வியாழன், 2 நவம்பர், 2023

அறிஞர் ஒரிசா பாலுவின் கடற் பயணமும் தமிழ் ஆய்வும்: பேரா. அரங்க மல்லிகா




கடல்சார் ஆய்வாளர் திரு ஒரிசா பாலு அவர்கள் தமிழக வரலாற்றைத் தமிழ் இலக்கியத்திலிருந்து தேடுவதைப்போல  கடலிலிருந்தும் ஆய்வு செய்ய வேண்டும்  என்பதைத் தன்னுடைய ஆய்வு முடிவாகத் தந்தவர். தருகிறார் .  

  குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்ததென விரிவாகக் கடலுக்குள் பயணப்பட்டு பேசி இருக்கிறார்.சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் வைகை ஆற்றங்கரை நாகரிகத்திற்கும் உள்ள தொடர்பைக் கடலில் மூழ்கிய கட்டிடங்கள், வாழ்வியல் முறைகள், பழங்கற்கால நாகரிகம்  ஆகியவற்றை வைத்துத் தொடர்புபடுத்துகிறார்.

தொடக்ககாலத்தில் இது லெமூரியா கோட்பாடாக(1863) இருந்தது.பிறகு குமரிக்கண்ட ஆய்வாக( 1864) த் தொடர்ந்ததும் 1898 இல் தமிழ் இலக்கியத்தையும் லெமுரியா ஆய்வையும் கொண்டு நரசிம்மப்பிள்ளை ஆய்வு செய்ததாகக் கூறுகிறார். பிறகு அது (1940) இல் கடல் கொண்ட தென்னாடு என மாறியது. இந்தக்காலக் கட்டத்தில் தான் தன்னுடைய ஆய்வு தொடர்ந்தது என்பதை விரிவாகப்பேசுகிறார்.

அவருடைய ஊடகப் பேட்டிகளில் ஆய்வுகளின் மூலத்தைக்  கடலுக்குள் அழிந்துபோன நகரங்களைக் கொண்டு விரிவான தரவுகளுடன்  அவர் பதிவு செய்திருக்கிறார் .தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர் வரலாற்றையும் தமிழருக்கும் வணிகத்திற்கும் உள்ள  தொடர்பையும் எடுத்துக்காட்டிய  ஒரிசா பாலு அவர்கள் மிக முக்கியமாகத் தன் ஆய்வில் ஆமைகளை ஆய்வு செய்ததில் தனக்கென ஓர் இடத்தை வரலாறாக மாற்றுகிறார்.தமிழரின் நாகரிகத்தை , பண்பாட்டை ஆய்வு செய்யும் ஆளுமைகளில் ஆமை ஆய்வில்தான் மிக முக்கியமான ஆய்வாளராக  ஒரிசா பாலு அவர்கள் அறியப்படுகிறார்.அவருடைய கடலாய்வின் மூலமாக குமரிக்கண்டம் மிகப்பெரிய ஒரு திருப்பு முனையைக்கொண்டது என உறுதிபடுத்துகிறார்.

  குறிப்பாக கடலில் ஆமைகள் நீந்தி வருவதை, திரும்பிச்செல்லும் வழியை, முட்டையிடும் முறையை ,குஞ்சு பொரிக்கும் அழகை யாவும் அறிகிறார். கடல் உள்வாங்குவது ஏன் என்பதை , குமரிக்கண்டம் இந்தோபசிபிக் ஆய்வின் மூலம்  வெளிப்படுத்துகிறார்.

       வரலாறு ஒரு நாகரிகத்தின் அடிப்படை. அதனால் வரலாற்றிலிருந்து ஆய்வைத்தொடர வேண்டும் என்பது அவர் அவா.தமிழ் மொழியைப் பயன்பாட்டில் கொண்டிருக்கும் நாடுகள் ஏராளம் .குறிப்பாக 125 நாடுகளில் தமிழ் மொழி, பயன்பாட்டில் இருக்கின்றது என்று கூறுகிறார் .எடுத்துக்காட்டாக தொழிலதிபர் வெர்ஜின் ஏர்லைன்ஸ் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சிஸ், மாறன் போன்றவர்கள் தமிழ்நாட்டை த் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு உலக நாடுகளில் பேரும் புகழும் பெற்று வரக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டும் அவர் உலக நாகரிகத்திற்கான தொடக்கம் வைகறை நாகரிகத்தில் இருக்கிறது .அதனைக் கீழடி என்ற  ஒற்றைச் சொல்லால் அடக்கி விட முடியாது என்று ஆணித்தரமாக ஆய்வின் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார். 

   2005 முதல் குமரிக்கடலில் ஆய்வு செய்யச் சென்ற அவருடைய அனுபவம் அதன் மூலமாக குமரிக்கடலில் மூழ்கிய நிலங்கள் தொடங்கி  மடகாஸ்கர் வரை தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் ஆய்வின் மூலமாக அவர் உறுதிப்படுத்துகிறார்.

 174 நாடுகளில் அவர் தமிழர்களுடன்   தொடர்புடையவராக இருந்து கொண்டிருந்தார் என்பது தான் தமிழ் மீதும் தமிழ் மொழி மீதும்  தமிழர்கள் மீதும்  அவர் கொண்டிருந்த தொடர்புக்கு சாட்சியாகும்.

  தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டுமல்ல தமிழைத்  தாய்மொழியாகக் கொண்டாலும் பழக்கத்தில்  மொழிப்பயன்பாடு  இல்லாதவர்கள் வாழ்வதையும் சுட்டிக்காட்டி  பல்வேறுபட்ட தமிழர்களுடைய நிலையையும்  வணிகத்தொடர்பையும் ஒவ்வொரு ஊடக உரையாடல்களிலும்  பெருமையோடு பகிர்ந்திருக்கிறார்.

வணிகத்தில் தமிழரே முதன்மையானவர்கள் என்பதை மணிமேகலை காப்பியத்தின் மூலம் தெரிவிக்கிறார்.

     முதன்முதலாக மருத நில நாகரிகத்தை உலக நாடுகளில் கொண்டு சேர்த்தவர்கள் தமிழர்கள்.அதற்கு குறிப்பாக தேவேந்திரக் குல வேளாளர்கள் வரலாற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார்.அவர்களின் மேம்பாட்டிற்கு அந்த இனத்தினரோடு  சேர்ந்து பல பணிகளைச்செய்திருக்கிறார்.விவசாயம் தேவேந்திர குல வேளாளர்களின் அடிப்படை தொழில் என்பதால் அவர்கள் உலகம் முழுவதும் அதைக்கொண்டு சேர்த்திருக்கிறார்கள் எனச்சொல்கிறார்.பழவேற்காடு தென்பெண்ணை ஆறு பாலாறு போன்ற இடங்களில் ஆய்வு  இன்னும் நடத்தப்பட வேண்டும் என்பதை முன்மொழிந்திருக்கிறார் .

  17 ஆற்றங்கரை நாகரிகங்கள் ஆய்விற்கு உட்பட்டு இருக்கின்றன என்றாலும் கூட உலக நாகரிகத்திற்கான தொன்மம் தமிழிலிருந்துதான் தொடங்குகிறது என்றும் அவர் உறுதிபடச்சொல்லுகிறார். 

2015 இல் நடந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு பெரிய மாற்றத்தை , பண்பாட்டு மாற்றத்தைத் தமிழரின்  அடையாளத்தை வெகுவாக எடுத்துக்காட்டும் என்றாலும் கூட அவை இன்னும் வெளிவராத சூழலில்,  குமரிக் கடலில் ஆய்வு செய்ததன் தொடர்ச்சியாக அவர் பல கருத்துக்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

    குமரிக்கடலில் மூழ்கிய நிலங்கள் , மடகாஸ்கர் வரை தமிழர்கள் வாழ்ந்த நிலம் ,கச்சத்தீவு போன்ற பகுதிகளில் உறுதி செய்வதற்கான தரவுகள் எனப் பல்வேறு செய்திகள் புதியனவாக இருக்கின்றன .சான்றாக அவர் உளி பானை ரசவாதம் வேதியியல் தாவரவியல் பற்றிய சிந்தனைகளில்  கடலுக்குள் வாழ்ந்த அந்த பகுதிகளிலும்  நிறைய சான்றுகளைக் காட்டுகின்றார். தமிழர்கள்  வாழ்ந்த நிலங்கள் கடலுக்குள் இருக்கின்றன என்றும் சொல்லுகின்றார் .

    பல்வேறு திறம்வாய்ந்த மக்கள் வணிக நுட்பம் தெரிந்த மக்கள்  திரைகடல் ஓடி திரவியம் தேடிய இந்த தமிழர்கள் மிகச்சிறந்த திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது வரலாறு என அவர் சுட்டிக் காட்டுகிறார் . தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் தேடுவதைக் காட்டிலும் கடலாய்வை முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார் .குமரிக்கண்டத்தை மீட்டவர்கள் கடல் மீன் பிடிப்பவர்கள் என்று ஆழமாகக் கூறுகிறார் .அவர்களைத் திரைமீளர் என்று  சொல்கிறார். இந்தச் சொல்லை அதிகமாகப் பயன்படுத்திய ஓர் ஆய்வாளராக ஒரிசா பாலு அறியப்படுகிறார் .தமிழர்கள் பெயராகவோ அல்லது உறவுகளின் பெயராகவோ பல நாடுகளில் வரலாறாகி இருக்கிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் சுட்டிக்காட்டுகிறார் .

   அறுபது வருட சுழற்சியில் தமிழ் வருடப்பெயர்கள் எங்கும் இல்லை என்பதைக் கவனப்படுத்துகிறார். தமிழ் மொழியோடு தொடர்புடையவர்களாகவும் தமிழ் வரலாற்றைக் கல்வெட்டுகளின் மூலமாக நாம் தமிழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவிலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றாலும் கூட ஏன்  60 வருட பெயர்கள் சுழற்சி முறையில் தமிழ்ப் பெயராக இல்லை என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுகிறார். 

அதனால் அவருடைய கோட்பாடு என்பது  தமிழ் மொழியினுடைய நிலை என்ன என்பதை உணரச் செய்தல் ,தமிழ் வரலாறு பண்பாடு அறியச்செய்தல், உலகம் முழுவதுமாக ஏன் தமிழர்கள் சென்றார்கள்?  வணிகத்தை, தமிழைக்கொண்டு சென்றவர்கள் தமிழர்களாக இருக்கும்போது ஏன் தமிழ் மொழி பின்னுக்குத்தள்ளப்படுகிறது?. அவர்களுக்குத் தான் வணிக நுண்ணறிவு அதிகமாக இருக்கிறது என்ற செய்தியைச் சொல்லி  மீண்டும் ஒரு மீள்கட்டமைப்பை அதாவது தமிழர் பண்பாட்டை உணர்தலை  மீள் கட்டமைப்புச் செய்தலை ஆய்வாளர்களுக்குச் சொல்லிச்சென்றிருக்கிறார். 

  உலக நாடுகளில் தமிழ் இன்றைக்குப் புழக்கத்தில் இருக்கின்றது என்றாலும் கூட சமஸ்கிருதம் இந்தியாவில் அதிகமாக வழிபாட்டு மொழியாக மாறி தமிழ் மொழியைச்சிதைத்து தமிழின்  முதன்மையை அதனுடைய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்தை முன்னெடுத்த ஆரியர்களுடைய வருகையையும்   சூழ்ச்சியை யும் அவர் சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தார். 

    தமிழர் பண்பாட்டை திரை மீளர்கள் மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அவர் தென்புலத்தார் என்ற ஒரு குழுமத்தையும் அமைத்தார். ஐயை என்ற ஒரு  குழுமத்தை அமைத்து அதன்மூலமாக  உலக நாடுகளில் இருக்கக்கூடிய பெண்களை ஒன்றிணைத்திருக்கிறார் .

அந்தக் குழுவில் இருக்கக்கூடிய பெண்கள் அதிகம் படித்தவர்களாக மிகப்பெரிய பணியில் இருப்பவர்களாக மிகப்பெரிய தொழில் அதிபர்களாக கட்டிடக்கலை நுண்ணியல்வாதியாக பேராசிரியர்களாக ஆய்வாளர்களாக படைப்பாளர்களாக இருக்கிறார்கள் என்றாலும் கூட வீட்டில் இருந்து கொண்டு சமையல் செய்யக்கூடிய குடும்பத்தைப் பராமரிக்கும் பெண்களையும் கூட அவர் ஊக்கப்படுத்தி அவர்களை எழுத வைத்திருக்கிறார் .அவர்களுடைய சிறு குறு தொழில்நுட்ப அறிவைக் கொண்டு அவர்களை ஒரு தொழில் முனைவோராக மாற்றி இருக்கிறார் .

இன்றைக்கு அந்த  குழுவின் மூலமாக அவர் விட்டுச் சென்றிருக்கக் கூடிய உறவுகள் என்று பார்த்தால் ஏறத்தாழ 174 நாடுகளிலிருந்து பெண்கள் அந்த குழுவில் இணைந்து இருக்கிறார்கள் .ஒரே இடத்தில் இருந்து கொண்டு உலகம் முழுக்க இருக்கக்கூடிய தமிழர்களை , தமிழச்சிகளை ஒன்றாக இணைத்த பெருமை திரு ஒரிசா பாலு அவர்களுக்கு இருக்கின்றது .

      எனக்கும் திரு ஒரிசா பாலு அவர்களுக்குமான தொடர்பு என்பது எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நான்  பேராசிரியராக இருந்த பொழுது ஒரு கருத்தரங்கத்திற்கு  அழைத்து அவரைச் சிறப்பு செய்தேன். அப்பொழுது அவர் தன்னுடைய கடல் ஆய்வு குமரிக்கண்ட ஆய்வைப் பற்றி மிக விரிவாகப் பேசினார் .மருத்துவத்திலும் அவருக்கு ஆழமான அறிவு இருப்பதையும் சுட்டிச் சென்றார் .அந்த அறிமுகம் பிறகு அவருடைய குடும்பத்தினரைச் சந்தித்து ப்பேசி உரையாடி மகிழ பல தருணங்களை வழங்கியது.

        புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து அவர் வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு அவரை நான் சென்று சந்தித்தேன்.

 அந்த சந்திப்பில் மணிமேகலை ஆய்வில் குறிப்பாக கடைசி நான்கு காதைகளை' அக்கா அரங்க மல்லிகா !நீங்கள் தான் அதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்'  என்ற ஒரு வேண்டுகோளை வைத்தார். நோய்வாய் பட்டு இருந்தாலும் கூட  பேச முடியாமல்  பேசினார்.

ஆனாலும்  சோர்வாக இருந்த அவர் என்னைப் பார்த்ததும்  ஏறத்தாழ 2 மணி நேரம் மணிமேகலை பற்றியும் மணிமேகலை எந்தெந்த நாடுகளில் பயணப்பட்டு இருக்கிறாள், இலங்கைக்கும் தமிழுக்குமான தொடர்பு என்ன ,மணிமேகலை காப்பியத்தின் மூலமாக மணிமேகலை கடலில் நீந்தி சென்ற முதல் பெண் என்றெல்லாம் விரிவாகப்பேசினார்.

 பௌத்த தத்துவ மரபு தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதுமாக இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்று சொன்னாலும் கூட இந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் மணிமேகலைக்கும் என்ன தொடர்பு என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதை என்னிடம் அவர் குறிப்புகளின் மூலமாக ஒரு பெரிய உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அதை நான் அடுத்த ஆய்வு நூலாக எழுத  இருக்கின்றேன்.

 ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சரியாக அவருக்கு மருத்துவச்சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதை மிகுந்த வருத்தங்களுடன் பதிவு செய்தார்..

அன்றைக்கு இருந்த  தமிழக அரசின் செயலாளருக்கு  நான் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் .அதில் மிகச்சிறந்த கடல் ஆய்வாளர் குமரிக்கண்ட ஆய்வாளர் தமிழ் மொழி குறித்த ஆய்வுகளில் மாபெரும் பங்களிப்புச்செய்தவர் திரு .ஒரிசா பாலு அவர்கள். 

அரசு  அவருக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன் .அவரும் அதற்கு இசைவு தெரிவித்திருந்தார். என்றாலும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஓமாந்தூரார் மருத்துவமனையில் அவரைத் தரையில் அமர வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை மிகுந்த வருத்தத்தோடு பாலு அவர்கள் என்னிடம் பதிவு செய்ததைக்கேட்டுக் கலங்கினேன்.

  தமிழ் ஆய்வுக்காக கடலில் மூழ்கி கடலாய்வு செய்த ஒரு மாபெரும் தமிழருக்குத் தமிழக அரசு உரிய மரியாதை செய்திருக்க வேண்டும் என்று மிகுந்த வேதனையோடு நான் இங்கே பதிவு செய்கிறேன். 

         1966 முதல் தமிழ் மாநாடு நடத்திய பெருமையைத் தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றாக பார்க்கக்கூடிய ஒரிசா பாலு அவர்கள் 2010 வரையில்  உலகச் செம்மொழி மாநாடு வரையில் நடந்த  தமிழ் மாநாடுகளைச் சுட்டிக்காட்டி உலக நாடுகளில் வாழும் தமிழர்களுக்காக ஒன்றைத்  தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைத்திருக்கிறார் . அதில் பன்னாட்டுத்தமிழர்களுக்கான ஒரு பதிவேடு அவசியம் எனச்சுட்டிக்காட்டுகிறார்.

           எப்படி கேட்வே டெல்லியில் இருக்கிறதோ, எப்படி  இந்தியா கேட்  மும்பையில் இருக்கிறதோ கேட் வே ஆஃப் வேர்ல்ட்  ஒன்று குமரிக்கடல் அருகே அமைக்கவேண்டும்  என்று அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அரசின் கவனத்திற்கு இங்கே நான் இதைப் பதிவுசெய்கிறேன்.

கட்டுரையாளர்:
பேரா.அரங்கமல்லிகா
தமிழ்த்துறைத் தலைவர்(ப.நி)
எத்திராஜ் மகளிர் கல்லூரி ,சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக