சனி, 7 ஏப்ரல், 2018

நியூட்ரினோ திட்டமும் அறிவியல் ஆதிக்க அகந்தையும் : முனைவர் விஜய் அசோகன்.

நியூட்ரினோ திட்ட எதிர்ப்பும் அறிவியல் எதிர்ப்பும்:
இரண்டும் வெவ்வேறானவை!

அறிஞர் விசய் அசோகன் அவர்களது மிக முக்கியமான கட்டுரையிலிருந்து..

தேனியில் அமைப்பதாக சொல்லும் இந்தியாவின் அறிவியல் திட்டத்தை எதிர்க்கும் குரல் எத்தகையது? ஏன் உருவானது? என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் மிக எளிமையாக புறந்தள்ளிவிட்டு அறிவியல் மேட்டிமைத்தனத்தோடு இந்திய அதிகார வர்க்கமும் அறிவியல் வர்க்கமும் நடந்துகொள்வது இந்தியாவின் வருங்கால அறிவியல் மற்றும் வளர்ச்சிப்பாதையில் பெருங்கனவு கொண்ட என்னைப் போன்ற இளம் அறிவியலாளர்களுக்கு அதிர்ச்சியும் அயர்ச்சியும்தான் உருவாகிறது.

நியூட்ரினோ ஆய்வோ அல்லது வேறு ஏதேனும் அறிவியல் ஆய்வோ, பொதுவாகவே, பொதுமக்கள் எப்பொழுதும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாழ்விடமோ வாழ்வாதாரமோ பாதிக்கும் என நம்பினால் அது எத்தகைய நன்மை பயக்கும் திட்டமாக இருந்தாலும் கட்டாயம் எதிர்ப்பார்கள்.

அதே போல, பொதுமக்களை அப்படியெல்லாம் தூண்டிவிட்டெல்லாம் இந்தியாவின் ஆராய்ச்சியை எவராலும் தடுத்துவிட முடியாது. எங்களைப் போன்றவர்கள் (பூவுலகின் நண்பர்கள்) மக்களோடு சேர்ந்து குரல் கொடுக்கிறோமே தவிர எங்களால் மக்கள் குரல் கொடுக்கவில்லை என்பதை முதலில் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.

தீர்க்கமாக சொல்ல வேண்டுமென்றால், எங்களுடைய வாதமெல்லாம், திட்ட செயலாக்கத்தின் முதன் நிலையிலேயே ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்தும் அல்லது திட்டக்குழுவினர் பார்க்க மறந்த சுற்றுச்சூழல் சார்ந்த மதிப்பீடுகள் குறித்துமே. அறிவியலை மறுப்பவர்கள் நாங்கள் அல்ல. அந்த அறிவியல் யாருக்கானது, எதற்கானது என்றே கேட்கிறோம். மக்களுக்கான அறிவியலை செய்யுங்கள், அதனை முடித்துவிட்டு அறிவியலாளர்களின் பெருமைக்கும் அங்கீகாரத்திற்குமான அறிவியலை கையிலெடுங்கள் என்கிறோம். எத்தகைய திட்டங்களை செயல்படுத்தினாலும் யாருக்கான திட்டங்களை செயல்படுத்த முனைந்தாலும் சுற்றுச்சூழல் குறித்து அக்கறை காட்டுங்கள் என்கிறோம். வருங்கால மக்களுக்கான இந்த பூமியை அழித்து நிகழ்கால அறிவியல் சாதனைகளை செய்யாதீர்கள் என்கிறோம்.

எங்களை போன்ற சராசரி தமிழர்களுக்கு சில கேள்விகள் உண்டு! அதனை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்ற நம்பிக்கையில் கேட்கிறோம். இதற்கு ஒரே வரியில், தேச விரோதி பட்டமோ, அறிவியல் எதிர்ப்பாளன் பட்டமோ, பிற தேச கைக்கூலி என கூட சொல்லும் உரிமை உங்களுக்கு (மேட்டிமைத்தன மனிதர்களுக்கு) உண்டு. நாங்கள் பழியேற்று விடை பெறுகிறோம்.

எங்கள் கேள்விகள்:

1) தேனியை விட்டால் இந்த ஆய்வை செய்ய வேறு இடமே இந்தியாவில் இல்லையா? குறைந்த பட்ச என் சிற்றறிவில், சில ஆய்வுக்கட்டுரைகளை படித்து புரிந்துகொண்டால் கூட இதனைவிட அடர்த்தியான பாறைகள் கொண்ட, இதே போன்ற மிக மிக பழமையான மலைகள் இந்தியாவில் தென்படுகிறதே! இந்தியாவின் பெரும் விஞ்ஞானிகளுக்கு கிடைக்கவில்லையா?

2) சிங்காராவில் சுற்றுச்சூழல் அனுமதியை இந்திய சுற்றுச்சூழல் துறையின் அமைச்சகம் மறுத்தபொழுது சொன்ன காரணங்கள், விலங்குகளுக்கு மட்டும்தானா, மனித நடமாட்டத்திற்கு இல்லையா?

3) இந்த திட்டத்தை வெறும் கட்டிடங்கள் என்ற அளவுகோலில்தான் நிர்ணயிக்க முடியுமா? இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெறும் கட்டிடத்திற்கு ஏன் அனுமதி மறுத்தது? தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் அனுமதி தராமல் பல ஆண்டுகள் இழுத்தடித்தது? வெறும் கட்டிடங்கள் கட்டும் திட்ட அளவுகோல் என்றால் சலீம் அலி நிறுவனத்தின் தாக்கீது அறிக்கை ஏன் தேவைப்பட்டது? அது இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்கீது வழங்கியது செல்லாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏன் சொன்னது? மதுரை உயர்நீதிமன்ற கிளையும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உங்கள் மொழியில் தேசத் துரோகிகளா? அல்லது அறிவியல் தெரியாத மூடர்களா?

4) சிங்காரா திட்ட முன்மொழிவில்,  “this can be compared to river valley project" - நீர்மின்சாரம் தயாரிப்பதற்காக ஆறுகளிலிருந்து/அணைகளிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்படும் திட்டத்தோடு ஒப்பிடலாம் என நீங்கள் தானே கூறியிருந்தீர்கள்? உங்களை போன்ற தேசபக்தர்கள் இப்படி மாறி மாறி பேசினால், எங்களை போன்ற சாதாரணமானவர்களுக்கு சந்தேகமே எழக்கூடாதா?

5) தேனியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பம் எழுதிக்கொடுத்த பொழுது, அணுமின் கழிவுகள் மேலாண்மை திட்டம் என்றும் 2017 தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தடை வழங்கிய பின் கட்டிங்களுக்கான திட்ட அளவுகோலில்தான் நடைமுறைப்படுத்த முடியும் என்ற நிலைக்கும் இடையில் 4 ஆண்டுகள் கழிந்துவிட்டதே! இப்பொழுது, தட்டச்சு பிழை என்கிறீர்களே! தட்டச்சு பிழை சரி செய்ய, எங்களின் இத்தனை போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், தேசிய பசுமைத் தீர்ப்பாய கண்டனங்கள் உங்களுக்கு தேவைப்பட்டதா?

6) நியூட்ரினோ ஆய்வகதிற்கான சுற்றுச்சூழல் தாக்கீடு மதீப்பீட்டு அறிக்கையில் பொட்டிபுரம் மலை பகுதியை வெடிவைத்து சுரங்கம் அமைக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு உண்டாகும் என்னும் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கூறப்பட்டுள்ளது. மிக பெரிய அளவில் இத்தகைய சுரங்கம் அமைக்கப்படும் போது அது குறித்த ஆய்வு ஆவசியமானது இல்லையா? கீண்ட கண்ட பகுதிகள் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தெளிவாக்கிறது:
“ No, Rapid Ecological Impact Assessment done by Salim Ali centre for Ornithology and Natural History, Coimbatore reads as: “Blasting is known to cause vibrations and serious damage to close-by landscape and may have impact on the geological make-up/ formation in the surroundings, a subject not under the scope of the present report.” [Rapid Ecological Impact Assessment, SACONH, Nov 2010, page.57]”

7) சுற்றுச்சூழல் மதிப்பீடுத்தான் செய்யத்தேவையில்லை, நீங்கள் ஆய்வகம் அமைப்பதாக சொல்லும் மலைப் பகுதியில் வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில் பெரும் காற்றும் வீசுமே, பல பல சிறு கற்கள் முதல் பெரும் புழுதியை சுமந்து வருமே (பொட்டிபுரம் மக்களை கேட்டுத்தெரிந்துகொள்ளவும்) அதனால் கட்டுமான பணிகளில் ஏற்பட இருக்கும் தொய்வு, பணியில் ஈடுபடுபவர்களுக்கான பாதுகாப்பு, கட்டுமானம் நிறைவடைந்ததும் இதே போன்ற பெரும் காற்றில் உங்கள் பாதுகாப்பு, இதனையாவது பரிசீலித்தீர்களா? எங்கள் குரல் உங்களுக்குமானதுதான். உங்கள் குரல்தான் எங்களுக்கானதாக இருந்தது இல்லை.

8) இந்த திட்டம் வான்வெளி நியூட்ரினோவை கண்டறிவதற்கும் பகுத்தாய்வு செய்வதற்கும் மட்டும்தான் என நீங்கள் 2014-2015 காலக்கட்டங்களில் தொடர்ந்து கூறிவந்தீர்கள். உங்களது ஆவணங்களை பார்க்கும் பொழுது, குறிப்பாக, Tata Institute of Fundamental Research மற்றும் இன்னபிற, அடுத்தக்கட்டமாக நிறைய ஆய்வுகளை செய்யும் திட்டம் உள்ளதாக வரையறுத்திருந்தீர்கள். அதனை ஏன் வெளியே சொல்லத் தயங்குகிறீர்கள் என அன்றைய சூழலில் கேட்ட பொழுது சாத்தியமில்லாத ஒன்று, கற்பனையான ஒன்று என்று எங்களை நோக்கி ஏளனமாக பதிலுரைத்தவர்கள், கடைசி வரை உங்கள் ஆவணத்தில் இருந்ததை மட்டுமே நாங்கள் சொன்னோம் என்பதை ஏற்றுக்கொள்ள தவிர்த்து வந்தீர்கள். இந்த முரண்பாடும் பதற்றமும் ஏன்? திட்டம் குறித்த முழுமையான தொலைநோக்கை திறந்த வெளியில் பேச அன்று ஏன் தயங்கினீர்கள்? திட்ட ஆதரவாளர்கள் இல்லை என மறுப்பதும், விஞ்ஞானிகள் பேசும்பொழுது ஆம் என்பதும் என மாறி மாறி பேசும்பொழுது கேள்விகளும் குழப்பங்களும் உருவாகும்தானே?

9) நாங்கள் எழுதியபொழுதும் எடுத்துரைத்தபொழுதும் எவையெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்பட்டதோ, அப்துகலாம் அவர்கள், 2015 ஜூலையில் தமிழில் கட்டுரைகள் எழுதிய பொழுது, அதனையே சாத்தியமான ஒன்று என கூறினார். என்ன அவர் ஆதரவு தளத்தில் சாத்தியமான ஒன்றாக எழுதினார், எங்கள் எதிர்தளத்தில் நின்று சாத்தியமான ஒன்றாக கூறினோம். நாங்கள் சொன்ன பொழுது அறிவியல் தெரியாதவர்கள் என்ற வசைச் சொல் வழங்கப்பட்டது, அப்துல்கலாமை அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாதுதானே!

10) ஒரு சராசரி அறிவியலாளனாக என் எதிர்ப்பார்ப்பு: இவ்வகையான திட்டத்திற்கு செலவிடப்படும் தொகையைக் காட்டிலும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான ஆற்றல், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல், மருத்துவ ஆய்வுகள் மற்றும் இன்னபிற அடிப்படை மற்றும் மக்களுக்கு நேரடியாகவும் உடனடியாகவும் பயன்படும் ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுதும் இந்தியாவின் கெளவரமும் மகுடமும் உலகளவில் உயர்ந்து நிற்கும்தான். அடிப்படை இயற்பியல் ஆராய்ச்சிகள் செய்யும் நாடுகள் ஏற்கனவே மேலே கூறியவைகளை செய்துக்காட்டியவை, செய்துக்கொண்டிருப்பவை. இன்றைய சூழலில், எது மக்களின் தேவையோ? எது நாட்டின் தேவையோ? அதுதான் அறிவியலாளன் பார்வையில் ஆராய்ச்சியாக இருக்க முடியும். அதற்காக, இத்திட்டங்களை அப்படியே விட்டுவிடவும் சொல்லவில்லை. முன்னுரிமை எது என்று பாருங்கள். அப்படியும் இது போன்ற திட்டங்களை செய்யத்தான் போகிறீர்கள் என்றால் குறைந்தது நம் நாட்டின் சட்டத்தை மதித்து மக்களின் குரலுக்கு செவிசாய்த்து முறையான வழிமுறைகளில் முறையான தொலைநோக்கு மற்றும் செயல்திட்டங்கள் வரையறுத்து செய்யுங்கள். உங்கள் தட்டச்சு பிழைகளுக்கு எல்லாம் 1500 கோடி ரூபாய் வீண் விரயமாக எங்கள் வரிப்பணத்தை வழங்க முடியாது.

இறுதியாக ஒன்றை சொல்ல வேண்டும். இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்திற்கு எதிரான விமர்சனம் வைப்பவர்களை எல்லாம் தேச விரோதிகள், அறிவியலுக்கு எதிரானவர்கள் என மிக எளிமையாக குற்றம் சாட்டிவிட்டு நகர்வதின் மூலம் அறிவியலுக்கும் பாமர மக்களுக்கும் தொடர்பில்லை என நிறுவும் அறிவியல் ஆதிக்க அகந்தை (Scientific Arrogance)! கடுமையான வார்த்தையாக நினைத்தால் கூட பரவாயில்லை. நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தை புரிய வைக்க இதனை விட எளிய வார்த்தை கிடைக்கவில்லை.!!!

முனைவர் விஜய் அசோகன்

1 கருத்து:

  1. அறிவியலின் போர்வையில்,
    நலத்திட்டங்கள் என்று மக்களை
    ஏமாற்றும் ஏகாதிபத்தியத்தின்
    தோலுரிப்பு - நன்றிகள்.

    பதிலளிநீக்கு