திங்கள், 24 செப்டம்பர், 2018

துயரம்தான் கவிதைக்கு அழகு சேர்க்கிறது : கஸல் கவிதைகள் பற்றிய அறிமுகம் :- கோ.பாரதிமோகன்


கஜல் இரண்டடி கண்ணிகளை உடையது. இரண்டடிகளிலும் சமச்சீரான வரிகளை உடையதாக இருக்க வேண்டும் என்பது அதன் இலக்கண விதி.
கஜல் - கஸல் என இக்கவிதை இருவேறாக அழைக்கப்படுகிறது.
கஸல் கவிதைகளுக்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு.
கஜல் ஒரு நாடோடிப் பாடல் என்பதே அதன் மூலம்.
முதன்முதலில் கஜல் கவிதைகள் அரேபிய பாலைவனத்தில் ஒட்டகத்தைப்பற்றியும் ஒட்டகத்தில் ஏறிச்சென்று அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டு வருவது பற்றியனதாக இருந்தது.
பிறகு மெல்ல மெல்ல இக்கவிதை,
சூஃபிகளின் கைகளுக்கு வந்து சேர்ந்தது.
சூஃபிகள் வாழ்வை கொண்டாட்டமாக வாழ்பவர்கள். ஒருவகையில் இவர்கள் ஜென் துறவிகளைப் போன்றவர்கள்.
சூபியிசம் என்பது எல்லாவற்றையும் இறைவடிவாக  காண்பது.
(மன்சூர் அல்லாஹ் என்ற கவிஞர் உச்சகட்டமாக நானே கடவுள் என சொல்ல, அவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் என்பது வேறு கதை)
ரூமி கவிஞர் கடவுளை மதுவுக்கு ஒப்பானவர் என்கிறார்.
வாழ்வின் எந்த ஒரு தடைகளுக்குள்ளும் சிக்காத சுதந்திரமானவர்கள் சூ ஃபிகள்.
இவர்களின் கையில் கஜல் புதிய பாடலாக பரிணமிக்கிறது.
சூஃபிகள் ஓர் இஸ்லாமியத் துறவிகள்.
ஆனாலும் பொதுத் துறவு கொண்டுள்ள கட்டுக்களை இவர்கள் மீறுபவர்கள்.
கஸல் என்கிற சொல், அரபு மொழியின் 'கஸலி' எனும் சொல்லின் திரிபு.
இச்சொல் 'கஸிதா' என்கிற மூலச் சொல்லிலிருந்து மருவியது.
கஸலி என்றால் அரபி மொழியில் குறிக்கொள் என்று பொருள்.
அதாவது,  இலக்கு என்றும் வைத்துக்கொள்ளலாம்.
மிகக்கடுமையான
இசையிலக்கணத்தையும் பாடுபொருளையும் கொண்ட கஜல், மனதை மயக்கும்
இசைலயத்தை உடையது.
அப்படி இப்படி என்று கஜல் ஒருவாறு காதலிடம் வந்து சேர்ந்தபிறகு அது புதுவேகம் எடுக்கிறது.
கஸல் கவிதைகளுக்கு என ஒரு  ஆன்மா இருக்கிறது.
ஆன்மாவை உரசி செல்லும் கவிதைகளே கஸல் வடிவம்.
கஸல் அரபி் மொழியிலிருந்து பாரசீகம் பயணித்து பாரசீகத்திலிருந்து  மேலும் புயல் பாய்சல் கொள்கிறது.
பிறகு  இஸ்லாமியர் வருகைவழி
இந்தியாவுக்குள் வந்த கஜல், உருது மொழியில் பாடப்பட்டு புகழின் உச்சம் தொடுகிறது.
'அமிர் குர்சோ'தான் கஸலின் இந்திய வரவின் தொடக்கம்.
உருது கஜலில் பலர் கோலோச்சியிருந்தாலும்
கவிஞர் 'மிர்சா காலிப்' தான் கஸல் கவிதைகளில் மாபெரும் சிகரமடைந்தவர்.
மிர்சா காலிப் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
காதல், அழகு, இயற்கை, தத்துவம் ஆகிய
பாடுபொருளை கொண்டிருக்கிறது கஸல்.
*
கஸலில் புகழ்பெற்ற கவிஞர்கள்
1, ஜலாலுதீன் ருமி, 2, மிர்சா காலிப், ,3, மக்பி.
ஔரங்கசீப்பின்  மகள் ஜெப்புன்னிசா . மக்பி  என்ற பெயரில் கஸல் காதல் கவிதைகளை பாரசீகம், அரேபிய மற்றும் உருது மொழியில் எழுதினார்.
இவர் சிறந்த கவிஞர்.
மக்பி,  டெல்லி ஆளுநர் மகன் அகில்கானை காதலித்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தன்னைப் பற்றி் இவ்வாறு கூறுகிறார்:
'வைரங்களை விட பிரகாசமான சொற்கள் என்னிடம் இருக்கின்றன
அதை நான் உருட்டி விளையாடுகிறேன். அதுவே போதும்' என்கிறார்.
துயரமான கவிதைகளையே ஏன் அதிகம் புனைகிறாய் என கவிஞன் ரஸ்வி கேட்க..
அவள்,
'துயரம் தான் கவிதைக்கு அழகு சேர்கிறது' என்கிறாள்.
இன்றும் பாக்தாத் நகரில் கஸல் உச்சம் பெற்று விளங்குகிறது.
மிர்ஸா காலிப்
நவாப்புகளின் சபையில் அரசகவியாக விளங்கியவர்.
தன்னைக்குறித்தும் தன் கஜலைக்குறித்தும் அவர் இப்படிச் சொல்கிறார்,
     //நான் துக்கத்தால் மட்டுமே
        பாதிப்படைகிறேன்                          
       மகிழ்ச்சியின் இறுதிப்படுக்கையருகே
       அழுதுகொண்டும்
       பாடிக்கொண்டு மிருக்கிற
       துயராளியாய் என்னைத் துக்கம்
       ஆக்கிவிட்டது
      தனியனாய், வலிக்கும் என்  
      இதயத்திலிருந்து
      கஸலின் இனிய புலம்பலை எழுப்பினேன்.

      அது கஸலின் இன்னிசை சிகரத்தை
      எட்டிவிட்டது //
என்று தன் கஸலைப்பற்றி
சொல்லும் அவர்,
     "சுடர் முறையாகவே தீர்கிறது
      சோகப் புகைச்சுருளாய் 
      காதலின் பிழம்புகள்
      உடுத்திக்கொள்கின்றன
      என் மரணத்தால்
      கறுத்த துக்க ஆடை.
      அழுகிறேன்,
      காதலின் அவல முடிவுக்காக.
      அழுகிறேன்,
      காதலின் வெள்ளப் பாழுக்காக
      நான் போனபின்
      வேறெந்த இதயம் அதற்கு இடம் தரும்?"
என்று ஆழ்ந்த இதய சோகத்தை கஸலாய் முன் வைக்கிறார்.
இவர் உருது, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளில் தம் கஸல் கவிதைகளை எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறார். மேலும் மற்ற கஜல் கவிஞர்களின் கவிதைகளை நூலாகத் தொகுத்து இருக்கிறார்
தமிழில் ஏற்கனவே கஜல் கவிதைத் தொகுதிகள் ஒருசில வந்திருந்தாலும்
முறையாய் கஜல் என்றால் என்ன என்கிற தெளிவான அறிமுகத்துடன், கஜல் கவிதைக்கான பழைய இலக்கணங்களை எல்லாம் தகர்த்துவிட்டு  ஒரு புதிய பொலிவுடன் முழுக்க முழுக்க காதலையே பாடுபொருளாய்க் கொண்ட தொகுப்பாய் தனது 'மின்மினிகளால் ஒரு கடிதம்' கஜல் கவிதைத் தொகுப்பை கொண்டுவந்தார், கவிக்கோ அப்துல் ரகுமான்.

'காதலியுடன் பேசுதல்' என்று கஜலை அறிமுகம் செய்கிறார், கவிக்கோ: -
"கஸல்' (Ghazal) அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
'கஜல்' என்றாலே என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள்.
கஜல் பெரும்பாலும் காதலையே பாடும். அதுவும் காதலின் சோகத்தை.
கஜல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது.
3 முதல் 9 கண்ணிகள் வரை நீளும் கஜல் கவிதையில்
ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டியதில்லை"
*
இதோ கவிக்கோவின் கவிதைகள் சில...
°
     இறைவா
     நம் சங்கமத்திற்காகதான்
     பெண்ணிடம் ஒத்திகை பார்த்துக்
     கொண்டிருக்கிறேன்
°
    இந்தக் கவிதைகள்
     நீ செய்த காயங்களிலிருந்து
     வடியும் ரத்தம்
°
     காதலின் நஞ்சைக் குடித்தே
     சாகாமல் இருப்பவன் நான்
°
     என் உயிரை
     காதலில்
     ஒளித்துவைத்துவிட்டேன்
     மரணமே!
     இனி என்ன செய்வாய்?
*
மிர்சா காலிப்'பின் உருது கஜலான
'உதிர் இலைக'ளை தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் நீலமணியின்
'உப்புநதிகள்' நேரடி தமிழ் கஜல் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை:
     கல்லும் கவிபாடும்.
     இங்கொரு
     கவிதையே கல்லானதே
     தேர் வருமெனத் தெருமுனை பார்த்தேன்
     வந்த தேர் என்னை மிதித்துச் சென்றது.
     அழுகையே ராகமென்றால்
     இந்த ஊரில்
     சிறந்த பாடகன் நான்தான்.
     தரையில் விழுந்தால் அழுக்குப்படுமென
     வானத்திலேயே மழை இருக்க முடியுமா?
     நீ தெய்வமாகக்கூட இருக்கலாம்.
     பக்தன் மனிதனாக இருக்கக்கூடாதா?
                                   - நீலமணி
                             (உப்புநதிகள்)
*
தொடர் கண்ணிகளாலான
கோ. பாரதிமோகனின் கஜல் கவிதைகள் சில...
*
     பெட்டிக்குள் அடைக்க இசைக்கும்
     மகுடியைப் போன்றது
     உன் குரல்
     பிழையொன்றுமில்லை
     அறிவதில்லை ஒருபோதும்
     விட்டில்கள் தன் சாபத்தை
     அறிந்துகொண்டேன்
     பசுமை படர்ந்த என் பாலை
     ஒளிக்குள் மறையும்
     இருள் போன்றதென
     யார்தான் இணங்க மறுப்பார்கள்
     வசீகரத்தின் கையசைப்புக்கு
     மூழ்கிப் போகிறேன் நான்
     இந்தக் காதல்
     ஒரு புதைகுழி
*
     மணலும் சுரண்டப்பட்ட நதியின் துயர்
     என் இதயம்
     நம்பவைக்கப்படும் கொலைக்கருவி
     கண்களின் சாயலிலிருந்தால்
     நானென்ன செய்வது
     அசையும் உன் ஆடையில்
     சுவாசம் பருகியவனுக்கு பரிசா இந்த
     இதயப் புற்று?
     ஆனாலும் என்ன
     இது உன் கொடைக்கான
     என் நன்றி
*
     பெருங்கருணைக்காரி நீ
     இதயத்தை பாலையாக்கி
     கண்களுக்கு வரமளித்தாய்
     காதலின் தாகத்திற்கு
     நான் கண்ணீர் ஊற்று
*
எனது 'காதலின் மீது மோதிக்கொண்டேன்' தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...
     காதலே
     உனக்கான ஆடையை
     கண்ணீரால் நெய்கிறேன்
*
     உன்னை
     சொற்களில் தேடுகிறேன்
     நீயோ மௌனத்தில்
     ஒளிந்திருக்கிறாய்
*
     உன்னையும் என்னையும்
     உடுத்தி
     நிர்வாணம் களைகிறது காதல்
*
     நீ பறந்துவிட்டாய்
     அநாதையாகிவிட்டது
     என் கூடு
*
     உன்
     கூந்தலின் நுனிவரைதான்
     என்
     ஆயுளின் நீளம்
*
     உன்
     விரல்பிடித்து நடக்கையில்
     அழகாக இருக்கிறது
     மரணத்தின் பாதை

4 கருத்துகள்:

  1. கவிதைகளுக்கு என்ன நாமகரணம் சூட்டி அழைத்தாலும் அதன் மென்மையும் தொன்மையும் இணைந்தே செல்லுகிறது.

    பதிலளிநீக்கு
  2. கவிதைகளுக்கு என்ன நாமகரணம் சூட்டி அழைத்தாலும் அதன் மென்மையும் தொன்மையும் இணைந்தே செல்லுகிறது.

    பதிலளிநீக்கு
  3. படபடக்கிறது
    சாளரத்துத் திரை
    உனது ஒவ்வொரு
    ஊர்வலத்தின் போழ்து

    பதிலளிநீக்கு