சனி, 6 அக்டோபர், 2018

சாதியம் குறித்து விடுதலைப் புலிகள்.


புலிகள் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், அவர்களது இலட்சியப் போராட்டமும், சாதி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித்தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. இது சமூகத்தின் உணர்வுகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சாதி குறித்து பேசுவதோ,செயற்படுவதோ குற்றமானது என்பதை விட வெட்கக்கேடானது, அநாகரீகமானது என்று கருதும் மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.

இது சாதியம் தொடர்பாக காலம் காலமாக இருந்து வந்த,சமூக உணர்வின் பிரம்மாண்டமான மாற்றமாகும். இருந்தாலும் சாதியப்பேயை எமது சமூகத்திலிருந்து முற்றாக ஓட்டிவிடமுடியவில்லை சாதிய வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன.

சாதிய வெறியர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். சாதிய பிரச்சனைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கிறோம்.

காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து மக்களின் ஆழ் மனதில் புரையோடிவிட்ட ஒரு சமூக நோயயை எடுத்த எடுப்பில் குணமாகி விடுவதென்பது இலகுவான காரியமல்ல.அப்படி நாம் அவசரப்பட்டு சட்டங்கள் மூலமாகவோ, நிர்பந்தங்கள் வாயிலாகவோ விரட்ட முனைவதும் புத்திசாலித்தனமானது அல்ல.

இன்றைய நிலையில் இப்பிரச்சனைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சாதி வெறி காட்டி,அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல். இது கொடுமையானது, அனுமதிக்க முடியாதது.மற்றையது சாதிரீதியான ஏனைய முரண்பாடுகள். இவற்றை அதனதன் தன்மைகளுக்கு ஏற்ற விதத்தில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயலிழக்கச் செய்யலாம்.

புலிகளின் விடுதலைப் போராட்டமும், அதனால் எழுந்த புரட்சிகர புறநிலைகளும் சாதிய அமைப்பை தகர்க்க தொடங்கி இருக்கிறது. எனினும் பொருளாதார உறவுகளும்,சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்து விடப்போவதில்லை.எனவே சாதிய ஒழிப்புக்கு சமுதாய புரட்சியுடன் மனப்புரட்சியும் அவசியமாகிறது.

பொருளாதார சமத்துவத்தை நோக்கமாக கொண்ட சமுதாய புரட்சியை முன்னெடுப்பது விடுதலைப் புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும். தேசிய விடுதலையை பெற்று, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாக செயற்படுத்த முடியும்.

ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்திலிருந்தே கட்டுப்பாடு பிரதேசங்களில் புரட்சிகரமான பொருளாதார திட்டங்களைச் செயற்படுத்தி, கூட்டுத்தொழில் முயற்சிகளை அமுல்படுத்தி, சாதிய உறவுகளை படிப்படியாக உடைத்தெறிவது சாத்தியமானதொன்று.

சமூகச் சிந்தனையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் சாதிய வழக்குகளும், சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கிறது,இந்த அறியாமையைப் போக்க மனப் புரட்சி அவசியம்.மன அரங்கில் புரட்சிகரமான உணர்வு ஏற்படுவது அவசியம்.

இங்கு தான் புரட்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.எமது இளம் பரம்பரையினருக்கு புரட்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும். பழமையான பிற்போக்கான கருத்துகள், கோட்பாடுகள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, புதிய முற்போக்கான உலகப் பார்வையை புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அறியாமை இருள் நீங்கி புதிய விழிப்புணர்வும், புரட்சிகர சிந்தனைகளும் இளம் மனங்களை பற்றிக் கொண்டால் சாதியம் எனும் மன நோய் புதிதாகத் தோன்றப் போகும் புரட்சிகர சமுதாயத்திலிருந்து நீங்கிவிடும்.

("விடுதலைப் புலிகள்" இதழ் குரல்-20ல் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக