வெள்ளி, 3 மே, 2019

வ.உ.சி : சாதி கடந்தவர்; சுயசாதி எதிர்ப்பைச் சுமந்தவர் :- இரெங்கையா முருகன்.


1900 கால கட்டத்தில்  ஒரு ஏழை விவசாயியைக்  காரணம் ஏதுமின்றி சம்பந்தமில்லாமல் பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாக்கினர்.  இது சம்பந்தமாக நீதிமன்ற  வாய்தா என்ற பேரில் மன உளைச்சலுக்கு உட்படுத்தி பல தடவை அலைக்கழிக்க வைத்தனர். கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக ஓட்டாபிடாரத்தில் அருகே அமைந்துள்ள கிராமத்திலிருந்து தூத்தூக்குடிக்கு கால் நடையாகவோ, வண்டி மாடு கட்டியோத்தான் செல்ல வேண்டும்.

பல காலமாக நீதிமன்றத்துக்கு அலைவதுடன் தாங்க முடியாத மன உளைச்சலுக்கும் ஆட்பட்டிருந்த அந்த தலித் விவசாயி ஒரு நாள்  கோயில் அருகே மயக்க மடைந்து சரிந்து விழுந்துள்ளார். மிகவும் விசனமடைந்து துக்கித்த நிலையில் காணப்பட்டார்.

அச் சமயம் தற்செயலாக  மயக்கமடைந்து சரிந்து வீழ்ந்த அன்பரை எதிர் நோக்கி உதவ முன் வருகிறார். மயக்கத்திலிருந்து தெளிந்த அந்த விவசாயி தனது மனக் குமுறலை ஆற்றாது உதவ வந்தவரிடம் ஒரு தகவலாக தனக்கு நேர்ந்த பிரச்னைகளை விலாவாரியாக தெரியப் படுத்துகிறார்.

வந்தவரோ பேர் போன பரம்பரை வக்கீல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த எளியோன் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் விவசாயி. அக் காலத்தில் இந்த எளியவர்களை ச்சீ என உதாசீனப்படுத்தும் மன நிலையில் இருந்த சூழலில் வந்து உதவுபவரோ வழக்கத்திற்கு மாறான வித்தியாசப் பண்புடையவர்.

அந்த விவசாயிக்கு  உதவ வந்தவர், நொந்து போன அவரது மனதிற்கு நல்ல வார்த்தைகள் கூறி ஆசுவாசப்படுத்தி விட்டு அவரது மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட கோர்ட் வழக்கு விவரங்களை கேட்டு குறிப்பு எடுத்து கொள்கிறார். மேலும் இனி மேல் தாங்கள் நீதிமன்ற படி ஏற வேண்டியது வராது. நல்ல செய்தி வீடு தேடி வரும். கவலைப் படாமல் வீடு போய் சேருங்கள்  என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.

 மயக்கமடைந்த ஏழை விவசாயிக்கு எல்லாம் கனவா இல்லை நனவா என்ற குழப்பத்துடன் அவரும் தனது வீட்டை நோக்கி நடையை கட்டிவிட்டார். மயக்கம் அடைந்து விழுந்த கோவில் அந்தப் பகுதிகளில் பிரசித்திப் பெற்ற உலகம்மன் கோவில்.

மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஏழை விவசாயிக்கு  கோர்ட் விவகாரத்தில் நன்றாக வாதாடியதன் விளைவாக  நீதி வென்றது.அந்த செய்தி  தலித் ஏழை விவசாயி வீட்டிற்கு  வந்து சேர்ந்தது. அவரால் நம்ப முடிய வில்லை. வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் திக்கு முக்காடி விட்டார்.

அந்த சமயத்தில் அந்த விவசாயி தனது  குடும்பப் பரம்பரை வாரிசுகளிடம் பின் வருமாறு கூறுகிறார். அந்த உலகம்மன் தெய்வம்தான் கடவுள் மாதிரி வந்து எனக்கு உதவுவதற்காகவே அவரை அனுப்பி வைத்துள்ளார். அவர் மூலம் வெற்றியும் கிடைத்துள்ளது. ஆகையால் இனி நமது கடைசி வம்சாவளி வரை ஆண்குழந்தை பிறந்தால் உலக நாதன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் உலகம்மை என்றும் பெயர் வையுங்கள் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாராம்.

இந்த ஏழை விவசாயிக்கு உதவ முன் வந்தவர் பேறு போன வக்கீல் குடும்பத்தைச் சார்ந்த உலகநாத பிள்ளையின் தவச் செல்வர் கப்பலோட்டிய தமிழன், தியாகத்தின் இலக்கணம் வ.உ.சிதம்பரனார். இச் செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டவர் திரு. லேனா குமார் அவர்கள்.

அவருக்கு இச் செய்தியை பகிர்ந்தவர் பாதிக்கப்பட்ட அந்த விவசாயி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் நாவலாசிரியர் சோ. தர்மன் அவர்கள்.

இந்த செவி வழிச் செய்திக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று தேட ஆரம்பிக்கும் போது வ.உ.சி. தனது சுயசரிதையில் ஒரு இடத்தில் கீழ் வருமாறு குறிப்பிடும் நான்கு வரி இடம் பெறுகிறது. இதை ஒரு அனுமானமாக எடுத்துக் கொள்ளலாம்.

“முடிமனில் என்னுடை முன்னோர் நாள் முதல்
அடிமை புரியும் அறிவினைக் கொண்ட
வேத நாயகம் எனும் மேம்படு  பள்ளனை
ஏத மில்லாமலே எண்ணிலா வழக்கில்
அமிழ்த்தினர் போலிஸார்;அனைத்தினும் திருப்பினேன்”.

இந்த வரிகளை கொண்டு மேற்கண்ட சம்பவம் ஒருவாறாக இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வலியவர்கள் எளியோரை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு வ.உ.சி.யின்  வாழ்வில் பல செய்திகள் கொட்டிக் கிடைக்கிறது. உதாரணமாக சில செய்திகளை காணலாம்.

சாதிச் செருக்கு மிகுந்த அக்காலத்தில் இரண்டு கண்களை இழந்த ராமையா தேசிகன் என்ற தேவேந்திர குல வகுப்பைச் சார்ந்தவரை தனது வீட்டில் வைத்து பாதுகாத்து உணவிட்டு வந்தவர். ஆனால் அதே வேளையில் தனது தெருவாசிகளுக்கும்  தன் சாதி சார்ந்த சமூகத்தாருக்கும்  தெரியாமல் பாதுகாத்து வருகிறார். பிறகு நாள் செல்லச் செல்ல இச் செய்தி தெரிய வந்து அவரது சமூகத்தாரிடமிருந்தே எதிர்ப்பு வருகிறது. வ.உ.சியை சாதி நீக்கம் செய்யும் அளவுக்கு போய்விடுகின்றனர்.

வ.உ.சி.யின் சுயசரிதை வரிகளில் காணலாம்

”சிவப் பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென்
தவப் பயனால் இலம் தங்கப் பெற்றேன்.
ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால்
தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்
குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென்
தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்
கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை
ஓட்டிடக் கருதி யான் உரமில்லாமையால்
‘அவளிடத்’ துரைத்திட அடுக்களை சென்றேன்.
‘’எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!
எல்லாம் கடவுளா யிருக்க வேண்டும்
உருவம் முதலிய ஒன்றினும் பேதம்
மருவுதலிலாமை மலை போல் கண்டும்,
கற்பனை யாகக் காணும் குலத்தின்
சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய!
துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண்
இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம்
ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின்
பிழையெனார் உலக பேதமை உணர்ந்தோர்.

அச் சமயம் வ.உ.சி.யின்  மனைவி பார்வை இழந்த இவருக்கு இது வரை தட்டில்தான் சாப்பாடு  அருகில் வைத்து வந்தேன். இனி மேல் நானே  கண்களை இழந்த அவருக்கு சாப்பாட்டை அவரது வாயில்  ஊட்டி விடுகிறேன் என்பதோடு மட்டுமல்லாமல் ஊட்டியும் விட்டவர். இது குறித்து வ.உ.சி.யிடம் முறையிட பயந்தார்கள் அவரைச் சார்ந்த சமூகத்தார்கள்.  காரணம் அவரது முரட்டுத்தனம். முரட்டு வக்கீல் பிள்ளை என்றே அழைப்பார்கள்

வள்ளுவ வகுப்பினரைச் சார்ந்த சுவாமி சகஜானந்தரை தனது வீட்டில் ஒரு அங்கத்தினராகவே போற்றி பாதுகாத்தவர். வ.உ.சி.தன்னுடைய அலுவல் பணிகளுக்கிடையே சகஜானந்தரையும் உடன் அழைத்துச் செல்வார். அச் சமயம் வ.உ.சியுடன் பணியாற்றுபவர்கள் வ.உ.சி.க்கு பயந்து அவர்  இல்லாத நேரத்தில் சகஜானந்தரிடம் சாதி குறித்து விசாரிப்பார்கள். வ.உ.சி.யின் அறிவுறுத்தலின் படி நானோ துறவி. துறவிக்கு ஏது சாதி என்று கூறி விடுவார்.

ஏழைகளுக்கும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கும் தனது சொந்த செலவில் வாதாடிய தென்னகத்தின் ஒரே வக்கீல் அக் காலத்தில் வ.உ.சி. ஒருவரே. இன்றைய மேம்பட்ட அரசியல்வாதிகள் 1927 ம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில்  வ.உ.சி. உரையாற்றிய அரசியல் பெருஞ்சொல் சொற்பொழிவை பால பாடமாக படியுங்கள். ஏரி, குளம், பொது தண்ணீரை எல்லா சமூக மக்களும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், சமூக மக்களிடையே பிணக்கு ஏற்படும் போது பிரச்னை இல்லாமல் எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும் ,கல்வி, மருத்துவம் இலவசமாக வழங்கிட வழி செய்தல், சுயாட்சி குறித்து மிகு விவர தகவல், தமிழ் சித்த மருத்துவத்தின் மேன்மை, தமிழர் பண்பாட்டுச் சிறப்பு, தமிழ் மொழியை வளர்ப்பதற்கென  பல்கலை கழகங்கள் முக்கியத்துவம் போன்ற பல்வேறு விசயங்களை அலசி ஆராய்ந்த சொற்பொழிவு .

இன்றைய சாதி + அரசியல் வாரிசு தலைவர்கள் வோட்டு வங்கி தேர்தல் அரசியல் சுய லாபத்திற்காக வலியவர்களாகிய இவர்கள் எளியவர்களை எவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள். சமூகத்தை எவ்வளவு பிளவுபடுத்த கங்கணம் கட்டி வேலை செய்கிறார்கள். பல தலைவர்கள் மேடையில் வீராவேசம் பேசுவார்கள். தனது சொந்த வாழ்க்கையில் சம்பந்தமில்லாத வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கிறார்கள். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க நாமும் வ.உ.சியை போன்ற உண்மையான தியாக வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க தவறியதன் பலன்தான்  சினிமாகாரர்களையும், சுயநல மிக்க கேடுகெட்ட அரசியல் வாரிசுகளுக்குத்தான் நாம் குடை பிடித்து வரவேற்க காத்திருக்கிறோம்.

மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன
    மகிழ்வொடு தாங்கிய ரேனும்

இன்னலுற் றயர்ந்தோம் எனக்கலுழ்ந் திடில் தன்
    இரு விழி நீரினை உகுப்பான்.

6 கருத்துகள்: