திங்கள், 21 மே, 2018

நியூட்ரினோ : பாழடிக்கும் ஆய்வும் மனித குலப் பேரழிவும் :- பார்த்திபன்.ப

நியூட்ரினோ :
ஒரு தீர்வற்ற பணத்தை பாழடிக்கும் ஆய்வு மற்றும் மனிதகுலப் பேரழிவு !

அறிவியல் ஆய்வு எனும் பெயரில் நியூட்ரினோ திட்டத்தால் நிலமும் நீரும் மின்சாரமும் நிதியும் பாழ்பட்டுப் போவது மட்டுமல்ல; மனித குலத்துக்கே பேரழிவு ஏற்படுத்தப் போவதன் அறிகுறி என்பதை அறிவியல்பூர்வமாக இதைக் குறித்து விளக்கியிருக்கிறார் தோழர் பார்த்திபன் அவர்கள். அவரது கட்டுரை பின்வருமாறு:

சுருக்கம்:

நாம் நினைத்துக்கூட பார்க்கவியலாத இந்த பேரண்டத்தின் விண்மீன்களிலிருந்தும் சூரியனிலிருந்தும் வெளிப்படும் மிக நுண்ணிய துகள்தான் இந்த நியூட்ரினோ. இதன்  எடை மிகவும் சிறியது மற்றும் கணக்கில் கொள்ளக்கூடியதுமல்ல. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கிலோ அதாவது 1000 கிராம் சர்க்கரை வாங்குவதாகக்கொண்டால், அதில் ஒரேயொரு கிராம் சர்க்கரை எவ்வளவு இருக்கும்?  சுமார் பத்தாயிரம்  சர்கரைத்துகள்கள் இருக்கும் என்று தோராயமாக வைத்துக்கொண்டால்; அதே ஒரு கிராம் அளவுள்ள இந்த நியூட்ரினோ எனும் துகள் பல்லாயிரங்கோடிகள் இருக்கும் என்று பொருள்.
இப்பொழுது சொல்லுங்கள் இந்த நியூட்ரினோ துகளின் எடையை பார்ப்போம்? ஏறத்தாழ எடையற்ற தன்மையை கொண்ட அதே நேரத்தில் இந்த உலகிலேயே மிக குறைந்த எடையை கொண்ட துகள் இதுதான் என்க.

இந்த ஆராய்ச்சியின் அவசியமென்ன?

நியூட்ரினோ என்பது ஒளி வேகத்தில் பயணிக்கக்கூடியது அதாவது நொடிக்கு 30 கோடி மீட்டர்  வேகத்தில் பயணிக்கக்கூடியது என்று பொருள். ஒளி என்றதும் உங்களுக்கு சூரிய ஒளி நினைவிற்கு வருவது இயல்பு. சங்க காலத்தில் சூரியனின் நிழலையும் அதன் கோணங்களில் ஏற்படும்  போக்கையும் கணித்து பருவ நிலைகளை நம்முடைய பாட்டன்மார்கள் அறிந்துகொண்டார்களாம். பிறகுதான் மணற்கடியாரமும் வந்தது. சரி சூரிய ஒளி என்றதும் நமக்கு வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும் என்கிற பழமொழியும் வருகிறதல்லவா? அதாவது ஒரு டார்ச்சிலிருந்து புறப்படும் ஒளியாகட்டும் அல்லது சூரிய ஒளியாகட்டும்; ஒளி ஒருபோதும் கடினமான அதாவது சுவர் மரம் பாறை மலை போன்றவைகளைதாண்டி ஊடுறுவதில்லை என்பதை பசுமரத்தாணிபோல் பதிக. ஆனால் நமக்கு ஆல்பா பீட்டா காமா கதிர்களை தெரியும் அதனூடே காஸ்மிக் கதிர்களையும் தெரியும். ஆல்பா பீட்டா காமா கதிர்களை அளக்கமுடியும். ஆனால் இந்த காஸ்மிக் கதிர்களை அளக்கவும் முடியாது கண்டறியவும் முடியாது. ஏறத்தாழ இதே சூழலைக்கொண்டதுதான் நியூட்ரினோ துகள்.

 கோடானு கோடி நியூட்ரினோ துகள்கள்  ஒவ்வொரு நொடியிலும் நம்முடைய உடலில் புகுந்து ஊடுருவி செல்கின்றன இன்னும் சொல்லப்போனால் இந்த பூமி கிரகத்தின் மறுபக்கத்தையே சென்றடைகின்றன என்றால் அதன் ஊடுறுவல் சக்தியையும் வேகத்தையும் சற்றே  நினைத்துப்பாருங்கள்! இதை மட்டும் கண்டறிந்துவிட்டால் பூமிப்பந்து மட்டுமல்ல பல கோள்களை பற்றிய இரகசியங்களையும் அறிந்துகொள்ள ஏதுவாக அமையும் என்பதுதான் இந்த உலகளாவிய ஆய்வின் நோக்கம். இது மேற்குலக நாடுகளுக்கு சாத்தியம்; மேலும் ஆய்வு நடத்தி அதன் உண்மைத்தன்மைகளை திருடிக்கொண்டு;  நம்முடைய மண்ணையும் நீரையும் நிலத்தையும் மக்களையும் நாசம்  செய்துவிட்டு, வெள்ளைகாரன் ஓடிவிடுவான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இயற்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் நியூட்ரினோ கதிர்கள், பல கோடிக்கணக்கில் நொடி தோறும் பூமிக்கு வந்து கொண்டிருந்தாலும், அதனால் மனிதர்களுக்கோ பிற உயிரிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. காரணம், இயற்கையில் வெளிப்படும் நியூட்ரினோக்களின் ஆற்றல் 2.2 எலக்ட்ரான் வோல்ட் (ev) முதல் 15 மெகா எலக்ட்ரான் வோல்ட் (Mev) அளவு ஆற்றல் மட்டுமே கொண்டவை ஆகும். ஆனால் ஒரு ஏடிஎம் மெழினையே பாதுகாக்க துப்பில்லாத மற்றும் ஆதார் அட்டையில் ஆட்டு தலைகளை ஒட்டி கொடுக்கும் நமக்கு, இதுபோன்ற ஆய்வுகள் தேவையா? அல்லது முதலில் சாத்தியமா? யாருடைய பணத்தில்? என்பதே இங்கு கேள்வி.

ஆனால் இதனுடன் காஸ்மிக் கதிரும் பயணிப்பதால் எது நியூட்ரினோ எது காஸ்மிக் எனும் குழப்பத்தில் இருந்து இன்னும் விஞானிகள் தெளிவாகாத சூழலில்தான் 1956-ல் ஃபெடரிக் ரெய்னஸ் என்கிற அறிவியலாளர், நியூட்ரினோ துகள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபித்தார் இதற்காக பின்னர் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆனாலும் நியூட்ரினோ ஆய்வு இன்னும் உலகில் எங்கும் நிறைவுபெறவில்லை காரணம் அது அத்தனை எளிதல்ல. பூமியின் மேற்பரப்பில் இத்தகைய ஆய்வு பெரும் ஆபத்தை தோற்றுவிக்கும் என்பதால்  2,000 மீட்டர் ஆழத்தில் துளையிட்டு நியூட்ரினோ ஆய்வகத்தை அமெரிக்கா அன்டார்டிகா பனிப் பிரதேசத்தில் நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸோ 2,500 மீட்டர் கடலுக்கடியில் ஆய்வகத்தை நிறுவியுள்ளது. ஆனால் உலகமே அஞ்சும் இந்த சோதனையை  தேனி மாவட்டத்தில் பொட்டிபுரத்தில் நிலத்துக்கும் கீழே சுமார் 1.7 கி.மீ. ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்போகின்றனர் என்பதுடன் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய ஆய்வகம் என்க.

ஆனால் இங்கே இந்தியாவைப் பொறுத்தவரை  1965 ஆம் ஆண்டு  கர்நாடகத்திலுள்ள கோலார் தங்கவயல் சுரங்கங்களில் 2 கிலோ  மீட்டர் (2000 மீட்டர்)ஆழத்தில்  நியுட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டு, ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. 1980களில் தங்க வயல்களை அரசு மூடிவிட்ட பிறகு அந்த நியூட்ரினோ ஆய்வகமும் மூடப்பட்டது என ஐ.என்.ஓ தனது திட்ட அறிக்கையில் கூறியுள்ளது; ஆனாலும் அப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் இயங்க எந்தத் தடையும் இல்லாத நிலையில், ஆய்வகம் ஏன் மூடப்பட்டது என்பதற்கு அரசிடம் எந்த பதிலும் இல்லாத நிலையில்தான் இந்த புதிய பேரழிவுத்திட்டம் என்க.

திட்ட விளக்கம்:

ஆய்வகத்தை அணுக:

மதுரை to தேனி நகரம் (NH 44)  80 கி மீ
தேனி நகரம் to போடிநாயக்கனூர் (NH 44) 15 கி மீ
போடிநாயக்கனூர் to ரசிங்கபுரம் (SH100)  10 கி மீ
ரசிங்கபுரம் to டி புதுக்கோட்டை  (ODR)  8 கி மீ
டி புதுக்கோட்டை to நியூட்ரினோ ஆய்வகம்  2 கி மீ
மொத்தம் 115 கி மீ தொலைவு
குறிப்பு:
NH - தேசிய நெடுஞசாலை
SH - மாநில நெடுஞசாலை
ODR - இதர மாவட்ட சாலைகள்

பூமியின் ஒருபுறத்தில் நுழைந்து அடுத்தபுறத்தில் ஊடுருவும் சக்தியும் வேகத்தையும் பெற்றிருக்கும் நியூட்ரினோ  எனும் அதிவேக துகள், தேனி மாவட்டத்தில் உள்ள கடினப்பறைகளில் கட்டுப்படும்(எவ்வளவு பெரிய அறிவாளிகள்/ ஏமாற்றுப்பேர்வழிகள் பாருங்கள்) என்பதால், இந்தப்பகுதியை தெரிவுசெய்தோம் என்கிறார்கள் விஞ்ஞானிகளுடன் சேர்ந்துகொண்டு அரசியலாளர்கள்; அதனால் சுமார் 120 ஆண்டுகள் செயல்படக்கூடிய இந்த ஆய்வகத்திற்கு இந்திய அணுசக்தி கழகம் சுமார் 1500 கோடி ருபாய் திட்ட மதிப்பில் ஒப்புதல் அளித்துள்ளது. 1980 களில் தொடங்கி பல்வேறு ஒப்புதல்கள், நிராகரித்தல்கள் மீண்டும் ஒப்புதல்கள் என பட்டியல் நீள்வதால் ஒட்டுமொத்த ஆண்ட மற்றும் ஆளும் அரசுகளே இதற்கு காரணமாகின்றன என்பதால் நேராக உங்களை திட்டத்திற்குள் அழைத்துச்செல்கிறேன்.

பொட்டிபுர மலை உச்சியில் இருந்து சுமார் 1750 ஆடி ஆழத்திற்கு 132 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 20 மீட்டர் உயரமுள்ள குகையைத் தோண்டுவது; அதாவது 1000 டன் ஜெலட்டின் வெடிக் குச்சிகளை 800 நாட்கள் வெடிக்கச் செய்து, 800 டன் பாறைகளைப் பெயர்த்து  இந்த ஆய்வுகூடத்தை அமைக்க இருக்கிறார்கள். ICAL- Magnetized Iron Calorimeter detector எனும் செயற்கையாக உருவாக்கப்படும் மின்காந்த உணர்த்தி கருவியை இந்த ஆய்வகத்தினுள் பொறுத்த இருக்கிறார்கள்; இதன் எடை உலகிலேயே மிகப்பெரிய ஆய்வக அளவிலான “ஐம்பத்துநான்காயிரம் டன்கள்” என்றால் நினைத்துப்பாருங்கள். உலகின் மிகச்சிறிய நியூட்ரினோ  இத்தாலிய கிரான் காசோ ஆய்வகத்தின்  சோதனைகளால் அந்தப்பகுதிகளில் உள்ள நீரடுக்குகளையும் பாழானது மட்டுமன்றி  குடிநீரையும் பாழடித்ததையும் அந்தப்பகுதியே வாழ்வதற்கு ஏற்றதல்ல என்று மக்களால் புறக்கணித்ததையும் இந்த உலகம் நன்கறியும். அத்துடன் அங்குள்ள இத்தாலிய மக்களும் அறிவியலாளர்களும் விவசாயிகளும் சாமானியர்களும் அரசு ஊழியர்களும் ஒன்றுகூடி எதிர்த்ததன் விளைவாக 2011 ஆண்டு மூடப்பட்டு பின்பு பலப்பல ஒப்புதல்களின் பேரில் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இயங்கத்தொடங்கியது.

Magnetized Iron Calorimeter detector - ICAL Detector :

இது அசையாத்தன்மை கொண்ட அதிக எடையுள்ள மின்தேக்கிகள் போன்று செயல்பட மற்றும் நியூட்ரினோ துகள்களை சேகரிக்க ஏதுவாகவும்; ஒரு வலுவான செயற்கை முறை மின் காந்தப்புலம் கொண்ட மூன்று தொகுதிகளைக்கொண்டது. ஒவ்வொரு தொகுதியும் 16 மீட்டர் நீளமும் 16 மீட்டர் அகலமும் 14.5 மீட்டர் உயரமும் 54 மில்லி மீட்டர் மொத்தமும் கொண்ட இரும்பு தட்டுகள்,  RPC எனப்படும் glass resistive Plate Chamber மூலம் ஏறத்தாழ ஒரு பர்கர் கேக் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இரண்டு மீடியத்திற்கும் அதாவது RPC க்கு இடையில் மேலும் கீழும் 54 மில்லி மீட்டர் மொத்தம் கொண்ட இரும்பு தட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். மூன்று தொகுதிகளின் இரும்பு மற்றும் RPC அமைப்புகளின் மொத்த எடை 54,000 டன்கள்.

இது எண்பதாயிரம் ஆம்பியர்(80,000A) கரண்டையும்  4.5 (3 X 1.5 Tesla) டெஸ்லா மின்காந்த புல அடர்த்தியையும் உருவாக்கவல்ல 150 டன்கள் எடைகொண்ட காப்பர் காயிலைக்கொண்டு  நிறுவப்படவிருக்கும்   உலகின் மிகப்பெரிய ராட்சத மின்காந்த உணர்த்தி ஆகும். மூன்று தொகுதிகளும் அடுத்தடுத்து  இணைக்கப்பட்டிருப்பதால் இதன் மொத்த அளவு  48 மீட்டர் நீளமும் 16 மீட்டர் அகலமும் 14.5 மீட்டர் உயரமும் ஆகும். இது வெறும் மின்காந்த உணர்த்திக்கான இடம் மட்டுமே என்க.
16மீட்டர் நீளம் 16 மீட்டர் அகலம் 56 மில்லி மீட்டர் அடர்த்தி என சுமார் 168 இரும்பு தட்டுகள் குஜராத்திலில் இருக்கும் ESSAR நிறுவனம் உற்பத்தி செய்து அனுப்புகிறது. இதனுடன் காப்பர் காயிலை ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் மூலம் அல்லது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன. பல அச்சுகள் கொண்ட தாழ்ந்த ட்ரைலர் (multiple axis low bed trailer) மூலம் சிறப்பு பரிணாம சுமை ஒப்புதல் பெற்று (அதாவது ODC - over dimensional consignment approval என்று பொருள்)  8 plates in 32 ton trailer/trip என்கிற முறையில் சாலைவழியே அனுப்பப்படுகிறது.

நிலம்:

ஏறத்தாழ 57 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை பொட்டிபுரம் திட்ட Survey No. 4/1 போதுமானது என கருதி ஒதுக்கப்பட்டுள்ளது; இந்த நிலம் குகை அமைக்க ஆய்வக மற்றும் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு, தொழிலாளர்கள் தங்குவதற்கு இருப்பிடம்,  விருந்தினர் மாளிகை அமைக்க மற்றும் போக்குவரத்து கட்டுமான பொருள்களை சேமிக்க, ஒப்பந்ததாரர் அவர்களுடைய இருப்பிடங்களை தற்காலிகமாக கட்டுமானம் முடியும்வரை கட்டிக்கொள்ள என எல்லாவற்றிக்கும் சேர்த்தே  ஆகும். கழிவுகளை சேமிக்கவும் இந்த இடத்தில் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மலையடிவாரம் என்பதால் ஆய்வக போக்குவரத்து எளிமையாகிறது என்கிறார்கள்.

தண்ணீர் :

இந்தப்பகுதியில் ஏற்கனவே நிலத்தடி நீர் பஞ்சம் என்பதால் 15 கிலோமீட்டர் அருகில் இருக்கும் முல்லைப்பெரியாற்றிலிருந்து தருவதாக தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் (TWAD -Tamil Nadu water supply and Drainage  Board) ஒப்புதல் வழங்கியுள்ளது. கட்டுமானத்தின்போது ஒரு நாளைக்கு பத்தாயிரம் லிட்டர் தேவைப்படுகிறது. இந்த ஆய்வக இயக்கம் மற்றும் மனித தேவைகளுக்காக ஒரு நீர்த்தேக்க தொட்டியை கட்டவிருக்கிறார்கள் அதன் கொள்ளளவு 400 ஆயிரம் லிட்டர் ஆகும்.
சுமார் ஐந்து ஆண்டுகள் (வேலை நடைபெறும் நாட்கள் மட்டும் 5 ஆண்டுகள் என்று கணக்கில்கொள்ளபட்டுள்ளது) இந்த திட்டம் முடிவடையம் காலம் என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளைய தண்ணீர் தேவை சுமார் பத்தாயிரம் லிட்டர் என்க. அப்படியானால் ஒரு கொடியே எண்பத்தி இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் லிட்டர்(365 X 10000 X 5 = 1,82,50,000 liter) தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது 18,250 cu.m/ 5 years என்று பொருள். இதற்கு பிறகு சுமார் ஒரு நூறு ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்பட தண்ணீர் தேவைப்படுகிறது அதை கணக்கிடுவோமா?

காப்பர் காயில் கூலிங், கட்டுப்பட்டு அரை கூலிங், மனிதர்கள் கூலிங், தனிமனித பயன்பாடு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் தண்ணீர் இழப்பு, சிதறுதல் மூலம்  என ஒரு நாளைக்கு சுமார் 30, 000 லிட்டர் தண்ணீர் தேவை (நிச்சயமாக இதைவிட 10% அதிகம் தேவைப்படும் என்க ) என்று வைத்துக்கொண்டால் 100 ஆண்டுகளுக்கான தண்ணீர் 109 கோடியே அய்ம்பது இலட்சம் (30000 X 365 X 100 = 109, 50, 00,000 liter)லிட்டர்  அதாவது 10,95,000 cu.m/100 years(109, 50, 00,000/1000) அதாவது சுமார் 110 கோடி லிட்டர்  தண்ணீர்  என்று பொருள். இது பார்ப்பதற்கு சிறிய அளவுபோல் தெரிந்தாலும் சுரக்கவும் இறைக்கவும் சமமானது ஆதலால் விவசாயம் அழிவது உறுதி என்க!

மின்சாரம்:

1. குகைக்குள் தேவைப்படும் அளவு 1500 KW
2. மேற்பரப்பில் தேவைப்படும் அளவு 2500 KW
மொத்தம் 4000 KW இது மேலும் உயரும் என்பதால் 5000 KW ஆக கணக்கில் கொள்ளப்பட்டு 5 MVA, 110/11KV முதன்மை துணைமின் நிலையங்களை அமைக்கவும் மூன்று 2000 KVA, 11/0.433KV துணை மின் நிலையங்களை அமைக்கவும் திட்டம் வரைவு பெறப்பட்டுள்ளது.

மாதிரி மின்சார கணக்கீடு:

Proposed power required : 4000 KVA
Operating efficiency : 95%
% loading : @70% (assumed)
Power factor : 0.8 lag
(Assumed
 post compensation pf as 0.95 lag)
Contract demand : 5000KVA
Chargeable demand : 3750KVA
(Payable charge only @ 75% on contract demand)
Tariff : MD Tariff (KVA + Kwh)
Cost /KVA (Max. demand) : Rs. 350/KVA
Total MD cost/Annum : Rs.1, 57, 50,000/- ------------ (i)
Actual Loading : 2527KW
(4000 X 0.95 X 0.95 X 0.7)
Total average units/Annum : 22,136,520 Kwh
(8760 X 2527)
Cost/ unit : Rs. 5.5/-
Total unit cost/ annum : Rs. 12, 17, 50,860/- ------------ (II)
MD + Unit Cost : Add (I) + (II)
Total electricity cost/ annum: Rs.13, 75, 00,860/-
Say apprx. Electricity cost   : 14 Crore/ Annum INR --------- (III)
(தவிற்க முடியாத காரணத்தால் ஆங்கிலம் பயன்படுத்தபட்டுள்ளது பொறுத்தருள்க)

D - வடிவ சுரங்கம்:

800 முதல் 1000 டன் எடையுள்ள கடினப்பாறைகளின் அடர்த்தி பொதுவாக 1600 லிருந்து 3500 கிலோ/ கனமீட்டர் என்கிற அளவில் இருக்கும்; அதாவது பத்தாயிரம் முதல் 22 ஆயிரம் கன அடி அல்லது 285 முதல் 625 கன மீட்டர் பரப்பளவை குடைந்தெடுத்து சுரங்கம் அமைக்க வேண்டும் அதுவும் மலையின் 1750 மீட்டர் அடிப்பகுதி ஆழத்தில் என்றால் சற்று நினைத்துப்பாருங்கள். இதற்கு சுமார் 800 முதல் 1000 டன் வெடிபொருள் பயன்படுத்தி சமமான இடைவெளியில் வெடிக்கச்செய்து பாறை துகள்களை அப்புறப்படுத்தப்படவேண்டும். இதனால் ஏற்படும் அதிர்வு அலைகளின் மூலம் அருகில் இருக்கும் கட்டிடங்கள் அது அணைக்கட்டுகளே ஆனாலும் விரிசல் விடப்போவது உறுதி. இதனால் ஏற்படும் வெடிமருந்து விஷக்காற்று மற்றும் எளிதில் படியாத காற்றுடன் கலந்து மிதக்கும் நச்சு துகள்கள் அந்த பகுதியையே மாசுபடுத்தப்போவது உறுதி.

அதுமட்டுமல்ல அந்த வெடி சத்தத்தில் அங்கே வாழும் அனைத்து உயிரினங்களின் நிலையை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். மனித சாதாரண சராசரி உலகால் உறுதி செய்யப்பட்ட சத்தம் வெறும் 80 டெசிபல் மட்டுமே. டெல்லி பம்பாய் போன்ற மாநகரங்களில் 90 டெசிபெல் முதல் 100 டெசிபெல் வரை மாற வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நியூட்ரினோ ஜெலட்டின் வெடி மூலம் பிளக்கப்படும் பாறை மற்றும் வெடி சத்தத்தின் அளவு சுமார் 200 முதல் 300 டெசிபல் இருக்கும் என்றால் மீதியை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். இவ்வளவு சத்ததிதில் மனிதன் மட்டுமல்ல எந்த உயிரினமும் வாழமுடியாது என்பது நிதர்சனம். இந்த திட்டம் தொடங்கியபோது 1500 கோடி என்று மதிப்பிடப்பட்டது ஆனால் இது முடிவுறும் நிலையில் சுமார் பத்தாயிரம் கோடியை தாண்டும் மற்றும் 120 ஆண்டுகளுக்காவுக்கான பராமரிப்பு செலவும் கூடிவிடும் என்க.

இனி நமது ஐயங்கள் பின்வருமாறு.........

1. சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுகள் தொடரும் அணுக்கழிவையே பாதுகாக்க முடியாத மற்றும் அதை பரம ரகசியமாகவே வைத்திருக்கும் நாம் எப்படி இந்த ஆபத்து மிகுந்த நியூட்ரினோ ஆய்வை தொடரப்போகிறோம்? எந்த ஒரு இம்மாதிரியான திட்டத்தையும் மக்களிடம் விவாதிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் சரி என்று ஒப்புதல் அளித்தால் ஒழிய எப்படி தொடங்குவது மேலும் அது  சட்ட விரோதமல்லவா?

2.  Drill jumbos,  Air compressors,  Mobile cranes, Tippers, Pump trucks, Jack hammers, Road rollers, Gas welding units,  Dewatering pumps with motors,  Excavators/Loaders/backhoes,  Pneumatic rock drills,  Shotcreting machine,  Grout pumps,  Dozers,  Batch plant,  Ventilation fans மற்றும்  Hand winches என எல்லாவகையான இயந்திரங்களும் இந்த திட்டம் முடிவடையும்வரை தொடர்ந்து சமமான இடைவெளிவிட்டு தொடர்ந்து மாற்றி மாற்றி இயங்கிக்கொண்டிருக்கும்பொழுது;  எவ்வளவு சத்தம், சாலை விபத்துகள், சாலையில் நெரிசல்கள், சுவாசக்காற்றில் மாசு என இந்த இடமே கிட்டத்தட்ட ஒரு புழுதிப்புயல் போன்று பெருத்த சத்தத்துடன் காணப்படும்.

3. இவ்வளவு மலையளவு பிளக்கப்பட்ட பாறைத்துகள்களை எப்படி எங்கு நிரப்பப்போகிறீர்கள் அதன் உயரம் என்ன? மேலும் இது சுரங்கம் தோண்டும்  பணிக்கு நேர் எதிரானது என்பதால், தோண்டப்பட்ட மண்ணை பாறைத்துகள்களை பாறைத்துண்டுகளை எப்படி படியவைக்கப்போகிறீர்கள்? அதன் அழுத்தம் என்ன?

4. இவ்வளவு கோடிக்கணக்கில் மின்சாரத்தை நூறு ஆண்டுகளுக்கு வீணடிப்பது ஏற்புடையதா? ஆம் என்றால் எதனடிப்படையில் யாருக்காக? ஒருவேளை திட்டம் வெற்றிபெற்றுவிட்டால் அதன் உரிமம் யாருடையது? மேலும் அதை வைத்து அடுத்தடுத்த வேற்றுகிரக ஆய்வை நடத்தும் அளவிற்கு இந்திய விண்வெளிக்கழகம் தகுதிபெற்றுவிட்டதா? யாரை ஏமாற்ற மக்கள் பணத்தை பாழடிக்கும் ஆபத்து மிகுந்த இந்த நாடகம்?

5. விவசாயிகள் தண்ணீரில்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் ஒருபுறம் அம்மணமாக போராடுகிறார்கள், இந்நிலையில் நூறு வருடத்திற்கு இவ்வளவு தண்ணீரை பாழடிப்பது தகுமா?

6. சுரங்கத்தினுள் திடீரென்று மின்சாரம் போய்விட்டால் வெறும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் அவசர மின்சாரம் வரவேண்டும்; அதன்மூலம் காற்று மீண்டும் நிரப்பப்படவேண்டும் மற்றும் வெவ்வேறு  கூலிங் சாதனங்களை இயக்கப்படவேண்டும்; குறிப்பாக ICAL குளிர்விக்கப்படவேண்டும் இல்லையேல் வெடிப்பது உறுதி. உள்ளே இருக்கும் மனிதர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமில்லை என்க.

7. உலகமே தடை செய்யப்பட்ட வாயுக்களை காப்பர் காயிலை குளிர்விக்க பயன்படுத்தவேண்டி பயன்படுத்தப்படப்போகிறீர்கள். அந்த ஆபத்து நிறைந்த வாயுக்களை சுமார் 200 பார் (200 Kg/sq.cm) அழுத்தத்தில் சிலிண்டர்கள் மூலம் சேமிக்கவுள்ளீர்கள். இதற்கான ஆபத்துக்கால பயிற்சி பற்றிய அறிவுறுத்தல்களை அந்தப்பகுதி மக்களுக்கு அறிவிக்கப்பட்டதா?

8. இந்த ஆய்வு முடிவுகளை கண்காணிக்கப்பபோகிற நிறுவனம் எது? முடிவுகள் எவ்வளவு பாதுகாப்பு உறுதித்தன்மை நிறைந்தது? அப்படியெனில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்கு இதில்  என்ன விழுக்காடு மற்றும் நிர்வாகம் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கும்?

9. இந்த திட்டத்தின் மூலம் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காது மட்டுமன்றி அதையும் பெருநிறுவனங்களே குத்தகை எடுத்துக்கொள்ளும் மின்சாரம் உள்பட என்றால்; இதில் நமக்கு என்ன பயன்?

10. இவ்வளவு நிலத்தடி நீரை இயற்கையை மண்ணை வளங்களை உயிரினங்களை கட்டிடங்களை காற்றை மாசுபடுத்தப்போகும் உங்களின் கார்பன் உமிழ்வின் (carbon credit) அளவு மற்றும் அதை சமன் செய்யும் மாற்று திட்டம் என்ன?

இன்னமும் கேட்பேன்.....

தோழமையுடன்,
பார்த்திபன் ப
20/05/2018

செவ்வாய், 1 மே, 2018

அரிவாள் சுத்தியல் எனும் குறியீடு.


அரிவாள்
உழவர்களையும்,
சுத்தியல் தொழிலாளர்களையும்
அடையாளப்படுத்துகிற
பாட்டாளி வர்க்கத்தின் குறியீடு.
உழவரின் ஈகத்துக்கும்
தொழிலாளர் ஈகத்துக்கும்
மே நாள் வீரவணக்கம்.

பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம்!

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்!
பாரில் கடையரே எழுங்கள் வீறுகொண்டு தோழர்காள்!

கொட்டு முரசு கண்ட
நம் முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட...

பண்டையப் பழக்கமென்னும் சங்கிலி அறுந்தது
பாடுவீர் சுயேச்சை கீதம் விடுதலை பிறந்தது.

இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திடும்;
இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகம் ஆகிடும்...

முற்றிலும் தெளிந்த
முடிவான போரிதாகுமே
முக மலர்ச்சியோடு
உயிர்த் தியாகம் செய்ய நில்லுமே.

பற்று கொண்ட மனித சாதி யாவும் ஒன்றதாகுமே,
மடிமிசைப் பிரித்த
தேச பாசையும்
ஓர் ஐக்கியமே...

பாரதோ மமதையின்
சிகரத் திறுமாந்துமே,
பார்க்கிறான் சுரங்கமில் நிலத்தின் முதலாளியே.

கூறிடில் அன்னார்
சரித்திரத்திலொன்று கண்டதே,
கொடுமைசெய்து
உழைப்பின் பலனைக் கொள்ளை கொண்டு நின்றதே...

மக்களின் உழைப்பெலாம் மறைத்து வைத்து ஒரு சிலர்,
பொக்கிசங்களில் கிடந்து புரளுகின்ற தறிகுவீர்.

இக்கணம் அதைத்
திரும்பக் கேட்பதென்ன குற்றமோ?
இல்லை,
நாம் நமக்குரிய
பங்கைக் காட்டிக் கேட்கிறோம்...

தொன்று தொட்டுழைத்த விவசாயி தொழிலாளி
நாம் தோழராகினோம்.

உழைப்போர் யாவரேனும்
ஓர் குலம்,
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச் சொல்லுவோம்.
உழைக்கும் மக்கள் யாவருக்கும் சொந்தமிந்த நிலமெலாம்...

வேலைசெய்யக் கூலி உண்டு வீனர்கட்கிங் கிடமில்லை.
வேதம் ஓதி உடல் வளர்க்கும் காதகர்க்கிங் கிடமில்லை.

நாளை எண்ணி வட்டிசேர்க்கும் ஞமலிகட்கிங் கிடமில்லை.
நாம் உணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங் கிடமில்லை...

பாடுபட்டுழைத்தவர் நிணத்தைத் தின்ற கழுகுகள்
பறந்தொழிந்து போதல் திண்ணம் பாரும்
சில நாளதில்.

காடு வெட்டி மலையுடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்!
கவலையற்ற போக வாழ்வு சகலருக்குண்டாக்குவோம்...

பாட்டாளி வர்க்க ஈகியர்களுக்கு வீரவணக்கம்!!

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

நியூட்ரினோ திட்டம் : விலை கொடுத்து வாங்கும் பேராபத்து: முனைவர் விஜய் அசோகன்


இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மிக சமீபத்திய கண்டுபிடிப்பான கடவுள் துகள் இவ்வாய்வுகளை ஒரு படி முன்னேற செய்திருந்தாலும், நிலையான முடிவுகளை நவீன அறிவியல் உலகம் இன்னும் எட்டவில்லை என்றே சொல்லலாம். பல்வேறு முனைகளில் இதுதொடர்பான இயற்பியல் ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது. அதில் ஒரு நிலைதான் நியூட்ரினோ ஆய்வு மையங்கள். இந்த ஆய்வு மையங்கள், உலகெங்கிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. பல்வேறு அரசுகளும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி கூடங்களும் பெரிதளவில் ஒருங்கிணைந்து வருவது இதுவே முதன்முறை எனலாம்.

ஆனால், இந்தியாவில் செயற்படுத்தப்பட இருக்கிற நியூட்ரினோ திட்டம் தொடர்பாக அச்சம் ஏற்படுத்தக்கூடிய செய்திகள் ஏராளம். இத்திட்டம் அறிவியல் உலகில் எவ்வித வெற்றியை ஈட்டித் தர இருக்கிறது என்பதற்கு அப்பால், தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் முழுமையாக அழித்தொழிக்க இருக்கிறது என்பது மட்டும் உண்மை. அமெரிக்க ஏகதிப்பத்தியத்தின் ஏவல் ஆளாகவே மாறிவிட்ட இந்தியத் துணைக்கண்டம் அமெரிக்காவின் செயல்பாட்டிற்கும் அமெரிக்க அறிவியல் கூடத்திற்கும் அடியாள் வேலை செய்யத்தான் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை கட்டவிருக்கிறது. எப்படி என்பதனையும் அதன் விளைவுகளையும் நமது மண்ணிற்கு எவ்வகையில் சவாலாக இருக்கப்போகிறது என்பதனையும் தொடர்ச்சியாக பார்ப்போம். நியூட்ரினோ திட்டம் எவ்வகையில் ஆபத்து என்பதனை நமது மக்களுக்கு நாம் புரிய வைத்தால்தான் அதனை எதிர்க்கும் வல்லமையை நாம் பெற முடியும். நியூட்ரினோ திட்டம் தொடர்பாக செல்வதற்கு முன் சிறிது இயற்பியல் புரிதல் தேவை என நினைக்கின்றேன்.

அணு மற்றும் அணுத்துகள்கள்:

இவ்வுலகில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பொருள்கள் (Matter) எனலாம். இப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. ஒருகாலக்கட்டத்தில் அணுவே இவ்வுலகில் இருக்கும் இறுதித்துகள் என நம்பப்பட்டது. ‘அணு’ (Atom) என்பதற்கான விளக்கம் (லத்தீன மொழியில்) ‘பிளக்க முடியாதது’ என்பதாகும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழுலகில், தமிழிலக்கியத்தில் கண்ணுக்கு புலப்படாத சின்னஞ்சிறு துகளுக்கு ‘அணு’ என்ற பெயர் இருந்து வந்துள்ளதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.

இயற்பியல் ஆய்வுகள் தொடரத் தொடர, அணுவும், எலக்ட்ரான் (electron), புரோட்டான் (proton), நியூட்ரான் (neutron) ஆகியவைகளால் ஆனவை எனக் கண்டறியப்பட்டது. இவைகளை அணுத் துகள்கள் (Atomic particles) எனக் கூறுவர். மேலும், புரோட்டானும் நியூட்ரானும் ஒன்று சேர்த்து இருக்கும் பகுதி அணுக்கரு (Nuclei) என சொல்கிறது அறிவியல். அணுவினுள் பல்வேறு உட்துகள்கள் (Subatomic particles) இருப்பதாகவும் பிறகு கண்டறியப்பட்டது. அணு உட்துகள்களை மூலத்துகள் (எதனாலும் உருவாக்கப்படாதவை) மற்றும் கலவைத் துகள்கள் எனப் பிரித்தனர். எலக்ட்ரான் ஒரு மூலத்துகள் ஆகும். அதில் எதிர்மறை மின்னூட்டம் (negative charge) உள்ளது. புரோட்டானில் நேர்மறை மின்னூட்டம் (positive charge) உள்ளது. நியூட்ரான் எவ்விதமான மின்னூட்டமும் இல்லாத அணுத்துகள் ஆகும். முதலில் நியூட்ரினோவிற்கும் நியூட்ரான் என்றுதான் பெயரே இருந்தது. இரண்டையும் வேறுபடுத்தவே பிற்காலத்தில் இத்தாலிய மொழியில் நியூட்ரினோ என்று பெயரை மாற்றியமைத்தனர். இத்தாலிய மொழியில் அதற்கான அர்த்தம் “A little neutral one” என்பதாகும்.

நியூட்ரினோ – பிசாசு துகள்:

சூரியனில் இருந்து பூமியை நோக்கி பொழிந்து வரும் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் ஒரு துகளே நியூட்ரினோ. அது வானில் இருந்து இப்புவி நோக்கி பெரு மழையாக நம் கண்ணுக்கு புலப்படாத வண்ணம் பொழிந்துகொண்டேதான் இருக்கிறது. நமது உடலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் 60 லட்சம் நீயூட்ரினோ துகள்கள் ஊடுருவிக்கொண்டே இருக்கிறது. இயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களால் எவ்வித பாதகமும் இல்லை. அது எப்பொருளுடனும் எவ்வித வினையும் புரியாது. அது இவ்வுலகில் சிறு துரும்பைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காது. நமது கண்ணுக்கு எவ்விதம் அது புலப்படவே படாதோ அதுபோலத்தான் அதன் பாதையில் நமது மண்ணில் எப்பொருளுக்கும் அத்துகளுக்கு தடங்கல் ஏற்படுத்தக்கூடிய வல்லமை இல்லை என சொல்லலாம். இருக்கும் அணுத்துகள்களிலேயே மிக குறைந்த நிறை கொண்டதான இந்நியூட்ரினோ ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடிய வல்லமை பெற்றதனால் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. படிப்பதற்கு இவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? இந்நல்லப்பிள்ளைக்கு அறிவியல் உலகம் முதலில் வைத்த செல்லப்பெயர் ‘பிசாசுத் துகள்’

ஆற்றல் அழியா விதியின் படி (Law of conservation of energy) ஆற்றல் என்பது புதிதாக உருவாகாது, அது அழியவும் அழியாது. ஆனால், ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றம் அடையும். ஒரு வினையின் தொடக்கத்தில் இருக்கும் ஆற்றல், இயங்குவிசை என அனைத்தும் வினை நிறைவுறும் தருவாயிலும் நிலைத்திருக்கும். இயற்பியலாளர் வுல்ஃகாங்க் பௌலி (Wolfgang Pauli) 1930 இல் பீட்டாதேய்வு (Beta Decay) தொடர்பாக ஆய்வுகளை செய்யும்பொழுது வினை நிறைவில் கிடைக்கப்பெற்ற ஆற்றலிலும் (energy) இயங்குவிசையிலும் (momentum) மாற்றம் இருந்தது. அதாவது அழிவு இருந்தது. இது இயற்பியலின் ஆற்றல் அழியா விதியின்படி முரண்பாடானதாக பார்க்கப்பட்டது. பௌலி, வினையின் இறுதியில் கண்டுபிடிக்க முடியாத ஆற்றலையும் இயங்குவிசையையும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத உட்துகள் ஒன்று கொண்டிருக்கிறது என வரையறுத்தார். ஆனால், அந்த உட்துகளை சோதனை வழியாக நிறுவ முடியாமல் கோட்பாட்டு முறையிலேயே உணர்ந்து வந்தனர். அந்த உட்துகளில் மின்னூட்டம் இல்லாத நிலையில் இருப்பதை அறிந்து, பௌலி அதற்கு நியூட்ரினோ என பெயரிட்டார். அடுத்ததாக வந்த 26 வருடங்கள் நியூட்ரினோவை சோதனை வழியாக கண்டுபிடிக்க முடியாமலேயே இயற்பியலாளர்கள் தவித்து வந்தனர். ஹிக்ஸ் போசானிற்கு ‘கடவுள் துகள்’ என பெயரிட்டது போல நியூட்ரினோவிற்கு ‘பிசாசு துகள்’ என அறிவியல் உலகம் பெயரிட்டது.

இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம்:

1965 இல் வான்வெளியில் இருந்து வந்துக்கொண்டிருந்த நியூட்ரினோவை (Atmospheric neutrino) உலகிலேயே முதன்முறையாக, டாடா ஆராய்ச்சி கழகமும் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகமும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து கோலார் தங்க வயலில் நடந்த ஆய்வில் பதிவு செய்தனர். அப்பொழுதிலிருந்தே இந்திய இயற்பியலாளர்கள் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் ஆவல் இருந்து வந்தது. 1989 இல் இருந்து அதற்கான திட்டமிடல் இருந்து வந்தாலும், பல்வேறு காரணங்களால் காலம் இழுத்துக்கொண்டே சென்றது. 2002 நியூட்ரினோ ஆய்விற்காக நோபல் பரிசு கிடைத்ததை அடுத்து, இந்திய அணுசக்தி கழகமும் (Department of atomic energy) இத்திட்டத்தில் முழுவீச்சில் இறங்கியதை அடுத்து இந்திய துணைக்கண்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதற்கு பின்னனியில் இருக்கும் அமெரிக்க கொள்கையை விரிவாக பிறகு பார்ப்போம்.

சிங்காராவில் அமைப்பதாக இருந்த இந்த ஆய்வு மையத்திற்கு 2009 இல் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி மறுத்தது. அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “நியூட்ரினோ ஆய்வு மையத்திற்காக அனுமதி கேட்ட சிங்காரா பகுதிக்கு அருகிலேயே முதுமலை வன சரணாலயம் அமைந்திருக்கிறது. அரிதிலும் அரிதான புலி வகைகள் வாழும் பந்திப்பூர் மற்றும் முதுமலை பகுதிக்கு அருகில் இத்தகைய ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்க முடியாது” என கூறினார். ஆனால், தேனி மாவட்டத்தில் இருக்கும் சுருளி அருவிக்கு அருகாமையில் அமைத்து கொள்வதாக இருந்தால் அமைச்சகம் அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறது என்றும் பரிந்துரைத்திருந்தார்.

அதன்பிறகு இதுதொடர்பாக, இந்திய நியூட்ரினோ ஆய்வு மையத்தின் பேச்சாளரும் டாடா ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்தவருமான மொண்டால் அவர்கள் எழுதிய கடிதத்தில், “சுருளி அருவிக்கு அருகாமையில் அடர்ந்த வனப்பகுதி இருப்பதால், ஆய்வு மையம் அமைக்க வேண்டுமானால், பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட வேண்டும். அதற்கான முழுமையான அனுமதியையும் ஒத்துழைப்பையும் வழங்கினால் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம்” என பதிலுரைத்திருந்தார்.

தொடர்ச்சியாக எழுதிய கடிதத்தில் மொண்டால் அவர்கள், “சுருளியாறுக்கு 30 கிமீ தொலைவில் இருக்கும் தேவாரம் பகுதியில் ஆய்வு மையம் அமைக்க விரும்புவதாகவும் ஆனால், அங்கே ஆய்வு மையத்திற்கு தேவையான நீர் வசதி பெரும் பிரச்சனையாக இருக்கும். அதனை சரி செய்ய அரசு முன்வந்தால் திட்டத்தினை செயல்படுத்துவதில் எங்களுக்கு சிரமம் இருக்காது” என கூறினார்.

பரிசீலிக்கப்பட்ட மூன்று இடங்களிலும் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பதனை முதலில் பார்ப்போம். நியூட்ரினோ ஏனைய அணுத்துகள்கள் போல எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதிநவீன கருவிகளைக்கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தினாலும் மிக குறைந்த அளவிலான நியூட்ரினோவை மட்டுமே பதிவு செய்ய முடியும். அதன் இயற்பியல் தன்மை அப்படியானது. மேலும், நியூட்ரினோ துகளை பதிவு செய்யும் பொழுது ஏனைய அணுத்துகள்கள், காஸ்மிக் கதிர்களும் பதிவாக வாய்ப்புள்ளதால் ஏனையவைகள் முற்றிலுமாக வடிகட்டப்பட வேண்டும்.

நியூட்ரினோவை மட்டும் பதிவு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் 1 கிலோ மீட்டர் அளவுள்ள மலைப்பகுதி தேவை. அதனால்தான் தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையை தேர்வு செய்திருக்கிறார்கள் இதன்படி மலையின் உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகை அமைக்கப்பட்டு உலகத்திலேயே மிகப் பெரிய அளவுள்ள காந்தமையப்படுத்தப்பட்ட இரும்பு வைக்கப்பட்டு அதனிடையே மின் தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் ஒன்றோடொன்று இடைவெளியில் விட்டு வைக்கப்படும். காந்தத்தின் செயல்பாட்டினையும் மின் தட்டு அறைகளின் செயல்பாட்டினையும் தூண்டுதல் செய்து அதற்கிடையே நியூட்ரினோவை ஆய்வு செய்யப்போகிறார்கள்.

ஆக, இயற்பியலாளர்களை பொருத்தவரை அவர்களுக்கு பொருத்தமான இடம் இத்தகையதுதான். அதற்காக இந்தியாவிலேயே இந்த ஒரு பகுதிதான் இத்தகைய தன்மையுடையது என்பது இல்லை. ஏனைய இடங்களில் வைத்தால் மக்கள் போராட்டம் இருக்கும். தமிழகத்தைப் பொருத்தவரை அதனை தடுக்க பல வழிகள் இருக்கிறது என்ற திமிர் இந்திய துணைக்கண்டத்தின் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கிறது.

ஆனால் நாம் பகுத்துணர வேண்டிய செய்திகள் இதில் ஏராளம்.

முதுமலை காடுகளில் அரிதிலும் அரிதான வன விலங்குகள் வாழ்வது அணுசக்தி கழகத்திற்கும் டாடா ஆராய்ச்சி கழகத்திற்கும் சுற்றுச்சூழல் துறை சொல்லும் வரை தெரியாதா? இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, வன விலங்குகள் துடைத்தெறியப்பட்டு, அதனால் ஏற்படும் ஏனைய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் வந்தாலும் ஆய்வுத் திட்டமே முக்கியம் என கருதும் குறுகிய மனம் படைத்தவர்கள்தான் இவர்கள்.மொண்டால் எழுதிய கடிதத்தில் சுருளியாறு பகுதிகள் காடுகளை அழிக்க அரசின் உதவியையே நாடுகிறார். இதுபோன்ற பயங்கரவாத சிந்தனை உலகத்தில் எங்குமே நடக்காது. ஒரு அரசிடம் ஒரு மனிதர் வெளிப்படையாக இயற்கை வளங்களை அழிக்க கோர முடியுமா? இந்நேரம் அவர் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் அல்லவா அடைக்கப்பட்டிருக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க போராடும் மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் இந்திய துணை கண்ட அரசு காடுகளை அழிக்கக் கோரும் நபரை கெளரவப்பதவி கொடுத்து வைத்திருக்கிறது.நீரே இல்லாத பகுதியாயினும் 30 கிமீக்கு நீரை எடுத்துச்செல்லும் குழாய்களை உடனடியாக அமைக்க ஏற்பாடு செய்கிறார்கள். காவிரி குடிநீரை ஹொகேனக்கல் பகுதியில் இருந்து பென்னாகரம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக வெறும் 18 கிமீ எடுத்து வர முடியாமல் 20 வருடங்களாக வக்கற்று நிற்கும் அரச நிறுவனங்கள் 10-20 அறிவியலாளர்களின் சாதனைக்காக அனைத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த இருப்பது, இந்திய துணைக்கண்டத்தின் அரசு மக்களுக்கானதா? அல்லது அதிகாரிகளுக்கானதா? ஆராய்ச்சி நிறுவனங்களுக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.புலிகளும், யானைகளும் நடமாடும் பகுதி/பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என கூறி நீலகிரியில் திட்டம் செயல்படுத்த அனுமதி மறுத்த சுற்றுச்சூழல் துறை, மனிதர்கள் வாழும் தேனி பகுதியில் திட்டம் செயல்படுத்த அனுமதியளித்திருக்கிறது. விலங்குகளை விடவா மனிதர்கள் மதிப்பற்றவர்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பு:

இத்திட்டத்தால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருகிறது. “மேற்குத் தொடர்ச்சி மலை என்பது, பல்லுயிரியல் சூழலில் முக்கியமான பகுதி. நிறைய தமிழ்நாட்டு நதிகளின் பிறப்பிடமும் கூட. இங்கு நிறைய அணைகள் அருகருகே இருக்கிறது. கிட்டத்தட்ட 10ற்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன. பூமிக்குள் சுரங்கம் தோண்டும்பொழுது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளை தகர்க்க வேண்டும். அது அணைகளுக்கும் மலைகளுக்கும் காடுகளுக்கும் அப்பகுதியில் வாழும் பல் உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்” என கூறுகின்றனர்.

அதேபோன்று, இத்திட்டம் அமைக்கப்போவதாக சொல்லுகின்ற 34 ஹெக்டேர் பகுதி, மக்களோட வாழ்வாதாரமா இருக்கிற கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் என சமீபத்திய ஆன்ந்த விகடன் கட்டுரை தெரிவிக்கிறது. 2.5 கிமீ சுரங்கம் தோண்டும் பொழுது உருவாகும் தூசி மண்டலம், அந்த பகுதியை கடுமையாக மாசுப்படுத்தும். உடைக்கப்பட்ட பாறைகளை அள்ளிக்கொண்டு நூற்றுக்கணக்கான சுமையுந்துகள் குறுக்கும் நெடுக்குமாக பாடும் பொழுது அந்தப் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பல மாதங்களுக்கு பாதிக்கும்.

மேலும், இது குறித்தான புரிதல் ஏற்படுத்தும் விதமாக அறிவியலாளர் வி.டி. பத்மநாபன் அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது கட்டுரைகளில், “சுமார் 1000 டன் ஜெலட்டின்களை பயன்படுத்தி 800 நாட்கள் தொடர்ச்சியாக 800 டன் பாறைகளை உடைக்க இருக்கிறார்கள். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கிற பகுதி நீர் அடுக்குகள் (Aquifer) நிறைந்த பகுதி. இவ்வாறாக, சுரங்கம் அமைக்க வெடி வைத்து பாறைகளையும் நிலத்தையும் தகர்க்கும்பொழுது அது புவிமேலோட்டுப் பேரியக்கத்தில் (tectonics) மாற்றம் நிகழ்த்தும். நீர் அடுக்குகளால் நிறைந்த பகுதி என்பதால் நீரியல் பூகம்பத்தை (hydro seismicity) எளிதில் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆய்வு மையப்பகுதியில் எவ்வித புவிசார்தொழிற்நுட்ப முறை (Geotechnical studies) ஆய்வுகளை அணுசக்தி கழகமும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனமும் இதுவரை செய்யவில்லை. அதுகுறித்து வெளிப்படைத்தன்மை உடைய அறிக்கையை இதுவரை இல்லை. அதாவது, சுரங்க கிடங்குகள் அல்லது ஆய்வகங்கள் அமைக்கும்பொழுது நீர் அடுக்குகளுக்கும் இயற்கை வளங்களுக்கும் எவ்வகையிலான பாதிப்புகள் வரும் என்பதனை கணிக்கும் ஆய்வு நடத்தப்பட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இது நடக்கவேயில்லை என்ற குற்றச்சாட்டிற்கு இதுவரை பதில் இல்லை.

ஒரு திட்டம் வரும்பொழுது, கட்டுமானம், போக்குவரத்துகள், வாழ்வியல் பாதிப்புகள் வருவது இயல்பு என வாதம் செய்வோர்கள் கவனத்திற்கு, யாரோ 20-30 அறிவியலாளர்களின் வெற்றிக்காக பல லட்சம் மக்களை பலிக்கடாவாக்க முடியாது என்பதனை நினைவில் கொள்க.

கதிர்வீச்சு அபாயம்:

சுற்றுச்சூழல் பிரச்சனைகளும் தமிழர்களின் வாழ்வாதார பாதிப்புகளும் மட்டும் என்றில்லை, கதிர்வீச்சு அபாயமும் இருக்கிறது. வான்வெளியில் இருந்து வந்துகொண்டிருக்கும் நியூட்ரினோவின் ஆற்றல் நம்மை பாதிப்படையச் செய்யும் கதிர்வீச்சு அல்ல. ஆனால், முதலில் வான்வெளியில் இருந்து பொழியும் நியூட்ரினோவை பதிவு செய்து ஆய்வு செய்வதோடு, இத்திட்டம் நிறைவுறப்போவதில்லை. சமகாலத்தில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் நியூட்ரினோ ஆய்விற்கான சுரங்க ஆய்வகங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் சிகாகோ நகரில் இயங்கும் நியூட்ரினோ உற்பத்திசாலையில் இருந்து நியூட்ரினோக்கள் நமது மண்ணை நோக்கி செலுத்தி, அதன் மிக தொலைவில் இருந்து பயணப்படும்பொழுது ஏற்படும்/ஏற்படுத்தும் மாற்றம், இயற்பியல் கோட்பாட்டு நிகழ்வும்கள், பிற கதிர்வீச்சுகளோடு வினைபுரியும் வாய்ப்பு என அனைத்தும் ஆய்விற்கு உட்படுத்தப்படும். இதில்தான் பெரிதளவிலான சிக்கல்கள் இருக்கின்றன.

எப்படி என சிந்திக்கிறீர்களா?

வான்வெளி நியூட்ரினோவிற்கு நம் மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை இல்லை என்றாலும் செயற்கையாக உற்பத்தியாகும் நியூட்ரினோவிற்கு அத்தன்மை உண்டு. இரண்டிற்குமான ஆற்றல் வேறுபாடே அதன் இயற்பியல்/வேதியியல் தன்மைகளை மாற்றுகிறது. இயற்கை நியூட்ரினோவின் ஆற்றல் 2.2 எலக்ட்ரான் வோல்ட் (eV) முதல் 15 மெகா எலக்ட்ரான் வோல்ட் (MeV) வரை ஆகும். ஆனால், அமெரிக்க நியூட்ரினோ 500-1500 கிகா எலக்ட்ரான் வோல்ட் (GeV). செயற்கை நியூட்ரினோ 10 கோடி மடங்கு அதிகம் ஆற்றல் கொண்டது. இயற்கை நியூட்ரினோக்கள் தனித்தனியாக பயணிக்கக் கூடிய வல்லமை படைத்தது. ஆனால் செயற்கை நியூட்ரினோக்கள் அமெரிக்காவில் இருந்து அனுபப்படும்பொழுது அது நேர்திசையாக்கள் செய்யப்பட்டு கற்றைகளாக பயணிக்கும். அதனால் செறிவும் (Intensity) அடர்த்தியும் பன்மடங்கு கூடும்.

பிற்காலத்தில் ஜப்பான் மற்றும் அண்டார்டிக்காவில் இருந்தும் தமிழகம் நோக்கி இக்கதிர்வீச்சு அனுப்பப்படலாம். இது வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை. ஏனைய நாடுகளின் அரசும் மக்களும் ஒருபொழுதும் தன் நாட்டின் மீது இத்தகைய கதிர்வீச்சு படையெடுப்பை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இந்திய துணைக்கண்டத்தில் இது முற்றிலும் சாத்தியம். உலகெங்கும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இந்திய துணைக்கண்டத்தில் விற்பனை செய்யப்படுவது சாத்தியமாக இருக்கும்பொழுது, பல நாடுகள் தடை செய்த வேதாந்த நிறுவனம் இங்கு செயல்படுவடு சாத்தியமாக இருக்கும்பொழுது, உலக வல்லரசுகளின் பொருளாதார வேட்டைக்காடாகவே இந்திய துணைக்கண்டம் மாற்றிவிட்ட சூழலில் இது முற்றிலும் சாத்தியமே. இங்குதான் ஒரு அமைச்சர் அல்லது ஒரு அதிகாரி நினைத்தாலே எவனின் தலையெழுத்தையும் மாற்ற முடியுமே.

சனி, 7 ஏப்ரல், 2018

நியூட்ரினோ திட்டத்தால் எந்த நன்மையும் இல்லை; நில நடுக்கம்தான் வரும்! : பொறியாளர் சுந்தர்ராசன்.

ஒரு திட்டம் அமைய வேண்டும் என்றால்,
அது எந்த மாதிரியான திட்டம்?
அமைய இருப்பது எந்த இடம்?
அந்தத் திட்டத்தால் கிடைக்கப் போகின்ற,
சமூக பொருளாதாரப் பயன்பாடுகள் என்ன?
இந்த மூன்று காரணிகளின் அடிப்படையில்தான், அந்தத் திட்டத்தை நாம் வரவேற்க வேண்டுமா? அல்லது எதிர்க்க வேண்டுமா?
என்கின்ற கருத்து ஆக்கத்தை
நாம் உருவாக்க முடியும்.

அப்படி இந்த நியூட்ரினோ எந்த மாதிரியான திட்டம்?

தேனி மாவட்டம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் அமைய இருக்கின்ற நியூட்ரினோ ஆய்வகத்தில், நியூட்ரினோக்களை ஆய்வு செய்யப் போவதாக விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள்.

இயற்கையாகவே சூரியனில் இருந்தும் அண்டவெளியில் இருந்து கோடிக்கணக்கன நியூட்ரினோக்கள் நம் உடலை ஊடுருவிச் சென்று கொண்டுதான் இருக்கின்றன.

அவற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால், இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு,
செயற்கையாக, தொழிற்கூடங்களில் உருவாக்கப்படுகின்ற நியூட்ரினோக்களை ஆய்வு செய்யப் போகின்றார்கள்.

இயற்கை நியூட்ரினோக்களுக்கு நிறை கிடையாது. அவற்றால் பாதிப்பு இல்லை.

ஆனால், அமெரிக்காவின் ~பெர்மி ஆய்வுக்கூடத்தில் இருந்தும்,
ஐரோப்பா, ஜப்பான் ஆய்வகங்களில் இருந்தும், அண்டார்டிகாவில் இருந்தும் தேனி பொட்டிப்புரத்தை நோக்கி,
செயற்கை நியூட்ரினோ கற்றைகளை அனுப்பப் போகின்றார்கள்.

அவை, அதிக ஆற்றல் கொண்டவை.
அதிக நிறை கொண்டவை;
ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியவை.

எதற்காகத் தேனி பொட்டிப்புரத்தைத் தேர்ந்து எடுக்கின்றார்கள்?

அது மேஜிகல் பேஸ்லைன் என்று சொல்கின்றார்கள்; நியூட்ரினோ ஆய்வுக்கு ஏற்ற மலையாகக் கருதுகின்றார்கள்.

நியூட்ரினோ ஆய்வு எதற்காக?
எதிரி நாடுகளிடம் எங்கே அணுகுண்டுகள் இருக்கின்றன என்பதைக் கண்டு அறிந்து,
அவற்றைச் செயல் இழக்கச் செய்வதற்காகத்தான் இந்த ஆய்வு.

இது அடிப்படை அறிவியல் திட்டம் அல்ல;
பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிகள் தொடர்பான திட்டம்.

அமெரிக்காவுக்குப் பிடிக்காத,
குறிப்பாக சீனா போன்ற நாடுகளிடம் உள்ள அணுகுண்டுகளை ஆராய்ந்து,
அதைச் செயல் இழக்கச் செய்வதுதான்
இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்.

இந்திய-அமெரிக்க அணுவிசை ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசு, அமெரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்து இருக்கின்றது.

இந்த மேற்குத் தொடர்ச்சி மலை,
உலகப் பண்பாட்டுச் சின்னம் என ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அறிவித்து இருக்கின்றது. 

‘பல்லுயிர் பாதுகhப்பு மண்டலம்’ என, மாதவ் கhட்கில் குழு, கஸ்தூரி ரங்கன் குழுக்கள் அறிவித்து இருக்கின்றன.

இந்த அறிவிப்புகளின் விளைவாக,
இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்தால்கூட, அங்கே குண்டு போடக்கூடாது.

தாஜ் மகல் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்று இருக்கின்றதோ,
அதற்குச் சற்றும் குறைவு அல்ல இந்த மேற்குத் தொடர்ச்சி மலை.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் மக்கள் வாழ்வதற்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகள் உயிர்ப்போடு இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு இடத்தில்,
ஆயிரக்கணக்கான டன் வெடிமருந்துகள்,
ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி,
பத்து இலட்சம் டன் பாறைகளைத் தகர்த்து உடைத்து எடுத்து,
அந்த இடத்தில் இந்த ஆய்வகத்தை அமைக்கப் போகின்றார்கள்.

அண்மையில்,
ஹை குவாக் என்ற ஆய்வு இதழ்,
ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.

கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களில், 746 நிலநடுக்கங்கள் மனிதர்களால் தூண்டப்பட்டவை என்று சொல்கின்றது.

அவற்றுள் 37 பூகம்பங்கள்,
மிகப்பெரிய சுரங்கங்களைக் குடைந்ததால் தூண்டப்பட்டவை;

24 விழுக்காடு, பெரிய அணைகள், நீர்த்தேக்கங்கள் கட்டுமானங்களால் தூண்டப்பட்டவை என்று அந்த அறிக்கை சொல்லுகின்றது.

இந்தத் தேனி மாவட்டம்,
ஏற்கனவே நீர்த்தேக்கங்களால் அழுத்தப்பட்டு இருக்கின்றது.

இங்கே வந்து, இத்தனை இலட்சம் பாறைகளை நீங்கள் உடைத்து ஆய்வகம் அமைத்தால், முல்லைப்பெரியாறு அணை வலு இழந்து உடைந்து நொறுங்கி விடும்

நண்பர்களே. இந்த ஆய்வகத்தால் கேரள மாநிலமும் பாதிக்கப்படும்.
அதனால்தான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கேரள மாநிலத்திற்கும் சென்று,
அங்கே உள்ள அரசியல் தலைவர்களையும் சந்தித்து, இந்தத் திட்டத்தால் ஏற்படக்கூடிய கேடுகளை விளக்கிக் கூறி இருக்கின்றார்கள்.

ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருக்கின்ற முல்லைப்பெரியாறு அணை, இடுக்கி அணை, வைகை அணை, மேகமலை அணை என 18 பெரிய நீர்த்தேக்கங்கள் இந்தப் பகுதியில் உள்ளன.

இவை அனைத்திற்குமே நியூட்ரினோ திட்டத்தால் ஆபத்துகள் ஏற்படும்.

சரி. இந்தத் திட்டத்தால் நமக்கு என்ன நன்மை?

தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்குமா?

இந்தப் பகுதியின் பொருளாதாரம் வளருமா?

எதுவும் கிடையாது.

யாரோ ஒரு சர்மாவும், சாஸ்திரியும் உள்ளே உட்கார்ந்துகொண்டு ஆய்வு செய்யப் போகின்றார்கள்.

அதிகபட்சமாக ஒரேயொரு ஆளுக்கு வாட்ச்மேன் வேலை கொடுப்பார்கள்.
அவ்வளவுதான்.
இந்தத் திட்டத்தால், இந்தப் பகுதியில்  வேறு எந்தப் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படப் போவது இல்லை.

இது மிக மோசமான திட்டம்.

இந்தப் பகுதி நீர்பிடிப்புப் பகுதி என்று தமிழக அரசு சொல்லுகின்றது.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடுத்துத் தடை ஆணை பெற்றுள்ளார்கள்.

இந்தத் திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து பூவுலக நண்பர்கள் அமைப்பின் சார்பில் நாங்கள் வழக்குத் தொடுத்து,
அந்த அனுமதியை ரத்து செய்து
தீர்ப்பு வாங்கி இருக்கின்றோம்.

ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி, எதிர்ப்புகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்துச் செயல்படுத்தப் போகின்றார்களாம்.

அப்படி அனுமதி கொடுப்பதற்கு எந்தச் சட்டமும் இல்லை.

ஆக, இந்த நாட்டில் சட்டப்படி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவதற்கே நாம் ஒரு பெரிய சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டிய கேடு கெட்ட நிலைமை இந்த நாட்டில் ஏற்பட்டு இருக்கின்றது.

அத்தகைய மோசமான நிலைக்கு பாசிச அரசுகள் சென்றுகொண்டு இருக்கின்றன.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராசன் அவர்களது பதிவிலிருந்து..

நியூட்ரினோ திட்டமும் அறிவியல் ஆதிக்க அகந்தையும் : முனைவர் விஜய் அசோகன்.

நியூட்ரினோ திட்ட எதிர்ப்பும் அறிவியல் எதிர்ப்பும்:
இரண்டும் வெவ்வேறானவை!

அறிஞர் விசய் அசோகன் அவர்களது மிக முக்கியமான கட்டுரையிலிருந்து..

தேனியில் அமைப்பதாக சொல்லும் இந்தியாவின் அறிவியல் திட்டத்தை எதிர்க்கும் குரல் எத்தகையது? ஏன் உருவானது? என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் மிக எளிமையாக புறந்தள்ளிவிட்டு அறிவியல் மேட்டிமைத்தனத்தோடு இந்திய அதிகார வர்க்கமும் அறிவியல் வர்க்கமும் நடந்துகொள்வது இந்தியாவின் வருங்கால அறிவியல் மற்றும் வளர்ச்சிப்பாதையில் பெருங்கனவு கொண்ட என்னைப் போன்ற இளம் அறிவியலாளர்களுக்கு அதிர்ச்சியும் அயர்ச்சியும்தான் உருவாகிறது.

நியூட்ரினோ ஆய்வோ அல்லது வேறு ஏதேனும் அறிவியல் ஆய்வோ, பொதுவாகவே, பொதுமக்கள் எப்பொழுதும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாழ்விடமோ வாழ்வாதாரமோ பாதிக்கும் என நம்பினால் அது எத்தகைய நன்மை பயக்கும் திட்டமாக இருந்தாலும் கட்டாயம் எதிர்ப்பார்கள்.

அதே போல, பொதுமக்களை அப்படியெல்லாம் தூண்டிவிட்டெல்லாம் இந்தியாவின் ஆராய்ச்சியை எவராலும் தடுத்துவிட முடியாது. எங்களைப் போன்றவர்கள் (பூவுலகின் நண்பர்கள்) மக்களோடு சேர்ந்து குரல் கொடுக்கிறோமே தவிர எங்களால் மக்கள் குரல் கொடுக்கவில்லை என்பதை முதலில் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.

தீர்க்கமாக சொல்ல வேண்டுமென்றால், எங்களுடைய வாதமெல்லாம், திட்ட செயலாக்கத்தின் முதன் நிலையிலேயே ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்தும் அல்லது திட்டக்குழுவினர் பார்க்க மறந்த சுற்றுச்சூழல் சார்ந்த மதிப்பீடுகள் குறித்துமே. அறிவியலை மறுப்பவர்கள் நாங்கள் அல்ல. அந்த அறிவியல் யாருக்கானது, எதற்கானது என்றே கேட்கிறோம். மக்களுக்கான அறிவியலை செய்யுங்கள், அதனை முடித்துவிட்டு அறிவியலாளர்களின் பெருமைக்கும் அங்கீகாரத்திற்குமான அறிவியலை கையிலெடுங்கள் என்கிறோம். எத்தகைய திட்டங்களை செயல்படுத்தினாலும் யாருக்கான திட்டங்களை செயல்படுத்த முனைந்தாலும் சுற்றுச்சூழல் குறித்து அக்கறை காட்டுங்கள் என்கிறோம். வருங்கால மக்களுக்கான இந்த பூமியை அழித்து நிகழ்கால அறிவியல் சாதனைகளை செய்யாதீர்கள் என்கிறோம்.

எங்களை போன்ற சராசரி தமிழர்களுக்கு சில கேள்விகள் உண்டு! அதனை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்ற நம்பிக்கையில் கேட்கிறோம். இதற்கு ஒரே வரியில், தேச விரோதி பட்டமோ, அறிவியல் எதிர்ப்பாளன் பட்டமோ, பிற தேச கைக்கூலி என கூட சொல்லும் உரிமை உங்களுக்கு (மேட்டிமைத்தன மனிதர்களுக்கு) உண்டு. நாங்கள் பழியேற்று விடை பெறுகிறோம்.

எங்கள் கேள்விகள்:

1) தேனியை விட்டால் இந்த ஆய்வை செய்ய வேறு இடமே இந்தியாவில் இல்லையா? குறைந்த பட்ச என் சிற்றறிவில், சில ஆய்வுக்கட்டுரைகளை படித்து புரிந்துகொண்டால் கூட இதனைவிட அடர்த்தியான பாறைகள் கொண்ட, இதே போன்ற மிக மிக பழமையான மலைகள் இந்தியாவில் தென்படுகிறதே! இந்தியாவின் பெரும் விஞ்ஞானிகளுக்கு கிடைக்கவில்லையா?

2) சிங்காராவில் சுற்றுச்சூழல் அனுமதியை இந்திய சுற்றுச்சூழல் துறையின் அமைச்சகம் மறுத்தபொழுது சொன்ன காரணங்கள், விலங்குகளுக்கு மட்டும்தானா, மனித நடமாட்டத்திற்கு இல்லையா?

3) இந்த திட்டத்தை வெறும் கட்டிடங்கள் என்ற அளவுகோலில்தான் நிர்ணயிக்க முடியுமா? இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெறும் கட்டிடத்திற்கு ஏன் அனுமதி மறுத்தது? தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் அனுமதி தராமல் பல ஆண்டுகள் இழுத்தடித்தது? வெறும் கட்டிடங்கள் கட்டும் திட்ட அளவுகோல் என்றால் சலீம் அலி நிறுவனத்தின் தாக்கீது அறிக்கை ஏன் தேவைப்பட்டது? அது இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்கீது வழங்கியது செல்லாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏன் சொன்னது? மதுரை உயர்நீதிமன்ற கிளையும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உங்கள் மொழியில் தேசத் துரோகிகளா? அல்லது அறிவியல் தெரியாத மூடர்களா?

4) சிங்காரா திட்ட முன்மொழிவில்,  “this can be compared to river valley project" - நீர்மின்சாரம் தயாரிப்பதற்காக ஆறுகளிலிருந்து/அணைகளிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்படும் திட்டத்தோடு ஒப்பிடலாம் என நீங்கள் தானே கூறியிருந்தீர்கள்? உங்களை போன்ற தேசபக்தர்கள் இப்படி மாறி மாறி பேசினால், எங்களை போன்ற சாதாரணமானவர்களுக்கு சந்தேகமே எழக்கூடாதா?

5) தேனியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பம் எழுதிக்கொடுத்த பொழுது, அணுமின் கழிவுகள் மேலாண்மை திட்டம் என்றும் 2017 தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தடை வழங்கிய பின் கட்டிங்களுக்கான திட்ட அளவுகோலில்தான் நடைமுறைப்படுத்த முடியும் என்ற நிலைக்கும் இடையில் 4 ஆண்டுகள் கழிந்துவிட்டதே! இப்பொழுது, தட்டச்சு பிழை என்கிறீர்களே! தட்டச்சு பிழை சரி செய்ய, எங்களின் இத்தனை போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், தேசிய பசுமைத் தீர்ப்பாய கண்டனங்கள் உங்களுக்கு தேவைப்பட்டதா?

6) நியூட்ரினோ ஆய்வகதிற்கான சுற்றுச்சூழல் தாக்கீடு மதீப்பீட்டு அறிக்கையில் பொட்டிபுரம் மலை பகுதியை வெடிவைத்து சுரங்கம் அமைக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு உண்டாகும் என்னும் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கூறப்பட்டுள்ளது. மிக பெரிய அளவில் இத்தகைய சுரங்கம் அமைக்கப்படும் போது அது குறித்த ஆய்வு ஆவசியமானது இல்லையா? கீண்ட கண்ட பகுதிகள் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தெளிவாக்கிறது:
“ No, Rapid Ecological Impact Assessment done by Salim Ali centre for Ornithology and Natural History, Coimbatore reads as: “Blasting is known to cause vibrations and serious damage to close-by landscape and may have impact on the geological make-up/ formation in the surroundings, a subject not under the scope of the present report.” [Rapid Ecological Impact Assessment, SACONH, Nov 2010, page.57]”

7) சுற்றுச்சூழல் மதிப்பீடுத்தான் செய்யத்தேவையில்லை, நீங்கள் ஆய்வகம் அமைப்பதாக சொல்லும் மலைப் பகுதியில் வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில் பெரும் காற்றும் வீசுமே, பல பல சிறு கற்கள் முதல் பெரும் புழுதியை சுமந்து வருமே (பொட்டிபுரம் மக்களை கேட்டுத்தெரிந்துகொள்ளவும்) அதனால் கட்டுமான பணிகளில் ஏற்பட இருக்கும் தொய்வு, பணியில் ஈடுபடுபவர்களுக்கான பாதுகாப்பு, கட்டுமானம் நிறைவடைந்ததும் இதே போன்ற பெரும் காற்றில் உங்கள் பாதுகாப்பு, இதனையாவது பரிசீலித்தீர்களா? எங்கள் குரல் உங்களுக்குமானதுதான். உங்கள் குரல்தான் எங்களுக்கானதாக இருந்தது இல்லை.

8) இந்த திட்டம் வான்வெளி நியூட்ரினோவை கண்டறிவதற்கும் பகுத்தாய்வு செய்வதற்கும் மட்டும்தான் என நீங்கள் 2014-2015 காலக்கட்டங்களில் தொடர்ந்து கூறிவந்தீர்கள். உங்களது ஆவணங்களை பார்க்கும் பொழுது, குறிப்பாக, Tata Institute of Fundamental Research மற்றும் இன்னபிற, அடுத்தக்கட்டமாக நிறைய ஆய்வுகளை செய்யும் திட்டம் உள்ளதாக வரையறுத்திருந்தீர்கள். அதனை ஏன் வெளியே சொல்லத் தயங்குகிறீர்கள் என அன்றைய சூழலில் கேட்ட பொழுது சாத்தியமில்லாத ஒன்று, கற்பனையான ஒன்று என்று எங்களை நோக்கி ஏளனமாக பதிலுரைத்தவர்கள், கடைசி வரை உங்கள் ஆவணத்தில் இருந்ததை மட்டுமே நாங்கள் சொன்னோம் என்பதை ஏற்றுக்கொள்ள தவிர்த்து வந்தீர்கள். இந்த முரண்பாடும் பதற்றமும் ஏன்? திட்டம் குறித்த முழுமையான தொலைநோக்கை திறந்த வெளியில் பேச அன்று ஏன் தயங்கினீர்கள்? திட்ட ஆதரவாளர்கள் இல்லை என மறுப்பதும், விஞ்ஞானிகள் பேசும்பொழுது ஆம் என்பதும் என மாறி மாறி பேசும்பொழுது கேள்விகளும் குழப்பங்களும் உருவாகும்தானே?

9) நாங்கள் எழுதியபொழுதும் எடுத்துரைத்தபொழுதும் எவையெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்பட்டதோ, அப்துகலாம் அவர்கள், 2015 ஜூலையில் தமிழில் கட்டுரைகள் எழுதிய பொழுது, அதனையே சாத்தியமான ஒன்று என கூறினார். என்ன அவர் ஆதரவு தளத்தில் சாத்தியமான ஒன்றாக எழுதினார், எங்கள் எதிர்தளத்தில் நின்று சாத்தியமான ஒன்றாக கூறினோம். நாங்கள் சொன்ன பொழுது அறிவியல் தெரியாதவர்கள் என்ற வசைச் சொல் வழங்கப்பட்டது, அப்துல்கலாமை அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாதுதானே!

10) ஒரு சராசரி அறிவியலாளனாக என் எதிர்ப்பார்ப்பு: இவ்வகையான திட்டத்திற்கு செலவிடப்படும் தொகையைக் காட்டிலும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான ஆற்றல், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல், மருத்துவ ஆய்வுகள் மற்றும் இன்னபிற அடிப்படை மற்றும் மக்களுக்கு நேரடியாகவும் உடனடியாகவும் பயன்படும் ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுதும் இந்தியாவின் கெளவரமும் மகுடமும் உலகளவில் உயர்ந்து நிற்கும்தான். அடிப்படை இயற்பியல் ஆராய்ச்சிகள் செய்யும் நாடுகள் ஏற்கனவே மேலே கூறியவைகளை செய்துக்காட்டியவை, செய்துக்கொண்டிருப்பவை. இன்றைய சூழலில், எது மக்களின் தேவையோ? எது நாட்டின் தேவையோ? அதுதான் அறிவியலாளன் பார்வையில் ஆராய்ச்சியாக இருக்க முடியும். அதற்காக, இத்திட்டங்களை அப்படியே விட்டுவிடவும் சொல்லவில்லை. முன்னுரிமை எது என்று பாருங்கள். அப்படியும் இது போன்ற திட்டங்களை செய்யத்தான் போகிறீர்கள் என்றால் குறைந்தது நம் நாட்டின் சட்டத்தை மதித்து மக்களின் குரலுக்கு செவிசாய்த்து முறையான வழிமுறைகளில் முறையான தொலைநோக்கு மற்றும் செயல்திட்டங்கள் வரையறுத்து செய்யுங்கள். உங்கள் தட்டச்சு பிழைகளுக்கு எல்லாம் 1500 கோடி ரூபாய் வீண் விரயமாக எங்கள் வரிப்பணத்தை வழங்க முடியாது.

இறுதியாக ஒன்றை சொல்ல வேண்டும். இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்திற்கு எதிரான விமர்சனம் வைப்பவர்களை எல்லாம் தேச விரோதிகள், அறிவியலுக்கு எதிரானவர்கள் என மிக எளிமையாக குற்றம் சாட்டிவிட்டு நகர்வதின் மூலம் அறிவியலுக்கும் பாமர மக்களுக்கும் தொடர்பில்லை என நிறுவும் அறிவியல் ஆதிக்க அகந்தை (Scientific Arrogance)! கடுமையான வார்த்தையாக நினைத்தால் கூட பரவாயில்லை. நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தை புரிய வைக்க இதனை விட எளிய வார்த்தை கிடைக்கவில்லை.!!!

முனைவர் விஜய் அசோகன்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தமிழ்ப் புத்தாண்டே வருக! :சா.தனலட்சுமி கோவிந்தராசு

தமிழ்ப் புத்தாண்டே வருக!


                   :சா.தனலட்சுமி கோவிந்தராசு

எத்திக்கும் மகிழ்ச்சி பொங்கும்
தித்திக்குமே பொங்கல் திருநாள்;
தையல்மகளை வரவேற்கும்
தமிழினத்தின் நன்னாள்.

தமிழரை ஆள்புரிந்தோர்
தம் மொழியைப் புகுத்தியதால்
தமிழ்த்திங்கள் பெயர்களெல்லாம்
சமக்கிருதச் சாயம் பூண்டன;
தமிழ்ப் புத்தாண்டும்
தடம் மாறிப்போனது.

சுறவம் முதல் சிலை வரையுள்ள
தமிழ்த் திங்களின் சுவடுகள் மறைந்தன;
சித்திரை முதல் பங்குனி வரையுள்ள
சமக்கிருதமே நம்மை ஆள்கிறது.

நம் தமிழோ
பார்ப்பனியப் பிடியில் பல்லாண்டு
அந்நியர் பிடியில் பலவாண்டு
அறியாமைப் பீடையில் இந்நாளும்
சிக்கித் தவிக்கிறது.

ஆனாலும்,
எதிரிகளின் நஞ்சையெல்லாம்
தனக்குள் உரமாக்கியே
எழுத்தாய் சொற்களாய்
நிமிர்ந்து நிற்கிறது தமிழ்.

தலைமுறைத் தமிழுக்குத்
தன்னினத் தடுப்பூசி போட்டிருப்பதால்
பிறமொழிப் பிணியின்றி
பிறக்கிறது புதுத்தமிழ்.

தமிழே
உமக்கு ஒப்பாரும் இல்லை;
உன்னை விற்பாரும் இல்லை.
மங்கிய நிலை மாறி
எங்கும் பொங்கும் நிலைபெறவே
வாழ்ந்திருப்போம்.

வரும் காலத்தில்
தமிழரெல்லாம் தன்னிறைவு பெற
பொங்கலோ பொங்கலென்று
பொங்குக பொன் தமிழே
தமிழருக்கு சுவைநலம் தருகவே!

சா.தனலட்சுமி கோவிந்தராசு
செயமங்கலம்.



செவ்வாய், 12 ஜனவரி, 2016

சுறவம் (தை) முதல் நாளே தமிழரின் புத்தாண்டு !


சுறவம் (தை) முதல் நாளே 
தமிழரின் புத்தாண்டு ! 

                                                                                      நக்கீரன்

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல  தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்று தமிழக அரசு முடிவு செய்து 1.2.2008 அன்று அதற்குச் சட்ட வடிவம் கொடுத்தது. ஆனால் அதற்குப் பின்னரும் சித்திரை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்று ஒரு விரல் விட்டு எண்ணக் கூடிய இந்து்த்துவ வாதிகள்  மல்லுக்கு நிற்கிறார்கள். அவர்கள் தாராளமாக சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடலாம். யாரும்  வேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால் சித்திரை தமிழ்ப் புத்தாண்டல்ல.
சூரியன் மேட இராசி, அசுவினி நட்சத்திரத்தில் புகும் நாளே சித்திரை ஆண்டுப் பிறப்பு என்கிறார்கள். அதுவே வேனில் காலத்தின் தொடக்கம் என்கிறார்கள். இவை முழுதும் சரியல்ல. இன்று வேனில் காலம் மார்ச்சு 20 இல் தொடங்குகிறது. காரணம் புவி தனது சுற்றுப்பாதையில் சூரிய - சந்திர ஈர்ப்பினால் பின்னோக்கி (Precession of Equinoxes) நகர்கிறது. அண்ணளவாக 71.6 ஆண்டுகளில் ஒரு பாகை (ஒரு நாள்) பின்நோக்கி நகர்கிறது. ஆயிரம் ஆண்டுகளில் 14 நாள்கள் நகர்ந்துவிடுகிறது. இன்று இந்திய சோதிடக் கணிப்புக்கும் கிறகேறியன் காலக் கணிப்புக்கும் 24 நாள்கள் வேறுபாடு காணப்படுகிறது. இன்னும் 11,230 ஆண்டுகளில் இளவேனில் காலத்தில் சூரியன் மேடராசிக்குப் பதில் துலா இராசியில் புகுவார்! அதாவது மேட இராசிக்கு எதிர்ப்புறம் 180 பாகையில் காணப்படும் துலா இராசியில் புகுவார்.
தமிழர்களது புத்தாண்டு என்றும் சித்திரையில் தொடங்கவில்லை. தொல்காப்பியர் (கிமு 2,500 ஆண்டு) தமிழர்களது  ஆண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிந்ததாகச் சொல்கிறார்.
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர் 

இந்த நூற்பாவிற்கு உரை எழுதிய நர்ச்சினார்கினியர் சிம்ம ஓரைக்கு (இராசி)  உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்கிறார்.  தமிழ்ப் புத்தாண்டு பண்டுதொட்டு  சித்திரையில் தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரை ஆணித்தரமான சான்றாக விளங்குகிறது.
இந்துத்துவவாதிகள் ஆதி தொட்டு தமிழர்கள் இந்து சமயத்தவர்களாக இருந்து வருகிறார்கள் என நினைக்கிறார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல. தமிழகத்தில் நந்தர், மோரியர் காலத்தில் இருந்தே வேதநெறி, ஆசீவகம், சமணம்,  பவுத்தம், உலகாய்தம் போன்ற நம்புநெறிகளும் நம்பாநெறிகளும் ஊடுருவி இருந்தன.
தமிழில் உள்ள அய்ம்பெருங்காப்பியங்களும் அய்ஞ்சிறு காப்பியங்களும் சமண, பவுத்த காப்பியங்களாகும். ஒன்றேனும் வேதநெறிக் காப்பியம் அல்ல. 
சங்க இலக்கியங்களில் எல்லாத் திங்கள்களின் பெயர்களும் சொல்லப்படவில்லை. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்;டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேள்வைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும். இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவென்ன?

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே"              (தொல். எழுத்து - நூல்மரபு 8)

(இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி.)

காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், கணிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை உருவாக்கவில்லை.  அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர்கள்  25 ஆண்டுகள், 40 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் கல்வெட்டுகளிலும் மெய்கீர்த்திகளிலும் குறிப்பிட்டார்கள். இராசராசன் (கிபி 985 - 1014) தனது 19 ஆவது ஆட்சியாண்டில் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது. முடிசூட்டிக்கொள்வதற்குமுன்பு வரை அருண்மொழிதேவன் என அறியப்பட்டிருந்த இராசராசனுக்கு அவனது பத்தொன்பதாவது ஆட்சியாண்டில்தான் ‘இராஜராஜதேவன்‘ என்ற பட்டப்பெயர் அளிக்கப்பட்டது. அவன் இருபத்தேழு ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தான். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தஞ்சைப் பெரிய கோயிலை யார் கட்டியது என்பது நீண்ட காலம் தெரியாமல் இருந்தது. 1886 ஆம் ஆண்டில் சென்னை அரசு ஹூல்ஷ் என்ற ஜெர்மன் அறிஞரைக் கல்வெட்டு ஆய்வாளராக அமர்த்தியது. அவரே  பெரியகோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்து அதனைக் கட்டியவன் மாமன்னன் இராசஇராசனே என முதன்முதலாகக் கூறினார். புலவர்களைப் பொறுத்தளவில் பிறந்த  இறந்த ஆண்டு பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. அதனால் சங்க காலப் புலவர்கள் மட்டுமல்ல சங்கம் மருவிய காலப் புலவர்கள், இடைக்காலப் புலவர்கள் எந்த ஆண்டில் மட்டுமல்ல எந்த நூற்றாண்டில் பிறந்தார்கள் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக  கம்பர் காலம் 9 - 12 ஆம் நூற்றாண்டு எனக் கணக்கிடுகிறார்கள். 

தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும், இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது. இதனால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை.

இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940). 
இடைக் காலத்தில் 'சக' ஆண்டை வைத்துத் தொடர் ஆண்டு எண்ணப்பட்டது. சக என்பது  சாலிவாகன் பெயரில் உள்ள சாலிவாகன சகாப்தம் என்பதன் சுருக்கமாகும். தமிழ்நாட்டில் மொகலாயர் ஆட்சியில் அரசு ஆவணங்களில், குறிப்பாக வருவாய்த் துறை ஆவணங்களில் 'பசலி' ஆண்டு என்ற தொடர் ஆண்டு பின்பற்றப்பட்டது.

புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் 'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்'' என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, நான் இல்லாத பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

தமிழ் அல்லாத  அறுபது ஆண்டுமுறை தமிழர்களுக்குத் தேவைதானா என்பதை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர  எண்ணிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான "சுக்கில" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்துஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். இதனை மனதில் இருத்தி தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டுத் தொடக்கம் என்று 1921 ஆம் ஆண்டிலேயே தமிழறிஞர்கள் கூடி முடிவெடுத்தார்கள். 
தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் இரண்டையும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார். 

திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றை உருவாக்கி அதனைப் பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையாய தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் ஆவர். 

1935 ஆம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயசார்பற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.
பொங்கலைச் சமயவிழா என்று குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்ட  கொற்றன் வரலாற்றில் சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டான 1935 டுடன் 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 1966 ஆகும். (கி.பி. 31 +1935 = தி.பி. 1966)
இல்லை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனை அடுத்து திரு.வி.க. அவர்கள் பெரியாரின் முடிவைப் பாராட்டிப் பேசினார்.
அடிகளாரின் அறிவித்தலை அறிஞர் அவை ஏற்றுக்கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு (பக்கம் 117, திருவள்ளுவர் நினைவு மலர் 1935) வருகிறது. 

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமை நாள்களின் பெயர்களில் புதன், சனி நீங்கலாக எஞ்சியவை தமிழ்ச் சொற்களாகும். புதன் தமிழில் அறிவன் என்றும் சனி தமிழில் காரி என்றும் அழைக்கப்படுகிறது. 

தமிழ் அறிஞர்களின் முயற்சியால் தமிழர் திருநாளான பொங்கல், தமிழ் ஆண்டு, திருவள்ளுவர், தமிழ் மறை ஆகியன உலகத் தமிழரால் போற்றிக் கொண்டாடடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழர் நலவாழ்வு, வளவாழ்வு, பெருவாழ்வு, புகழ் வாழ்வு பெற முடிகிறது. 

தமிழக அரசைப் பொறுத்தளவில் தை முதல் நாளே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் என்பதை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாள்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 1969 ஆம் ஆண்டு தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நினைவாக  விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதற்கு முன்னரே தமிழீழ நிழல் அரசும் தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என அறிவித்தது நினைவிருக்கலாம்.

பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்!

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பத அறுதியிட்டுக் கூறுகிறது.
தைப் புத்தாண்டில் நம்பிக்கையோடு கால் பதிப்போம். உலகம் வாழ் தமிழ்மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கட்டும். துன்பங்கள் தொலையட்டும். இருள் அகலட்டும். விடியல் தோன்றட்டும். கோடி இன்பங்கள் குவியட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும். கல்வி துலங்கட்டும். தொழில்வளம் பெருகட்டும். அறிவியல் வளரட்டும். தமிழுணர்வு ஓங்கட்டும். இனவுணர்வு மலரட்டும். 

________________________________________


தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா?
                                                                         டான் அசோக்

தமிழர்கள் யாவரும் தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய தெளிவின்மையோடு, எதை நம்புவது எதைப் புறக்கணிப்பது என்ற குழப்பத்தில்  சிக்கியுள்ளார்கள். தமிழக மக்கள் இந்த விசயத்தில் எக்காரணம் கொண்டும் தெளிவுபெற்றுவிடக் கூடாது என்பதில் இப்போது ஆட்சியில் இருப்போரும், அவர்க்கு அறிவுரை வழங்கி வரும் கூட்டமும்  மிகத்  தெளிவாய் இருக்கிறது. அதன்படி தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய்  கலைஞர் அறிவித்ததை மாற்றி மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக  அறிவித்துள்ளது தற்போதைய தமிழக அரசு. இந்நிலையில் எதற்காக தமிழர்கள் தை முதல் நாளை புத்தாண்டாகக்  கொண்டாட வேண்டும் என்பது குறித்து விளக்கவே இந்தக் கட்டுரை. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஏன் எதற்கு என்பதைப் பற்றியெல்லாம் ஆராயும் முன், நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.
அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் ரகசியம் என்ன? அப்படி இருக்கலாமா? அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும் தமிழர்க்கும் மரியாதையாய்  இருக்குமா? இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலைநிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் பூர்வகுடி (தமிழ்) மக்களின்  பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.
மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. ஒருமுறை நாரதமுனிவர், 'கடவுள்' கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில்  ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது. தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார். தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஆரியக் கதை இப்படி இருக்க, தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.  வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
        1. இளவேனில்           -  (தை---மாசி மாதங்களுக்குரியது)
        2.    முதுவேனில்        -  (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
        3.    கார்                -  (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)
        4.    கூதிர்              -  ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
        5.    முன்பனி           - (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)
        6.    பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.  சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.  காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (மீணீஷீஸீ) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.  இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்து  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்,
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்  கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

________________________________________

தமிழ்ப் புத்தாண்டு : 
சங்க இலக்கியமும் அறிஞர்களும் 
சொல்வதென்ன?

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுப் பிறப்பாக பல்லாண்டு காலமாகக்  கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு அறிஞர்கள் தக்க சான்றுகளாகத் தந்துள்ளனர்.
இரண்டாயிரம் (2000) ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் இதற்குச் சான்றுகள் உள்ளன.
தைஇத் திங்கள் தண்கயம் படியும்  என்று நற்றிணையும் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் என்று குறுந்தொகையும் தைஇத் திங்கள் தண்கயம் போல் என்று புறநானூறும் தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ  என்று கலித் தொகை யும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புச் சிறப்பிடம் பெற்றுள்ளதையும், ஆண்டிற்கு மாதங்களை உருவாக்கிப் பெயர்கள் சூட்டியிருப்பதை அறிய முடிகிறது.
தைப்பிறப்பாண்டு வெறும் விழாவையோ அதனாற் கிளர்ந்து எழும் மகிழ்வையோ அடிப்படையாக மட்டும் கொண்டு பிறந்ததல்ல. அறிவியல் தெளிவோடு, கதிரவன் தென்திசை நோக்கி நகர்ந்து மறுபடியும் வடதிசை நோக்கித் திரும்பும் பருவ -கால மாறுதலைக் கொண்டும் கணித்து உருவாக்கப்பட்டதாகும்.
ஆரியர் தமிழ்நாட்டிற்கு வருமுன் வான நூலை ஒரு சிறிதும் அறியார். அவர் அறிந்ததெல்லாம் திங்களுடைய வளர்ச்சி தளர்ச்சியைக் கண்டு காலத்தைக் குறிப்பிடுவது மட்டுந்தான். உவாவு (அமாவாசை)க்கு ஒரு உவா மாதம் என்று அவர்கள் கணக்கிட்டனர். அவர்கள் பல்கித் தமிழ்நாட்டை அடைந்தபோதே தமிழர்களுடைய மதி நுட்பத்தையும், கணித முறைகளையும் கண்டு வியந்து தாமும் தம் முறையைக் கையாளத் தொடங்கினர்.
அவர்கள் தங்கள் பிறை மாதங்களுக்குப் பெயர் கொடுக்க நினைத்துச் சித்திரை, வைகாசி முதலிய மாதப் பெயர்களையே பெரும்பாலும் சைத்திரம், வைகாசம் எனத் திரித்து வழங்கத் தொடங்கினர்.
சித்திரை மாதத்தில் வரும் உவா நாளுடன் முடிகிற மாதம் சைத்திரம் எனவும், இவ்வாறே ஏனைய மாதங்களுக்கும் பெயர் வைத்துக்கொள்ள ஆரிய மக்கள் சில ஆண்டுகளின் பின் தங்களின் கொள்கைக்கு மாறாகச் சைத்திரம் பங்குனியிலும் வைகாசம் சித்திரையிலும் இவ்வாறே ஏனைய மாதங்களும் முடிவதைக் கண்டு அஞ்சினர்களாய் சித்திரை முதலிய மாதங்களே நிலையானவை; ஆதலினால் அவற்றோடு தங்கள் புதிய மாதங்கள் கூடாமற் போனால் பயனற்றுப்போம் என்று தெரிந்து பங்குனியோடு முடிகிற தமது சைத்திரத்தை அதிமாதம் அல்லது பொய் மாதம் என்று தள்ளி சித்திரை மாதத்தின் உவாவுடன் முடிகிற பிழை மாதமே உண்மைச் சைத்திரம் (நிசசைத்திரம்) என்று கொள்வாராயினர்.
ஆகவே சித்திரை முதலிய பன்னிரு மாதப் பெயர்களும் ஆரியமயப்பட்டுக் கிடத்தல் அறியப்படும்.  பழந்தமிழ் மக்கள் ஓரைப் (நட்சத்திர) பெயர்களையே மாதப் பெயர்களாகக் கொண்டிருந்தனர் என்பது அறிஞர் பெருமக்களால் தெளிவுறுத்தப்படுதலாலும் பழஞ் சேர நாடான மலையாளத்தில் இவ்வழக்கே இன்றும் நடை முறையிலிருப்பது அறியப்படுதலாலும், சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்னும் ஓரைப் பெயர்களால் சுட்டுவதே சிறந்ததென்று தமிழ் மக்கள் கடைப்பிடித்தல் வேண்டும்! (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 25) என்று மறைமலை அடிகளாரின் நண்பர் இ.மு. சுப்பிரமணியம் (பிள்ளை) அவர்கள் கூறியுள்ளார்
முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையில் புதிய  வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள் என்று டாக்டர் மு.வ.கூறுகிறார்.
வடநாட்டாருக்குத் தீபாவளி வருஷப் பிறப்புப் போல, தமிழ்நாட்டாருக்குப் பொங்கல் புத்தாண்டுப் பிறப்பாகும். இடைக்காலத்தில் ஆரியர் தொடர்பால், தை மாதத்திற்குப் பதிலாக, சித்திரை மாதம் புதுவருஷமாக ஆகிவிட்டது. சூரியன் தக்ஷிணாயனத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்திராயனத்துக்கு அதாவது வடதிசைக்கு வரும் பருவமாறுதலை வைத்தே ஆண்டுத் தொடக்கத்தை வரையறுத்தார்கள் இயற்கை வழி வாழ்க்கை நடத்திய நம் மூதாதையர். என்று நாரண துரைக்கண்ணன் கூறியுள்ளார். (பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு மலர், மலேசியா 15.1.1988)
தமிழ் அரசர்களுடைய கல்வெட்டுகளிலே காணப்படும் காலக் கணக்குகள் அவர்கள் முடிசூடி ஆளத் தொடங்கிய ஆண்டிலிருந்தே கணிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களிடையே பெருவழக்கிலிருக்கும் சாலிவாகன சக வருடம் அக் கல்வெட்டுகளில் இடம் பெறவில்லை.
இச் சாலிவாகன சகவருடம் சாலிவாகனன் எனும் வடநாட்டு அரசனால் இற்றைக்கு 1880 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைநாட்டப் பட்டதென்பர். இவ்வரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலைநாட்ட முயலாதது பெரும் விந்தையாக இருக்கிறது. வட நாட்டரசன் ஒருவன் நிலைப்படுத்திய ஒரு தொடர் ஆண்டை வரவேற்று வழங்கித் தமிழினத்தின் பழமையையும் - பண்பையும், சிறப்பையும் - செல்வாக்கையும் சிதைத்து வந்தமை பெரும் வெட்கத்துக்கிடமானதாகவும் இருக்கிறது என்று இலங்கைப் பேராசிரியர் கா.பொ.ரத்தினம் விளக்குகிறார்.

________________________________________