வியாழன், 13 டிசம்பர், 2018

சுளுந்தீ நாவல் - தமிழுக்குக் கிடைத்த கொடை: - பா.முருகன்.

தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட மருத்துவ முறைகளை ஒரு வரலாற்று நாவலில் உள்புகுத்தும் சாத்தியங்களையும், தனிமனித வீரம் நிகழ்த்தும் வரலாற்று மாற்றங்களால் எழும் நாட்டார் கதைகளும், ஜமீனுக்குட்பட்ட அதிகார வரம்புகளை நில வரைவியல் முறையில்  பாலியல் பாசாங்குகள் அற்றுப் பேசும்போது அது ஏற்படுத்தும் மாயஜாலங்களும்,
சவரக்கத்திக்குள் மறைக்கப்பட்ட மருத்துவம் மற்றும் கலாச்சாரத்தை இவ்வளவு நெருக்கமாகப் பதிவு செய்த விதத்தில் இந்த நாவல் அதிசயத்தை நிறுத்துகிறது. இதற்கு முன் மளையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட ' சின்ன அயரத்தி' நிறுத்தியது குறிப்பிடதக்கது.

இந்த நாவலில் உள்ள தரவுகளும் குறிப்புகளும் நாவல் தளத்திலிருந்து கட்டுரை வடிவத்துக்கும், பின் கட்டுரைத் தன்மையிலிருந்து நாவல் தன்மைக்கும் மாறுகிறது. அடுக்கடுக்கான படிமங்களால் நம்மை முன்னும் பின்னும் அசைக்கிறது. நாவிதன் புரவியின் காலடிச்சத்தம் காதுக்குள் கதம்ப வண்டுச் சத்தமாய் கிறுகிறுக்க வைக்கிறது. கிடா முட்டுச்சத்தம்  நமக்கான பெருந்தண்டனையாய் மாறும் அதே நேரத்தில், நாவிதனின் நடவடிக்கைகள் ஆகம விதிகளுடனும் பிறப்பின் தர்மத்தையும் எரிக்கும் வேள்வியாகிறது. தமிழ் நாட்டார் வழக்காற்றியலில் ஓமலிப்புப் பாடல்களை ஆயுதமாகப் பயன்படுத்தினர். அதற்கு எடுத்துக் காட்டு கலகக்காரர்களும் எதிர்க்கதையாடல்களும் நூல்.

நாவிதனின் தாய் மகனைக் கொன்ற வீரனைக் கைகளால் தடவிப் பாடும்போது குற்ற உணர்ச்சியால் நம்மைக் கல்லாக்குகிறது.

நமக்குத் தேவையான மருத்துவம், நிலவரைவியல், கலாச்சாரப் படிமங்கள், மனித நோய்க்கூறுகள், சமூகத் தரவுகள் மற்றும் மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல் என அனைத்துக் குறிப்புகளுக்கும் இந்த நாவல் உங்கள் நூலகத்தில் இருந்தால் எடுத்துத் தைரியமாகத் தேடலம்.

இவ்வளவு தரவுகளுக்கும் ஒரு நீண்ட நெடிய களப்பணி இல்லாமல் சாத்தியமே கிடையாது.
'சுளுந்தீ' நாவல் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவ்வளவே சொல்வேன்.
ஆசிரியர் அண்ணன் இரா.முத்துநாகு அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

அடவி ஆதி பதிப்பகம் வெளியிடவிருக்கும் சுளுந்தீ நூலைக் குறித்து ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக