந்துவெளி மொழியில், தமிழ்ச் சொற்களை விட, கன்னடச் சொற்களே மிகுதியாகக் காணப்படுகின்றன என்று படித்தனர். பார்வையளர்கள் திகைத்துப் போயினர்.

செம்மொழி மாநாட்டில், தமிழ்மொழி சிறுமைப் படுத்தப்பட்டது. இக்கட்டுரைகளை வடித்துக் கொடுத்த திரு. ஐராவதம் மகாதேவனுக்கு, தொல்காப்பியர் விருது, செம்மொழி நிறூவனத்தால் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில், அந்நிறுவனத்தின் இயக்குநர், நிதி காப்பாளர், பதிவாளர் ஆகிய மூன்று பேருமே, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர். இந்நிகழ்வு, காங்கிரஸ் ஆட்சியில்தான் நடை பெற்றது.

தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்க வேண்டும் என்று, திமு.க அரசு காங்கிரஸ் அரசுடன் போராடிப் பெற்றதாக விளம்பரம் செய்யப்பட்டு, விழாக்களும் எடுக்கப்பட்டன. இத்தகுதிச் செய்தியை அறிவித்த மாந்த வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், தமிழ் மொழியின் வரலாறு, 1000 ஆண்டுகள் பழமையுடையது என்று கூறினார். தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் தோன்றவே, 1500 ஆண்டுகள் என வைத்துக் கொள்ளுங்கள் என்றார். (செயகாந்தன், தமிழை நாய்மொழி என்று கூறி, பின்னர் சிங்க மொழியென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்). மீண்டும் எதிர்ப்புகள் தோன்றவே, தமிழுக்குத் தொடர்பில்லாத ஆ.ராசா என்ற அமைச்சர், மாந்தவள மேம்பாட்டுத் துறையின் அறிவிப்பை வரவேற்று, ஆண்டுக் கணக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், இந்த ஆணை கிடைத்ததே போதும் என்றும் அறிக்கை விட்டார். திரு. கருணாநிதி அவர்களால் விளக்கம் தர இயலாத நிலையில், ஆ. ராசா விளக்கமளித்தார். முதற்கோணலே, அடுத்தடுத்த கோணல்களுக்கு மூலமாக அமைந்தன.

திரு. கருணாநிதியை, தலைவராகக் கொண்டு, செம்மொழி நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. ஆட்சி மாறி செயலலிதா முதல்வராக வந்துவிட்டால், தலைவர் பதவி அவருக்குப் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாக, பதிவுச் சட்ட வரைவுகள் பலமுறை திருத்தப் பட்டன. இவற்றை எவரும் சொல்லி நான் எழுதவில்லை. தொடக்கத்தில், 5 ஆண்டுக்காலம், அந்நிறுவனத்துக்குச் சென்று வந்தவன் நான். உண்மையில் அந்நிறுவனத்தின் தலைமை, மாந்த வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கே உரியது. திரு. கருணாநிதி, தமக்குக் கீழ் ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்று இரு குழுக்களை அமைத்துக் கொண்டார். அக்குழுக்களில் இடம் பெற்றிருந்தவர்களில் எவரும் தமிழஞர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் திரு. கருணாநிதியின் அன்பிற்குரியவர்கள். தொடக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும், 20 கோடிகள் அளவில் தொகைகள் வந்தன. அத்தொகை, எவ்வாறு செலவு செய்யப்பட்டிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

தமிழ் மொழியை ஆய்வு செய்வதில், சரியான திட்டமிடல் இல்லாததால், திட்டம் தீட்டத் தகுதியானவர்கள், அங்கு இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும், பல கோடிகளை, டெல்லிக்கே திருப்பி அனுப்பினர்.

தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கும் காங்கிரஸ் அரசு செம்மொழித் தகுதிகளை வழங்கியது. அழகிப் போட்டியில் அனைவருக்கும் முதல் பரிசு வழங்கப்பட்டதை ஒப்பு நோக்குக. மலையாளம், செம்மொழித் தகுதியுள்ள மொழியென்பதை, திரு. ஐராவதம் மகாதேவன் தான் கேரள அரசுக்கு எழுதிக் கொடுத்தார்.

தமிழுக்குத் தலையையும், கன்னடத்துக்குத் தோளையும், மலையாளத்துக்குக் கைகளையும் காட்டியவர் திரு.மகாதேவன். இவருக்கு மட்டும் செம்மொழி நிறுவனம் ஆய்வுக்காக பல இலட்சம் கொடுத்தது. செம்மொழி நிறுவனம் ஒரு குழுவின் சொத்தாகவே மாறிப்போனது.

பாரதிய சனதாக் கட்சி, ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே தொடர்ந்தது. தம் பங்குக்கு பல உதவிகள் செய்தனர். விருதுகள் வழங்கினர். தி.மு.க. முற்றிலுமாக அந்நிறுவனத்திலிருந்து விடுவிக்கப் பட்டது. திரு. கருணாநிதியுடன் ஏறக்குறைய 50 ஆண்டுகள் உடனிருந்த திரு. நாகசாமி பற்றி, திரு. ஸ்டாலினுகுத் தெரியாதா? கடந்த 50 ஆண்டுகளில், தமிழ் எவ்வாறு தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ளது என்பதை தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள், தமிழைப் போற்றி வளர்ப்பதாக உறுதி கூறி ஆட்சிக்கு வந்து, ஆங்கிலப் பள்ளிகளைத் திறந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் வளமை சேர்த்தது.

இன்று, திரு. ஸ்டாலின், திரு. நாகசாமியை எதிர்ப்பது, பா.ஜ.க.வை குற்றம் கூறுவதற்காக மட்டுமே என்க. ஆரியத்தைத் தமிழகத்தின்று அகற்றியே தீருவோம் என்றவர்கள், பின்னர் எவ்வாறு அவர்களுடன் சமரசம் செய்து கொண்டார்கள் என்பதை நாடறியும்.

பண்டாரம், பரதேசிகள் என்று கூறியவர்கள், பின்னர் நண்பர்களானர்கள். கூடாநட்பு கேடாய் முடியும் என்றவர்கள், பின்னர் தோழமை கொண்டனர். திராவிடம் பேசும் திரு. ஸ்டாலினும், தேசியம் பேசும் திரு. நாகசாமியும், அரசியலுக்கான அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் தமிழுக்கோ, தமிழ்நாட்டுக்கோ எப்பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழர்களைப் பகைவர்களாகக் கருதும் இரண்டு தேசியக் கட்சிகளும், தமிழ் நாட்டுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. தமிழர்கள் விழிப்புணர்வு பெறுவதைத் தவிர, இன்று வேறு வழிகள் இல்லை.

திரு. நாகசாமி, நூல்களையும், அறிக்கைகளையும் வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு, சமற்கிருதம், தமிழ், பகவத் கீதை, தமிழர் வரலாறு, ஆரியர் வரலாறு பற்றி, பொதுமக்கள் மத்தியில் அல்லது தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக வெளிப்படையான விவாதத்துக்கு முன் வரவேண்டும். திரு. நாகசாமியின் பொய்யான, கற்பனையான, ஒரு சமூகத்தை உயர்த்தும் உள்நோக்கம் கொண்ட பிதற்றல்களை, தமிழறிஞர்கள் சந்திக்கக் காத்திருக்கின்றனர்.

ஒன்று அவர் விவாதமேடைக்கு வரவேண்டும் இல்லையேல், இதுபோன்ற வரலாற்றுத் தொடர்பற்ற கற்பனைச் செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரங்கள், அரைகுறைகளை வேண்டுமானால் வளைத்துக் கொள்ளலாம், அறிஞர்களை வளைக்கவோ, தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரவோ இயலாது என்பதை, திரு. நாகசாமியும், அவரை ஆய்வாளர் என்று நம்பிக் கொண்டிருக்கிற தேசிய கட்சியும், உணரவேண்டும். நெய்யும் மெய்யும் வெளிப்பட்டே தீரும் என்ற பாவாணரின் மொழியில், இதனை உணர்த்த விரும்புகிறேன்.

அடுத்த 10 ஆண்டுகளில், இந்திய மொழிகளுக்குத் தாய்மொழி தமிழே என்றும், தமிழே உலக மொழிகளுக்கு மூலம், வேர் என்றும், உலக அரங்கில் உறுதியாக நிறுவப்படும். அதற்கான காலம் கனிந்து கொண்டிருக் கிறது!"

அடிக்குறிப்புகள்:-
===============
1. வீரமாமுனிவர் அருளிய சதுரகாதி, பதிப்பாசிரியர், டாக்டர்.சூ. இன்னாசி, வீரமாமுனிவர் ஆய்வுக் கழகம், பாளையங்கோட்டை, 1979, முன்னுரை, பக். XVII-XVIII..

2. குரவன் என்ற சொல்லை எடுத்துவிட்டு, பார்ப் பார் என்ற சொல்லைத் திணித்துவிட்டதாக, எல்லிசின் குறிப்புகளை மேற்கோள் காட்டி, பேரா.ப. மருதநாயகம் பதிவு செய்துள்ளார்.

3. DISTRICT GAZETTIER, TRICHINOPOLY,1830.

4. புறநானூறு, 194, பக்குடுக்கை, நன்கணியார்.

5. என் சரித்திரம் அரியலூர் மாவட்டப் பண்பாட்டுப் பேரவை.

6. ஏம வைகல் எய்தின்றால் உலகே - பெருந்தேவனார், குறுந்தொகை.

நீர் நின்று அமையாது உலகம் போல - நற்றிணை, முதல் பாடல்.

தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகெ - அகநானூறு, கடவுள் வாழ்த்து.

மண் திணிந்த நிலனும் - புறநானூறு

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு - முருகாற்றுப்படை

மலை நாறிய வியன் ஞாலத்து - மதுரைக் காஞ்சி.

உலகெலாம் ஓதற்கரியவன் - திருமுறை - என விரியும்.

7. Special Language: The professional and secret language practiced by the scribes, appear in both Egypt and Mesopotamia. It was even more difficult for more than a few to mester these skills. - Dictionary of the Bible,P.779.

8. Pragrit: The Languages other than Sankrit, that apoken and written in North India. Monier Williams, Introduction in his Dictionary, P.XX.

9. Sankrit: Perfectly constructed Speech. - Ibid, P.XX

10. குறி: குறி அறிந்தோரே - தொல்காப்பியம்.

11. சிவத்தியாநாநந்தர், ரிக்வேத சம்கிதை, இராயப் பேட்டை, 1938, முன்னுரை.

12. Rig Veda: The Oldest of its (Vedas) hymns being assigned by some who rely on certain astronomical calculations to a period between 4000 and 2500 B.C., before the settlement of the Aryans in India and by others who adopt a different reckoning to a period between 1400 B.C.- 1000 B.C., when Aryans had settled down in Punjab.
Monier Williams, A Sanskrit - English Dictionary, P.1015.

13. Dr.B.R.Ambetkar, “Who is Sutra?”

14. தகவல் மற்றும் படங்கள், அமெரிக்காவின் நவேடா மாநிலம், கர்சான்சிட்டி, மாநிலத் தலைமை, நூலகத்திலிருந்த, The Encyclopedia - anthropology, Vol.VII, என்ற நூலிலிருந்து, கட்டுரை ஆசிரியரால் எடுக்கப்பட்டது.

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 மார்ச் 16 – 31 இதழ்)

===============================
கண்ணோட்டம் இணைய இதழ்
===============================
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: tamizhdesiyam.com
===============================

திங்கள், 25 மார்ச், 2019

சுளுந்தீ: தமிழ்த் தேசிய சமூக வரலாற்றின் ஆகச் சிறந்த ஆவணம் :- இரெங்கையா முருகன், ஆய்வறிஞர்.

சுளுந்தீ :
மறைக்கப்பட்ட தமிழ் மானுடத்தின்
18ஆம் நூற்றாண்டினை மிக நுட்பமாக விவாதிக்கும் ஆகச் சிறந்த தமிழ்த் தேசிய சமூக வரலாற்றுக் களஞ்சியம்.
:- ஆய்வறிஞர் இரெங்கையா முருகன்.

உள்ளூர் வரலாறுகளையும், ஒடுக்கப்பட்ட இன மக்களின் வரையறைகளையும், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் காலத்தின் அரசியலில் ஊடாட்டமான இருண்ட பகுதிகளையும் தனது அயராத உழைப்பால் இனவரைவியல் வரலாற்று நாவலாக சுளுந்தீ அனலாகப் பட்டையைக் கிளப்புகிறது.

சித்தமருத்துவம் தமிழகத்தில் தொலைக்கப்பட்ட வரலாறும், பண்டுவர்களான நாவிதர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய இடத்தை வகித்தனர் என்பதும், தமிழ்ப் பூர்வக் குடிகளுக்கும் அரசாண்ட வந்தேறிக் குடிகளுக்கும் இடையே உள்ள பிரச்சினை,சமாதானம், குடிமுறையிலிருந்து குல நீக்க முறைக்கும் உள்ள பிரத்யேகக் கூறுகளையும் அலசி ஆராய்கிறது சுளுந்தீ.

நாட்டுப்புற வழக்காறுகள், பக்கத்துப் பக்கம் தடுக்கி விழுந்தால் ஆய்வுப் பூர்வமாகப் பழமொழி மற்றும் சொலவடைகளை சமூகத்தோடு இயைந்த பார்வைகளும், ஆனந்த வருட பஞ்ச காலக் குறிப்புகள் தமிழில் இந்த அளவுக்குப் பதியப்படவில்லை.

புளியமரம் வந்த வரலாறு, வண்ணார் சமூகத்தாரின் வெள்ளாவியில் துணிகளை வைப்பதில் கூட வர்ண பேதம், கிணறு தோண்ட பூதம் வந்த கதை, கழுதை குறித்த சுவாரஸ்யமான சமூகக் கதையாடல்கள், தமிழ்ச் சமூகத்தில் மடங்களுக்கும் அரசுக்கும் உள்ள நுட்பமான தலையீடுகள், மயிருக்குள் நுழைந்திருக்கும் நுட்பமான சாதி வேறுபாடுகள், ஏராளமான சித்தா மருத்துவக் குறிப்புகள், மறைந்து கொண்டிருக்கும் வயதான பெண்கள் அணியும் தண்டட்டி அணிகலண், பழனி, கன்னிவாடி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் பகுதி சார்ந்த மக்கள் அவசியம் படிக்க வேண்டிய வரலாற்று இனவரைவியல் நாவல்.

இந்த நாவல் பல்கலைக் கழக வளாகப் பாடத் திட்டத்தில் வைக்கப்பட வேண்டிய புத்தகம்.

சுளுந்தீ :மறைக்கப்பட்ட தமிழ் மானுடத்தின் 18ஆம் நூற்றாண்டினை மிக நுட்பமாக விவாதிக்கும் ஆகச் சிறந்த தமிழ்த் தேசிய சமூக வரலாற்றுக் களஞ்சியம்.

செவ்வாய், 19 மார்ச், 2019

நிலம் பூத்து மலர்ந்த நாள் : சுதாகர்

சர்வ நிச்சயமாக மனோஜ் குரூர்க்கு கடமை பட்டிருக்கிறது சங்கப் பழம்பெருமை பேசித்திரியும் தமிழ் இலக்கிய உலகம்.

அறிந்த அனைவரும் வெளிப்படுத்தியது போல் நாம் செய்திருக்க வேண்டிய ஒன்றை, நம்மிலும் சிறப்பாக சகோதரன் செய்துவிட்டார்.
நிலம் பூத்து மலர்ந்ந நாள்' கே.வி.ஜெயஶ்ரீயால் நிலம் பூத்து மலர்ந்த நாளாகிருக்கிறது வம்சியின் வழி.

கபிலர்- பாரி, அவ்வை-அதியமான், பரணர்-நன்னன் இவர்களின் கதையை ஒரு பாணர் குடும்பத்தின் தகப்பன், மகள் மற்றும் மகன் வழி வாசகனுக்கு நேரடியாக சொல்லப்பட்ட நாவலே நிலம் பூத்து மலர்ந்த நாள்.

ஒரு பாணர் கூட்டம் தன் பசி தீர்க்கவும் இளமையில் கூட்டத்தைவிட்டு வெளியேறிய தன் மகன் ஒருவனை கண்டடையவும் தாய்நிலம் விட்டு புகழ் விரும்பும் அரசர்களை தேடித் தொடங்குகிறது நாவலோடு தன் பயணத்தை.

நாவல் மூன்று காதையாக சொல்லப்படுகிறது. முதல் காதை கொலும்பன் தன்கதை வழி பாரியினுடையதையும், பின் அவன் மகள் சித்திரையின் வழி அதியமானுடையதையும், இறுதியில் தேடிவந்த மகன் மகிலன் வழி நன்னன் கதையையும் என்பதாக.

பாணர் குடியை சார்ந்த சாமான்ய மக்கள் மூவரின் வழி பெரும் புலவர் மூவரையும் அவர்கள் பாடி, காலத்தில் நிலைக்கப்பெற்ற சங்க அரசர்கள் மூவரையும் இன்று நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் மனோஜ்.
வாசகனுடன் நேரடி உரையாடல் வழி சொல்லப்பட்ட ஒரு நாவல் ஆகையால், இதன் வேகம் கட்டற்ற காட்டாற்றின் வேகத்துடன் வாசகனை தன்னோடு இழுத்துச்செல்கிறது.

சங்க கால நிகழ்வுகளாக பாடல்கள் வழி நாம் அறிந்த அனைத்து செய்திகளையும் அதன் பின்புலங்களுடன் காட்சிகளாக நம்முன் விவரிக்கிறார் மனோஜ்.எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் நாமறியாத மறுபுறம் ஒன்றுண்டு என்பதே நாவலின் அடிநாதமாக இருப்பதாக நான் உணர்கிறேன்.

நன்னன் மீது விழுந்த கொலைப்பழிக்கு பின்னுள்ள மகிலனின் சுயநல அரசியல், பாரியின் அழிவில் கபிலரின் பாடல்களின் பங்கு என நாம் புதுப்பார்வையை அறிகிறோம்.
நாவலில் விவரிக்கப்பட்டுள்ள நிலக்காட்சிகள், இயற்கையின் கூறுகள் விரிவான விஸ்தரிப்பாக இல்லை, இருப்பினும் அதன் இன்மை வாசகனின் கற்பனைத்திறனுக்கு வழிவிடுகிறது.

மனித வாழ்வின் வரலாறு என்பது கதைகளே. சம்பவங்களின் சேர்மானமே கதை. கதைகளின் தொகுப்பே நாவல்.அந்த வகையில் கண்ணிகளை மிக சிறப்பாக கையாண்ட நாவல் இது.மொழிபெயர்த்த நாவலா எனும் ஐயம் ஏற்படுகிறது, அந்தளவிற்கு ஜெயஶ்ரீ அவர்களின் உழைப்பை தந்துள்ள படைப்பு, நிச்சயம் நன்றிக்குரியவர்.
குறிப்பாக நாவல் முழுமையும் உள்ள உவமைகள் ஒரு சுகானுபவம் வாசகனுக்கு.

ஒளிப்படம் : நித்தியன்

நிலம் பூத்து மலர்ந்த நாள் : இலட்சுமி கோபிநாதன்

நிலம் பூத்து மலர்ந்த நாள். மிக நெடு நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு நூல் உள்ளுக்குள்ளே வந்து உட்கார்ந்து...

சங்க இலக்கியப்பாடல்களின் வாயிலாக ஒரு சங்கத் தமிழ் வரலாற்றை, புதினமாக முன்வைக்கிறார் ஆசிரியர் மனோஜ் குரூர். என்ன ஒரு அற்புதமான முயற்சி. பெரும்பான்மையான தமிழ் படைப்பாளிகளுக்கும் தமிழ் அரசியல் செய்பவர்களுக்கும் வந்தேரி என்று பிறரைத் திட்டுவதற்காக மட்டுமே தமிழ் தேவையாயிருக்கிறபோது மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட திரு,மனோஜ் குரூருக்கு எப்படி இப்படி ஒரு சிந்தனை வந்தது என என்னால் ஆச்சரியத்திலிருந்து அகலவே முடியவில்லை. மொழி பெயர்த்த திருமதி.ஜெயஸ்ரீ மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர். 

இந்த நூலின் காலத்தையும் கதைக் களத்தையும் புரிந்து கொள்ள நாம் தமிழில் ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் படிக்க வேண்டியதில்லை. எட்டாம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை நாம் படித்த தமிழ் சங்கப் பாடல்களை கொஞ்சம் நினைவில் கொண்டாலே போதும் ஏனையவற்றை இந்த நூலே பார்த்துக் கொள்ளும்.

கதையின் நகர்வில் இரண்டு இடங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இந்தக்கதை, கதை மாந்தர்களின் வழியே சொல்லப்பட்டிருக்கிறது. அதில் இடையில் அதியமான் போருக்குப் புறப்படும் காட்சி அப்போது வீரர்களுக்கான விருந்தில் அதியமான் மதுவை அருந்த முற்படுகையில் ஒரு மூதாட்டியின் குரல் அவனைத் தடுக்கிறது. அந்த மூதாட்டியாக அவ்வை வருகிறார். உண்மையில் அவ்வையின் அந்த அறிமுகத்தில் நான் அப்படியே சிலிர்த்துப் போனேன். நமக்கெல்லாம் சிறிது நேரமேனும் அவ்வையோடு வாழ்ந்துவிட்டு வரும் பேறு கிடைத்தால் எப்படி இருக்கும். இந்த நூலாசிரியர்கள்( மூலம் மற்றும் மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்) வாயிலாக நமக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைக்கிறது.

மற்றொரு நிகழ்வு இந்தக் கதையின் நாயகி ஒரு படைவீரனைக் காதலிக்கிறாள். இருவரும் வேறு வேறு நாட்டை இனத்தை சேர்ந்தவர்களே. அவன், அவளை சிறிது பிரிந்து தன் நாட்டிற்குச் சென்று திரும்பி வந்துவிடுவதாகக் கூறிச் செல்கிறான். அவள் காத்திருக்கையில் அவளது கூட்டத்தார் தாங்கள் இருக்கும் இடம் விட்டு வேறு இடம் செல்ல முடிவு செய்கிறார்கள். அவள், அவன் அங்கேதான் வருவான் என்பதற்காக வர மறுக்கிறாள். அப்போது என் மனது அவளது கூட்டத்தார் அவளை என்ன செய்யப் போகிறார்களோ என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
( பழகிய புத்தி) ஆனால் அந்தக் கூட்டத்தின் தலைவன் அவளிடம் வந்து எங்களுக்கு நீ அவனோடு பழகுகிறாய் என்றும் அவனுக்காகத்தான் வர மறுக்கிறாய் என்றும் தெரியும். ஆனாலும் நாங்கள் வேறு இடம் போகத்தான் வேண்டும். உனக்காக நாங்கள் அவன் வரும்வரை இங்கேயே உன்னோடு இருக்கிறோம் அவன் வந்த பிறகு நீ அவனுடன் செல். பின்னர் நாங்கள் இங்கிருந்து வேறு இடம் செல்கிறோம் என்று சொல்கிறார். அவளது தாய் கூட அவளது முடிவிற்குக் குறுக்கே நிற்கவில்லை. முக்கியமாக நீ எப்படி அவனை நம்பிப் பழகினாய் அவன் உன்னை ஏமாற்றிவிட்டால் நீ என்ன செய்வாய் உன் வாழ்க்கை என்ன ஆகும்?. நம் குடும்ப சமூக மரியாதை கவுரவம் எல்லாம் என்ன ஆகும் என யாரும் கொக்கரிக்கவில்லை. உனக்கு அப்படி என்ன வீட்டார் அறியாமல் மற்றொரு ஆணுடன் பழக்கம் வேண்டியிருக்கிறது என அவளைக் குதறவில்லை. ஏன் அறிவுரை கூட சொல்லவில்லை. அதை மிக இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்கிறார்கள்.  அவனே அவளைத் திருமணம் செய்து பின்னர் வேறு ஒரு பெண்ணோடு அவளறியாமல் வாழ்கிறான்.

இதை அறிந்த அவள் கூட்டத்தார் அவளிடம் அதை எடுத்துச் சொல்லி எங்களோடு வா நாங்கள் உன்னோடு இருக்கிறோம் என்று அழைக்கிறார்கள். அப்போதும் கூட நீயாகத்தானே ஏமாந்தாய் என ஒரு வார்த்தைகூட இல்லை.

ஆக, சங்க காலத்தில் பெண்களின் விருப்பம் என்பது தன் குடும்பத்தையோ கூட்டத்தையோ சார்ந்து இல்லை. பெண் ஆளுமைகள் அரசர்க்கே அறிவுரை கூறுபவர்களாய் இருந்திருக்கிறார்கள். கற்பைப் போலவே களவும் ஒரு ஒழுக்கமாகப் பார்த்தது நம் தமிழ்ச் சமூகம். ஆனால் எப்போது பெண் என்பவள் ஒரு உணர்வுள்ள ஜீவன் என்பதைத்தாண்டி ஒரு கைப்பொருளாய் மாறிப்போனாள் என்பதுதான் புலப்படவில்லை.( பொள்ளாச்சி உட்பட பல சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறேன்.)

இப்படி எவ்வளவோ......என் எண்ணத்தில் உள்ளதெல்லாம் எழுத ஆரம்பித்தால் எழுதி முடியாது.
நான் எப்போதும் நூலை வாசிப்பதன் முன்னர் முன்னுரை வாசிப்பதில்லை. நூலை வாசித்த பின் முன்னுரை பொருந்துகிறதா எனப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இந்த நூலை வாசித்து முடித்த போது இது ஒரு கால இயந்திரம் என்றே எனக்குத் தோன்றியது. அதையே திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் தன் முன்னுரையில் எழுதியிருந்தார்.

திருமதி.ஜெயஸ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு நூல் என்பதை முற்றிலும் மறக்கடிக்கக்கூடிய வகையிலானது. கிட்டத்தட்ட மூல ஆசிரியரே தமிழில் எழுதியது போல இருக்கிறது.

இந்த நாவல் நமக்கு பல கதவுகளைத் திறந்து விடுகிறது. நாம் கொண்டாட வேண்டிய நாவல். இதை அழுத்தமாய் பரிந்துரைத்த தம்பி சுதாகருக்கு என் அன்பும் நன்றியும்.

வெள்ளி, 15 மார்ச், 2019

மார்க்சிய இயங்கியல் நோக்கில் தனித் தமிழ் இயக்கம்: தோழர் தியாகு



இயங்கியல் நோக்கு என்றால் என்ன?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்திவ்வுலகு
(குறள் 336 – நிலையாமை)
என்றார் திருவள்ளுவப் பெருந்தகை. நிலையாமைதான் திருக்குறளின் மெய்யியல் கொள்கை. இது நிலையற்ற வாழ்வை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் சாவைச் சொல்வது மட்டுமன்று. ஒருவன் நேற்று இருந்தது போலவே இன்றும் இல்லை. இன்றிருப்பது போலவே நாளையும் இருக்கப் போவதில்லை என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். மனிதர்க்கு மட்டுமல்ல மற்ற அனைத்துக்கும் கூட இது பொருந்தும். எதுவுமே நேற்றிருந்தது போல் இன்றில்லை. இன்று போல் நாளை இருக்கப் போவதில்லை. மாற்றம் ஒன்றே மாறாத விதி. இதுதான் இயங்கியலின் (dialectical) அடிப்படைக் கொள்கை.

உலக அளவில் புதுமக்கால இயங்கியலின் தந்தை என்று எர்னெஸ்ட் எகல் எனும் செருமானிய மெய்யியல் அறிஞரைச் சொல்வார்கள். கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் எகலின் இயங்கியலைத் தமதாக்கிக் கொண்டார்கள். ஆனால் எகலின் இயங்கியல் கருத்துமுதற்கொள்கை சார்ந்த இயங்கியலாக இருந்தது. அவரது இயங்கியலை மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதற்கொள்கையோடு இணைத்து, பொருள்முதல் இயங்கியலை நிறுவினார்கள். அதனை சமூக மாற்றத்துக்குப் பொருத்தினார்கள்.

நான் ஈண்டு இயங்கியல் என்று குறிப்பிடும் போதெல்லாம் பொருள்முதல் இயங்கியலையே, அதாவது மார்க்சிய இயங்கியலையே சொல்கிறேன்.
தனித்தமிழியக்கத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு? என்று நீங்கள் கேட்கலாம், சொல்கிறேன். யாவும் மாறுகின்றன என்று சொன்ன எகலிடம் அவரின் இளம் மாணவர்கள் கேட்டார்கள்: ஐயா, எல்லாம் மாறும் என்றால் பிரஷ்யப் பேரரசும் மாறிப்போய் விடும்தானே? எகல் அதை மறுத்தார். இயக்கம் என்பது பிரம்மத்தின் செயல். பேரரசு பிரம்மத்தின் உலகியல் வடிவம், பிரம்மம் மாறாதது, எனவே மாமன்னராட்சியும் மாறாதது என்று சொல்லி விட்டார். இதை ஏற்க மறுத்தவர்கள்தாம் இளம் எகலியர்கள்.

பிரஷ்யப் பேரரசு போலத்தான் ஒவ்வொரு பேரரசும்! பிரித்தானியப் பேரரசு தன்னை அப்படித்தான் சொல்லிக் கொண்டது, எண்ணிக் கொண்டது, மக்களையும் அவ்வாறே எண்ண வைத்தது. இப்போது இந்தியப் பேரரசும் இதைத்தான் செய்கிறது. பிற்போக்கான வல்லாற்றல்கள் தம்மை நிலைபேறுடையவையாகக் கருதிக் கொள்வதோடு, மற்றவர்களையும் அவ்வாறே நம்ப வைக்கப் பார்க்கின்றன.

இயற்கையும் மனிதக் குமுகமும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பது போல் சிந்தனையும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் உள்ளது. பிற்போக்கானவை மாறுவதால்தான் முற்போக்காகின்றன. முற்போக்கானவை என்றால் இனி மாறத் தேவையில்லை எனக் கருதி விட வேண்டாம். முற்போக்கானவை மாறாமல் தேங்கி விட்டால் பிற்போக்கனவை ஆகி விடும். இந்தக் கோணத்தில் பார்க்கும் போது சிந்தனை மரபுகளும் அவற்றுக்கான இயக்கங்களும் கூட மாறிக் கொண்டும் இயங்கிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்க வேண்டும்.

இது தனித்தமிழியக்கத்துக்கும் அது முன்னிறுத்தும் கொள்கைகளுக்கும் எவ்வாறு பொருந்தும் என்று சற்றே எட்டிப் பார்க்கும் முயற்சிதான் எனதுரை.
எல்லாக் கொள்கைகளும் மக்களுக்கு அறிமுகமாவது குருதியும் தசையுமாகத்தான். மார்க்சிய இயங்கியல் என்றதும் அதன் ஆசான்கள் மார்க்சும் எங்கெல்சும், பிறகு லெனினும் நம் நினைவுக்கு வருவார்கள், ஆனால் தனித் தமிழியக்கம் பற்றி அவர்களிடம் கேட்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்குத் தமிழே தெரியாது. ஆனால் தமிழ் தெரிந்த மார்க்சியர்கள் இருக்கவே செய்கின்றார்கள். மார்க்சியர்கள் என்பதாலேயே அவர்களிடமிருந்து வருவதெல்லாம் மர்க்சியமாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை என்ற எச்சரிக்கையோடு அவர்களைக் கருதிப் பார்க்கலாம்.

தனித்தமிழியக்கம் குறித்து, அதன் தோற்றம் குறித்து நாம் படித்திருக்கும் இரு கதைகளிலிருந்து தொடங்கினால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.

கதை ஒன்று: ஒருநாள் மறைமலையடிகளும், அடிகளின் மூத்த மகள் நீலாம்பிகை அம்மையாரும் தம் மாளிகைத் தோட்டத்தில் உலாவும் போது, அடிகள் இராமலிங்க வள்ளலார் அருளிச் செய்த திருவருட்பாவின் திருமுறையிலுள்ள,

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிருமறந் தாலும்
உயிர் மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சிவாயத்தை நான்மற வேன்

என்ற பாடலைப் பாடினாராம். அவ்வளவில் அடிகள் கூறினாராம்:

“நீலா, இப்பாட்டில் தேகம் என்ற வடசொல்லை நீக்கி, அவ்விடத்தில் அதற்கு விடையாக யாக்கை என்ற தமிழ்ச் சொல்லிருக்குமானால், அவ்விடத்தில் செய்யுள் ஓசை இன்பம் பின்னும் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளதால் தமிழ்தன் இனிமை குன்றுகிறது. அத்துடன் நாளடைவில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று அப்பிறமொழிச் சொற்களுக்கு நேரே வழங்கி வந்த நம்மருமை தமிழ்ச் சொற்கள் மறைந்து விடுகின்றன. இவ்வாறே அயல்மொழிச் சொற்களை ஏராளமாக நம் மொழியில் கலந்து ஆண்டதால் நூற்றுக்கணக்கான வட சொற்களும் அயல்மொழிச் சொற்களும் தமிழில் கலந்தன. அதனால் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் மறைந்தே போயின.”

இது கேட்ட மகள் நீலாம்பிகை தந்தையாரைப் பார்த்து, “அப்படியானால் இனிமேல் நாம் அயன்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும். அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும்” என்று ஆர்வமுடன் கூறினாராம்.

மகளின் அன்பும் அறிவும் கலந்த வேண்டுகோளை ஏற்ற தந்தையார், சுவாமி வேதாசலம் என்ற வடமொழிப் பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் எனவும், தாம் நடத்திய ஞானசாகரம் என்னும் வெளியீட்டை அறிவுக்கடல் எனவும், சமரச சன்மார்க்க நிலையம் என்ற தம் மாளிகைப் பெயரைப் பொதுநிலைக் கழகம் எனவும் மாற்றிக் கொண்டாராம். அத்துடன் தம்பி திருஞான சம்பந்தத்தை அறிவுத் தொடர்பு என்றும், மாணிக்கவாசகத்தை மணிமொழி என்றும், சுந்தரமூர்த்தியை அழகுரு என்றும், தங்கை திரிபுரசுந்தரியை முந்நகரழகி என்றும் தமிழ்ப் பெயர்களைச் சூட்டி அழைத்தாராம். அடிகளும் மகளும் எழுதும் போதும் பேசும் போதும், இது தமிழா அயல்மொழியா என்று ஒவ்வொரு சொல்லையும் சீர்தூக்கிப் பார்த்துச் சற்றும் வழுவாது தனித் தமிழில் எழுதியும் பேசியும் வந்தனராம். இப்படித்தான் தனித்தமிழியக்கம் தோற்றம் பெற்றது என்று சொல்வாருண்டு.

கதை இரண்டு:
தமிழகப் பொதுமை இயக்கப் பெருந்தலைவர்களில் ஒருவரான தோழர் ப. சீவானந்தம் தனித்தமிழில் பற்றுக் கொண்டு தம் பெயரை உயிரின்பன் என்று மாற்றிக் கொண்டாராம். ஆர்வத்தோடு மறைமலை அடிகளைப் பார்க்கப் பல்லவபுரம் சென்றாராம். வீட்டு வாசலில் அழைப்பு மணிப் பொத்தானை அழுத்த, உள்ளிருந்து “யார் போஸ்ட்மேனா?” என்று குரல் கேட்டதாம். தனித் தமிழியக்கத்துக்காரர்கள் வடமொழி நீக்கத்தில் காட்டும் ஆர்வத்தை ஆங்கில நீக்கத்தில் காட்டுவதில்லை என்றெண்ணி வெறுத்துப் போய் விட்டாராம். உயிரின்பனைக் கைவிட்டுப் பழையபடி சீவானந்தமே ஆகி விட்டாராம்.

இந்த இரண்டு கதைகளும் கற்பனையன்று, உண்மை என்றே கொள்வோம். நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்ததால் அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்பார்களே, அது போலத்தான் இதுவும். நியூட்டன் தோட்டத்தில் உட்கார்ந்திருந்த போது மரத்திலிருந்து ஆப்பிள் விழக் கண்டார். ஆனால் அது அவர் தலையில் விழவில்லை. அது ஏன் மேல்நோக்கி எழாமல் அல்லது பக்கவாட்டில் செல்லாமல் நிலம்நோக்கி விழ வேண்டும் என்ற வினா அவருள் எழுந்தது. ஈர்ப்பு விசையைக் கண்டறிய இதுவும் ஒரு தூண்டுதல் ஆயிற்று. இது வரை உண்மை. ஆனால் இந்தத் தற்செயல் நிகழ்ச்சியால்தான் ஈர்ப்பு விதியை அவர் கண்டறிந்தார் என்பது சரியன்று.

மறைமலையடிகள் – நீலாம்பிகை உரையாடல் குறித்து, “தனித்தமிழியக்கத்தின் தோற்ற நிகழ்ச்சி சுவாரசியமானதாகவும், நாடகபாணி நெறிபட்டதாகவும் அமைகின்றது” எனக் கருதும் அறிஞர் சிவத்தம்பி, “மறைமலையடிகள் இத்தகைய நாடக நிலைப்பட்ட முறையில் தனித்தமிழியக்கத்தைத் தோற்றுவித்தாரென்று கூறுவதிலும் பார்க்க, பல காலமாக உள்ளத்துள் அறிவுசெல் நெறியில் கருவிட்டு உருப்பெற்று வளர்ந்து வந்த ஒரு கருத்து மேற்குறிப்பிட்ட சம்பவம் காரணமாக இயக்கப் பரிமாணம் பெற்றது எனக் கூறுவதே பொருத்தமானதாகும்” என்று முடிவு செய்கிறார். தனித்தமிழ் இயக்கம் குறித்த சிந்தனை அடிகளாரிடம் பரவியிருந்தாலும், இயக்கமாக உருப்பெறுவதற்கு நீலாம்பிகை அம்மையாரிடம் நிகழ்த்திய உரையாடலும் காரணம் என்பதை சிவத்தம்பியிடமிருந்து அறிய முடிகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அடையாளங்களை மீட்டெடுத்தல், பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த சாதி மறுப்பு, பெண் விடுதலை, பார்ப்பனியத்துக்கு எதிராகக் கிளர்ந்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என பல்வேறு அசைவியக்கங்கள் ஊடாடிய தமிழ்ச் சூழலில், தமிழ், சைவம் என்னும் பின்னணியில் வரும் மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார் என்பதே சிவத்தம்பியின் பார்வை.

ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுக்கும் போலவே தனித்தமிழ் இயக்கப் பிறப்புக்கும் அடிப்படைக் காரணம், உடனடிக் காரணம் இரண்டும் உண்டு என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். தனித்தமிழியக்கத்தை முழுக்க ஏற்றவர் அல்லவென்றாலும் அவ்வியக்கத் தோற்றம் பற்றிய அவரது பார்வை வரலாற்று இயங்கியல் நோக்கில் அமைந்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

தோழர் சீவானந்தம் ஒரே ஒரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு தனித்தமிழியக்கம் குறித்து இறுதியாக ஒரு தீர்ப்பு வழங்கியிருப்பார் என்பதும் நம்பக்கூடியதன்று. தமிழ்நாட்டு மார்க்சியர்களில் சீவானந்தம் சற்று மாறுபட்டவர் என்று கருதப்பட்டாலும், தனித்தமிழியக்கம் குறித்து அவர்களிடமிருந்து அடிப்படையிலேயே மாறுபட்ட ஒரு பார்வை அவருக்கிருந்ததா என்பது ஆய்வுக்குரியது. இந்தியத் தேசியத்துக்குள் ஒடுங்கி விட்ட தமிழக மார்க்சியர்களின் பார்வைதான் சரியான மார்க்சியப் பார்வையா என்பதும் கூட ஆய்வுக்குரியதே.

மொழித் தூய்மைக்கான இயக்கம் தமிழுக்கு மட்டுமே உரித்தானதன்று. ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் பிறமொழிக் கலப்பை எதிர்த்து இவ்வாறான முயற்சிகள் நடைபெறவே செய்தன. இவை குறித்து மார்க்சியப் பேராசான்கள் என்ன கருதினார்கள் என்று பார்க்க வேண்டும்.
கார்ல் மார்க்சின் தாய்மொழியான ‘டொச்’ எனும் செருமன் மொழியில் இலத்தீன் மற்றும் கிரேக்கச் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. போப்பாதிக்கத்தை எதிர்த்து புரொட்டஸ்டண்ட் சமயத்தை நிறுவிய மார்டின் லூதர் இம்மொழிக்கலப்பை எதிர்த்தார். கார்ல் மார்க்சும் பிறமொழிக் கலப்பை எதிர்ப்பவராகவும் மொழித் தூய்மையை வலியுறுத்துகிறவராகவும் இருந்தார். மார்க்ஸ் தமது மூலமுதல் (தஸ் கேபிட்டல்) நூலுக்கான ஆய்வுகளை பிரித்தானியாவில் மேற்கொண்டவர்; பொருளியல் அறிவியலில் அவருக்கு முன்னோடிகளான ஆதாம் சுமித், டேவிட் ரிக்கார்டோ போன்றோர் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள்; மார்க்ஸ் ஆண்ட ஆய்வுத் தரவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்தன; இத்தனையையும் மீறித்தான் அவர் தமது பெரும்படைப்பாகிய தஸ் கப்பிடல் (மூலதனம் அல்லது மூலமுதல்) நூலைத் தமது தாய்மொழியாகிய செருமன் மொழியில் எழுதினார். அந்த அறிவியல் அம்மொழியில் போதிய வளர்ச்சி பெறாத நிலையில் கலைச் சொற்களுக்கிருந்த கடும் தட்டுப்பாடு பற்றி பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதியுள்ளார். மார்க்ஸ் செருமன் மொழியில் மூலமுதல் படைத்தார் என்பது மட்டுமல்ல, இயன்ற வரை பிறமொழிக் கலப்பில்லாமலே அதைச் செய்தார். தவிர்க்க முடியாதவாறு வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்த நேரிட்ட போதும் அதற்காக வருத்தப்பட்டார். சில புதிய கருத்தாக்கங்களை வெளியிடும் இன்றியமையாத் தேவை கருதி இலத்தீன் மொழியிலும் கூட புதிய தொடர்களைப் புனைந்தார். இவ்வாறான பிறமொழி உட்கலத்தலை அரிதிலும் அரிதாகவே அவரிடம் காண முடியும்.

உருசிய மொழியில் செருமன், பிரெஞ்சு மொழிகள் அளவின்றிக் கலந்து கிடந்தன. தமிழர்களின் வடமொழி மயக்கம் போல், ஆங்கில மயக்கம் போல், உருசிய மேட்டுக் குடியினர் பிரெஞ்சு மயக்கம் கொண்டலைந்தனர். உலோமொனசோவ், அலெக்சி தோல்ஸ்தோய் போன்ற அறிஞர்கள் உருசிய மொழித் தூய்மையை வலியுறுத்தியவர்கள். உருசிய மொழியில் தலைசிறந்த புரட்சி இலக்கியராகத் திகழ்ந்த மக்சிம் கார்க்கி மொழித் தூய்மைக்கான போராட்டத்தை பண்பாட்டுக் கருவிக்கான போராட்டமாகவே மதித்தார். புரட்சித் தலைவர் இலெனின் பிறமொழிக் கலப்பை உறுதியாக எதிர்த்தவர்.

“நாம் உருசிய மொழியைக் கெடுக்கிறோம். தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றையும் தவறாகப் பயன்படுத்துகிறோம். இந்தப் பிறமொழிச்சொற்கள் என்னை எரிச்சலுறச் செய்கின்றன” என்று கூறிய இலெனின் “உருசிய மொழிச் சிதைப்பிற்கு எதிராகப் போர் தொடுக்க இது உரிய நேரமல்லவா?” என்று கேட்டார்.

எழுத்திலும் பேச்சிலும் பிறமொழிக் கலப்பைத் தவிர்ப்பதில் குறியாய் இருந்த இலெனின் “மக்களிடத்தில் இலத்தீன் கலப்பின்றி எளிய முறையில் பேச வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
தேசியக் குமுகாயத்தின் ஆக்கக்கூறுகளில் முதன்மையானது மொழி. தொடர்பு ஊடகம், சிந்தனையூர்தி என்பதையெல்லாம் காட்டிலும் மொழிதான் குமுக வாழ்வின் ஊடகம். மனிதன் குமுகப் பிராணி என்பதால் மனிதனை மனிதனாக்குவது மொழி. மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பங்கு பற்றிப் பேசும் எங்கெல்சு “கை என்பது உழைப்பின் உறுப்பு மட்டுமல்ல, உழைப்பின் படைப்புமாகும்” என்பார். அதே போல் மொழியும் குமுக வாழ்வின் கருவி மட்டுமன்று, குமுக வாழ்வின் படைப்புமாகும். மனிதர் மொழியைப் படைத்தார், மொழி மனிதரைப் படைத்தது என்று நான் சொல்வதுண்டு. ஆதிமனிதக் கூட்டம் ஒவ்வொன்றிலும் ஓசைகளாகப் பிறந்து, தெளிந்த ஒலிக்குறிப்புகளாக உருப்பெற்று, திசைமொழியாக வளர்ந்து, ஒலிவடிவத்தோடு வரிவடிவமும் பெற்று மொழி முழுமையடைகிறது. இது மொழிப் பிறப்பின் இயங்கியல். குலம் அல்லது பழங்குடியை ஒன்றாக்கும் காரணிகளில் குருதியுறவோடு மொழியும் சேர்ந்து கொள்கிறது. அருகருகிலான பழங்குடிக் குலங்கள் ஒன்றுகலந்து அவற்றின் திசைமொழிகள் ஒரே மொழியாக ஒன்றுகலக்கும் போது, குருதியுறவுக்கு மாற்றாக ஒரு பொதுமொழியே குமுகாயத்தை ஒன்றாக்கும் முதன்மைக் காரணி ஆகிறது. மொழிவழிக் குமுகாயமே தேசிய இனத்தின் கருநிலை எனத்தகும். மொழியோடு ஆட்சிப்புலமும் பண்பாடும் பொருளியல் பிணைப்பும் சேர்ந்து வரலாற்றுப் போக்கில் நிலைபெறும் போது தேசிய இனம் மலர்கிறது.

இந்தத் தேசிய இன உருவாக்கம் அயற்குறுக்கீடற்றதாக அமையும் போது பேச்சு மொழி, எழுத்து மொழி, வட்டார மொழி, கலை மொழி போன்ற பன்முகங்கள் வெளிப்பட்டாலும் பிறமொழிக் கலப்புக்கு வாய்ப்பு அரிது. ஆனால் வெவ்வேறு மொழிவழிக் குமுகாயங்கள் ஒன்றுகலந்து ஒரு தேசிய இனமாக உருப்பெறும் போது அதன் பொதுமொழி ஒரு கலவைமொழியாக அமைந்து காலப்போக்கில் அதுவே ஒரு தனிமொழியாக நிலைபெறுகிறது.

பிரெஞ்சு, ஸ்பானியம் போன்ற மொழிகளின் கூறுகளை உள்ளிணைத்துக் கொண்டு பிரித்தானிய ஆங்கிலம் அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் செயல்வழியில் அமெரிக்க ஆங்கிலமாக மருவிற்று.

தென்னாப்பிரிக்காவில் தொடக்கக் காலத்தில் குடியேறிய வெள்ளையர்கள் (ஆங்கிலேயர்கள் அல்லர்) செருமனி, ஆலந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் தாய்மொழிகள் புதிய
வாழ்க்கைச் சூழலில் ஒன்றுகலந்து ஆப்பிரிக்கான்ஸ் என்ற புதிய மொழி தோன்றியது. ஆப்பிரிக்கான்ஸ் பேசிய வெள்ளையர்கள் ஆப்பிரிக்கனர்கள் எனப்பட்டனர்.

இந்த நேர்வுகளில் மொழிக்கலப்பு என்பது வரலாற்றுப் போக்கில் இயல்பாக நிகழ்வுற்று, மானிட வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் கருவியாயிற்று.

ஆனால் மொழிக் கலப்பில் மற்றொரு வகை ஒடுக்குமுறையால் பிறந்து ஆதிக்கத்துக்குக் கருவியாகிறது. இது நலம்பயக்கும் கலப்பன்று, கேடு செய்யும் கலப்படம் எனலாம்.
தமிழில் ஏற்பட்ட பிற மொழிக்கலப்புகள் அடிப்படையில் அயலாதிக்கத்தினால் ஏற்பட்டவை.

ஆரியர்களால் வடமொழியும் ஆங்கிலேயர்களால் ஆங்கிலமும் தமிழில் கலப்புற்றன. இந்தி, பாரசீகம், உருது, தெலுங்கு போன்றவற்றின் கலப்பும் அரசியல் மேலாதிக்கத்தின் துணையோடு நிகழ்ந்ததே. தமிழில் பிறமொழிக் கலப்புக்கு எதிரான போராட்டம் என்பதன் சாரம் வேற்றின ஆதிக்கத்துக்கான எதிர்ப்பாகவே இருந்துள்ளது. ஆகவே தனித்தமிழியக்கம் என்பது வெறும் மொழிசார்ந்த முயற்சி என்பதற்கும் மேலே, இறுதிநோக்கில் தமிழின விடுதலைக்கான போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.

வல்லாதிக்க எதிர்ப்புத் தேசியங்களுக்குள்ள சனநாயக உள்ளடக்கம் பற்றி இலெனின் பேசினார். இவ்வகையில் இந்தியத் தேசியத்துக்கும் தமிழ் மக்களை வல்லாதிக்க எதிர்ப்புக்கு அணிதிரட்ட வேண்டிய தேவை இருந்தது. இந்தத் தேவையை நிறைவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட அறிஞர்களும் பாவலர்களும் எழுத்தாளர்களும் பிறமொழிக் கலப்பை எதிர்த்து – முதன்மையாக வடமொழி, ஆங்கிலக் கலப்புகளை எதிர்த்து – தமிழ்மொழித் தூய்மைக்காக உழைத்தார்கள். அந்த அளவில் அவர்களது முயற்சியில் தமிழ்த் தேசியமும் விதையாக உள்ளிருக்கக் காணலாம். பாரதியார், திரு.வி.க., போன்றவர்களின் உருவில் வெளிப்பட்ட தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசியத்தின் சனநாயக உள்ளடக்கம் என்பது அயலாதிக்க எதிர்ப்புக்கு இணையாக உள்ளாதிக்க எதிர்ப்பையும் கோரி நிற்கிறது. இங்கேயும் மொத்தத்தில் பிறமொழிக் கலப்பு ஆதிக்க ஆற்றல்களின் தேவையாகவும், மொழித்துய்மைக்கான முயற்சிகள் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைப் போரட்டத்தின் கூறாகவும் அமைகின்றன. ஆக, நாட்டு விடுதலைக்காக முனைந்து நின்றவர்களைப் போலவே, சமூக விடுதலையில் நாட்டம் கொண்டிருந்தவர்களும் பிறமொழிக் கலப்புக்கு எதிர்நிலைப்பாடு கொண்டவர்களாக விளங்கினார்கள்.

தந்தை பெரியார் கொள்கையளவில் தனித்தமிழியக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், செயலளவில் அவ்வியக்கத்துக்குத் துணைநின்றவர். சுயமரியாதையைத் தன்மதிப்பாக மாற்றிக் கொள்ளா விட்டாலும், தாம் நிறுவிய ஏடுகளுக்குக் குடியரசு என்றும் விடுதலை என்றும் பெயர் சூட்டியவர். பெரியாரை விடவும் பெரியார் வழிவந்த பலரும் — பொன்னம்பலனார், பாரதிதாசன் போன்றோர் — தனித்தமிழ்த் துடிப்புடன் விளங்கினார்கள். தனித்தமிழியக்கத்தை நிறுவி வழிநடத்திய மறைமலை அடிகளின் சைவப்பற்று அனைவரும் அறிந்ததே என்றாலும், அவரோடு பெரியார் தமிழ் மீட்பு முயற்சிகளில் இணங்கியும் இணைந்தும் செயல்பட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் மொழிப் போரில் தமிழர் தலைவர் பெரியாரின் தலைமையில் அடிகளாரும் பிற தமிழறிஞர்களும் அணிதிரன்டதும், அப்போராட்டத்தின் உச்சப்புள்ளியாக, பெரியார், சோமசுந்தர பாரதியாருடன் சேர்ந்து மறைமலை அடிகளும் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்கியதும் தன்மதிப்புக்கும் தனித்தமிழுக்குமான இயக்க உறவின் சான்றுகள்.

இந்தியத் தேசியமும், தமிழ்த் தேசியமும், சமூக நீதி என்னும் குமுக அறமும் ஆகிய குறிக்கோள்கள் அதனதன் வரலாற்று வரம்புகளுக்குள் தனித்தமிழியக்கத்துக்கான புற அடிப்படைகளாக அமைந்தன என்று சொல்வது தனித்தமிழியக்கத்தின் மொழிசார் அகவரலாற்றை மறுப்பதோ மறைப்பதோ ஆகாது. பாவாணர் சொல்கிறார்:

“தமிழின் தொன்மையை உலகிற்கறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர். செடியாகத் தழையச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகளார்! நான் மரமாக வளர்த்து வருகிறேன்.”

சுருங்கச் சொல்லின் இதுதான் தனித் தமிழியக்கத்தின் அகவரலாறு. கால்டுவெல், பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள், பாவாணர் – தனித்தமிழ் மலைத் தொடரின் உயர்முகடுகள் என்ற இந்த வரிசையில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தனித்தமிழியக்க வளர்ச்சியின் புற ஏரணத்துக்கும் அக ஏரணத்துக்குமான இயங்கியல் உறவை மார்க்சியம் பற்றி நிற்கிறது.
தனித்தமிழியக்கத்தைக் குமுகவியல் நோக்கிலும் மொழியியல் நோக்கிலும் ஆய்வு செய்த அறிஞர்களில் கைலாசபதியும் கா. சிவத்தம்பியும் குறிப்பிடத்தக்கவர்கள். கைலாசபதி சொல்கிறார்:

“இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வெளியாகியுள்ள அறிவியல், சட்டம், ஆட்சித்துறை, வணிகவியல் தொடர்பான் பல கலைச் சொற்பட்டியல்களை ஆராய்ந்தால், கலைச்சொல்லாக்கத்தில் தனித்தமிழியக்கம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தோன்றுகிறது. மறைமலையடிகள் தமிழும் அவரால் தாக்குறப்பெற்றவர்கள் தமிழும் இக்காலத் தமிழ்மொழியில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.”

இதே கைலாசபதி இப்படியும் சொல்வார்: “தொல்சீர்த் தமிழைக் காப்பதோடு தமிழை வடமொழிக் கலப்பில்லாததாகவும் ஆக்க வேண்டும் என்ற வேதாச்சலத்தின் முயற்சி இரட்டைப் பிற்போக்கானது. அது செயற்படுத்த முடியாத ஒரு பணி.”

சிவத்தம்பி சொல்வார்: “மறைமலையடிகள் தமது பிராமண எதிர்ப்பியக்கத்தைத் தமிழின் தொன்மையான தூய்மையைக் கெடுக்கும் ஒரு சமூக சக்திக்கெதிரான ஓர் இயக்கமாகவே கொண்டாரென்பது தெரிய வரும். பிராமண எதிர்ப்பியக்கமானது திட்டவட்டமான ஓர் அரசியல் இயக்கமாக முகிழ்த்துக் கிளம்பிய பொழுது, அந்த அரசியல் சக்தியின் வளர்ச்சிக்கு இவரது கருத்து, செயல், நடவடிக்கைகள் உதவின. இத்தகைய கண்ணோட்டத்தில் நோக்கும் போது தனித்தமிழியக்கம் பழமையைப் பேணும் ஓர் இயக்கமாகவே தொழிற்பட்டது என்பது தெரிய வரும்.”

கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் அறிவும் உழைப்பும் போற்றுதலுக்குரியவை என்பதில் நமக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் தனித்தமிழியக்கம் பற்றிய அவர்களின் தீர்ப்பில் அவர்கள் பெரிதும் வலியுறுத்தும் சமூக அறிவியல் பார்வையைக் காணவில்லை என்பதைச் சொல்லத்தான் வேண்டும். தொல்சீர் தமிழை மீட்கவும் காக்கவும் வேண்டும் என்பது மட்டுமன்று, காலத்தின் தேவைகளுக்கேற்ப வளர்க்கவும் வேண்டும் என்பதுதான் தனித்தமிழியக்கத்தின் நிலைப்பாடு, இந்தப் பணியை அது வெற்றிகரமாகச் செய்தும் உள்ளது. கலைச்சொற்களைத் தமிழாக்கும் போது தொன்மைத் தமிழ் எப்படியெல்லாம் துணைக்கு வரும் என்பதற்கு சொல்லாய்வறிஞர் அருளியாரின் கலைச்சொல் அகரமுதலி ஓர் அரும்பெரும் எடுத்துக்காட்டு.

மொழிமீட்புக்கும் மொழிக்காப்புக்கும் மொழிவளர்ச்சிக்குமான இயங்கியல் உறவை கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களால் காண முடியவில்லை எனத் தோன்றுகிறது. தனித்தமிழியக்கம் தேவையற்ற பிறமொழிக் கலப்பை வன்மையாக எதிர்க்கும் போதே, தேவை கருதிப் பிறமொழிச் சொற்களையும் தொடர்களையும் தமிழ் மரபு கெடாமல் தன்வயமாக்கிக் கொள்ளத் தயங்குவதில்லை. தனித்தமிழ் இயக்கம் என்பதைத் “தனித்து அமிழ் இயக்கம்” எனப் புரிந்து கொள்ள வேண்டாம்! பேராசிரியர் இளவரசு ஒரு முறை இப்படிக் கூறியதாக நினைவு!

தமிழில் பிறமொழிச் சொற்களைச் சிறும அளவில் ஆளும் தேவை என்பது நிலைபேறுடையதன்று. காலப்போக்கில் விரைந்து அவற்றையும் தூய தமிழாக்கிக் கொள்ளும் முயற்சி வேண்டும். அப்படிச் செய்யும் போதே கலை-அறிவியல் வளர்ச்சி காரணமாய் வேறுசில பிறமொழிச் சொற்கள் வந்து சேரலாம். அவற்றையும் தூயதமிழுக்குப் பெயர்க்கும் முயற்சி தொடரும். அதாவது தனித்தமிழ் என்பது முடிந்த முடிவன்று. இயங்கியல் நோக்கில் அது தொடர்ச்சியான செயல்வழி. தமிழ்க் குமுக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தேவையான செயல்வழி.

பாய்ந்தோடும் உயிராறு தனித்தமிழ் இயக்கம். அதனைத் தேங்கிய குட்டையாகப் பார்ப்பது இருவிதமான பிறழ்வுகளுக்கு வழிசெய்கிறது. ஒன்று, பிறமொழி வாயிலாகக் கிடைக்கும் அறிவுச் செல்வத்தை உள்வாங்கித் தமிழைச் செழுமைப்படுத்தும் தேவையை மறுத்து, எல்லாம் தமிழில் உள்ளது என்ற குருட்டு இறுமாப்பு. இரண்டு, எல்லாவற்றையும் தமிழால் வெளிப்படுத்த முடியும், முடியுமாறு தமிழர்களால் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளாமல், பிறமொழிகளை நத்திக்கிடக்கும் அடிமைக்குணம். இந்த இரு பிறழ்வுகளையும் மார்க்சியம் உறுதியாக மறுதலிக்கிறது. இந்தப் பிறழ்வுகளைக் களைந்து தனித் தமிழியக்கத்தை தமிழ் நலன் கருதியும் தமிழர் நலன் கருதியும் முன்னெடுத்துச் செல்ல இயங்கியல் நோக்கு நமக்குதவும்.

தமிழ்த் தாத்தா உ.வே.சா. தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பெருமகன் என்றாலும் தனித்தமிழை ஏற்றவரல்லர். “ஏழை வேலைக்காரனைப் பார்த்து ‘சோறு தின்றாயா? என்று கேட்கலாம். கனவானைப் பார்த்து ‘போஜனமாயிற்றா? ‘நிவேதனம் ஆயிற்றா?என்று கேட்பதும், துறவிகளைப் பார்த்து ‘பிக்ஷை ஆயிற்றா? என்று கேட்பதும் சம்பிரதாயங்கள் என்று உ.வே.சா. சொல்வது அவரது குமுகக் சார்பை மட்டுமின்றி, இதற்கு நேர்மாறான தனித்தமிழின் குமுகச் சார்பையும் சுட்டி நிற்கிறது.

“வெளிநாட்டிலிருந்து நம் தேசத்துக்கு வந்த ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம் பாஷையில் வார்த்தையில்லை. பிற்பாடு இப்போது இவற்றுக்கும் ஏதேதோ புரியாத தமிழில் வார்த்தைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பழக்கத்தில் சரளமாக வர மாட்டேன் என்கிறது என்று சங்கரச்சாரியார் கூறியதையும் இப்போதைய நிலவரத்தையும் ஒப்புநோக்கினால் போதும், தனித்தமிழியக்கத்தின் வெற்றி புலனாகும். அவர் காலத்திலேயே வானொலி கேட்டுத் தொலைக்காட்சி பார்த்திருப்பார். நீசர்களும் ஏறும் பேருந்து ஏறினாரா, தெரியவில்லை.

காஞ்சி சங்கராச்சாரியாரும் பேராயக் கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி ஐயரும் மட்டுமல்ல, நாமக்கல் கவிஞரும் வையாபுரிப் பிள்ளையும் ம.பொ.சி.யும் கூட தனித்தமிழியக்கத்தின் தேவையை மறுக்கவே செய்தார்கள். வடமொழிக் கலப்பின்றித் தமிழ் தனித்தியங்க முடியும் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. வடமொழிக் கலப்பு ஒரே நாளில் நிகழ்ந்ததன்று என்பதால் கலப்பு நீக்கமும் ஒரே நாளில் நடந்து முடிந்து விடாதுதான்.

ஆனால் அதற்கு முயற்சி, நீண்ட முயற்சி, விடாப்பிடியான முயற்சி தேவை. இந்த அறிஞர்கள் முயற்சிக்கு மாறாக முயற்றின்மையில் மூழ்கிக் கிடந்தார்கள். முயற்சியில் ஈடுபடும் மற்றவர்களையும் பழித்துரைத்தார்கள். தனித்தமிழ் திடுமென்று வானின்று குதித்ததன்று என்பதால்தான் இயக்கம் தேவைப்படுகிறது. பிறமொழி மயக்கம் என்ற நோய்க்கு மருந்து தனித்தமிழ் மயக்கம் அன்று, தனித்தமிழ் இயக்கமே என்பதில் தமிழ்ப் பற்றாளர்களுக்குத் தெளிவுண்டு.

“சுவாமி வேதாசலம் (மறைமலையடிகள்) சம்ஸ்கிருத எதிர்ப்பாளரே தவிர ஆங்கில எதிர்ப்பாளரல்ல என்று தோழர் பாலதண்டாயுதம் சொல்வது தனித்தமிழியக்கம் பற்றிய முழுமையான பார்வை ஆகாது. பாலதண்டாயுதம் சம்ஸ்கிருத எதிர்ப்பாளரும் அல்ல, இந்தி எதிர்ப்பாளரும் அல்ல, ஆங்கில எதிர்ப்பாளரும் அல்ல என்று நம்மாலும் சொல்ல முடியும். இந்திய மயக்கத்தாலும் தமிழியத்தின் பால் எதிர்ப்பாலும் வழிதவறிப்போன பொதுமை இயக்கத்தின் தடுமாற்றம்தான் பாலதண்டாயுதத்திடமும் வெளிப்படுகிறது.

தனித்தமிழியக்கத்தின் மீதான குற்றாய்வுகளைப் பட்டியலிட்டு ஒவ்வொன்றுக்கும் தக்க விடையளிக்கிறார் முனைவர் கு.திருமாறன் (நூல்: தனித்தமிழியக்கம். இக்கட்டுரைக்கான தரவுகள் பெரும்பாலும் இந்நூலிலிருந்து பெற்றவையே.)
மார்க்சியர்களாக அறியப்பட்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் தனித்தமிழியக்கம் பற்றிய பார்வையில் சற்றே மாறுபட்டு நின்றவர் தோழர் சீவானந்தம்தான். தனித்தமிழியக்கத்தைப் பிற்போக்கானது என்று முத்திரையிடும் பொன்னீலனின் பார்வைக்கு சீவா உதவ மாட்டார். சீவா சொல்கிறார்:

“தனித்தமிழ்ப்போக்கால் லாபம் உண்டா? உண்டு என்பது என் கருத்து. இதனால் தமிழ் மொழி வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கிறது. ஆனால் இதை அளவுக்கு மீறி மொழிவெறியை எட்டுமளவுக்குக் கொண்டுபோகக் கூடாது…. கூடுமான வரைக்கும் எல்லாவற்றையும் தமிழிலே, அழகான எளிய தமிழிலே, எளிதாகப் புரியக் கூடிய தமிழிலே சொல்ல வேண்டும். வேண்டாத இடத்தில் வலிந்து கொண்டுவருவது கூடாது என்ற முறையில் தனித்தமிழ்ப் போக்கு சரியே.

சீவா சொல்வது சரியே! ஆனால் மார்க்சிய நோக்கில் இது முழுமையானதன்று. வர்க்கப் போராட்டம், அதன் வடிவங்களான சனநாயகப் போராட்டம், தேசிய இனவுரிமைப் போராட்டம் ஆகியவற்றின் பின்புலத்திலும், மொழித் தூய்மைக்கான நீண்ட நெடிய முயற்சியின் இயல்புத் தொடர்ச்சியாகவும் தனித்தமிழியக்கத்தை நிறுத்திப் பார்க்க விடாமல் அவரைத் தடுத்தது எது? இந்தியத் தேசிய மயக்கமும் இந்தியத் தேசியத்துக்கு மாறான ஒவ்வொன்றின் பாலும் அவர் கொண்ட காழ்ப்பும்தானே?


(தோழர் தியாகு, ஆசிரியர், உரிமைத் தமிழ்த் தேசம்)
thozharthiagu.chennai@gmail.com