புதன், 19 டிசம்பர், 2018

போன தலைமுறைப் புயலைப் பற்றிய ஒரு நாட்டுப்புறப் பாடலும் வரலாறும் :- துரை.இராசகுமாரன்

புள்ளான்விடுதி என்றொரு கிராமம் , எங்கள் ஊரை அடுத்து அமைந்துள்ளது. அந்த ஊரில்தான் நடேசக் கோனார் என்ற ஒரு தலைசிறந்த நாட்டுப்புறப் பாடகர்  கடந்த நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார்.  ஈழம் வரை சென்று பாடல்பாடி பொருள் ஈட்டும் அளவிற்குக் காத்திரமான பாடல்களைத் தாமே இயற்றிப் பாடும் வல்லமை கொண்டவராக நடேசக்கோனார் இருந்துள்ளார்.

1956 வரை வாழ்ந்த கோனார் அந்தக் காலகட்டப் பகுதியில் தானாண்மை நாட்டுக் கிராமங்களைக் குறித்த பல பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். அவற்றில் எங்கள் கிராம மக்களின் வாழ்வியல், அரசியல், பொருளியல், வணிகம், அதிகாரப் போட்டியில் நடந்த கொலைச் சம்பவம், பட்டுக்கோட்டை நீதிமன்ற வழக்குகள் என்று பல தரவுகள் ஊடாடிக் கிடக்கும்.

ஒரு வட்டாரத்தின் அரை நூற்றாண்டுகாலத்திய வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்ற அவரது பாடல்கள் அழிந்துவிடக்கூடாது எனும் உயரிய நோக்கில்  கீரமங்கலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் பெருமுயற்சியால் 90 களில்  நடேசக்கோனாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

நடேசக் கோனாரின் பாடல் ஏடு ஒன்றில் 50 களின் தொடக்கத்தில் நாகை வழியே கரை கடந்த பெரும் புயல் ஒன்றைப் பற்றியும் , அதனால் எங்கள் பகுதிக் கிராமங்கள் சூறையாடப்பட்ட தகவல்களையும் முன்பு படித்த  நினைவு... மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்ப்போம் என்று அடுக்கிலிருந்த புத்தகத்தைத் தேடி எடுத்துப் படித்தேன்.

ஆச்சரியம் என்னவென்றால், மணிக்கு 80 மைல் வேகத்தில் தாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் சொல்லப்படாத அந்தப் புயலின் கோரம் இன்றைய கஜாவின் கொடூரத்தோடு ஒரு செய்திகூட விடுபட்டுப் போகாமல் அப்படியே ஒன்றி வருகிறது .

நந்தன ஆண்டு, கார்த்திகை மாதம் 15 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ...
அந்தப் புயல் தாக்கியதாகப் பாடல் தொடங்குகிறது.

"மாங்காய் காய்ச்ச மரமெல்லாம் மலைமலையாய்ச் சாய்ஞ்சுதே
தேங்காய் காய்ச்ச மரமெல்லாம் தேருத்தேராச் சாய்ஞ்சுதே
பாட்டன்வச்சுக் காய்ச்சுதே
பலாவும் வேம்பும் போச்சுதே
பூட்டன் வச்சுக் காய்ச்சுதே புளியந்தோப்பும் போச்சுதே.."
என்று பாடல் விரிவடைகிறது.

மாமரம், தென்னை, பலா, புளியமரம், சவுக்கு, முருங்கை , வாழை, பனை, கருவை மரம், கரும்பங் கொல்லை , ஈச்சமரம், வேலா மரம் உள்ளிட்டவை சாய்ந்து விட்டதாக நடேசக் கோனார் எதுகை மோனையில் வரியமைத்துப் பாடியுள்ளார்.

" சோலையான சவுக்கெல்லாம் தூருத்தூராச் சாய்ஞ்சுதே
சாலைநீள மரமெல்லாம்
சாருச்சாராய் சாய்ஞ்சுதே..."
என்ற வரிகள் இம்மி கூட பிசகின்றி இன்றைய நிலையோடு ஒட்டி வருகிறது.

மேலும்  பேசும் படக் கொட்டகை, தந்தி , தண்டவாளம் , அந்தி ரெயில் போன்றவையும் புயலால் பாதிப்படைந்துள்ளாக பாடல்  வரிகள் அமைந்துள்ளது. இதன் மூலம் திரையரங்குகளும், தொடர் வண்டிகளும் ( பேராவூருணி- காரைக்குடி வழித்தடம் ) 40 களிலேயே எங்கள் பகுதியில் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவருகிறது.

மீன் பிடிக்கப்போன செம்படவர் சிலர் கரை திரும்பவில்லை என்று குறிப்பிடும் கோனார், அம்மையாண்டி கண்டிக்குளத்தில் இரண்டு குருவிக்காரர்கள் வேட்டைக்குப் போன இடத்திலேயே புயல் தாக்கி இறந்து கிடந்ததையும் குறிப்பிடுகின்றார்.
( இந்தக் குருவிக்காரர் எனும் தனித்த இனக்குழு மக்கள் இன்றும் வேட்டையாடிக் கொண்டு ஊரை விட்டு விலகி காட்டுப்பாங்கான பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் ).

புயல் தாக்கிய மறுநாள் காலையில் மறமடக்கிச் சந்தையில் இருந்து திரும்பிய ராமன் என்பவர் வரும் வழியிலேயே இறந்து கிடக்கிறார்.

மாங்காடு கிராமத்தில் தோட்டக்காவல் வேலை பார்த்த  சின்னமுத்து என்பவர் புயல் தாக்கியதில்  தோட்டத்திலேயே இறந்து விடுகிறார். ( தோட்டம், கோயில், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளைக் காவல்காக்கும் காவல்காரக் குடும்பங்கள் தானாண்மை நாட்டுக் கட்டமைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். இப்போது கோயில் காவல் குடும்பங்கள் மட்டும் முத்தரையர்களில் ஓரிருவர் அதே பெயரில் இருக்கின்றனர்) .

ஒட்டன்காடு அருகேயுள்ள கொன்றைக்காட்டின் ரைஸ்மில்லில் சுவரோரமாகப் புயலுக்கு ஒதுங்கி நின்ற ஒன்பது பேரில் எட்டு பேர் சுவர் இடிந்து விழுந்ததால் அதே இடத்தில் நசுங்கிச் சாகின்றனர்.

சித்துக்காட்டில் ஒரு குடும்பத்தினர் மொத்தமாக இறந்துள்ளனர் ...

இதுபோல மரங்களுக்கும் மனிதர்களுக்கும் பேரிழப்பை நந்தன ஆண்டில் வீசிய புயல் ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல் தாக்கியவுடன் இரவில் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு மாடி வீடுகளுக்குள் மக்கள் தஞ்சம் புகுந்ததைப் போலவே கடந்த நூற்றாண்டுப்  புயலின்போதும் மக்கள் அழுகுரலோடு வீடுவீடாக ஓடிச் சென்றதை

" சிகப்புச் சீமை ஓடெல்லாம் சின்னாபின்ன மாச்சுதே
தகப்பன் நாட்டு ஓடெல்லாம் தாறுமாறாப் போச்சுதே.."

" ஓட்டைநம்பி யந்தவீட்டில்
ஓடியுள்ளே நுழைஞ்சுதே
ஓடுகளும் பிடுங்கியோட்டு
வீடுகளும் பிரிஞ்சுதே

மாடிமெத்தை மச்சுவீட்டைத்
தேடியங்கே நுழைஞ்சுதே
மத்தியிலே மரம்விழுந்து
மெத்தைவீடும் அழிஞ்சுதே.."
என்ற வரிகள் சுட்டிக்காட்டுகிறது.

அதாவது, நூற்றாண்டு கடந்தாலும் குடிசைகளுக்குள் வாழ்ந்த ஏழை சனம் இன்னும் குடிசைகளுக்குள்ளேயேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான வேதனை மிக்க வரலாற்றின் எழுத்தாவணம் இந்த வரிகள்.

புயல் பற்றிய குறிப்புகளைத் திரட்டுவதற்காகச் சில ஆவணங்களை வாசித்ததில் இருந்து நான் உணர்ந்து கொண்ட உண்மை... நடேசக் கோனார் வாழ்ந்த நந்தன ஆண்டில் வீசிய கொடும் புயலுக்குப் பிறகு தென்னையை முறிக்கின்ற அளவிற்கு வீசிய புயல்  கஜா வாகத்தான் இருக்க முடியும்! அதாவது, அரைநூற்றாண்டு இடைவெளியில் வீசியுள்ளது.

கஜா என்பது " தலைமுறைப் புயல்" இந்தத் தலைமுறை நாம் அதற்கு முகம் கொடுத்து விட்டோம். இயற்கை இனி நம் தலைமுறைக்கு  அத்தகைய புயலை கொண்டுவந்து சேர்க்காது என்ற நம்பிக்கையோடு ( 'மறு புயல்' பற்றின வதந்திகளை புறந்தள்ளிவிட்டு ... ) மீண்டும் நம் மண்ணை மறுகட்டமைவு செய்வோம்.

அதேநேரத்தில்,  'மண்சார்ந்த படைப்புகள் '  எத்தனை முக்கியமானது என்பதையும் அந்தந்த மண்ணின் மக்கள் உணர வேண்டும். அதன் மூலம்தான் அடுத்தடுத்த தலைமுறைகள் தமக்கான வாழ்வைத் தகவமைவு செய்து கொள்ள முடியும். நடேசக் கோனார் பாடிவைத்ததாலேயே நாங்கள் சில பாடங்களைக் கற்றுணர்கிறோம் .
' புயல் புதிதல்ல...' என்கிற புரிதலே மீண்டும் உழைப்பதற்கான ஒரு பெரும்  மன உந்துதலைத் தருகிறது.

மேலும் காலங்கள் ஓடினாலும் காற்றுக்குப் பயந்து மாடி வீடு தேடி ஓடும் அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...நூற்றாண்டுகளாக நம் மக்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அடுத்த புயலுக்காவது அவர்கள் ஓடியொளியாத அளவிற்கு சமூகம் வலுப்பட வேண்டும் என்கிற உறுதிப்பாடும் மனதில் எழுகிறது. இவைதான் படைப்பின் வலிமை!

படைப்பூக்கம் கொண்ட எழுத்தாக்கங்கள் தமிழ்க் குடிகள்தோறும் ஏன் எழ வேண்டும் என்பதற்கும் இவைதான் உதாரணங்கள்.  காலங்களின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் எழுத்தும், பேச்சும்தான் ஒரு சமூகத்தின் வழிகாட்டி, வழி நடத்தி...

" ஆலமரமும் கால மாச்சுதே -
ஏ ! காத்தாயி
அதை ஆண்ட முனியும்
மாண்டு போச்சுதே.."

முறிந்த மரத்தின் கீழே நின்று கோனார் பாடிக் கொண்டிருக்கிறார்.

வியாழன், 13 டிசம்பர், 2018

சுளுந்தீ நாவல் - தமிழுக்குக் கிடைத்த கொடை: - பா.முருகன்.

தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட மருத்துவ முறைகளை ஒரு வரலாற்று நாவலில் உள்புகுத்தும் சாத்தியங்களையும், தனிமனித வீரம் நிகழ்த்தும் வரலாற்று மாற்றங்களால் எழும் நாட்டார் கதைகளும், ஜமீனுக்குட்பட்ட அதிகார வரம்புகளை நில வரைவியல் முறையில்  பாலியல் பாசாங்குகள் அற்றுப் பேசும்போது அது ஏற்படுத்தும் மாயஜாலங்களும்,
சவரக்கத்திக்குள் மறைக்கப்பட்ட மருத்துவம் மற்றும் கலாச்சாரத்தை இவ்வளவு நெருக்கமாகப் பதிவு செய்த விதத்தில் இந்த நாவல் அதிசயத்தை நிறுத்துகிறது. இதற்கு முன் மளையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட ' சின்ன அயரத்தி' நிறுத்தியது குறிப்பிடதக்கது.

இந்த நாவலில் உள்ள தரவுகளும் குறிப்புகளும் நாவல் தளத்திலிருந்து கட்டுரை வடிவத்துக்கும், பின் கட்டுரைத் தன்மையிலிருந்து நாவல் தன்மைக்கும் மாறுகிறது. அடுக்கடுக்கான படிமங்களால் நம்மை முன்னும் பின்னும் அசைக்கிறது. நாவிதன் புரவியின் காலடிச்சத்தம் காதுக்குள் கதம்ப வண்டுச் சத்தமாய் கிறுகிறுக்க வைக்கிறது. கிடா முட்டுச்சத்தம்  நமக்கான பெருந்தண்டனையாய் மாறும் அதே நேரத்தில், நாவிதனின் நடவடிக்கைகள் ஆகம விதிகளுடனும் பிறப்பின் தர்மத்தையும் எரிக்கும் வேள்வியாகிறது. தமிழ் நாட்டார் வழக்காற்றியலில் ஓமலிப்புப் பாடல்களை ஆயுதமாகப் பயன்படுத்தினர். அதற்கு எடுத்துக் காட்டு கலகக்காரர்களும் எதிர்க்கதையாடல்களும் நூல்.

நாவிதனின் தாய் மகனைக் கொன்ற வீரனைக் கைகளால் தடவிப் பாடும்போது குற்ற உணர்ச்சியால் நம்மைக் கல்லாக்குகிறது.

நமக்குத் தேவையான மருத்துவம், நிலவரைவியல், கலாச்சாரப் படிமங்கள், மனித நோய்க்கூறுகள், சமூகத் தரவுகள் மற்றும் மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல் என அனைத்துக் குறிப்புகளுக்கும் இந்த நாவல் உங்கள் நூலகத்தில் இருந்தால் எடுத்துத் தைரியமாகத் தேடலம்.

இவ்வளவு தரவுகளுக்கும் ஒரு நீண்ட நெடிய களப்பணி இல்லாமல் சாத்தியமே கிடையாது.
'சுளுந்தீ' நாவல் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவ்வளவே சொல்வேன்.
ஆசிரியர் அண்ணன் இரா.முத்துநாகு அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

அடவி ஆதி பதிப்பகம் வெளியிடவிருக்கும் சுளுந்தீ நூலைக் குறித்து ..

சனி, 1 டிசம்பர், 2018

பறவைகள் குறித்த எழுத்தாவணம் :- இரா.முத்துநாகு

தமிழகத்தில் பறவைகள் காப்பிடம்.
இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் 'இது நமக்காகது' எனப் பலரும் ஒதுங்கி விடுவார்கள். இல்லை இல்லை படிக்கும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டிய நூல் என்பதை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பறவைகள் காப்பிடங்களுக்கும் (சரணலையம்) சென்று, ஆய்விட்டு, அதன் புகைப்படங்களை (அழகிய) எடுத்து மிமினுக்கும் தாள்களில் அச்சிட்டுள்ளார்கள். இதை விட முக்கியமானது இந்தியாவிலே அதிக பறவைகள் காப்பிடமும் பெரிய காப்பிடமும் அமைந்த மாநிலம் தமிழகம் என்பதால் இது போன்ற நூல்கள் தமிழ் இலக்கிய உலகில் இல்லாததும், இந்த நூல் அறியப்படவேண்டியதன் கட்டாயத்தை நான் உணர்கிறேன்.

'மரத்தையும், பறவையையும் தங்கையாக நினைத்து அழுத பெண் பாத்திரத்தைத் தமிழ் இலக்கியங்களில் படித்திருப்போம். கொங்கு மண்டலத்தின் 'அண்ணன்மார்' கதையின் மையப் புள்ளியே கிளி. இராமாயணத்தில் 'மான்' தானே கதையின் திருப்பம். பாலூட்டும் பன்றியைத் தனது பசிக்காக வேட்டையாடிய புலியால் பரிதவித்த பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்ட புலிக்குத் தண்டனை விதித்தான் சிவன் எனப் பக்தி இலக்கியத்திலும், பண்டை காலத்தில் உணவுக்காக வேட்டையாடுவதில் தர்மம் இருந்தது. பெண் விலங்கையும், பெண் பறவையையும் வேட்டையாடி விட்டு வருந்தி அழுத இலக்கியப் பாத்திரச் செய்திகள் புதைந்து கிடப்பதைப் பார்க்கும் போது மானுட சமூகம் இயற்கையோடு இசைந்து வாழ்ந்ததைக் காட்டுகிறது.

 வேட்டையாடிய கூட்டு வாழ்கையாக இயற்கையோடு மனித இனக்குழுவின் ஒற்றுமையைப் பறைசாட்டி ஒன்றோடு ஒன்றாக ஒன்றியிருந்த வாழ்வை, விலங்குகளிடமிருந்து மனிதனைத் தனியாகப் பிரித்தது பிரிட்டீஷ் சட்டம்.

வாரக் கடைசி நாளுக்கு (வீக் எண்ட்) 'எங்கு போகலாம்' எனத் திட்டமிடும் குடும்பத்தினர் குழந்தைகளுடன் பறவைகள் காப்பிடத்திடத்திற்குப் போகலாம். அந்த காப்பிடங்கள் எங்கு உள்ளன, போகும் வழி, தூரம் எவ்வளவு, என்ன விதமான பறவைகள் எந்த மாதங்களில் வரும், போகின்றவர்கள் என்னென்ன எடுத்துச்செல்ல வேண்டும்? இது குறித்த கையேடு வேண்டுமல்லவா? அதை இந்த நூல் அருமையாகத் தந்துள்ளது.

மொரிசியஸ் தீவில் 'கல்வாரியா' மரத்தின் விதையினை 'டோடோ' என்ற பறவை சாப்பிட்டு அதன் வயிற்றில் ஏற்படும் நொதி மாற்றத்தால் சீரடைந்து, இப்பறவையின் எச்சம் மூலமே கல்வாரியா விதை முளைத்தது. இந்தப்பறவை அழிந்ததால், இந்த மரத்தின் விதைகளை உண்ண பறவையில்லை. தானாகப் பழுத்து விழும் இந்த மரத்தின் விதை முளைக்கும் திறனை இழந்து விட்டது. தற்போது மொரீஸ்யஸ் தீவில் மிஞ்சியுள்ளது ஒரே ஒரு மரம் மட்டுமே. இதனை எப்படி இனப்பெருக்கம் செய்ய வைப்பதென உலக நாடுகளெல்லாம் கூடி ஆய்வு நடந்துகிறது. ஆய்வு இன்னும் முற்றுப்பெறவில்லை என்ற செய்தியோடு, ''பறவைகள் என்பது தனித்த உயிரனம் அல்ல அது அனைத்து உயிர்களுக்குமான தொடர் சங்கிலியின் முதல் கண்ணி'' என அறிவுறுத்தலோடு துவங்கிறது இந்த நூல்.

பெரும்பாலான பறவைகள் விதைகளை மட்டுமே உண்ணும் என்பதால் விதை முளைப்பதற்கும், பரவலுக்கும் மையக்காரணி பறவைகளே என்பதை சட்டென அறிவுறுத்துகிறது.

கடல் நீர் - முன்னீர், ஆறு - நன்னீர், குடிநீர் - இன்னீர், மழைநீர் - அமிழ்தநீர் என இலக்கியங்கள் சொல்லும் செய்தியை அருமையாகப் பறவைகள் இசைபோலச் சொல்லி, குளத்தின் ஓரத்திலே பழங்காலத்தில் இறந்த மனிதர்களைப் புதைத்துள்ளார்கள். மதுரையைச்சுற்றியுள்ள ஏரிக்கரையோரங்களை ஆய்வு செய்ததில் அங்குள்ள ஏரி குளங்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற அறிய தகவலைச் சான்றுடன் விளக்குகிறது  இந்த நூல்.

தமிழ் இலக்கியப் பழம்பாடல்களில் 64 வகை பறவைகள் பெயர்கள் உள்ளன என்பதைப் பட்டியலிட்டு, பறவைகள் கூடி ஓசையிடுவதை 'ஓசனித்தல்' என்ற அழகுச் சொல்லால் நமது புலவர்கள் பதிவு செய்துள்ளதையும், அன்னம் என்ற பறவை வாத்து என்பதைத் தேடி விளக்கம் கொடுத்துள்ளது நூல். காகம் ஆக்ஸிசன் குறைந்த பகுதியில் வாழாது. காகம் இல்லாத இடத்தில் மனிதன் வாழமாட்டான் என்ற நுண்ணிய செய்தி, காகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது.

பறவைகள் குறித்து யார்யாரெல்லாம் ஆய்வு செய்தார்கள், இந்தியாவின் முன்னோடி பறவையியலாலரான 'சலீம் அலி' குறித்த தகவல், சிறுவர்கள் எளிதாகப் புரிந்து படித்துக் கொள்ளும் விதமாகப் பறவைகளின் உடல் கூறுயியல், பறவைகள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே கூடு கட்டுகின்றன. கூடு கட்டுவதில் ஆண் பறவைகள் பெண் பறவையை ஈர்க்கப்"படும்பாடு" அதன் விவரிப்பு அறிவியல் பூர்வமாகக் கொடுத்துள்ளார்கள். அதே போல் பறவைகளிலே குயில் மட்டும் ஏன் கூடு கட்டுவதில்லை ஆய்வின் விடை கிடைக்காததைப் பதிவிட்டுள்ளது நூல். பறவைகள் எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை முட்டையிடும், சில பறவைகள், மூன்றாண்டுக்கு ஒரு முறையே இனப்பெருக்கம் செய்கிறது என்ற செய்தி அருமையான பதிவு.

பறவைகள் காப்பிடங்களைவிட அதன் பெயர்க் காரணத்தை வாசகர்களுக்குக் கொடுத்திட நூலாசிரியர்கள் எடுத்த சிரத்தையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இராமநாதபுரமாவட்டம் சாயல்குடி அருகே உள்ல காஞ்சாரை என்ற காப்பிடத்தின் பெயர்க் காரணத்தை விளக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். கஞ்சாரை என்பது பண்டுவத்திற்கு (வைத்தியத்திற்கு பயன்படும் மூலிகை) என்பதைப் பண்டுவ அகராதியில் பார்த்திருந்தால் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தி இருக்கலாம்.)

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி முடிவுற்று பிரிட்டீஷ் ஆட்சி வந்தது. நாயக்கர் குதிரைப் படைகளுக்குத் தடை போட்டனர். இதனால் குதிரைகளை வேதாரயகாடுகளில் தனித்து விடப்பட்டது. இந்தக்குதிரைகள் 'தொண்டுக் குதிரைகள்' என அழைக்கப்பட்டது. இந்தச் செய்தி போன்று மரங்களை நடவு செய்தவர்கள், பறவைகள் குறித்த ஆய்வாளர்கள் செய்திகளைப் பெட்டிச்செய்தியாகக் கொடுத்து அழகுற வடிவமைத்துள்ளார்கள்.

வேடந்தாங்கல் காப்பிடத்திற்குப் புதிய பறவைகள் வருவதையும், ஒவ்வொரு ஆண்டும் வந்து சென்ற சில பறவைகள் வராமல் நின்றது குறித்த ஆய்வு தேவை என்பதைச் சுட்டிக்காட்டும் இந்த நூல், காப்பிடங்கள் அனைத்துக் கண்மாய் ஏரிகள் அவைகளுக்கான நீர் வரத்துக் கால்வாய்கள் தூர்த்து கிடப்பதை விவசாயிகளுடன் சேர்ந்து தனது வருத்ததைப் பதிவிட்டுள்ளது.

இதே போல் காப்பிடச் சிக்கல் குறித்துப் பேசும் நூல் பொத்தாம் பொதுவாகத் தாவியுள்ளது. அது தனி அதிகாரம் என நினைத்தார்களோ என்னவோ? தொண்டை மற்றும் சேது மண்டலத்தில் இருந்த பல்லாயிரம் ஹெக்டர் காடுகளை அழித்த அரசு அதில் யூக்களிப்டஸ் & கொட்டை முந்திரி பயிட்டு காடுகளுக்குள்ளிருந்த குளங்களை மேவியது.

பொதுவாக சூழலியல்வாதிகள் ''மனிதனை விலங்காகவும், விலங்கை மனிதனாகப் பார்க்க வைத்தவர்கள்'' என்ற குற்றச்சாட்டு உண்டு. அதிலிருந்து சற்று வேறுபட்டு மனித குலத்தோடு இசைந்து நூலினை முழுமையாகச் செழுமைப்படுத்தியுள்ளார்கள் நூலாசிரியர்கள்.

இந்த நூலில் குறைபாடாகப் பார்ப்பது :

 அயல் தாவரம், இயல் தாவரம் எனக்குறிப்பிட்டுள்ளது.  வீட்டு விலங்காக வளர்க்கப்படும் பன்றி நாய், பூனை இவைகள் காப்பிடங்களுக்குச் செல்கிறது என்ற சொல்லாடல்கள் நமது சிந்தனைக்குள் சிக்கலை உண்டாக்குகிறது.

ஒரு விதை முளைக்கத் தேவையான காரணிகள் இருந்தாலும், அவை முளைத்து வளர்ந்திடத் தேவையான சூழல் இருந்தால் மட்டுமே அம்மண்ணில் அல்லது அவ்விடத்தில் மண்ணே இல்லாத எட்டு மாடிக் கட்டிடத்தில் கூட முளைத்த தாவரம் நிலைத்து நிற்கும். ஒவ்வொரு விதையும் தனக்குள் புரட்சி  (Darwin's Theory of Evolution, and  RNA, DNA Metopolism with its Mechanism phenomenon) என்ற 'வித்தை' வைத்துள்ளது என்பது இயற்கை விதி. வெளிநாட்டுத் தாவாரங்களுக்கு விசா வழங்குபவர்கள் போல் அயல் (அன்னிய) இயல் (உள்ளூர்) தாவரம் எனப் பிரித்து எழுதியதும் இந்த நூலில் பார்க முடிகிறது. பறவையோ விலங்கோ உணவுத் தேவைக்காக வலசையாக (migration) வரும், போகும். வந்த பறவைக்குச் சூழல் அதனது உடலுக்கு ஒத்துப்போனாலும் அந்த இடத்தில் அந்த விலங்கினங்கள் வாழ்வதில்லை என்பதே அறிவியல் உண்மை. அதைக் கவனிக்க மறுத்து கருத்துத் திணிப்பாக எழுதியுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
அதே போல் தன்னிச்சையான மரபுக்கூறு மாற்றம்  (spontaneous mutation) நிகழ்வதாலே, மனிதன் தோன்றாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள், அதிலிருந்து பூச்சி புழு. இவைகளிலிருந்து பறவை அடுத்து மனிதன் பரிணமித்தான் என்பதை தற்போது வரை உள்ள ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது.

காப்பிடங்கள் அனைத்தும் குளத்திலே அமைந்துள்ளது. குளங்கள் வேளாண்மைக்கான ஆதாரம். வேளாண்மைக் குடிகளின் வளர்ப்பு விலங்கு நாய், பூனை, உணவுக்காக பன்றிகள். இவைகள் அருகில் உள்ள காப்பிடங்களுக்குப் போகத்தானே செய்திடும். இந்த நூலின் கூற்றுப்படியே வைத்தால் காட்டுப் பன்றி, காட்டுப்பூனை, காட்டு நாயான ஓநாய் செந்நாய் இவைகள் காப்பிடங்களுக்கு வருமே இதைத் தடுக்கச் சொல்லுவார்களா. அதே போல் பூச்சிக்கொல்லி மருந்திற்கு எதிர்க் கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்க் கருத்துவருவாக்கம் அறிவியல் பூர்வமாக நிருபனம் ஆகவில்லை. அதுவரை இவர்கள் காத்திருப்பது நியாயம் என்பதை நூலாசிரியர்கள் உணர்ந்து, சூழலியர்கள் மனித குலத்திற்கு விஞ்ஞானத்தோடு இசைந்து கொடுத்திட முன்வரவேண்டும். இல்லையென்றால் இவை வெற்று முழக்கமாகிவிடும் என்பதைக் கருத்தில் கொள்ளப்படும் என்பதை வேண்டுகிறோம்.

அயல் இயல் என்ற சொல்லாடல்கள் ''நாட்டு மாடு'' கொள்கை போன்றதே. இவையெல்லாம் 'சாதி புனிதம்' குலதெய்வ வழிபாடுகளைக் காப்பதைப் போன்ற கொள்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு உள்ளதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கம் சொல்ல காரணிகள் இல்லாமல், மரபு என்ற ஒற்றைச்சொல்லைச் துணைக்கு இழுக்கிறார்கள் ஆசிரியர்கள். மனிதன் நேற்று தோன்றிய விலங்கல்ல. அவன் வேட்டைக் சமூகமாக இருந்து அதிலிருந்து பரிணமித்தவன். அவன் வேட்டைச் சமூகமாக இருந்த உற்பத்தி சமூகமாக நிலைத்து நிற்க காடுகளிலிருந்து தனக்குப் பழக்கப்படும் விலங்குகளைக் கண்டறிந்து அதிலிருந்தே வளர்ப்பு விலங்குகளை (domestic)  இனம் கண்டு அவன் வளர்தான். காட்டுக்கோழி இருக்கவே கோழி வரஆடு - கேளை ஆடு - வெள்ளாடு செம்பறி ஆடு, காட்டு மாடு - உழவு மாடு, செந்நாய் ஓநாய் - நாய் இப்படி விலங்குகளைக் கண்டறிந்து வளர்த்தான் என்பது இந்த நூலாசிரியர்கள் அறியாதது அல்ல. தெரிந்தும் ஏதோ காரணத்திற்காக இப்படியான சொற்களைப் பயன்படுத்தி இருப்பது விஞ்ஞானத்திலிருந்து விலகி நிற்பது வருத்தமளிக்கிறது.

மனித குலம் இன்னும் வியப்பாகப் பார்ப்பது இயற்கையான மரபியல் கூறுகள் மட்டுமே (jenitic engenreing). இதற்குள் மனிதன் நுழைந்து விட்டால் அனைத்தும் மானுடன் கைவசப்படும் என்பதைச் சூழலியல் என்ற போர்வையில் விஞ்ஞானத்திற்கு எதிராக களமாடுவார்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் எனக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

நூல் -  தமிழகத்தில் பறவைகள் காப்பிடம்.
ஆசிரியர் - சண்முகநந்தம் &பேராசிரியர் செயக்குமார்
வெளியீடு - எதிர்
விலை - 500

புதன், 28 நவம்பர், 2018

கோயில்களும் தானியக் குதிர்களும் :- சிங்கநெஞ்சம் சம்பந்தம்

தென்பெண்ணையாற்றின் தென் கரையில் போய்க் கொண்டிருந்தோம், ஆதிதிருவரங்கம் நோக்கி. சாலையில் வாகனங்கள் அதிகமில்லை என்றாலும், வளைவுகள் அதிகம். வண்டி மெதுவாகவே பயணித்தது.   பச்சைப் பட்டாடை  விரித்தது போல் பறந்து கிடந்த வயல் வெளியில் மாலை சூரியனின் மஞ்சள் கிரணங்கள் மாயாஜாலம் செய்து கொண்டிருந்தன. கஜாப் புயலின் கோரக் காட்சிகளால் புண்ணாகிப் போயிருந்த கண்கள் புத்துணர்வு பெற்றன.

 ஊரைத் தாண்டி வலது பக்கம் திரும்ப, பிச்சைக்காரர்களின் பின்னணியில் கோவில். பார்த்தாலே தெரிந்தது, பழமையான கோவில் என்று. சனிக் கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம் இருந்தது. விறகடுப்பில் குழிப் பணியாரம் செய்து விற்றுக் கொண்டிருந்தார் ஒரு கிராமத்துப் பெண்மணி.
மிகவும் பெரிய கோவில் என்று சொல்ல முடியாது.

ஆனால் சிறிய கோவிலும் இல்லை. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது. தூய்மையாகவே இருகிறது. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும், நேரே ராஜ கோபுரம் தெரிந்தது.

வலதுபுறம், வட்டவடிவமான உருளைகள்  இரண்டை ஒன்றின் மேல் ஒன்று நிற்க வைத்து அதன் மேலே ஒரு கூம்பினை வைத்தது போல் செங்கல்லால் ஆன  ஒரு வித்தியாசமான கட்டிடம். பராமரிப்பு இன்றி புதர்களும் செடிகளும் வளர்ந்திருந்தன. பக்கத்தில் பெயர்ப் பலகை ஒன்றுமில்லை. அங்கிருந்து வந்த இளைஞரிடம், “ இது என்ன” என்று கேட்டதற்கு, “ ஏதோ, தியானா மண்டபம்ன்னு சொல்றாங்க, பாத்துப் போங்க, பாழடஞ்சி கெடக்கு” என்றார். பார்த்து பார்த்து மெதுவாக உள்ளே சென்றோம். புல்லும் பூண்டும் மண்டிக் கிடந்தன. கற்களும் கண்ணாடித் துண்டுகளும் சிதறிக் கிடந்தன. ம்ஹூம், இது தியான மண்டபமாக இருக்க வாய்ப்பே இல்லை என எண்ணிக் கொண்டேன்.





இல்லம் திரும்பி இணையத்தில் பார்த்தபோது அந்தக் கட்டிடம், தானியங்களை சேமித்துவைக்கும் குதிர் என்று தெரிந்தது. மேலே நான்கு புறமும் தானியங்களைக் கொட்ட வாயில்கள், கீழே தானியங்களை அள்ள ஒரு வழி, ...இருக்கும்..... இருக்கும் இது குதிரகத்தான் இருக்கும்.

'வளமான தென்பெண்ணைக் கரையில், இந்தத் திருக் கோவிலுக்கு 400 ஏக்கர் நிலம் இருந்தது, இப்போது அது  100 ஏக்கராகக் குறைந்து விட்டது., அறுவடை செய்து வரும் நெல், கம்பு போன்ற தானியங்களில் ஆறில் ஒரு பங்கினை கோவிலுக்குக் கொடுத்துவிடுவார்கள்,. அவற்றை செமித்து வைக்கவே இந்தக் குதிர்கள் பயன்பட்டன, இந்தக் குதிரில் சுமார் 2500 மூட்டை, அதாவது 5000 கலம் நெல் சேமிக்க முடியும்' என்றல்லாம் பலப் பல செய்திகள்  இணையத்தில் கிடைத்தன. ஆனால், இன்று பாழ்பட்டுக் கிடக்கும் இதனை புனரமைக்கவோ, காப்பற்றவோ நாதியில்லை என நினைக்கும் போது, .உள்ளம் கசிகிறது.

கோவில்களில் உள்ள குதிர்கள் பற்றி இணையத்தில் கிடைத்த பிற தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆதித் திருவரங்கத்தில் உள்ளது போன்றே, திருவரங்கத்திலும் குதிர்கள் உள்ளன என்பதை அறிந்த போது வியப்பாக இருந்தது. இங்கேயும், பராமரிப்பின்றி, குதிர்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன என்பது,வேதனை தரும் செய்தி.

மாறாக, குடந்தைக்கும் தஞ்சைக்கும் இடையே பாபநாசம் அருகேயுள்ள திருப்பாலைவனம் திருக்கோவிலில் உள்ள குதிர் முறையாகப்  பாதுகாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்தக் குதிர் 17ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில், அச்சுத நாயக்கரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதரால் கட்டப்பட்டதென்றும்,  சுமார் 35 அடி உயரமும்  80 அடி விட்டமும் கொண்ட இந்தக் குதிரில்  3000 கலம் நெல் சேமிக்க முடியும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
செஞ்சிக் கோட்டையில் குதிர் / நெற்களஞ்சியம் ஒன்று இருப்பதை கல்லூரிக் காலத்தில் பார்த்திருக்கிறேன். ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் உள்ள குதிர், செஞ்சி நாயக்கர்களால் கட்டப்பட்டிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு யூகம் தான். அறிந்தவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

தொல்லியல் / இந்து அறநிலையத் துறைக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு  மிக அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க இந்த நிதி பயன்படுத்தப் படவேண்டும்.

(சில மாதங்களுக்கு முன், 'தென்பெண்ணையில் ஒரு திருவரங்கம்' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இவ்வளவு விரைவில் அங்கு செல்லமுடியும் என்று நினைக்கவில்லை. அழைத்துச் சென்ற என் தம்பிக்கு நன்றி )

ஐராவதம் மகாதேவன் என்றொரு தமிழகத்து மாந்தர் : சி.அறிவுறுவோன்

இவரைப்பற்றிச் செய்தித்தாட்களிலும் முகநூல் பதிவுகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
அதேநேரத்தில் இல. கணேசன் ஒருசெய்தியைக் கூறியிருந்தார்.அஃதாவது,"1948ல் ஆர்.எசு.எசு அமைப்புத் தடைசெய்யப்பட்டதற்கு எதிராகப் போராடி சிறைசென்றார்,"என்பதாகும். இச்செய்தி என்னுள் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது.
          கீழடி ஆய்வு தொடங்குவதற்கு முன்பே இவர் சங்ககாலம் பற்றிய ஆண்டுக் கணிப்பைக் கி.மு 3ஆம் நூற்றாண்டு என்பதில் உறுதியாக இருந்தவர் தொல்லியல் ஆய்வாளர் ராசன் போன்றோரது கண்டுபிடிப்புகளை ஒட்டிச் சங்ககாலத்தை கி.மு 6ஆம் நூற்றாண்டு தொடங்குவதாக அறிவிக்க வேண்டும் என்றபோது கி.மு 4ஆம் நூற்றாண்டைப் போனால் போகிறது என்று ஏற்றுக்கொண்டவர்.
          கோம்பைக் கல்வெட்டுகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாகத் தமிழுக்குச் சொந்த எழுத்து இருந்ததில்லை. பிராமி எழுத்திலிருந்தே தமிழ் எழுத்துகள் தோற்றம் பெற்றதாகக் கூறிவந்தார்.
ஆனால் மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற அறிஞர்கள் மொழியியல் அடிப்படையில் ஐராவதம்மகாதேவன் போன்றோர் கருத்திற்குத் தகுந்த மறுப்பு வழங்கியும் அவர் தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. கோம்பைக்கல்வெட்டைப் பார்த்துவிட்டே தமிழி என்றொரு எழுத்துவகையுண்டு எனவும் அஃதே காலத்தால் முற்பட்ட தமிழ் எழுத்து என்றும் வேறுவழியின்றி     ஒப்புக்கொண்டதுடன் தாம் சிந்துவெளி ஆய்வில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.
             அதுமுதல் சிந்துவெளி ஆய்வில் தனிக்கவனம் செலுத்திய அவர் சிந்துவெளி முத்திரை எழுத்துகள் திராவிடமொழிகளோடு ஒத்திருப்பதாகக் கூறிவந்தார். திராவிடம் என்றோ ஆரியம் என்றோ தனி மொழிகள் இருந்ததற்கான தடயத்தை இதுவரை மொழியியலாளர் கூடக் கண்டறிந்திருக்கவில்லை. வெள்ளைக்காரர்கள் இங்கிருந்த சமற்கிருத வெறிபிடித்த பிராமணர்கள் மூலமாகத் திராவிடம், ஆரியம் என்னும் சொற்களைப்பெற்று அவற்றிற்கு மொழிமூலம் கற்பித்து மொழியியலுக்கு ஊட்டம் கொடுத்து வளர்த்தனர். அதனால் மன்னராட்சிக் காலத்தில் இருந்த செல்வாக்கினும் தமிழுக்கான செல்வாக்குக் குறையத் தொடங்கியது. தமிழுக்கு மூலமொழி  ஒன்று இருந்தது அது திராவிடமாகலாம் என்பது கால்டுவெல்லின் கூற்று. இக்கூற்று இன்றுவரை தமிழைப் பின்னுக்குத் தள்ளி ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளை முன்னுக்குக் கொண்டுவர உதவுகிறது. ஆய்வு என்ற பெயரில் இல்லாத ஒரு மொழிக்குத் திராவிடம் எனப்பெயர் சூட்டி உலாவரவிட்டதை ஏற்றுக்கொண்ட ஐராவதம் மகாதேவன் சிந்துவெளியிலும் திராவிடக் கருத்தியலுக்கு மொழிவடிவம் தந்துள்ளார். அதேவேளையில் "சிந்துவெளியில் முந்து தமிழ்" எனும் நூலுள் சிந்துவெளி முத்திரை எழுத்துகள் தமிழி எழுத்தே என்பதைத் துல்லியமாகப் பூர்ணசந்திரசீவா எழுதியுள்ளார். இருந்தும் ஐராவதம்மகாதேவன் திராவிடத்தை விட்டு வெளியே வந்தாரில்லை.இந்தியாவின் இ.ஆ. ப க்கள் தங்களை இந்தியத்திலிருந்து விடுவித்துக்கொள்ள விரும்பியதில்லை. அதன் ஆரியத்திற்கு எதிராகத் திராவிடத்தை முன்னிறுத்துவதன் மூலம் தமிழின் இருப்பை அழிக்கும் வேலை திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. அந்தத்திட்டத்தை நிறைவேற்றுவதில் முன்னின்றவரே ஐராவதம் மகாதேவன் ஆவார். இதற்காக என்னைத் திட்டித் தீர்ப்பவர்கள் ஆசை அடங்கும்வரைத் திட்டித் தீர்க்லாம். எனக்கு வருத்தம் தோன்றாது.
                 ஆர். எசு. எசு இயக்கம் மதவாத இயக்கமன்று அஃது இந்தியத் தேசிய இயக்கமே என்பவர்கள்தாம் இந்துத்துவாவின் ஏற்பாளர்கள். இப்பெயருக்கெல்லாம் அப்பாற்பட்டவராகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் இ.ஆ.ப க்களில் பெரும்பாலோர் சாதிவேறுபாடில்லாமல் இந்துத்துவாவினரே. அந்த வகையைச்சேர்ந்தவரே ஐராவதம் மகாதேவன் என்பது எனது கருத்தாகும்.

தென்னை மறு நடவு எனும் சூது :- குமார் அம்பாயிரம்

பழைய டெல்டா கரைதனில் புகழ்ச் சோழன் காலத்தில் சுந்தரர் விகிர்தேஸ்வர் மேல் பாடியுள்ள பதிகத்தில், வெப்பத்தினால் உதிர்ந்த மூங்கிலின் முத்துக்களும், ஏலம்,இலவங்கம்,தக்கோலம்( வால் மிளகு),இஞ்சி ஆகியவை அடர்ந்து வளர்ந்த சிற்றாறின் கரை மேல், தாழை,மா,புன்னை,ஞாழல்,குருகத்தி, ஆகிய மரங்களின் மேல் குயில்கள் கூவும் கூவலைக் கேட்டு அஞ்சுகின்ற தன்மையுடையது மான்கள் என எழுதிச்செல்கிறார் சதகத்தில். இது பத்தாம் நூற்றாண்டு பாடல்.

இங்கே, தென்னை டெல்டாவிலோ தமிழக நிலப்பரப்பின் வேறெந்த நிலவியலிலோ இந்த நிலத்திற்கான மரமாக இருந்ததில்லை.  இருந்ததற்கான ஆதரமும் இல்லை. மேலும், அவை பிற்காலத்தில் நவீன காலத்தில்
தன் அடிப்படை உரிமைகளைக்
கேட்க வைப்பதை மறக்கடிக்கும்
பணப்பயிராகத் தென்னை இங்கே
தோட்டக் கலைத் துறையினரால்
பரிந்துரைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது.

முப்போகமும் நாற்போகமும் நெல் விதைத்த விவசாயி
காவியிரில் கால்வாயில் தண்ணீர் கேட்பார்; கடைமடை வரை அது வரவேண்டுமென்பார். கொடி பிடிப்பார்; கோசம் இடுவார். இது பகுதி விவசாயிகளின் கதை.

தென்னையை வளர்த்தா இளநீரு; பிள்ளையை வளர்த்தா கண்ணீரு.
தென்னையை வச்சவன் சாப்பிட்டுச் செத்தான், பனையை வச்சவன் பாத்துச் செத்தான். இவையெல்லாம் பழமொழிகளா? பழமொழிகளின் தோற்றத்திலான விளம்பரங்கள்.

சுய தண்ணீர்க் கால்வாய் உரிமைகளைக் கேட்காத ஒரு நிலத்தொகுதியை, மக்களின் நினைவுகளை நிலத்தில் இருந்து பணப்பயிர்; மரப்பயிர் எனும் மோகம் காட்டி அழித்தொழிப்பதே தென்னை நடவின் திட்டம்.

முன்னே சொன்னார்கள். ஓலையில கீத்து பின்னலாம்; ஓலைக் குச்சியில தொடப்பம் கட்லாம்னு. மென் தொடப்பம் வந்திட்டு;ஓலைக்குப்பதில் கூலிங் ஷீட் வந்திட்டு.

பதக் குட்டையில் அழுகுகிறது
ஓலைகள். நம் நிலப்பரப்பிற்கு டெல்டா பகுதிகளுக்கு ஒவ்வாதான
மரப்பயிர்களைப் பரிந்துரைத்து,
இன்று இப்படி ஒரு இடர் வரும்போது அதை எதிர்கொள்ளும் திறன் பற்றிய அறிவின்றி, முறிந்த தென்னைகளுக்குப் பதில்  மீண்டும்
தென்னையே வழங்குவோம் என்பது, இருண்ட வாழ்வில் இன்னும் இருள் சூதுதானே கவ்வும்.

தோழர் குமார் அம்பாயிரம் அவர்களது பதிவு.

செவ்வாய், 27 நவம்பர், 2018

மாவீரர் நாளும் மானுடப் பண்பாடும் :- குணா கவியழகன்


நவம்பர் 27 தமிழர்கள் நவீன வரலாற்றில் தமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நாள் . வீரத்தையும் பிறர் வாழ்வுக்காக தம்  உயிர்கொடுத்தவர்களின் அர்ப்பணத்தையும் போற்றித் துதிக்கின்ற உயர் பண்பாட்டு நாளாக இந்த நாள் உருப்பெற்று நிற்கிறது. அர்ப்பணத்தை மகோன்னதப் படுத்துகின்ற மானுடப் பண்பாடாக அறிமுகமாகி நிற்கிறது. தமிழரின் விடுதலை அரசியல் பாதையில் உயிர் ஈகம் செய்தவர்களை இருளில் ஒளியேந்தி வணங்குகிறோம். அவர்களின் அர்ப்பணத்தை இருள் சூழ்ந்த எம் இன வாழ்வுக்கான ஒளியாக கொள்கிறோம். மாவீரத்திற்கும் மகா தியாகத்திற்கும் உரித்தான நாளாக இந்நாளை மகிமைப் படுத்தி, எமது மனப் பண்பாட்டையும்  உயர்த்திப் பிடிக்கின்றோம். கால நதியில் கரைந்திடாது இந்நாளையும் இப்பண்பாட்டையும் காப்போம் என உறுதிகொள்கிறோம். அது எமக்கு ஒளியாகும் என்று நம்பிக்கையும் கொள்கிறோம்

மாவீரர்களுக்கு உறவுடையோரே, உற்றவர்களே, உரித்துடையோரே !

உங்கள் தீரா துயரமும், உறவிழந்து நிற்கும் உங்கள் வாழ்வின் துயர்ப் பாடுகளும் இழைக்கப்பட்ட வஞ்சக அரசியல் குறித்து நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் தைக்கிறது; இரத்தக் கண்ணீரையே தந்து நிற்கிறது. மாவீரர்களை நெஞ்சில் சுமக்கும் அதே நேரம், உங்களை எம் தலையில் சுமக்க வேண்டும். அது ஒன்றே தக்க செயல். அதுவே தர்மமும் அறமுமாகும். அந்த அறத்தை ஏந்தியவர்களோ வாழ்வின் கடை நிலையில் காவல் வைக்கப்பட்டிருகிறார்கள். அந்த அறம் அறியாதவர்கள் முடி சூடப்பட்டிருகிறார்கள். செய்வதற்கு ஏதுமின்றி வல்லமை பறிக்கப்பட்ட எம் கரங்களை உம்முன் கூப்பி நிற்கத்தான் முடிகிறது. எம் தலைகளை உங்கள் முன் குனிந்து கொள்கிறோம். தயவுடன்  எங்கள் வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இந்த வணக்க நாள் உங்கள் வாழ்வுக்கும் மதிப்பளிகின்ற மகா திருநாளே.  காலச் சக்கரம் ஒருபோதும் தரித்து நிற்பதில்லை. ஒருநாள் அது எங்கள் திசை நோக்கி தன் சுழற்சியை தொடங்கலாம். உங்களுக்காய் ஒரு நல் விதியை இயற்ற கால வெளி தன் கதவுகளைத் திறக்காலாம். அப்போது எம் கடமைகளை நிறைவேற்ற காத்திருக்கிறோம்.

அன்புள்ளவர்களே !
விடுதலை என்பது அடையப் பெறும்வரை நடை போடவேண்டிய  காலப்பயணம்.  விடுதலையை அவாவுதலே அந்த பயணத்திற்கான ஆன்ம பலம். அது ஒன்றே சுதந்திரத்திற்கான இயங்கு சக்தி. அந்த ஆன்ம பலத்தை, அந்த இயங்கு சக்தியை கொண்டு காலப் பயணம் செய்யாத எந்தத் தேசமும், எந்த மக்கள் சமூகமும் விடுதலை பெற்றதாய் உலக சரித்திரம் பதிவு செய்யவில்லை. சரித்திரத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டுதான் இந்த மானுட வரலாறு முன்னேறிவந்திருக்கிறது. தேசங்களுக்கும் மக்கள் சமூகங்களுக்கும் அதுதான் விதி. இந்த இயங்கு விதிக்கு விலக்கானது என்று சரித்திரத்தில் எதனையும் காண முடியவில்லை. விடுதலையை அவாவுதல் என்ற சுதந்திரத்திற்கான இந்த இயங்கு விதியைக் கடைபிடிக்காத எந்த மக்கள் சமூகமும் அதை அடைந்துவிட முடியாது. அதற்கான தகுதியையும் பெற்றுவிட முடியாது.

இன்று தமிழர்கள் அறுபதாண்டு காலம் முன்னெடுத்து வந்த விடுதலை அரசியல் பாதையில் தலைமைத்துவங்கள் தடுமாறி நிற்கின்றன; தளம்பி நிற்கின்றன. விடுதலை அரசியல் என்ற பயணத்தில், தம் காலத்துப் பாதையை மாயை அகற்றி  உரித்துணர்ந்து பயணம் தொடரவில்லை. மக்களுக்கு   வழிகாட்ட அவை தம்மைத் தகுதிப் படுத்துக் கொள்ளவுமில்லை. அறிவும் அர்ப்பணமும் அறமும் தலைமைத்துவத்திற்கு அவசியமான ஒழுக்கப் பண்புகள். இந்த உயரிய ஒழுக்கப் பண்புகளற்ற எந்த மனிதனாலும் மக்களின் விடுதலைக்கு தலைமை தாங்க முடியாது. தக்க அரசியல் இயக்கத்தை கட்டிவளர்க்கவும் முடியாது. அறிவு அர்ப்பணம் அறம் என்ற ஒழுக்கத் தகுதியற்ற எந்த அரசியல் அமைப்பாலும் மக்களுக்காக மக்களுடைய நல்வாழ்வை பெற்றுத்தந்துவிடவும் முடியாது. அடிப்படையில் அவை மக்களால் மக்களிடமிருந்து கொண்டுவரப்பட்ட தலைமைத்துவமாகவும் இருக்க நியாயம் இல்லை. இவை இறக்குமதி சனநாயக நாசகரப்  பொறிமுறையால் மக்களுக்கு தருவிக்கப்பட்ட தலைமைத்துவமாகவே இருக்க முடியும்.

ஒரு காலம் ஐரோப்பாவில் உருவாகிய பேரரசுகள் எங்கள் ஆதிபத்தியத்தையும் அரசுரிமையையும் விழுங்கிக் கொண்டன. அவை தமக்கு இசைவான அரசியல்படி புதிய இறைமை எல்லைகளை உருவாக்கின. இறுதியாக ஆண்ட பிரித்தானிய பேரரசு  தமிழர்களின் இறைமை உரிமையை தமது புவிசார் நலனுக்கு இசைவான தரப்புகளிடம் கையளித்து நவகாலனித்துவ முறைமைக்குள் புகுந்து கொண்டது. இந்த அரசுரிமைமையை பெற்றுக்கொண்டவர்கள் தமிழ் மக்களின் கூட்டு உரிமையையும் கூட்டு வாழ்வையும் கருவறுக்கும் நாசகார அரசியலை முன்னெடுத்தனர். இதனால் பலியானது இலங்கைத் தீவின் தமிழ்மக்கள் மட்டுமல்ல, அனைத்து மக்கள் சமூகமும் தான். சிங்கள பெரும்பான்மை மக்கள் இதை கண்டுணர தவறினர். மேற்குலக தலைமை கொண்ட புதிய நவ தாராளவாத  அரசியல் போக்கிலும் இதுதான் தொடர்ந்தது; இன்னும் தொடர்கிறது.
அன்று இந்த விதியிலிருந்து நசுக்கப்படும் தமிழ் மக்களின் சுதந்திரம் வேண்டி தந்தை செல்வா விடுதலை அரசியலை முன்னெடுத்தார். அகிம்சைப் போராட்டத்தை விடுதலை அரசியலுக்கான வழிமுறையாக வகுத்துக்கொண்டார். தமிழ் பேசும் மக்கள் இந்த விடுதலை அரசியலின் பின்னால் அணிதிரண்டனர். அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால், அது அரச வன்முறையால் தோற்கடிக்கப்பட்டது. அகிம்சை என்பது இந்த அநாகரிக இறக்குமதி சனனாயக முறையில் மதிக்கபடாது போனபோது அது காலாவதியாகிப்போன முறைமை என்பது புரிந்துகொள்ளப்பட்டது.

பின், தலைவர் பிரபாகரன் அப்போதைய உலகப் புறநிலையில் செல்லுபடியான விடுதலை அரசியலாக ஆயுதப் போராட்ட முறைமையை முன் வைத்தார். விடுதலை அரசியலின் காலப்பயணம் ஆயுதப் போராட்டத்தின் வழியே முன்னேறியது. மக்கள் அணிதிரண்டு போராடினர். அளப்பெரிய ஈகங்களைப் புரிந்து முன்னேறினர்.  முடிவாக பெரும் வெற்றியை ஈட்டி இலங்கை அரசை செயலிழக்க வைத்தனர். இந்த பூமி பந்தில் தமிழர்க்கு இத்தீவில் ஒரு நாடு உருவாகுவதையோ அல்லது சமத்துவ உரிமையோடு சமாதான வாழ்வோடு   இலங்கை என்ற நாடு முன்னேறுவதையோ தமது நலனுக்கு எதிராகக் கண்ட சக்திகள் கூட்டாக சதிசெய்து தமிழரின் ஆயுதப் போராட்ட சக்தியை அழித்தன.

உலகின் பெரும் சக்திகளும் அவற்றின் உயர் இராணுவ தொழில் நுட்பமும் இந்த போரில் பங்கெடுத்தன. பெரும் மக்கள்  அழிவின் மூலம் இந்த தீவின் அரசியலில் தலையிட்டு தமது வல்லாதிக்கப் போட்டிக்கு பயன்படுத்தத் திட்டமிட்டன. இத்தீவில் என்றைக்குமாக நிலைகொள்ள அவை இரகசிய திட்டத்தை வகுத்தன. இந்த நாசகார அரசியலை துரதிஷ்டமாக சிங்கள தலைமைத்துவம் புரிந்துகொள்ள தவறியது. விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைமையும் இந்த நாசகார அரசியலுக்கு பலியாகி, இலங்கை வாழ் அனைத்து மக்கள் சமூகத்தின் வாழ்வையும் எதிர்காலத்தையும் பாழாக்கும் தீர்மானத்தை எடுக்க விரும்பவில்லை.

உலக சக்திகளின் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் விடுதலைப் புலிகளின் கையில் இரண்டு தெரிவுகள்தான் மீதமிருந்தன. ஒன்று புலிகள் இயக்கத்தை காத்து அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுவது. மற்றையது இலங்கை என்ற நாட்டின் எதிர்காலத்தை காத்து அவர்களின் நிகழ்ச்சி நிரலை தவிர்ப்பது. ஒரு விடுதலை அரசியலை முன்னெடுக்கும் அமைப்பின் அறம் என்ற வகையில் இரண்டாவது தீர்மானத்தையே விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்துக் கொண்டது. இலங்கைத் தீவின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிட்டு தமிழர்களின் உரிமையையோ வாழ்வையோ கண்டெடுக்க முடியாது. அது அறத்திற்கு அப்பாற்பட்டது. அரசியல் அயோக்கியத்தனமானது. இலங்கயின் அனைத்து குடிமக்களுக்கும் ஆபத்தானது. இதுதான் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. அவர்களோடு ஒத்துழைக்காத இந்த நிலைப்பாட்டின்  விளைவாகவே  தமிழரின் ஆயுதப் போராட்ட சக்தி அடியோடு அழிக்கப்பட்டது. ஆயினும் இலங்கை வாழ் அனைத்து மக்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கும் நிகழ இருந்த அழிவு  காக்கப்பட்டது. இதுதான் கடந்தகாலத்தின் மெய். இதுதான் சத்தியம்.

இந்த சத்தியத்தை இலங்கையின் மக்கள் சமூகங்கள் இன்னும் கண்டுணரவில்லை. அதை கண்டுபிடித்து சொல்ல  புலமையாளர்களும்  தலைவர்களும் தயாராக இல்லை. அந்த புலமையும் அவர்களிடம் இல்லை. அந்த நேர்மையும் இல்லை. அவர்கள் இனவாதம் என்னும் மனச்சிக்கை அறுத்து வெளிவர முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அதனால் இந்த நாட்டின் அரசியல் எவருக்கோ சேவகம் செய்யும் துர்விதியை கொண்டிருக்கிறது.

என்றோ ஒரு நாள் வரலாறு இந்த சத்தியத்தை மீட்டெடுக்கும். இலங்கையின் மக்கள் சமூகங்கள் உண்மை உணர்ந்து விழித்துக் கொள்ளும்.  வரலாறு உலக அரசியலை ஒரே போன்று வைத்திருப்பதில்லை.  அதுவரை தமிழினம் சிங்கள பேரினவாத அரசியலில் பலியாகாது தம்மை தற்காத்துக் கொள்ளவேண்டும். விடுதலையை அவாவுதல் என்ற ஆன்ம சக்தியை சமத்துவம் , சகோதரத்துவம் மற்றும் சுதந்திரத்திற்காக  கொண்டிருக்கவேண்டும். காலாவதியாக்கப்பட்ட ஆயுத போராட்ட அரசியலுக்கு பின்னான காலத்தை,  இதுவரையான விடுதலை அரசியலிலிருந்து வழுவாது  வழிநடத்த புதிய பாதையை, புதிய முறைமையை  வகுக்க வேண்டும். அதற்கு தகுதியான தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்.

விடுதலை எனும் காலப்பயணத்தில் அதுவரையான இந்த தளர்ச்சியைக்  கடக்க மாவீரரின் அர்ப்பணத்தை நெஞ்சில் இருத்திக் கொள்வோம். அர்ப்பணத்தை மகோன்னதவப் படுத்தும்  இந்தப் பண்பாட்டை கட்டிக் காப்போம்.  ஒளிமயமான இத்தீவின் எதிர்காலத்தையும் இன்று  ஏந்துகின்ற ஒளிகொண்டு காண்போம்.

இவ்வண்ணம்
குணா கவியழகன்
எழுத்தாளர்.