ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

காலனியம் வீழட்டும்; சுதந்திரம் மலரட்டும் : நுக்ருமாவும் ஆப்பிரிக்க விடுதலையும் - நூல் மதிப்புரை : க.நாகராசு


அண்மையில், அமில்கர் கப்ரால் எழுதிய  'நுக்ருமாவும் ஆப்பிரிக்கா விடுதலையும்' என்ற நூலை வாசித்து முடித்தேன். இந்நூல் ஆழமான படிப்பினை உலகிற்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அதாவது காலனி ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு நாடு எவ்வாறு போராடி வெற்றிப் பெற்றது என்பது தான் அது. 

கானா என்ற நாடு ஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்குப் பக்கமுள்ள ஒரு சிறிய நாடு. இந்நாடானது காலனி ஆதிக்கத்தின் கீழ் பல ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்தது. இந்தக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து அந்நாட்டினுடைய புரட்சியாளர் க்வாமோ நுக்ருமா என்பவர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அதிபராகவும் ஆனார். அவர் தன்னுடைய நாட்டிற்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதுடன் நில்லாமல், ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் சுதந்திரமான ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானமான விடுதலை உணர்வு கொண்டிருந்தார். அதாவது அடிமைத்தனத்தை பெற்றெடுக்கும் காலனியாதிக்கத்தினை என்ன விலை கொடுத்தேனும் வேரறுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடி வென்றவர் நுக்ருமா. 

கானாவின் அதிபராக இருந்த பொழுது, தொடக்கத்தில் சனநாயகத்தை நிலைநாட்டியவர். பிற்காலத்தில்  தன்னுடைய தவறான தேசியக் கொள்கையினால் அதற்கு எதிராகத் திரும்பினார். ஒரு கட்டத்தில் தனக்கும் தன்னுடைய ஆட்சிக்கும் பாதுகாப்பினைப் பெறுவதற்கு ராணுவத்தை நம்பி இருந்தார் என்ற செய்தி துயரமாக இருந்தது. 

எந்த ஒரு நாடு அந்நாட்டின் நல் ஆட்சிக்கு ராணுவத்தை நம்பியிருக்கிறதோ, அந்நாடு சனநாயகத்திற்கு எதிரான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே நிலைக்குத்தான் நுக்ருமாவும் தள்ளப்பட்டார். அதாவது, சனநாயகத்தைத் தொடக்கத்தில் நிலைநாட்ட வந்த ஒருவர், அதிபரான பின்பு அதனைக் கொலை செய்யும் விதமாக நடந்து கொண்டார். இவை,  தான் தொடக்கத்தில் ஏற்றுக்கொண்ட நேர்மையான, உண்மையான நோக்கத்திற்கு விரோதமானது. முக்கியமாக அவர் தன்னைத் தானே ஒஸாஜி ஃபோ  அல்லது மீட்பர் என்று அழைத்துக்கொண்டார். 

அவருடைய ஆட்சி முட்டாள்கள், பைத்தியக்காரர்கள் விமர்சிக்கக் கூடிய அளவிற்குச் சகிப்புத்தன்மையற்ற விதத்தில் இருந்தது. அவருடைய தேசியக் கொள்கை எந்த அளவிற்குத் தன் நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராக  இருந்தது என்பதனைக் காணமுடிகிறது. இருந்தாலும், அவருடைய தொடக்ககாலப் போராட்ட வெற்றியான நாட்டினை ஒரு சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்டு செயல்பட்டதினை யாராலும் மறுக்க முடியாது.

மேலும், அவர் ஒன்றுபட்ட ஆப்பிரிக்காவின் அரசுக்குக் கானா அரசு தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்கும் என்று கானா அரசின் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் அவர் எழுதினார் எனும் பொழுது, இவர் உண்மையிலேயே ஒட்டுமொத்த ஆப்பிரிக்க மக்களின் மீது எவ்வளவு பெரிய மதிப்பு மரியாதை வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

நான்,என்னுடைய தேசம் என்று குறுகிய எண்ணமே கொண்டிருக்கும்  தலைவர்களுக்கு மத்தியில், ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் முழு சனநாயக விடுதலை, அதாவது ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் காலனியாதிக்கத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். 

அனைத்து மக்களும் தனக்கான சுயமான தேசத்தில் சுயமான அரசு உருவாக்கித்தர வேண்டும் என்ற நோக்கம் அவரை அறிஞராக, புரட்சிவாதியாக, சிந்தனையாளராக, பெரும் தத்துவவாதியாக, அடிமைத்தனத்தின் முதல் எதிரியாக இருப்பவர் நுக்ருமா என்ற நிலை உருவானது.

அதே நேரத்தில், கானாவின் குடியரசுத் தலைவர் செகோவ் டூரே அடிக்கடி கூறுவதைப் போல 'மக்களும், மனித குலமும் எல்லைகள் அனைத்தையும் கடந்து மாறிக்கொண்டே இருக்கும் பொழுது, ஒரு மனிதன் எம்மாத்திரம்' என்கிறார். அப்படியென்றால், நுக்ருமாவின் சாதனைகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. 

அவர், ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய மக்களுக்கு வீரத்தின் அதாவது சுதந்திரத்தின் விதைகளை விதைத்துச் சென்றிருக்கிறார் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அவருடைய பெருமைகள் அதாவது, ஒரு கை எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும், அதனால் வானத்தை மறைக்க முடியாது என்ற பழமொழிக்கு ஒப்பாகும். 

அதேபோன்று, அவர் ஆட்சியில் இருக்கும் பொழுது அவரை இந்த மோசமான நிலைமைக்குத் தள்ளி துரோகம் செய்தவர்களை வரலாறு என்றைக்கும் மன்னிக்காது. அவருக்கு ஏற்பட்ட நிலை இவர்களுக்கு ஏற்படும். அதாவது, வானத்தை நோக்கி எச்சில் துப்பினால் அது முகத்திலே தான் விழும் என்ற பழமொழியைப் போன்றது. 

இறுதியாக, நுக்ருமாவின் புகழ் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல  உலகின் எட்டுத்திக்கும் பரவட்டும்.

குவாமோ நுக்ருமாவுக்குப் புகழ் அஞ்சலி.

க.நாகராசு, முதுகலை ஆசிரியர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக