திங்கள், 20 மே, 2019

நந்திகிராம் பாசிஸ்ட்டுகள் சொல்கிறார்கள் பிரபாகரன் பாசிஸ்ட் என்று.. :- சிலம்புச் செல்வன்

நான் திமுக வினரை விமர்சனம் செய்து பதிவிட்டது யாருக்கு உறுத்துகிறதோ இல்லையோ சிபிஎம் மினருக்கு எரிகிறது. தோழர் முகமது சிராஜூதீன் என் பதிவிற்கு ஒரு கவிதை பின்னூட்டமிடுகிறார். என்னவென்று "பிரபாகரன் ஒரு நாய்" என்று...

            அவருக்கு எவ்வளவு காழ்ப்புணர்வு, வன்மம், குரூரம் இருந்தால் இப்படி எழுதுவார். ஒருவரை கொள்கை ரீதியாக தாக்குவது என்பது வேறு. தனிப்பட்ட முறையில் தாக்குவது வேறு. சிராஜூதீன் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துகிறார்.

         அவர் ஏற்கனவே "காத்தான்குடி இஸ்லாமியர் படுகொலை" குறித்து எழுதியபோதே பொதுவாக சிறு விமர்சனம் ஒன்றை நிலைத்தகவலாக பதிவு செய்தேன். அதற்கு மதுரை இரவிக்குமார் (ஸ்ரீ ரசா) பின்னூட்டம் ஒன்றை இட்டார். உங்களால் மறுக்க முடிந்தால் மறுங்கள் என்று எழுதியிருந்தார்.

              நான் அதற்கு பதிலளிக்காமல் கடந்து சென்றேன். காரணம் கம்யூனிச தோழமைச் சக்திகளை அளவுக்கு மீறி விமர்சனம் செய்வது சரியானதாக இருக்காது என்று நினைத்தேன்.

            என்னால் அதற்கு பதிலளிக்க முடியாமல் அல்ல. எதிரி பலமானவனாக இருக்கும் போது நாம் தோழமைச் சக்திகளுடன் விமர்சனம் என்ற பெயரில் முரண்பட்டுக் கொள்ள வேண்டாம் என்று கருதியே.

         ஆனால் சிராஜூதீன் அதையெல்லாம் துச்சமாக தூக்கி எறிந்து விட்டு விமர்சனம் செய்துள்ளார். இனிமேலும் எங்களைப் போன்றவர்கள் அமைதி காத்தால் அது எங்களை நாங்களே இழிவு படுத்திக் கொள்வதாகும்.

           கொள்கை விமர்சனம் என்று வந்து விட்டால் நண்பன் எதிரி என்று நான் பார்ப்பதில்லை. எனக்கு சரி என்ற வகையிலேயே விமர்சனங்களை முன்வைப்பவன்.

           அவ் வகையிலேயே கூறுகிறேன் "பிரபாகரனை பாசிஸ்ட் " என்றும் 'நாய்' என்றும் கூறுகிற தகுதி சிபிஎம் முக்கு இருக்கிறதா? ஆர். எஸ்.எஸ் சுக்கு இணையாக இந்தியாவை காப்பாற்றத் துடிப்பவர்கள் பாசிஸ்டுகள் அல்லாமல் வேறென்ன?

          நந்திகிராம் படு கொலைகள்தான் சிபிஎம்மின் அரசு பாசிசத்தையும், கட்சி பாசிசத்தையும் ஒரு சேர வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதன் பின்புதான் மேற்கு வங்கத்தில் சிபிஎம் தூக்கி எறியப்பட்டது. அதே பாசிசத்தனமான நடவடிக்கைதான் தமிழ்நாட்டிலும் சிபிஎம் செய்கிறது. என்ன கருத்தியல் பாசிசமாகவே இது பெரும்பாலும்  உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கார்தான் பிரபாகரனை நாய் என்கிறார். பாசிஸ்டுகள் எப்போதும் பிறரை பாசிஸ்ட்டுகள் என்பார்கள். அதன் தப்பாத பிரதிநிதியாக சிபிஎம் உள்ளது.

ஞாயிறு, 12 மே, 2019

சுளுந்தீ: மருத்துவ மரபணு கொண்டவரால் மட்டுமே தொகுக்க முடியும் :- சித்த மருத்துவர் கீதா.

அருமையான எழுத்துக்கோர்வை....
எழுவதற்கு மனமில்லாமல் படித்துக்கொண்டிருக்கிறேன்...
எதை ஈர்க்கிறோமோ அதை அடைய முடியும்...
என் தேடலில் உங்க நாவலுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு....
சின்ன சின்ன விடயங்களை எவ்வளவு அழகாக கதையாக சொல்கிறீர்கள்...
இலக்கிய நயத்தோடு இடையிடேய வட்டார மொழியில்... வார்த்தைகளையும் நிறைய நுட்பங்களையும் இது நாவல் அல்ல ஆய்வுக்கட்டுரை போல உள்ளது....
சேராங்கொட்டையில் இருந்து சாயம் எடுக்கும் முறை அப்பப்பா வியந்து தான் போயிருக்கேன்....
புளியரையும் தேனும் சித்தரின் உணவு என்ன ஒரு ஆராய்ச்சி...
ஒரு மருத்துவ மரபணு மட்டுமே இப்படி தொகுக்க முடியும்...
குழித்தைலம் இறக்கும் முறை...
ராசபிளவைக்கு கருஞ்சித்திரமூல தைலம்... என்ன ஒரு மருத்துவ அறிவு...
வாழ்வியலாக மருத்துவம் பார்த்தவர்களுக்கே உரிய நடை....
கூடவே இனக்குழுக்களுக்கு நேரும் ஆபத்து...
முல்லை நில மக்களின் வாழ்வாதாரம் பற்றிய குறிப்பு நீண்டுகொண்டே போகிறது ஐயா...
விரைவில் புத்தக வாசிப்பை முடித்து விட்டு தொகுக்கிறேன் நன்றி....

தமிழர் சமூக வரலாற்று நெருப்பைக் காத்து நிற்கும் சுளுந்தீ :- வழக்கறிஞர் பா.அசோக்.


பொதுவாக நாவல்கள் அதிகம் வாசிப்பதில்லை.
சுஜாதாவோடு அது மறந்து விட்டது.

சாருவையும் எஸ்ராவையும் படிக்கும் மனநிலை இப்போது ஏனோ வருவதில்லை. இத்தனைக்கும்
சாருவின் தீவிர வாசகன் நான்.

 ஒருகாலத்தில் அவருடைய பிளாக்கை காலையும் மாலையும் இரவு என மூன்று நேரமும் திறந்து பார்ப்பவன். சாருவின் பதிவுகள் வராவிட்டால் ஏதோ இழந்தது போலிருக்கும். பின்னர் அவருடைய அதீதமான self boasting என் மனநிலையை பிறழ வைத்து விடுமோ என பயமே வந்துவிட்டது. விக்கியும் கூகுளாண்டவரும் அவருக்கு நிறைய அருள் புரிந்துள்ளனர் என தெரிந்த பிறகு சாரு  பூசாரியை விடுவது இயல்பு தானே.

2017 இல் அண்ணன் நந்தன் ஸ்ரீதரன் கைகளில் இருந்ததால் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை வாசித்தேன். வித்தியாசமான நாவல் பரபரப்பான ஆங்கில நாவல் மாதிரி வெகு இயல்பான சுயநல மனிதர்கள் வியாபார உத்திகள் என நகர்ந்தது.

பின்னர் Shankar A வினுடைய தொடர் நாவல். விறுவிறுப்பான ஒன்று.

மிக நீண்ட நாள் கழித்து
வழக்கறிஞர் Suthakaran Inthiran புண்ணியத்தால் இரண்டு மூன்று நாவல்கள் வாசிக்க ஆரம்பித்தேன். அவரின் பரிந்துரை தவிர்த்து நான் தொட்டது பாலகுமாரனின் உடையார் ..
கைசுட்டது தான் மிச்சம்.
மீண்டும் தெனாலிராமனின் பூனையானது போலிருந்தது.

சுதாகரனிடம் நான் கேட்டது ஏர்மகராசனின் தமிழ் எழுத்துகள் பற்றிய நூல் ஒன்று. ஆனால் அவர் தருவித்தது

     சுளுந்தீ.

புத்தகம் வந்த இரண்டு மூன்று நாட்கள் வாசிக்கவேயில்லை . தமிழ் இந்து.. Lakshmi Gopinathan ஆகியோரின் நூல் விமர்சனங்கள் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது.

நேற்று வீட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலில் இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். அதன் பிறகு கீழே வைக்கவில்லை.  வைக்க முடியவில்லை. எவ்வளவு செய்திகள். டாவின்சி கோடுக்கு பிறகு ஒரே நாளில் வாசித்த நூலிது.

பன்றி மலை சுவாமிகள் பற்றி செவிவழி  செய்திகள் தான் அறிந்துள்ளேன். இதில் அவரும் ஒரு பாத்திரம்.

அல்கெமி, அரபு நாடுகளின் வேதியல் வெளிப்பாடு என்றால் வெடியுப்பும் கந்தகமும் தமிழ் சித்த மருத்துவத்தின் பிள்ளைகள்.

பாஷாணம் எனும் விஷப்பொருளை மருந்தாக்க தெரிந்தவன் தமிழன்.

மேலை நாட்டு தாவரவியல் ஆய்வாளர்கள் flora's and faunas களை தொகுக்கும்  போது ஒரு தமிழ் மருத்துவ சமுதாயத்தை சார்ந்த நபர் துணை நின்றது மறந்த வரலாறு. அவர் பெயரும் இராமன் என்றே நினைக்கிறேன்.

சுளுந்தீயில் தான் எத்தனை செய்திகள்..
தமிழ் இந்துவில் வந்த விமர்சனத்தில் தொ.பரமசிவன் நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ அது போல என எழுதியிருந்தார்கள்.

அதில் ஒரே ஒரு திருத்தம்

 தொ.பரமசிவனும் ஆ.சிவசுப்பிரமணியனும்
இணைந்து எழுதிய நாவல் என கண்டிருப்பதே சரி என்பது என் கருத்து.

வெங்கம்பய என்பது நம் காதுகளில் அவ்வப்போது விழும் வசைச்சொல் அதன் பொருள் புரியாமல் பலபேரும் பயன் படுத்தி வருகிறோம். இந்த நாவல் வாசித்த பிறகு தான் பொருள் தெரிந்தது.
Necrophilia என எதிராளிக்கு தெரிந்தால் நம் பாடு என்ன ஆகும்.

நிலவியல்.. வானியல்.. மருத்துவம் .. வேதியல்.. வாய்மொழி வரலாறு.. சாதிய வேறுபாடு .. போர்முறைகள்.. சமூக பொருளாதாரம் என எல்லா களங்களையும் தொட்டுவிட்டு போகிறார் நூலாசிரியர் இரா. முத்துநாகு.

நீ சிரைக்க தான் லாயக்கு என எவரையும் திட்டிவிட முடியாது. சிரைப்பதில் கூட எவ்வளவு நுணுக்கங்கள்.

உண்மைக்கு வெகு அருகில் இருக்கும் நாவல்களில் ஒன்று. நாவல் படிப்பதில் ஒரு அறிவும் கிட்டாது அவை வெறும் உணர்ச்சி குவியல்களே என எண்ணும் என் போன்றவர்களின் கருத்தை சுக்கு நூறாக்கி விட்டுப்போன நூலிது.

காப்பியடித்து அடுத்தவன் உழைப்பை சுரண்டி நாவல் எழுதி அதையும் அரசியல் ரீதியாக புரமோட் செய்து  அகா "டம்மி " விருது வாங்குவோர் மத்தியில் தனது உச்சபட்ச உழைப்பை அறிவை கொட்டியிருக்கும் முத்துநாகுவின் அரும்பணி போற்றுதலுக்குரியது.

வாசித்துவிட்டோம் என வெறுமனே கடந்து போகமுடியவில்லை .
எத்தனை மரபார்ந்த அறிவை இழந்திருக்கிறோம் என்ற பெருஞ்சுமை மனதில் ஏறுகிறது.

மாடனின் குதிரையாகவே ...
நாவல் தந்த எண்ணங்களை சுமந்து அலைகிறது மனம்.

கொட்டும் மழையில் கூட அணையாது நிற்பது சுளுந்துக்குச்சியின் தீ.

காலமழை எத்தனை பெய்யினும்
தமிழர் சமூக வரலாற்று நெருப்பை காத்து நிற்கும் சுளுந்தீ.

வியாழன், 9 மே, 2019

சுளுந்தீ :அறிவுத்தீக்கான வரலாற்றுச் சித்த மருந்து. :- இலட்சுமி கோபிநாதன், வழக்கறிஞர்.

ஒரு நாவலிற்கான கருவையும் கதைக் களத்தையும் தேர்வு செய்தபின்னர் அந்த நாவல் முழு வடிவம் பெற்று வாசகனை அடைவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்பதை உணர்த்துகிற நாவல்.  சில நூல்களைத்தான் நாம் காலமெல்லாம் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றும். அப்படி எனக்குத் தோன்றிய நாவல் இது.

மதுரைக்கு அருகே உள்ள கன்னிவாடி கிராமமும் ஏனைய மதுரை மாவட்டத்தின் நிலப்பரப்பையும் அதைச் சுற்றிய வரலாற்றையும் பேசுகிறது இந்த நாவல். நாயக்கர் ஆட்சிக்காலம். மன்னருக்கு அடுத்தபடியாக குறுகிய எல்லையில் அதிகாரம் கொண்ட அரண்மனையாரின் ஆட்சியிலும், ஆட்சிக்காகவும் நடக்கும் சம்பவங்களே கதை.
சின்ன கதிரியப்ப நாயக்கரான அரண்மனையார், அந்த எல்லையில் வாழ்ந்து அங்குள்ளவர்களுக்கு வைத்தியம் பார்க்கிற சித்தர், அவரின் சீடராக வரும் நாவிதரும் பண்டுவருமான ராமன், அவரது மகன் மாடன், ராமனையும் மாடனையும் பழிவாங்கத் துடிக்கும் தளபதி, இவர்கள்தான் முக்கியமான கதை மாந்தர்கள்.

நாவலின் முதல் பகுதி ஒரு  சித்த மருத்துவக் களஞ்சியம். ராஜபிளவு எனச் சொல்லப் படுகிற நோயில் தொடங்கி, அறுந்த காதை ஒட்டவைக்கும் வைத்தியம், காது வளர்க்கும் வகை, பெண்களுக்கு வரும் பெரும்பாடு எனும் கரு சம்பந்தமான நோய், வெட்ட வாய்வு நோய், பசிப்பிணி, மூல நோய், ஓரண்ட வாயு எனும் ஆண்களுக்கு வரும் நோய், குழந்தை பிறப்பிற்கு என கிட்டத்தட்ட நம் சமகாலத்தில் நாம் சந்தித்து வரும் எல்லா நோய்களுக்குமான மருத்துவக் குறிப்புகள் சித்தர் வாயிலாக சொல்லப்பட்டுள்ளது. அதையெல்லாம் வாசிக்கும்போது நாம் ராமனாக மாறி சித்தருக்கு சீடராக இருக்கக்கூடாதா என மனம் ஏங்கித் தவிக்கிறது. சித்தர் பொடவிலிருந்து வெளியே வரும்போதெல்லாம் நம் மனமும் பொடவை பக்தியோடும் பணிவோடும் நோக்கி நிற்கிறது. நம் மருத்துவ அற்புதங்களைக் கொன்று புதைத்துவிட்டு மூக்கிலும் நரம்புகளிலும் ஊசிகளை சொருகிக் கொண்டு கை நிறைய பலவண்ண மாத்திரைகளிடம் தஞ்சம் புகுந்திருக்கிறோம்.

சித்தர் சமாதியானதும் தான் ராமனின் கதை தொடங்குகிறது. சித்தரே ராமனை சீடனாக அறிவித்தாலும் கூட, பந்த பாசம் கொண்ட ராமனால் சித்தராக வாழ முடியவில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. தனது மகனை எப்படியாவது அரண்மனைப் படையில் வீரனாக சேர்த்துவிட வேண்டும் என்பதே நாவிதரான ராமனின் கனவாக இருக்கிறது. ஆனால் பிறப்பால் நாவிதரான ராமனின் மகனால் அரண்மனை வீரனாக முடியவே முடியாது என்பதே யதார்த்தம். குலத்தொழிலே கட்டாயம். ஆனாலும் ராமன் தன் மகனை மிகச் சிறந்த வீரனாக வளர்க்கிறார். படைவீரனாகும் கனவையும் அவனுக்குள் விதைக்கிறார். அரண்மனையாரின் மிகுந்த மரியாதைக்குரியவராய் இருந்தும் ராமனால் தன் காலத்தில் தன் மகன் மாடனை அரண்மனை வீரனாக்க இயலவில்லை. அதே நேரம் தன்னுடைய குலத்தொழிலான நாவிதத்தின் நுணுக்கங்களையும் அதன் பெருமைகளையும் தன் மகனுக்குக் கற்றுத் தருகிறார் ராமன். இந்த இடத்தில் நாவிதத்தின் மகிமைகளை ராமன் சொல்லும்போது நம் சடங்குகளைப் பற்றிய பல செய்திகள் நமக்குத் தெரிய வருகிறது.

ராமன் திடீரென மறைந்துவிட மாடனை வீரன் கனவு துரத்துகிறது. ஒரு வீரனாவதற்காகவே வளர்க்கப்பட்டவனால் குடிமக்களிடமும் அதிகார வர்க்கத்திடமும் குழைந்து பிழைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் நல்லவனாக இருந்தாலும் கூட, மாடன் ஊராறால் வெறுக்கப் பட்டு சதியால் கொலை செய்யப் படுகிறான். இதுதான் கதை.

இந்தக் கதைக் களத்தில் எத்தனை எத்தனை வார்த்தைகளுக்கான காரணங்களோடு கூடிய அர்த்தங்கள். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தைகளான ஈத்தரப்பய போன்ற வார்த்தைகளுக்கான பின்புலங்கள் தெரிய வரும்போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. செந்தூரம் எனப்படுகிற பாஸ்பரஸ் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய மருந்து. அதிலிருந்து வெடி தயாரிக்கப்பட்டதால் வெடிமருந்து என்கிற பெயர் புழக்கத்திலிருக்கிறது என்கிற விளக்கம். என ஏகப்பட்ட நமக்கு அறியாத விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன இந்த நூல் முழுவதும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இன்று வரை நம் சமூகம் கண்டு பயப்படும் சித்து வேலை, பில்லி சூனியம் ஆகியவற்றின் பின்னால் உள்ள சூட்குமங்கள் பற்றிய எளிய விளக்கங்கள் அந்தந்த கதை மாந்தர்களை வைத்தே விளக்கப் பட்டுள்ள விதம் மிக மிக அருமை. அதில் கொஞ்சம்கூட பகுத்தறிவின் பிரச்சார நெடி இல்லை.
நாவலின் இறுதிப் பகுதியை வாசிக்கையில் எங்கே நாம் சாப்பிட்டு வருவதற்குள் மாடனைக் கொன்று விடுவார்களோ என்கிற பதற்றத்தில் சாப்பிடக்கூட பொறுமையில்லாமல் பரபரவென வாசிக்க வைக்கிற கதையின் ஓட்டம்.
இது புதினமாக இருந்தாலும் பெரும்பாலும் அனைத்து செய்திகளும் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது என்பதால் ஆசிரியரின் உழைப்பின் தீவிரம் நமக்குப் புரிகிறது. குலநீக்கம் என்பதின் பின்னால் உள்ள சூழ்ச்சி மற்றும் குல நீக்கம் செய்யப் பட்டுள்ளவர்களின் வேதனைகளையும் மிக அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நாவல்.
ஆனந்தா வருடப் பஞ்சம் பற்றிய பகுதி வரும்போது மனசு துக்கப் படத்தயாரகிக் கொண்டிருந்தது. ஆனால் பஞ்ச காலத்தைப் பற்றி எழுதும்போதுகூட சோகத்தை எழுத்தில் வலிந்து திணிக்காமல் மிக மிக யதார்த்தமாய் பஞ்சத்தின் இயல்பையும் அதைக் கடந்து வர மக்கள் செய்த நடவடிக்கைகளையும் பஞ்சத்தைக் கடக்க கிணறு வெட்ட நிலத்தடி நீரை உறிஞ்சுகிற பூதம் புறப்பட்ட விதத்தையும் ஆசிரியர் எதியிருக்கிற விதம் நமக்கு வாழ்வின்  மீதான நம்பிக்கையை வளர்க்கிறது.

இன்னும் எழுத எவ்வளவோ இருக்கிறது. முழுமையாக எழுதினால் சுளுந்தீ பற்றிய விமர்சன நூலே எழுதலாம். ஆசிரியர் திரு.முத்து நாகு அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பரிந்துரைத்ததோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கு வி,பி.பி.யில் வரவழைத்து உதவிய அன்புத் தம்பி சுதாகருக்கு அன்பும் நன்றியும்.

சுளுந்தீ - அறிவுத்தீக்கான வரலாற்று சித்த மருந்து.

சுளுந்தீ- நாவல்
இரா.முத்துநாகு
ஆதி பதிப்பகம்
VPPயில் புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்
+91 99948 80005-திரு.முரளி

புதன், 8 மே, 2019

ஆரிய வைதீகச் சமய மரபும் பிள்ளையாரும் : மகாராசன்

உ’ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும்,  பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பதுமான சமய உரையாடல்கள் ஒருபுறம் இருப்பினும், தமிழ்ச் சமூக வரலாற்றிலும் ஆரிய / வைதீகச் சமய மரபிலும் பிள்ளையாருக்கான இடம், அதன் தோற்றப் பின்புலம், அதன் பரவலாக்கம் போன்ற சமூக மற்றும் சமயப் பண்பாட்டு  நோக்கிலான கருத்தாடல்களும் ஆய்வுகளும் வேறுவகையிலான செய்திகளை முன்வைக்கின்றன. அவ்வகையில், பிள்ளையாரைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘பிள்ளையார் அரசியல்’ எனும் நூல், பிள்ளையாரைப் பற்றிய சமயப் பண்பாட்டுத் தரவுகளைத் தந்திருக்கிறது.

ஆரிய / வைதீகச் சமய அடையாளமாகப் பிள்ளையார் கருதப்பட்டாலும், அச்சமய மரபில் குறிக்கப்படுகிற மற்ற கடவுள்களைப் போலான இடம் வழங்கப்படவில்லை. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்து சமயம் என்று அழைக்கப்பெறும் பிராமணிய சமயத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன், முருகன் என மேல்நிலையில் உள்ள தெய்வங்கள் ஒருபுறமும், பரிவார தெய்வங்கள் என்ற பெயரில் அனுமன், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன. இவை இரண்டிலும் இடம்பெறாமலும், பிராமணிய சமயத்திற்கு வெளியிலுள்ள நாட்டார் தெய்வங்கள் வரிசையில் இடம்பெறாமலும், தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள தெய்வம் பிள்ளையார் ஆகும் என்கிறார்.

வைதீகச் சமயப் பெருங்கோயில்களில் மட்டுமின்றி, இவருக்கெனத் தனியாகவும் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருக்கள், கூரையின்றி வெட்டவெளியிலும்கூட பிள்ளையார் இடம் பெற்றிருக்கிறார். இத்தகைய வழிபாட்டு மரபில் உள்ள பிள்ளையார் எனும் விநாயகரின் உருவம் மனிதன், விலங்கு, தேவர், பூதம் என்கிற நான்கின் இணைப்பாகக் காட்சி தருவதாகக் குறிக்கப்படுகிறது.

யானைத் தலையும் காதுகளும் தும்பிக்கையும் விலங்கு வடிவமாகவும், பேழை போன்ற வயிறும் குறுகிய கால்களும் பூதவடிவமாகவும், புருவமும் கண்களும் மனித வடிவமாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் தேவ வடிவமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய இவரது உருவம் மனித விலங்கு உருவ இணைப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் பிள்ளையாருக்கு வடமொழிச் சுலோகங்கள் கூறி ஆகம முறையிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்படுவதால், அதன் அடிப்படையில் இவர் உயர்நிலைத் தெய்வமாகவே காட்சியளிக்கிறார். எனினும்,  வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம் பெறவில்லை என்று அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்திற்கு முந்திய சிற்பங்களில் பிள்ளையார் வடிவம் இல்லை என்று கூறும் ஆனந்தகுமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகிறார் .

பிள்ளையாரின் தோற்றம் குறித்துப் பல்வேறு கதைகள் வழக்கில் உள்ளன. பிள்ளையாரின் தோற்றம் குறித்த புராணக் கதைகளில் அவர் ஏதாவது ஒரு வகையில் யானையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். யானை முகமும் மனித உடலும் இணைந்த பிரமாண்டமான உருவத்தை உடைய பிள்ளையார், எலி ஒன்றின் மீது வீற்றிருக்கிறார். இந்நிலையில், யானையுடன் பிள்ளையார் தொடர்புபடுத்துவதற்கான காரணத்தையும், எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் தமது நூலில் விளக்கப்படுத்தி இருக்கிறார். அது வருமாறு:

பிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள கணபதி என்ற அவரது பெயர் உணர்த்தும் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கணபதி என்ற சொல்லின் பொருள் கணங்களின் கடவுள் என்பதாகும். கணா + பதி என்ற சொல்லைப் பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்வர். கணபதியின் மற்றொரு பெயரான கணேசன் என்ற சொல்லைக் கணா + ஈசர் என்று பிரித்து கணங்களின் கடவுள் என்று பொருள் கொள்வர்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மந்திரர், கணநாயகா என்று பிள்ளையாரைக் குறிப்பிடுகிறார். கணத்தின் தலைவன் என்பது இச்சொல்லின் பொருள். ரிக் வேதத்தில் இடம்பெறும் கணபதி என்ற சொல், ஒரு குழு அல்லது படை அல்லது சபையின் தலைவனைக் குறிப்பதாக மோனியர் வில்லியம்ஸ் கருதுகிறார். கணபதி என்ற சொல்லுக்குக் கணங்களைப் பாதுகாப்பவர் என்று அந்நூலின் உரையாசிரியரான மஹிதார்  குறிப்பிடுகிறார்.

சில மக்கள் குழுவினர், குறிப்பாகப் பழங்குடிகள் தங்களை விலங்கு, தாவரம் போன்ற இயற்கைப் பொருட்களிடமிருந்தோ, புராண மூதாதையர்களிடம் இருந்தோ தோன்றியதாகக் கருதினர். இவ்வாறு தாம் கருதும் தாவரம் அல்லது விலங்கைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இவ்வாறு விலங்குகள் தாவரங்கள் இயற்கை பொருட்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட குலம் தோன்றியதாக நம்பியதன் அடிப்படையில் அதன் தோற்றத்திற்குக் காரணமான பொருள் ஒரு குலத்தின் குலக் குறியாக அமைகிறது. இவ்வாறு குலக்குறியானது குலத்தின் சமூக பண்பாட்டு வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இனி, யானை எலி ஆகியன குலக்குறியாக விளங்கியதைக் காண்போம். மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாகும். மாதங்கி என்ற சொல் யானையைக் குறிப்பதாகும். குலக் குறியான யானையின் பெயராலேயே இக்குழு மதங்கர்கள் என்று பெயர் பெற்றது. வேத காலம் முடிவதற்கு முன்னரே இக்குழுவினர் ஒரு சாதியாக உருப்பெற்று மௌரியப் பேரரசுக்கு முன்னதாகவே அரசு அதிகாரத்தை நிலை நிறுத்தி இருந்தனர்.

லலிதா விஸ்தாரகா என்ற புத்த மத நூல், பசனாதி என்ற கோசல மன்னனை யானையின் விந்தில் இருந்து தோன்றியவனாகக் குறிப்பிடுகிறது.  இக்கருத்து குலம், குலக்குறியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி வாழ்வின் எச்சமாகவே இதைக் கொள்ளவேண்டும்.

இதுபோன்று மூசிகர் என்ற பிரிவு தென்னிந்தியாவில் இருந்துள்ளது. இவர்களை வனவாசிகள் உடன் இணைத்து மகாபாரதம் குறிப்பிடுகிறது. மூஷிகம் என்ற வடமொழிச் சொல் எலியைக் குறிப்பிடுகிறது. இந்தியப் பழங்குடிகள் பலருக்கு எலி குலக்குறியாக உள்ளது. ஒரு குலக் குழுவினர் மற்றொரு குழுவினருடன் போரிட்டு வென்றால், தோல்வியடைந்த குலத்தின் குலக்குறி அழிக்கப்படும் அல்லது வெற்றி பெற்றதுடன் இணைக்கப்படும். ஆளும் குலமானது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும்போது, பிற குலங்களின் குலக்குறிக் கடவுளர்களை இணைத்துக்கொண்டு தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் என்று தாம்சன் குறிப்பிடுவார். இக்கருத்தின் பின்புலத்தில் பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலம் ஒன்று, எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றபோது, அவ்வெற்றியின் அடையாளமாக அக் குலக்குறியைத் தன் குலக் கடவுளின் வாகனமாக மாற்றியுள்ளது. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி ஒன்று, விரிவடைந்து அரசு என்ற அமைப்பை உருவாக்கியபோது அதன் குலக்குறியான  யானை கடவுளாக மாற்றமடைந்தது.  ஆயினும், பிராமணிய சமயம் இக்கடவுளை உடனடியாகத் தன்னுள் இணைத்துக் கொள்ளவில்லை. தமது தெய்வங்களுக்கு வெளியிலேயே அதை நிறுத்தி வைத்தது. நான்காவது வருணமான சூத்திரர்களின் கடவுளாகவே அவர் மதிக்கப்பட்டார்.

பல்வேறு பழங்குடி அமைப்புகளை அழித்துப் பேரரசு உருவாகும்போது, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகத் தன் சமய வட்டத்திற்குள் பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்துக் கொள்ளும். அந்தவகையில், குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமயமாக விளங்கிய பிராமணிய சமயம், சூத்திரர்களின் கடவுளான பிள்ளையாரைத் தன்னுள் இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக விக்னங்களை உருவாக்கும் விநாயகர் விக்னங்களைப் போக்குபவராக மாறினார். பழங்குடிகளின் குலக்குறி என்ற தொடக்ககால அடையாளம் மறைந்து பிராமணிய சமயக் கடவுளர் வரிசையில் இடம் பெற்றார் எனப் பிள்ளையாரின் தோற்றப் பின்புலத்தைக் குறித்து விளக்கியுள்ளார் ஆ.சிவசுப்பிரமணியன்.

மேற்குறித்த தரவுகளின் அடிப்படியில் நோக்கும்போது, கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் வேறு வேறு குலக்குறி வழிபாட்டு அடையாளங்களாக இருந்தவை ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் எனும் வழிபடு கடவுளாகத் தோற்றம் கொண்டிருக்கிறது எனக் கருதமுடிகிறது. அதாவது, அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்த பகுதியை கி.பி 320 முதல் 551 வரை  ஆட்சி செய்தது குப்தப் பேரரசுதான்.  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக அது இருந்திருக்கிறது.

குப்தர்கள் காலத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய உருவாக்கம் ஒரு நிறுவனத் தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, ஆரிய / வைதீகச் சமயத் தொன்மங்கள் உருவானது இக்காலகட்டத்தில்தான். மேலும், சமக்கிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்ததும் அதே காலகட்டம்தான்.

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் சமக்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. அவ்வகையில், அதே காலகட்டத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் வழிபாடானது இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதியில் தோற்றம் கொண்டு நிலவி வந்திருக்கிறது எனக் கருதலாம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் வழிபடு கடவுளராக இருந்த பிள்ளையாரோடு தொடர்புடைய மற்றொன்று சமக்கிருத மொழியாகும். ரிக், யசூர், சாமம், அதர்வனம் என்கிற நான்கு வேதங்களும் எழுதாக் கிளவியாக இருக்க, வியாசரின் மகாபாரதமே எழுதப்பட்ட கிளவியாக - அய்ந்தாவது வேதமாக எழுத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், வியாசரின் மகாபாரதம் சமக்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதே மகாபாரதம் என்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,  பிள்ளையார் வழிபடு கடவுளாகத் தோற்றம் பெற்றதே கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் எனும்போது, எழுதாக் கிளவியாக இருந்த சமக்கிருத மொழியில் பிள்ளையார் முதன் முதலாக  எழுதியதான காலமும் கி.பி.3ஆம் நூற்றாண்டு வாக்கில்தான்  இருந்திருக்க வேண்டும். ஆக, பிள்ளையாரும் சமக்கிருத மொழியும் இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியைச் சார்ந்த ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டின் அடையாளங்கள் என்றே உறுதியாகக் கருத முடியும்.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005

சுளுந்தீ : அனைவரின் உள்ளத்திலும் ஏற்ற வேண்டிய அறிவுத்தீ! :- மூ.செல்வம்


மதுரை நாயக்கர் ஆட்சியின் தலைமையிடமாக இருந்த, கன்னிவாடி ஜமினின் வளமையையும் வறுமையையும் மிக அழகாக சித்தரிக்கும் வரலாற்றுப் பெட்டகம்.
    முப்பது பகுதிகளையும், 471 பக்கங்களையும் கொண்டுள்ள இந்நூலில், முக்கியமில்லா பக்கங்கள் எதுவுமில்லை, அரிய தகவல்களும் சுவாரசியங்களும் பக்கத்திற்குப் பக்கம் கொட்டிக்கிடக்கிறது.
     இரண்டு மூன்று முறை தெளிவாக வாசித்துவிட்டால், வாசித்தவர் சித்த மருத்துவராக மாறிவிடும் அளவிற்கு மருத்துவச் செய்திகள் குவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று நாவல் மட்டுமல்ல சித்த மருத்துவ பெட்டகம் கூட. இவ்வளவு செய்திகளையும் எவ்வாறு இவரால் திரட்ட முடிந்ததுவென வியந்து, ஆசிரியர் இரா.முத்துநாகு அவர்களை ஆராயும் போது, அவருடைய தாத்தா கண்டமனூர் ஜமினில் அரண்மனை பண்டுவராக இருந்த செய்தி இடம்பெற்றிருந்தது, பரம்பரை பரம்பரையாக மருத்துவக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரால் தான் இவ்வளவு நுணுக்கமான செய்திகளை கொடுக்க முடியும் என உணர்ந்தேன்.
     கன்னிவாடி ஜமினில் நாவிதர் குடியில் பிறந்த, செங்குளத்து மாடனின் வீரத்தைப் பேசுகிறது நூல். அம்பட்டயர், முடிவெட்டுபவர், சவரம் செய்பவர் என அழைக்கப்படுபவர்களே நாவிதர்கள். பிறப்பு முதல் இறப்பு வரை மனித சமூகத்திற்கு நாவிதர்களின் பங்கு வியக்கத்தக்கது என்பதனை, அழகாக விரிவாக விளக்குகிறது. நூலை படித்து முடித்த பின்பு நாவிதத் தொழில் செய்பவர்களை உயர்வாகவே எண்ணத் தோன்றுகிறது.  நவிதர்களும் பண்டுவர்களும் போற்றி பாதுகாக்க வேண்டிய கலைக்களஞ்சியம் இந்நூல்.
     புதைக்கப்பட்ட சொலவடைகள் (பழமொழிகள்) பலவற்றை புதைகுழியிலிருந்து மீட்டெடுத்து புலக்கத்தில் விட்டிருப்பது பாராட்டுக்குரியது.
    வருசநாட்டுப் பகுதியில் என் அப்பனும் அம்மையும் தேடி வைத்த காட்டில் கொட்டமுந்திரி பறித்த போதும், இலவம் நெற்றை உடைத்த போதும், நாவலில் வரும் பன்றிமலை சித்தரும், பண்டுவ  இராமனும், வல்லத்தாரையும், மாடனும், கொன்றி மாயனும், வங்காரனும் மாறிமாறி என் நினைவுக்குள் வந்து, கேள்விகள் பலவற்றை எழுப்பி, என்  வேலையைக் கெடுத்த போது, என் மனம் சொன்னது நீ படித்தது சிறந்த நூல் என்று.
     நூலின் எழுத்து நடை சிறுவயதில் கேட்ட முன்னோர்களின் பேச்சுக்களை நினைவுபடுத்தியது.
     சுளுந்தீ அனைவரின் உள்ளத்திலும் ஏற்ற வேண்டிய அறிவுத்தீ!
     கற்றது கடலளவு சொன்னது கையளவு!

மூ. செல்வம்,
முதுகலை ஆசிரியர்,
வாலிப்பாறை.

வெள்ளி, 3 மே, 2019

வ.உ.சி : சாதி கடந்தவர்; சுயசாதி எதிர்ப்பைச் சுமந்தவர் :- இரெங்கையா முருகன்.


1900 கால கட்டத்தில்  ஒரு ஏழை விவசாயியைக்  காரணம் ஏதுமின்றி சம்பந்தமில்லாமல் பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாக்கினர்.  இது சம்பந்தமாக நீதிமன்ற  வாய்தா என்ற பேரில் மன உளைச்சலுக்கு உட்படுத்தி பல தடவை அலைக்கழிக்க வைத்தனர். கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக ஓட்டாபிடாரத்தில் அருகே அமைந்துள்ள கிராமத்திலிருந்து தூத்தூக்குடிக்கு கால் நடையாகவோ, வண்டி மாடு கட்டியோத்தான் செல்ல வேண்டும்.

பல காலமாக நீதிமன்றத்துக்கு அலைவதுடன் தாங்க முடியாத மன உளைச்சலுக்கும் ஆட்பட்டிருந்த அந்த தலித் விவசாயி ஒரு நாள்  கோயில் அருகே மயக்க மடைந்து சரிந்து விழுந்துள்ளார். மிகவும் விசனமடைந்து துக்கித்த நிலையில் காணப்பட்டார்.

அச் சமயம் தற்செயலாக  மயக்கமடைந்து சரிந்து வீழ்ந்த அன்பரை எதிர் நோக்கி உதவ முன் வருகிறார். மயக்கத்திலிருந்து தெளிந்த அந்த விவசாயி தனது மனக் குமுறலை ஆற்றாது உதவ வந்தவரிடம் ஒரு தகவலாக தனக்கு நேர்ந்த பிரச்னைகளை விலாவாரியாக தெரியப் படுத்துகிறார்.

வந்தவரோ பேர் போன பரம்பரை வக்கீல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த எளியோன் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் விவசாயி. அக் காலத்தில் இந்த எளியவர்களை ச்சீ என உதாசீனப்படுத்தும் மன நிலையில் இருந்த சூழலில் வந்து உதவுபவரோ வழக்கத்திற்கு மாறான வித்தியாசப் பண்புடையவர்.

அந்த விவசாயிக்கு  உதவ வந்தவர், நொந்து போன அவரது மனதிற்கு நல்ல வார்த்தைகள் கூறி ஆசுவாசப்படுத்தி விட்டு அவரது மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட கோர்ட் வழக்கு விவரங்களை கேட்டு குறிப்பு எடுத்து கொள்கிறார். மேலும் இனி மேல் தாங்கள் நீதிமன்ற படி ஏற வேண்டியது வராது. நல்ல செய்தி வீடு தேடி வரும். கவலைப் படாமல் வீடு போய் சேருங்கள்  என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.

 மயக்கமடைந்த ஏழை விவசாயிக்கு எல்லாம் கனவா இல்லை நனவா என்ற குழப்பத்துடன் அவரும் தனது வீட்டை நோக்கி நடையை கட்டிவிட்டார். மயக்கம் அடைந்து விழுந்த கோவில் அந்தப் பகுதிகளில் பிரசித்திப் பெற்ற உலகம்மன் கோவில்.

மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஏழை விவசாயிக்கு  கோர்ட் விவகாரத்தில் நன்றாக வாதாடியதன் விளைவாக  நீதி வென்றது.அந்த செய்தி  தலித் ஏழை விவசாயி வீட்டிற்கு  வந்து சேர்ந்தது. அவரால் நம்ப முடிய வில்லை. வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் திக்கு முக்காடி விட்டார்.

அந்த சமயத்தில் அந்த விவசாயி தனது  குடும்பப் பரம்பரை வாரிசுகளிடம் பின் வருமாறு கூறுகிறார். அந்த உலகம்மன் தெய்வம்தான் கடவுள் மாதிரி வந்து எனக்கு உதவுவதற்காகவே அவரை அனுப்பி வைத்துள்ளார். அவர் மூலம் வெற்றியும் கிடைத்துள்ளது. ஆகையால் இனி நமது கடைசி வம்சாவளி வரை ஆண்குழந்தை பிறந்தால் உலக நாதன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் உலகம்மை என்றும் பெயர் வையுங்கள் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாராம்.

இந்த ஏழை விவசாயிக்கு உதவ முன் வந்தவர் பேறு போன வக்கீல் குடும்பத்தைச் சார்ந்த உலகநாத பிள்ளையின் தவச் செல்வர் கப்பலோட்டிய தமிழன், தியாகத்தின் இலக்கணம் வ.உ.சிதம்பரனார். இச் செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டவர் திரு. லேனா குமார் அவர்கள்.

அவருக்கு இச் செய்தியை பகிர்ந்தவர் பாதிக்கப்பட்ட அந்த விவசாயி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் நாவலாசிரியர் சோ. தர்மன் அவர்கள்.

இந்த செவி வழிச் செய்திக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று தேட ஆரம்பிக்கும் போது வ.உ.சி. தனது சுயசரிதையில் ஒரு இடத்தில் கீழ் வருமாறு குறிப்பிடும் நான்கு வரி இடம் பெறுகிறது. இதை ஒரு அனுமானமாக எடுத்துக் கொள்ளலாம்.

“முடிமனில் என்னுடை முன்னோர் நாள் முதல்
அடிமை புரியும் அறிவினைக் கொண்ட
வேத நாயகம் எனும் மேம்படு  பள்ளனை
ஏத மில்லாமலே எண்ணிலா வழக்கில்
அமிழ்த்தினர் போலிஸார்;அனைத்தினும் திருப்பினேன்”.

இந்த வரிகளை கொண்டு மேற்கண்ட சம்பவம் ஒருவாறாக இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வலியவர்கள் எளியோரை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு வ.உ.சி.யின்  வாழ்வில் பல செய்திகள் கொட்டிக் கிடைக்கிறது. உதாரணமாக சில செய்திகளை காணலாம்.

சாதிச் செருக்கு மிகுந்த அக்காலத்தில் இரண்டு கண்களை இழந்த ராமையா தேசிகன் என்ற தேவேந்திர குல வகுப்பைச் சார்ந்தவரை தனது வீட்டில் வைத்து பாதுகாத்து உணவிட்டு வந்தவர். ஆனால் அதே வேளையில் தனது தெருவாசிகளுக்கும்  தன் சாதி சார்ந்த சமூகத்தாருக்கும்  தெரியாமல் பாதுகாத்து வருகிறார். பிறகு நாள் செல்லச் செல்ல இச் செய்தி தெரிய வந்து அவரது சமூகத்தாரிடமிருந்தே எதிர்ப்பு வருகிறது. வ.உ.சியை சாதி நீக்கம் செய்யும் அளவுக்கு போய்விடுகின்றனர்.

வ.உ.சி.யின் சுயசரிதை வரிகளில் காணலாம்

”சிவப் பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென்
தவப் பயனால் இலம் தங்கப் பெற்றேன்.
ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால்
தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்
குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென்
தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்
கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை
ஓட்டிடக் கருதி யான் உரமில்லாமையால்
‘அவளிடத்’ துரைத்திட அடுக்களை சென்றேன்.
‘’எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!
எல்லாம் கடவுளா யிருக்க வேண்டும்
உருவம் முதலிய ஒன்றினும் பேதம்
மருவுதலிலாமை மலை போல் கண்டும்,
கற்பனை யாகக் காணும் குலத்தின்
சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய!
துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண்
இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம்
ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின்
பிழையெனார் உலக பேதமை உணர்ந்தோர்.

அச் சமயம் வ.உ.சி.யின்  மனைவி பார்வை இழந்த இவருக்கு இது வரை தட்டில்தான் சாப்பாடு  அருகில் வைத்து வந்தேன். இனி மேல் நானே  கண்களை இழந்த அவருக்கு சாப்பாட்டை அவரது வாயில்  ஊட்டி விடுகிறேன் என்பதோடு மட்டுமல்லாமல் ஊட்டியும் விட்டவர். இது குறித்து வ.உ.சி.யிடம் முறையிட பயந்தார்கள் அவரைச் சார்ந்த சமூகத்தார்கள்.  காரணம் அவரது முரட்டுத்தனம். முரட்டு வக்கீல் பிள்ளை என்றே அழைப்பார்கள்

வள்ளுவ வகுப்பினரைச் சார்ந்த சுவாமி சகஜானந்தரை தனது வீட்டில் ஒரு அங்கத்தினராகவே போற்றி பாதுகாத்தவர். வ.உ.சி.தன்னுடைய அலுவல் பணிகளுக்கிடையே சகஜானந்தரையும் உடன் அழைத்துச் செல்வார். அச் சமயம் வ.உ.சியுடன் பணியாற்றுபவர்கள் வ.உ.சி.க்கு பயந்து அவர்  இல்லாத நேரத்தில் சகஜானந்தரிடம் சாதி குறித்து விசாரிப்பார்கள். வ.உ.சி.யின் அறிவுறுத்தலின் படி நானோ துறவி. துறவிக்கு ஏது சாதி என்று கூறி விடுவார்.

ஏழைகளுக்கும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கும் தனது சொந்த செலவில் வாதாடிய தென்னகத்தின் ஒரே வக்கீல் அக் காலத்தில் வ.உ.சி. ஒருவரே. இன்றைய மேம்பட்ட அரசியல்வாதிகள் 1927 ம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில்  வ.உ.சி. உரையாற்றிய அரசியல் பெருஞ்சொல் சொற்பொழிவை பால பாடமாக படியுங்கள். ஏரி, குளம், பொது தண்ணீரை எல்லா சமூக மக்களும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், சமூக மக்களிடையே பிணக்கு ஏற்படும் போது பிரச்னை இல்லாமல் எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும் ,கல்வி, மருத்துவம் இலவசமாக வழங்கிட வழி செய்தல், சுயாட்சி குறித்து மிகு விவர தகவல், தமிழ் சித்த மருத்துவத்தின் மேன்மை, தமிழர் பண்பாட்டுச் சிறப்பு, தமிழ் மொழியை வளர்ப்பதற்கென  பல்கலை கழகங்கள் முக்கியத்துவம் போன்ற பல்வேறு விசயங்களை அலசி ஆராய்ந்த சொற்பொழிவு .

இன்றைய சாதி + அரசியல் வாரிசு தலைவர்கள் வோட்டு வங்கி தேர்தல் அரசியல் சுய லாபத்திற்காக வலியவர்களாகிய இவர்கள் எளியவர்களை எவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள். சமூகத்தை எவ்வளவு பிளவுபடுத்த கங்கணம் கட்டி வேலை செய்கிறார்கள். பல தலைவர்கள் மேடையில் வீராவேசம் பேசுவார்கள். தனது சொந்த வாழ்க்கையில் சம்பந்தமில்லாத வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கிறார்கள். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க நாமும் வ.உ.சியை போன்ற உண்மையான தியாக வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க தவறியதன் பலன்தான்  சினிமாகாரர்களையும், சுயநல மிக்க கேடுகெட்ட அரசியல் வாரிசுகளுக்குத்தான் நாம் குடை பிடித்து வரவேற்க காத்திருக்கிறோம்.

மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன
    மகிழ்வொடு தாங்கிய ரேனும்

இன்னலுற் றயர்ந்தோம் எனக்கலுழ்ந் திடில் தன்
    இரு விழி நீரினை உகுப்பான்.