வியாழன், 21 ஜூன், 2018

எட்டு வழிச் சாலை என்கிற ராணுவச் சாலை.

சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலைக்கான ஏற்பாடுகள் இதுவரை தமிழகத்தில் எந்த சாலைத் திட்டத்துக்கும் பயன்படுத்தப்படாத தொழில்நுட்பக் கருவிகளோடும், அதிகார கெடுபிடிகளோடும் நடத்தப்பட்டு வருகின்றன.

நிலத்தை அளக்க வரும்போதே அரசு அதிகாரிகளும், அவர்களுக்குப் பாதுகாப்பாக போலீஸாரும் குவிக்கப்படுகின்றனர். அங்கே எதிர்ப்புக்காக ஒரு சிறு குரல் எழுந்தால்கூட உடனடியாக அந்தக் குரலின் குரல்வளை நெரிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். பரம்பரை பரம்பரையாகத் தங்கள் விவசாய பூமியை அனுபவித்து வரும் மக்கள் ஒரே பகலில் தூக்கித் தூர வீசப்படுகிறார்கள். கேட்டால் கைது, போலீஸ் நிலையம் என்று துன்புறுத்தப்படுகிறார்கள்.

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இப்போது இந்தக் கொடுமைகள் ஆரம்பித்துள்ளன. அடுத்து இந்தப் பசுமை எட்டு வழிச் சாலை அமையும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் போராட்டங்களும் கடுமையான ஒடுக்குமுறைகளும் அரங்கேறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

ஏன் இந்த சாலைத் திட்டத்துக்கு மட்டும் இவ்வளவு கெடுபிடி?

ஜூன் 11 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசும்போது இந்தச் சாலை அமைக்கப்படுவதற்கான காரணங்களை விளக்கினார். முதல்வர் குறிப்பிட்ட காரணங்களைக் கவனமாக நோக்குங்கள்.
முதல்வர் சொன்ன காரணங்கள்!

“சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்வதற்கு தற்போதுள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டர் அல்லது சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணி நேரமாகும்.

தற்போது, இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் இதன் கொள்ளளவைவிட 130 சதவிகிதம் மற்றும் 160 சதவிகிதம் அதிகமாகப் போக்குவரத்து செறிவு உள்ள காரணத்தினால், இச்சாலையில் விபத்துகள் மிகவும் அதிகமாக நடைபெறுகின்றன. இன்னும் 10 வருடங்களில், இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்தானது 1,50,000 (Passenger Car Unit - PCU) அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு சாலைகளையும் விரிவுபடுத்தினால், போக்குவரத்து செறிவு 60 ஆயிரம் PCU லிருந்து 1 லட்சம் PCU வரை மட்டுமே அதிகப்படுத்தலாம்.

ஆனால், இந்தப் புதிய எட்டு வழிச்சாலையின் போக்குவரத்து கொள்ளளவு 80,000 போக்குவரத்து செறிவு (PCU) ஆக இருந்தாலும், இச்சாலையானது பசுமை விரைவு நெடுஞ்சாலையாக உள்ளதால், இதன் போக்குவரத்து கொள்ளளவு 1,50,000 போக்குவரத்து செறிவு ஆகும். எனவே, தற்போதுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளின் 1 லட்சம் (PCU) உடன் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் (PCU) கொள்ளளவு பயன்பாட்டிற்கு வரும். மேலும், இந்தப் பசுமை வழி விரைவு சாலையுடன் நேரடியாகப் பிற குறுக்கு சாலையில் இணைவது முறைப்படுத்தப்பட்டு அணுகுசாலை மூலமாக, அல்லது கீழ்மட்ட பாலங்களின் வழியாகக் கடப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதால், விபத்துகள் பெருமளவு குறையும். அதே நேரத்தில், பெருகிவரும் போக்குவரத்து செறிவையும் தாங்கி பயன் அளிக்கும்” என்கிறார் முதல்வர். அதாவது முதல்வர் குறிப்பிடும் முதல் காரணம் போக்குவரத்து நெரிசல் குறையும்.தொழில் வளர்ச்சி ஏற்படுமாம்!

அடுத்து, “இந்தப் பசுமை வழி விரைவு சாலையினால், தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களின் பயண தூரம், சுமார் 60 கிலோமீட்டர் வரை குறையும். இதனால், சென்னை முதல் சேலம் வரையிலான பயண நேரம் சுமார் இரண்டு மணி நேரம், 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆக, இவ்விரைவுச் சாலையினால் பயண நேரம் பாதியாகக் குறையும். மேலும், இந்தக் குறைவான பயண தூரத்தினால், டீசல் சேமிப்பு ஒரு வருடத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் தரமான சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், இந்தப் பசுமை வழி விரைவுச் சாலையினால் தமிழ்நாட்டில் தொழில் முன்னேற்றம் அடைவது மட்டுமின்றி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உயரும். தொழில் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும் கனரக வாகன போக்குவரத்து குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றடையும். மேலும், கனரக வாகன நடை எண்ணிக்கை அதிகரிக்கும். இது தொழில் வளர்ச்சிக்கு மிகப் பயனுள்ளதாக அமையும். காற்று மாசுபடுவது மற்றும் ஒலி மாசுபடுவது வெகுவாகக் குறையும்.

அது மட்டுமல்லாமல், இந்தப் பசுமை வழி விரைவுச் சாலையினால், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, செங்கம், அரூர் மற்றும் பல வட்டங்களில், தொழில் வளர்ச்சி அடைய, நிறைய வாய்ப்புகள் ஏற்படும். ஆக மொத்தம், பசுமை வழி விரைவுச் சாலை திட்டத்தினால் பாதிப்புகள் மிகவும் குறைவாகவும், பயன்கள் அதிகமாகவும் இருப்பதால், இத்திட்டத்தினை செயல்படுத்துவது அவசியமாகும்’’ என்கிறார் முதல்வர்.

முதல்வர் சொல்லாத, பிரதமர் சொன்ன காரணம்!

பசுமைச் சாலைக்கு வக்காலத்து வாங்கி முதல்வர் சொன்ன இத்தனை காரணங்களையும் தாண்டி இந்தச் சாலை பற்றி பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சொன்ன காரணம் மிக முக்கியமானது.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடந்த ராணுவக் காட்சியில் கலந்துகொள்ளக் கறுப்புக் கொடி எதிர்ப்புக்கு இடையே தமிழக தரை மீது கால்படாமல் விமானத்திலேயே வந்தாரே பிரதமர் மோடி நினைவிருக்கிறதா? அந்த விழாவில் அவர் பேசிய பேச்சைக் கொஞ்சம் பார்ப்போம்.

“தற்போது தொடங்கி இருக்கும் ராணுவத் தளவாடக் காட்சி 10வது கண்காட்சியாகும். அது மட்டுமல்ல; தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது கண்காட்சியாகும். சோழர்கள் ஆண்ட இந்தப் பகுதியில் நடைபெறும் இந்தக் காட்சியில் நீங்கள் கூடியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்களும், 125க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

வாஜ்பாய் ஆட்சியின்போதுதான் ராணுவத் தளவாட உற்பத்தி துறையில் தனியார் பங்களிப்பு தொடங்கி வைக்கப்பட்டது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட தளவாட உற்பத்தி குறுகிய காலத்திலேயே இமாலய வளர்ச்சியை அடைந்துள்ளது. இது இந்தியாவின் பெருமையாகும்.

ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறி உள்ளது. அது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிற அளவில் நாம் முன்னேறி உள்ளோம். ராணுவத் தளவாடங்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி நமது ராணுவம் நன்கு அறிந்துள்ளது. இன்று மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் உள்நாட்டில் ஆயுத உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் நாம் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்வதைத் தாண்டி நம்மிடம் மற்ற நாடுகள் கொள்முதல் செய்ய வேண்டும். அந்த அளவுக்குச் சிறு குறு நிறுவனங்கள் ராணுவத் தளவாட உற்பத்தியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்’’ என்ற மோடி அடுத்து முக்கியமான செய்தியை அந்த விழாவில் கூறினார்.

“உத்தரப் பிரதேசத்திலும் தமிழ்நாட்டிலும் இரு ராணுவத் தளவாட தொழில் காரிடார்களை நிறுவிட நாம் உறுதியாக இருக்கிறோம். இந்த காரிடார்கள் (வழிப்பாதை) ராணுவம் தொடர்பான தளவாட உற்பத்தியையும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியையும் மேம்படுத்தும். இந்த வழிப் பாதைகள் ராணுவ ரீதியான தொழில் அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்’’ என்றார் பிரதமர் மோடி. அவர் குறிப்பிட்ட அந்த தமிழ்நாட்டு காரிடார்தான் இந்த எட்டு வழிச் சாலை.

உறுதி செய்த நிர்மலா சீதாராமன்

பிரதமரின் பேச்சைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உறுதிப்படுத்துகிறார்.

டெல்லியில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற, ’ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி: வாய்ப்புகளும், சவால்களும்' என்ற கருத்தரங்கில் பங்கேற்று நிர்மலா சீதாராமன் பேசியது முக்கியமானது.

“இந்திய ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்கள், பொதுத் துறை ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகளில் இருந்தும், படைக்கலன் தொழிற்சாலைகளில் இருந்தும் பெறப்படுகின்றன. உள்நாட்டு தொழிற்சாலைகள் மூலமாக, பீரங்கி வண்டிகள், துப்பாக்கிகள் உள்பட எட்டு வகையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்து வழங்குவதில், ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்குப் புத்துயிரூட்ட வேண்டியது அவசியமாகும். மேலும், ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் ராணுவத் தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ஆக்ரா, அலிகர், ஜான்ஸி, சித்ரகூட் ஆகிய நகரங்களை இணைக்கும் நாற்கர வழித்தடம் அமைக்கப்படும். இதேபோல், தமிழ்நாட்டில் சென்னை, ஒசூர், கோவை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களை இணைக்கும் தனி வழித்தடம் அமைக்கப்படும்” என்றார் நிர்மலா சீதாராமன்.

எட்டு வழிச் சாலை என்கிற ராணுவச் சாலை!

ஏற்கெனவே தமிழகத்தின் கோவை, ஒசூர், சேலம் ஆகிய இடங்களில் ராணுவத் தளவாட உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க இந்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இங்கே ராணுவப் பயன்பாட்டுக்காகவும், ஏற்றுமதிக்காகவும் ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன. அந்த ராணுவத் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காகத்தான் நிர்மலா சீதாராமன் சொன்னபடி தனி வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதுவே இந்த எட்டு வழிச் சாலை.இந்தப் பின்னணியில்தான் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்காக நிதியை மிக அதிகமாக ஒதுக்கியிருக்கிறது. தென்னிந்தியாவில் ராணுவத் தளவாட உற்பத்தியை அதிகரிக்கவும் குறிப்பாகத் தமிழகத்தை ராணுவத் தொழில் மையமாக்கவும் மத்திய பாஜக அரசு திட்டமிடுகிறது. அதன் அடிப்படையில்தான் ராணுவத் தளவாடங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான சாலையாக இந்த எட்டு வழிச் சாலை அமைய இருக்கிறது.

இந்தச் சாலையை அமைத்தே தீர வேண்டும் என்று மத்திய அரசு தமிழக அரசிடம் கடுமையாகச் சொல்லியிருப்பதால்தான் தமிழக அரசும் தாறுமாறாகக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இது இந்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான தொலைநோக்கு கொண்ட திட்டம் என்பதால் இதற்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.

இந்தச் சாலைத் திட்டத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு கருத்துச் சொல்ல யாரும் வரக் கூடாது, எதிர்க் கருத்து வந்தால் ஊடகங்கள் பெரிதுபடுத்தும் என்பதால் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குச் சமூகச் செயற்பாட்டாளர்கள் யாரும் வரக் கூடாது என்று தேடித் தேடி போலீஸார் அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு சாலைத் திட்டத்தைத் தமிழகம் சந்திப்பது இதுதான் முதன்முறை. வயல்களையும், மலைகளையும் அழித்து உருவாகப்போகும் எட்டு வழிச் சாலையில் ராணுவத் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு டிரக்குகள் பறக்கப் போகின்றன.

வயல் அரசை ஒழித்துவிட்டு வல்லரசு ஆக வேண்டாமா நாம்?

நன்றி மின்னம்பலம்.
Anbe Selva அவர்களது பதிவிலிருந்து.

செவ்வாய், 19 ஜூன், 2018

சாகர் மாலா திட்டமும் 8 வழிப் பசுமைச் சாலையும்: மறைந்திருக்கும் மர்மங்கள்.

இந்த நிலத்தை நாம் காக்கவில்லை எனில், இந்த நிலத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்டு அகதியாகத்தான் போகிறோம்.
சேலம்-சென்னை 8 வழிச் சாலைத் திட்டத்திற்குப் பின் மறைந்துள்ள மர்மங்கள்:
சாகர்மாலா திட்டமும் 8 வழி பசுமைச் சாலையும்.

பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை. காதினிலே பாயும் தேன் போன்ற செய்தி. சுற்றி வளைக்காமல் சொல்லவேண்டுமானால் இது மக்களுக்கான சாலை அல்ல. கார்ப்ரேட் பெருநிறுவனங்களுக்கான சாலை.

இந்த சாலையை அமைக்க நாம் என்னென்ன இழக்கவேண்டி வரும்.

8 மலைகள்

சேலம் மாவட்டத்தில் (ஜருகுமலை, அருநூற்று மலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை)
தருமபுரி மாவட்டத்தில் (சித்தேரி மலை)
திருவண்ணாமலை மாவட்டத்தில் (கவுத்தி மலை, வேதி மலை)

20-ற்கும் மேற்பட்ட பள்ளிகள், கோவில்கள்

100-றிற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள், குட்டைகள்

10 ஆயிரம் கிணறுகள்

500 ஏக்கர் வனப்பகுதி

10,000 ஏக்கர் விளைநிலம்

சரி இதோடு முடிந்துவிடுமா? இத்தனையையும் அழித்து 8 வழி பசுமை? சாலை அமைத்தபிறகு பிரச்சனை முடிந்துவிடுமா? என்றால் அதற்கு பிறகுதான் விசயமே உள்ளது.

அதற்கு முன் நாம் புவியியல் (Geology) மற்றும் கனிம மற்றும் மூலப்பொருள் வளத்துறையை (Mines & Minerals) பற்றி அறிந்துகொள்ளவேண்டும். இந்த துறையானது இந்திய அரசுக்கு மிக வளம் கொழிக்கும் துறை. பூமியில் புதைந்துள்ள கனிம வளங்களை பற்றி ஆய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும். சாதாரணமாக ஆழ்துளை கிணறு [மத்திய நிலத்தடி நீர் வாரியம் (Central Ground Water Board)] அமைப்பதில் தொடங்கி, செயற்கைக்கோள் வரை துணை கொண்டு வளங்களை கண்டறிவது இத்துறையின் பணி. ஆழ்துளை அமைக்கும்போது மண் மற்றும் பாறை துகள்களை சேகரிப்பார்கள். பின்பு அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்பி, எந்தெந்த பகுதிகளில் எந்த வகையான கனிம வளங்கள் இருக்கிறது என கண்டறிவார்கள். மற்றோரு முறையான செயற்கைகோள் துணைகொண்டு பூமியை படம் பிடித்து எங்கெங்கே கனிம வளங்கள் படிந்துள்ளது என்பதை அறிவார்கள். இதற்கெனவே பிரத்தேகமாக வானில் ஏவப்படும் செயற்கைகோள்கள் ஏராளம்.

சரி பத்தாயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்படவுள்ள சேலம்-சென்னை சாலை விரிவாக்கத்திற்கு பின் உள்ள நோக்கம் என்ன.

1) சேலம் மாவட்டத்திலுள்ள சேர்வராயன் மலை 4,05,000 சதுர மீட்டர் தளம் கொண்டது. இந்த மலைத்தொடரில் 6 மலை உச்சி இடங்களில், ஒவ்வொரு இடத்திலும் 22,000 சதுர மீட்டர் அளவிலிருந்து 1,55,000 சதுர மீட்டர் வரை ""பாக்சைட் (Bauxite - அலுமினியம் அகப்படும் இடத்தில் உள்ள மண் வகை)"" இருப்பை கொண்டுள்ளது. அந்த பாக்சைட் மண்டலத்தின் தடிமன் 5 மீட்டரிலிருந்து 15 மீட்டர் வரை இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. அதன் மொத்த கொள்ளளவு 5.3 மில்லியன் டன் (53 இலட்சம் டன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

2) திருவண்ணாமலைக்கு 12 கிலோமீட்டர் வடமேற்கே அமைந்துள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை மற்றும் தெற்கு போனக்காடு பகுதியில் ஹெமடேட்டுடன் கூடிய மேக்னடைட்-குவார்ட்சைட் (Magnetite-Quartzite with Hematite Band) [[Magnetite - இரும்புக் கனிமம், Quartzite - பளிங்குக்கல் பாறை, Hematite - சிவந்த அல்லது ஒருவாறு கறுத்த இரும்பு உயிரகைக் கனிப்பொருள்]] இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மூன்று பகுதிகளாக, திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் 65" - 80" அமைந்துள்ள இப்படுகை, ஒரு புள்ளியில் சாய்வுதளத்தில் கூடுகிறது. மூன்று படுக்கைகளும், 2.5 கி.மீ. லிருந்து 4.5 கி.மீ. நீளத்திற்கு மாறுபடுகிறது.

இம்மூன்று மலைகளிலுள்ள கனிமங்களின் இருப்பின் அளவு

வேடியப்பன் மலை - 60 மில்லியன் டன் (6 கோடி இலட்சம் டன்)
கவுத்திமலை - 56 மில்லியன் டன் (5.6 கோடி இலட்சம் டன்)
உச்சிமலை - 20 மில்லியன் டன் (2 கோடி இலட்சம் டன்)

3) சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சமலை, கொடுமலையில் மேக்னடைட்-குவார்ட்சைட் (Magnetite-Quartzite) [[Magnetite - இரும்புக் கனிமம், Quartzite - பளிங்குக்கல் பாறை]] இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கஞ்சமலையில் மூன்று தடத்தில் உள்ளது.

கீழ் தளம் (Lower most Band)

18.3 மீட்டர் தடிமண்ணில் 17.7 கி.மீ. தூரத்திற்கு - 35.6 மில்லியன் டன்

மைய தளம் (Middle Band)

7.6 மீட்டர் தடிமண்ணில் 9.6 கி.மீ. தூரத்திற்கு - 8.1 மில்லியன் டன்

மேல் தளம் (Upper Band)

7.6 மீட்டர் தடிமண்ணில் 9.6 கி.மீ. தூரத்திற்கு - 8.1 மில்லியன் டன்

Subsidiary Band - 22.9 மீட்டர் தடிமண்ணில் 1.6 கி.மீ. தூரத்திற்கு - 7.1 மில்லியன் டன்

கஞ்சமலையில் 22.9 மீட்டர் ஆழத்தில் 55.52 மில்லியன்( 5.5 கோடி இலட்சம் டன்) இரும்பு மூலப்பொருள் இருப்பை கொண்டுள்ளது.

மேலும் 120 மீட்டல் ஆழத்தில், இரண்டு மேல் தளத்தில் தலா 100 மில்லியன் டன்னும், 75 மில்லியன் டன்னும் இருப்பை கொண்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

4) நாமக்கல் மாவட்டத்தில் பிளாட்டினம்: புவியியல் துறை ஆய்வில் உறுதி

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே, 'அனார்த்தசைட் கேப்ரோ, எக்லோகைட்' போன்ற பிளம்பி பாறைகள் உள்ளன. இவை, திருச்செங்கோடு அருகே, பட்லூரில் இருந்து நாமக்கல் அருகில் உள்ள சூரியாப்பட்டி வரை, 32 கி.மீ., தூரத்திற்கு அமைந்துள்ளது.சித்தம்பூண்டியில், நல்லமுறையில் பாறைகள் தெரிவதால், இதை, 'சித்தம்பூண்டி அனார்த்தசைட் காம்ளெக்ஸ்' என, புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அனார்த்தசைட் பாறையில், 'குரோமைட்' மற்றும் 'கொரண்டம்' போன்ற கனிமங்கள் உள்ளன.இரண்டாம் உலக போரின்போது, இங்கிருந்து, கொரண்டம் தாதுவை வெட்டி எடுத்து, அதில் இருந்து அலுமினியம் தயாரித்து, துப்பாக்கிக்கு வேண்டிய அலுமினிய ரவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.தாது எடுக்க தோண்டியப் பள்ளங்கள், இன்னும் சித்தம்பூண்டியில் உள்ளது. பாறையின் வயது, 2,500 மில்லியன் ஆண்டு. அதில், பிளாட்டினம், தோரியம், யுரேனியம், டைட்டேனியம் போன்ற அரிதான கனிமங்கள், மிகக்குறைந்த அளவில் இருப்பதாக, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:ப.வேலூர் அடுத்த சித்தம்பூண்டியில், மத்திய அரசின் புவியியல் ஆய்வு துறை மூலம் பிளாட்டினம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, 'டிரில்லிங்' சர்வே செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, கருங்கல்பட்டியில் துவங்கி வாணக்காரன் பாளையம், சமத்துவபுரம், பாமா கவுண்டம்பாளையம், சித்தம்பூண்டி, குன்னமலை, கோலாரம், சோழசிராமணி வரை, 25 கி.மீ., தூரத்துக்கு மேற்கொள்ளப்பட்டது.இங்கு, அதிகபட்சமாக, 300 அடி ஆழம் வரை, பூமியில் டிரில்லிங் மூலம் துளைபோட்டு பாறைகள் ஆய்வு செய்யப்படுகிறது. தற்போது, இரண்டாம் கட்டமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வுகள், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும். ஆய்வு முடிவில், இத்திட்டத்தை தனியார் வசம் ஒப்படைத்து, பிளாட்டினம் வெட்டி எடுக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால், அரசிடம் அவ்வளவு பணம் இல்லை

http://www.dinamalar.com/news_detail.asp?id=1031975

Platinum (Sithampoondi - Namakkal)

Namakkal village may be rich in platinum

https://www.deccanchronicle.com/…/namakkal-village-may-be-r…

Evidence of huge deposits of platinum in State

http://www.thehindu.com/…/Evidence-of-h…/article15503846.ece

இந்த தரவுகள் 8 வழி சென்னை-சேலம் பசுமை சாலை தொடர்புடைய மாவட்டங்கள்

பிற மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ள கனிம வளங்களை பார்ப்போம்

இந்தியாவின் வளங்களின் தேவையை (Vermiculite, Molybdenum, Dunite, Rutile, Garnet and Ilemenite) பூர்த்தி செய்வதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. 79% Vermiculite, 65% Dunite, 52% Molybdenum, 48% Garnet, 30% Titanium mineral, 25% each Sillimanite & Magnesite, 16% Fire Clay resources விழுக்காடு தமிழ்நாடு நிறைவு செய்கிறது.

Bauxite - Dindigul, Namakkal, Nilgris & Salem Dist.

Dunite/Pyroxenite - Salem Dist.

Felspar - Coimbatore, Dindigul, Erode, Kanchipuram, Karur, Namakkal, Salem and Trichy Dist.

Fireclay - Cuddalore, Kanchipuram, Perambalur, Pudukottai, Sivagangai, Thiruvallur, Trichy, Vellore and Vilupuram Dist.

Garnet - Ramnad, Trichy, Tiruvarur, Kanyakumari, Thanjavur and Tirunelveli Dist.

Granite - Dharmapuri, Erode, Kanchi, Madurai, Salem, Thiruvannamalai, Trichy, Tirunelveli, Vellore and Vilupuram Dist.

Graphite - Madurai, Ramnad, Sivagangai and Vellore Dist.

Gypsum - Kovai, Perambalur, Ramnad, Trichy, Nellai, Thoothukudi, Virudhunagar Dist.

Lignite - Cuddalore, Ariyalur, Thanjavur, Thiruvarur, Nagai, Ramnad and Sivagangai Dist.

Limestone - Kovai, Cuddalore, Dindigul, Kanchi, Karur, Madurai, Nagai, Namakkal, Perambalur, Ramnad, Salem, Thiruvallur, Trichy, Nellai, Vellore, Vilupuram and Virudhunagar Dist.

Magnesite - Kovai, Dharmapuri, Karur, Namakkal, Nilgiri, Salem, Trichy, Nellai and Vellore Dist.

Quartz/Silica - Chennai, Kovai, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kanchi, Karur, Madurai, Namakkal, Perambalur, Salem, Thiruvallur, Thiruvarur, Nagai, Trichy, Villupuram, Virudhunagar and Vellore Dist.

Tale/Steatite/Soapstone - Kovai, Salem, Trichy and Vellore Dist.

Titanium Minerals - Kanyakumari, Nagapattinam, Ramnad, Thiruvallur, Nellai and Thoothukudi Dist.

Vermiculite - Dharmapuri, Trichy and Vellore Dist.

Apatite - Dharmapuri and Vellore Dist.

Barytes - Erode, Madurai, Perambalur, Nellai and Vellore Dist.

Bentonite - Chengalpat Dist.

Calcite - Salem Dist.

China Clay - Cuddalore, Dharmapuri, Kanchi, Nilgris, Sivagangai, Thiruvallur, Thirvannamalai, Trichy and Villupuram Dist.

Chromite - Kovai and Salem Dist.

Copper, Lead-Zinc, Silver - Vilupuram Dist.

Corundum, Gold - Dharmapuri Dist.

Dolomite - Salem and Nellai Dist.

Emerald - Kovai Dist.

Magnetite (Iron Ore) - Dharmapuri, Erode, Nilgiris, Salem, Thiruvannamalai, Trichy and Vilupuram Dist.

Kyanite - Kanyakumari and Nellai Dist.

Molybdenum - Dharmapuri, Dindigul and Vellore Dist.

Pyrite - Vellore Dist.

Sillimanite - Kanyakumari, Karur and Nellai Dist.

Tungsten - Madurai and Dindigul Dist.

Wollastonite - Dharmapuri and Nellai Dist.

Petroleum & Natural Gas - Cauvery Delta & Mannar Basin

Platinum - Namakkal & Surrounding Dist.

Mineral Resources of Tamil Nadu

http://www.tnenvis.nic.in/…/MineralResourcesofTamilNadu_120…

Mineral Map of Tamil Nadu

http://www.tnmine.tn.nic.in/Mineral%20Map%20of%20Tamilnadu.…

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கனிம வளங்களை, மூலப்பொருட்களை புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆய்ந்து பட்டியலிட்டுள்ளது.

எதிர்வரும் காலத்தில் பெருநிறுவனங்கள், இவ்வளங்களை கொள்ளையடிக்கும். அதற்கு அரசும், அதிகார வர்க்கமும் துணை நிற்கும்.

மலைகள் அழிக்கப்படும்போது மரங்கள் அழிக்கப்படும்.

மரங்கள் அழிக்கப்படும்போது மழை வளம் அழிக்கப்படும்.

கடைசி படம்

வெயில் காலங்களில் வெப்பசலனத்தால் பொழியும் மழையானது கிழக்கு மலைத்தொடராக உள்ள ஜவ்வாது, கல்வராயன் மழைகளினாலேயே மேகக்கூட்டங்கள் உருவாகிறது. தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சி, கடலூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர்,, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் இதனால் மழை பெறுகிறது. இந்த மலைகளை அழித்தால் ஏற்படப்போகும் சூழலியல் சீர்கேடு நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.

இத்துணை இயற்கை வளங்கள் சிதைக்கப்படுவதற்கு அரசும், அதிகாரவர்க்கமும், பெருநிறுவனங்களும் மட்டும் காரணமல்ல. பேராசை பிடித்த, சொகுசு வாழ்க்கை வாழ நினைக்கும் மக்களாகிய நாமும் ஒரு காரணம்.

நாம் வாழ்வதற்கு ஆதாரமே இந்த இயற்கைதான். வளர்ச்சி என்ற பெயரில், இந்த இயற்கையை சிதைத்துவிட்டு, அழித்துவிட்டு தண்ணீரும், உணவும் வேற்று கிரகத்திலிருந்தா கொண்டு வரப்போகிறோம்?

தோழர் கி.வே. பொன்னையன் அவர்களது பதிவிலிருந்து..

ஓவியம்: Palani Nithiyan

திங்கள், 21 மே, 2018

நியூட்ரினோ : பாழடிக்கும் ஆய்வும் மனித குலப் பேரழிவும் :- பார்த்திபன்.ப

நியூட்ரினோ :
ஒரு தீர்வற்ற பணத்தை பாழடிக்கும் ஆய்வு மற்றும் மனிதகுலப் பேரழிவு !

அறிவியல் ஆய்வு எனும் பெயரில் நியூட்ரினோ திட்டத்தால் நிலமும் நீரும் மின்சாரமும் நிதியும் பாழ்பட்டுப் போவது மட்டுமல்ல; மனித குலத்துக்கே பேரழிவு ஏற்படுத்தப் போவதன் அறிகுறி என்பதை அறிவியல்பூர்வமாக இதைக் குறித்து விளக்கியிருக்கிறார் தோழர் பார்த்திபன் அவர்கள். அவரது கட்டுரை பின்வருமாறு:

சுருக்கம்:

நாம் நினைத்துக்கூட பார்க்கவியலாத இந்த பேரண்டத்தின் விண்மீன்களிலிருந்தும் சூரியனிலிருந்தும் வெளிப்படும் மிக நுண்ணிய துகள்தான் இந்த நியூட்ரினோ. இதன்  எடை மிகவும் சிறியது மற்றும் கணக்கில் கொள்ளக்கூடியதுமல்ல. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கிலோ அதாவது 1000 கிராம் சர்க்கரை வாங்குவதாகக்கொண்டால், அதில் ஒரேயொரு கிராம் சர்க்கரை எவ்வளவு இருக்கும்?  சுமார் பத்தாயிரம்  சர்கரைத்துகள்கள் இருக்கும் என்று தோராயமாக வைத்துக்கொண்டால்; அதே ஒரு கிராம் அளவுள்ள இந்த நியூட்ரினோ எனும் துகள் பல்லாயிரங்கோடிகள் இருக்கும் என்று பொருள்.
இப்பொழுது சொல்லுங்கள் இந்த நியூட்ரினோ துகளின் எடையை பார்ப்போம்? ஏறத்தாழ எடையற்ற தன்மையை கொண்ட அதே நேரத்தில் இந்த உலகிலேயே மிக குறைந்த எடையை கொண்ட துகள் இதுதான் என்க.

இந்த ஆராய்ச்சியின் அவசியமென்ன?

நியூட்ரினோ என்பது ஒளி வேகத்தில் பயணிக்கக்கூடியது அதாவது நொடிக்கு 30 கோடி மீட்டர்  வேகத்தில் பயணிக்கக்கூடியது என்று பொருள். ஒளி என்றதும் உங்களுக்கு சூரிய ஒளி நினைவிற்கு வருவது இயல்பு. சங்க காலத்தில் சூரியனின் நிழலையும் அதன் கோணங்களில் ஏற்படும்  போக்கையும் கணித்து பருவ நிலைகளை நம்முடைய பாட்டன்மார்கள் அறிந்துகொண்டார்களாம். பிறகுதான் மணற்கடியாரமும் வந்தது. சரி சூரிய ஒளி என்றதும் நமக்கு வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும் என்கிற பழமொழியும் வருகிறதல்லவா? அதாவது ஒரு டார்ச்சிலிருந்து புறப்படும் ஒளியாகட்டும் அல்லது சூரிய ஒளியாகட்டும்; ஒளி ஒருபோதும் கடினமான அதாவது சுவர் மரம் பாறை மலை போன்றவைகளைதாண்டி ஊடுறுவதில்லை என்பதை பசுமரத்தாணிபோல் பதிக. ஆனால் நமக்கு ஆல்பா பீட்டா காமா கதிர்களை தெரியும் அதனூடே காஸ்மிக் கதிர்களையும் தெரியும். ஆல்பா பீட்டா காமா கதிர்களை அளக்கமுடியும். ஆனால் இந்த காஸ்மிக் கதிர்களை அளக்கவும் முடியாது கண்டறியவும் முடியாது. ஏறத்தாழ இதே சூழலைக்கொண்டதுதான் நியூட்ரினோ துகள்.

 கோடானு கோடி நியூட்ரினோ துகள்கள்  ஒவ்வொரு நொடியிலும் நம்முடைய உடலில் புகுந்து ஊடுருவி செல்கின்றன இன்னும் சொல்லப்போனால் இந்த பூமி கிரகத்தின் மறுபக்கத்தையே சென்றடைகின்றன என்றால் அதன் ஊடுறுவல் சக்தியையும் வேகத்தையும் சற்றே  நினைத்துப்பாருங்கள்! இதை மட்டும் கண்டறிந்துவிட்டால் பூமிப்பந்து மட்டுமல்ல பல கோள்களை பற்றிய இரகசியங்களையும் அறிந்துகொள்ள ஏதுவாக அமையும் என்பதுதான் இந்த உலகளாவிய ஆய்வின் நோக்கம். இது மேற்குலக நாடுகளுக்கு சாத்தியம்; மேலும் ஆய்வு நடத்தி அதன் உண்மைத்தன்மைகளை திருடிக்கொண்டு;  நம்முடைய மண்ணையும் நீரையும் நிலத்தையும் மக்களையும் நாசம்  செய்துவிட்டு, வெள்ளைகாரன் ஓடிவிடுவான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இயற்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் நியூட்ரினோ கதிர்கள், பல கோடிக்கணக்கில் நொடி தோறும் பூமிக்கு வந்து கொண்டிருந்தாலும், அதனால் மனிதர்களுக்கோ பிற உயிரிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. காரணம், இயற்கையில் வெளிப்படும் நியூட்ரினோக்களின் ஆற்றல் 2.2 எலக்ட்ரான் வோல்ட் (ev) முதல் 15 மெகா எலக்ட்ரான் வோல்ட் (Mev) அளவு ஆற்றல் மட்டுமே கொண்டவை ஆகும். ஆனால் ஒரு ஏடிஎம் மெழினையே பாதுகாக்க துப்பில்லாத மற்றும் ஆதார் அட்டையில் ஆட்டு தலைகளை ஒட்டி கொடுக்கும் நமக்கு, இதுபோன்ற ஆய்வுகள் தேவையா? அல்லது முதலில் சாத்தியமா? யாருடைய பணத்தில்? என்பதே இங்கு கேள்வி.

ஆனால் இதனுடன் காஸ்மிக் கதிரும் பயணிப்பதால் எது நியூட்ரினோ எது காஸ்மிக் எனும் குழப்பத்தில் இருந்து இன்னும் விஞானிகள் தெளிவாகாத சூழலில்தான் 1956-ல் ஃபெடரிக் ரெய்னஸ் என்கிற அறிவியலாளர், நியூட்ரினோ துகள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபித்தார் இதற்காக பின்னர் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆனாலும் நியூட்ரினோ ஆய்வு இன்னும் உலகில் எங்கும் நிறைவுபெறவில்லை காரணம் அது அத்தனை எளிதல்ல. பூமியின் மேற்பரப்பில் இத்தகைய ஆய்வு பெரும் ஆபத்தை தோற்றுவிக்கும் என்பதால்  2,000 மீட்டர் ஆழத்தில் துளையிட்டு நியூட்ரினோ ஆய்வகத்தை அமெரிக்கா அன்டார்டிகா பனிப் பிரதேசத்தில் நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸோ 2,500 மீட்டர் கடலுக்கடியில் ஆய்வகத்தை நிறுவியுள்ளது. ஆனால் உலகமே அஞ்சும் இந்த சோதனையை  தேனி மாவட்டத்தில் பொட்டிபுரத்தில் நிலத்துக்கும் கீழே சுமார் 1.7 கி.மீ. ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்போகின்றனர் என்பதுடன் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய ஆய்வகம் என்க.

ஆனால் இங்கே இந்தியாவைப் பொறுத்தவரை  1965 ஆம் ஆண்டு  கர்நாடகத்திலுள்ள கோலார் தங்கவயல் சுரங்கங்களில் 2 கிலோ  மீட்டர் (2000 மீட்டர்)ஆழத்தில்  நியுட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டு, ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. 1980களில் தங்க வயல்களை அரசு மூடிவிட்ட பிறகு அந்த நியூட்ரினோ ஆய்வகமும் மூடப்பட்டது என ஐ.என்.ஓ தனது திட்ட அறிக்கையில் கூறியுள்ளது; ஆனாலும் அப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் இயங்க எந்தத் தடையும் இல்லாத நிலையில், ஆய்வகம் ஏன் மூடப்பட்டது என்பதற்கு அரசிடம் எந்த பதிலும் இல்லாத நிலையில்தான் இந்த புதிய பேரழிவுத்திட்டம் என்க.

திட்ட விளக்கம்:

ஆய்வகத்தை அணுக:

மதுரை to தேனி நகரம் (NH 44)  80 கி மீ
தேனி நகரம் to போடிநாயக்கனூர் (NH 44) 15 கி மீ
போடிநாயக்கனூர் to ரசிங்கபுரம் (SH100)  10 கி மீ
ரசிங்கபுரம் to டி புதுக்கோட்டை  (ODR)  8 கி மீ
டி புதுக்கோட்டை to நியூட்ரினோ ஆய்வகம்  2 கி மீ
மொத்தம் 115 கி மீ தொலைவு
குறிப்பு:
NH - தேசிய நெடுஞசாலை
SH - மாநில நெடுஞசாலை
ODR - இதர மாவட்ட சாலைகள்

பூமியின் ஒருபுறத்தில் நுழைந்து அடுத்தபுறத்தில் ஊடுருவும் சக்தியும் வேகத்தையும் பெற்றிருக்கும் நியூட்ரினோ  எனும் அதிவேக துகள், தேனி மாவட்டத்தில் உள்ள கடினப்பறைகளில் கட்டுப்படும்(எவ்வளவு பெரிய அறிவாளிகள்/ ஏமாற்றுப்பேர்வழிகள் பாருங்கள்) என்பதால், இந்தப்பகுதியை தெரிவுசெய்தோம் என்கிறார்கள் விஞ்ஞானிகளுடன் சேர்ந்துகொண்டு அரசியலாளர்கள்; அதனால் சுமார் 120 ஆண்டுகள் செயல்படக்கூடிய இந்த ஆய்வகத்திற்கு இந்திய அணுசக்தி கழகம் சுமார் 1500 கோடி ருபாய் திட்ட மதிப்பில் ஒப்புதல் அளித்துள்ளது. 1980 களில் தொடங்கி பல்வேறு ஒப்புதல்கள், நிராகரித்தல்கள் மீண்டும் ஒப்புதல்கள் என பட்டியல் நீள்வதால் ஒட்டுமொத்த ஆண்ட மற்றும் ஆளும் அரசுகளே இதற்கு காரணமாகின்றன என்பதால் நேராக உங்களை திட்டத்திற்குள் அழைத்துச்செல்கிறேன்.

பொட்டிபுர மலை உச்சியில் இருந்து சுமார் 1750 ஆடி ஆழத்திற்கு 132 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 20 மீட்டர் உயரமுள்ள குகையைத் தோண்டுவது; அதாவது 1000 டன் ஜெலட்டின் வெடிக் குச்சிகளை 800 நாட்கள் வெடிக்கச் செய்து, 800 டன் பாறைகளைப் பெயர்த்து  இந்த ஆய்வுகூடத்தை அமைக்க இருக்கிறார்கள். ICAL- Magnetized Iron Calorimeter detector எனும் செயற்கையாக உருவாக்கப்படும் மின்காந்த உணர்த்தி கருவியை இந்த ஆய்வகத்தினுள் பொறுத்த இருக்கிறார்கள்; இதன் எடை உலகிலேயே மிகப்பெரிய ஆய்வக அளவிலான “ஐம்பத்துநான்காயிரம் டன்கள்” என்றால் நினைத்துப்பாருங்கள். உலகின் மிகச்சிறிய நியூட்ரினோ  இத்தாலிய கிரான் காசோ ஆய்வகத்தின்  சோதனைகளால் அந்தப்பகுதிகளில் உள்ள நீரடுக்குகளையும் பாழானது மட்டுமன்றி  குடிநீரையும் பாழடித்ததையும் அந்தப்பகுதியே வாழ்வதற்கு ஏற்றதல்ல என்று மக்களால் புறக்கணித்ததையும் இந்த உலகம் நன்கறியும். அத்துடன் அங்குள்ள இத்தாலிய மக்களும் அறிவியலாளர்களும் விவசாயிகளும் சாமானியர்களும் அரசு ஊழியர்களும் ஒன்றுகூடி எதிர்த்ததன் விளைவாக 2011 ஆண்டு மூடப்பட்டு பின்பு பலப்பல ஒப்புதல்களின் பேரில் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இயங்கத்தொடங்கியது.

Magnetized Iron Calorimeter detector - ICAL Detector :

இது அசையாத்தன்மை கொண்ட அதிக எடையுள்ள மின்தேக்கிகள் போன்று செயல்பட மற்றும் நியூட்ரினோ துகள்களை சேகரிக்க ஏதுவாகவும்; ஒரு வலுவான செயற்கை முறை மின் காந்தப்புலம் கொண்ட மூன்று தொகுதிகளைக்கொண்டது. ஒவ்வொரு தொகுதியும் 16 மீட்டர் நீளமும் 16 மீட்டர் அகலமும் 14.5 மீட்டர் உயரமும் 54 மில்லி மீட்டர் மொத்தமும் கொண்ட இரும்பு தட்டுகள்,  RPC எனப்படும் glass resistive Plate Chamber மூலம் ஏறத்தாழ ஒரு பர்கர் கேக் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இரண்டு மீடியத்திற்கும் அதாவது RPC க்கு இடையில் மேலும் கீழும் 54 மில்லி மீட்டர் மொத்தம் கொண்ட இரும்பு தட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். மூன்று தொகுதிகளின் இரும்பு மற்றும் RPC அமைப்புகளின் மொத்த எடை 54,000 டன்கள்.

இது எண்பதாயிரம் ஆம்பியர்(80,000A) கரண்டையும்  4.5 (3 X 1.5 Tesla) டெஸ்லா மின்காந்த புல அடர்த்தியையும் உருவாக்கவல்ல 150 டன்கள் எடைகொண்ட காப்பர் காயிலைக்கொண்டு  நிறுவப்படவிருக்கும்   உலகின் மிகப்பெரிய ராட்சத மின்காந்த உணர்த்தி ஆகும். மூன்று தொகுதிகளும் அடுத்தடுத்து  இணைக்கப்பட்டிருப்பதால் இதன் மொத்த அளவு  48 மீட்டர் நீளமும் 16 மீட்டர் அகலமும் 14.5 மீட்டர் உயரமும் ஆகும். இது வெறும் மின்காந்த உணர்த்திக்கான இடம் மட்டுமே என்க.
16மீட்டர் நீளம் 16 மீட்டர் அகலம் 56 மில்லி மீட்டர் அடர்த்தி என சுமார் 168 இரும்பு தட்டுகள் குஜராத்திலில் இருக்கும் ESSAR நிறுவனம் உற்பத்தி செய்து அனுப்புகிறது. இதனுடன் காப்பர் காயிலை ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் மூலம் அல்லது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன. பல அச்சுகள் கொண்ட தாழ்ந்த ட்ரைலர் (multiple axis low bed trailer) மூலம் சிறப்பு பரிணாம சுமை ஒப்புதல் பெற்று (அதாவது ODC - over dimensional consignment approval என்று பொருள்)  8 plates in 32 ton trailer/trip என்கிற முறையில் சாலைவழியே அனுப்பப்படுகிறது.

நிலம்:

ஏறத்தாழ 57 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை பொட்டிபுரம் திட்ட Survey No. 4/1 போதுமானது என கருதி ஒதுக்கப்பட்டுள்ளது; இந்த நிலம் குகை அமைக்க ஆய்வக மற்றும் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு, தொழிலாளர்கள் தங்குவதற்கு இருப்பிடம்,  விருந்தினர் மாளிகை அமைக்க மற்றும் போக்குவரத்து கட்டுமான பொருள்களை சேமிக்க, ஒப்பந்ததாரர் அவர்களுடைய இருப்பிடங்களை தற்காலிகமாக கட்டுமானம் முடியும்வரை கட்டிக்கொள்ள என எல்லாவற்றிக்கும் சேர்த்தே  ஆகும். கழிவுகளை சேமிக்கவும் இந்த இடத்தில் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மலையடிவாரம் என்பதால் ஆய்வக போக்குவரத்து எளிமையாகிறது என்கிறார்கள்.

தண்ணீர் :

இந்தப்பகுதியில் ஏற்கனவே நிலத்தடி நீர் பஞ்சம் என்பதால் 15 கிலோமீட்டர் அருகில் இருக்கும் முல்லைப்பெரியாற்றிலிருந்து தருவதாக தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் (TWAD -Tamil Nadu water supply and Drainage  Board) ஒப்புதல் வழங்கியுள்ளது. கட்டுமானத்தின்போது ஒரு நாளைக்கு பத்தாயிரம் லிட்டர் தேவைப்படுகிறது. இந்த ஆய்வக இயக்கம் மற்றும் மனித தேவைகளுக்காக ஒரு நீர்த்தேக்க தொட்டியை கட்டவிருக்கிறார்கள் அதன் கொள்ளளவு 400 ஆயிரம் லிட்டர் ஆகும்.
சுமார் ஐந்து ஆண்டுகள் (வேலை நடைபெறும் நாட்கள் மட்டும் 5 ஆண்டுகள் என்று கணக்கில்கொள்ளபட்டுள்ளது) இந்த திட்டம் முடிவடையம் காலம் என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளைய தண்ணீர் தேவை சுமார் பத்தாயிரம் லிட்டர் என்க. அப்படியானால் ஒரு கொடியே எண்பத்தி இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் லிட்டர்(365 X 10000 X 5 = 1,82,50,000 liter) தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது 18,250 cu.m/ 5 years என்று பொருள். இதற்கு பிறகு சுமார் ஒரு நூறு ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்பட தண்ணீர் தேவைப்படுகிறது அதை கணக்கிடுவோமா?

காப்பர் காயில் கூலிங், கட்டுப்பட்டு அரை கூலிங், மனிதர்கள் கூலிங், தனிமனித பயன்பாடு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் தண்ணீர் இழப்பு, சிதறுதல் மூலம்  என ஒரு நாளைக்கு சுமார் 30, 000 லிட்டர் தண்ணீர் தேவை (நிச்சயமாக இதைவிட 10% அதிகம் தேவைப்படும் என்க ) என்று வைத்துக்கொண்டால் 100 ஆண்டுகளுக்கான தண்ணீர் 109 கோடியே அய்ம்பது இலட்சம் (30000 X 365 X 100 = 109, 50, 00,000 liter)லிட்டர்  அதாவது 10,95,000 cu.m/100 years(109, 50, 00,000/1000) அதாவது சுமார் 110 கோடி லிட்டர்  தண்ணீர்  என்று பொருள். இது பார்ப்பதற்கு சிறிய அளவுபோல் தெரிந்தாலும் சுரக்கவும் இறைக்கவும் சமமானது ஆதலால் விவசாயம் அழிவது உறுதி என்க!

மின்சாரம்:

1. குகைக்குள் தேவைப்படும் அளவு 1500 KW
2. மேற்பரப்பில் தேவைப்படும் அளவு 2500 KW
மொத்தம் 4000 KW இது மேலும் உயரும் என்பதால் 5000 KW ஆக கணக்கில் கொள்ளப்பட்டு 5 MVA, 110/11KV முதன்மை துணைமின் நிலையங்களை அமைக்கவும் மூன்று 2000 KVA, 11/0.433KV துணை மின் நிலையங்களை அமைக்கவும் திட்டம் வரைவு பெறப்பட்டுள்ளது.

மாதிரி மின்சார கணக்கீடு:

Proposed power required : 4000 KVA
Operating efficiency : 95%
% loading : @70% (assumed)
Power factor : 0.8 lag
(Assumed
 post compensation pf as 0.95 lag)
Contract demand : 5000KVA
Chargeable demand : 3750KVA
(Payable charge only @ 75% on contract demand)
Tariff : MD Tariff (KVA + Kwh)
Cost /KVA (Max. demand) : Rs. 350/KVA
Total MD cost/Annum : Rs.1, 57, 50,000/- ------------ (i)
Actual Loading : 2527KW
(4000 X 0.95 X 0.95 X 0.7)
Total average units/Annum : 22,136,520 Kwh
(8760 X 2527)
Cost/ unit : Rs. 5.5/-
Total unit cost/ annum : Rs. 12, 17, 50,860/- ------------ (II)
MD + Unit Cost : Add (I) + (II)
Total electricity cost/ annum: Rs.13, 75, 00,860/-
Say apprx. Electricity cost   : 14 Crore/ Annum INR --------- (III)
(தவிற்க முடியாத காரணத்தால் ஆங்கிலம் பயன்படுத்தபட்டுள்ளது பொறுத்தருள்க)

D - வடிவ சுரங்கம்:

800 முதல் 1000 டன் எடையுள்ள கடினப்பாறைகளின் அடர்த்தி பொதுவாக 1600 லிருந்து 3500 கிலோ/ கனமீட்டர் என்கிற அளவில் இருக்கும்; அதாவது பத்தாயிரம் முதல் 22 ஆயிரம் கன அடி அல்லது 285 முதல் 625 கன மீட்டர் பரப்பளவை குடைந்தெடுத்து சுரங்கம் அமைக்க வேண்டும் அதுவும் மலையின் 1750 மீட்டர் அடிப்பகுதி ஆழத்தில் என்றால் சற்று நினைத்துப்பாருங்கள். இதற்கு சுமார் 800 முதல் 1000 டன் வெடிபொருள் பயன்படுத்தி சமமான இடைவெளியில் வெடிக்கச்செய்து பாறை துகள்களை அப்புறப்படுத்தப்படவேண்டும். இதனால் ஏற்படும் அதிர்வு அலைகளின் மூலம் அருகில் இருக்கும் கட்டிடங்கள் அது அணைக்கட்டுகளே ஆனாலும் விரிசல் விடப்போவது உறுதி. இதனால் ஏற்படும் வெடிமருந்து விஷக்காற்று மற்றும் எளிதில் படியாத காற்றுடன் கலந்து மிதக்கும் நச்சு துகள்கள் அந்த பகுதியையே மாசுபடுத்தப்போவது உறுதி.

அதுமட்டுமல்ல அந்த வெடி சத்தத்தில் அங்கே வாழும் அனைத்து உயிரினங்களின் நிலையை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். மனித சாதாரண சராசரி உலகால் உறுதி செய்யப்பட்ட சத்தம் வெறும் 80 டெசிபல் மட்டுமே. டெல்லி பம்பாய் போன்ற மாநகரங்களில் 90 டெசிபெல் முதல் 100 டெசிபெல் வரை மாற வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நியூட்ரினோ ஜெலட்டின் வெடி மூலம் பிளக்கப்படும் பாறை மற்றும் வெடி சத்தத்தின் அளவு சுமார் 200 முதல் 300 டெசிபல் இருக்கும் என்றால் மீதியை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். இவ்வளவு சத்ததிதில் மனிதன் மட்டுமல்ல எந்த உயிரினமும் வாழமுடியாது என்பது நிதர்சனம். இந்த திட்டம் தொடங்கியபோது 1500 கோடி என்று மதிப்பிடப்பட்டது ஆனால் இது முடிவுறும் நிலையில் சுமார் பத்தாயிரம் கோடியை தாண்டும் மற்றும் 120 ஆண்டுகளுக்காவுக்கான பராமரிப்பு செலவும் கூடிவிடும் என்க.

இனி நமது ஐயங்கள் பின்வருமாறு.........

1. சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுகள் தொடரும் அணுக்கழிவையே பாதுகாக்க முடியாத மற்றும் அதை பரம ரகசியமாகவே வைத்திருக்கும் நாம் எப்படி இந்த ஆபத்து மிகுந்த நியூட்ரினோ ஆய்வை தொடரப்போகிறோம்? எந்த ஒரு இம்மாதிரியான திட்டத்தையும் மக்களிடம் விவாதிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் சரி என்று ஒப்புதல் அளித்தால் ஒழிய எப்படி தொடங்குவது மேலும் அது  சட்ட விரோதமல்லவா?

2.  Drill jumbos,  Air compressors,  Mobile cranes, Tippers, Pump trucks, Jack hammers, Road rollers, Gas welding units,  Dewatering pumps with motors,  Excavators/Loaders/backhoes,  Pneumatic rock drills,  Shotcreting machine,  Grout pumps,  Dozers,  Batch plant,  Ventilation fans மற்றும்  Hand winches என எல்லாவகையான இயந்திரங்களும் இந்த திட்டம் முடிவடையும்வரை தொடர்ந்து சமமான இடைவெளிவிட்டு தொடர்ந்து மாற்றி மாற்றி இயங்கிக்கொண்டிருக்கும்பொழுது;  எவ்வளவு சத்தம், சாலை விபத்துகள், சாலையில் நெரிசல்கள், சுவாசக்காற்றில் மாசு என இந்த இடமே கிட்டத்தட்ட ஒரு புழுதிப்புயல் போன்று பெருத்த சத்தத்துடன் காணப்படும்.

3. இவ்வளவு மலையளவு பிளக்கப்பட்ட பாறைத்துகள்களை எப்படி எங்கு நிரப்பப்போகிறீர்கள் அதன் உயரம் என்ன? மேலும் இது சுரங்கம் தோண்டும்  பணிக்கு நேர் எதிரானது என்பதால், தோண்டப்பட்ட மண்ணை பாறைத்துகள்களை பாறைத்துண்டுகளை எப்படி படியவைக்கப்போகிறீர்கள்? அதன் அழுத்தம் என்ன?

4. இவ்வளவு கோடிக்கணக்கில் மின்சாரத்தை நூறு ஆண்டுகளுக்கு வீணடிப்பது ஏற்புடையதா? ஆம் என்றால் எதனடிப்படையில் யாருக்காக? ஒருவேளை திட்டம் வெற்றிபெற்றுவிட்டால் அதன் உரிமம் யாருடையது? மேலும் அதை வைத்து அடுத்தடுத்த வேற்றுகிரக ஆய்வை நடத்தும் அளவிற்கு இந்திய விண்வெளிக்கழகம் தகுதிபெற்றுவிட்டதா? யாரை ஏமாற்ற மக்கள் பணத்தை பாழடிக்கும் ஆபத்து மிகுந்த இந்த நாடகம்?

5. விவசாயிகள் தண்ணீரில்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் ஒருபுறம் அம்மணமாக போராடுகிறார்கள், இந்நிலையில் நூறு வருடத்திற்கு இவ்வளவு தண்ணீரை பாழடிப்பது தகுமா?

6. சுரங்கத்தினுள் திடீரென்று மின்சாரம் போய்விட்டால் வெறும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் அவசர மின்சாரம் வரவேண்டும்; அதன்மூலம் காற்று மீண்டும் நிரப்பப்படவேண்டும் மற்றும் வெவ்வேறு  கூலிங் சாதனங்களை இயக்கப்படவேண்டும்; குறிப்பாக ICAL குளிர்விக்கப்படவேண்டும் இல்லையேல் வெடிப்பது உறுதி. உள்ளே இருக்கும் மனிதர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமில்லை என்க.

7. உலகமே தடை செய்யப்பட்ட வாயுக்களை காப்பர் காயிலை குளிர்விக்க பயன்படுத்தவேண்டி பயன்படுத்தப்படப்போகிறீர்கள். அந்த ஆபத்து நிறைந்த வாயுக்களை சுமார் 200 பார் (200 Kg/sq.cm) அழுத்தத்தில் சிலிண்டர்கள் மூலம் சேமிக்கவுள்ளீர்கள். இதற்கான ஆபத்துக்கால பயிற்சி பற்றிய அறிவுறுத்தல்களை அந்தப்பகுதி மக்களுக்கு அறிவிக்கப்பட்டதா?

8. இந்த ஆய்வு முடிவுகளை கண்காணிக்கப்பபோகிற நிறுவனம் எது? முடிவுகள் எவ்வளவு பாதுகாப்பு உறுதித்தன்மை நிறைந்தது? அப்படியெனில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்கு இதில்  என்ன விழுக்காடு மற்றும் நிர்வாகம் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கும்?

9. இந்த திட்டத்தின் மூலம் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காது மட்டுமன்றி அதையும் பெருநிறுவனங்களே குத்தகை எடுத்துக்கொள்ளும் மின்சாரம் உள்பட என்றால்; இதில் நமக்கு என்ன பயன்?

10. இவ்வளவு நிலத்தடி நீரை இயற்கையை மண்ணை வளங்களை உயிரினங்களை கட்டிடங்களை காற்றை மாசுபடுத்தப்போகும் உங்களின் கார்பன் உமிழ்வின் (carbon credit) அளவு மற்றும் அதை சமன் செய்யும் மாற்று திட்டம் என்ன?

இன்னமும் கேட்பேன்.....

தோழமையுடன்,
பார்த்திபன் ப
20/05/2018

செவ்வாய், 1 மே, 2018

அரிவாள் சுத்தியல் எனும் குறியீடு.


அரிவாள்
உழவர்களையும்,
சுத்தியல் தொழிலாளர்களையும்
அடையாளப்படுத்துகிற
பாட்டாளி வர்க்கத்தின் குறியீடு.
உழவரின் ஈகத்துக்கும்
தொழிலாளர் ஈகத்துக்கும்
மே நாள் வீரவணக்கம்.

பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம்!

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்!
பாரில் கடையரே எழுங்கள் வீறுகொண்டு தோழர்காள்!

கொட்டு முரசு கண்ட
நம் முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட...

பண்டையப் பழக்கமென்னும் சங்கிலி அறுந்தது
பாடுவீர் சுயேச்சை கீதம் விடுதலை பிறந்தது.

இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திடும்;
இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகம் ஆகிடும்...

முற்றிலும் தெளிந்த
முடிவான போரிதாகுமே
முக மலர்ச்சியோடு
உயிர்த் தியாகம் செய்ய நில்லுமே.

பற்று கொண்ட மனித சாதி யாவும் ஒன்றதாகுமே,
மடிமிசைப் பிரித்த
தேச பாசையும்
ஓர் ஐக்கியமே...

பாரதோ மமதையின்
சிகரத் திறுமாந்துமே,
பார்க்கிறான் சுரங்கமில் நிலத்தின் முதலாளியே.

கூறிடில் அன்னார்
சரித்திரத்திலொன்று கண்டதே,
கொடுமைசெய்து
உழைப்பின் பலனைக் கொள்ளை கொண்டு நின்றதே...

மக்களின் உழைப்பெலாம் மறைத்து வைத்து ஒரு சிலர்,
பொக்கிசங்களில் கிடந்து புரளுகின்ற தறிகுவீர்.

இக்கணம் அதைத்
திரும்பக் கேட்பதென்ன குற்றமோ?
இல்லை,
நாம் நமக்குரிய
பங்கைக் காட்டிக் கேட்கிறோம்...

தொன்று தொட்டுழைத்த விவசாயி தொழிலாளி
நாம் தோழராகினோம்.

உழைப்போர் யாவரேனும்
ஓர் குலம்,
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச் சொல்லுவோம்.
உழைக்கும் மக்கள் யாவருக்கும் சொந்தமிந்த நிலமெலாம்...

வேலைசெய்யக் கூலி உண்டு வீனர்கட்கிங் கிடமில்லை.
வேதம் ஓதி உடல் வளர்க்கும் காதகர்க்கிங் கிடமில்லை.

நாளை எண்ணி வட்டிசேர்க்கும் ஞமலிகட்கிங் கிடமில்லை.
நாம் உணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங் கிடமில்லை...

பாடுபட்டுழைத்தவர் நிணத்தைத் தின்ற கழுகுகள்
பறந்தொழிந்து போதல் திண்ணம் பாரும்
சில நாளதில்.

காடு வெட்டி மலையுடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்!
கவலையற்ற போக வாழ்வு சகலருக்குண்டாக்குவோம்...

பாட்டாளி வர்க்க ஈகியர்களுக்கு வீரவணக்கம்!!

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

நியூட்ரினோ திட்டம் : விலை கொடுத்து வாங்கும் பேராபத்து: முனைவர் விஜய் அசோகன்


இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மிக சமீபத்திய கண்டுபிடிப்பான கடவுள் துகள் இவ்வாய்வுகளை ஒரு படி முன்னேற செய்திருந்தாலும், நிலையான முடிவுகளை நவீன அறிவியல் உலகம் இன்னும் எட்டவில்லை என்றே சொல்லலாம். பல்வேறு முனைகளில் இதுதொடர்பான இயற்பியல் ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது. அதில் ஒரு நிலைதான் நியூட்ரினோ ஆய்வு மையங்கள். இந்த ஆய்வு மையங்கள், உலகெங்கிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. பல்வேறு அரசுகளும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி கூடங்களும் பெரிதளவில் ஒருங்கிணைந்து வருவது இதுவே முதன்முறை எனலாம்.

ஆனால், இந்தியாவில் செயற்படுத்தப்பட இருக்கிற நியூட்ரினோ திட்டம் தொடர்பாக அச்சம் ஏற்படுத்தக்கூடிய செய்திகள் ஏராளம். இத்திட்டம் அறிவியல் உலகில் எவ்வித வெற்றியை ஈட்டித் தர இருக்கிறது என்பதற்கு அப்பால், தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் முழுமையாக அழித்தொழிக்க இருக்கிறது என்பது மட்டும் உண்மை. அமெரிக்க ஏகதிப்பத்தியத்தின் ஏவல் ஆளாகவே மாறிவிட்ட இந்தியத் துணைக்கண்டம் அமெரிக்காவின் செயல்பாட்டிற்கும் அமெரிக்க அறிவியல் கூடத்திற்கும் அடியாள் வேலை செய்யத்தான் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை கட்டவிருக்கிறது. எப்படி என்பதனையும் அதன் விளைவுகளையும் நமது மண்ணிற்கு எவ்வகையில் சவாலாக இருக்கப்போகிறது என்பதனையும் தொடர்ச்சியாக பார்ப்போம். நியூட்ரினோ திட்டம் எவ்வகையில் ஆபத்து என்பதனை நமது மக்களுக்கு நாம் புரிய வைத்தால்தான் அதனை எதிர்க்கும் வல்லமையை நாம் பெற முடியும். நியூட்ரினோ திட்டம் தொடர்பாக செல்வதற்கு முன் சிறிது இயற்பியல் புரிதல் தேவை என நினைக்கின்றேன்.

அணு மற்றும் அணுத்துகள்கள்:

இவ்வுலகில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பொருள்கள் (Matter) எனலாம். இப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. ஒருகாலக்கட்டத்தில் அணுவே இவ்வுலகில் இருக்கும் இறுதித்துகள் என நம்பப்பட்டது. ‘அணு’ (Atom) என்பதற்கான விளக்கம் (லத்தீன மொழியில்) ‘பிளக்க முடியாதது’ என்பதாகும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழுலகில், தமிழிலக்கியத்தில் கண்ணுக்கு புலப்படாத சின்னஞ்சிறு துகளுக்கு ‘அணு’ என்ற பெயர் இருந்து வந்துள்ளதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.

இயற்பியல் ஆய்வுகள் தொடரத் தொடர, அணுவும், எலக்ட்ரான் (electron), புரோட்டான் (proton), நியூட்ரான் (neutron) ஆகியவைகளால் ஆனவை எனக் கண்டறியப்பட்டது. இவைகளை அணுத் துகள்கள் (Atomic particles) எனக் கூறுவர். மேலும், புரோட்டானும் நியூட்ரானும் ஒன்று சேர்த்து இருக்கும் பகுதி அணுக்கரு (Nuclei) என சொல்கிறது அறிவியல். அணுவினுள் பல்வேறு உட்துகள்கள் (Subatomic particles) இருப்பதாகவும் பிறகு கண்டறியப்பட்டது. அணு உட்துகள்களை மூலத்துகள் (எதனாலும் உருவாக்கப்படாதவை) மற்றும் கலவைத் துகள்கள் எனப் பிரித்தனர். எலக்ட்ரான் ஒரு மூலத்துகள் ஆகும். அதில் எதிர்மறை மின்னூட்டம் (negative charge) உள்ளது. புரோட்டானில் நேர்மறை மின்னூட்டம் (positive charge) உள்ளது. நியூட்ரான் எவ்விதமான மின்னூட்டமும் இல்லாத அணுத்துகள் ஆகும். முதலில் நியூட்ரினோவிற்கும் நியூட்ரான் என்றுதான் பெயரே இருந்தது. இரண்டையும் வேறுபடுத்தவே பிற்காலத்தில் இத்தாலிய மொழியில் நியூட்ரினோ என்று பெயரை மாற்றியமைத்தனர். இத்தாலிய மொழியில் அதற்கான அர்த்தம் “A little neutral one” என்பதாகும்.

நியூட்ரினோ – பிசாசு துகள்:

சூரியனில் இருந்து பூமியை நோக்கி பொழிந்து வரும் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் ஒரு துகளே நியூட்ரினோ. அது வானில் இருந்து இப்புவி நோக்கி பெரு மழையாக நம் கண்ணுக்கு புலப்படாத வண்ணம் பொழிந்துகொண்டேதான் இருக்கிறது. நமது உடலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் 60 லட்சம் நீயூட்ரினோ துகள்கள் ஊடுருவிக்கொண்டே இருக்கிறது. இயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களால் எவ்வித பாதகமும் இல்லை. அது எப்பொருளுடனும் எவ்வித வினையும் புரியாது. அது இவ்வுலகில் சிறு துரும்பைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காது. நமது கண்ணுக்கு எவ்விதம் அது புலப்படவே படாதோ அதுபோலத்தான் அதன் பாதையில் நமது மண்ணில் எப்பொருளுக்கும் அத்துகளுக்கு தடங்கல் ஏற்படுத்தக்கூடிய வல்லமை இல்லை என சொல்லலாம். இருக்கும் அணுத்துகள்களிலேயே மிக குறைந்த நிறை கொண்டதான இந்நியூட்ரினோ ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடிய வல்லமை பெற்றதனால் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. படிப்பதற்கு இவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? இந்நல்லப்பிள்ளைக்கு அறிவியல் உலகம் முதலில் வைத்த செல்லப்பெயர் ‘பிசாசுத் துகள்’

ஆற்றல் அழியா விதியின் படி (Law of conservation of energy) ஆற்றல் என்பது புதிதாக உருவாகாது, அது அழியவும் அழியாது. ஆனால், ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றம் அடையும். ஒரு வினையின் தொடக்கத்தில் இருக்கும் ஆற்றல், இயங்குவிசை என அனைத்தும் வினை நிறைவுறும் தருவாயிலும் நிலைத்திருக்கும். இயற்பியலாளர் வுல்ஃகாங்க் பௌலி (Wolfgang Pauli) 1930 இல் பீட்டாதேய்வு (Beta Decay) தொடர்பாக ஆய்வுகளை செய்யும்பொழுது வினை நிறைவில் கிடைக்கப்பெற்ற ஆற்றலிலும் (energy) இயங்குவிசையிலும் (momentum) மாற்றம் இருந்தது. அதாவது அழிவு இருந்தது. இது இயற்பியலின் ஆற்றல் அழியா விதியின்படி முரண்பாடானதாக பார்க்கப்பட்டது. பௌலி, வினையின் இறுதியில் கண்டுபிடிக்க முடியாத ஆற்றலையும் இயங்குவிசையையும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத உட்துகள் ஒன்று கொண்டிருக்கிறது என வரையறுத்தார். ஆனால், அந்த உட்துகளை சோதனை வழியாக நிறுவ முடியாமல் கோட்பாட்டு முறையிலேயே உணர்ந்து வந்தனர். அந்த உட்துகளில் மின்னூட்டம் இல்லாத நிலையில் இருப்பதை அறிந்து, பௌலி அதற்கு நியூட்ரினோ என பெயரிட்டார். அடுத்ததாக வந்த 26 வருடங்கள் நியூட்ரினோவை சோதனை வழியாக கண்டுபிடிக்க முடியாமலேயே இயற்பியலாளர்கள் தவித்து வந்தனர். ஹிக்ஸ் போசானிற்கு ‘கடவுள் துகள்’ என பெயரிட்டது போல நியூட்ரினோவிற்கு ‘பிசாசு துகள்’ என அறிவியல் உலகம் பெயரிட்டது.

இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம்:

1965 இல் வான்வெளியில் இருந்து வந்துக்கொண்டிருந்த நியூட்ரினோவை (Atmospheric neutrino) உலகிலேயே முதன்முறையாக, டாடா ஆராய்ச்சி கழகமும் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகமும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து கோலார் தங்க வயலில் நடந்த ஆய்வில் பதிவு செய்தனர். அப்பொழுதிலிருந்தே இந்திய இயற்பியலாளர்கள் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் ஆவல் இருந்து வந்தது. 1989 இல் இருந்து அதற்கான திட்டமிடல் இருந்து வந்தாலும், பல்வேறு காரணங்களால் காலம் இழுத்துக்கொண்டே சென்றது. 2002 நியூட்ரினோ ஆய்விற்காக நோபல் பரிசு கிடைத்ததை அடுத்து, இந்திய அணுசக்தி கழகமும் (Department of atomic energy) இத்திட்டத்தில் முழுவீச்சில் இறங்கியதை அடுத்து இந்திய துணைக்கண்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதற்கு பின்னனியில் இருக்கும் அமெரிக்க கொள்கையை விரிவாக பிறகு பார்ப்போம்.

சிங்காராவில் அமைப்பதாக இருந்த இந்த ஆய்வு மையத்திற்கு 2009 இல் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி மறுத்தது. அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “நியூட்ரினோ ஆய்வு மையத்திற்காக அனுமதி கேட்ட சிங்காரா பகுதிக்கு அருகிலேயே முதுமலை வன சரணாலயம் அமைந்திருக்கிறது. அரிதிலும் அரிதான புலி வகைகள் வாழும் பந்திப்பூர் மற்றும் முதுமலை பகுதிக்கு அருகில் இத்தகைய ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்க முடியாது” என கூறினார். ஆனால், தேனி மாவட்டத்தில் இருக்கும் சுருளி அருவிக்கு அருகாமையில் அமைத்து கொள்வதாக இருந்தால் அமைச்சகம் அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறது என்றும் பரிந்துரைத்திருந்தார்.

அதன்பிறகு இதுதொடர்பாக, இந்திய நியூட்ரினோ ஆய்வு மையத்தின் பேச்சாளரும் டாடா ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்தவருமான மொண்டால் அவர்கள் எழுதிய கடிதத்தில், “சுருளி அருவிக்கு அருகாமையில் அடர்ந்த வனப்பகுதி இருப்பதால், ஆய்வு மையம் அமைக்க வேண்டுமானால், பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட வேண்டும். அதற்கான முழுமையான அனுமதியையும் ஒத்துழைப்பையும் வழங்கினால் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம்” என பதிலுரைத்திருந்தார்.

தொடர்ச்சியாக எழுதிய கடிதத்தில் மொண்டால் அவர்கள், “சுருளியாறுக்கு 30 கிமீ தொலைவில் இருக்கும் தேவாரம் பகுதியில் ஆய்வு மையம் அமைக்க விரும்புவதாகவும் ஆனால், அங்கே ஆய்வு மையத்திற்கு தேவையான நீர் வசதி பெரும் பிரச்சனையாக இருக்கும். அதனை சரி செய்ய அரசு முன்வந்தால் திட்டத்தினை செயல்படுத்துவதில் எங்களுக்கு சிரமம் இருக்காது” என கூறினார்.

பரிசீலிக்கப்பட்ட மூன்று இடங்களிலும் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பதனை முதலில் பார்ப்போம். நியூட்ரினோ ஏனைய அணுத்துகள்கள் போல எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதிநவீன கருவிகளைக்கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தினாலும் மிக குறைந்த அளவிலான நியூட்ரினோவை மட்டுமே பதிவு செய்ய முடியும். அதன் இயற்பியல் தன்மை அப்படியானது. மேலும், நியூட்ரினோ துகளை பதிவு செய்யும் பொழுது ஏனைய அணுத்துகள்கள், காஸ்மிக் கதிர்களும் பதிவாக வாய்ப்புள்ளதால் ஏனையவைகள் முற்றிலுமாக வடிகட்டப்பட வேண்டும்.

நியூட்ரினோவை மட்டும் பதிவு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் 1 கிலோ மீட்டர் அளவுள்ள மலைப்பகுதி தேவை. அதனால்தான் தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையை தேர்வு செய்திருக்கிறார்கள் இதன்படி மலையின் உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகை அமைக்கப்பட்டு உலகத்திலேயே மிகப் பெரிய அளவுள்ள காந்தமையப்படுத்தப்பட்ட இரும்பு வைக்கப்பட்டு அதனிடையே மின் தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் ஒன்றோடொன்று இடைவெளியில் விட்டு வைக்கப்படும். காந்தத்தின் செயல்பாட்டினையும் மின் தட்டு அறைகளின் செயல்பாட்டினையும் தூண்டுதல் செய்து அதற்கிடையே நியூட்ரினோவை ஆய்வு செய்யப்போகிறார்கள்.

ஆக, இயற்பியலாளர்களை பொருத்தவரை அவர்களுக்கு பொருத்தமான இடம் இத்தகையதுதான். அதற்காக இந்தியாவிலேயே இந்த ஒரு பகுதிதான் இத்தகைய தன்மையுடையது என்பது இல்லை. ஏனைய இடங்களில் வைத்தால் மக்கள் போராட்டம் இருக்கும். தமிழகத்தைப் பொருத்தவரை அதனை தடுக்க பல வழிகள் இருக்கிறது என்ற திமிர் இந்திய துணைக்கண்டத்தின் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கிறது.

ஆனால் நாம் பகுத்துணர வேண்டிய செய்திகள் இதில் ஏராளம்.

முதுமலை காடுகளில் அரிதிலும் அரிதான வன விலங்குகள் வாழ்வது அணுசக்தி கழகத்திற்கும் டாடா ஆராய்ச்சி கழகத்திற்கும் சுற்றுச்சூழல் துறை சொல்லும் வரை தெரியாதா? இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, வன விலங்குகள் துடைத்தெறியப்பட்டு, அதனால் ஏற்படும் ஏனைய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் வந்தாலும் ஆய்வுத் திட்டமே முக்கியம் என கருதும் குறுகிய மனம் படைத்தவர்கள்தான் இவர்கள்.மொண்டால் எழுதிய கடிதத்தில் சுருளியாறு பகுதிகள் காடுகளை அழிக்க அரசின் உதவியையே நாடுகிறார். இதுபோன்ற பயங்கரவாத சிந்தனை உலகத்தில் எங்குமே நடக்காது. ஒரு அரசிடம் ஒரு மனிதர் வெளிப்படையாக இயற்கை வளங்களை அழிக்க கோர முடியுமா? இந்நேரம் அவர் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் அல்லவா அடைக்கப்பட்டிருக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க போராடும் மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் இந்திய துணை கண்ட அரசு காடுகளை அழிக்கக் கோரும் நபரை கெளரவப்பதவி கொடுத்து வைத்திருக்கிறது.நீரே இல்லாத பகுதியாயினும் 30 கிமீக்கு நீரை எடுத்துச்செல்லும் குழாய்களை உடனடியாக அமைக்க ஏற்பாடு செய்கிறார்கள். காவிரி குடிநீரை ஹொகேனக்கல் பகுதியில் இருந்து பென்னாகரம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக வெறும் 18 கிமீ எடுத்து வர முடியாமல் 20 வருடங்களாக வக்கற்று நிற்கும் அரச நிறுவனங்கள் 10-20 அறிவியலாளர்களின் சாதனைக்காக அனைத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த இருப்பது, இந்திய துணைக்கண்டத்தின் அரசு மக்களுக்கானதா? அல்லது அதிகாரிகளுக்கானதா? ஆராய்ச்சி நிறுவனங்களுக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.புலிகளும், யானைகளும் நடமாடும் பகுதி/பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என கூறி நீலகிரியில் திட்டம் செயல்படுத்த அனுமதி மறுத்த சுற்றுச்சூழல் துறை, மனிதர்கள் வாழும் தேனி பகுதியில் திட்டம் செயல்படுத்த அனுமதியளித்திருக்கிறது. விலங்குகளை விடவா மனிதர்கள் மதிப்பற்றவர்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பு:

இத்திட்டத்தால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருகிறது. “மேற்குத் தொடர்ச்சி மலை என்பது, பல்லுயிரியல் சூழலில் முக்கியமான பகுதி. நிறைய தமிழ்நாட்டு நதிகளின் பிறப்பிடமும் கூட. இங்கு நிறைய அணைகள் அருகருகே இருக்கிறது. கிட்டத்தட்ட 10ற்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன. பூமிக்குள் சுரங்கம் தோண்டும்பொழுது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளை தகர்க்க வேண்டும். அது அணைகளுக்கும் மலைகளுக்கும் காடுகளுக்கும் அப்பகுதியில் வாழும் பல் உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்” என கூறுகின்றனர்.

அதேபோன்று, இத்திட்டம் அமைக்கப்போவதாக சொல்லுகின்ற 34 ஹெக்டேர் பகுதி, மக்களோட வாழ்வாதாரமா இருக்கிற கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் என சமீபத்திய ஆன்ந்த விகடன் கட்டுரை தெரிவிக்கிறது. 2.5 கிமீ சுரங்கம் தோண்டும் பொழுது உருவாகும் தூசி மண்டலம், அந்த பகுதியை கடுமையாக மாசுப்படுத்தும். உடைக்கப்பட்ட பாறைகளை அள்ளிக்கொண்டு நூற்றுக்கணக்கான சுமையுந்துகள் குறுக்கும் நெடுக்குமாக பாடும் பொழுது அந்தப் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பல மாதங்களுக்கு பாதிக்கும்.

மேலும், இது குறித்தான புரிதல் ஏற்படுத்தும் விதமாக அறிவியலாளர் வி.டி. பத்மநாபன் அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது கட்டுரைகளில், “சுமார் 1000 டன் ஜெலட்டின்களை பயன்படுத்தி 800 நாட்கள் தொடர்ச்சியாக 800 டன் பாறைகளை உடைக்க இருக்கிறார்கள். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கிற பகுதி நீர் அடுக்குகள் (Aquifer) நிறைந்த பகுதி. இவ்வாறாக, சுரங்கம் அமைக்க வெடி வைத்து பாறைகளையும் நிலத்தையும் தகர்க்கும்பொழுது அது புவிமேலோட்டுப் பேரியக்கத்தில் (tectonics) மாற்றம் நிகழ்த்தும். நீர் அடுக்குகளால் நிறைந்த பகுதி என்பதால் நீரியல் பூகம்பத்தை (hydro seismicity) எளிதில் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆய்வு மையப்பகுதியில் எவ்வித புவிசார்தொழிற்நுட்ப முறை (Geotechnical studies) ஆய்வுகளை அணுசக்தி கழகமும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனமும் இதுவரை செய்யவில்லை. அதுகுறித்து வெளிப்படைத்தன்மை உடைய அறிக்கையை இதுவரை இல்லை. அதாவது, சுரங்க கிடங்குகள் அல்லது ஆய்வகங்கள் அமைக்கும்பொழுது நீர் அடுக்குகளுக்கும் இயற்கை வளங்களுக்கும் எவ்வகையிலான பாதிப்புகள் வரும் என்பதனை கணிக்கும் ஆய்வு நடத்தப்பட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இது நடக்கவேயில்லை என்ற குற்றச்சாட்டிற்கு இதுவரை பதில் இல்லை.

ஒரு திட்டம் வரும்பொழுது, கட்டுமானம், போக்குவரத்துகள், வாழ்வியல் பாதிப்புகள் வருவது இயல்பு என வாதம் செய்வோர்கள் கவனத்திற்கு, யாரோ 20-30 அறிவியலாளர்களின் வெற்றிக்காக பல லட்சம் மக்களை பலிக்கடாவாக்க முடியாது என்பதனை நினைவில் கொள்க.

கதிர்வீச்சு அபாயம்:

சுற்றுச்சூழல் பிரச்சனைகளும் தமிழர்களின் வாழ்வாதார பாதிப்புகளும் மட்டும் என்றில்லை, கதிர்வீச்சு அபாயமும் இருக்கிறது. வான்வெளியில் இருந்து வந்துகொண்டிருக்கும் நியூட்ரினோவின் ஆற்றல் நம்மை பாதிப்படையச் செய்யும் கதிர்வீச்சு அல்ல. ஆனால், முதலில் வான்வெளியில் இருந்து பொழியும் நியூட்ரினோவை பதிவு செய்து ஆய்வு செய்வதோடு, இத்திட்டம் நிறைவுறப்போவதில்லை. சமகாலத்தில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் நியூட்ரினோ ஆய்விற்கான சுரங்க ஆய்வகங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் சிகாகோ நகரில் இயங்கும் நியூட்ரினோ உற்பத்திசாலையில் இருந்து நியூட்ரினோக்கள் நமது மண்ணை நோக்கி செலுத்தி, அதன் மிக தொலைவில் இருந்து பயணப்படும்பொழுது ஏற்படும்/ஏற்படுத்தும் மாற்றம், இயற்பியல் கோட்பாட்டு நிகழ்வும்கள், பிற கதிர்வீச்சுகளோடு வினைபுரியும் வாய்ப்பு என அனைத்தும் ஆய்விற்கு உட்படுத்தப்படும். இதில்தான் பெரிதளவிலான சிக்கல்கள் இருக்கின்றன.

எப்படி என சிந்திக்கிறீர்களா?

வான்வெளி நியூட்ரினோவிற்கு நம் மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை இல்லை என்றாலும் செயற்கையாக உற்பத்தியாகும் நியூட்ரினோவிற்கு அத்தன்மை உண்டு. இரண்டிற்குமான ஆற்றல் வேறுபாடே அதன் இயற்பியல்/வேதியியல் தன்மைகளை மாற்றுகிறது. இயற்கை நியூட்ரினோவின் ஆற்றல் 2.2 எலக்ட்ரான் வோல்ட் (eV) முதல் 15 மெகா எலக்ட்ரான் வோல்ட் (MeV) வரை ஆகும். ஆனால், அமெரிக்க நியூட்ரினோ 500-1500 கிகா எலக்ட்ரான் வோல்ட் (GeV). செயற்கை நியூட்ரினோ 10 கோடி மடங்கு அதிகம் ஆற்றல் கொண்டது. இயற்கை நியூட்ரினோக்கள் தனித்தனியாக பயணிக்கக் கூடிய வல்லமை படைத்தது. ஆனால் செயற்கை நியூட்ரினோக்கள் அமெரிக்காவில் இருந்து அனுபப்படும்பொழுது அது நேர்திசையாக்கள் செய்யப்பட்டு கற்றைகளாக பயணிக்கும். அதனால் செறிவும் (Intensity) அடர்த்தியும் பன்மடங்கு கூடும்.

பிற்காலத்தில் ஜப்பான் மற்றும் அண்டார்டிக்காவில் இருந்தும் தமிழகம் நோக்கி இக்கதிர்வீச்சு அனுப்பப்படலாம். இது வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை. ஏனைய நாடுகளின் அரசும் மக்களும் ஒருபொழுதும் தன் நாட்டின் மீது இத்தகைய கதிர்வீச்சு படையெடுப்பை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இந்திய துணைக்கண்டத்தில் இது முற்றிலும் சாத்தியம். உலகெங்கும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இந்திய துணைக்கண்டத்தில் விற்பனை செய்யப்படுவது சாத்தியமாக இருக்கும்பொழுது, பல நாடுகள் தடை செய்த வேதாந்த நிறுவனம் இங்கு செயல்படுவடு சாத்தியமாக இருக்கும்பொழுது, உலக வல்லரசுகளின் பொருளாதார வேட்டைக்காடாகவே இந்திய துணைக்கண்டம் மாற்றிவிட்ட சூழலில் இது முற்றிலும் சாத்தியமே. இங்குதான் ஒரு அமைச்சர் அல்லது ஒரு அதிகாரி நினைத்தாலே எவனின் தலையெழுத்தையும் மாற்ற முடியுமே.

சனி, 7 ஏப்ரல், 2018

நியூட்ரினோ திட்டத்தால் எந்த நன்மையும் இல்லை; நில நடுக்கம்தான் வரும்! : பொறியாளர் சுந்தர்ராசன்.

ஒரு திட்டம் அமைய வேண்டும் என்றால்,
அது எந்த மாதிரியான திட்டம்?
அமைய இருப்பது எந்த இடம்?
அந்தத் திட்டத்தால் கிடைக்கப் போகின்ற,
சமூக பொருளாதாரப் பயன்பாடுகள் என்ன?
இந்த மூன்று காரணிகளின் அடிப்படையில்தான், அந்தத் திட்டத்தை நாம் வரவேற்க வேண்டுமா? அல்லது எதிர்க்க வேண்டுமா?
என்கின்ற கருத்து ஆக்கத்தை
நாம் உருவாக்க முடியும்.

அப்படி இந்த நியூட்ரினோ எந்த மாதிரியான திட்டம்?

தேனி மாவட்டம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் அமைய இருக்கின்ற நியூட்ரினோ ஆய்வகத்தில், நியூட்ரினோக்களை ஆய்வு செய்யப் போவதாக விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள்.

இயற்கையாகவே சூரியனில் இருந்தும் அண்டவெளியில் இருந்து கோடிக்கணக்கன நியூட்ரினோக்கள் நம் உடலை ஊடுருவிச் சென்று கொண்டுதான் இருக்கின்றன.

அவற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால், இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு,
செயற்கையாக, தொழிற்கூடங்களில் உருவாக்கப்படுகின்ற நியூட்ரினோக்களை ஆய்வு செய்யப் போகின்றார்கள்.

இயற்கை நியூட்ரினோக்களுக்கு நிறை கிடையாது. அவற்றால் பாதிப்பு இல்லை.

ஆனால், அமெரிக்காவின் ~பெர்மி ஆய்வுக்கூடத்தில் இருந்தும்,
ஐரோப்பா, ஜப்பான் ஆய்வகங்களில் இருந்தும், அண்டார்டிகாவில் இருந்தும் தேனி பொட்டிப்புரத்தை நோக்கி,
செயற்கை நியூட்ரினோ கற்றைகளை அனுப்பப் போகின்றார்கள்.

அவை, அதிக ஆற்றல் கொண்டவை.
அதிக நிறை கொண்டவை;
ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியவை.

எதற்காகத் தேனி பொட்டிப்புரத்தைத் தேர்ந்து எடுக்கின்றார்கள்?

அது மேஜிகல் பேஸ்லைன் என்று சொல்கின்றார்கள்; நியூட்ரினோ ஆய்வுக்கு ஏற்ற மலையாகக் கருதுகின்றார்கள்.

நியூட்ரினோ ஆய்வு எதற்காக?
எதிரி நாடுகளிடம் எங்கே அணுகுண்டுகள் இருக்கின்றன என்பதைக் கண்டு அறிந்து,
அவற்றைச் செயல் இழக்கச் செய்வதற்காகத்தான் இந்த ஆய்வு.

இது அடிப்படை அறிவியல் திட்டம் அல்ல;
பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிகள் தொடர்பான திட்டம்.

அமெரிக்காவுக்குப் பிடிக்காத,
குறிப்பாக சீனா போன்ற நாடுகளிடம் உள்ள அணுகுண்டுகளை ஆராய்ந்து,
அதைச் செயல் இழக்கச் செய்வதுதான்
இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்.

இந்திய-அமெரிக்க அணுவிசை ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசு, அமெரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்து இருக்கின்றது.

இந்த மேற்குத் தொடர்ச்சி மலை,
உலகப் பண்பாட்டுச் சின்னம் என ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அறிவித்து இருக்கின்றது. 

‘பல்லுயிர் பாதுகhப்பு மண்டலம்’ என, மாதவ் கhட்கில் குழு, கஸ்தூரி ரங்கன் குழுக்கள் அறிவித்து இருக்கின்றன.

இந்த அறிவிப்புகளின் விளைவாக,
இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்தால்கூட, அங்கே குண்டு போடக்கூடாது.

தாஜ் மகல் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்று இருக்கின்றதோ,
அதற்குச் சற்றும் குறைவு அல்ல இந்த மேற்குத் தொடர்ச்சி மலை.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் மக்கள் வாழ்வதற்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகள் உயிர்ப்போடு இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு இடத்தில்,
ஆயிரக்கணக்கான டன் வெடிமருந்துகள்,
ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி,
பத்து இலட்சம் டன் பாறைகளைத் தகர்த்து உடைத்து எடுத்து,
அந்த இடத்தில் இந்த ஆய்வகத்தை அமைக்கப் போகின்றார்கள்.

அண்மையில்,
ஹை குவாக் என்ற ஆய்வு இதழ்,
ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.

கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களில், 746 நிலநடுக்கங்கள் மனிதர்களால் தூண்டப்பட்டவை என்று சொல்கின்றது.

அவற்றுள் 37 பூகம்பங்கள்,
மிகப்பெரிய சுரங்கங்களைக் குடைந்ததால் தூண்டப்பட்டவை;

24 விழுக்காடு, பெரிய அணைகள், நீர்த்தேக்கங்கள் கட்டுமானங்களால் தூண்டப்பட்டவை என்று அந்த அறிக்கை சொல்லுகின்றது.

இந்தத் தேனி மாவட்டம்,
ஏற்கனவே நீர்த்தேக்கங்களால் அழுத்தப்பட்டு இருக்கின்றது.

இங்கே வந்து, இத்தனை இலட்சம் பாறைகளை நீங்கள் உடைத்து ஆய்வகம் அமைத்தால், முல்லைப்பெரியாறு அணை வலு இழந்து உடைந்து நொறுங்கி விடும்

நண்பர்களே. இந்த ஆய்வகத்தால் கேரள மாநிலமும் பாதிக்கப்படும்.
அதனால்தான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கேரள மாநிலத்திற்கும் சென்று,
அங்கே உள்ள அரசியல் தலைவர்களையும் சந்தித்து, இந்தத் திட்டத்தால் ஏற்படக்கூடிய கேடுகளை விளக்கிக் கூறி இருக்கின்றார்கள்.

ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருக்கின்ற முல்லைப்பெரியாறு அணை, இடுக்கி அணை, வைகை அணை, மேகமலை அணை என 18 பெரிய நீர்த்தேக்கங்கள் இந்தப் பகுதியில் உள்ளன.

இவை அனைத்திற்குமே நியூட்ரினோ திட்டத்தால் ஆபத்துகள் ஏற்படும்.

சரி. இந்தத் திட்டத்தால் நமக்கு என்ன நன்மை?

தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்குமா?

இந்தப் பகுதியின் பொருளாதாரம் வளருமா?

எதுவும் கிடையாது.

யாரோ ஒரு சர்மாவும், சாஸ்திரியும் உள்ளே உட்கார்ந்துகொண்டு ஆய்வு செய்யப் போகின்றார்கள்.

அதிகபட்சமாக ஒரேயொரு ஆளுக்கு வாட்ச்மேன் வேலை கொடுப்பார்கள்.
அவ்வளவுதான்.
இந்தத் திட்டத்தால், இந்தப் பகுதியில்  வேறு எந்தப் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படப் போவது இல்லை.

இது மிக மோசமான திட்டம்.

இந்தப் பகுதி நீர்பிடிப்புப் பகுதி என்று தமிழக அரசு சொல்லுகின்றது.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடுத்துத் தடை ஆணை பெற்றுள்ளார்கள்.

இந்தத் திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து பூவுலக நண்பர்கள் அமைப்பின் சார்பில் நாங்கள் வழக்குத் தொடுத்து,
அந்த அனுமதியை ரத்து செய்து
தீர்ப்பு வாங்கி இருக்கின்றோம்.

ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி, எதிர்ப்புகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்துச் செயல்படுத்தப் போகின்றார்களாம்.

அப்படி அனுமதி கொடுப்பதற்கு எந்தச் சட்டமும் இல்லை.

ஆக, இந்த நாட்டில் சட்டப்படி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவதற்கே நாம் ஒரு பெரிய சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டிய கேடு கெட்ட நிலைமை இந்த நாட்டில் ஏற்பட்டு இருக்கின்றது.

அத்தகைய மோசமான நிலைக்கு பாசிச அரசுகள் சென்றுகொண்டு இருக்கின்றன.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராசன் அவர்களது பதிவிலிருந்து..

நியூட்ரினோ திட்டமும் அறிவியல் ஆதிக்க அகந்தையும் : முனைவர் விஜய் அசோகன்.

நியூட்ரினோ திட்ட எதிர்ப்பும் அறிவியல் எதிர்ப்பும்:
இரண்டும் வெவ்வேறானவை!

அறிஞர் விசய் அசோகன் அவர்களது மிக முக்கியமான கட்டுரையிலிருந்து..

தேனியில் அமைப்பதாக சொல்லும் இந்தியாவின் அறிவியல் திட்டத்தை எதிர்க்கும் குரல் எத்தகையது? ஏன் உருவானது? என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் மிக எளிமையாக புறந்தள்ளிவிட்டு அறிவியல் மேட்டிமைத்தனத்தோடு இந்திய அதிகார வர்க்கமும் அறிவியல் வர்க்கமும் நடந்துகொள்வது இந்தியாவின் வருங்கால அறிவியல் மற்றும் வளர்ச்சிப்பாதையில் பெருங்கனவு கொண்ட என்னைப் போன்ற இளம் அறிவியலாளர்களுக்கு அதிர்ச்சியும் அயர்ச்சியும்தான் உருவாகிறது.

நியூட்ரினோ ஆய்வோ அல்லது வேறு ஏதேனும் அறிவியல் ஆய்வோ, பொதுவாகவே, பொதுமக்கள் எப்பொழுதும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாழ்விடமோ வாழ்வாதாரமோ பாதிக்கும் என நம்பினால் அது எத்தகைய நன்மை பயக்கும் திட்டமாக இருந்தாலும் கட்டாயம் எதிர்ப்பார்கள்.

அதே போல, பொதுமக்களை அப்படியெல்லாம் தூண்டிவிட்டெல்லாம் இந்தியாவின் ஆராய்ச்சியை எவராலும் தடுத்துவிட முடியாது. எங்களைப் போன்றவர்கள் (பூவுலகின் நண்பர்கள்) மக்களோடு சேர்ந்து குரல் கொடுக்கிறோமே தவிர எங்களால் மக்கள் குரல் கொடுக்கவில்லை என்பதை முதலில் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.

தீர்க்கமாக சொல்ல வேண்டுமென்றால், எங்களுடைய வாதமெல்லாம், திட்ட செயலாக்கத்தின் முதன் நிலையிலேயே ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்தும் அல்லது திட்டக்குழுவினர் பார்க்க மறந்த சுற்றுச்சூழல் சார்ந்த மதிப்பீடுகள் குறித்துமே. அறிவியலை மறுப்பவர்கள் நாங்கள் அல்ல. அந்த அறிவியல் யாருக்கானது, எதற்கானது என்றே கேட்கிறோம். மக்களுக்கான அறிவியலை செய்யுங்கள், அதனை முடித்துவிட்டு அறிவியலாளர்களின் பெருமைக்கும் அங்கீகாரத்திற்குமான அறிவியலை கையிலெடுங்கள் என்கிறோம். எத்தகைய திட்டங்களை செயல்படுத்தினாலும் யாருக்கான திட்டங்களை செயல்படுத்த முனைந்தாலும் சுற்றுச்சூழல் குறித்து அக்கறை காட்டுங்கள் என்கிறோம். வருங்கால மக்களுக்கான இந்த பூமியை அழித்து நிகழ்கால அறிவியல் சாதனைகளை செய்யாதீர்கள் என்கிறோம்.

எங்களை போன்ற சராசரி தமிழர்களுக்கு சில கேள்விகள் உண்டு! அதனை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்ற நம்பிக்கையில் கேட்கிறோம். இதற்கு ஒரே வரியில், தேச விரோதி பட்டமோ, அறிவியல் எதிர்ப்பாளன் பட்டமோ, பிற தேச கைக்கூலி என கூட சொல்லும் உரிமை உங்களுக்கு (மேட்டிமைத்தன மனிதர்களுக்கு) உண்டு. நாங்கள் பழியேற்று விடை பெறுகிறோம்.

எங்கள் கேள்விகள்:

1) தேனியை விட்டால் இந்த ஆய்வை செய்ய வேறு இடமே இந்தியாவில் இல்லையா? குறைந்த பட்ச என் சிற்றறிவில், சில ஆய்வுக்கட்டுரைகளை படித்து புரிந்துகொண்டால் கூட இதனைவிட அடர்த்தியான பாறைகள் கொண்ட, இதே போன்ற மிக மிக பழமையான மலைகள் இந்தியாவில் தென்படுகிறதே! இந்தியாவின் பெரும் விஞ்ஞானிகளுக்கு கிடைக்கவில்லையா?

2) சிங்காராவில் சுற்றுச்சூழல் அனுமதியை இந்திய சுற்றுச்சூழல் துறையின் அமைச்சகம் மறுத்தபொழுது சொன்ன காரணங்கள், விலங்குகளுக்கு மட்டும்தானா, மனித நடமாட்டத்திற்கு இல்லையா?

3) இந்த திட்டத்தை வெறும் கட்டிடங்கள் என்ற அளவுகோலில்தான் நிர்ணயிக்க முடியுமா? இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெறும் கட்டிடத்திற்கு ஏன் அனுமதி மறுத்தது? தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் அனுமதி தராமல் பல ஆண்டுகள் இழுத்தடித்தது? வெறும் கட்டிடங்கள் கட்டும் திட்ட அளவுகோல் என்றால் சலீம் அலி நிறுவனத்தின் தாக்கீது அறிக்கை ஏன் தேவைப்பட்டது? அது இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்கீது வழங்கியது செல்லாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏன் சொன்னது? மதுரை உயர்நீதிமன்ற கிளையும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உங்கள் மொழியில் தேசத் துரோகிகளா? அல்லது அறிவியல் தெரியாத மூடர்களா?

4) சிங்காரா திட்ட முன்மொழிவில்,  “this can be compared to river valley project" - நீர்மின்சாரம் தயாரிப்பதற்காக ஆறுகளிலிருந்து/அணைகளிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்படும் திட்டத்தோடு ஒப்பிடலாம் என நீங்கள் தானே கூறியிருந்தீர்கள்? உங்களை போன்ற தேசபக்தர்கள் இப்படி மாறி மாறி பேசினால், எங்களை போன்ற சாதாரணமானவர்களுக்கு சந்தேகமே எழக்கூடாதா?

5) தேனியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பம் எழுதிக்கொடுத்த பொழுது, அணுமின் கழிவுகள் மேலாண்மை திட்டம் என்றும் 2017 தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தடை வழங்கிய பின் கட்டிங்களுக்கான திட்ட அளவுகோலில்தான் நடைமுறைப்படுத்த முடியும் என்ற நிலைக்கும் இடையில் 4 ஆண்டுகள் கழிந்துவிட்டதே! இப்பொழுது, தட்டச்சு பிழை என்கிறீர்களே! தட்டச்சு பிழை சரி செய்ய, எங்களின் இத்தனை போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், தேசிய பசுமைத் தீர்ப்பாய கண்டனங்கள் உங்களுக்கு தேவைப்பட்டதா?

6) நியூட்ரினோ ஆய்வகதிற்கான சுற்றுச்சூழல் தாக்கீடு மதீப்பீட்டு அறிக்கையில் பொட்டிபுரம் மலை பகுதியை வெடிவைத்து சுரங்கம் அமைக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு உண்டாகும் என்னும் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கூறப்பட்டுள்ளது. மிக பெரிய அளவில் இத்தகைய சுரங்கம் அமைக்கப்படும் போது அது குறித்த ஆய்வு ஆவசியமானது இல்லையா? கீண்ட கண்ட பகுதிகள் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தெளிவாக்கிறது:
“ No, Rapid Ecological Impact Assessment done by Salim Ali centre for Ornithology and Natural History, Coimbatore reads as: “Blasting is known to cause vibrations and serious damage to close-by landscape and may have impact on the geological make-up/ formation in the surroundings, a subject not under the scope of the present report.” [Rapid Ecological Impact Assessment, SACONH, Nov 2010, page.57]”

7) சுற்றுச்சூழல் மதிப்பீடுத்தான் செய்யத்தேவையில்லை, நீங்கள் ஆய்வகம் அமைப்பதாக சொல்லும் மலைப் பகுதியில் வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில் பெரும் காற்றும் வீசுமே, பல பல சிறு கற்கள் முதல் பெரும் புழுதியை சுமந்து வருமே (பொட்டிபுரம் மக்களை கேட்டுத்தெரிந்துகொள்ளவும்) அதனால் கட்டுமான பணிகளில் ஏற்பட இருக்கும் தொய்வு, பணியில் ஈடுபடுபவர்களுக்கான பாதுகாப்பு, கட்டுமானம் நிறைவடைந்ததும் இதே போன்ற பெரும் காற்றில் உங்கள் பாதுகாப்பு, இதனையாவது பரிசீலித்தீர்களா? எங்கள் குரல் உங்களுக்குமானதுதான். உங்கள் குரல்தான் எங்களுக்கானதாக இருந்தது இல்லை.

8) இந்த திட்டம் வான்வெளி நியூட்ரினோவை கண்டறிவதற்கும் பகுத்தாய்வு செய்வதற்கும் மட்டும்தான் என நீங்கள் 2014-2015 காலக்கட்டங்களில் தொடர்ந்து கூறிவந்தீர்கள். உங்களது ஆவணங்களை பார்க்கும் பொழுது, குறிப்பாக, Tata Institute of Fundamental Research மற்றும் இன்னபிற, அடுத்தக்கட்டமாக நிறைய ஆய்வுகளை செய்யும் திட்டம் உள்ளதாக வரையறுத்திருந்தீர்கள். அதனை ஏன் வெளியே சொல்லத் தயங்குகிறீர்கள் என அன்றைய சூழலில் கேட்ட பொழுது சாத்தியமில்லாத ஒன்று, கற்பனையான ஒன்று என்று எங்களை நோக்கி ஏளனமாக பதிலுரைத்தவர்கள், கடைசி வரை உங்கள் ஆவணத்தில் இருந்ததை மட்டுமே நாங்கள் சொன்னோம் என்பதை ஏற்றுக்கொள்ள தவிர்த்து வந்தீர்கள். இந்த முரண்பாடும் பதற்றமும் ஏன்? திட்டம் குறித்த முழுமையான தொலைநோக்கை திறந்த வெளியில் பேச அன்று ஏன் தயங்கினீர்கள்? திட்ட ஆதரவாளர்கள் இல்லை என மறுப்பதும், விஞ்ஞானிகள் பேசும்பொழுது ஆம் என்பதும் என மாறி மாறி பேசும்பொழுது கேள்விகளும் குழப்பங்களும் உருவாகும்தானே?

9) நாங்கள் எழுதியபொழுதும் எடுத்துரைத்தபொழுதும் எவையெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்பட்டதோ, அப்துகலாம் அவர்கள், 2015 ஜூலையில் தமிழில் கட்டுரைகள் எழுதிய பொழுது, அதனையே சாத்தியமான ஒன்று என கூறினார். என்ன அவர் ஆதரவு தளத்தில் சாத்தியமான ஒன்றாக எழுதினார், எங்கள் எதிர்தளத்தில் நின்று சாத்தியமான ஒன்றாக கூறினோம். நாங்கள் சொன்ன பொழுது அறிவியல் தெரியாதவர்கள் என்ற வசைச் சொல் வழங்கப்பட்டது, அப்துல்கலாமை அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாதுதானே!

10) ஒரு சராசரி அறிவியலாளனாக என் எதிர்ப்பார்ப்பு: இவ்வகையான திட்டத்திற்கு செலவிடப்படும் தொகையைக் காட்டிலும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான ஆற்றல், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல், மருத்துவ ஆய்வுகள் மற்றும் இன்னபிற அடிப்படை மற்றும் மக்களுக்கு நேரடியாகவும் உடனடியாகவும் பயன்படும் ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுதும் இந்தியாவின் கெளவரமும் மகுடமும் உலகளவில் உயர்ந்து நிற்கும்தான். அடிப்படை இயற்பியல் ஆராய்ச்சிகள் செய்யும் நாடுகள் ஏற்கனவே மேலே கூறியவைகளை செய்துக்காட்டியவை, செய்துக்கொண்டிருப்பவை. இன்றைய சூழலில், எது மக்களின் தேவையோ? எது நாட்டின் தேவையோ? அதுதான் அறிவியலாளன் பார்வையில் ஆராய்ச்சியாக இருக்க முடியும். அதற்காக, இத்திட்டங்களை அப்படியே விட்டுவிடவும் சொல்லவில்லை. முன்னுரிமை எது என்று பாருங்கள். அப்படியும் இது போன்ற திட்டங்களை செய்யத்தான் போகிறீர்கள் என்றால் குறைந்தது நம் நாட்டின் சட்டத்தை மதித்து மக்களின் குரலுக்கு செவிசாய்த்து முறையான வழிமுறைகளில் முறையான தொலைநோக்கு மற்றும் செயல்திட்டங்கள் வரையறுத்து செய்யுங்கள். உங்கள் தட்டச்சு பிழைகளுக்கு எல்லாம் 1500 கோடி ரூபாய் வீண் விரயமாக எங்கள் வரிப்பணத்தை வழங்க முடியாது.

இறுதியாக ஒன்றை சொல்ல வேண்டும். இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்திற்கு எதிரான விமர்சனம் வைப்பவர்களை எல்லாம் தேச விரோதிகள், அறிவியலுக்கு எதிரானவர்கள் என மிக எளிமையாக குற்றம் சாட்டிவிட்டு நகர்வதின் மூலம் அறிவியலுக்கும் பாமர மக்களுக்கும் தொடர்பில்லை என நிறுவும் அறிவியல் ஆதிக்க அகந்தை (Scientific Arrogance)! கடுமையான வார்த்தையாக நினைத்தால் கூட பரவாயில்லை. நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தை புரிய வைக்க இதனை விட எளிய வார்த்தை கிடைக்கவில்லை.!!!

முனைவர் விஜய் அசோகன்