செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

எங்கெல்சின் அநாகரிக நிலையும் நாகரிக நிலையும் - நூல் மதிப்புரை : க.நாகராசு




பிரெடரிக் ஏங்கல்ஸ் அவர்கள் எழுதிய 'அநாகரிக நிலையும் நாகரீக நிலையம் என்ற நூலினை அண்மையில் வாசித்தேன். இந்நூல்  மனித சமூகத்தின் பல்வேறு அடிப்படை விடயங்களை மெய்யான ஆராய்ச்சியின் மூலமும் தெளிவான ஆதாரங்களுடன் விளக்குகிறது.

முதலாவதாக, அன்றைய சமூகமானது பொதுவுடமைத் தன்மை கொண்டது என்பதனையும், 

இரண்டாவதாக, உழைப்புப் பிரிவினையின் இயற்கைத்தோற்றம் பற்றியும், 

மூன்றாவதாக, கால்நடை வளர்ப்பும், அவை எப்படி பரிமாற்றுப் பண்டமாக உருவானது என்பதனையும்,

நான்காவதாக, பயிர்த்தொழிலிளிருந்து கைத்தொழில் எவ்வாறு உருவானது என்பதனையும், 

ஐந்தாவதாக, உழைப்புச் சக்தியின் தேவை எப்படி அடிமைகளைப் பெற்றெடுத்தது என்பதனையும், 

ஆறாவதாக, இரும்பு எப்படி வேளாண்மையையும்  போரினையும்  ஊக்கப்படுத்தியது என்பதனையும் தெளிவான விளக்கங்களுடன் விளக்குகிறார்.

முதலாவதாக, அன்றைய இனக்குழுவானது தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தது. அங்குள்ள அனைத்து உடைமைகளும் பொதுவானதாகவே இருந்தது. அதனால், அவை  பொதுவுடமைச் சமூகமாகத் தனித்தன்மை பெற்று விளங்கியது. இருந்தபோதிலும் ஒரு குழுவினுடைய ஊடைமையினை இன்னொரு குழு அபகரிப்பது இயல்பாக இருந்தது. இதன் விளைவு போர்.  இனக்குழுக்களுக்கிடையே  கடுமையான சண்டைகள் நடைபெறும். இப்போரில் ஒரு இனக்குழு அடியோடு அழிந்து போகுமே தவிர அடிமைப்படாது என்கிறார் ஏங்கல்ஸ். அப்படி என்றால், அக்காலத்தில் போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கிறது. அன்றைய சமூகத்தில் தனி உடைமை என்ற ஒன்று இல்லாததால் ஆள்வோரும் இல்லை; ஆளப்படுவோரும் இல்லை. இன்றைய நிலைமையோ இதற்கு முற்றும் முரணாக இருக்கிறது. அதாவது தனியுடமை அதிகார வர்க்கம் என்ற ஒரு கொலைகாரத் தன்மையினைப் பெற்றெடுத்தது. இவை, மேலும் வர்க்கப் பிரிவினையை உருவாக்கியதோடு, பல்வேறு சாதி மதங்களின் தோற்றத்தற்கு வழிகோலியது. இதில் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் அதிகாரமற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் குரல்வலைகள் முற்றிலுமாகப் பலவகைகளில் நெரித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.  நாகரீகத்தின் உச்சத்தில் உள்ள  நாம் இக்கொடுமையினைக் கானாத நொடியே இல்லை எனலாம்.

இரண்டாவதாக, உழைப்புப் பிரிவினை பற்றி பேசுகிறார். உழைப்புப் பிரிவினை என்பது இயற்கையின் வளர்ச்சியே என்கிறார் எங்கெல்ஸ். ஏனெனில், அன்றைய காலகட்டத்தில் உழைப்பு என்பது உணவுகளைச் சேகரிப்பதும் தனக்கான பாதுகாப்பான இருப்பிடத்தை அமைப்பது மட்டுமே பிரதானமாக இருந்தது. இதில் ஆண்களும் பெண்களுமாகச் சரிசமமாக ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதிலும், காட்டு விலங்குகளை வீட்டு விலங்காகப் பழக்கப்படுத்திய போது இதனைப் பராமரிப்பதிலும், குழந்தைப் பேரினைப் பெற்றெடுப்பதிலும் அதனைப் பராமரிப்பதிலும், வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டிய நிலையிலும் பெண்கள் தான்  ஈடுபட்டே ஆகவேண்டும் என்பது இயற்கையாகவே உருவானது. அதனோடு கூடவே  கால்நடைகளிடமிருந்து பால் கறப்பது, அதிலிருந்து பால் பொருட்களைத் தயாரிப்பது போன்றவைகளையும்  பெண்களே மேற்கொண்டனர்.

இன்னொன்று மிக முக்கியமானது, தொடக்கத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தை உற்பத்திச் செய்வதற்காகவே தொடங்கப்பட்ட வேளாண்மை, பின்பு அவை மனிதனுக்கு உணவினை உற்பத்தி செய்யக்கூடிய வேளாண்மையாக மாறியது. இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது, கால்நடைகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு வீட்டில் இருக்கும் பெண்களைச் சார்ந்தது என்றால், இந்த வேளாண்மையையும் தொடக்கத்தில் மேற்கொண்டது பெண்கள் தான் என்பதனை விளங்கிக்கொள்ள முடிகிறது. இதனை மேம்படுத்துவதில் தங்களுடைய பங்களிப்பை ஆண்கள் செலுத்தியிருக்கலாம் என்பதனை யாரும் மறுக்க முடியாது. இருந்தாலும் உணவு உற்பத்திக்கான வேளாண்மையினைக் கண்டுபிடித்தது பெண்களே. ஒரு நாகரிகத்தின் முதன்மை அடையாளமே இந்த வேளாண்மையே தான். அதுதான் உணவு உற்பத்தி. இதுவே நாடோடி வாழ்க்கைக்கு முடிவுகட்டியது. அப்படி என்றால், நாகரீகத்திற்கு அடித்தளமிட்டவர்கள் இந்தப் பெண்கள் தான் என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆண்கள் காட்டில் வீட்டில் பெண்கள் என்கிறார் ஏங்கெல்ஸ்.

மேலும், அவர் ஆண் தன்னுடைய துறையில் எஜமானனாக இருந்த மாதிரி பெண் தன்னுடைய துறையில் எஜமானியாக இருந்தார் என்கிறார்.  இதில் அதிகாரம் உள்ளவர், அதிகாரமற்றவர் என்ற பிரிவினையே கிடையாது. இருவரும் சமமானவர்கள் தான். இருந்தாலும் தனியுடைமையின் மோசமான விளைவுகளால் பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பது வெட்கக் கேடானது. இன்றைய எதார்த்த உலகில் இந்த இருவருக்குமான வேறுபாடானது இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால் தான், இன்னும் பெண்களுக்கு முழு உரிமை வழங்க வேண்டும் என்ற பலமான முழக்கங்களை கேட்டுக் கொண்டேயிருக்க முடிகிறது. காரணம், பெண்கள் இன்னும் ஆண்களுக்குச் சமமான உரிமையினை முழுமையாகப் பெறவில்லை என்பதுதான் இதன் அர்த்தம். இதனை எப்படி விளங்கிக் கொள்வதென்றால், உதாரணம் பெண்களுக்குச் சமமான உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தினை யாராவது பேசியோ அல்லது எழுதியோ பார்க்க முடிகிறதா? இல்லையே. அப்படி என்றால் பெண்கள் இன்னும் ஆனாதிக்கச் சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை.

மேலும், அன்றைய  திருமண முறை இணை மண முறை  என்கிறார் ஏங்கல்ஸ். அதாவது, பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் தாய்க்கு மட்டுமே தெரியும், இது யாருடைய குழந்தை என்று. ஆனால், தகப்பனுக்கு அவ்வளவு எளிதாகத் தெரிவதில்லை. அதனால் தான், தொடக்ககாலச் சமூகம் தாய் வழிச் சமூகமாக இருந்தது. அனைத்துக் குழந்தைகளுக்கும் தாயே முதன்மையானவளாக இருந்தாள். அன்று ஆண்கள் அனைவரும் கணவன்மார்கள், பெண்கள் அனைவரும் மனைவிமார்கள் என்ற நிலைதான் இருந்தது. பன்னெடுங்காலத்திற்குப் பின்புதான் ஒருதார மணமுறை உருவானது. இவை காலப்போக்கில் தகப்பன் குலத்தினைப் பெற்றெடுத்தது. அவை இன்றுவரை தொடர்நது கொண்டே வருகிறது.

மூன்றாவதாக, அநாகரிகர்களின் பொதுவான கூட்டத்திலிருந்து கால்நடை வளர்க்கும் இனக்குழுக்கள் தனியே பிரிந்து சென்றன என்கிறார் ஏங்கல்ஸ். அவர்   எழுதும் பொழுது பொதுவான கூட்டத்திலிருந்து கால்நடை வளர்க்கும் இனக்குழுக்கள் தனியே பிரிந்து சென்றதுதான் சமுதாயத்தில் ஏற்பட்ட முதல் மாபெரும் உழைப்புப் பிரிவினை என்கிறார். ஆம் உண்மைதான் பன்னெடுங்காலமாக உணவுக்காக அலைந்து திரிந்த  இந்தக் கூட்டமானது,  கால்நடைகள் மூலமாக முதன்மைத் தேவையான உணவுத் தேவையினை நிறைவேற்றிக் கொண்டது. மேலும், கால்நடைகள் என்ற பண்டமோ  மற்ற எல்லா பண்டங்களையும் மதிப்பிடுவதற்கான பண்டமாக ஆயிற்று என்றும், மற்ற எல்லா பண்டங்களையும் மதிப்பிடுவாதற்குரிய பண்டமாக  ஆயிற்று. அது எங்குமே மறுப்பில்லாமல் பெற்றுக்கொள்ளப்பட்டது என்கிறார். இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால், அன்று யாரிடம் அதிகமான கால்நடைகள் இருக்கிறதோ அவர்கள்தான் அனைத்து நிலைகளிலும்  தன்னிறைவு பெற்ற குழுக்களாக இருந்திருக்கிறார்கள். அன்று கால்நடைகள் தான் முதன்மையான செல்வமாக இருந்திருக்கிறது. கால்நடைகளைக் கைப்பற்றுவதற்காகப் பெரும் போர்கள் நடந்தேரின. இந்திய வரலாற்றில் வேத காலத்தில் கால்நடைகளைக் கைப்பற்றுவதற்குப் பெரும் போரே நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல், சங்ககாலத்தில் ஆநிரை கவர்தல் என்பதன் மூலமும் கால்நடைகள் எந்த அளவிற்கு  அதி முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  இந்தக்  கால்நடைகளில் பசுமாடு தான் முதன்மையான இடத்தை வகிக்கிறது. இவைதான் அன்றைய மனிதர்களுக்கு அனைவருக்குமான உணவு தேவைகளைப் பூர்த்தி செய்தது. அதேநேரத்தில்  இன்னொன்றினையும் புரிந்துகொள்ளவேண்டும். பசுமாட்டிற்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் காளை மாட்டிற்குப் பெரிய அளவில் கொடுக்கப்படுவதில்லை. இவை ஏனோ முற்றும் முரணாக உள்ளது. இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பசுமாடு கன்றுகளை ஈன்றெடுப்பதற்கும், உணவுப் பொருட்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமானால்  காளை மாடு அவசியம். காளை இல்லையேல் பசு இல்லை, பசு இல்லையேல் காளைகள்  இல்லை என்பது தான் உண்மை.  இருந்த போதிலும் காளையின் முக்கியத்துவத்தை தமிழ்ச்சமூகம் அதிகமாகவே புரிந்து வைத்திருக்கிறது.  

காளைகள் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டதோடு அவைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக அதனுடைய வலுவினை வெளிப்படுத்தும் விதமாக காளையர்கள் காளைகளுடன் கட்டித்தழுவும் ஏறுதலுவுதல் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இதனை முனைவர் ஏர் மகாராசனின் ஏறு தழுவுதல் என்ற நூலில் கானமுடிகிறது. இவை தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பொங்கலை முன்னிட்டு  நடத்தப்படுகிறது. 

மேலும், கால்நடைகளில் செம்மறி ஆடுகள் அவசியம் அதி முக்கியமானவை. அக்காலகட்டத்தில் பனிப்பிரதேசத்தில் இனக்குழுக்கள் வாழ்வதற்கு அச்சாணியே இந்த செம்பரி ஆடுகள் தான். அவை அவனுக்கான உணவினைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவனுக்கான ஆடையினையும் கொடுத்தது. அதாவது அதன் ரோமங்கள் ஆடையாகவும் கம்பளி தயாரிக்கவும் பயன்பட்டது.இவை  அவர்களை பனிப்பிரதேசத்தில் வாழும் சூழலினை ஏற்படுத்திக்கொடுத்தது. பனிப்பிரதேசத்தில் வாழும் இக்லு குழுவை உதாரணம் காட்டலாம்.

 நான்காவதாக, உழைப்பினால் உற்பத்தியினை அதிகப்படுத்துவதனைப் பற்றி எழுதுகிறார். அன்றை காலகட்டத்தில் உழைப்பு மட்டுமே அவனுடைய அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யும் முதன்மைத் தன்மை கொண்டதாக இருந்தது. தனியுடைமை வலிமையடைந்ததன் விளைவு இன்னும்  கூடுதல் உழைப்பு சக்தி தேவைப்பட்டது. அதனை தன்னிடமுள்ள குறைவான எண்ணிக்கை கொண்டவர்களை வைத்து நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு ஏராளமான ஆட்கள் தேவை. இந்த ஏராளமான ஆட்களைப்பெற வேண்டுமானால் இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று, தன் இனத்தில் கூடுதலான பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும். இதற்கு நெடுங்காலம் பிடிக்கும். அதனால் இவை இப்போதைக்குச் சாத்தியம் இல்லை. மற்றொன்று, மற்ற குழுக்களைச் சேர்ந்தவர்களைப் போரின் மூலமாக  வென்று அவர்களை அடிமைகளை  மாற்ற வேண்டும். இதில் இரண்டாமானவையினைத் தேர்ந்தெடுத்தது. போரில் தோற்றவர்களை அடிமைகளாக்கி, அவர்களின் உழைப்பினை தன்னுடைய தேவைக்கும் மீதமான உழைப்பினைப் பல்வேறு உற்பத்திக்காக மடைமாற்றம் செய்தனர். விளைவு, உற்பத்தி அதிகமானதும் தன்னுடைய தேவைக்குப் போக மீதியினை  வணிகத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவு வணிகம் உருவானது. மேலும், வணிகத்தின் மூலம் அபரீதமான பொருளாதாரத்தினைப் பெற்றெடுத்ததின் விளைவு, அதற்கு  மீண்டும் மீண்டும் உழைப்புச் சக்தியின் தேவை அதிகமாகி கொண்டே சென்றதால் அடிமைகளுக்கான தேவையும் அதிகமாக கொண்டே சென்றது. அதற்காகக் கொலைகார யுத்தங்கள் நடந்து கொண்டே இருந்தன. இதில் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று உண்டு. அதாவது, அன்றைய அரசாட்சிகள் செல்வச் செழிப்போடு மின்னியது என்றால், அவைகள் அனைத்துமே இந்த அடிமைகளின் உழைப்பினால் விளைந்தவையே. அதாவது சாலை போடுவது, அரண்மனை கட்டுதல், கால்வாய் வெட்டுதல், வேளாண்மை செய்வது,  போருக்கான குதிரைகள் யானைகள் பராமரிப்பது ஆகியவைகளில் அடிமைகளின் உழைப்பை காணமுடிகிறது. மேலும்  இன்றைய அனைத்து நினைவுச் சின்னங்களிலும் லட்சக்கணக்கான அடிமைகளின் உழைப்பினைக் காண முடியும்.  அரசரும் அவருடைய ஆட்சியும்  உச்சத்தில் இருந்தது என்றால், அடிமைகளின் உழைப்பு உச்சபட்சமாக வழிந்து பெறப்பட்டது.

ஐந்தாவதாக, ஏங்கல்ஸ் அவர்கள் அநாகரிக நிலையினை நாகரீக நிலைக்கு மாற்றுவதில்  இரும்பு முதன்மையான பங்கினை வகித்தது என்கிறார். இரும்பின் பயன்பாடு  அளப்பரியது. காடுகளை அழித்து விளை நிலங்களாக மாற்றுவதற்கும் போர் ஆயுதங்களைச் செய்வதற்கும் இன்னும் பலவகைகளில் இரும்பு உலோகம் பயன்படுத்தப்பட்டது.

இறுதியாக, பொதுவுடைமை சிதைந்து, தனி உடைமை உருவானதினை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்தத் தனியுடைமை தான் மானுட சமூகத்தின் முதன்மையான எதிரி. பண்டைய பொதுவுடைமைச் சமூகம் என்பது அடர்ந்த வனத்தைப் போன்றது. அது அத்தனை உயிர்களுக்குமான உயிர்நாடி; அனைத்து உயிரினங்களுக்கும் உணவினைக் கொடுக்கிறது; இருப்பிடத்தை கொடுக்கிறது; மனிதனுக்கு உணவோடு கூடவே பொருளாதாரத்தையும் பெற்றுக் கொடுக்கிறது. இயற்கை சமநிலையைப் போற்றி பாதுகாக்கிறது; மழை பொழிவைத் தருவிக்கிறது; மண் அரிமானத்தைத் தடுக்கிறது; பிராண வாயுவினைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது, இப்படியாக எண்ணிலடங்கா நன்மைகளை இந்தக் காடுகள் செய்துகொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட காட்டினை அழிக்க நினைப்பது  கொடுமையிலும் கொடுமை தான். இதேபோன்றுதான், மானுடத்தினை முதன்மையான உச்சத்தில் வைத்திருந்த பொதுவுடமை தனியுடைமையினால் சிதைந்தது. இந்தத் தனியுடைமை அதிகாரத்தினைப் பெருக்கியதோடு ஆயுதங்களையும் உற்பத்தி செய்தது, அதோடு கூடவே கொடும் போர்களையும் வழிந்து ஏற்படுத்தியது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் செயலினை வார்த்தெடுத்தது. நாட்டினைத் தன் வசமாக்கி, தன்னுடைய செங்கோலில் அனைத்து குடிகளின் உயிரையும் பிடித்து வைத்திருந்தது. விளைவு புரட்சி, போராட்டம். இவைகள் அனைத்துமே மேலே உள்ளவைகளுக்கு முடிவு கட்டினாலும், மீண்டும் அதிகார வர்க்கம் புதுமையான வடிவத்தில் நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. உழைப்பின் மூலமாகப் பொருளாதாரத்தைப் பெற முடியும் என்ற நிலை மாறி, கொள்ளையடிப்பதில் மூலமாக அதனைப் பெற முடியும் என்பதனை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது இந்த அதிகார வர்க்கம்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

பொதுவுடைமை மலரும்.

க.நாகராசு, முதுகலை ஆசிரியர்.

09.08.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக