செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கேரள வெள்ளம்: தமிழகத்துக்குப் பாடம் :- நக்கீரன், சூழலியல் அறிஞர்.

கடவுளின் சொந்த தேசமான கேரளா இப்போது சாத்தானின் கையில் இருக்கிறது என்றார் ஒரு கேரள நண்பர். உண்மையில் எல்லா மதங்களின் கடவுள்களும் மாநிலத்தைக் கைவிட்டனர். அவர்களால் தம் வழிப்பாட்டுத்தலங்களைக் கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. மொத்தத்தில் இயற்கையே பேராற்றல் மிக்கது என்பது மெய்யாகியுள்ளது. கேரளா நம்மை விட இயற்கையைப் பாதுகாத்து வரும் மாநிலம். அங்கேயே இப்படிப்பட்ட பேரிடர் எனில் நம்முடைய நிலை கவலைக்கிடமே. இப்பேரிடரை ‘மானுடரால் உருவாக்கப்பட்ட இயற்கை பேரிடர்’ என்பதே பொருந்தும். மனிதருடைய தவறுகளால் காட்டுயிர்களும் வளர்ப்பு விலங்களும் தம் உயிரை இழந்துள்ளன.

ஓரினப்பயிர்கள் :
மலைகள், காடுகள், ஆறுகள், ஓடைகள், காயல்கள் ஆகியவற்றால் கொடையளிக்கப்பட்ட மாநிலம் கேரளா. சோலைக்காடுகள் ஆறுகளின் தொட்டில். அவை மழைநீரை ஈர்த்து வைத்து கொஞ்ச கொஞ்சமாகக் கசியவிடும் தன்மை கொண்டவை. இதனால் வெள்ளம் கட்டுப்படும். ஆனால் ஓரினப்பயிர் தோட்டங்கள் தொட்டில் கயிற்றை அறுத்துவிட்டன. மண் அரிமானம் மழைநீரை துரிதமாக வெளியேற்றுகின்றன. காடுகளை விடத் தேயிலைத் தோட்டங்கள் வெளியேற்றும் நீரின் அளவு 45 மடங்கு அதிகம் என்கிறது கென்யாவில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு. விளைவு, பெய்யும் மழை 48 மணி நேரத்தில் மொத்தமுள்ள 44 ஆறுகளின் வழியாக விரைவாகக் கடலில் கலந்துவிடுகிறது.

பெருமழை கேரளாவுக்குப் புதிதல்ல. சிரபுஞ்சிக்கு அடுத்து உலகின் அதிக மழைப்பெறும் இரண்டாவது இடமாகப் பதியப்பட்டது வயநாட்டில் உள்ள ‘லக்கிடி’. .2005-ல் 4446.5 மி.மீட்டராகப் பதிவான இடம். நீலாம்பூரின் ஒரு இலட்சம் ஏக்கர் காட்டின் இருப்பு வயநாட்டின் சூழலை நெடுங்காலம் காத்து வந்தது. இன்று அதில் கிட்டதட்ட 90,000 ஏக்கர் தோட்டங்களாகிவிட்டன. தோட்டப்பயிர் ஒருபோதும் காடு ஆகாது. மேலும் சோலைக்காடுகள் இருந்த இடங்களில் முளைத்திருக்கும் யூகலிப்டஸ் மரங்களுக்கும் கோழிக்கோட்டில் இயங்கும் குவாலியர் ரேயான் தொழிற்சாலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று நம்புவோம்.

குவாரிகள் :
வயநாடு மாவட்டத்தில் மட்டும் 160 கிரானைட் குவாரிகள் செயற்படுகின்றன. இவற்றில் வரலாற்றுப் புகழ்ப்பெற்ற இடக்கல் குகை அருகிலுள்ள அம்பலவயல் ஊராட்சியில் மட்டும் ஏறக்குறைய 40 குவாரிகள் உள்ளன. 1961 சுரங்கச்சட்டம் சிறிய வெடிகளின் வழி நிலமட்டத்துக்குக் கீழே 40 அடிகள் வரை தோண்ட அனுமதியளித்தது. இச்சட்டம் அறிமுகமானபோது பெரிய அளவிலான சுரங்கத்தொழிலோ மலையைப் பகுத்தறிவில்லாமல் வெடி வைத்து தகர்க்கும் முறைகளோ இல்லை. ஆனால் இன்று 400 அடிகள் வரை வெடிவைத்து தகர்ப்பதோடு, சமயத்தில் 900 அடிகள் ஆழத்துக்கும் செல்கின்றன.

பெரும்பாலான குவாரிகள் சுரங்கத் தொழிலுக்குரிய அனுமதி பெறாமல் பொதுக் கூட்டுறவு பணிக்கான வெடிப்பொருட்கள் அனுமதிப் பத்திரத்தை வைத்தே கொள்ளையடிக்கின்றன. குவாரிகளை ஒட்டி க்ரசர்கள், எம்-சாண்ட் தயாரிப்பு ஆலைகள் இயங்குகின்றன. கான்துறையால் 14 இடங்களை மட்டுமே தடை செய்ய முடிந்தது. மீதி அமோகமாக இயங்குகின்றன. மாதவ் காட்கில் கமிட்டி அறிக்கை இப்பகுதியை பொருளாதார நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மண்டலம் 1-ல் வைக்கப் பரிந்துரைச் செய்தும் பலனில்லை இதுபோல் கோட்டயம், இடுக்கி மாவட்ட எல்லைகளில் உள்ளாட்சி அமைப்புகளால் ஏறக்குறைய 3,000 ஏக்கர் அளவுக்குக் கிரானைட், லேட்டரைட் என்னும் செங்களிப்பாறை மற்றும் ஜல்லி தொழிலுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. பஞ்சாயத் ராஜ் சட்டங்கள் உறக்கத்தில் உள்ளன. புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் தன் ‘கண்ணன்தளி பூக்களுடே கால’த்தில் எழுதியது போல ‘மலைகள் லாரிகளில் ஏறத் தயாராக இருக்கிறது’.

ஆக்கிரமிப்புகள் :
மலைகளில் நிகழும் ஆக்கிரமிப்புகள், வளர்ச்சித் திட்டங்கள் பல கோடிகளை உள்ளடக்கிய அரசியல் செல்வாக்கைக் கொண்டவை. மலைகளைப் பின்புல காட்சியாகக் கொண்ட இடங்களில் கல்விக்கூடங்கள், ஓய்வில்லங்கள் எழும்பி, மலையிலிருந்து வழிந்திறங்கும் ஓடைகளைத் தடைச் செய்கின்றன. செல்வ நிலையைப் பறைச்சாற்ற மலைகளில் கட்டப்பட்ட ஆடம்பர இல்லங்களில் 30% ஆளில்லாமலேயே பூட்டிக் கிடக்கின்றன. சிலநாட்கள் மட்டுமே தங்க ஏறக்குறைய 10,000 சதுர அடி பரப்பளவுக்குக் கட்டப்படும் சொகுசு வீடுகள் பெரும்பாலானவை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள், மதத்தலைவர்களுக்குச் சொந்தமானவை. இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகியவை நில மாஃபியாக்களின் இறுக்கமான பிடியில் சிக்கியுள்ளன.

மலைப்பாதை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று மாடிகளுக்கு மேல் கட்ட தடையுள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் இவற்றைத் தடுக்கும் உரிமையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளித்துள்ளது. இருப்பினும் பயனில்லை. மீனாச்சில் ஆற்றின் முக்கிய ஊற்றே வழிக்கடவு புல்வெளிகளில்தான் இருந்தன. வாகமோனின் வரம்பற்ற சுற்றுலா கட்டிடங்கள் இந்தப் புல்வெளியைத் தின்றுவிட்டன. சுற்றுலாத் தலமான மூணாறு கசாப்புக் கடையாகக் காட்சியளிக்கிறது. மண் அரிமானம் என்பது மூணாரில் அன்றாடக் காட்சி. இதில் பெருமழை நிகழ்ந்தால் என்ன நிகழும்?.

மணல் :
கேரளாவிலும் சட்டவிரோத மணற்கொள்ளைகள் நிகழ்கின்றன. தெற்கில் உள்ள மீனாச்சில் ஆற்றுப்படுகைக் காணாமலேயே போய்விட்டது. வடக்கில் வயநாட்டிலுள்ள ஓடைகள் நெல்வயல்களில் மணல் அள்ளுதல் அன்றாடக் காட்சி. மணல் மாஃபியாக்கள் நெல்வயல்களில் பெரும் பள்ளங்களைத் தோண்டி வைத்துள்ளனர். இவை நீர்வரத்தைத் தடுத்துத் திசை மாற்றிவிடும். பெருமழையில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகிக்கலாம். அட்டப்பாடியின் சூழலியல் அழிவு பாரதப்புழா ஆற்றின் வெள்ளப்பெருக்காக மாறியது.

சதுப்பு நிலங்கள் :
கேரளாவில் 217 பெரிய சதுப்பு நிலங்கள் இருக்கின்றன. இவை மாநிலத்தின் மொத்த பரப்பளவில் ஐந்திலொரு பங்காகும். கேரளாவின் வெள்ளப்பெருக்கை நெடுங்காலம் தாங்கிவந்த இவை இன்று ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டன. சான்றாக 1834-ல் 36,329 எக்டேராக இருந்த வேம்பநாடு ஏரியின் இன்றைய பரப்பளவு மூன்றிலொரு பங்காகச் சுருங்கி 13,224 எக்டேராகக் குறைந்துவிட்டது. குட்டநாடுப் பகுதிகள், ஆலப்புழா, கோட்டயம், கொல்லம், எர்ணாக்குளம் வெள்ளத்தில் மூழ்கிய காரணம் புரிந்திருக்கும். தவிர ஏரியினுள் கொட்டப்பட்டுள்ள டன் கணக்கான குப்பைகள் நீர் உறிஞ்சும் தன்மையைக் குறைத்துள்ளன. ஏரியின் அடிப்பாகம் முழுக்க ஞெகிலிகளும் போத்தல்களுமாகக் கிடக்கின்றன.

பருவமழை:
மே மாத இறுதியில் நிகழும் தென்மேற்குப் பருவமழையைக் கேரளாவில் இடவப்பாதி மழை என்பர். பருவமழையின் அடையாளமே அது இடி மின்னல் இல்லாது தொடர்ந்து பெய்வதுதான். இடி மின்னல் இருந்தால் அதைப் புயல்மழை என்பர். ஆனால் இந்த ஆண்டுக் கேரளப் பருவமழை இடி மின்னலுடன் பெய்திருப்பது நல்ல அறிகுறியல்ல. இது மனிதர் உருவாக்கி வரும் புவிவெப்பமாதலின் துணை விளைவான பருவநிலை மாற்றத்தின் அறிகுறி. அண்மைக் காலமாகவே மழையளவில் பெரும் மாற்றம் இல்லையெனினும் மழைநாட்கள் குறைந்துவிட்டன. பல நாட்கள் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களிலேயே நீரிடியைப் போல் கொட்டித் தீர்த்துவிடுகின்றன.

சுருங்கச் சொன்னால் கேரள வெள்ளம் இரு பாடங்களை உணர்த்துகின்றன. ஒன்று சோலைக்காடுகளின் அழிவு, மற்றொன்று பருவநிலை மாற்றம். இதுதவிர மூன்றாவது காரணம் ஒன்றையும் அண்மையில் ஓர் அறிவியலாளர் கண்டறிந்தார். ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பதற்கும் வெள்ளத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்பதே அந்தக் கண்டுப்பிடிப்பு. சூழலியல் காரணங்களைத் திரிக்கும் இவ்வகை அபத்தங்களே  உண்மையில் அனைத்தையும் விடப் பெரிய பேரிடர்.

(ஒளிப்படம் - இணையம் வழிப் பெறப்பட்டது. நன்றி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக