செவ்வாய், 25 ஜனவரி, 2022

உழவுப் பாடுகளும் தமிழ்ப் படைப்பாக்கமும் : கதிர்நம்பி


உழவு குறித்து இதுவரை கிடைத்த இலக்கியங்கள் அனைத்தும் உழவின் மேன்மையை விளக்குவனவாக அமைந்துள்ளன. செவ்வியல் மரபான சங்க இலக்கியத் தரவுகள் எல்லாம் உழவர்களையும் உழவினையும் விதந் தோதுகின்றன. உழைக்கின்ற சேற்றில் உழல்கின்ற உழவனை பாடுபொருளாக வைத்து பார்ப்பதால் அவனுடைய உழைப்பின் வீரியத்தை, அவனுடைய இன்னல்களை பேசுபொருளாக்கவில்லை. இன்னும் பகுத்து பார்ப்போமேயானால் இலக்கியங்கள், அவற்றைப் படைத்த கவிஞர்கள் எல்லாம் அரச இயந்திரத்தின் ஒரு பாகமாக விளங்கி வருவது கண்கூடு . எனவே கவிஞர்களிடமிருந்து கலகக் குரல்களை எதிர்பார்க்க இயலாது தான். விதிவிலக்காக அரசனை கேள்விக்குட்படுத்தும் கவிஞர்களை சங்க இலக்கியப் பரப்பில் காணமுடிகிறது. எனினும் விதிவிலக்குகள் எல்லாம் விதிகள் ஆகாது.

"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் 

அலகுடை நீழ லவர்" என்கிறார் வள்ளுவர். 

உழுதலால் நெல் உடையவரான கருணையாளர் பல வேந்தர் குடை நிழலது ஆகிய உலகம் முழுவதையும், தம் அரசன் குடைக்கீழ் வந்து சேரக் காணும் சக்தி உடையவர் ஆவர் என்பது இக்குறளிற்கான புலியூர் கேசிகனின் உரையாகும்.

முடியரசுகளின் எல்லை விவரிப்பிற்கும் உழவர்களினுடைய உழைப்பிற்கும் உள்ள தொடர்பை வள்ளுவர் இக்குறளில் விளக்கிக் காட்டியிருக்கின்றார். திருக்குறளில் வருகின்ற உழவு அதிகாரத்தில் அமைந்துள்ள பத்து குறள்களில் உழவனுடைய இன்னல்களையும் துயரங்களையும் எடுத்துரைப்பதாக அமையவில்லை என்பது கெடுவாய்ப்பாகும். உழவு குறித்து மேன்மையான கூறியிருந்தாலும் அரசு உருவாக்கத்திற்கு அது எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதையும் கூறியிருக்கின்றது.

வேட்டைக் குமுகமாக அலைந்து திரிந்து வாழ்ந்த மாந்தனை ஓரிடத்தில் நிலையாக அமரச் செய்தது வேளாண்மை எனும் தொழில்நுட்பம். "பெண்கள் தான் நிலத்தை முறையாக உழுது பயன்படுத்தும் வழியைக் கண்டுபிடித்தனர். அது கடினமான தொழிலாக இருந்தாலும் இதனை நடைமுறைப் படுத்தினர். தொல்பழங்கால சமுதாயத்தில் மாறாத் தன்மை வலுவாக இருந்த போதிலும் அதனால் வேளாண்மைக்கு முந்திய குழுக்களின் வட்டத்தில் இதன் எச்சங்கள் இன்றும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. முதலாவதாகத் தோன்றிய தாய்வழி உரிமை முறைக் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் வேளாண்மையை மேற்கொண்டதன் காரணமாக காடுகளில் அலைவதை விட்டுவிட்டு முதல் குடி அமைப்புகளை உருவாக்கினர்." என்கிறார் எஹ்ரென் பெல்ஸ். கலப்பையும் மாடுகளும் வேளாண்மையில் பங்குபெற வேளாண் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையடைய மிகை உற்பத்தி உருவானது. இதன் பொருட்டு தந்தை வழி குமுகம் தோன்றி அரசுகளை தோற்றுவித்தது. தோன்றிய அரசுகளை நிலைபெறச் செய்து செல்வத்தை பெருக்க செய்யவும் உழவர்கள் தொடர்ச்சியாக உற்பத்தியில் ஈடுபட வைக்கப்பட்டனர். உழுது உண்போர், உழுதுவித்து உண்போர் என பிரிவுகள் உருப்பெறலாயின.

"மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும்கை 

ஆழி தரித்தே அருளும் கை சூழ்வினையை 

 நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி காக்கும்கை காராளர் கை" என்று கம்பர் உழவர்களை நோக்கி வேந்தர்கள் இருப்பதாக பாடியதும் உழவர்களை மேன்மைபடுத்துவதாக அமைந்துள்ளது. 

"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னர் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால் 

யான் உயிர் என்பது அறிகை 

வேன்மிகு தானை வேந்தர்க் கடனே" என்று மோசிகீரனார் புறநானூற்றில் நெல்லையும் நீரையும் விட வேந்தனின் உயிரே முதன்மையானது என்கிறார். வேந்தன் தன் நாட்டு மக்களை காத்து நிற்பான் என்று பொருள் கூறுகிறார். இந்த பாடலிலும் கூட உழவர்களுடைய முதன்மைத்துவம் அல்லது அவர்களுடைய உழைப்பு பெரிதாக கருதப்படவில்லை. 

உழவர்களுடைய வாழ்வியல், அவர்களின் இன்னல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள், வழக்காறுகள் குறித்து 16- 17ஆம் நூற்றாண்டில் மத்தியில் வந்த முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியம் வெகுவாக படம்பிடித்து காட்டியுள்ளது. குறிப்பாக வேளாண் குடிகளான "மள்ளர்கள்" சாதி விலக்கத்திற்கு உள்ளானதை ஆவணப்படுத்தி இருக்கிறது. 

"பக்கமே தூரப் போயும் 

தக்க சோறு என் வேளாண்மை

 பள்ளா பள்ளா என்பார் 

மெய் கொள்ளாதவர்."

நிலம் கோயிலுக்குச் சொந்தம். கோயிலில் உறைகின்ற இறைவனின் பெயரால் நிலங்கள் அனைத்தும் மடங்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் உடைமையாக உருவாகியிருந்தது. நிலத்தில் உழைக்கின்ற உழுகுடிகளுக்கும் அந்த உழவை சார்ந்த நிற்கக்கூடிய இன்னபிற உழைக்கும் குடிகளுக்கும் விடிவு காலம் என்பது இல்லாது இருந்தது.

பல்லவர்,சேர,சோழ மற்றும் பாண்டியர் ஆகிய முடியரசுகள் பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கி இருக்கின்றது. பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள், தேவதானம், கிராமங்கள் (கிராமம் என்பது வடமொழிச் சொல். கிரமம் என்றால் ஒழுங்கு என்று பொருள். ஒழுங்குடன் வேதத்தை கற்கின்ற இடமே கிராமம்) என நிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. மறுதலையாக உழவர்களிடம் உழவடை வரி, பாசன வரி, நில வரி, போன்ற வரிகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இந்த கடுமையான வரி விதிப்புகளின் காரணமாக உழுகுடிகளும் இன்னபிற உழைக்கும் குடிகளும் தத்தம் நிலங்களை விட்டு புலம்பெயர்ந்து அலைகுடிகளாக மாறி அலைந்து திரிந்து இருக்கின்றனர். விஜயநகர பேரரசு காலத்தில் உழவர்களிடமிருந்து நன்செய் நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. அம்மாதிரியான செயல்பாடுகளுக்கு எதிராக அணிதிரண்ட உழவர்களெல்லாம் குல நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழகம் வெப்ப மண்டல பகுதி என்பதால் 

ஆண்டு முழுவதும் உழவர்கள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான இயற்கை சூழல் அமையப் பெற்றிருக்கிறது. இன்றைக்கும் கூட பெரும்பாலான விளைநிலங்கள் கோயில்களுக்கும் அதனுடைய மடங்களுக்குமே சொந்தமாக இருந்து வருகின்றது. இந்த சூழலில் நாம் முடியரசு காலமும் அதற்குப் பின்னான விஜயநகரப் பேரரசு காலமும் அதற்குப் பின்னான காலனியாதிக்க காலத்தையும் கணக்கெடுத்து பார்த்தோமானால் உழவர்கள் ஆண்டு முழுவதும் உழைத்து உழைத்து வரியை மட்டுமே செலுத்தி வந்திருக்கின்றனர் என்பது நமக்குப் புலப்படும்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சங்க இலக்கியம் தொட்டு கல்வெட்டு ஆதாரங்கள், இலக்கியச் சான்றுகள் நாட்டார் வழக்காறுகள் என அனைத்திலும் உழவருக்கு ஒரு நாள் அதாவது உழவர் திருநாள் அல்லது தமிழர் புத்தாண்டு என்று ஒரு நாளை நம்மால் இனம் காட்ட முடியவில்லை. முடியரசு காலத்தில் காவிரிப்படுகைக்கு ஆடிப்பெருக்கு சிறப்பான நாளாக கருதப்பட்டது. இன்னும் சில இடங்களில் சித்திரை பொன்னேர் பூட்டுதல் என்கின்ற சடங்கின் மூலமாக உழவுத்தொழில் தொடங்கப்பட்டது. பெரும்பான்மையான இடங்களில் தை அறுவடை என்பது உழவடை வரி வசூலிப்பு நாளாகவும் கருதப்படுகிறது. ஆக புத்தாண்டு, முதல் நாள் என்பதெல்லாம் ஆட்சியாளர்களின் வரி வசூலிப்பு போன்றவைகளை மையப்படுத்தி அமைந்தனவே ஒழிய அவை உழைக்கும் உழுகுடி மக்களின் பண்பாடாக கருத முடியாது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் வேளாண்மை நிலங்கள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் வேளாண்மைக்கு ஆதாரமான நீர் நிலைகளான கண்மாய்கள் ஏரிகள் குளங்கள் ஆற்றுப்படுகைகள் ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. உணவுப் பயிர்களை விடுத்து பணப் பயிர்களான அவுரி, சணல், பருத்தி, புகையிலை, தேயிலை,அபின் போன்றவற்றை அதிகம் சாகுபடி செய்ய பணித்த பிரிட்டிஷ் அரசு உழவர்களை மேலும் ரயத்துவாரி என்ற வரி விதிப்பின் மூலமாக கொடுமைக்கு உள்ளாக்கியது. இதனால் பிரிட்டிஷ் அரசு காலகட்டத்தில் இந்திய துணைக் கண்டம் நிறைய பஞ்சங்களை எதிர்கொண்டது.

ஏற்கனவே நிலை பெற்றிருக்கின்ற ஆண்டான் அடிமை நிலவுடமை குமுகம் மற்றும் பிரிட்டிஷ் அரசின் எதேச்சதிகார உழவர் எதிர்ப்பு கொள்கைகள் இவற்றின் காரணமாக நிலத்தில் உழைத்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் உழைப்பிலிருந்து அதாவது உழவில் இருந்து வெளியேறி தேயிலைத் தோட்டங்களுக்கும் ஏலக்காய் தோட்டங்களுக்கும் கரும்புத் தோட்டங்களுக்கு ரப்பர் தோட்டங்களுக்கு கிழக்காசிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.

சங்க காலத்திலிருந்து சமகாலம் வரைக்கும் உழவர்களுடைய இன்னல்களையும் வாழ்க்கை பாடுகளையும் துன்பங்களையும் நாட்டார் இலக்கியங்களே பதிவு செய்து வந்திருக்கின்றன. நாட்டார் இலக்கியம் என்பது ஓர் கலகச் செயல்பாடு. உழைக்கும் மக்களின் உணர்ச்சிகளில் இருந்து, உணர்வுகளில் இருந்து வெளிவருகின்ற பாடல்கள் அன்றைய ஆண்டான் அடிமைக் குமுகத்தையும் அரச தோற்றங்களையும் சாடி இருக்கின்றது. 

"எட்டேரு கட்டி உழுது 

இடை தரிசு போட்டுழுது

வட்டங்க சேர்த்துழுது 

மகாராஜன் பண்ணையிலேயே

களையெடுக்கும் கம்மா புன்செய் கணக்குப் பார்க்கும் வேப்பமரம் கொத்தளக்கும் பொன்னுசாமி

 கூட நாழி போடுங்களேன்" என இப்பாடல் உழவன் கூலி உயர்வு கேட்டதை பதிவு செய்கிறது. 

"முக்காப்படி கேப்பைக்காக 

முந்தருந்து வாடுறனே

ஐயா முதலாளி- நீங்க 

அளக்குறது பொட்ட நாழி" 

நாழி என்றால் உழவர்கள் தங்களின் உழைப்பிற்கு கூலியாக பெறுகின்ற தவசத்தின் அளவு. கீழ்வெண்மணியில் ஆறு லிட்டர் நெல் கூலி உயர்வாக கேட்டதற்கு தீயில் கொளுத்தப்பட்ட உழவர்களின் பாடு சொல்லி மாளாது.கீழைத் தஞ்சையில் மக்கள் மனங்களில் வாழும் வெண்மணி தியாகிகள் பற்றிய நாட்டார் பாடல்கள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும். 

1947-இல் வெள்ளையர்கள் இந்திய துணைக் கண்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் 1952 ல் ஐக்கிய அமெரிக்க அரசின் பெருநிறுவனங்கள் இந்திய துணைக் கண்டத்திற்கு வணிக நோக்கத்தோடு பசுமைப்புரட்சி என்ற பெயரில் உள்நுழைந்தன. இதன் விளைவாக பெரு நிலம் கொண்ட பண்ணையார்கள் பலன் அனுபவித்தனர். குறு நில உழவர்கள் வேளாண்மையை விட்டு வெளியேறினர். 

பசுமை புரட்சி, நிலம் கையகப்படுத்தும் சட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம், அண்மையில் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் இவையெல்லாம் உழவர்களை விட வேளாண்மையில் நிற்கிற பெரு நிறுவனங்களுக்கு வலு சேர்ப்பவை ஆகும். மூன்றாம் உலக நாடுகளில் இருக்கிற வளங்களை முதலாளியம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக சுரண்டி வருகிறது. 

சீக்கிய உழவர்கள் போராட்டத்தில் இருந்த பொழுது வட இந்திய செய்தி ஊடகங்கள் போராட்டத்தை மலினப்படுத்தி செய்திகளை பரப்பியது. குமுக ஊடகங்களில் இவர்களின் போராட்டத்தை தீவிரவாதிகளின் போராட்டம், பிரிவினைவாதிகளின் போராட்டம் என பலவாறு திசை திருப்ப தொடர் பிரச்சாரங்கள் நடந்து வந்தன. சில முற்போக்குவாதிகள் கூட உழவர்களை புனிதப்படுத்த வேண்டாம் என்று அண்மைக் காலங்களில் எழுதி வருகின்றனர். 

"லத்தின் அமெரிக்காவில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், தனிநபர் வருமானங்கள் குறைவதற்கும் மக்கள் போராட்டங்கள் பின் அடைவதற்கும் இடையே நேரடி தொடர்பு இருக்கிறது" என்று ஜேம்ஸ் மெட்ராஸ் கூறுகிறார். இவருடைய கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் அண்மைக்காலங்களாக இந்திய துணைக்கண்டத்தில், தமிழகத்தில் நடந்து வருகின்ற போராட்டங்களும் அந்தப் போராட்டங்களுக்கு எதிராக திசை திருப்பப்படும் செய்திகளை உருவாக்குகிற ஊடகங்களும் திகழ்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

நிலத்தின் மீதான உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பது "நிலத்தோடு உழவுக்குடிகள் உறவாடிக் கிடந்தாலும், நிலத்தின் மீதான உரிமைகளை அதிகார அமைப்புகளும் அதிகார சேவகர்களும் கோயில்களின் பேராலும், வரிகளின் பேராலும், மடங்களின் பேராலும் மெல்ல மெல்ல தன் வயப்படுத்தி கொண்டதை வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன" என்று ஏர் மகாராசன் கூறுவதிலிருந்து தெரிகிறது. 

*உழுபவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும்.

*உழவனின் விளை பொருளுக்கு அவனே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

*உழவர்கள் கடனில்லா வாழ்வு வாழ வேண்டும்.

*உழவர்களின் பங்களிப்போடு வேளாண் பெருமதி ஒதுக்கீடு (budget) நடக்க வேண்டும்.

மேற்சொன்ன விடயங்கள் நடக்கிற நாளே உழவர்களின் திருநாள் ஆகும். அது பொதுவுடமையின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் கை கூடும். ஒரு தேசமானது தன் சொந்த மக்களையே ஒடுக்கும் பொழுது, பாட்டாளி வர்க்கம் அந்த மக்களுக்கான சுய நிர்ணய தேசத்தை வென்றெடுக்க முனைய வேண்டும் என்பார் லெனின். லெனினின் கூற்றை பஞ்சாப் உழவர் வகுப்பினர் நினைவு படுத்தி உள்ளனர். உழவர் புரட்சி நீடிக்கட்டும் !

உதவிய நூல்கள் : 

நா.வா பள்ளு பாட்டு ஆராய்ச்சி, ஏர் மகாராசன்

ஏகாதிபத்திய பண்பாடு, ஜேம்ஸ் பெட்ராஸ்

தமிழ் நாட்டு பாமரர் பாடல்கள், நா.வானமாமலை 

உலகாயுதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாய

x

சனி, 27 நவம்பர், 2021

சோசலிச தமிழீழம் : விடுதலைப் புலிகளின் வேலைத்திட்ட அறிக்கை.


சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்த, ஒடுக்கல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கிறோம். 


தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. அதே சமயம், எமது சமூகத்தை பிரபுத்துவ சமூக வடிவமாகவும் சித்தரிக்க முடி யாது. தமிழீழ சமுதாய அமைப்பானது தனக்கேயுரிய ஒரு தனித்துவமான பொருளுற்பத்தி வடிவமாகத் திகழ்கிறது. வளரும் முதலாளித்துவ அம்சங்களும். பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்றுகலந்த ஒரு சிக்கலான பொருளாதார அத்திவாரத்தில் எமது சமுதாயம் கட்டப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் எமது சமுதாயத்திற்கு அத்திவாரமாக விளங்கும் பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. 


எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும். இவ்விதம் ஒரு சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதாயின் பொருளாதார அமைப்பில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்; பொருளாதார உற்பத்தி உறவு புனரமைக்கப்படவேண்டும்; சமூக அதர்மத்தையும், மனிதனை மனிதன் சுரண்டும் அநீதியையும் கொண்ட உற்பத்தி உறவுகள் ஒழிக்கப்படவேண்டும். இப்படியான புரட்சிகர சமூக மாற்றத்தை ஏற்படுத்த எமது விடுதலை இயக்கம் உறுதிபூண்டுள்ளது. 


எமது சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு சாபக்கேடாகவும் சமூக சமத்துவத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாகவும் இருந்துவருவது சாதியக் கொடுமையாகும். சாதிய அமைப்பு எமது கிராமியப் பொருளாதார வாழ்வுடன் ஒன்றுகலந்திருக்கிறது. வர்க்க அமைப்புடன் இணையப்பெற்றிருக்கிறது. தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருள் உற்பத்தி உறவுகளுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. மத சித்தாந்த உலகிலிருந்து வேரூன்றி வளர்ந்திருக்கிறது. தொழிலின் மகத்துவத்தை இழிவுபடுத்தி, மனிதனை மனிதன் வேறுபடுத்தும் இந்த மூட வழக்குமுறையை முற்றாக ஒழித்துக்கட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திடசங்கற்பம் பூண்டிருக்கிறது. சாதியத்தின்பெயரால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து நசுக்கப்பட்டுவரும் தமிழீழப் பாட்டாளி வர்க்கத்தின் விடிவிற்காக எமது இயக்கம் அயராது உழைக்கும். உழைப்பின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச பொருளாதாரத் திட்டத்தை அமுலாக்குவதன் மூலமும், புரட்சிக ரமான கல்விமுறை வாயிலாகவும் இந்த சமூக தீமையை எமது இயக்கம் ஒழித்துக் கட்டும். 


தேசிய விடுதலைப் போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் ஒன்று சேர்த்ததாக, தேச சுதந்திரத்தையும் சமூகப் புரட்சியையும் ஒன்றிணைத்ததாக அமையப்பெற்றிருக்கும் எமது புரட்சிகர அரசியல் இலட்சியங்கள் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்பதோடு அல்லாமல் எமது சமூகத்தில் நிலவும் ஒடுக்கு முறைகளிலிருந்தும் எமது மக்களுக்கு சுபீட்சமளிப்பதை குறிக்கோளாகக் கொண்டி ருக்கின்றன. இந்த அரசியல் இலட்சியங்களை அடைவதற்காக எமது இயக்கம் கீழ்க் கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கிறது. 


* தேசீய, சமூக விடுதலை என்ற பொது இலட்சியத்தில் தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, அவர்களை ஒருங்கிணைந்த தேசிய மக்கள் சக்தியாக அணி திரட்டுவது. 


* தேசிய-சமூக விடுதலை என்ற இலட்சியத்தை முனைப்புறச்செய்து துரிதப்படுத்தும் நோக்குடன் மக்கள் மத்தியில் தேசியப் பற்றுணர்வையும் பாட்டாளி வர்க்கப் பிரக்ஞையையும் தட்டி எழுப்பிக் கட்டி வளர்ப்பது. 


* வெகுசன அரசியல் போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் வலுப்படுத்தி தீவிரப்படுத்துவதுடன் பரந்துபட்ட பொது மக்களை தேசிய விடுதலைப் போராட்டத்தில் நேரடிப் பங்குதாரர்களாக மாற்றுவது. 


சோசலிச தமிழீழம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்ட நூலின் இரண்டாம் பகுதி.

*

நூலின் முழுமையான பகுதியை மின் நூல் வடிவில் வாசித்திட

https://online.anyflip.com/shrf/lbll/mobile/index.html#p=2

வெள்ளி, 26 நவம்பர், 2021

ஒளி கொண்டு வருபவன் : சி.மோகன்

ஒளி கொண்டு வருபவன்

மீண்டும் வருவான்

மீண்டும் மீண்டும்

மீண்டு வருவான்.


நிலத்தில் பிறந்த அவன்

வளரிளம் பருவத்தில் 

நிலம் மீது கவிழ்ந்திருந்த 

இருள் கண்டான்.

நிலம் மூடிய இருள் நீங்க

ஒளி சேகரிக்கக் காடு சென்றான்.


காட்டின் பாதைகளெங்கும்

நீந்தி அலைந்தும்,

சமுத்திரப் பாதைகளெங்கும்

நடந்து கடந்தும்,

நிலத்தின் பாதைகளெங்கும்

பறந்து திரிந்தும்

ஒளி சேர்க்கும் வித்தை கற்றான்.


சேகர ஒளியோடு

அவ்வப்போது நிலத்தை

மின்னலென ஊடறுத்து

பறந்து மறைந்தான்.


கால கதியில் உள்ளும் புறமும்

சேகரமான ஒளிப் பிரவாகத்தில்

ஒளி ஊற்றென உருக்கொண்டான்,

நிலம் திரும்பினான்.


நிலமேகிய ஒளி ஊற்றில்

தகதகத்தது நிலம்.

வெளிச்சத்தின் பாதை விரிந்து படர்ந்தது.

களவாடப்பட்ட பாதைகள் கையகப்பட்டன

விபத்துகளற்ற மீட்சிப் பாதை.


எங்கும் இருந்ததில்லை

எப்போதும் இருந்ததில்லை

வெளிச்சத்தின் உக்கிரத்தில்

சில விபரீதங்களும் நிகழ்ந்தேறின.


கால மாறாட்டத்தில்

வஞ்சனையும் சூழ்ச்சியும் கவிந்த

நிலவெளி இருள் 

சக்திகளின் சதியாட்டத்தில்

அடர்திட்டுக் கருப்பு 

மீண்டும் நிலத்தில் 

அப்பிக் கொண்டுவிட்டது.


பேரிருள் கொண்டது நிலம்

பேரிடர் கண்டது இனம்

மீண்டும் காடேகினான் அவன்.


ஒளி கொண்டு வருபவன்

பேரொளி ஊற்றென

மீண்டும் வருவான்.

மீண்டும் மீண்டும்

மீண்டு வருவான்

சூரியக் குழந்தை அவன்.


- சி.மோகன்

திங்கள், 22 நவம்பர், 2021

திருவள்ளுவருக்குக் கிறித்துவ அடையாளம் தருவது, தமிழரின் சிந்தனை மரபை மறுக்கும் கருத்துத் திணிப்பாகும் : செ.தமிழ்நேயன்


தமிழின் தனித்தன்மையை உலகம் கொண்டாடும் வேளையில், தெய்வ நாயகம் போன்ற அற்பர்கள் திருவள்ளுவருக்குக் கிறித்தவச் சமயச்சாயம் பூசுவது காலத்தின் கொடுமை.

சமகாலத்தில் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேற்றுவதன் பின்னணி குறித்து ஆராய வேண்டியுள்ளது.

வள்ளுவர் தோற்றம் பற்றிய தோராயக் கருதுகோளைக் கொண்டுதான், தெய்வ நாயகம் போன்றவர்கள் தான்தோன்றித் தன்மையோடு வள்ளுவரின் படைப்புகளுக்குச் சமயச்சாயத்தை அள்ளி வீசுகின்றனர். 

பொதுவாக, ஆண்டுக் கணக்கீட்டைக் கிறித்துவுக்கு முன், பின் என்ற  மேற்கத்திய ஆய்வாளர்கள் வரையறை செய்ததன் விளைவால் இது போன்று அவர் பதிவு செய்கிறார். 

பறங்கி தோமா வந்து இறங்கியதாகக் கருதப்படும் காலத்தில், இந்நிலத்திற்கு இந்தியா என்ற பொதுப்பெயர் இல்லை. இந்து தேசம் என்ற அடையாளப்பெயரும் இல்லை.

நாவலம் பொழில் என்று அழைக்கப்படும் பகுதி  குமரிக்கண்டத்தின் நீட்சி என்று இலக்கியச் சான்றுகள் நிறுவுகின்றன.

மொழியின் தோற்றம் பற்றிய புரிதல் இல்லாமல் கிறித்தவ சமயத்திற்குத் தமிழ் அடையாளம் வேண்டி இது போன்ற ஒவ்வாமைக் கருத்துக்களைத் திணிக்கிறார். 

தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான திருக்குறளை, குறிப்பிட்ட சமயம் சார்ந்த நூலாக நிறுவுவதன் மூலம் தமிழர்களிடத்தில் தனித்த சிந்தனை மரபு  இல்லை என்பதாகக் கட்டமைப்பதற்கு   முயற்சிகள் செய்கிறார். 

இது போன்ற கருத்துத் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்காமல்  தமிழர்கள் கடந்து செல்கின்றனர்.

சாதி சார்ந்து இயங்குவதால்தான் தெய்வநாயகம் போன்ற இரண்டகர்கள் தமிழுக்குத் தொடர்ந்து தீங்கு விளைவிக்கின்றனர். 

தமிழருக்கு மதம் அடையாளமும் இல்லை; சாதி அடையாளமும் இல்லை!தமிழ் மட்டுமே தமிழருக்கு அடையாளம் என்பதே வரலாற்று உண்மை. 

செ.தமிழ்நேயன்.

சனி, 20 நவம்பர், 2021

வரலாறு புலிகளை விடுவிக்கும் : பரணி கிருஷ்ண ரஜனி


புலிகள் இயக்கம் குறித்து முழுமையாக அறிந்த ஒரு நபர் என்றால் அவர் தலைவர் மட்டும்தான். 

ஏனைய தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அவர்கள் போராட்டத்தில் இணைந்த காலப்பகுதி, வகித்த பதவி, இயக்கத்தில் நீடித்த காலப் பகுதியை பொறுத்து அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால் அது முழுமையானது கிடையாது.

இயக்கத்திலிருந்தவர்களின் நிலையே இது என்ற போது நம் போன்று வெளியிலிருந்தவர்களின் கதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

புலிகளின் பலம் என்பதே அவர்களின் இரகசியம் பேணும் இந்த முறைமைதான்.

துரதிர்ஷ்டவசமாக 2009 இற்குப் பிறகு அது எமக்குப் பலவீனமான ஒரு அம்சமாகப் போய் விட்டது.

காரணம், யாரிடமும் முழுமையான தரவு இல்லை. ஆவணம் இல்லை.

ஆவணப்படுத்தலில் புலிகள் போன்ற ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் இதுவரை தோன்றியதில்லை.

ஆனால் அவற்றை நாம் முள்ளிவாய்க்காலில் இழக்க வேண்டியதாயிற்று.

எமது நீதிக்கான பயணத்திற்கு மட்டுமல்ல தொடர்ந்து போராடவும், இன அழிப்பை எதிர்கொள்ளவும் புலிகளின் முழு வரலாறு நமக்குத் தேவைப்படுகிறது.

கூடவே இந்த மனித குலம் புலிகளிடம் இருந்து கற்க நிறையவே இருக்கிறது. 

அது ஒரு இயக்கம் அல்ல மனித குலத்திற்குக் கிடைத்த பொக்கிசம். இப்போது இது கேலிக்குரியதாக இருக்கலாம். ஆனால் இதற்கான தெளிவான பதிலை ஒரு நாள் வரலாறு எழுதும்.

நாம் புலிகளை கோட்பாட்டுருவாக்கம் செய்யும் பணியில் இருப்பதால் புலிகளைத் தொடர்ந்து கற்று வருகிறோம்.

தினமும் ஏதோ ஒரு விடயம் எம்மை வியப்பிலாழ்த்திக் கொண்டேயிருக்கிறது.

அதிலிருந்தே மேற்படி எதிர்வு கூறலை முன் வைக்கிறோம்.

அதில் ஒன்றுதான் இந்த 'சிங்கள மொழி, கலாச்சார கல்வி நிலையம்'.

இது குறித்து 2009 இற்கு முன்பே எமக்குத் தெரியும். ஆனால் எந்த வித ஆவணமும், ஆதாரமும் இல்லாமல் இதை வெளிப்படையாக எழுத முடியாத இக்கட்டு.

காரணம், எதிரிகளை விடுவோம். நம்மவர்களே வந்து ' யாருக்கு கதை விடுகிறீர்கள், ஆதாரம் இருக்கா? ஸ்கிரீன்சொட் இருக்கா?' என்று கிளம்பி விடுவார்கள்.

நடைமுறையில் இதைத் தினமும் அனுபவித்து வருகிறோம்.

இந்த சின்னத் துண்டுப் புகைப்படம் கூட நேற்று எதேச்சையாக முகநூலில் சிக்கியது

இது கூட புலனாய்வுத்துறையிடம் இந்தக் கட்டமைப்பு இருந்த போது எடுத்த படம்தான்.

இந்தக் கட்டமைப்பு குறித்து நிறைய எழுதலாம். அதற்கு இங்கு இடம் காணாது. மீதியை சம்பந்தப்பட்ட சாட்சிகள்தான் எழுத வேண்டும்.

நமக்குத் தேவையானதும் எதிரிகளுக்கும், இந்த உலகத்திற்கும் சொல்ல வேண்டிய செய்திதான் முக்கியம்.

தமது நிலத்தை ஆக்கிரமித்து மொழி, பண்பாடு, கலாச்சார அழிப்பை மேற்கொள்ளும் ஒரு இன அழிப்பு அரசின் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை கற்கவும் அதைப் பாதுகாக்கவும் ஒரு கட்டமைப்பை உலகில் யாராவது நிறுவுவார்களா? 

ஆனால் புலிகளால் அது முடிந்திருக்கிறது. இவர்களுக்குத்தான் இந்த உலகம் பயங்கரவாதப் பட்டம் சூட்டியுள்ளது.

அன்று மட்டுமல்ல இன்றும் மிகத் தீவிரமாகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினூடாகத் தமிழ் நிலத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசிற்கு யோக்கியன் பட்டத்தைக் கொடுத்திருக்கிறது இந்த கேடு கெட்ட உலக ஒழுங்கு.

ஆனால் அறத்துடனும், நேர்மையுடனும் மானுட குலத்திற்கே முன்னுதாரணமாக இப்படியான பன்மைத்துவ கட்டமைப்புக்களை உருவாக்கியதன் வழி இந்த உலக ஒழுங்கை நிர்மூலம் செய்ய புகுந்ததன் விளைவாகவே புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்பதுதானே இதன் மறுவளமான உண்மை.

எனவே இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

புலிகள் எமது மீட்பர்கள் மட்டுமல்ல இந்த இனத்தின் பெருமிதம், கர்வம், செருக்கு எல்லாமுமே அவர்கள்தான்.

வரலாறு புலிகளை விடுவிக்கும்.

Paranii Krishna Rajani அவர்களது முகநூல் பதிவிலிருந்து..

திங்கள், 13 செப்டம்பர், 2021

புத்தகம் - கவிதை : அ.ம.அகரன் தமிழீழன்


உன் நிழல் பயணத்தில்
முள் பாதையும் 
மலர்ப் பாதையாகும்.

உன்னோடு பயணம் செய்தால்
நாடி நரம்புகள் துள்ளும்.

உன் எழுத்துயிர் பிடித்தால்
மேதைகள் ஆக்கும்.
மனிதர்களை மேதைகளாக்கி இப்பூவுலகையும் மயக்கும்.

உன் உயிர் ஞானத்தால்
இந்த ஞாலமும் 
பூச்சூடிக் கொள்கிறது.

உன்னைச் சுவாசிக்காதவர்கள்
உலகில் நிலைத்ததில்லை.

காகிதப்பூ மணக்காதென்பர்.
நீயும் காகிதம்தான்
மனதுக்குள் எப்போதும்
மணத்திருக்கிறாய்.

உன்னை வாசித்துச் 
சுவாசிப்போரது மனம்
வானமாய் விரிகிறது.

அ.ம.அகரன் தமிழீழன்.



சனி, 21 ஆகஸ்ட், 2021

பெண்களின் புரட்சிகர வாழ்வும் தேவையும்: பாரீஸ் கம்யூனில் பெண்கள் நூல் மதிப்புரை :- க.நாகராசு

 



நிழல் வண்ணன் ஆங்கிலத்தில் இருந்து, தமிழில் மொழிபெயர்த்த 'பாரிஸ் கம்யூனில் பெண்கள்' என்ற புத்தகம், பெண்களின் புரட்சிகரப் போராட்ட வாழ்வை அறிந்து கொள்ளவும், பெண்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் தேவையையும் உணர்த்தும் மிக முக்கியமான நூலாகும். 

கம்யூனிசம் இல்லாமல் பெண்களின் விடுதலையை நினைத்துப் பார்க்க முடியாது என்றால், கம்யூனிசத்தையும் பெண்கள் விடுதலை இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது என, 1917இல் ரஷ்யப் புரட்சியின் பெண்கள் துறையின் முதலாவது தலைவர் இனஸ்ஸா அர்மான்ட் கூறியுள்ளார். 

இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது. இதில் மனிதன் தலைமையானவன். இயற்கை தன்னுடைய சேவையினை அனைத்து உயிர்களுக்கும் வாரி வழங்குவதில் எந்தவிதமான தர அளவுகோலையும் வைத்து வேறுபடுத்துவதில்லை. இயற்கையே சமத்துவத்திற்கான உச்சம். அதாவது, இயற்கையின் சமத்துவத்தைப் பற்றிப் பேசும்பொழுது வேறுபாடு பார்ப்பதில்லை. உதாரணம், மழைப் பொழிவில் வேறுபாடு இல்லை; வெயில் அடிப்பதில் வேறுபாடு இல்லை; புயலடிப்பதிலும் வேறுபாடு இல்லை; வறட்சி ஏற்படுவதிலும் வேறுபாடு இல்லை; பெரும் நோய்த் தொற்று உருவாவதிலும் வேறுபாடில்லை. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அனைத்து உயிரினங்களுக்குமான  பிறப்பு முதல் இறப்பு வரை எந்த வேறுபாடும் இருப்பதில்லை மனிதனைத் தவிர்த்து.  

மனிதன் வாழும் இவ்வுலகில் இனம், மொழி, சாதி, மதங்கள் இதனோடு கூடவே  வர்க்க வேறுபாடுகளையும் அவன் உருவாக்கினான். அதுவே அவனுக்குப் பெரும் தடைகளாக இருந்து கொண்டிருக்கின்றன. இத்தடைகள் அனைத்திற்கும் அவனே உரிமையாளன். 

இவை ஒருபுறமிருக்க, மானுட சமூகத்தின் பகுதிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெண்களின் நிலையோ பெரும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் உட்பட்டதாகப்  பல ஆண்டுகள் இருந்து வருகிறது. இன்றைக்குப் பெண்கள் சாதிக்காத துறையே இல்லை என்ற அளவிற்கும், அவர்கள் ஆண்களுக்கு இணையான உரிமையினை முழுவதுமாக அனுபவிக்கும் ஒரு முன்னேற்றமான நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். 

ஒவ்வொரு வெற்றிக்குப் பின்பும் ஒரு கசப்பான  வரலாறு இருப்பதனைப் போன்று, பெண்களின் உடைமைக்கும் உரிமைக்கும் போராடிய ஒரு  வரலாறு இருக்கிறது.  இந்த வளர்ச்சியை எட்டுவதற்கு அவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள்,  புரட்சிகள், துன்பங்கள், துயரங்கள் ஏராளம் ஏராளம். அதனால், அவர்களுக்கு  உடல்ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் பட்ட காயங்கள் ஆறினாலும், அவற்றின் வடுக்கள் இன்னும்  ஆறவில்லை. 

இவை மேற்கத்திய நாடுகளில் நடந்த போதிலும், உலக முழுவதிலும் உழைக்கும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளோடு பெரிதும் தொடர்புடையவை. 

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் பெண்கள் வர்க்க ரீதியாக அதாவது பாலின ரீதியாகப் பார்க்கப்பட்டனர் ஆளும் வர்க்கத்தினரால். மேலும், அவர்கள் அனைத்து நிலைகளிலும் பன்னெடுங்காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டு உரிமைகள் அற்ற சமூகமாகவும், சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டவர்களாகவும் பெண்கள் இருந்தனர்.  

அவர்கள் இயற்கையளித்த  வாழும் உரிமைக்குக்கூட போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதற்குக் காரணமான பழமைவாத அதிகார வர்க்கத்திற்கு எதிராக அவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுப்பதோடும் மட்டுமல்லாமல், களத்தில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். 

அவர்களின் கோரிக்கைகளில் பிரதானமானவை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், குடும்ப வன்முறையிலிருந்து விடுதலை, சொத்துரிமை, கல்வி உரிமை, கருக்கலைப்பு உரிமை, மணவிலக்கு உரிமை, வேலைவாய்ப்பு, பொதுவெளியில் தன்னுடைய உரிமைக்காகப் போராடுதல், சங்கங்களை அமைத்துப் போராடுதல், சமவேலைக்குச் சம ஊதியம். ஆக, ஒட்டுமொத்த அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற எண்ணினார்கள்.  

இவைகளை மீட்டெடுக்க வேண்டுமானால், வெறுமனே குரல் எழுப்பிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. இறங்கிப் போராட வேண்டும். இதனை நிறைவேற்றவே பாரிஸ் கம்யூன் உருவாக்கப்பட்டது. 

1870ஆம் ஆண்டு பிரங்கோ பிரஷ்யன் போரில் பிரான்சு முழுமையாக தோற்கடிக்கப்பட்டதன் விளைவு, பிரான்சை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர அனைத்து வலிமையான முயற்சிகளையும் பிரஷ்யாவும் பிரான்ஸிலிருந்த பழமைவாத அரசும் பெரும் முயற்சி மேற்கொண்டது. இதனை உடைத்தெறியும் விதமாக அதிகார வர்க்கத்தை எதிர்த்து உழைக்கும் வர்க்கத்தினர் கம்யூன்( உலகின் முதலாவது தொழிலாளர் குடியரசின்) ஏற்படுத்தினார்கள். இதில் பெண்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஆயுதங்களைக் கொண்டு புரட்சியினை முன்னெடுத்தார்கள். 'எங்களுடைய தேசத்திற்காக உயிர் இழக்க வேண்டிய உச்சக்கட்ட தருணத்திற்கு நாங்கள் வந்து விட்டோம். இனிமேலும் பலவீனம் இல்லை. இனிமேலும் தயக்கமில்லை. அனைத்துப் பெண்களும் ஆயுதம் ஏந்துவோம். அனைத்துப் பெண்களும் கடமை ஆற்றுவோம். வெர்செயில்சைத் துடைத்தெறிவோம்' என்ற இடிமுழக்கமிட்டார் நதாலிலே மேலி. 

மேலும், இவர் பாரிஸ் கம்யூனில் பங்கேற்று தற்காப்பு மற்றும்   காயமடைந்தோருக்கு உதவும் பெண்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். அன்று பாரிஸ் பெண்களைப் போராட தூண்டியது ரொட்டியே(உணவு). இது வெறும் உணவு மட்டுமல்ல, இவை அவர்களை உயிருடன் வைத்திருக்கும் உயிர்க் காற்றைப் போன்றவை. இதனை உறுதி செய்யத் தவறிய ஒரு அரசு இருப்பதைவிட, அதனை அழிப்பதே சாலச் சிறந்ததாகும் என்ற தீர்மானகரமான  முடிவினைப் பெண்கள் எடுத்தனர். அதனை முன்னெடுத்த பாரிஸ் பெண்கள் பழைமைவாத அரசினைத் தூக்கி எறிவதற்கு புரட்சியை உருவாக்கி ஆயுதம் கொண்டு தாக்கினார்கள். அவர்களிடம் இவை போர்க்குணத்தைத் தூண்டியது. இருந்தபோதிலும், இதனைச் சிறுமைப்படுத்தும் நோக்கோடு அங்குள்ள புருதோனின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களோ பெண்களைப் பற்றியான கீழான எண்ணம் கொண்டிருந்தார்கள். 

அதாவது, பாரிஸ் பெண்களுக்குச் சரியான இடம் வீட்டில் மனைவியாக இருப்பது அல்லது பாலியல் பணி செய்வதுதான் என்றார்கள். 

இவை எவ்வளவு பெரிய கொச்சைத்தனமானவை. இதனையெல்லாம் கிழித்தெறிய வேண்டாமா என்று பெண்களே பெண்களை உற்சாகப்படுத்தினார்கள். மேலும், உணர்ச்சி மிகுதியுள்ள பெண்கள் இவ்வரசினை வெறுத்துக் கூறும்போது,  இப்படியாகக் காலம் காலமாக இவை அதிகார வர்க்கத்தின் மனநிலையாக இருப்பதனை வன்மையாகக் கண்டித்ததோடு அதைனைப் பொய்த்துப் போகச் செய்யவே பாரிஸ் கம்யூனில் பெண்கள் புரட்சிகரமாகப் பங்கெடுத்து போராடினார்கள். 

மேலும் அவர்கள் கூறும் பொழுது, இரத்தம் சிந்தும் நிலைமையைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் சட்டமன்றத்திற்குப் பழைய அரசாங்கம் இனிமேலும் அதிகாரமில்லை. அரசின் அதிகார மையம் என்று அறிவித்து வெர்செயில் நகரத்து அரண்மனை நோக்கி அணிவகுத்தனர். 

பெண்கள் புரட்சியினை இன்னும் தீவிரப்படுத்தினார்கள். பிரான்சின் பிற்போக்கு தலைவனான அபால்ப் தி யர்ஸ் தொழிலாளர்களின் ஆயுதங்களைப் பறிக்க முயற்சி செய்தபோது, அதனைத் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் , புரட்சிகரப் பெண்கள் அவர்களைச் சுட்டுத்தள்ளவும் செய்தார்கள். 

கம்யூனின் பெண் தலைவராக இருந்த லூயி மிச்செல் அவர்கள், புரட்சியின்போது பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுக்கும் அயராது உழைத்தார். உழைக்கும் பெண்களைச் சுரண்டலில் இருந்து பாதுகாக்க எலிசபெத் திமித்திரியும் பெண்களின் சங்கத்தை நிறுவினார். மேலும், அரசின் அதிகார கோமகன்கள் 'பெண்கள் என்றாலே கணவனுக்கு நம்பிக்கையான மனைவியாக இருந்து கொண்டு பிள்ளை பெற்றெடுக்க வேண்டும்' என்றார்கள். வீட்டு வேலைகளைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். பாலியலுக்கு உள்ளாக வேண்டும். தங்களின் உரிமைக்காக வீட்டிலேயே இருக்க வேண்டும். பொது வெளியில் இறங்கி தங்கள் உரிமைக்காகப் போராடக் கூடாது. சங்கங்கள் அமைக்கக்கூடாது என்றெல்லாம் இருந்த பழமைவாத கெட்டி தட்டிப் போன எண்ணங்களுக்குப் பாரிஸ் பெண்கள் சாவுமணி அடிக்கத் தொடங்கினார்கள். 

மேலும், பிற்போக்குப் படைகள் பாரிசின் கோட்டைச் சுவர்களைத் தாக்குமானால் உச்சகட்ட அபாயத் தருனத்தில் பாரிஸின் அனைத்து தடையரண்களிலும்  கோட்டைக்காவல் பகுதிகளிலும்  தாங்களும் தங்களுடைய சகோதரர்களைப் போல, கம்யூனின் அதாவது மக்களின் வெற்றிக்காகவும் பாதுகாப்புக்காகவும்  தங்கள் இரத்தத்தையும் உயிரையும் எப்படித் தருவது என்பதனைப் பாரிசின் பெண்கள் பிரான்சுக்கும் உலகுக்கும்கூட நிரூபிப்பார்கள் என்று அப்பெண்கள் அறிவித்தார்கள்.  இக்கூற்று புரட்சிகரப் போர்களத்தில் பெண்களின் துணிவையும் திறனையும் சந்தேகிக்கும் மற்றும் கீழான எண்ணங்கள் கொண்டிருக்கிற அனைவரின் முகத்திலும் எச்சிலைக் காரி உமிழ்வதனைப் போன்று உள்ளது. 

புரட்சிகரப் பெண்கள் இதோடு நின்றுவிடாமல், இம்மானுட சமூகத்தில் வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும், தாங்கள் இரண்டாம் நிலைக்கும் அதாவது கடைசி நிலைக்கு ஆளாக்கப்படுவதனைத்  தீவிரமாகவும் எதிர்த்தார்கள். மேலும், அவர்கள் இயற்கை உண்மையினைப் பேசத் தொடங்கினார்கள். அதிகார வர்க்க ஆண்கள் எப்படி கருவுற்றுப் பிறந்தார்களோ, அதேபோன்றுதான் நாங்களும் பிறந்தோம். அவர்கள் எப்படி சுவாசிக்கிறார்கள்? அப்படியேதான் நாங்களும் சுவாசிக்கிறோம். அவர்கள் எப்படி உடல் உபாதைகளைத் கழிக்கிறார்களோ அதே போன்றுதான் நாங்களும் கழிக்கிறோம். என்ன உடல் உறுப்புகளில் மட்டுமே ஒரு சிறிய வேறுபாடு அவ்வளவே. இவை இயற்கையின் உருவாக்கம். இதில் தலையிடுவதற்கு ஏதுமில்லை. 

இந்த அதிகாரத் திமிர் பிடித்த வர்க்கம் மட்டும் சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறார்கள். அதனைப் போன்று தாங்களும் சுதந்திரமாக வாழ ஆசைப்படுவதாகப் பாரிஸ் பெண்கள் தங்களுடைய வேதனையினையும் ஆத்திரத்தினையும் வெளிப்படுத்தினார்கள். ஆனால், அதிகார வர்க்கம் இவர்களின் ஞாயமான கோரிக்களை ஏற்க மறுத்தது. இதன் விளைவாகவே புரட்சிகரப் போராட்டத்தில் பாரிஸ் பெண்கள் போராடினார்கள்; அப்படியே வெற்றியும் பெற்றார்கள். 

உதாரணம், என்னதான் புவியின் மேற்பரப்பு கடும் பாறையினால் இறுகிக் கெட்டி தட்டிப் போயிருந்தாலும், பூகம்பம் ஏற்படும்போது  தனக்கான பாதையில்  எவை இருந்தாலும் அதனைத் தகர்த்தெறியத் தயங்குவதில்லை. அதனைப் போன்றுதான் இப்பெண்களும் என்னதான் அவர்களை அதிகார பலம்  தடுத்து இருத்தி வைத்திருந்தாலும், அவர்கள் அதனைப் புரட்சியின் மூலமாக உடைத்தெறிந்தார்கள். 

புரட்சி என்று வந்துவிட்டால் அதில் பாதிக்கப்படுபவர் அவர் இவர் என்ற பாகுபாடு கிடையாது. ஆனால், அதே சமயத்தில் அதில் பங்கேற்பதற்குக் குழந்தைகள் மற்றும் வயதானவர்களைத் தவிர்த்து அனைவரும் ஒட்டுமொத்தமாகப் புரட்சியில் பங்கெடுக்கும்போது மட்டுமே அப்புரட்சி கண்டிப்பாக வெற்றி அடைந்தே தீரும் என்றனர். 

புரட்சிகர பாரிஸ் பெண்கள், புரட்சியின்போது பாரிஸில் உள்ள டி வில்லா  உணவு விடுதியினைக் கோடாரி, கடப்பாரைகள் கொண்டு அதனை உடைத்தார்கள். இன்னும் சொல்லப்போனால், புரட்சியினைப் பெண்கள் பாதுகாத்தார்கள். இதன் விளைவு, பெண்கள் ஆண்களை ஆதரித்தார்கள். அவர்கள் செயல்படவும் ஊக்குவித்தார்கள். பிரபலமான சங்கங்களின் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்தார்கள். தெருக்களையும் அவர்களுடைய சொந்த அரசியல் வெளியையும் உருவாக்கிக் கொண்டார்கள். இதில் சேனஸ் நியூ லோடங்கள் பெண்களின் உரிமைக்காகத் தீவிரமாகக் களம் கண்டவர். 

பாரிஸ் கம்யூன் உழைக்கும் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, அவை குறிப்பாக ஒட்டுமொத்த  உலகப் பெண்களுக்குமான வாழ்வியல் போராட்டமும் கூட. இங்கு அனைத்துப் பெண்கள் என்பது, மேல்தட்டுப் பெண்களையும்கூடச் சாரும். 

ஏனெனில், அவர்களும் தன்னுடைய அதிகாரத் திமிரில் உள்ள ஆளும் வர்க்கக் கணவனை மீறி அவர்களால் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது. இந்த கம்யூனின் புரட்சியின் மூலம் இதுவரை இருந்த மூட நம்பிக்கையான பெண்கள் வீதியில் இறங்கிப் போராட மாட்டார்கள்; வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பார்கள் என்பதனைப் பொய்த்துப் போகச் செய்தது. 

மேலும், உலகில் நடைபெற்ற பல்வேறு பெண்கள் போராட்டத்தை இங்கே விவரிக்கலாம். இன்னும் பெண்களின் பிரதானமான கோரிக்கைகளான சொத்துரிமை, வாக்குரிமை, குடும்ப அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, கருக்கலைப்பு உரிமை, கல்வி, வீட்டுவசதி, சம வேலைக்குச் சம ஊதியம் ஆகியவற்றிற்காகவும்  போராடினார்கள். 

இப்போராட்டத்தில் குறிப்பாகத் தீப்பெட்டித் தொழிலாளர்களுக்காகப் பொதுவுடைமைத் தத்துவத்தின் மெய்ஞ்ஞானியான காரல் மார்க்ஸ் அவர்கள் புதல்வியான எலியானா மிகவும் தீவிரமாகப் பங்கெடுத்தார். 

ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியிலான அரசு அமைய வேண்டுமானால், அங்கு வாழும் தகுதியுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும். இன்னொரு வகையில் சொன்னால், இதுதான் சமத்துவம், உண்மையான ஜனநாயகம் ஆகும். ஆனால், இந்த வாக்குரிமை தகுதியுள்ள பெண்களுக்குப் பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டது. என்றைக்கு இவை மறுக்கப்பட்டதோ அன்றே இந்த சமத்துவமும் ஜனநாயகமும் செத்துப் போய்விட்டன. இருந்தும், இங்கிலாந்துப் பெண்கள் தங்களின் தொடர்ப் போராட்டத்தின் மூலமாக அவர்கள் வாக்குரிமை பெற்றார்கள்.1918ஆம் ஆண்டு 30 வயதிற்கு மேற்பட்ட பிரிட்டிஷ் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். அதற்குப் பெண்களின் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய சில்வியா பங்குர் ஸ்ட்டின் பங்கு மிக முக்கியமானது. 

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, அன்றும் இன்றும்  பெண்களுக்கான  முழு விடுதலை பற்றிய கோரிக்கைகள்  எழுந்த வண்ணமே இருக்கின்றன. மேலும், இவை பன்னெடுங்காலமாக  ஒருசிலவைகளைத் தவிர்த்துப் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாமலே ஏட்டளவிலேயே இருந்தன. 

உதாரணம், பெண்கள் மீதான குடும்ப வன்முறை பல ஆண்டுகளாக நீடித்திருந்த ஒரு பெரும் பிரச்சினை. 1917 போல்ஸ்விக் புரட்சிக்கு முன்பு ரஷ்யாவில் தனது மனைவியை அடிப்பதற்கு கணவனுக்குச் சட்டப்பூர்வ உரிமை இருந்தது. இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு போல்ஸ்விக் புரட்சி ஒரு முடிவு கட்டியது. மேலும், குடும்ப வேலைகளைப் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற ஒரு குறுகிய மன நிலை பன்னெடுங்காலமாக அதிகார வர்க்க ஆண்கள் மத்தியில் இருந்து வருகிறது. பெரும்பாலான  ஆண்கள் மத்தியிலும் இந்தப் பொதுப்புத்தி இருக்கிறது. ஏன், வீட்டு வேளைகளைப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா என்ன? ஆண்களுக்கு இதில் பொறுப்பில்லையா? 

ஒரு ஆண் தன்னுடைய மனைவியைக் கீழான நிலையில்  நடத்துகிறான் என்றால், அதே போன்றுதான் அக்குடும்பத்தில் வளரும் பெண் குழந்தையின் நிலைமையும் எதிர்காலத்தில் இருக்கும். அன்றைக்கு மட்டும் தன்னுடைய பெண் அவளுடைய கணவனிடத்தில் படும் கொடுமையைக் கண்டு ஐயகோ என்று புலம்புவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?. என்பதனை அதிகார வர்க்க ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

குடும்பப் பெண்களின் நிலைமை பற்றி ஏங்கல்ஸ் அவர்கள், குடும்பத்தில் உள்ள ஆண், அதிகாரத்தை எடுத்துக் கொண்டான். பெண் தாழ்த்தப்பட்டு அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டாள். அவள் ஆணின் காமத்திற்கும் அடிமையாகவும், குழந்தைகளைப் பெறும் கருவியாகவும், ஆனால் மனைவியின் கற்பை உறுதிப்படுத்துவதற்காக அதன் மூலம் தனது குழந்தைகளின் பெற்றவனாக உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவள் கணவனின் அதிகாரத்தால் நிபந்தனையின்றி விடப்பட்டாள். அவன் அவளைக் கொன்றால், அது அவன் தனது உரிமையை நிலை நாட்டுவதாகும் என்பார். இதில் கடைசி வரியை வாசிக்கும் பொழுது மனதினைக் கூடுதலாகவே அழுகிறது. 

இதனை வாசிக்கும் போதே இவ்வளவு பாரத்தை ஏற்படுத்துகிறது என்றால், இக்கொடுமைகளை அன்று அனுபவித்த பெண்களின் மனது என்ன பாடுபட்டிருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். 

அப்படி என்னதான் பெண்கள் குற்றத்தைச் செய்தார்களாம். 1917 ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சிக்கு முன்பு மனைவியை அடிப்பது சட்டப்படியான உரிமை என்கிறது. இங்கு அவளைக் கொலை செய்வது கணவனின் உரிமை என்கிறது. என்ன இது  பெண்களாகப் பிறந்தது பெரும் குற்றமா? பெண்கள் இல்லாமல் இவ்வுலகில் ஆண் சமூகம் எப்படி வாழ முடியும்? பெண்கள் இல்லையேல் இவர்களுக்கு ஏது உடல்ரீதியான ஆசை? கல்யாணம்? குழந்தை குட்டிகள் பெற்றுக் கொள்வது, குடும்பம், சமூகம், வளர்ச்சி, முன்னேற்றம், சாதனை. இன்னும் சொல்லப்போனால், இந்த அதிகார வர்க்கம் கொண்ட ஆண்கள் தன்னை ஆண் மகன் என்று நிரூபிக்க வேண்டுமானால், இந்தப் பெண்கள் அவசியம் தானே. இல்லையென்றால் அவர்களாகவே எப்படி தன்னுடைய ஆண்மையை நிரூபிக்க முடியும். அவர்கள் தனக்குத்தானே பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொள்ள முடியுமா? இல்லையே. பின் ஏன்  பெண்களுக்கு எதிராக அதிகார வர்க்க ஆணாதிக்கச் சமூகம் இவ்வளவு கொடுமையாக நடந்து கொள்கிறது? 

மேலும், ஒருதார மணம் என்பது பெண்களுக்கு மட்டுமே. ஆண்களுக்கு என்ற குறிப்பான பண்புடன் முத்திரை பதிக்கப்பட்டதாக இருந்து வருகிறது. பெண்கள் தரப்பில் கற்பு நெறி தவறும் செயல்கள் கண்டிக்கப்பட்டது. அதேநேரத்தில், ஆண்களிடம் ஒரு பெருமையாகக் கருதப்படுகிறது. அல்லது இன்னும் ஒரு மோசமாக அவன் உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளும் ஒரு சிறு ஒழுக்கக் குறைபாடாகக் கருதப்படுகிறது. 

அது எப்படி ஆண்களுக்கு என்ன பாலியல் உணர்வு இருக்குமோ, அதே போன்றுதான் பெண்களுக்கும் இருக்கும். இதில் ஆண்கள் மட்டும் தன்னுடைய செயலினை எப்படி பெருமையாகக் கருதலாம். இவை முரணனவை. இவை பாலியல் தொடர்பான பிரச்சினை மட்டும் அல்ல. பெண்கள் என்றைக்கு அவள் ஆணுக்குள் அடங்கியவள் அல்லது அடக்கப்பட்டவள் என்ற அதிகாரத் திமிர் கொண்ட என்ணத்தினால் விளைந்தவை. ஒருவேளை அன்றைய நிலையில் பெண்ணானவள் பெரும் அதிகாரத்தோடு பண பலத்தோடு இருந்தாலும், ஆண்களைப் போன்று இந்தக் கேவலமான நிலையில் நடந்து கொண்டால் அல்லது முயற்சி செய்தால் ஒரு சாதாரண கடைநிலைப் பெண்ணுக்கு என்ன ஒரு அவமானம் ஏற்படுமோ அதே அவமானம்தான் அந்த அதிகாரத்தில் உள்ள பெண்ணுக்கும் ஏற்பட்டிருக்கும். 

பெண்களின் இப்படிப்பட்ட வன்முறையினை வி.ஐ.லெனின்  குடும்ப அடிமைமுறை என்று சாடுகிறார். பொதுவாக ஆண்டான் அடிமை என்பது அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் இருப்பதைக் காண்கிறோம். ஆனால் இங்கு இதே போன்று குடும்பத்தில் இருப்பதனை வி.ஐ.லெனின் சுட்டிக்காட்டுகிறார். 

கணவன் முதலாளியாகவும் மனைவி அவனுக்குத் தொழிலாளியாகவும் எந்தவிதமான எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிசெய்து கிடைக்க வேண்டும் என்பதனையே விரும்புகிறான்.


பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஆராய்ந்த ட்ராட்ஸ்கி, வாழ்க்கை நிலைமைகளை மாற்றுவதற்கு அவற்றைப் பெண்களின் கண்களால் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான சுரண்டலினை என்றைக்காவது இந்த ஆணாதிக்கம் கொண்ட சமூகம் பெண்கள் கண்கொண்டு பார்த்து இருந்தால் மட்டுமே தெரியும், அவர்களின் வலியும் வேதனையும் என்னவென்று.

பெண்கள் பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களின் சிரமங்களுக்கு எல்லையில்லை. குறிப்பாக, பெண்கள் பருவ வயதை எட்டும் பொழுதே அவளுடைய உடல் உபாதைகள் தொடங்க ஆரம்பிக்கின்றன. இவை இயற்கையானவையாக இருந்தாலும் அவை அவளுக்குத் தவிர்க்க முடியாத ஒரு உபாதையாகவே இருக்கிறது. மேலும், கருவுற்ற பின்பு குழந்தையைச் சுமப்பது, குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது அவள் படும் உச்சக்கட்ட வேதனை. அதாவது, அதனைப் பெற்று எடுப்பதற்குள் மரணத்தின் எல்லையைத் தொட்டு விட்டு வருகிறாள். சில நேரங்களில் அவள் அங்கேயே மடிந்து போகிறாள். இவை ஒருபுறமிருக்க, தன்னுடைய குடும்பத்தை விட்டு வெளியே நடமாடும் பொழுது மோசமான எண்ணம் கொண்டவர்களின் காமக் கொடூரங்களுக்கும், பாலியல் ரீதியான தொல்லைகளுக்கும்  ஆட்படுத்தப்படுகிறார்கள்.

மேலும், வீட்டு வேலைகளான துணி துவைப்பது, பராமரிப்பது, குழந்தைகளைப் பாதுகாப்பது, கால்நடைகளைப் பராமரிப்பது போன்ற அத்தனை வேலைகளுக்கு  மத்தியில் அவள் தன்னை நிலைநிறுத்தம் செய்யவேண்டியிருந்தது.

இந்த நிலையினை ஒவ்வொரு ஆணும் குறைந்த பட்சம் ஒரு அரை மணி நேரமாவது செலவழித்துப் பெண்கள் கண்கொண்டு பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வளவு சவால்களையும் தாண்டி, பெண்கள் அதனை எதிர்த்துப் போராடி புரட்சி செய்து வெற்றி பெற்றிருப்பதை உலக நாடுகளில் பெண்களுக்கான வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும், வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டத்தையும் பெண்கள் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக சில்வியா பங்குர் ஸ்ட் செயல்பட்டார். ஆண்களைவிட குறைவான சம்பளமே இவர்களுக்கு வழங்கப்பட்டது. பெண்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டதோடு அவர்களுடைய உழைப்பு முழுவதுமாக முதலாளிகளால் சுரண்டப்பட்டது. அதாவது வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை; வாரத்திற்கு  48 மணி நேரம் வேலை. மேலும், பெண்கள் தொழிற்சாலையில் குறைந்த ஊதியத்துடன் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். குறிப்பாக, பெண்கள் சுரங்கத் தொழிற்சாலையிலும், வெடிமருந்துத் தொழிற்சாலைகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். குறிப்பாக, முதலாம் உலகப் போரின்போது அதிகமான பெண்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். காரணம், ஆண்கள் போருக்குச் சென்றதன் விளைவு. முதலாளிகளின் தொழிற்சாலைகள் உற்பத்தியும் அவர்களின் மூலதனப் பெருக்கத்திற்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டிருந்தது. ஆண் தொழிலாளர்கள் இல்லாததால் இதனை ஈடு செய்வதற்காகவே பெண்கள் தொழிற்சாலைகளில் அதிகமாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளமும் மிகமிகக் குறைவு. இதனோடு கூடவே ஜெர்மனியின் நாஜிக்கள் பெண்களை வேலையில் இருந்து அப்புறப்படுத்தி, அவர்களைத் தாய்மை காக்கும் பணியில் இருக்க வேண்டும் என்றும், மேலும், நாஜிக்கள் திருமணமாகி 5 ஆண்டுகள் வரை குழந்தைகள் இல்லாமல் இருந்த இணையர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டனர். மேலும் 4 அல்லது 5 குழந்தைகள் பெற்றவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது. இன்னொருபுறம் நாடோடிகளுக்கும் இனச்சிறுபான்மையினருக்கும் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது .

இதனையும் தாண்டி, பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். தொழிற்சாலைகளில் ஆபத்தான இயந்திரங்களுக்கு மத்தியிலும் பல்வேறு நோய்த் தொற்றுக்களை உருவாக்கும் சூழலிலும் அவர்கள் வேலை செய்தார்கள்.

அங்கு நடைபெற்ற கொடுமைகளை 1813 ஆம் ஆண்டு கம்பிரியாவில் வொயிட் ஹேவன் சுரங்கத்தில் பெண்கள் வேலை செய்வதைப் பார்த்த பார்வையாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார்.

பெண்கள் பெரும்பாலும் அரை நிர்வாணமாக இருந்தனர். கரிப்புழுதியில் கருத்துப்போய் இருந்தனர். மனித இனத்தில் இருந்து தோன்றிய ஒரு இழிந்த அருவருப்பான பிறவிகள் போலத் தோன்றினர். அவர்களுடைய கால்களும் முதுகு வளைந்து போய் துன்புற்றனர்.  வயிற்று வலி மற்றும் நுரையீரல் நோய்களால் துன்புற்றனர். அவர்கள் கருத்தரித்தரிந்த நேரங்களில் மிகவும் மோசமான சிக்கல்களையும் எதிர்கொண்டனர் என்கிறார்.

மேலும், பெண்கள் அதிக அளவில் ஜவுளி தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்தனர். அங்கு வேலை பார்த்த பெண்களில் கருவுற்றவர்களில் 30% குழந்தைகள் கருவிலேயே அழிந்து போயின. வேலை போய்விடும் என்ற அச்சத்தால் குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் குழந்தை பிறந்த மூன்று வாரங்களில் வேலைக்குத் திரும்பினர். சில நேரங்களில் குழந்தைகளைத் தொழிற்சாலைகளுக்கே கொண்டுவந்து இடைவேளையின்போது பாலூட்டினார்கள். சில பெண்கள் தொழிற்சாலைகளிலேயே குழந்தை பெறும் வரை வேலை செய்தனர். வீட்டில் விட்டுவிட்டு வரப்பட்ட குழந்தைகள் அமைதியாகத் தூங்குவதற்கு அபினி (போதைப்பொருள்) கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடுமைகளைப் பெண்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கவில்லை. இதனை எதிர்த்து மிகத்தீவிரமான போராட்டத்தினை முன்னெடுத்து வெற்றிகளை நோக்கிப் பயணித்தார்கள்.

இதன் விளைவு, 1885இல் தொழிற்சங்கப் பேராயம் பெண்களின் ஊதிய உயர்விற்கான தீர்மானத்தினை இயற்றியது. 1936 இல் இரவு நேர வேலை ஒழிக்கப்பட்டது. 1962இல் போர்டு நிறுவனத்திற்கு எதிரான ஊதிய உயர்வு பெறும் வெற்றி பெற்றனர். 1975இல் பாலினப் பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  இரட்டைச் சுமை (வீடு மற்றும் வேலைக்குச் செல்லுதல்) எதிரான கடுமையான எச்சரிக்கையைப் பெண்கள் முன்னெடுத்தார்கள். இருந்தாலும், முதலாளி வர்க்கம் பாலின அடிப்படையில் பிரித்தாலும் கொள்கையை எப்போதுமே பின்பற்றி வருகிறது என்றார்   பார்பரா கம் ஃபீரிஸ்.

ஆம், இந்தப் பிரிவினைகளைத் தோற்கடிக்கப்பட வேண்டுமானால், அவர்களுக்கு கம்யூனிசத்துடன் கூடிய பகுத்தறிவினை, அதாவது மெய்ஞான அறிவினைக் கொண்டு பயிற்றுவிக்க வேண்டும். மேலும் எங்கெல்லாம் அரசாளும் வர்க்கங்கள் ஒற்றுமையாக இருக்கிறதோ, அந்தத் தேசங்கள் எல்லாம் வர்க்கப் பிரிவினையான ஆண்கள் பெண்கள் முதலாளிகள் தொழிலாளிகள் மேலும் கீழும் என்ற வர்க்க வேறுபாடுகள் கண்டிப்பாக இருக்கும்.  அதே வேளையில், எங்கெல்லாம் உழைக்கும் வர்க்கத்தினரின் ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் இந்த வேறுபாடுகள் இருப்பதற்கு எந்தவிதமான சாத்தியக்கூறுகளும் இல்லை. மேலும், இப்படிப்பட்ட அரசாங்கத்தின் கீழ் வர்க்கத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

பெண்கள் மீதான ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்துடன் உறுதியாக இணைக்க வேண்டியது அவசியமாகும். இது தான் வெற்றிக்கான ஒரு சாத்தியமான பாதையாகும்.

இறுதியாக, ஆளும் வர்க்கத்தை வேறு எந்த வழியிலும் தூக்கி எறிய முடியாது என்பதால் மட்டுமல்ல, அதைத தூக்கி எறியும் வர்க்கம் ஒரு புரட்சியால் மட்டும் தான்  பழைய கழிவுகள் அனைத்தையும் கைவிட்டு, சமுதாயத்தைப் புதியதாக நிறுவுவதற்குப் பொருத்தமானதாக ஆக்க முடியும் என்பதாலும், புரட்சி இன்றியமையாததாகும் என்று வாதிட்டார் மார்க்ஸ்.

இனஸ்ஸா அர்மான்ட் கூறியதைப் போன்று, கம்யூனிசம் இல்லாமல் பெண்களின் விடுதலையை நினைத்துப் பார்க்க முடியாது என்றால், கம்யூனிசத்தையும் பெண்கள் விடுதலை இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது என்பது எதார்த்த உண்மையாகிறது. இதை இயற்கையின் அனைத்திற்குமான விடுதலையினையும் உரிமைகளையும் நினைவுபடுத்துவதாக உள்ளது.

இங்கு, ஏன் பெண்களின் விடுதலை அவசியமாகிறது எனும்போது அங்கு பொதுவுடமை தேவைப்படுகிறது. அதாவது, தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்பதனைப் போன்று.

கம்யூனிசம் அனைத்துலக ஒடுக்கப்பட்ட - அடக்கி வைக்கப்பட்ட - சுரண்டலுக்கு உள்ளானவர்களுக்கான ஆயுதமாக, குறிப்பாகப் பெண்களின் விடுதலைக்கான தேவையாக இருக்கிறது. இவர்களுக்கான விடுதலையைப் பிடித்து வைத்திருக்கும் இருத்தல் தன்மை கொண்டவர்கள்  யார் என்னும்போது அதிகார வர்க்கமான ஆளும் வர்க்கம் தான் என்பதனைத் தெளிவுபடுத்திக்கொள்ள முடிந்தது.

இந்தத் தனியுடைமை கொண்டோரின் சுதந்திரமும் உயர்வும் மேன்மையும் உழைக்கும் வர்க்கத்தினரின் சுரண்டலின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடிமைத்தனம் வெகுகாலம் நீடிக்கவில்லை. எந்த ஆயுதத்தைக் கொண்டு சக மனிதனை அடிமைப்படுத்தியதோ, அதே ஆயுதத்தைச் கொண்டு உழைக்கும் வர்க்கம் குறிப்பாக பெண்கள் பாரிஸ் கம்யூன் மூலம் வீழ்த்தி வெற்றி கண்டார்கள்.

மேலும், எவையெல்லாம் காலனிய ஆதிக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு பல்வேறு சுரண்டலுக்கு உள்ளான அனைத்தும் இந்த பொதுவுடைமைச் சிந்தனை கொண்டு அதனை நடைமுறைப்படுத்தி வெற்றிகளைப் பெற்றன.

இந்தக் காலனியத்தின் தொடக்கம் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புவியியல் கண்டுபிடிப்பே காரணம். இக்காலனிய ஆதிக்கத்திலிருந்து  விடுதலை பெற்ற தேசங்கள் விடுதலையைத் தன் நாட்டிலுள்ள அனைவருக்குமான விடுதலையாகப் பார்க்கத் தவறியது. குறிப்பாக, பெண்கள் விடுதலையை. இங்கு ஏன் பெண்கள் விடுதலை உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுகிறது என்றால், அது அவர்கள் வாழும் தேசத்தில் அவர்களுக்கான உரிமை மறுக்கப்படும் போது இவை எழுகிறது.

குறிப்பாக, மன உரிமை, மணவிலக்கு உரிமை, சொத்துரிமை, வாக்குரிமை, குடும்ப வன்முறையில் இருந்து விடுதலை. இந்தக் குடும்ப வன்முறை பற்றி லெனின் அவர்கள் கூறும் பொழுது, இவை குடும்ப அடிமைத்தனம் என்கிறார். மேற்சொன்ன உரிமைகளை இது நாள் வரை அதனைக் காலனியமாகக் கொண்டவனிடம் கோர முடியாது. அவர்கள் தன்னுடைய தோல்வியைத் தழுவிய அன்று தங்களுடைய கூடாரத்தினை அத்தேசத்திலிருந்து காலி செய்துவிட்டனர்.

இங்கு பெண்களுக்கான விடுதலை என்பது தன்னுடைய தேசத்தில் உள்ள  ஆட்சியாளர்களைச் சார்ந்தது. இதற்காக அவர்கள் தங்களுடைய விடுதலை பெறுவதற்காக இரண்டாவது விடுதலைப் போரினை அதாவது சாத்வீகமான முறையில் நடத்தப்பட வேண்டியிருந்தது. இதனையும் இந்தப் பொதுவுடமை முன்னெடுத்து அவர்களுக்கான விடுதலையினையும், உரிமைகளை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றன.

இந்தப் பொதுவுடைமை சிந்தனை தான் அனைத்துக் காலனியத்திற்குமான விடுதலைக்கு வித்திட்டது. இல்லையேல், அவைகள் இன்னும் காலம் காலமாக அடிமைத்தளையில் அடையாளமாகவே நீடித்திருக்கும். அதேபோன்றுதான் பெண்களின் விடுதலையும் ஆகும்.

கண்டிப்பாக, வர்க்கமற்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமானால், அவை முதலாளித்துவ அரசினாலோ, முதலாளித்துவ ஜனநாயக அரசினாலோ, போலியான ஜனநாயக அரசினாலோ கண்டிப்பாக உருவாக்கித்தர முடியாது. ஏனெனில், பெண்களுக்கான விடுதலையினை இறுக்கிப் பிடித்து வைத்திருப்பது இவைகள்தான். அதனால், பொதுவுடைமை என்னும் மெய்ஞான விஞ்ஞானத் தத்துவத்தின் மூலம் மட்டுமே பெண்களுக்கான பரிபூரண விடுதலையும், அவர்களுக்கான  ஆரோக்கியமான வாழ்வியல் சூழ்நிலையும் ஏற்படுத்தித் தர முடியும்.


நூல்:
பாரிஸ் கம்யூனில் பெண்கள்.

கட்டுரையாளர்கள்:
கிறிஸ்டினா கிரிட்லி-கரோலின் கெம்ப், ஆலன் உட்ஸ், பார்பாரா ஹம்ஃபிரீஸ், ஷெரான் ஸ்மித்

ஆங்கிலம் வழித் தமிழில்:
நிழல் வண்ணன்.

வெளியீடு:
விடியல் பதிப்பகம், கோவை.
முதற்பதிப்பு, மே 2016.