புதன், 7 நவம்பர், 2018

சங்க காலத்தில் சாதியும் உடன்போக்கும்:- கணியன் பாலன்

அகமணமுறைதான் சாதிக்கான அடிப்படையைப் பாதுகாத்து அது தொடர்ந்து இருந்து வருவதை உறுதி செய்கிறது. இனக்குழு காலத்தில் அகமணமுறை இருந்தது. அன்று இரத்த உறவு என்பது உயிரினும் மேலானதாக மதிக்கப்பட்டது. இந்த அகமணமுறைதான் அந்த இனக்குழுவின் இரத்த உறவையும் அதன் அடிப்படையிலான கண அமைப்பு முறையையும் கட்டிக்காத்து வந்தது. ஆகவே இனக்குழு காலத்தில் அகமணமுறை உலகம் முழுவதும் இருந்தது. ஆனால் இனக்குழுவின் கண அமைப்பு முறையை அதன் அகமணமுறையை அழித்து அதன் மீது கட்டப்பட்டதுதான் இந்த ஒருதார மணமும், குடும்பமும், அரசும் ஆகும்.

ஆதலால் ஒருதார மணமும், குடும்பமும், அரசும் உருவானபோது இந்த அகமணமுறையும் இல்லாது போனது. தமிழகத்திலும் இக்காலகட்டத்தில் அகமணமுறை இல்லாது போனது. அதன் அடையாளம் தான் ‘உடன்போக்கு’ திருமணமுறை ஆகும். சங்ககாலத்தில் உடன்போக்கு என்பது திருமணத்திற்கான ஒரு முறையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது. ஆனால் பிற்காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகிய பொழுது இம்முறைக்கு எதிர்ப்புகள் இருந்ததையும் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. ஆனால் பொதுவாக உடன்போக்கு என்பதைச் சங்ககாலச் சமூகம் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருந்தது என்பதைச் சங்ககால அகப்பாடல்கள் உறுதி செய்கின்றன.

இந்த உடன்போக்கில் தலைவி தன் குடிக்குரிய தலைவனோடு மட்டுமே போனதாகச் சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை. முல்லைத்தலைவி குறிஞ்சித்தலைவனோடும், நெய்தல் தலைவி மருதத்தலைவனோடும் என  ஐவகைத்திணைத் தலைவனோடும், அனைத்துக் குடித்தலைவனோடும், அனைத்துத் தொழில் செய்யும் தலைவனோடும் ஐந்திணைத்தலைவிகளும் உடன்போக்கு மேற்கொண்டாள் என்பதைச் சங்க இலக்கிய அகப்பாடல்கள் உறுதி படத் தெரிவிக்கின்றன. ஆகவே சங்ககாலத்தில் அகமணமுறை இருக்கவில்லை. அதன் காரணமாகச் சங்ககாலத்தில் சாதியும் இருக்கவில்லை எனலாம்.

ஆனால் பொருளாதார உயர்வு தாழ்வுகளும், வர்க்கவேறுபாடுகளும் இந்த உடன்போக்குத் திருமண உறவுக்கு ஆங்காங்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன என்பதையும் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. அதுபோன்றே அரச குடும்பங்களிலும், உயர்வேளிர் குடும்பங்களிலும் உடன்போக்குத் திருமணமுறைக்கு எதிர்ப்புகள் இருந்திருக்கும். சான்றாக நற்றிணையின் 45ஆம் பாடலில் தலைவி யின் காதலை வேண்டும் தலைவனிடம் தோழி, இவள் சிறுகுடிசையில் வாழும் மீனவப்பெண் எனவும் நீயோ தேருடைய செல்வந்தன் மகன் எனவும் கூறி இருவருக்கும் பொருத்தம் இல்லை என அவனது காதலை மறுக்கிறாள். நற்றிணையின் 328ஆம் பாடலில் மணம் செய்யாது காலம் கடத்தும் தலைவனை எண்ணி தலைவி வருந்தும்போது தோழி தலைவனின் பிறப்பு உயர்ந்தது என்பதால் அவர் என்றும் சொற்பிறழார், விரைவில் வருவார் என ஆறுதல் கூறுகிறாள்.

ஆகவே வர்க்க, வகுப்பு வேறுபாடுகள் உடன்போக்குத் திருமணமுறைக்கு எதிர்ப்பும் ஆதரவும் தந்து வந்துள்ளன என்ற போதிலும் உடன்போக்கைச் சங்ககாலச் சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருந்தது என்பதில் மாற்றம் இல்லை. அதன் காரணமாகவே அனைத்துக்குடிப் பெண்களும் அனைத்துக்குடி ஆண்களோடும் வேறுபாடு இன்றி உடன்போக்கு மேற்கொண்டனர் என்பதைச் சங்க இலக்கிய அகப்பாடல்கள் உறுதிபடக் கூறுகின்றன. அதுபோன்றே செல்வக்குடியில் பிறந்த இளம்பெண் ஏழை இளைஞனோடும், தேருடைய செல்வ மகன் ஏழை இளம் பெண்ணுடனும் உடன்போக்கு மேற்கொண்டதை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.

சங்ககாலத்தில் திணை வேறுபாடுகளும், தொழில் வேறுபாடுகளும், பொருளா தார அடிப்படையிலான வகுப்பு, வர்க்க வேறுபாடுகளும்தான் இருந்துள்ளன. ஆனால் சாதிகள் இருக்கவில்லை. இவைபோகச் சங்ககாலத்தில் இழிசனன், சண்டாளன், புலையன் போன்ற கீழ்மக்களாகக் கருதப்பட்டவர்களும் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது. இவர்களும் கூட சாதிய அடிப்படையில் அப்படி அழைக்கப்படவில்லை. இழிவான தொழில் செய்கிறவர்கள் என்கிற அடிப் படையில்தான் அவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள்.

குறுந்தொகையின் 40ஆம் பாடல்
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயர்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” 
என்கிறது. உடன்போக்கில் ஈடுபட்டத் தலைவனும் தலைவியும் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாதவர்களாக இருந்தனர் என்பதையும் அனைத்துப்பெண்களும் அனைத்து ஆண்களோடும் உடன்போக்கு மேற்கொண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பதையும் இப்பாடல் தெளிவுபடுத்துகிறது. ஆகவே அன்றையச் சங்ககாலம் அங்கீகரித்த உடன்போக்குத் திருமண முறையில் சாதிகள் இல்லை என்பதை இப்பாடல் உறுதி செய்கிறது எனலாம்.

சங்கம் மருவிய காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், தொழில் வேறுபாடுகளும், வர்க்க வேறுபாடுகளும் மிக அதிக அளவில் அதிகரித்ததின் விளைவாகவும் வைதீக ஆதிக்கமும், பிராமணிய ஆதிக்கமும் மிக அதிகச் செல்வாக்கு பெற்றதாலும் சாதீயத்துக்கானக் கூறுகள் தமிழ்ச் சமுதாயத்தில் உருவாகத்துவங்கி இடைக்காலத்திலும் சோழ பாண்டியப் பேரரசுகள் காலத்திலும் அது படிப்படியாக வளர்ந்து வலுவடைந்து, 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும் ஆங்கிலேய ஆட்சியிலும் அது மேலும் வளர்ந்து பிரிவுகள் அதிகரித்துக், கெட்டித்தன்மை கொண்டதாக இறுகி இன்றைய நிலையை அடைந்தது எனலாம்.

அரசு தோன்றும்பொழுதும் அதன் பின்னரும் உலகம் முழுவதும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், தொழில் வேறுபாடுகளும், வர்க்க வேறுபாடுகளும் உருவாகி வளர்ந்து வந்துள்ளன. ஆனால் உலகில் எங்கும் சாதிகள் உருவாகவில்லை. சங்ககாலத்திலும் சாதிகள் இருக்கவில்லை. ஆதலால் சாதீயத்தின் ஆரம்பகால ஊற்றுக்கண்ணாக இருந்தது வைதீகச்சிந்தனையும், பிராமணியமும்தான் என உறுதிபடக் கூறலாம். எனினும் இவை குறித்து மேலும் ஆய்வுகள் தேவை.

பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 855 - 857.

ஓவியம்:
கவியோவியத் தமிழன்

திங்கள், 5 நவம்பர், 2018

தீபாவளியும் ஆரியப் பண்பாட்டுப் பின்புலமும்:- முனைவர் தொ.பரமசிவன்.

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந் தொழில்களின் பொருளாதாரம் சார்ந்த தாகவும் இத்திருவிழா கொண்டாடப்படு கிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் தேசியத் திருவிழா போலக் காட்டப்படுகிறது.

ஆயினும் தைப் பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்கு களோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப் பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவேதான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில்கூடத் தைப் பொங்கல் கொண்டாடப் பெறுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் இந்துக்களின் திருவிழா வாக அமைகிறது.

தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? - பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்களின் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலை பெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலை களோடும் சடங்குகளோடும் தொடர்பில் லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண் டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடை யாளமான வெடி, அதன் மூலப் பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டுவரை அறிமுக மாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளி) என்னும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவே. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ் ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும். தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்தநாளே பிராமணிய மதத்தின் எதிரி யான சமண மதத்தின் இருபத்து நாலாம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத்தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும். விசய நகரப் பேரரசான, இந்து சாம்ராஜ்ஜியம், தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின் றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர் களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ் நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும், சடங்காகும். தமிழ் நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல கங்கா ஸ்நானம் செய்துகொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத் திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா என்று பாரதிதாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

/அறிஞர் தொ.பரமசிவன் எழுதிய அறியப்படாத தமிழகம் நூலில் உள்ள கட்டுரை/

வெள்ளி, 2 நவம்பர், 2018

குறுந்தொகைச் சமூகத்தைத் தேடி :- ப.கலாநிதி

குறுந்தொகை என்பது தமிழில் எழுதப்பட்ட உலக இலக்கியம். ஏறக்குறைய இன்றைக்கு தமிழில் எழுதப்படும் எல்லா காதல் கவிதைகளுக்குமான தாய்க்கரு குறுந்தொகையே என்பது என் தாழ்மையான கருத்து. எல்லாவற்றுக்கும் மேலாக குறுந்தொகைக் கவிதைகளின் அழகியலும் இலக்கியச் செறிவும் தெவிட்டாத தேன்; தீராத கள்.

குறுந்தொகையில் யாருக்கும் பெயர்கள் இல்லை; யாருக்கும் சாதிகள் இல்லை; யாருக்கும் மதங்கள் இல்லை.

காதலித்தாலோ அல்லது காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்தாலோ ‘கொல்லப்படுவோம்’ என்கிற அச்சம் குறுந்தொகைக் காதலர்களுக்கு இல்லை.

’வாழ்க்கையில் அவசரப்படாதீர்கள். பெற்றோர்கள் வரன் பார்க்கும் வரை காத்திருங்கள்’ என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் அறிவிப்புப் பலகைகள் அக்காலத்தில் இருந்திருக்கவில்லை. பெற்றோர்களே வரன் பார்க்கட்டும் என்று 35 வயது வரைக்கும் காத்திருக்கும் குழந்தைகள் அக்காலத்தில் இருந்திருக்கவில்லை.

தெருவுக்குத் தெரு, பிரிவுக்குப் பிரிவு இயங்கும் திருமணத் தகவல் மையங்கள் அக்காலத்தில் இருந்திருக்கவில்லை. ஜாதகக் கட்டங்களை தூக்கிக் கொண்டு, தகவல் மையங்களுக்கும், சுயம்வர நிகழ்ச்சிகளுக்கும் நடையாய் நடக்கும் குடும்பங்கள் அக்காலத்தில் இருந்திருக்கவில்லை.

நிர்வாணத்தை மறைக்க நினைத்தபோதுதான் ஆபாசம் பெருகியது. காதலுக்கு தடைபோட நினைத்தபோதுதான் திருமணத் தடைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

மரபுத் தமிழ்ச் சமூகத்தைப் பொருத்தவரை, காதலில் இரண்டே வகைதான். ஒன்று கற்பு, இன்னொன்று களவு.

‘நாங்களிருவரும் காதலிக்கிறோம், திருமணம் செய்துகொண்டு வாழப் போகிறோம். இதை ஊருக்கு அறிவிக்கிறோம். வந்து வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள்’ என்று சொல்வது கற்பு மணம்.

‘நாங்களிருவரும் காதலிக்கிறோம், திருமணம் செய்துகொண்டு வாழப் போகிறோம். இதை ஊருக்குச் சொல்ல வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. நீங்கள் உங்களின் பாதையில் செல்லுங்கள், நாங்கள் எங்களின் பாதையில் செல்கிறோம்’ என்று சொல்வது களவு மணம்.

இப்படி இருந்தவரைக்கும் எல்லாமே ’சுபம்’தான்.

’என்னைத் தாலாட்ட வருவாளா’ எனப் பாடிய காதலுக்கு மரியாதை தலைமுறையில் இருந்து வந்தவன் நான். எது காதல் என்றே தெரியாத ஒரு தலைமுறை கண் முன் உருவாகி வருவதைப் பார்க்கிறேன்.

இந்தத் தலைமுறைக்கு எது காதல் என்பதை அறிமுகப்படுத்த இங்கே சரியான ஏற்பாடுகள் இல்லை என்றே நினைக்கிறேன். பெற்றோர்கள் மறைக்க நினைக்கிறார்கள். ஊடகங்கள் தவறாக வழிநடத்துகின்றன. வகுப்பறைப் பாடங்கள் மனப்பாடப் பகுதிகளாகிவிட்டன.

செய்தித்தாள் படிக்கும் பழக்கமில்லாத இந்தத் தலைமுறைக்கு, செறிவான தமிழ் இலக்கிய படைப்புகள் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கின்றன.

சாதீய அடுக்குகள், பொருளாதாரக் கணக்குகள், அழகியல் எதிர்பார்ப்புகள் போன்ற எல்லாவற்றிற்கும் அப்பால் ஒரு காதல் உண்டு என்பதை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

காதல் உறவு என்பது காரணங்கள் அற்றது என்பதையும், வாழ்க்கைத் துணை என்பது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இது ஊர்கூடி தேரிழுக்கும் வேலை. ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டிய பணி. அதன் தொடக்கமாக வரவிருக்கும் ‘குறுந்தொகை’ காணொளிகள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

எதிர்காலத்தில் என் மகன் குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தனாக இருப்பானெனில் பெருமகிழ்ச்சியடைவேன்.

ஓவியம்:
கார்த்திகேயன்

திங்கள், 22 அக்டோபர், 2018

மரபின் மையத்திலிருந்து ஒருபோதும் விலக முடியாது! - சோ.தர்மன் நேர்காணல்.

கரிசல் இலக்கியத்தின் மூத்த படைப்பாளியான சோ.தர்மன் எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர். நாட்டார் வாழ்க்கையின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைக் கலாபூர்வமான படைப்புகளாக்கியவர். கூத்துக்கலை, நாடோடிக்கூட்டம் என அருகிவிட்ட எளிய இனங்களைத் தனது படைப்பின்வழி ஆவணப்படுத்தியவர். இவரின் ‘தூர்வை’, ‘கூகை’, ‘சூல்’ நாவல்களும் பல குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளும் இன்றும் அதன் புதுப்பொலிவு மாறாமல் இருக்கின்றன. வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி குறித்த இவரின் ஆய்வுநூலும் மிக முக்கியமான படைப்பு. கூகையைப் போல ஒரு நள்ளிரவில் உரையாடியதிலிருந்து...

நாட்டார் வாழ்க்கையைப் படைப்பாக்க முயலும்போது எந்த விஷயங்களில் உங்கள் கவனம் குவிந்திருக்கும்?

பண்பாடு, பாரம்பரியம், வழிபாட்டு முறை, தொழில் என கிராமங்கள் குறித்து எழுதும்போது கட்டுரைத் தன்மையோடு அல்லாமல் கலாபூர்வமான சிருஷ்டியைக் கொடுப்பதற்கான முயற்சிகள்தான் என்னுடைய படைப்புகள். ‘மழை பெய்தது போதும்’ என மழையை வழியனுப்பக்கூடிய சடங்கு நம்மிடையே இருந்திருக்கிறது. ஒரு சாமியையும் அதற்காகப் பிறப்பித்திருக்கிறார்கள். இதுமாதிரியான விஷயங்களையெல்லாம் தோண்டிக் கண்டறிந்து இலக்கியமாக்குகிறேன். சொல்லும் விதத்தில் சில கலாபூர்வமான விஷயங்களை மேற்கொள்கிறேன். கிராமத்தவர்களை ஒன்றுமே தெரியாதவர்கள், பட்டிக்காட்டான் என்று கீழே வைத்துப் பார்க்கிறார்கள். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், மாடு கமலையில் இரைக்கும்போது அங்கே இரண்டு பக்கத்திலும் பூவரசு மரங்கள்தான் வைத்திருப்பார்கள். மரங்களிலேயே அதிகப்படியான ஆக்ஸிஜனை வெளியிடக்கூடிய மரம் பூவரசுதான். மாடுகள் தெவங்கி தவித்துப்போவதிலிருந்து ஆசுவாசம்கொள்ள இப்படிச் செய்திருக்கிறார்கள். இது எப்படி நமது முன்னோர்களுக்குத் தெரிந்தது? இதையெல்லாம் உரைநடைக்குக் கொண்டுவர வேண்டும். இன்றைய தலைமுறைக்கு இதையெல்லாம் சொல்ல வேண்டியது கடமை.

இந்த நம்பிக்கைகள் ஒருகட்டத்தில் நகைப்புக்குரியதாக மாறி பிறகு மீண்டும் கடந்தகாலத்துக்குள் நுழையும் போக்கும் அதிகரித்துவருகிறது இல்லையா?

அது அப்படித்தான் வரும். அதன் தன்மையே அதுதான். மரபின் மையத்திலிருந்து ஒருபோதும் விலக முடியாது. ஏதோ ஒருவகையில் அதனால் ஈர்க்கப்பட்டுக்கொண்டே இருப்போம். குடும்பத்தோடு வேறெங்கோ குடிபுகுந்தவர்களெல்லாம் குல தெய்வத்தைக் கும்பிடுவதற்காக வருகிறார்கள். “இங்க கோயிலு கெடையாது, ஒண்ணும் கெடையாது. நீங்க வந்ததுதான் முள்ள வெட்டி சுத்தப்படுத்திக் கும்பிட்டுட்டுப்போற மாதிரி இருக்கு. பெரிய பெரிய கோயிலுக்குலாம் போலாமே?” என்று ஒரு பெரியவரிடம் கேட்டேன். “என் தாத்தா நின்ன தடம் இந்த எடத்துலதான் இருந்துச்சு. என்னோட தாத்தா தடத்து மேலதான் என் அப்பா நின்னார். எங்க அப்பா தடத்து மேல நான் நிக்குறேன். என் தடத்து மேல என் புள்ளைங்க நிக்கணும்” என்றார். இதை நீங்கள் மூடநம்பிக்கை, பண்பாடு, பாரம்பரியம் என்று எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி.

உங்கள் படைப்புகளில் சொலவடைகளுக்கு முக்கியமான இடமிருந்துருக்கிறது. சொலவடைகளும் கிட்டத்தட்ட வாழ்விலிருந்து அகன்றுவிட்டன.

அந்தக் காலத்து ஆட்களுக்குச் சொலவடை இல்லாமல் பேசவே தெரியாது. அவர்களுக்கு இலக்கிய, காப்பியப் புலமையெல்லாம் கிடையாது. அது வாழ்வியலோடு ஒரு அங்கமாக இருந்தது. தொழில்சார் விஷயங்களில் சொலவடைகளுக்கு முக்கியப் பங்குண்டு. தொழில்கள் மாறுவதால் சொலவடைகளும் இல்லாமல் போய்விடுகின்றன. ‘ஒரு வயோதிகர் இறந்துபோனால் அவருடன் நூற்றுக்கணக்கான கதைகளும், சொலவடைகளும் போய்விடுகின்றன’ என ஒரு புகழ்பெற்ற ரஷ்யப் பழமொழி இருக்கிறது. இன்றைய தலைமுறைக்குச் சொலவடை என்ற வார்த்தையே அந்நியப்பட்டுவிட்டது.

தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவைகள் அரிதானது. விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அந்தப் பட்டியலில் ‘தூர்வை’ நாவலில் வரும் முத்தையாவுக்குப் பிரத்யேக இடமுண்டு. அது குறித்து?

இப்படியான பாத்திரங்கள் கிராமத்தில் நிறைய இருந்தன. முன்பெல்லாம் பாவைக்கூத்து, காவடியாட்டக்காரர்கள், மரக்கால் குதிரையாட்டம், பொம்மலாட்டம், பொலிப்பாட்டுக்காரர்கள் என அறுவடைக்காலத்தைக் கணக்கிட்டு பத்துப் பதினைந்து நாடோடிக்கூட்டங்கள் கிராமத்துக்கு வந்துவிடும். பூம்பூம் மாட்டுக்காரர்கள், இராப்பாடிகள், சாமக்கோடாங்கிகள் இப்போது அபூர்வமாகிவிட்டார்கள். வாழ்க்கையே கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், இப்போது கிராமப்புற வாழ்க்கையிலும் நகைச்சுவை அற்றுப்போய்விட்டது. கி.ராஜநாராயணன், பூமணி, பா.செயப்பிரகாசம் ஓரளவு பதிவுசெய்திருக்கிறார்கள். சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன.

பழங்குடிகளையும், நரிக்குறவர்களையும் படைப்பாக்கியது ஆவணப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில்தானா?

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள பழங்குடியின மக்களிடம் சென்று என் பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்னைத் தெரியும். அவர்களோடு இரவு வேட்டைக்குச் செல்கிறேன், சுகதுக்கங்களில் பங்கெடுக்கிறேன். கணவன் மனைவிக்குள் பிரச்சினை என்றால் அந்தப் பிரச்சினை தீரும்வரை யாரும் வேலைக்குப் போகக் கூடாது என்றொரு வழமை அவர்களிடம் இருக்கிறது. அறுவடை முடிந்து பருத்தி கூறுவைக்கும்போது யாரேனும் உண்டாகியிருந்தால் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் சேர்த்து  பங்குவைக்கும் பழக்கம் இருக்கிறது. இப்படிப் பல உயரிய குணநலன்களோடு வாழ்கிறார்கள் அவர்கள்.

வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாள் மலையுச்சியில் ஒரு திருவிழா நடக்கும். அந்தத் திருவிழாவைப் பழங்குடிகள் தவிர வேறு யாரும் பார்க்கக் கூடாது. அதைப் புகைப்படம் எடுக்கவோ, அது குறித்து செய்தி வெளியிடவோ கூடாது என்ற கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்கள். பல வருடமாக முயன்று பழங்குடியினத் தலைவரைச் சந்தித்து, பழங்குடி வேஷம் போட்டு திருட்டுத்தனமாக அதைப் பார்த்தேன். அதற்கு ‘வௌவால் திருவிழா’ என்று பெயர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் முழு நிர்வாணமாகக் கையில் இறக்கைபோல கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு வௌவால் மாதிரி பறந்தபடி இரவு முழுவதும் நடனமாடுவார்கள். காரணம் கேட்டால், “இந்த மலைகள்ல உள்ள மரங்களப் பூரா வௌவால்தான வெதச்சது, நீயா வெதச்ச?” என்கிறார் பழங்குடியினத் தலைவர்.

இந்த இடம் எங்கே இருக்கிறது?

சொல்லக் கூடாது. சொன்னால் செத்துப்போய் விடுவேன்.

மா.அரங்கநாதன் உங்கள் விருப்பத்துக்குரிய படைப்பாளி இல்லையா?

தமிழில் இன்றும் சிறுகதையாசிரியர்களில் மா.அரங்கநாதனுக்குத்தான் முதலிடம். அவர் எழுதியிருப்பது அனைத்தும் நமது சைவ சித்தாந்த விஷயங்கள், சிறுதெய்வங்கள், பண்பாடு, கலாச்சாரம் குறித்துதான். அவரது மொழி மிகவும் சிக்கனமானது. ஆனால், பல அர்த்தங்கள் தரக்கூடியவை. அவரது ஒரே கதை வெவ்வேறு காலகட்டத்தில் வேறு வேறு மாதிரி தெரிகிறது. இப்படிப் புகழ்ந்து சொல்வதால் அவருக்கு எனக்கும் ஏதோ பந்தம் இருக்கிறது என நினைத்துக்கொள்ள வேண்டாம். அவருக்கும் எனக்குமான நேரடிப் பழக்கம் வெறும் மூன்று நிமிடங்களே.

மா.அரங்கநாதன் படைப்புலகுக்குள் எப்படி வருகிறீர்கள்?

நான் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் மா.அரங்கநாதன், மௌனி கதைகளெல்லாம் புரியவில்லை. நிராகரித்தபடியே கடந்துவந்தேன். பிறகு, எனது எழுத்துகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும்போது சிலரைக் கட்டாயம் படித்தே ஆக வேண்டுமென முயலுகையில் மா.அரங்கநாதன் எனக்கு நெருக்கமானவராகிறார். கவனம் ஊன்றி வாசிக்கும்போது அது அலாதியான அனுபவமாகிறது. பதினைந்து பக்கத்தில் சொல்ல வேண்டியதை அவர் இரண்டு பக்கத்தில் சொல்லிவிடுவார்.

உங்கள் வாசிப்புலக நுழைவாயிலாகத் திராவிட இயக்கப் படைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். இப்போது அப்படியான சூழல் இல்லை. இந்த இடைவெளி எப்படி உருவானதென்று நினைக்கிறீர்கள்?

ஆரம்பத்தில் அவர்கள் இலக்கியத்தைப் பிரதானப் படுத்தித்தான் உள்ளே வருகிறார்கள். அவர்கள் சொல்ல நினைத்த கருத்தாக்கத்தில் அவர்களின் மொழி ஆளுமை, அடுக்குமொழிப் பேச்சு இளைஞர்களை வசீகரித்தது. அந்த மொழி அவர்களது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மட்டும்தான் பயன்பட்டிருக்கிறதே தவிர, படைப்புக்காகப் பயன்படவில்லை. அதிகாரம் கைக்கு வந்த பிறகு, அவர்களே அந்த மொழியைக் கைவிட்டுவிட்டார்கள்.

கரிசல் இலக்கியம், தலித் இலக்கியம் என 90-களைப் போல துல்லியமான வகைமைகளில் இந்தத் தலைமுறை படைப்புகள் வெளிப்படுவதில்லை. இந்தப் பின்னணியில் சமகால இலக்கியப் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எங்கள் தாத்தா எங்கள் ஊரைவிட்டு எங்கேயும் போயிருக்க மாட்டார். எங்கள் அய்யா 50 ஊர்களுக்குப் போயிருப்பார். டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் என நான் விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன். என் மகனோ சர்வசாதாரணமாக ஸ்பெயின், ஜெர்மன், அமெரிக்கா போய்க்கொண்டிருக்கிறான். இந்த நெகிழ்வுத்தன்மைதான் உடையிலும், பேச்சிலும் பிரதிபலிக்கும். இலக்கியத்திலும் அந்தத் தாக்கம் இருக்கத்தான் செய்யும். இரண்டு கிளிகள் வைத்து ஒரு கதை எழுதினேன். வனம் அழிக்கப்பட்ட நான்குவழிச் சாலையில் கூடுகட்டி குஞ்சி பொரித்த பின்பாக தனது குஞ்சிகளுக்குக் கத்தச் சொல்லிக்கொடுக்கிறது தாய்ப்பறவை. ஆனால், வண்டியின் ஹாரன் சப்தம் கேட்டுப் பழகிய அந்தக் கிளிகள், ஹாரன்போலவே கத்தத் தொடங்கிவிடுகின்றன. சமகாலப் போக்கும் இப்படித்தான் இருக்கிறது.

நேர்கண்டவர்:
- த.ராஜன்,
தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in
நன்றி:
தி இந்து தமிழ் திசை நாளிதழ் / 14.10.2018

சனி, 13 அக்டோபர், 2018

இன்னுமோர் சாதிய ஆணவப் படுகொலை: சாதிய முகத்தைத் தோலுரிக்கும் அமிர்தவர்சினி.

என் பெயர் அமிர்தவர்சினி. எல்லோரும் அமிர்தா என்று அழைப்பார்கள். அப்பா மாருதிராவ், அம்மா கிரிஜாராணி. வீட்டிற்கு ஒரே மகள். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நலங்கொண்டா அருகில் உள்ளது மிராளுகுடா. இங்குதான் என் அப்பா தனது தொழிலை ஆரம்பித்தார். ரேசன் கடையில் மண்ணெண்ணை விநியோகஸ்தராக தொழிலை தொடங்கிய என் அப்பா மிகப்பெரிய செல்வாக்கு மிக்க மனிதராக திகழ்ந்தார். அரசியல் செல்வாக்கு, பண பலம், தொழில் பலம் என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் மிக்க மனிதராக தன்னை வளர்த்துக் கொண்டார். நாங்கள் வைசியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாதி என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது.

அப்போது நான் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் எல்லோரிடமும் அன்பாக பேசக்கூடியவள். ஒருமுறை என் அப்பா என்னை அழைத்து நீ யாரிடம் வேண்டுமானாலும் பேசு, பழகு. காசு இருக்கிறதோ இல்லையோ அதை எல்லாம் பார்க்காமல் எல்லோரிடமும் நட்பு வைத்துக் கொள். ஆனால் எஸ்சி சமூகத்தில் இருக்கிறவரோடு பேசக்கூடாது. அவர்களிடம் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது. அது நம் குடும்பத்திற்கு கெடுதல். அதைவிட வேறு அசிங்கம் எதுவும் இருந்துவிட முடியாது என்று கூறினார். எனக்கு எஸ்சி என்றால் என்ன என்றே தெரியாது. அவர்கள் எப்படி இருப்பார்கள்? ஏன் அப்பா அவர்களோடு பேசக்கூடாது என்கிறார்? என்கிற கேள்வி எனக்குள் வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் என் அப்பாவிடம் அந்த பதிலை கேட்க முடியவில்லை.

2011ம் ஆண்டு என்று நினைக்கின்றேன். நான் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பிரனய் அப்போது 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் அன்பாக பேசக்கூடியவன். நாங்கள் இருவரும் சிறுவர்கள் தான். அந்த வயதில் சக நண்பர்களுடன் குறும்புத்தனமும் கேலியும் கிண்டலுமாக இருப்போம். ஆனால் பிரனய் அதையும் கடந்து பாசத்துடன் பேசுவான். அந்த பாசத்தை எப்படி சொல்வது? எல்லோரும் சொல்வார்கள். காதலன் தன்னுடைய தந்தை போன்று தம்மை கவனித்துக் கொண்டான் என்று சொல்வார்கள். ஆனால் பிரனய் அப்படி அல்ல, ஒரு குழந்தையை போன்று பார்த்துக் கொண்டான். அவன் எல்லோரிடமும் அன்பாகத்தான் பேசுவான். அவனுக்கு தெரிந்தது எல்லாம் கனிவும் அன்பும் தான். ஒரு கடுஞ்சொல் கூட அவனிடத்தில் தென்படாது. நாங்கள் நட்போடுதான் பேசி வந்தோம். எங்களுக்குள் எந்த காதலும் இல்லை. இந்த நட்பு என் அப்பாவை கடுமையாக பாதித்தது. என்னை பள்ளிக்கூடத்தைவிட்டு நிறுத்திவிட்டு வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார்.

நான் 11ம் வகுப்பு படிக்கின்ற போது பிரனய் 12ம் வகுப்பு படித்து வந்தான். ஒரே பகுதி என்பதனால் சந்தித்துக் கொண்டோம். இதனை அறிந்த என் அப்பா, என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து பூட்டினார். கன்னத்தில் கடுமையாக தாக்கினார். நான் யாரோடு உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்றேனோ, நீ அவர்களோடு உறவு வைத்திருக்கிறாய். நீ செய்த காரியத்தினால் நம் வம்சமே அழிந்து போய்விடும். கீழ்சாதி பயலோட உனக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று கூறி கடுமையாக தாக்கினார். எனது அலைபேசி பறித்துக் கொள்ளப்பட்டது. உறவினர்களோடு நண்பர்களோடு எனக்கு பேச அனுமதியில்லை. இந்த சித்திரவதை 6 மாதம் தொடர்ந்தது.

வெளியே எங்கு சென்றாலும் உடன் ஆட்கள் வருவார்கள். எல்லாம் இருந்தும் மனம் வெறுமையாக இருக்கும். வீட்டில் யாரும் என்னோடு பேச மாட்டார்கள். நானே பேச முயற்சி செய்தாலும் மௌனமாக கடந்து சென்றுவிடுவார்கள். ஒவ்வொரு மணி நேரமல்ல, ஒவ்வொரு நிமிடமும் பிரனயும் அவனது சாதியும் குறித்து இழிவாகப் பேசுவார்கள். மாலா, மாதிகா சாதியில் பிறந்தவர்கள் எல்லாம் கேவலமானவர்கள் என்றெல்லாம் என் அப்பா விமர்சித்து பேசுவார். ஒரு வருடம் என் படிப்பை நிறுத்தி வீட்டில் சிறை வைக்கப்பட்டு உறவினர்களாலும் குடும்பத்தினர்களாலும் நான் அனுபவித்த சித்திரவதையை யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். தினந்தோறும் கண்ணீரும் வலிகளும் நிறைந்த நாட்களாக நகர்ந்தன.

நான் பிரனயோடு நட்புடன் இருப்பதனால் ஒரு வருடப் படிப்பினையே என் அப்பா நிறுத்திவிட்டார். பிரனய், ஹைதரபாத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தான். என் அப்பாவிடம் கெஞ்சி கேட்டு என் படிப்பை கெடுத்துவிடாதீர்கள் என்று அழுதேன். வேறு வழியில்லாமல் என் அப்பா என்னை ஹைதரபாத்தில் பி.டெக் முதலாமாண்டு சேர்த்துவிட்டார்.

எனக்கு ஹைதரபாத்தில் பி.டெக் படிக்கும் போதுதான் பிரனய் மீது நட்புடன் இருந்த எனது அன்பு காதலாக மாறியது என்று கருதுகிறேன். இருவரும் காதலை பரிமாறிக் கொண்டோம். கடந்த 2016ம் ஆண்டு நானும் என் சித்தப்பா மகள்களும் மற்றும் உறவினர்களும் ஹைதரபாத்தில் சினிமாவிற்கு சென்றிருந்தோம். சினிமாவிற்கு செல்வதற்கு முன்பு நான் பிரனயை அலைபேசியில், நீயும் படத்திற்கு வா என்று அழைத்திருந்தேன். அவனும் வந்திருந்தான். இதனை கவனித்த என் சித்தப்பா மகள், எனக்கு தெரியாமல் அலைபேசியில் என் சித்தப்பா சரவண்குமாருக்கு தகவலை தெரிவித்தாள். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தியேட்டருக்கு வந்த என் சித்தப்பா சரவண்குமார் என்னை கடுமையாக அடித்தது மட்டுமல்லாமல், பிரனய் சட்டையை பிடித்து இழுத்து எல்லோரும் பார்க்கும் விதமாக அவனது கன்னத்தில் அறைந்து சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசினார். பிரனய் நிலைகுலைந்து பரிதாபமாக நின்று கொண்டிருந்தான். அந்த காட்சியை இன்று நினைத்தாலும் நடுங்கிப் போவேன். எல்லா அவமானங்களையும் எனக்காக தாங்கிக் கொண்டான்.

நான் மிராளுகுடாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏற்கனவே எனது உறவினர்கள் 20 – 25 பேர் இருந்தனர். எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டு அடித்தனர். ஸ்டூல், உருட்டுக்கட்டை என்று கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு என்னை தாக்கினார்கள். உனக்கு நம்ம சாதியில் எந்த பையனும் கிடைக்கலயா? மாலா தான் கிடைத்தானா? என்று என்னை ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசினார்கள். உலகத்தில் உள்ள எல்லா கெட்டவார்த்தைகளையும் என் உறவினர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று கருதுகிறேன். அதுபோன்ற ஒரு ஆபாசமான குப்பை பேச்சினை, நாற்றமடிக்கும் பேச்சினை அப்போதுதான் முதன்முறையாக எதிர்கொண்டேன். ஒவ்வொரு பேச்சிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் என்னை பாலியல் ரீதியாகவும் பிரனயை சாதி ரீதியாகவும் இழித்து பழித்து பேசினர். கடுமையாக தாக்கப்பட்ட நான் காயத்துடன் ஆடை கிழிக்கப்பட்டு துவண்டு கிடந்தேன். அந்த கணம் செத்துவிட வேண்டும் போல் தோன்றியது. ஆனால் பிரனய் உயிர்ப்பினை கொடுத்துக் கொண்டிருந்தான். அவனது நினைவு, அவனது பேச்சு எனக்குள் மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்தியிருந்தது.

மறுபடியும் வீட்டிச்சிறை. தாக்குதல், இழிவுபடுத்தப்படுதுல் என்று 20 நாள் இந்த கடும் சித்திரவதை நடந்தது. எனது படிப்பினை நிறுத்திவிட்டனர். ஆனால் 15 நாட்களுக்கு ஒரு நாள் என்று மட்டும் கல்லூரிக்கு சென்று வந்தேன். உடன் என் அப்பாவும் வருவார்.

பிரனயின் தந்தைக்கு ஹைதரபாத்திலிருந்து மிகப்பெரிய ஒரு தாதா பேசினான். உன் மகன் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் மாருதிராவ் மகளோடு பேசக்கூடாது. அவனை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினான். இதனால் பயந்து போன பிரனயின் குடும்பத்தினர் பிரனயின் படிப்பை நிறுத்திவிட்டு அவனை அழைத்துக் கொண்டு உறவினர் ஒருவர் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பில் விட்டனர்.

இதற்கிடையில் பிரனயின் குடும்பத்தினரை மிரட்டிய அந்த தாதா போலீஸ் என்கவுண்டரால் கொல்லப்பட்டான். அவன் இறந்த பிறகு தான் பிரனயை மிராளுகுடாவிற்கு அழைத்து வந்தார்கள்.

என் படிப்பு நின்றுவிட்டது. பிரனய் படிப்பும் நின்றுவிட்டது. அவனது குடும்பம் உயிருக்கு பயந்து வெளியூரில் தஞ்சம் அடைகிற நிலை. இதெல்லாம் எதற்காக நடக்கிறது? ஆழமாக யோசித்துப் பார்த்தேன். ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்க வேண்டாமென்று சொல்லி வளர்த்த என் அப்பா, எஸ்சி மக்களை மட்டும் மனிதர்களாக பார்க்கவில்லை? சாதிதான் இந்த எல்லா சதிக்கும் காரணம் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டேன். என்ன நடந்தாலும் சரி என் வாழ்க்கை என்பது பிரனய் கூட தான் இருக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

பிரனய் மீது அன்பு வைத்தது சமூக குற்றமா? 7 ஆண்டுகள், எனது 14 வயதிலிருந்து சாதி ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் கேட்கலாம் நீ தான் வைசியா சமூகத்தைச் சேர்ந்தவள். உனக்கு என்ன சாதி ரீதியான சித்திரவதை என்று கேட்கலாம். என் மீது நடந்தது சாதி ரீதியான சித்திரவதை தான். என் பிரனயிக்கு நடக்க வேண்டிய சித்திரவதையை நான் தாங்கிக் கொண்டேன். எனக்கு நடக்க வேண்டிய சித்திரவதையை பிரனய் ஏற்றுக் கொண்டான். ஆகவே நான் தலித்தாக பிறக்காமல் இருக்கலாம். ஆனால் தலித்துகள் மீது நடைபெறக்கூடிய சித்திரவதையை நேரடியாக எதிர் கொண்டவள். அதனால் தான் சொல்கிறேன் என் மீதான சித்திரவதை என்பது சாதி ரீதியான சித்திரவதை.

எல்லாவற்றையும் உதறிவிட்டு 2018ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பிரனயை திருமணம் செய்து கொண்டேன். என் அப்பா மாருதிராவ், பிரனயையும் அவனது குடும்பத்தினரும் என்னை கடத்திச் சென்றதாக மிராளுகுடா 1 டவுன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். நான் காவல்நிலையத்தில் நேரடியாக ஆஜராகி என்னை யாரும் கடத்தவில்லை. நான் பிரனயை திருமணம் செய்து கொண்டேன் என்று விளக்கமளித்தேன். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர். என்னை என் கணவர் பிரனயோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பிரனயின் தந்தை எல்ஐசியில் அதிகாரியாக உள்ளார். கடந்த பிப்ரவரி 2018 மாதத்தில் பிரனயின் அப்பாவை கேத்தப்பள்ளி காவல்நிலைய சார்பு ஆய்வாளர், நீ எல்ஐசி ஏஜன்டாமே, பலரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டாயாமே என்று பொய்யான புகாருக்கு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த கடும் சித்திரவதையை செய்தார். நானும் பிரனயும் ஹைதரபாத்திற்கு சென்று ஐஜியிடம் நடந்ததை சொன்னோம். ஐஜி, நலங்கொண்டா எஸ்.பி. சீனிவாசராவிடம் இதுபோன்று நடவடிக்கை கூடாது. உடனடியாக பிரனயின் தந்தை விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட போலீசார் பிரனயின் அப்பாவை வெளியே விட்டனர்.

கடுமையான அச்சுறுத்தல் இருந்தாலும் பிரனய் என் மீது அதீத அன்பினை காட்டி வந்தான். ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி எங்களுக்கு ரிசப்சன் நடந்தது. மிராளுகுடா பகுதியில் பேனர் வைத்து கோலகலமாக கொண்டாடினோம். ஆனால் அன்றே எங்களை கொல்லுவதற்கு கூலிப்படையைச் சேர்ந்த சுபாஷ்குமார் சர்மா வந்திருக்கிறான். அந்த விபரம் எங்களுக்கு பின்னால் தான் தெரிய வந்தது.

நான் கர்ப்பமடைந்திருந்தேன். கடந்த 14 செப்டம்பர் 2018 அன்று ஜோதி மருத்துவமனைக்கு நானும் என் கணவர் பிரனயும் பிரனயின் அம்மாவும் சென்றிருந்தோம். என் உடல் பரிசோதனை முடிந்து திரும்புகிற போது, மருத்துவமனையின் வாசலில் பிற்பகல் 1.30 மணியிருக்கும் ஒரு சத்தம் கேட்டது. நானும் பிரனயின் அம்மாவும் திரும்பிப் பார்க்கிறபோது குத்துப்பட்டு கிடந்த பிரனயை சுபாஷ்குமார் சர்மா மறுபடியும் கத்தியால் குத்தினான். அந்த கொலைகாரனின் முகத்தைப் பார்த்தேன். பிரனய் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். அள்ளி எடுக்கின்றபோது உயிர் பிரிந்திருந்தது.

ஒரு கணம் எல்லாமும் முடிந்து போனது. இந்த கேடுகெட்ட சாதி ஒரு உயிரை பறித்து வீதியில் வீசி எறிந்தது. மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தன்னுடைய அப்பாவின் மரணவலி கேட்டிருக்கும். இதுபோன்ற கொடுமை யாருக்கும் வராது.

என்று கூறிய அமிர்தாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் அம்பேத்கரும் பிரனயும் புகைப்படத்தில் எல்லாவற்றையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

பிரனயின் மனைவியும் அம்பேத்கரின் பேத்தியுமான அமிர்தாவின் கண்களில் அடர்த்தியான உறுதி தெரிந்தது. அந்த உறுதி இழந்த எல்லாவற்றையும் கொண்டுவந்துவிடும் என்று நம்புகிறேன்.

எவிடன்ஸ் கதிர்.

செவ்வாய், 9 அக்டோபர், 2018

பரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும் : முனைவர் இ.முத்தையா

பரியனும் அவருடைய நாட்டுப்புறக் கலைஞர் தந்தையும் சந்தித்த அவமானம், நானும் என் தந்தையும் சந்தித்த அவமானத்தை மீள் அனுபவப்படுத்தியது.

எங்கள் ஊர்ப்  பெரியகுளம் (கண்மாய்) பல வரலாற்று  நிகழ்வுகள் புதைக்கப்பட்ட நீண்ட வெளி. சிவகாசிக் கலவரத்தில் கொல்லப்பட்ட சாதி மனிதர்களின் உடல்களை  வண்டியில் கொண்டு வந்து இந்தக் கண்மாயில் புதைத்ததாக என்னுடைய பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சிவகாசி சிவன் கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சாதியினர் (மாரி செல்வராஜ் மாதிரியே நானும் சாதி குறிப்பிடாமல் வரலாற்றைக் கதைக்கிறேன்) நுழைய முயற்சி செய்ய, கோவிலுக்குள் நுழைந்தால் அது தீட்டுப்பட்டு விடும் என்பதால் (அய்யப்பன் பெண்களால் தீட்டுப்பட்டு விடுமாம்) அவர்களை நுழையவிடாமல் இன்னொரு சாதியினர் தடுக்க, அதனால் பெரிய கலவரம் மூண்டதாகப் பாட்டி சொன்னார்.

ஆய்வு மாணவனாகச் செயல்பட்டபோது பேராசிரியர்கள் ஆ.சிவசுப்பிரமணியன், மணிக்குமார் போன்றோரின் விரிவான கட்டுரையைப் படித்தபோது என்னுடைய பாட்டியின் கட்டுரையும் நினைவுக்கு வந்தது.

நான் சொல்ல வந்தது சிவகாசிக் கலவரத்தைப் பற்றியல்ல. பெரியகுளத்தையும் என ஊரைப் பற்றியும், நாங்கள் பட்ட அவமானத்தைப் பற்றியும்.

சிவகாசியிலிருந்து எங்கள் ஊருக்கு வருவதற்குச் சாலை வசதி அப்போது இல்லை. அண்மையில்தான் எங்கள் ஊருக்குச் சுதந்திரமும் சாலையும் கிடைத்தது. அப்படி எங்கள் ஊருக்கு வருபவர்கள் பெரியகுளம் கண்மாயில் இறங்கித்தான் வரவேண்டும். இறங்கி என்றால் நீரில் இறங்கி என்று அர்த்தம் இல்லை. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அந்தக் கண்மாய் நிரம்பும் அல்லது கொஞ்சம் தண்ணீர் தேங்கி நிற்கும்.

நான் சிவகாசிப் பள்ளிக்கூடத்தில் வகுப்பு முடிந்து மாலையில் வரும்போது சின்னாண்டித் தாத்தா எனக்காகக் காத்துக் கொண்டிருப்பார். நடுக்கண்மாயில் குப்புறப் படுத்துக் கொண்டு பேராண்டி முதுகுல ஏறி மிதிடி எனச் சொன்னவுடன் அதை ஆசையோடும் சிரிப்போடும் பல முறை செய்திருக்கிறேன்.

சொல்ல வந்தது இதுவன்று. இந்தப் பெரியகுளத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று எங்கள் ஊரைச் சேர்ந்த ஓர்   இளம் பெண் ( அவருடன் சேர்ந்து தீப்பெட்டிக் கட்டை அடுக்கியிருக்கிறேன்)  சிவகாசியைச் சேர்ந்த ஒரு பையனுடன் பேசிக்கொண்டிருந்ததை எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் (எனக்கு மாமா முறை வேண்டும்) பார்த்திருக்கிறார்.

அப்போது எங்கள் ஊரில் பண்பாட்டு போலிஸார் அதிகம். அவர் ஊருக்குள் வந்தவுடன் மற்ற பண்பாட்டுப்  போலிஸாரிடம் சொல்லிவிட்டார். இவர்கள் நிலபுலத்துக்குச் சொந்தக்காரர்களின் பிள்ளைகள்.

அந்தப் பெண் ஊருக்குள் வந்தவுடன் இந்தப் பிள்ளைகள் அவரைச் சுற்றி நின்று கொண்டு விசாரணையைத் தொடங்கினார்கள். அந்தப் பெண் பதில் சொல்லாமல் நின்றவுடன் எங்கள் ஊர்ப் பிள்ளையார் கோவில் தூணில் கட்டிப்போட்டார்கள்.

நான் அப்போதுதான் பழைய கிணற்றில் குளித்துவிட்டு ( எங்கள் ஊரில் பழைய கிணறு, புதுக் கிணறு, குத்தாலம், கரண்டுக் கிணறு, பண்டாரங்கிணறு, அண்ணாச்சியம்மன் கிணறு எனப் பல உண்டு)  அந்தப் பக்கம் வந்தேன்.

அப்போது ஒருவர் ' தேவடியா மகளே ஊர்ப் பெயரக்  கெடுத்துட்டியேடி ' என்று திட்டியவாறே அவள் கன்னத்தில் அறைந்தார். அதைப் பார்த்து அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் மாறி மாறி கன்னத்தில் அறைந்தார்கள். அந்தப் பெண்ணின் மூத்த சகோதரி அங்கிருந்தவர்களைப் பார்த்து 'இனிமேல் அப்படி நடந்து கொள்ள மாட்டாள். அவளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் எல்லோருமே ஊர்ப் பெயருக்குக் களங்கம் வந்து விட்டதாகக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு அதைப் பார்த்து அழுகையும் ஆத்திரமும் வந்தது. உடனே பிள்ளையார் கோவில் மேடையில் தாவி ஏறி நின்று கொண்டு 'நிறுத்துங்கடா' என்று பலத்தை எல்லாம் கொடுத்து கத்தினேன். நிசப்தம் நிலவியது. அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அடித்தவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து அவர்களுடைய தந்தைமார் எங்கெங்கே வங்கனம் (வைப்பாட்டி) வைத்திருக்கிறார்கள் என்பதைப் பட்டியலிட்டேன். இதனால் எல்லாம் ஊரின் பெயர் கெடவில்லையா என்று கேட்டேன். ஒருவர் கூடப் பேசவில்லை. கூட்டம் கலைந்தது. அந்தப் பெண்ணை நானும் நண்பர்களும் அவிழ்த்துவிட்டு அவளுடைய சகோதரியிடம் ஒப்படைத்தோம்.

அன்று மாலை ஊர்க் கூட்டம் இருப்பதாக முரசு அறைந்து தெரிவிக்கப்பட்டது.
( ஊரின் காளியம்மன் கோவிலில் ஒரு பெரிய முரசு உள்ளது.  அதுதான் தகவல் தரும்) . ஊரில் பொங்கல் போன்ற எந்தச் சிறப்பு நிகழ்வும் இல்லாத நேரத்தில் ஊர்க் கூட்டம் சாட்டப்பட்டதால் அதற்கான காரணம் பலருக்குப் புரியவில்லை. இரவு 7 மணி இருக்கும். ஒருவர் எங்க வீட்டுக்கு வந்து  என் தந்தையைக்  கூட்டத்திற்குச் சீக்கிரம் வருமாறு நினைவுபடுத்திவிட்டு வரும் போது ஓம் பையனையும் கூட்டிட்டு வாங்க என்று சொன்னார்.

இரண்டு பேரும் கூட்டத்திற்குச் சென்றோம். கூட்டத்திற்கான காரணம் எனக்குத் தெரிந்தது. கூட்டத்தில் நுழைந்தவுடன் என் தந்தையையும் என்னையும் முன்னால் வந்து நிற்கும்படி நாட்டாமை கட்டளையிட்டார். என் தந்தை என்னைப் பார்த்து 'என்னடா விசயம்'  என்று  கேட்டார். அதற்குள் நாட்டாமை பேசத் தொடங்கிவிட்டார். (நாட்டாமைகள் பலர். என் பெரியப்பா, மாமா போன்றவர்கள்தான்). நடந்ததை என் தந்தையிடம் சொல்லி கூட்டத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் 100 ரூபாய் அபராதம் என்றும் தீர்ப்புச் சொன்னார்கள்.

என் தந்தை பேசுவதற்கு முன்பே நான் பேசினேன். ஒரு பெண் ஒரு பையனிடம் பேசியதைத் தவறாகப் புரிந்து கொண்டு அவளை அடித்தது தவறு . அடித்தவர்கள் ஒவ்வொருவரும் ஊர் மானம் போய்விட்டது என்று சொல்லியே அடித்தார்கள். அவளுடைய சகோதரி மன்னிப்புக் கேட்டும் விடவில்லை. அதனால்தான் அப்படிப் பேசினேன் என்று சொன்னேன்.

என் தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் ஒரு பலசரக்குக் கடை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்தார். கடைக்கு ஒவ்வொரு முறையும் மகமை என்ற பெயரில் ஒரு தொகையை விதிப்பார்கள். கடையை வைத்துத்தான் என்னையும் உடன் பிறப்புகளையும் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவர் மிகவும் பொறுமையானவர்.

என்னப்பா தண்டனைத் தொகைய கட்டிட்டு நாட்டாமைமார் காலில் விழுந்து  உன் மகனை மன்னிப்புக் கேட்கச் சொல் என்றார் ஒரு நாட்டாமை. 'மன்னிப்பும் கேட்க முடியாது தண்டனைத் தொகையையும் கட்டமுடியாது ' என்றேன். உடனே கூட்டத்தில் இருந்த இளந்தாரிகள் என்னைச் சுற்றி நின்று கொண்டு அடிக்க வந்தார்கள். என் தந்தை 'அவனுக்குப் பதிலாக நான் மன்னிப்புக் கேட்கிறேன் ' என்று சொல்லி காலில் விழப் போனார்.

'நாட்டாமைக் காரன் ஒவ்வொருத்தனும் வைப்பாட்டி வச்சதனால ஊர் மானம் கெடல. ஒரு பொண்ணு ஒரு பையனோட பேசினதால மானம் கெட்டுப் போயிருச்சா. இப்படி இருந்தா மயிரா மழை பெய்யும் என்று கத்தினேன். உடனே 'ஊர்ச் சபையில பேசக்கூடாத பேச்சு. இனி ஒங்க கூட எதுவும் பேசப் போறதில்ல. ஒங்க குடும்பத்த ஒரு வருசத்துக்கு ஊர் விலக்கு செய்றோம். அவங்க கூட யாரும் பேசக்கூடாது. ஊர்க் கெணத்துல அவங்க தண்ணி எடுக்கக் கூடாது. அவங்க கடையில யாரும் பொருள் வாங்கக் கூடாது. வண்ணான் அவங்களுக்குத் துணி துவைக்கக் கூடாது. நாவிதன் அவங்களுக்குச் சவரம் செய்யக் கூடாது' என்று தீர்ப்புச் சொன்னார்கள். என்னை அடிக்க வந்தார்கள். அந்த நேரத்திலும் என்னுடைய நண்பர்கள் சிலர் என்னை அவர்களிடம் இருந்து மீட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள். வீட்டிற்கு வந்த என் தந்தை என்னை எதுவும் திட்டாமல் அவராக கேவிக் கேவி அழுதார்.

இரண்டு நாட்களுக்குள் அந்த ஊரிலிருந்து கடையைக் காலி செய்து விட்டு பக்கத்தில் இருந்த சாட்சியாபுரம் என்ற ஊரில் கடை வைத்து நடத்தினார் என் தந்தை.

சாதி வெறி , ஒரு சாதிக்குள்ளேயே பொருளாதார ஏற்றத் தாழ்வு என அவமானப் படுத்துவதற்கான காரணிகள் பரந்து கிடக்கின்றன. இத்தகைய ஒடுக்குதலையும் மீறி வாழ சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் வேண்டும். எனக்கு இருந்தது. இருக்கிறது. பரியன்களும் அப்படித்தான்.

ஓவியம்
இரவி பேலட்

சனி, 6 அக்டோபர், 2018

சாதியம் குறித்து விடுதலைப் புலிகள்.


புலிகள் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், அவர்களது இலட்சியப் போராட்டமும், சாதி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித்தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. இது சமூகத்தின் உணர்வுகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சாதி குறித்து பேசுவதோ,செயற்படுவதோ குற்றமானது என்பதை விட வெட்கக்கேடானது, அநாகரீகமானது என்று கருதும் மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.

இது சாதியம் தொடர்பாக காலம் காலமாக இருந்து வந்த,சமூக உணர்வின் பிரம்மாண்டமான மாற்றமாகும். இருந்தாலும் சாதியப்பேயை எமது சமூகத்திலிருந்து முற்றாக ஓட்டிவிடமுடியவில்லை சாதிய வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன.

சாதிய வெறியர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். சாதிய பிரச்சனைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கிறோம்.

காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து மக்களின் ஆழ் மனதில் புரையோடிவிட்ட ஒரு சமூக நோயயை எடுத்த எடுப்பில் குணமாகி விடுவதென்பது இலகுவான காரியமல்ல.அப்படி நாம் அவசரப்பட்டு சட்டங்கள் மூலமாகவோ, நிர்பந்தங்கள் வாயிலாகவோ விரட்ட முனைவதும் புத்திசாலித்தனமானது அல்ல.

இன்றைய நிலையில் இப்பிரச்சனைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சாதி வெறி காட்டி,அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல். இது கொடுமையானது, அனுமதிக்க முடியாதது.மற்றையது சாதிரீதியான ஏனைய முரண்பாடுகள். இவற்றை அதனதன் தன்மைகளுக்கு ஏற்ற விதத்தில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயலிழக்கச் செய்யலாம்.

புலிகளின் விடுதலைப் போராட்டமும், அதனால் எழுந்த புரட்சிகர புறநிலைகளும் சாதிய அமைப்பை தகர்க்க தொடங்கி இருக்கிறது. எனினும் பொருளாதார உறவுகளும்,சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்து விடப்போவதில்லை.எனவே சாதிய ஒழிப்புக்கு சமுதாய புரட்சியுடன் மனப்புரட்சியும் அவசியமாகிறது.

பொருளாதார சமத்துவத்தை நோக்கமாக கொண்ட சமுதாய புரட்சியை முன்னெடுப்பது விடுதலைப் புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும். தேசிய விடுதலையை பெற்று, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாக செயற்படுத்த முடியும்.

ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்திலிருந்தே கட்டுப்பாடு பிரதேசங்களில் புரட்சிகரமான பொருளாதார திட்டங்களைச் செயற்படுத்தி, கூட்டுத்தொழில் முயற்சிகளை அமுல்படுத்தி, சாதிய உறவுகளை படிப்படியாக உடைத்தெறிவது சாத்தியமானதொன்று.

சமூகச் சிந்தனையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் சாதிய வழக்குகளும், சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கிறது,இந்த அறியாமையைப் போக்க மனப் புரட்சி அவசியம்.மன அரங்கில் புரட்சிகரமான உணர்வு ஏற்படுவது அவசியம்.

இங்கு தான் புரட்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.எமது இளம் பரம்பரையினருக்கு புரட்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும். பழமையான பிற்போக்கான கருத்துகள், கோட்பாடுகள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, புதிய முற்போக்கான உலகப் பார்வையை புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அறியாமை இருள் நீங்கி புதிய விழிப்புணர்வும், புரட்சிகர சிந்தனைகளும் இளம் மனங்களை பற்றிக் கொண்டால் சாதியம் எனும் மன நோய் புதிதாகத் தோன்றப் போகும் புரட்சிகர சமுதாயத்திலிருந்து நீங்கிவிடும்.

("விடுதலைப் புலிகள்" இதழ் குரல்-20ல் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி)