செவ்வாய், 19 மார்ச், 2019

நிலம் பூத்து மலர்ந்த நாள் : சுதாகர்

சர்வ நிச்சயமாக மனோஜ் குரூர்க்கு கடமை பட்டிருக்கிறது சங்கப் பழம்பெருமை பேசித்திரியும் தமிழ் இலக்கிய உலகம்.

அறிந்த அனைவரும் வெளிப்படுத்தியது போல் நாம் செய்திருக்க வேண்டிய ஒன்றை, நம்மிலும் சிறப்பாக சகோதரன் செய்துவிட்டார்.
நிலம் பூத்து மலர்ந்ந நாள்' கே.வி.ஜெயஶ்ரீயால் நிலம் பூத்து மலர்ந்த நாளாகிருக்கிறது வம்சியின் வழி.

கபிலர்- பாரி, அவ்வை-அதியமான், பரணர்-நன்னன் இவர்களின் கதையை ஒரு பாணர் குடும்பத்தின் தகப்பன், மகள் மற்றும் மகன் வழி வாசகனுக்கு நேரடியாக சொல்லப்பட்ட நாவலே நிலம் பூத்து மலர்ந்த நாள்.

ஒரு பாணர் கூட்டம் தன் பசி தீர்க்கவும் இளமையில் கூட்டத்தைவிட்டு வெளியேறிய தன் மகன் ஒருவனை கண்டடையவும் தாய்நிலம் விட்டு புகழ் விரும்பும் அரசர்களை தேடித் தொடங்குகிறது நாவலோடு தன் பயணத்தை.

நாவல் மூன்று காதையாக சொல்லப்படுகிறது. முதல் காதை கொலும்பன் தன்கதை வழி பாரியினுடையதையும், பின் அவன் மகள் சித்திரையின் வழி அதியமானுடையதையும், இறுதியில் தேடிவந்த மகன் மகிலன் வழி நன்னன் கதையையும் என்பதாக.

பாணர் குடியை சார்ந்த சாமான்ய மக்கள் மூவரின் வழி பெரும் புலவர் மூவரையும் அவர்கள் பாடி, காலத்தில் நிலைக்கப்பெற்ற சங்க அரசர்கள் மூவரையும் இன்று நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் மனோஜ்.
வாசகனுடன் நேரடி உரையாடல் வழி சொல்லப்பட்ட ஒரு நாவல் ஆகையால், இதன் வேகம் கட்டற்ற காட்டாற்றின் வேகத்துடன் வாசகனை தன்னோடு இழுத்துச்செல்கிறது.

சங்க கால நிகழ்வுகளாக பாடல்கள் வழி நாம் அறிந்த அனைத்து செய்திகளையும் அதன் பின்புலங்களுடன் காட்சிகளாக நம்முன் விவரிக்கிறார் மனோஜ்.எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் நாமறியாத மறுபுறம் ஒன்றுண்டு என்பதே நாவலின் அடிநாதமாக இருப்பதாக நான் உணர்கிறேன்.

நன்னன் மீது விழுந்த கொலைப்பழிக்கு பின்னுள்ள மகிலனின் சுயநல அரசியல், பாரியின் அழிவில் கபிலரின் பாடல்களின் பங்கு என நாம் புதுப்பார்வையை அறிகிறோம்.
நாவலில் விவரிக்கப்பட்டுள்ள நிலக்காட்சிகள், இயற்கையின் கூறுகள் விரிவான விஸ்தரிப்பாக இல்லை, இருப்பினும் அதன் இன்மை வாசகனின் கற்பனைத்திறனுக்கு வழிவிடுகிறது.

மனித வாழ்வின் வரலாறு என்பது கதைகளே. சம்பவங்களின் சேர்மானமே கதை. கதைகளின் தொகுப்பே நாவல்.அந்த வகையில் கண்ணிகளை மிக சிறப்பாக கையாண்ட நாவல் இது.மொழிபெயர்த்த நாவலா எனும் ஐயம் ஏற்படுகிறது, அந்தளவிற்கு ஜெயஶ்ரீ அவர்களின் உழைப்பை தந்துள்ள படைப்பு, நிச்சயம் நன்றிக்குரியவர்.
குறிப்பாக நாவல் முழுமையும் உள்ள உவமைகள் ஒரு சுகானுபவம் வாசகனுக்கு.

ஒளிப்படம் : நித்தியன்

1 கருத்து: