செவ்வாய், 19 மார்ச், 2019

நிலம் பூத்து மலர்ந்த நாள் : இலட்சுமி கோபிநாதன்

நிலம் பூத்து மலர்ந்த நாள். மிக நெடு நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு நூல் உள்ளுக்குள்ளே வந்து உட்கார்ந்து...

சங்க இலக்கியப்பாடல்களின் வாயிலாக ஒரு சங்கத் தமிழ் வரலாற்றை, புதினமாக முன்வைக்கிறார் ஆசிரியர் மனோஜ் குரூர். என்ன ஒரு அற்புதமான முயற்சி. பெரும்பான்மையான தமிழ் படைப்பாளிகளுக்கும் தமிழ் அரசியல் செய்பவர்களுக்கும் வந்தேரி என்று பிறரைத் திட்டுவதற்காக மட்டுமே தமிழ் தேவையாயிருக்கிறபோது மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட திரு,மனோஜ் குரூருக்கு எப்படி இப்படி ஒரு சிந்தனை வந்தது என என்னால் ஆச்சரியத்திலிருந்து அகலவே முடியவில்லை. மொழி பெயர்த்த திருமதி.ஜெயஸ்ரீ மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர். 

இந்த நூலின் காலத்தையும் கதைக் களத்தையும் புரிந்து கொள்ள நாம் தமிழில் ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் படிக்க வேண்டியதில்லை. எட்டாம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை நாம் படித்த தமிழ் சங்கப் பாடல்களை கொஞ்சம் நினைவில் கொண்டாலே போதும் ஏனையவற்றை இந்த நூலே பார்த்துக் கொள்ளும்.

கதையின் நகர்வில் இரண்டு இடங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இந்தக்கதை, கதை மாந்தர்களின் வழியே சொல்லப்பட்டிருக்கிறது. அதில் இடையில் அதியமான் போருக்குப் புறப்படும் காட்சி அப்போது வீரர்களுக்கான விருந்தில் அதியமான் மதுவை அருந்த முற்படுகையில் ஒரு மூதாட்டியின் குரல் அவனைத் தடுக்கிறது. அந்த மூதாட்டியாக அவ்வை வருகிறார். உண்மையில் அவ்வையின் அந்த அறிமுகத்தில் நான் அப்படியே சிலிர்த்துப் போனேன். நமக்கெல்லாம் சிறிது நேரமேனும் அவ்வையோடு வாழ்ந்துவிட்டு வரும் பேறு கிடைத்தால் எப்படி இருக்கும். இந்த நூலாசிரியர்கள்( மூலம் மற்றும் மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்) வாயிலாக நமக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைக்கிறது.

மற்றொரு நிகழ்வு இந்தக் கதையின் நாயகி ஒரு படைவீரனைக் காதலிக்கிறாள். இருவரும் வேறு வேறு நாட்டை இனத்தை சேர்ந்தவர்களே. அவன், அவளை சிறிது பிரிந்து தன் நாட்டிற்குச் சென்று திரும்பி வந்துவிடுவதாகக் கூறிச் செல்கிறான். அவள் காத்திருக்கையில் அவளது கூட்டத்தார் தாங்கள் இருக்கும் இடம் விட்டு வேறு இடம் செல்ல முடிவு செய்கிறார்கள். அவள், அவன் அங்கேதான் வருவான் என்பதற்காக வர மறுக்கிறாள். அப்போது என் மனது அவளது கூட்டத்தார் அவளை என்ன செய்யப் போகிறார்களோ என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
( பழகிய புத்தி) ஆனால் அந்தக் கூட்டத்தின் தலைவன் அவளிடம் வந்து எங்களுக்கு நீ அவனோடு பழகுகிறாய் என்றும் அவனுக்காகத்தான் வர மறுக்கிறாய் என்றும் தெரியும். ஆனாலும் நாங்கள் வேறு இடம் போகத்தான் வேண்டும். உனக்காக நாங்கள் அவன் வரும்வரை இங்கேயே உன்னோடு இருக்கிறோம் அவன் வந்த பிறகு நீ அவனுடன் செல். பின்னர் நாங்கள் இங்கிருந்து வேறு இடம் செல்கிறோம் என்று சொல்கிறார். அவளது தாய் கூட அவளது முடிவிற்குக் குறுக்கே நிற்கவில்லை. முக்கியமாக நீ எப்படி அவனை நம்பிப் பழகினாய் அவன் உன்னை ஏமாற்றிவிட்டால் நீ என்ன செய்வாய் உன் வாழ்க்கை என்ன ஆகும்?. நம் குடும்ப சமூக மரியாதை கவுரவம் எல்லாம் என்ன ஆகும் என யாரும் கொக்கரிக்கவில்லை. உனக்கு அப்படி என்ன வீட்டார் அறியாமல் மற்றொரு ஆணுடன் பழக்கம் வேண்டியிருக்கிறது என அவளைக் குதறவில்லை. ஏன் அறிவுரை கூட சொல்லவில்லை. அதை மிக இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்கிறார்கள்.  அவனே அவளைத் திருமணம் செய்து பின்னர் வேறு ஒரு பெண்ணோடு அவளறியாமல் வாழ்கிறான்.

இதை அறிந்த அவள் கூட்டத்தார் அவளிடம் அதை எடுத்துச் சொல்லி எங்களோடு வா நாங்கள் உன்னோடு இருக்கிறோம் என்று அழைக்கிறார்கள். அப்போதும் கூட நீயாகத்தானே ஏமாந்தாய் என ஒரு வார்த்தைகூட இல்லை.

ஆக, சங்க காலத்தில் பெண்களின் விருப்பம் என்பது தன் குடும்பத்தையோ கூட்டத்தையோ சார்ந்து இல்லை. பெண் ஆளுமைகள் அரசர்க்கே அறிவுரை கூறுபவர்களாய் இருந்திருக்கிறார்கள். கற்பைப் போலவே களவும் ஒரு ஒழுக்கமாகப் பார்த்தது நம் தமிழ்ச் சமூகம். ஆனால் எப்போது பெண் என்பவள் ஒரு உணர்வுள்ள ஜீவன் என்பதைத்தாண்டி ஒரு கைப்பொருளாய் மாறிப்போனாள் என்பதுதான் புலப்படவில்லை.( பொள்ளாச்சி உட்பட பல சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறேன்.)

இப்படி எவ்வளவோ......என் எண்ணத்தில் உள்ளதெல்லாம் எழுத ஆரம்பித்தால் எழுதி முடியாது.
நான் எப்போதும் நூலை வாசிப்பதன் முன்னர் முன்னுரை வாசிப்பதில்லை. நூலை வாசித்த பின் முன்னுரை பொருந்துகிறதா எனப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இந்த நூலை வாசித்து முடித்த போது இது ஒரு கால இயந்திரம் என்றே எனக்குத் தோன்றியது. அதையே திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் தன் முன்னுரையில் எழுதியிருந்தார்.

திருமதி.ஜெயஸ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு நூல் என்பதை முற்றிலும் மறக்கடிக்கக்கூடிய வகையிலானது. கிட்டத்தட்ட மூல ஆசிரியரே தமிழில் எழுதியது போல இருக்கிறது.

இந்த நாவல் நமக்கு பல கதவுகளைத் திறந்து விடுகிறது. நாம் கொண்டாட வேண்டிய நாவல். இதை அழுத்தமாய் பரிந்துரைத்த தம்பி சுதாகருக்கு என் அன்பும் நன்றியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக