திங்கள், 25 மார்ச், 2019

சுளுந்தீ: தமிழ்த் தேசிய சமூக வரலாற்றின் ஆகச் சிறந்த ஆவணம் :- இரெங்கையா முருகன், ஆய்வறிஞர்.

சுளுந்தீ :
மறைக்கப்பட்ட தமிழ் மானுடத்தின்
18ஆம் நூற்றாண்டினை மிக நுட்பமாக விவாதிக்கும் ஆகச் சிறந்த தமிழ்த் தேசிய சமூக வரலாற்றுக் களஞ்சியம்.
:- ஆய்வறிஞர் இரெங்கையா முருகன்.

உள்ளூர் வரலாறுகளையும், ஒடுக்கப்பட்ட இன மக்களின் வரையறைகளையும், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் காலத்தின் அரசியலில் ஊடாட்டமான இருண்ட பகுதிகளையும் தனது அயராத உழைப்பால் இனவரைவியல் வரலாற்று நாவலாக சுளுந்தீ அனலாகப் பட்டையைக் கிளப்புகிறது.

சித்தமருத்துவம் தமிழகத்தில் தொலைக்கப்பட்ட வரலாறும், பண்டுவர்களான நாவிதர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய இடத்தை வகித்தனர் என்பதும், தமிழ்ப் பூர்வக் குடிகளுக்கும் அரசாண்ட வந்தேறிக் குடிகளுக்கும் இடையே உள்ள பிரச்சினை,சமாதானம், குடிமுறையிலிருந்து குல நீக்க முறைக்கும் உள்ள பிரத்யேகக் கூறுகளையும் அலசி ஆராய்கிறது சுளுந்தீ.

நாட்டுப்புற வழக்காறுகள், பக்கத்துப் பக்கம் தடுக்கி விழுந்தால் ஆய்வுப் பூர்வமாகப் பழமொழி மற்றும் சொலவடைகளை சமூகத்தோடு இயைந்த பார்வைகளும், ஆனந்த வருட பஞ்ச காலக் குறிப்புகள் தமிழில் இந்த அளவுக்குப் பதியப்படவில்லை.

புளியமரம் வந்த வரலாறு, வண்ணார் சமூகத்தாரின் வெள்ளாவியில் துணிகளை வைப்பதில் கூட வர்ண பேதம், கிணறு தோண்ட பூதம் வந்த கதை, கழுதை குறித்த சுவாரஸ்யமான சமூகக் கதையாடல்கள், தமிழ்ச் சமூகத்தில் மடங்களுக்கும் அரசுக்கும் உள்ள நுட்பமான தலையீடுகள், மயிருக்குள் நுழைந்திருக்கும் நுட்பமான சாதி வேறுபாடுகள், ஏராளமான சித்தா மருத்துவக் குறிப்புகள், மறைந்து கொண்டிருக்கும் வயதான பெண்கள் அணியும் தண்டட்டி அணிகலண், பழனி, கன்னிவாடி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் பகுதி சார்ந்த மக்கள் அவசியம் படிக்க வேண்டிய வரலாற்று இனவரைவியல் நாவல்.

இந்த நாவல் பல்கலைக் கழக வளாகப் பாடத் திட்டத்தில் வைக்கப்பட வேண்டிய புத்தகம்.

சுளுந்தீ :மறைக்கப்பட்ட தமிழ் மானுடத்தின் 18ஆம் நூற்றாண்டினை மிக நுட்பமாக விவாதிக்கும் ஆகச் சிறந்த தமிழ்த் தேசிய சமூக வரலாற்றுக் களஞ்சியம்.

2 கருத்துகள்: