சனி, 25 மே, 2019

வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வும் சாவும்தான் சூழ் எனும் பெருங்கதை :- கதிர் நம்பி, பொறியாளர், பேரா.தொ.ப. வாசகர் வட்டம்


கண்மாயிற்கு நீர் வரத்து இல்லை.வேலிக்கருவை கண்மாய் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அரசு கருவையை வெட்டும் (தூரோடு பிடுங்க அல்ல) உத்தரவு தருகிறது. ஊரில் இருந்து பெருந்தலைகள் அரசு விடுக்கும் வெட்டு ஏலத்தை எடுத்து வருகிறார்கள். ஒரு நல்ல! வெட்டு மர நிறுவனத்திற்கு கண்மாயின் வேலிக்கருவையை பெரிய தொகைக்கு கைமாற்றி விடுகிறார்கள். பிறகு வந்த பெரிய தொகையில் ஒரு பிள்ளையார் கோயிலை கட்டி ஊரின் வாயைத் தைத்து விடுகிறார்கள். எஞ்சியிருக்கும் பணத்தை தங்களுக்குள் பங்கிக் கொள்கிறார்கள்.
அத்தி பூத்தார் போல கண்மாயில் நீர் சேகரமாகிறது. மடை பராமரிப்பு இல்லை. வாய்க்கால் இல்லை. தண்ணீர் வேண்டுமெனில் எண்ணெய் எந்திரம் வைத்து நீர் எடுத்துக் கொள் என்கிற நிலை.கடைமடை சம்சாரிக்கு நீர் போய் சேராது. எந்திரம் வைத்திருப்பவரே நீர் எடுத்துக் கொள்வார். நீர் பாய்ச்ச மணிக்கு இத்தனை ரூபாய் என பணம் கட்டுகிற நிலை இருக்கிறது. இப்படி கண்மாயின் மீது உரிமை இழந்து கையறு நிலையில் நிற்கின்ற என்னைப் போன்ற சம்சாரிகள் நிற்கின்ற இடத்தை தீர்க்க தரிசனமாக தொட்டு சூல் பெருங்கதை நிறைவு பெறுகிறது.
உருளைக்குடி எனும் ஊரினில், எட்டையபுர மன்னர் தொட்டுத் தந்த மண்வெட்டியை வைத்து சாமிக்கு பூசை செய்து விட்டு கண்மாய் கரையை மடைக் குடும்பன் வெட்ட, கண்மாயிலிருந்து ஊரார் கரம்பை மண்ணை எடுத்து செல்வதில் ஆரம்பித்து, மக்களரசு கண்மாயிற்கு அமர்த்திய கண்மாய் காவலரிடம் (watchman) மடைக் குடும்பன் மடையின் சாவியையும் மண்வெட்டியையும் ஒப்படைப்பதோடு முடிகிறது. உழைக்கும் உழுகுடி மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பாடுகளையும் இயல்பாக நம் கண் முன் நிறுத்துகிறது சூல் பெருங்கதை.
கண்மாய் :
----------------
“முதல் எனப்படுவது நிலம்”  என்கிறது தொல்காப்பியம். நிலத்தின் மீதான உரிமை தான்  உழைப்பின் மீதும் உழவின் மீதும் ஒரு உயிர்ப்பான உறவை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் ஏர் மகாராசன். எனினும் அந்த உரிமைக்கு மூலமாய், நிலத்திற்கு மூலமுதலாய் இருப்பது நீர். அந்த நீரினை சேகரம் செய்கின்ற ஏந்தல், தாங்கல், ஏரி,கண்மாய்,ஊரணி,குளம்,குட்டை என அனைத்து நீர்நிலைகளை ஒரு குமுகம் எவ்வாறு காத்து வந்தது என்பதற்கு சூல் ஒரு உதாரணம். ஆசிரியர் கண்மாயை நிறைமாத சூலிக்கு ஒப்பிடுவார். என்ன ஒரு கவித்துவமான ஒப்பீடு! நிறை மாத சூலி போல கண்மாயின் வயிறு தண்ணீரால் வீங்கி இருக்கிறது. கண்மாய்களுக்கு நீர் கொண்டு வரும் ஓடைகளை ஆணின் குறி என்றும், மழை தான் இயற்கையின் விந்து என்றும் கண்மாய் தான் பெண்ணின் யோனி என்றும் கர்ப்பப்பை என்றும் உருவகப்படுத்துகிறார். இவை உருவகங்கள் மட்டும் அல்ல., உண்மையும் கூட. கண்மாய் நீரில் வாழும் மீன்களான விரால்,விலாங்கு,அயிரை,கெண்டை,கெளுத்தி,
கொறவை என பல வகையான மீன்களுக்கு ஆதாரமாய் நிற்கிறது. வலசை வரும் பறவைகள் கண்மாயின் நடுவே வீற்றிருக்கும் மரங்களில் தஞ்சமடைகின்றன. கரைக்கு அப்பால் இருக்கும் வயல்களை பச்சையம் போர்த்திட நீர் தந்து சம்சாரிகளை காக்கின்றது.
சிறகி,உள்ளான்,நாமக்கோழி,மீன்கொத்தி என பல பறவைகளுக்கு மீன்களையும்,நத்தை,நண்டு என உணவு தந்து பறவைகளை குதியாளம் போட வைக்கின்றது.நீர் வறட்சியே நம்பிக்கையின் வறட்சி என ஆசிரியர் குறிப்பிடும் பொழுது உருளைக்குடி மக்கள் நம்பிக்கை வறட்சி காணாத வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள் என பதிவு செய்கிறார். கண்மாய் பல்லுயிரியம் பேணுகிறது, கரையில் ஓரமாய் நிற்கும் அய்யனாரையும் சேர்த்து...
பனையும் கரையும் :
-------------------------------
மண் அரிப்பு ஏற்பட்டு கண்மாய்க் கரை உடைந்து போகாது காப்பது கரையில் நெடிந்தோங்கி உயர்ந்து நிற்கும் பனை மரங்களின் வேர்களும் பனை மரத்தோடு சேர்ந்து கரை முழுக்க விரவிக் கிடக்கும் காட்டுக் கொடிகளும் தான். கூடவே தெய்வமாகிப் போன மடைக் குடும்பனும் அவனை துணைக்கு கூட்டிக் கொண்ட அய்யனாரும் கரையில் அமர்ந்து கண்மாயை காக்கிறார்கள். அவரவருக்கு அவரவர் வயிறு. ஊருக்கு கண்மாய் தான் வயிறு. “வீட்டுக்கு கும்பா,ஊருக்கு கண்மாய்,சித்தனுக்கு திருவோடு” என ஊருக்கு உணவளிக்கும் அட்சய பாத்திரம் தான் கண்மாய் என்று ஆசிரியர் சொல்வதிலிருந்து கண்மாய் மீதான் பிடிப்பை உணர முடிகிறது.
மடைக் குடும்பன் :
----------------------------
நீர் ஆதாரங்களில் உள்ள மடைகளின் வழியே நீரை மேலாண்மை செய்கிறவர்கள் மடையர்கள். அன்றைய குமுகத்தில் மடைக் குடும்பன் என்பது ஒரு மதிப்புமிக்க பதவியாகும்.(high esteemed designation).மரபு வழிப்பட்ட தொழிலாக மடை நிர்வாகம் இருந்ததாலும் ஊரில் உள்ள சம்சாரிகள் அத்தனை பேருக்கும் சரி சமமாக நீர் பாய்ச்சும் நேர்மை கொண்டதாலும் இவர்கள் செல்வாக்கு மிகுந்து இருந்தார்கள்.உருளைக்குடி ஊரில் நீர்பாய்ச்சி மடைக் குடும்பன் ஒருவன் கையில் தான் மொத்த சம்சாரிகளின் வாழ்வாதாரமும் இருந்து வந்தது. கண்மாய் நீரை திறந்து விட்டதும் நிலம் முழுக்க பச்சையம் போர்த்தி நிற்பதைப் பார்ப்பதும் தான் மடைக் குடும்பனுக்கு பெருமிதம். கரையில் பரவிக் கிடந்த சங்கச் செடியில் இருந்த பூக்களை பிடுங்கிச் சென்ற கிழவியின் வீடு தேடிச் சென்று விசாரணை நடத்தி எச்சரிப்பதில் தெரிகிறது கண்மாயின் மீது மடைக் குடும்பனுக்கு இருக்கின்ற அக்கறை.
நாம் ஒருவரை இழித்து பழிப்பதற்கு ‘மடையா’ என்ற சொல்லை என்றைக்கு  பயன்படுத்தினோமோ அன்றே நாம் நம்முடைய நீரின் மீதும் நீர்நிலைகளின் மீதும் இருந்த உரிமையை இழந்து விட்டோம். மடைக் குடும்பன் மடை திறக்கவோ அல்லது அடைப்பு எடுக்கவோ நீருக்குள் முக்குளித்து அடியாலத்திற்கு செல்கின்ற பொழுது அவனும் ஒரு நீர் வாழ் உயிரினமாக மாறி விடுகிறான். அப்படியொரு அடைப்பு எடுக்க நீரில் பாய்ந்து இறந்து போன மடைக் குடும்பனின் பாட்டன் தான் சாமியாகி கரையில் கருப்பன் சாமி என்ற பெயர் தாங்கி நிற்கிறான்.கரணம் தப்பினால் மரணம் என்ற தொழில் மடை காப்பது.எனினும் மரபு வழிப்பட்டு வந்த தொழிலை போற்றி வந்திருக்கின்றனர்.மடையர்கள் கண்மாயை விட்டு பிரிந்தார்கள்; நீரும் கண்மாயை விட்டுப் பிரிந்தது.
தெய்வங்களும் மக்களும் :
-----------------------------------------
உருளைக்குடியில் தெய்வங்களும் மக்களும் பிண்ணிப் பிணைந்து கிடந்திருக்கிறார்கள். இந்த மக்கள் தெய்வங்களை கொண்டாடுகிறார்கள், தூற்றுகிறார்கள்,பகடி செய்கிறார்கள்,சாட்சியாக வைத்துக் கொள்கிறார்கள். தெய்வத்தின் மீது பயம் இருக்கிறது.பக்தி இல்லை.ஏன் இவர்கள் தெய்வங்களோடு இவ்வளவு இணக்கமாக இருக்கிறார்கள்?ஏனெனில் நேற்றைய மனிதர்கள் இன்றைய தெய்வங்கள். நடுகல் நினைவேந்தலின் தொடர்ச்சி தானே தெய்வ மரபு. ஊருக்காக செத்துப்போன மடைக்குடும்பன் கருப்பன் சாமியாகவும் நிறைமாத சூலியாக செத்துப்போன மாதாயியும் தெய்வங்களாகி உருளைக்குடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நம்பிக்கை எவரையும் பாதிக்கவில்லை. ஏனெனில் அறிவுத்திமிர் உருளைக்குடியில் குடியேறாத காலம். மழையை வழி அனுப்பி வைக்கும் சடங்கிற்காக தோரணங்கள் கட்டப்படுகின்றன. “இன்ன தேதில சடங்கு சார்த்த போறோம்னு ஊருல இருக்குற எல்லாருக்கும் தெரியும்.அப்புறம் ஏன் தோரணம் கட்டனும்?”  என்ற கேள்விக்கு “நமக்குத் தெரியும்.நம்ம சாமிக்கு தெரிய வேண்டாமா? நம்மள மாதிரி அதுவும் சுத்த பத்தமா இருக்க வேண்டாமா? நம்மள மாதிரி தான் நம்ம சாமியும்., இங்க இருக்குற பொம்பள சாமி பக்கத்துக்கு ஊருல இருக்குற ஆம்பிள சாமிகூட தொடுப்பு வச்சிருக்கும். அதெல்லாம் இல்லாம கொஞ்ச நாளைக்கு சாமிகளும் சுத்த பத்தமா இருக்கணும்னு சொல்லித் தான் தோரணம் கட்டி சாமிக்கு அறிவிக்கிறது”  என ஊருளைகுடி மக்கள் சொல்கின்ற பதிலில் இருந்து மக்களும் தெய்வங்களும் இரண்டறக் கலந்து கிடந்தார்கள் என்ற செய்தி கிடைக்கிறது. இந்த தனித்த ‘மக்கள்-தெய்வம்’ உறவு புரியாமல் முற்போக்காளர்களும் வலது சாரிகளும் இந்த மக்களை தன்வயப் படுத்திட நினைத்து தோல்வியே அடைகின்றனர் என்பது என் கருத்தாகும். பெருந்தெய்வ கடவுளான சிவன் பார்வதியை வைத்து ஒரண்டை இழுக்கும் கிளைக்கதை ஒன்று இந்த மக்கள் பெருந்தெய்வ கோயில்களிடம் இருந்து அந்நியப்பட்டிருந்ததை சொல்கிறது. தெய்வங்கள் சூழ் மனிதர்கள்! நீர் சூழ் ஊர்! தெய்வங்கள் கண்மாயை காக்கிறதோ ? கண்மாய் தெய்வங்களை காக்கிறதோ?
அறம் காத்தவர்கள் :
------------------------------
அறம் என்றால் என்ன? அதை எப்படி காப்பது?
செவ்வியல் இலக்கியமான மணிமேகலை
“அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்;
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” 
என அறம் என்பதற்கு பொருள் தருகிறது.
கரிசல் இலக்கியமான சூல் பெருங்கதையில் வருகின்ற கொப்புலாயி ஒற்றை வரியில் அறம் என்பதற்கான பொருளை போகிற போக்கில் நெற்றியில் அடித்தாற் போல சொல்கிறாள்.
“கல்லுலையும் சோறு; கத்தாழையிலையும் சோறு; தொண்டைக்கு அங்கிட்டு போனா  நரகலு”.
கொப்புலாயி மட்டும் அல்ல, உருளைக்குடி உழுகுடி மக்கள் அனைவருமே அறம் காத்தவர்கள் தான். ஊருக்கு வழிப்போக்கரோ, ஆண்டியோ,சித்தனோ,வித்தைக்காரர்கள் என நாடோடிகள் எவர் வந்தாலும் பசியோடு படுக்கப் போக மாட்டார்கள். ஊரின் இளவட்டங்கள் அவர்களாகவே வீடுகளுக்கு சென்று சோறு எடுத்துக் கொண்டு வந்து வந்தவரை பசியாற வைப்பர். இன்றைக்கும் சில ஊர்களில் இந்த பழக்கம் இருந்து வருகிறது. உழுகுடிகள் வறியவருக்கு வேண்டும் என்கிற மட்டிற்கும் உணவு கொடுத்துப் பழகியவர்கள். பிறரை பிச்சை கேட்க அனுமதிக்காமலே அவர்களாகவே உணவு அளித்திருக்கிறார்கள். இங்கு உபரி உற்பத்தி நடக்கிறது. எனினும் ஊர் அறம் காக்கிறது. கண்மாய் மூலக் காரணமாய் நிற்கிறது.
“நீரும் சோறும் விற்பனைக்கு அல்ல” என்பது தமிழரின் அறம் என தொ.ப சொல்கிறார். உருளைக்குடி போன்ற எண்ணற்ற ஊர்கள் அப்படியானதொரு அறம் காத்து வந்திருகின்றன.
மானாவாரிக் காட்டில் விதைத்திருக்கும் குருதவாலிக்கும் கேப்பைக்கும் காவல் யாருமில்லை.மினுதாக் குடும்பன் என்ற ஒற்றை மனிதன் தவசங்களை மொட்டப்பாறையில் வந்து அமரும் பறவைகளுக்காக வீசினான். பறவைகள் தவசங்களை இறையெடுப்பதை கண்டு மகிழ்ந்தான்.அவன் போல ஊராரும் அவ்வாறே தவசங்களை மொட்டப்பாறையில் வீசினார்கள்.பறவைகள் நாளடைவில் உருளைக்குடிவாசிகளாகி விட்டது. தனி மரம் தோப்பானது! நாம் இவைகளுக்கு உணவு தரவில்லை எனில் எவர் தருவார்? நம்மையெல்லாம் கஞ்சப்பயலுக என்று இந்த பறவைகள் நினைத்து விடாதா? என அவர்கள் எழுப்பும் கேள்விகள் அறங்காவலர்கள் என்ற சொல்லுக்கு பொருள் தருகிறது. 
குமுக உறவுகளும் உற்பத்தியும் :
---------------------------------------------------
உழுகுடிகள் உழுது வேளாண்மை செய்கிறார்கள். உருளைக்குடியும்  நிலவுடைமைச் சமூகம் கொண்ட ஊராக இருக்கிறது. நாயக்கமார்களிடம்,பிள்ளைமார்களிடம் நிலம் இருக்கிறது. அவர்கள் நிலத்தில் வேலை(பண்ணையாள்) பார்க்க ஊர் கூடி குலுக்கல் முறையில் அருந்ததியர்களை வேலைக்கு தெரிவு செய்துகொள்கிறார்கள்.சமூக நிதி பற்றி சிந்தித்திடாத காலம்.ஆனாலும் சமூக இணக்கங்கள் கொண்ட காலமாக இருக்கிறது. ஆண்டான்-அடிமை வர்க்க பேதம் உருளைக்குடியிலும் நிலவுகிறது. எனினும் நெகிழ்வுத் தன்மை இருக்கிறது. பண்ட மாற்று மட்டுமே அறிந்து பழகியவர்களாக இருக்கிறார்கள். வேளார் குமுகத்தினர் மண்பாண்டங்களை கொடுத்து நெல்லும் தவசங்களும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆசாரி குமுகத்தினர் கலப்பைகளை செப்பனிடுவது,உழவு மாடுகளுக்கு லாடம் கட்டுவது என உழவு நிமித்தமான வேலைகளை பூர்த்தி செய்கிறார்கள். பனையேறிகள் கள் இறக்கி பனையடிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தற்சார்பு நிறைந்த ஊராக இருக்கிறது. மிகை உற்பத்தி எட்டயபுர ஜமீனுக்கே சென்றிருக்க வேண்டும். விளைச்சல், கூலி நிர்ணயம்,அளவை மதிப்பீடு போன்ற கூடுதல் செய்திகள் சொல்லப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஊருக்கென கட்டுப்பாடு இருக்கிறது.மீறினால் தண்டனை. தண்டனை என்பது தவறை மனத்தால் வருந்துகின்ற நிலையை ஏற்படுத்தும் அளவிற்கே இருக்கிறது. குழு மனப்பான்மையோடு இயங்கினார்கள்.புராதான பொதுவுடைமைச் சமூகத்தின் எச்சமாக இருந்தார்கள். ஊரில் கண்மாய் இருக்கிறது.கண்மாயில் நீர் இருக்கிறது.எல்லோர் வீட்டிலும் இன்பம் இருக்கிறது. 
அறிகுறிகளும் சடங்குகளும் :
---------------------------------------------
  தன்னை இயற்கையோடு ஒரு அங்கமாக கருதியிருந்த குமுகத்தை கொண்டிருந்தது உருளைக்குடி. சொலவடைகள்,சொல்லாடல்கள் எல்லாமே நீரையும் மழையையும் ஒட்டியே அவர்களின் வழக்காறுகளாய் அமைந்திருக்கிறது.மழை வேண்டி ஒரு சடங்கு. மழையை அனுப்பி வைக்க ஒரு சடங்கு. உழுகுடிகள் வாழும் நிலத்தில் சடங்குகளுக்கு பஞ்சம் இருக்காது.
சடங்குகளே ஒரு குமுகத்தின் பண்பாட்டினை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது. குமுக நினைவுகளின் தொகுப்பே (social memoirs) வரலாறாகும் என பேரா.ஆ.சி முன்வைக்கிறார். சடங்குகள் வழியே நினைவுகளை மீட்கிறார்கள். சடங்குகளே மரபறிவின் கூடாகவும்(shell) இருக்கிறது. சடங்குகளில் ஏற்பன ஏற்று துறப்பன துறந்திட வேண்டும். சடங்குகள் இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள் அறிவைக் கடத்த(knowledge transfer) பயன்படுத்திய ஒரு ஊடகம்(medium) அன்றி வேறொன்றும் இல்லை. ஆகச் சிறந்த உதாரணம் : மொளைப்பாரி சடங்கு. விதை நேர்த்தி செய்வதிலிருந்து விதைத்து அறுவடை செய்கின்ற வரை சடங்குகள், சடங்குகள், சடங்குகள்..... எத்தனை சடங்குகளோ அத்தனை பட்டறிவு!!!!
மழையை வழி அனுப்பி வைக்க மாவினை கையில் எடுத்து வானத்தை நோக்கி வீசும் முன்னர் வேண்டுமா எனக் கேட்கின்றனர். வேண்டாம் சாமி என சொன்னதும் மாவினை வானத்தை நோக்கி தூக்கி வீசி மழை வேண்டாம் என்று உரக்க கத்தி உறுதி செய்கின்றனர். மாவின் மீதும் மழையை ஏற்றி சடங்கு சார்த்தப் படுவதால் தொத்து சடங்கு என இதை வகைப்படுத்தலாம்.
நாமக்கோழியின் வருகை, தூக்கணாங்குருவிக் கூட்டின் வாசல் திசை, அது கட்டப்பட்டிருக்கும் இடம்,எறும்புகளின் நகர்வு, மீன்கள் தட்டுப்பாடு என இவற்றை எல்லாம் கணித்து மழையின் வரத்தை கணித்துக் கொண்ட உருளுக்குடியினருக்கு எந்த காலேஜ்காரனும் (விவசாயக் கல்லூரி முகவர்கள் – கோவை வட்டாரத்தில் காலேஜ்காரன் என விளிப்பார்கள்) இவற்றை எல்லாம் சொல்லித் தரவில்லை.
வேதக் கோயிலும் விஞ்ஞானமும் :
----------------------------------------------------
வெள்ளையடித்த வேதக்  கோயில்களின் வரவு, உருளைக்குடி பிள்ளைகள் படிப்பதற்கான பள்ளி இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டாலும் புதிதாக வேதத்தில் சேர்ந்தவர்களிடம்  ஊரார் சற்று தள்ளியே இருந்திருக்கின்றனர். வெள்ளையர்கள் கொண்டு வந்த புகைவண்டியை பார்த்து மிரண்டு போய் அது எந்த நேரத்திலும் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் இருப்பதாக எண்ணி ஊரை காலி பண்ணிய செய்தியும் இந்த பெருங்கதையில் வருகிறது. வெள்ளையர்கள் கள்ளிச் செடியை அழிப்பதற்கு அந்து பூச்சியை கள்ளிச் செடியில் ஏற்றி ஒரு வருடத்தில் மொத்த கள்ளிச் செடியையும் காலி செய்கிறார்கள்.எனில் இவர்கள் நெல்லை என்ன பாடு படுத்தியிருப்பார்கள் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மன்னராட்சி X மக்களாட்சி :
--------------------------------------------
கரிசல் இலக்கியம் என்றால் கட்டபொம்மன் இல்லாமலா என்று கேட்கத் தோன்றுகிறது. வெள்ளையர்கள் வருகிறார்கள். எட்டயபுரம் வெள்ளையர்களுக்கு பணிந்து விட்டது. பாஞ்சாலங்குறிச்சி முரண்டு பிடிக்கிறது. உருளைக்குடி எட்டயபுர ஜமீனுக்கு உட்பட்ட பகுதி என்பதால் மன்னரின் முடிவே மக்களின்  முடிவாக இருக்கிறது. அரண்மனை மீது அவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்கள். அரண்மனையும் மக்களை சீண்டுவதில்லை. ராஜ துரோக செயல்களுக்கு மட்டுமே அரண்மனை ஆட்கள் ஊருக்குள் வருகிறார்கள். கட்டபொம்மனுக்கு உதவி செய்த ஆசாரியும் பணியேறியும் அவர் கொடுத்த தங்கபரிசை புதைத்து வைத்து அனுபவிக்க முடியாமல் இரண்டு தலைமுறைகள் அழிந்து போகிறது. இந்த புதையல் விவரணை கொஞ்சம் அதிகமாக நீடித்துவிட்டதோ எனத் தோன்றுகிறது.
குஞ்ஞான் எனும் மந்திரவாதி மன்னராட்சியின் வீழ்ச்சியை, சர்வாதிகார போக்கை, ஏக ஆதிபத்தியத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வருகிறான் என்றால் குப்பாண்டிச்சாமி மக்களாட்சியில் கேட்பாரற்று இந்த குமுகம் சீரழிந்து போகுமே என்று தன்னுடைய தீர்க்க தரிசனங்களை முன் வைக்கிறான். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விடும் சூழல் மக்களாட்சியில் இருப்பதால் அது மன்னாராட்சியை விட பெரும்பாதகங்களையும் விளைவித்து விடுமே என அஞ்சுகிறான் குப்பாண்டிச் சாமி எனும் சித்தன்.
மக்களாட்சி அமைந்தவுடன் அதிகாரிகள் மகிழ்வண்டியில் வந்து போக சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கண்மாய் கரையோரம் இருந்த பனைகளை  வெட்டுவதில் ஆரம்பிக்கிறது மக்களாட்சியின் அனர்த்தங்கள்.பஞ்சாயத்து தலைவர் பொறம்போக்கு நிலத்தை தன் பெயரில் பட்டா போட்டு மடையை மாற்றி தன் நிலத்தில் நீரை பாய்ச்சுவதில் ஆரம்பிக்கிறது மக்களாட்சியின் ஓட்டைகள்.
மக்களாட்சி கண்மாயில் கிடந்த அயிரை,கெளுத்தி,விலாங்கு போன்ற மீன்களை எல்லாம் துவம்சம் செய்து விட்டு ஜிலேபி கெண்டையை இறக்குமதி செய்கிறது, நாளடைவில் கண்மாயில் நாட்டு மீன்கள் இல்லாது போய்விடுகிறது. நிழல் தரும் வேப்ப மரங்களை வெட்டி விட்டு பஞ்சாயத்து அலுவலகம் கட்டி வானொலிப் பெட்டியை வைத்து மக்களுக்கு உரம் போடுவது,மருந்தடிப்பது,டிராக்டர் வைத்து உழுவது என விவாசாயப் பாடம் நடத்தியது.
கரம்பை அடித்து, குப்பை அடித்து, உழுது, விதைத்து அறுவடை செய்து தற்சார்பாய் வாழ்ந்த ஒரு குமுகத்தை நுகர்வுப் பிராணிகளாக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் கண்மாயின் உரிமையை பிடுங்கியதிலிருந்தே தொடங்குகிறது.
கோழியும் சேவலும் சேராமலே முட்டைகளை உருவாக்கி சாதனை என உருளைக்குடி மக்களை நம்ப வைத்தது மக்களாட்சி. “இன்றைக்கு கோழிகள் நாளைக்கு நீங்கள்”  என குப்பாண்டிச் சாமி சொல்கிறார். இன்றைக்கு தெருவெங்கும் மகப்பேறு மையங்கள்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண் – திருக்குறள்.
கண்மாயில் கிடந்த மணி நீர்(செம்புலப் பெயல் நீர்), வளமான மண்ணைக் கொண்ட வயல் வெளிகள், கொப்புலாயி, காட்டுப்பூச்சி போன்ற அறங்காவலர்கள் உருவாக்கிய நந்தவனங்கள்(அணிநிழற்காடு) மலை கொண்டு வந்து சேர்த்தும் பருவ மழை என இவைகள் தாம் உருளக்குடி எனும் குடியரசின் அரண்கள்.இப்படியான ஒரு குடியரசை நாம் காண இயலாது. தான் பார்த்து கேட்டு வாழ்ந்த குமுகத்தை கண் முன்னே காட்சிப் படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.நூலின் பின்னட்டையில் ஜெயமோகன் இந்த நூல் ஆவணத் தன்மை கொண்டதல்ல என்று சொல்லியிருக்கிறார். என் பார்வையில் இந்த நூல் சர்வ நிச்சயமாக ஓர் ஆவண நூல் தான். இனி வரும் தலைமுறைக்கு கண்மாயும்,அதன் உயிரோட்டமும் அதனை ஒட்டி வாழ்ந்த மக்களின் வாழ்வியலை குமுக உறவுகளை உணர்ந்து கொள்ள சூல் – பெருங்கதை நல்லதொரு ஆவணமாக பயன்படும்.
மேலோட்டமாக பார்க்கின் மன்னராட்சியே தேவலாம் போல என்ற மாயை உருவாகும்.உண்மை என்னவெனில் உழைக்கும் உழுகுடிக்கு  மன்னராட்சியிலும் சரி மக்களாட்சியிலும் சரி விடிவு காலம் பிறக்கவே இல்லை. மன்னராட்சி நிலபிரபுத்துவ முறையில் உழுகுடிகளுக்கு சலுகை வழங்கி வந்தது என்றாலும் உழைப்பை திருடியது. மக்களாட்சி முதலாளித்துவத்திற்கு முகவராக உருமாறி உழுகுடிகளை சுரண்டி கொழுத்தது. இறுதியாக உழுகுடிகள் “அல்லும் பகலும் நிலத்திலே உழன்று கிடந்த உழவர்களின் நிலம்,அதிகாரம் சார்ந்தவர்களுக்கு கை மாறிய போதும் வெள்ளந்தியாய் உழைத்தே கிடந்திருக்கிறார்கள்” என ஏர் மகாராசன் பதிவு செய்கிறார். அப்படி ஒரு வெள்ளந்தி ஊரான  உருளைக்குடி எனும் குடியரசின் வாழ்வும் சாவும் தான் சூல் எனும் பெருங்கதை!
பார்வை நூல்கள் :
---------------------------
ஏறு தழுவுதல் – ஏர் மகாராசன்,
பண்பாட்டு அழகியலும் அரசியலும் –
ஏர் மகாராசன்,
மந்திரங்களும் சடங்குகளும் –
பேரா. ஆ.சிவசுப்பிரமணியன்,
வரலாறும் வழக்காறும் -
பேரா. ஆ.சிவசுப்பிரமணியன்,
பண்பாட்டு அசைவுகள் – பேரா.தொ.பரமசிவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக