புதன், 5 ஜூன், 2024

கவிநிலா - கலையரசி ஞானதீபம்


நீயோ விண்ணில்
நானோ மண்ணில்!
நீ விண்ணில் தவழும் நிலா
நான் மண்ணில் செல்லும் உலா!

தூரத்தில் இருந்து 
உன்னை ரசிக்க மட்டுமே முடியும். 
வேறு என்னதான் 
என்னால்  செய்ய முடியும்? 

நிலவு காட்டி அமுதூட்டும் தாய்போல
என் பிள்ளைகளுக்கு 
உன்னைக் காட்டத்தான் முடியும்!

கவி எழுதும் கைகளுக்கு 
வைரக் கணையாழியாய்
இப்பாவை எழுதும் இப் பாவை 
சமர்ப்பிக்கிறேன்!

- கலையரசி ஞானதீபம்

செவ்வாய், 4 ஜூன், 2024

மரப் பேச்சு - கல்பனா சாகர்


மண் மீட்டும் மௌன கீதங்கள் 
வேர் மௌனத்தின் ஆரவாரம் கிளைகளும் கனிகளும்.

மௌனமும் ஆரவாரமும் கலந்த அர்த்தநாரி நான்.
அறம் செய்பவன் 
அராஜகம் செய்பவன் என்று 
சனாதனம் பார்த்ததில்லை.

வந்தவனை 
மெத்தப் புகழ்ந்ததுமில்லை;
வெட்டியவனை 
வசை பாடியமிதுல்லை. 

மனிதம் மரத்துப் போனதால் 
மரித்துக் கொண்டிருக்கும் 
மண்ணிசை நான்.

மண்ணிசை மரித்துவிடாதிருக்க உயிர்த்தெழு மனிதமே!

-கல்பனா சாகர்.